27/04/2012

யானை புகுந்த நிலம்

சங்க காலத்தில் மன்னர்கள் ஆட்சி முறையிலிருந்து விலகிச் செல்லும் காலங்களில் புலவர்கள் மன்னர்களின் தவறைச் சுட்டிக்காட்டத் தவறியதில்லை. அதனை மன்னர்கள் ஏற்றுக்கொள்ளவும் தயங்கியதில்லை. அந்த வகையில் அமைந்த புறநானூற்றுப் பாடல் ஒன்று மன்னன் அறிவுடை நம்பிக்கும் பிசிராந்தையாருக்கும் இடையே நடந்த உரையாடலை விளக்குவதாக அமைந்துள்ளது.

"அறிவுடை நம்பி! இந்தச் செயல் உனக்கே நன்றாக இருக்கிறதா?''

"தாங்கள் எந்தச் செயலைக் குறிப்பிடுகிறீர்கள் பிசிராந்தையாரே?''

"அரசாட்சியில் உள்ளவர்களுக்கு மக்களை அடக்கி ஆளவும், அதிகாரம் செய்யவும் தெரிந்தால் மட்டும் போதாது. மக்களின் துன்பங்களை உணர்ந்து கொள்ளவும் அவற்றைப் போக்கவும் தெரிந்திருக்க வேண்டும்''

"திரும்பத் திரும்பச் சுற்றி வளைத்துப் பேசுகிறீர்களே ஒழிய, செய்தியைத் தெளிவாகச் சொல்ல மாட்டேன் என்கிறீர்களே?''

"தெளிவாகச் சொல்ல வேண்டிய செய்திதான் நம்பி!''

"நீங்கள் சொல்லி நான் கேட்க மறுத்தது உண்டா புலவரே! சொல்லுங்கள், தவறு என்மீது இருக்குமாயின் உடனே திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறேன்.

"ஒரு மா (ஓர் அளவு) அளவுள்ள சிறிய நிலமானாலும் அல்லது அதற்கும் குறைந்த நிலமாகவே இருந்தாலும், அந்நிலத்தில் முற்றி விளைந்த பயிரை அறுவடை செய்து தானியத்தைச் சேகரிக்க வேண்டும். அவ்வாறு சேகரித்த தானியத்தைச் சோறாகச் சமைத்து ஒரு பெரிய யானைக்குப் பசித்தபோதெல்லாம் கவளம் கவளமாக வாரிக்கொடுத்தாலும் அது பலநாள் காணும்...''

"நீங்கள் செய்தியைச் சொல்கிறீர்களா? அல்லது  ஏதாவது யானைக்கதை, பூனைக்கதை சொல்கிறீர்களா?''

"முழுவதும் கேள் நம்பி! அதற்குள் பொறுமையை இழந்து விடுகிறாயே.......?''

"நூறுவயல் அளவுடைய பெரிய நிலமாக இருந்தாலும், அதில் விளைந்த பயிரை அறுவடை செய்யாமலே பெரிய யானையை அதனுள் அவிழ்த்து விட்டுவிட்டால் அப்பொழுது என்ன ஆகும்? யானை வயலுக்குள் புகுந்து நெற்கதிர்களை உண்ணும். அப்படி உண்ணும்போது, அது உண்ணக்கூடிய தானியத்தைக் காட்டிலும் தன் பெரிய கால்களால் மிதிபட்டு உதிர்ந்து வீணாகிற தானியமே அதிகமாக இருக்கும். சிறிய நிலமானாலும் பயிரை முறையாக அறுவடை செய்து கவளமாக யானை வாயில் ஊட்டினாலும் அது யானைக்குப் பலநாள் ஆகும். பெரிய நிலமானாலும் அறுவடை செய்யாமலேயே யானையை நிலத்திற்குள்ளே நுழைய விட்டுவிட்டால் அது ஒருமுறை உண்பதற்குள் நிலம் முழுவதும் மிதிபட்டுப் பயிர் அழிந்துபோகும்!''

"உம்ம்.. சரி. அப்புறம் மேலே சொல்லுங்கள்''

"மன்னா நான் கதை சொல்லவில்லை! அரசன் யானையைப் போன்றவன், குடிமக்கள் விளைந்த பயிருடன் கூடிய விளை நிலங்களைப் போன்றவர்கள்''

"உங்கள் உவமை மிக அழகாக இருக்கிறது''

"அழகாக மட்டும் இருக்காது. கொஞ்சம் ஆழமாகவும் இருக்கும். மேலும், கேள்! அறிவுணர்வுமிக்க அரசன், மக்களிடமிருந்து முறைக்கேற்ற விதத்தில் பெறப்படும் வரிப் பணத்திலிருந்து செல்வம் கோடி கோடியாகப் பெருகியும், அறிவுணர்வு குறைந்த அரசன் நாள்தோறும் தரம் அறியாமல் வீண் ஆரவாரங்களைச் செய்கிற சுற்றத்தாரோடு கூடி மக்களின் அன்பு கெட்டுப்போகுமாறு அவர்களிடம் வற்புறுத்தி அதிக வரியைப் பறிக்க முயன்றால், யானை புகுந்த நிலம்போலத் தானும் உண்ண முடியாமல் பிறருக்கும் பயன்படாமல் வீண் அழிவே ஏற்படும்''
இதைக்கேட்டு அறிவுடைநம்பி திகைத்தான்.

"என் நாட்டில் இந்த முறைகேடு எங்காவது நிகழக் கண்டீர்களா புலவரே?''

"கண்டதால்தான் இந்த யானைக்கதை''யையும் இதை ஒட்டிய அறிவுரையையும் கூற நேர்ந்தது''

"எங்கே கண்டீர்கள்?''

"ஏன் உன்னுடைய கவனக் குறைவைப் பயன்படுத்திக்கொண்டு உன்னைச் சேர்ந்தவர்கள் பல இடங்களில் மக்களுக்கு இந்தக் கொடுமையை தயங்காமல் செய்து வருகிறார்கள்''

"உடனே அதைக் கவனிக்கிறேன், பிசிராந்தையாரே! சிறிதும் அஞ்சாமல் என்னை அணுகி இதைக் கூறியதற்கு என் நன்றி! உங்கள் துணிவு போற்றுதலுக்குரியது''

"போற்றுதலை எதிர்பார்த்து உன்னிடம் இதைக் கூறவில்லை. உங்களைப் போன்றவர்கள் வழி தவறிவிட்டால் இது வழியல்ல! அதோ அதுதான் வழி என்று சுட்டிக்காட்டுவதற்குத்தானே புலமையைத் தொழிலாகக் கொண்டு நாங்கள் வாழ்கிறோம்.''

"புலவர் பெருமானே! போற்றுதலை எதிர்பார்த்து இந்த உலகாளும் தொழிலைவிட உயர்ந்தது புலமையே! ஏன் தெரியுமா? உலகாள்பவர்களையும் ஆள்பவர் யார்? புலவர்களன்றோ? அவர்கள் வெறும் மனிதர்கள் அல்ல, தெய்வங்கள்''.

"நிறையப் புகழ்ந்துவிடாதே நம்பி!''
 இருவரும் தமக்குள் சிரித்துக் கொண்டனர். யானைக் கதையை நினைத்துச் சிரித்த சிரிப்புதானோ அது'' என்று இப்பாடலுக்கு புலவர் பார்த்தசாரதி விளக்கம் அளித்துள்ளார். இக்கருத்தை விளக்கும் பாடல் இதுதான்,

"காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்
நூறு செறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே
புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடியாதது நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கலலென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணா உலகமும் கெடுமே''
(புறம்-184)

நன்றி - தமிழ்மணி

2 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

அருமையான இலக்கியப் பதிவு. தங்களின் இந்தப் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். சமயம் இருக்கும்போது பார்த்துக் கருத்திடவும்.

http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_30.html

சித்திரவீதிக்காரன் சொன்னது…

இன்றைய ஆட்சியாளர்களுக்கும் பொருத்தமான சங்ககாலப்பாடல் வரிகளைத் தொகுத்தமைக்கு நன்றி.
-சித்திரவீதிக்காரன்.