30/01/2011

கலித்தொகை காட்டும் மகளிர் - அ. கீதாரமணி

சங்க காலத்தில் மகளிர் ஆடவருக்கு நிகராக விளையாட்டிலும், திருவிழாக்களில் கலந்து கொள்வதிலும் உரிமைப் பெற்றிருந்தனர் என்ற செய்தியைக் கலித்தொகை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. சங்ககால மகளிர் இல்லற வாழ்க்கையில் சிறந்தும் விளங்கியிருக்கின்றனர். ஆடவரைப் போலவே மகளிரும் கடற்கரைச் சோலைகளுக்கும் ஆற்றின் எக்கரைக்கும் சென்று விளையாட உரிமை பெற்றிருந்தனர். கோயில் திருவிழாக்களிலும் கலந்து கொண்டனர் என்று எம்.ஆரோக்கியசாமி குறிப்பிடுவர்.

விளையாட்டு:-

அக்கால மகளிர் பொம்மையை வைத்தும் பூக்களைக் கொய்து மாலையாகத் தொடுத்தும், பல இலைகளைக் கோர்த்தும் விளையாடினர் என்று மருதக்கலி மூலம் அறியமுடிகிறது. ''மடக்குறு மாக்களோடு ஓரை அயரும்'' (82.5) எனச் சிறுமியர் கோரைப் பொம்மை செய்து விளையாடியச் செய்தியை மருதநில நாகனார் கூறியுள்ளார். மகளிர் தழைகளைக் கொய்து விளையாடியதைக் ''கொய்குழை அகை காஞ்சிதத் துறை அணி'' என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊசல் ஊர்ந்தாடல் மகளிர்க்குரிய இனிய பொழுதுபோக்குகளாகும். இச்செய்தியினை நெய்தல்கலி குறிப்பிடுகிறது. தாழையின் விழுது கயிறாகவும், நெய்தல் மாலை அக்கயிற்றில் கட்டிய மாலையாகவும், சுறாவினது மருப்புக் கோத்த பலகை அமரும் பலகையாகவும் அமைக்கப்பெற்ற ஊசலில் மகளிர் ஊசலாடுவர். ஊசலாடும் போது மகளிர் பாடவும் செய்வர். இக்கருத்தமைந்த பாடல் பின்வருமாறு.

''இனமீன் இகன்மாற வென்ற சினமீன்

எறிசுறா வான்மருப்புக் கோத்து நெறிசெய்த

நெய்தல் நெடுநார்ப் பிணித்து யாத்துக் கையுளர்வின்

யாழிசை கொண்ட இனவண்டு இமிர்ந்து ஆர்ப்பத்

தாழாது உறைக்கும் தடமலர்த் தண்தாழை

வீழ்ஊசல் தூங்கப் பெறின்

மாழை மடமான் பிணைஇயல் வென்றாய் நின்ஊசல்

கடைஇயான் இகுப்ப நீடுஊங்காய் தடமென்தோள்

நீத்தான் திறங்கள் பகர்ந்து (131. 6-14)

பழக்க வழக்கம்:-

பழக்கம் என்பது தனிமனிதனிடம் இயல்பாக அமைந்துள்ள நடத்தையைக் குறிப்பதாகும். பழக்கம் வாழ்க்கைக்குத் தேவையானதாகக் கருதப்படுகிறது. அவரவர்க்கு விரும்பிய மனநிறைவையும் அது தருகிறது. பழக்கத்தின் தொடர்நிலை வழக்கம் எனப்படுகிறது. இது சமூகம் சார்ந்த ஒன்று. பழக்கமாகிவிட்ட செயல்களைச் சமூகத்தில் வழக்கம் என்கிறோம். வழக்கம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் சமூகச் செயல்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பியம் வழக்கம் பற்றிக் குறிப்பிடுகையில், ''முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை'' என்று கூறுகின்றது. பண்டை மகளிரின் பழக்கவழக்கங்களைச் சில முல்லைக்கலிப் பாடல்கள் காட்டுகிறது.

ஆயமகளிர் புனத்தில் கன்றுகளை மேய்த்துக் கட்டுவர். ஆநிரை மேய்க்கும் தந்தைக்கும் தமர்க்கும் உணவும், பாலும் கொண்டு செல்வர். தாம் மணக்க விரும்பிய காதலன் மாலையைக் கூந்தலுக்குள் மறைவாகச் சூடிக்கொள்வர். கூந்தலில் வெண்ணெய் தேய்த்துக் கொள்வர். சிற்றூரிலும், பேரூரிலும் மோர் விற்பர். மோருக்கு மாறாக மாங்காயை ஊறுகாயாகக் கூட்டி நுகர்வர். தெய்வங்களுக்கும் பால்மடை கொடுப்பது வழக்கம். மேலும், குறமகளிர் பாறை உரலிலும் சந்தன உரலிலும் யானைக் கொம்பிலான உலக்கை கொண்டு தினை, மூங்கில்நெல் ஆகியவைகளைக் குத்தும்போது வள்ளைப்பாட்டுப் பாடுவர். சேம்பின் இலையை முறமாகவும் பயன்படுத்தினர். இவ்வள்ளைப் பாட்டு முருகனைப் பாடுவதுபோலக் காதலனைப் பாடுவதாகவும் அமையும். திருமணம் கைகூடின் தெய்வத்திற்குப் பலியிடுவர். இதனை,

''சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்

ஐவன வெண்நெல் அறை உரலுள் பெய்து இருவாம்

ஐயனை ஏத்துவாம் போல'' (43. 5-7) என்றும்

''நிலை உயர் கடவுட்குக் கடம்பூண்டு, தன்மாட்டுப்

பலசூழும் மனத்தோடு பைதலேன் யான்'' (46.15-17)

என்றும் பாடல் வரிகளால் அறியலாம்.

திருமணம்:-

அக்கால மகளிர் தமக்கு வாய்க்கும் கணவன் வீரம் உடையவனாகவும், அஞ்சாநெஞ்சினனாகவும் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்தனர். இக்குறிப்பு கலித்தொகையில் காணமுடிகிறது. காளையை அடக்கிய ஆடவனைக் கைப்பிடிக்கும் ஆயமகளின் திருமணம் கலித்தொகையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்றினைத் தழுவிய பொதுவனுக்கே தலைமகளை தமர்கொடை நேர்வர். மணத்தைக் கூட்டுவிப்பது தெய்வம் என்று கருதப்பட்டது. பூவாலூட்டிய இல்லின் முற்றத்தில் மணம் தாழப்பரப்பி எருமைக்கொம்பை நட்டு வழிபாடாற்றி ஆயமகளின் திருமணம் நடைபெறும். ஆனால் காளையை அடக்காத வீரர்களை மகளிர் ஒருபோதும் மணந்ததில்லை. இக்கருத்தினை,

''நேரிழாய் கோள் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக்

காரிகதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே

ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார்'' (104, 73-76)

என்ற பாடல்வரிகள் உணர்த்துகின்றன.

நம்பிக்கை:-

நாளும் கோளும் பார்த்தாலும் நன்மை தீமைக்கான நிமித்தம் பார்த்தாலும் குறிகேட்டலும் மக்கள் வாழ்வோடு ஒன்றி போய்விட்டன எனலாம். நம்பிக்கை நம் நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் இருந்தன. இன்றும் இருக்கின்றன. கபிலர் பாடல்கள் அவர் காலத்திலிருந்த சில நம்பிக்கைகளை உணர்த்துகின்றன. கற்புடைய மகளிர் தம் மன ஒருமைப்பாட்டால் மழையையும் வரவழைக்க முடியும் என நம்பினர். குறிஞ்சிக் கலியில் தலைவியின் பெருமையைக் குறிக்கும் போது, அவள் உலகிற்கு மழை வேண்டுமெனின் அதனை வருவித்துப் பெய்விக்கும் ஆற்றல் சான்ற பெருமையள் என்று கூறப்படுகின்றது. ''அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே'' இக்கருத்தினை ''வான்தரும் கற்பின் மனையுறை மகளிர்'' என மணிமேகலையில் கூறியிருத்தலைக் காணலாம்.

''அறம் பிறழ்ந்து அல்லவை செய்பவன் வாழும் நாட்டில் வளம் குன்றும்'' என்பது சான்றோர் நம்பிக்கை. வள்ளுவரும்.

''வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்'' (குறள். 23-9) என்பார்.

அல்லல் புரிந்தொழுகும் குடிமக்கள் வாழும் மலைநாட்டில் வள்ளிக்கொடியும் நிலத்தடியில் கிழங்கு இடாது, மலைமேல் தேனீக்களும் கூடுகட்டாது கொல்லையில் திணையும் கதிர்விட்டுப் பயன் விளைவிக்காது என்றுரைப்பர்.

''வள்ளி கீழ்விழா, வரைமிசைத் தேன்தொடா

கொல்லை குரல்வாங்கி ஈனா மலை வாழ்நர்

அல்ல புரிந்தொழுக லான்'' (36. 12-14)

மலைப்பக்கத்து வாழும் குறவர்தம் மடந்தைமார் தவறாது தம் கணவரைத் தொழுதெழுவதால் அக்குறவர் தொடுக்கும் அம்புகள் குறிதவறிச் செல்லாதாம். ஒருவர் செய்யும் நல்வினை அவரைச் சேர்ந்தோர்க்கும் பயன் விளைவிக்கும் என்ற நம்பிக்கை,

''வாங்கமை மென்தோள் குறமட மகளிர்

தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலால் தம்மையரும்

தாம்பிழையார் தாம்தொடுத்த கோல்''

என்னும் பாடலடிகளால் புலனாகிறது.

முடிவுகள்:-

கலித்தொகையில் காணக்கூடிய மகளிர் ஆடவர்களுக்கு நிகராக உரிமை பெற்றிருந்தனர். அக்கால மகளிர் பொம்மையை வைத்தும் பூக்களைக் கொய்தும் விளையாடினர். ஊசல் விளையாட்டில் சுறாவினது எலும்பை அமரும் பலகையாக மேற்கொண்டனர். மகளிர் சந்தன மரத்தாலான உரலில் யானைக் கொம்பாலான உலக்கையைக் கொண்டு நெல் குத்தினர் என்று தெரியவருகிறது. சங்க மகளிர் வீரம் உடைய ஆண்மகனை மணந்ததாக முல்லைக்கலி கொண்டு அறியமுடிகிறது. கற்புடைய மகளிரால் மழை வரவழைக்க முடியும் எனக் கலித்தொகை குறிப்பிடுகிறது.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

 

கருத்துகள் இல்லை: