29/03/2011

நாட்டுப்புறக் கதைகளில் மகா சிவராத்திரி - கா.கருப்புசாமி

சிவராத்திரி என்னும் பெருமை வாய்ந்த நாட்டுப்புற விழா விருத்தாசலம் வட்டம் தே. பவழங்குடி கிராமத்தில் உள்ள சிவாலயத்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பழமை வாய்ந்த விழாவின் சிறப்பினை உணர்த்தவும் இவ்வூரில் இவ்விழா இன்று எந்நிலையில் உள்ளது. இதற்கான காரணங்கள் யாவை என்பதனை இக்கட்டுரை ஆராய்கின்றது.

விருத்தாசலம் வட்டம் அத. பவழங்குடி கிராமத்தில் ''அமிர்தலிங்கேஸ்வரர் அமுதாம்பிகை'' என்றும் சிவாலயம் ஒன்று உள்ளது. பல நூற்றாண்டுகட்கு முன் ''சுந்தரமூர்த்தி'' என்ற சிவபக்தர் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகிய இரு பெண்களையும் காதல் கொண்டார். சிவபெருமான், அவர்களுக்குத் தூதாக சென்று பெண் வீட்டார்களிடம் சமாதானம் பேசி வரும்போது இரவு நேரம் ஆனதால் தே. பவழங்குடி கிராமத்தில் தங்கியிருந்தார். மறுநாள் கைலாசபதிக்கு அழைத்துச் சென்று திருமணம் நடத்தி வைத்தார் என்று தகவலாளி செவிவழிச் செய்தியாக வழங்கப்பட்ட செய்தியைக் கூறியுள்ளார்.

இக்கோயில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா நடைபெற வேண்டும் என ''எறிபத்த நாயனார்'' கூறியதாகச் செய்தி ஒன்று உள்ளது. சோழநாட்டில் உள்ள கருவூரில் ''எறிபத்த நாயனார்'' வாழ்ந்து வந்தார். அவர் அவ்வூரிலுள்ள ''ஆநிலை'' என்னும் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை நாள்தோறும் வழிபட்டு வந்தார். அவ்வூரிலுள்ள மக்களுக்கு ஏதேனும் தீங்கு என்றால் தன் உயிரையும் பொருட்படுத்தாது முனைந்து போராடி அத்தீங்குகளை நீக்குவார். இவர் தே. பவழங்குடி சிவபெருமானுக்கு சிவராத்திரி விழா கொண்டாடப்படவேண்டும். அவ்வாறு கொண்டாடினால் இவ்வூரிலுள்ள மக்களுக்கு எத்தீங்கும் இருக்காது. சிவனருள் கிட்டும் என அவர் கூறியுள்ளதால் அறியலாம்.

சிவராத்திரி:-

உலகாளும் உமையவளாம் அன்னை பார்வதி தேவிக்கு உகந்தது நவராத்திரி. உலக உயிர்களுக்கெல்லாம் அம்மையாகவும் அப்பனாகவும் விளங்கு காத்தரும் சிவபெருமானுக்கு உகந்த விரதம் சிவராத்திரி. மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியில் வரும் ராத்திரியே சிவராத்திரி ஆகும். சிவராத்திரி என்பதில் சிவம் என்ற சொல்லுக்கு ''இன்பம்'' என்று பொருள். சிவராத்திரி என்றால் இன்பமயமான இரவு எனப் பொருள் கொள்ளலாம்.

ஓர் இரவு சிவன் உறையும் கோவிலில் எலி ஒன்று நெய் உண்ண முயன்றது. அப்போது எரிந்த விளக்கு இன்னும் பிரகாசமாக எறிய எலி தீயில் விழுந்து உயிர் நீத்தது. இச்செயலை மெச்சிய ''சிவபெருமான்'' மேலும் அந்நாளை சிவராத்திரியாகக் கொண்டாட வேண்டும் என்றார். அந்த எலியை மூவுலகும் ஆளுகின்ற மகாபலி சக்கரவர்த்தியாகப் படைத்தார் என்பது தொடக்ககாலச் செய்தி.

பிரதோஷகாலம், அந்த நேரத்தில் வில்வ மரத்தின் மேலிருந்து ஒரு குரங்கு விளையாட்டாக வில்வமரத்து இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தது.

அந்த இலைகள் அனைத்தும் மரத்தடியில் சயனித்துக் கொண்டிருந்த சிவபெருமான் மீது விழுந்தது. கிட்டத்தட்ட 108 முறை வில்வ இலைகளை தன்மீது அர்ச்சித்த அக்குரங்கின் செய்கையால் உவகை பூண்டார். சிவபெருமான் அக்குரங்கை அழைத்து, எனக்கு பிரியமான வில்வ இலையால் நீ என்னை இயல்பாய் அர்ச்சித்தாய் எனவே நீ ஆயிரத்தெட்டு ஆண்டுகள் சக்கரவர்த்தியாய் இருந்து உள்ளன்போடு வழிபட்டு முடிவில் சிவலோகப் பதவியை அடைவாய் என்று வரம் அருளினார் என்பது பழங்காலச் செய்தி.

இவ்வாறு சிவராத்திரி குறித்து வெவ்வேறு புராணங்கள் கூறப்பட்டாலும் அனைத்தும் வாழ்வின் இருள் அகற்ற சிவராத்திரி விரதம் உகந்த விரதம் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது எனலாம்.

சிவராத்திரி பொதுக்கதை:-

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் மருதூர் கிராமத்தில் பல சிவாலயங்கள் நிர்மாணிக்கப்பட்டன. அவ்வூரில் வில்வவன வேடன் ஒருவன் சிவபக்தியோடு வாழ்ந்து வந்தார். வேடனுக்கு ஒரு மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளன. அவ்வேடனுக்கு விவசாயம் கிடையாது. காட்டில் வேட்டையாடச் செல்வர். பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடிச் சமைத்து காலத்தை கழித்து வந்தார். காட்டில் சென்று கிழங்கு வகைகளையும் கொண்டு வந்து சமைத்து சாப்பிடுவது வழக்கமாகும். வில்வ வனவேடனை சோதிப்பதற்கு ''சிவபெருமான்'' மாறுவேடத்தில் மருதூர் வனவேடனாக வருகின்றார். வில்வ வனவேடனுக்குத் துணை இல்லாமல் இருந்ததனால் பெண்சாதியின் அனுமதி கேட்டு மருதூர் வனவேடனோடு காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். மருதூரில் நான்கு திசைகளிலும் காடுகள் அடர்த்தியாக இருந்தன. வில்வவனவேடனும் மருதூர் வனவேடனும் வடக்குக் காட்டிற்குச் சென்றனர். வடக்குக் காட்டிற்கு செல்லும்போது மான் கூட்டங்கள் வந்தன. மான்களை வேட்டையாடிச் சமைத்து சாப்பிடலாம் மருதூர் வனவேடனே! என்று வில்வ வனவேடம் கூறினான். அதற்கு மருதூர் வனவேடன் நமது ஈஸ்வரன் கையிலிருக்கும் ''மான்மழுஉ'' இருப்பதால் அவைகளைக் கொல்லக்கூடாது. மான்களை ஓட்டிவிட்டு கிழக்கு காட்டிற்குச் செல்வோம் வில்வ வனவேடனே என்றான் இதனை,

மாறுவருகுதடா வனவேடா மானுவருகுதடா

மானுவருகுது சேனையுடன் கூடி

வானத்து தூளிகள் தானெழும் பிடயிதோ - மானுவருகுதடா

கூடியினங்களுடன் வாடி மனந்தளர்ந்து

தேடி மருதூர் வனம்நாடி நடை நடந்து - மானுவருகுதடா

கூட்டத்துடனே யிதோ ஓட்டமிடுகுது வில்லை

வாட்டத்துடன் வளைத்து பூட்டடா பகஷ’யை - மானுவருகுதடா

அண்டகடாக மட்டும் சண்டையிடுகுதிதோ

தொண்டர் புகழ் வளர்ந்து கொண்ட மருதூர் நாட்டில் - மானுவருகுதடா

என்ற பாடலால் அறியலாம்.

வில்வ வனவேடனும் மருதூர் வனவேடனும் கிழக்கு நாட்டிற்குச் செல்கிறார்கள். செல்லும் வழியில் பன்றிக் கூட்டம் வருகிறது. இதையாவது கொன்று மாமிசம் எடுத்துச் செல்வோம் மருதூர் வனவேடனே என்றான் வில்வ வனவேடன். அதற்கு மருதூர் வனவேடன் நமது ஸ்ரீம நாராயணமூர்த்தி சிவனது அடியைக் காண்பதற்கு பாதாளம் வரை சென்று ''வராக அவதாரம்'' எடுத்திருக்கின்றான். அவைகளைக் கொன்றால் பாவம். ஆகையால் அவைகளைத் தொரத்திவிட்டு தெற்கு காட்டிற்கு செல்வோம் என்றான் இதனை,

பன்றி வந்ததே வனந்தனில் பன்றிவந்ததே

குட்டியும் செறு மட்டமும் பின்னே

கூடிக்கிழக்குக் காட்டிலே

வந்த பன்றியும் மூத்தவாயால்

மடிக்குங் கோரை கடிக்குமே

குந்தவே அதன் குட்டிகள் தானும்

கூடிப்பாலே ஊட்டிவரவே - பன்றி வந்ததே.

என்பதனால் அறியலாம்.

இருவரும் தெற்குக் காட்டிற்குச் செல்கிறார்கள். தெற்குக் காட்டில் மயில் கூட்டம் வருகின்றது. அவைகளை வேட்டையாடி எடுத்துச் செல்வோம் மருதூர் வனவேடனே என்றான் வில்வ வனவேடன். அதனை மருதூர் வனவேடன் மறுத்து, நமது குலத்து வள்ளியம்மை கணவன் சுப்பிரமணியன் வாகனம் ஆகையால் அவைகளை கொன்றால் பாவம் வில்வவனவேடனே! மயில்களை தொரத்திவிட்டு மேற்கு காட்டிற்குச் செல்வோம் என்றான் இதனை,

மயில் வருகிற ஒயிலை பாரடா அடவில்வவனவேடா

மயில் வருகிற ஒயிலை பாரடா அடவில்வ வனவேடா

அய்யன் மருதூர் வளம் பெறுநாட்டினில்

ஆடிக்கொண்டே மயில் கூடிக் கொண்டே

செய்யும் பொடிக் கண்ணி கையிலெடுத்து

சீக்கிரமாகவே தாக்கியே கட்டடா

.............................. மயில் வருகிற

இருவரும் மேற்குக் காட்டிற்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் துஷ்டமிருகம் இருப்பதால் நீ ஜாக்கிரதையாக தென்புறமாக வா நான் வடபுறமா வருகிறேன் என்று கூறிவிட்டு மலைபோல சிவனின் புலி உருவம் எடுத்து வில்வ வனவேடன் முன்னே வந்தார். வில்வ வனவேடன் அஞ்சி நாலாபுறமும் அலைந்து ஒரு குளக்கரையின் அருகில் வில்வமரத்தின் மேல் ஏறிக்கொண்டார் இதனை,

''வந்துதே புலி வனந்தனில் வந்ததே புலி

வந்துதே புலி விந்தையதாகவே

அந்தமா மருதூர் அடவி தன்னிலே'' என்பதனால் அறியலாம்.

பொழுது சாய்ந்தவுடன், புலியும் சுற்றி சுற்றி வில்வ மரத்தின் அருகே உறங்கியது. வில்வ வனவேடன் இரவு முழுவதும் வில்வ தழையை பறித்து பாடிக்கொண்டே புலியின் மேல் போட்டார். பொழுது விடிந்தது, தனது மனைவி மக்கள் தேடி அலைந்துவிட்டு, குளக்கரையின் அருகே வந்ததும் வில்வமரத்தின் மேல் கணவன் இருப்பதைக் கண்டவுடன், சீதை அழுதுக்கொண்டே வந்தாள். வராதே! வராதே! புலி கீழே உறங்கிக் கொண்டிருக்கிறது. உடனே வில்வ வனவேடன் தனது அம்பினால் விலக்கி பார்த்தார். அது லிங்கமானது: கீழே இறங்கி ஆனந்த கண்­ர் விட்டார். சிவன் ரிஷப (காளை) வாகனத்தில் வில்வவனவேடனுக்கும் மனைவி குழந்தைகளுக்கும் முக்தி கொடுத்து தன்னோடு அழைத்துச் சென்றார். ஆகையினால் அன்றிரவை மகாசிவராத்திரியாக கொண்டாடி வருகின்றனர் என்பது ஒரு தொடக்காலத்திலிருந்து நடைபெற்று வந்தது என்றார் தகவலாளி.

நாடகத்தின் பெருமை:-

சிவபெருமானை முன்னிட்டு தே. பவழங்குடி கிராமத்தில் 1980, இல் பிலவங்க வருடம் மாசி மாதம் அமாவாசை முதல் நாள் மகாசிவராத்திரி நாடகம் முன்னோர்களால் நடிக்கப் பெற்றது. ஆரம்பகாலங்களில் நாடகம் நடிப்பவர்கள் மூலம் பணம் வசூல் செய்தும் வீட்டுக்கு ஒரு ரூபாய் வரி சேர்த்து சிவன் ராத்திரியைக் கொண்டாடி வந்தனர். அக்காலத்தில் குமிழ்இழை (பெட்மாஸ்) விளக்குகள் கொண்டு நடத்தப்பெற்றது. அதன்பின் 1969-ல் தே. பவழங்குடி கிராமத்திற்கு மின்சாரம் வந்தது. மேடையின் முன்னே மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டு சிறப்பாக நடந்தது என முன்னோர்கள் மூலம் தகவலாளி கூறினார்.

1997 ஆம் ஆண்டு 90-வது வெள்ளி விழா கொண்டாடினர். 90-குத்து விளக்குகள் பூஜையும் நடைபெற்றன. தற்போது 97-வது ஆண்டு நல்ல முன்னேற்றத்துடனும் மக்கள் காணிக்கை செலுத்துவதும் வேடர்க்கு மாலை அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. இதைப்போல் தீர்த்தனகிரி, நத்தம்மேடு, வலசக்காடு, வீராக்கன், பரிபூரணத்தம் ஆகிய ஊர்களில் சிவன்ராத்திரி நாடகம் நடைபெற்றது. தற்போது தீர்த்தன கிரி, நந்தமேடு, வீராக்கன் இவைகளைக் காட்டிலும் தே. பவழங்குடியில் சீரும் சிறப்போடும் நடைபெற்று வருகின்றது.

நம்பிக்கைகள்:-

அதிகாலையில் ஈஸ்வரன் வேடத்தில் வரும்போது பெண்கள் குழந்தை பேறு இல்லாதவர்கள் தலை முழுகி ஈரத்துணியுடன் ஈஸ்வரன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள். இவை ஆண்டுதோறும் நடந்து வருகிறது. ஆகையால் உறுதியாக இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கின்றன. விடிய விடிய கண்விழித்து பார்ப்பவர்களுக்கு எந்தவித காய்ச்சலும் வராது. எனவே சிவன்ராத்திரி ஒரு சிறந்த நாடகமாகும். பட்டாபிஷேகம் முடிந்தவுடன் பூமாலையை ஆற்றுத் தண்­ரில் இடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

சிவராத்திரி விரதம் இருந்தால் கிடைக்கும் பயன்கள்:-

1. புத்தி, முக்தி இரண்டும் கிடைக்கும். 2. அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும். 3. மகாவிஷ்ணு சிவராத்திரி விரதமிருந்துதான் சக்ராயுதத்தைப் பெற்றார். மகாலட்சுமியை அடைந்தார் என்று புராணங்கள் கூறுகின்றபடியால் வாழ்வில் வெற்றி ஐஸ்வர்யம் அடைய சிவராத்திரி விரதம் மேற்கொள்வது சிறந்தது எனத் தெரிகிறது. 4. பிரம்மா சிவராத்திரியில் விரதமிருந்து சரஸ்வதியைப் பெற்றார் என்பது ஐதீகம். சிவராத்திரி விரதம் மேற்கொண்டால் கல்வியறிவு விருத்தியடையும். 5. சிவராத்திரி விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிகழும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: வேர்களைத்தேடி

 

1 கருத்து:

ram சொன்னது…

எங்கள் ஊர் தகவலை மக்களிடம் சென்று சேர்த்தமைக்கு மிக்க நன்றி

-R.MAYAVEL
M.GUNAVEL
R.NATARAJAN
N.ABHISHEIK

T.PAVAZHANGUDI