18/12/2011

மொழிப் பயிற்சி – 70 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

ஏவலும் வியங்கோளும்:

வா, செய், படி, நில் - ஏவல் (கட்டளை)

வருக, செய்க, படித்திடுக, நிற்க - வியங்கோள்

இந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து ஏவல் என்பது ஆணையிடுவதாகவும், வியங்கோள் என்பது வேண்டுகோளாகவும் இருக்கின்றன என அறிந்து கொள்ள முடியும்.

இந்த இரண்டும் இல்லாது, நாம் புதிதாகச் சொல்லிவரும் சொற்களான வரவும்,செய்யவும், படிக்கவும், நிற்கவும் என்பன போன்றவை பிழையானவை என்று முன்னரே எழுதியிருக்கிறோம். "உம்' என்பது இணைப்பு இடைச்சொல். இதனைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம்.

ஏவலுக்கும், வியங்கோளுக்கும் காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகள் வினைமுற்றுகளாகும். ஏவல் வினைமுற்றுக்கும், வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி பள்ளியில் படித்திருக்கக்கூடும்.

ஏவல் வினைமுற்று, ஒருமை,பன்மை, வேறுபாடு உடையது.

(எ-டு) நீ வா, நீங்கள் வாருங்கள்

ஏவல் வினைமுற்று முன்னிலை இடத்தில் மட்டும் வரும்.

(எ-டு) நீ செய், நீங்கள் நில்லுங்கள் என்பதன்றி நான், நாங்கள் எனும் தன்மையோடும், அவன், அவள், அவர்கள் எனும் படர்க்கையோடும் இணையாது.

ஏவல் வினைமுற்று கட்டளைப் பொருளில் மட்டும் வரும்.

(எ-டு) ஓடு, ஓடாதே, அடி, அடிக்காதே

வியங்கோள் வினைமுற்று ஒருமை பன்மையில் வேறுபடாது.

(எ-டு) அவன் வாழ்க!, அவர்கள் வாழ்க!

வியங்கோள் வினைமுற்று மூவிடங்களிலும் வரும்.

(எ-டு) நாம் வாழ்க (தன்மை), நீவிர் வாழ்க (முன்னிலை), அவர்கள் வாழ்க! (படர்க்கை)

வியங்கோள் வினைமுற்று வாழ்த்துதல், வைதல், வேண்டுதல், விதித்தல் எனும் பொருள்களில் வரும்.

(எ-டு) வாழ்க, வெல்க (வாழ்த்துதல்), ஒழிக, அழிக (வைதல்), வருக, உண்க (வேண்டுதல்), செய்க, நிற்க (விதித்தல்)

எதற்கு ஐயா இந்த விளக்கம் எல்லாம் என்று வினவுகிறீர்களா? நாம் பிறரை வாழ்த்துவதானாலும், வைவதானாலும், வேலை வாங்குவதானாலும், வேண்டுவதானாலும் இலக்கணப்படிப் பேசுவோமே! பேசினால் நல்லதுதானே என்னும் நோக்கத்தால் இவற்றை எழுதினோம். வியங்கோள் வினைமுற்று க, இய, இயர் என்னும் விகுதிகளைக் கொண்டு முடியும் என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது.

(எ-டு) வாழ்க, வாழிய, வாழியர் (வாழ்த்துப் பொருளில் மட்டுமே)

திருக்குறளில் பல அறநெறிகளைச் சொல்லியுள்ள திருவள்ளுவர் ஏவல் வினையில் பெரிதும் சொன்னதில்லை. எல்லாம் வியங்கோளாகவே காண்கிறோம்.

"கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக' (கற்க, நிற்க)

"எனைத்தானும் நல்லவை கேட்க

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க

செய்க பொருளை; அஞ்சுவது அஞ்சுக'

இப்படி நிரம்ப எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

ஒüவையின் ஆத்திச்சூடியில் இதற்கு நேர்மாறாக எல்லாம் ஏவலாக இருக்கக் காண்கிறோம். அறஞ்செய விரும்பு, இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், ஐயமிட்டு உண், ஒப்புரவொழுகு, ஓதுவது ஒழியேல். இப்படிப் பலவும்.

விரும்பு எனும் ஏவல் விரும்புக எனின் வியங்கோளாகும்.

உண் எனும் ஏவல் உண்க எனில் வியங்கோளாகும்.

ஒழுகு எனும் ஏவல் ஒழுகுக எனில் வியங்கோளாகும்

(கரவேல் - ஒளிக்காதே, விலக்கேல் - விலக்காதே, ஒழுகு - கடைப்பிடி, ஒழியேல் - விட்டுவிடாதே) இடமறிந்து இவற்றையெல்லாம் நம் எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்தி வந்தால் தமிழ் நலம் பெறும்.

தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல்

தெளிவாக அறிந்திருப்பவர் தெளிவாகப் பிறர்க்கு உரைக்க முடியும். உரைப்பவர்க்குத் தெளிந்த அறிவு இல்லையானால் கேட்பவர் குழப்பமே அடைவர். மேற்காணும் பாரதியின் வாக்கு அந்த மகாகவியின்,"உள்ளத்தில் உண்மையொளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்' என்னும் தொடரை நினைவூட்டுகிறது.

"ஆண்டுதோறும் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் இராசராசனுக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது' - இது ஒரு தொலைக்காட்சிச் செய்தி. இதில் பிழையொன்றும் இல்லை. ஆனால் தெளிவு இல்லை? எப்படி?

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள் இல்லை: