30/01/2011

இளங்கோவின் அறம் - முனைவர் ஆ. செல்லப்பா

மனித இனத்திற்கு உரிய தலைசிறந்த பண்புகளில் அறம் முக்கியமாக இடம் வகிக்கின்றது. அறம் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் ஒவ்வொருவராலும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. அறம் செய்வதில் எல்லை கிடையாது. அறம் செய்யும் போது முழு மனதுடனும், உடலாலும் மனத்தூய்மையுடனும் செய்ய வேண்டும். எந்தெந்த வகையில் எல்லாம் பிறர்க்கு அறம் செய்ய முடியுமோ அந்த வகையில் அறம் செய்ய வேண்டும். தமிழ்க்காப்பியங்கள் பொதுவாக அறம் செய்வதன் இன்றியமையாமையை வலியுறுத்துகின்றன. தமிழ் முதல் காப்பியமான சிலம்பில் இளங்கோ தமது அறச் சிந்தனைகளை வலியுறுத்துகின்றார்.

அறம் - விளக்கம்:-

அறம் என்னும் சொல் கையறம், தர்மம், நீர்மை, பெரியோருடைய இயல்பு என்னும் பொருள்களில் வழங்குகின்றது. அறக்கடவுளாகப் புத்தர் (அறம் பகர்ந்தோன்) விளங்குகிறார். அறு + அம் எனப் பகுத்து அறு என்பதற்கு வரையறைகள் அல்லது அறுதி என்ற பொருள்பட வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய கொள்கைகள் என்று விளக்கம் கூறுவர். அறம் என்ற சொல்லுக்குத் தீமை நீக்கம் என்றும் பொருள் கொள்ளலாம். வள்ளுவரின் கூற்றுப்படி, அறம் என்பது மனம் மாசின்றி அன்பின் அடிப்படையில் பகுத்துண்டு, தத்தமக்குரிய வாழ்வியல் கடமைகளை ஆற்றி உண்மை பேசி அருள் உள்ளத்தோடு ஒழுகுவதே ஆகும். மக்கள் இனத்தின் பழக்க வழக்கங்களையும், நடத்தைகளையும் பண்புகளையும் பொருளாகக் கொண்டு உருவாகிய அறவியல் கலையை மெய்ப்பொருள் ஆய்வுடன் (philosophical enquiry) தொடர்பு கொண்டு முதன் முதலில் ஆராய்ந்தவர் அறிஞர் அரிஸ்டாட்டில் ஆவார். உலகச்சிந்தனை வரலாற்றில் கி.மு. 700-500 வரையிலான காலப்பகுதி முக்கியத்துவம் பெற்றது. உலகின் கீழ்த் திசைகளிலும், மேற்பகுதியிலும் சிறந்த சிந்தனையாளர்கள் தோன்றினர். கி.மு. 580-500-இல் வாழ்ந்த பிதாகோரஸ் (Pythogoras) என்னும் அறிஞர் இத்தாலியில் குரோடோனா (Crotona) எனும் நகரில் அறவியல் சமயச் சங்கத்தினை நிறுவினார். இவர் தமது சீடர்களுக்கு பிரம்மச்சரியம், இன்பம் விழையாமை, மிதமான உணவு, துறவு, தியானம், பக்தி, சமூக அறங்கள், இந்தியாவிலிருந்து பரவியதாகக் கருதப்படும் உயிர்களின் மறுபிறவிக் கொள்கை, நல்வினை, தீவினைகளுக்கு ஈடாகச் சுவர்க்கம், நரகம் புகுதல் என்பனவற்றைப் போதித்து வந்தார். கி.மு. 488-400 கால கட்டத்தில் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் என்பவர் அறிவும் அறமும் ஒன்று என்ற கொள்கையைப் போதித்தார். நல்லன அறிதலே அறிவு. அறிந்து செயல்படுதலே அறம், அதனால் அறிவும் அறமும் ஒன்றே என்பது அவர்க் கருத்து, பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற மேதைகள் அறனெனப்படுவது மகிழ்வுதான் (Virtue is happiness) எனும் கொள்கையினை நிலை நிறுத்தினர். இந்நிலை தமிழகத்திலும் அறிஞர்களிடமும் இருந்ததை அறிய முடிகின்றது.

இளங்கோவின் புதிய அறம்:-

தமிழகத்தில் 1950களிலும் 60களிலும் தமிழ் மக்களிடையே தமிழ் உணர்வு மேலோங்கி இருந்ததைத் தமிழ் இலக்கியங்களின் வாயிலாக அறியலாம். சிலப்பதிகாரத்தில் தமிழ் மன்னர்கள் இகழ்ந்த கனகன், விசயன் என்ற வடநாட்டு மன்னர்களை வெற்றிக் கொண்டான் சேரன், செங்குட்டுவன். இமயத்தில் கல் எடுத்து அவர்களின் தலையில் ஏற்றிக் கண்ணகிக்குச் சிலை அமைத்தான். இதன் மூலம் தமிழகத்தில் ஆரியத்திற்கு எதிரான உணர்வுச் சூழல் இருந்ததைக் காண முடிகின்றது. அதன் காரணமாகவே சிலப்பதிகாரத்திற்குத் தமிழ்நாட்டில் செல்வாக்கு இருந்ததையும் அறிய முடிகின்றது. மூன்று தமிழ் மன்னர்களுக்கிடையே இருக்க வேண்டிய ஒற்றுமையை இளங்கோ தமது காப்பியத்தில் கூறியிருப்பது அறவழிப்பட்டதே ஆகும்.

தமிழ்ப்பெண் கண்ணகியின் கற்பு மேன்மையைக் காப்பியத்தில் முழுமையாகக் கூறியுள்ளார். அநீதி செய்த மன்னனுக்கு எதிராகச் செயல்பட்ட கண்ணகியின் ஆவேசம் காப்பியத்தின் முக்கிய அறமாக வலியுறுத்தப்படுகின்றது. தமிழகத்தில் சமணம், சைவம், ஆகிய சமயங்களை வேற்றுமை கருதாமல் இளங்கோ தமது காப்பியத்தில் கூறியுள்ளார். பழந்தமிழகத்தில் எண்ணற்ற கலைகள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன. மாதவி கணிகைக் குலத்தில் பிறந்தவள் என்றாலும் அவள் கற்புள்ளவளாகவும், கலைத்திறம் மிக்கவளகாவும் காப்பியத்தில் காட்டப்பட்டிருப்பது இளங்கோவின் புதிய அறமாகும். தமிழகத்தின் இயற்கை வளங்களும், இயற்கை வழிபாடுகளும் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன. அதோடு தமிழ் இசைப்பாடல்களும் அவற்றின் நுட்பங்களும் விரிவாக ஆசிரியரால் எடுத்தாளப்பட்டுள்ளன. அதே சமயத்தில் தமிழ் மக்களின் குறைகளையும் ஆசிரியர் விட்டுவைக்கவில்லை. அரசனின் ஆட்சிமுறை ஒழுங்காக இல்லாத நிலையையும் இளங்கோ கூறியுள்ளார்.

முடிவுரை:-

அறம் என்பதன் விளக்கமும் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அறம் பற்றி மேலைநாட்டறிஞர்களின் கருத்துக்களும், அறம் மேலை நாடுகளில் எவ்வாறு பரப்பப்பட்டுள்ளது என்பதும் ஆராயப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் தமிழ் மக்களிடையே தமிழ் உணர்வு செல்வாக்குடன் விளங்கியது. தமிழ்ப்பெண்ணுக்கு ஆதரவாக ஆரிய அரசர்களை வெற்றி பெற்ற திறத்தை ஆசிரியர் இளங்கோ தமது அறக்கொள்கையாகக் கொண்டுள்ளார். தமிழ்ப்பெண் கண்ணகியை உயர்வாகச் சித்தரிப்பது இளங்கோவின் புதிய அறமாகும். மன்னனுக்கு எதிராக ஒரு பெண் செயல்பட்டு நீதிக்காக உயர்த்தப்பட்ட நிலையை ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். தமிழகத்தில் இயற்கை வழிபாடு மேலோங்கி இருந்ததையும் மக்கள் அவற்றின்பால் அதிக ஈடுபாடு கொண்டு விளங்கியதையும் அறியமுடிகின்றது. மக்கள் கலைகளில் ஆர்வம் கொண்டிருந்த செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

நன்றி: பிறதுறைத் தமிழியல்

 

கருத்துகள் இல்லை: