24/06/2010

உலகச் செம்மொழியாம் தமிழ் வளர்த்த திருப்பூர் - சோ.ராமகிருஷ்ணன்

செம்மொழித் தமிழ் உலகமெலாம் பரவியிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தமிழ் வளர்த்த மதுரை என சிறப்பிக்கப்பட்ட போதும், கொங்கு மண்டலமும் தமிழ் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றி இருக்கிறது. திருப்பூருக்கும் தமிழ் மொழிக்கும் நிறைய தொடர்புகள் உள்ளதை ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாயிலாக அறிய இயலுகிறது.

பாரதத்துடன் திருப்பூர் பகுதிகள் தொடர்பு கொண்டவையாக உள்ளன. விராடபுரம் என்று அழைக்கப்பட்ட பகுதி, இன்றைய தாராபுரம். விராடபுரத்தில் மறைந்து வாழ்ந்த அர்ச்சுனன், துரியோதனன் படையினரை இம்மண்ணில் இருந்து திருப்பி அனுப்பியதால் இவ்வூர் திருப்போர்புறம் என அழைக்கப்பட்டது. பின்னாளில் மருவி, திருப்பூர் என ஆகியுள்ளது. ஏறத்தாழ 5050 ஆண்டுகளுக்கு முன், மகாபாரத நிகழ்வுகள் நடத்த இடமாக திருப்பூர் உள்ளது. நொய்யல்நள்ளாறு எனும் இரண்டு நதிக்கரைகளில் அமைந்துள்ள திருப்பூர் "காஞ்சி மாநகர்' என அழைக்கப்பட்டதாக, பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன.
காஞ்சிமாநதி மென்மையான நுண்மணல் கொண்டதால் நொய்யல் என அழைக்கப்பட்டது. இதனை கபிலர் பாடிய "பதிற்றுப்பத்து' நூல் சொல்கிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர், சோழ மன்னனால் விரட்டப்பட்ட போது, திருப்பூர் பகுதியில் நெசவு செய்யும் வேளாளர் குடும்பத்தினர் அவருக்கு அடைக்கலம் கொடுத்து விருந்திட்டனர். கம்பரும் "எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்' எனக் கவி பாடியதாக கர்ணபரம்பரைக் கதை உள்ளது.


கொங்கு வேளாளர்களின் சிறப்பைப்பாடும் "அலகுமலை ஓதாளக் குறவஞ்சி' எனும் பாடலில்,
"ஆதியில் விராடபுரி
அதன்பிறகு வஞ்சிபுரி
பின்னர் தில்லை புரி
தாராகபுரி என்னும் தாராபுரி' என்ற வரிகளில், விராடபுரி என்ற ஊர் மருவி, தாராபுரி என்று ஆகி, தற்போது தாராபுரம் என அழைக்கப்படுவதை அறிய முடிகிறது.
"கொங்குமண்டலச் சதகம்' எனும் நுõலை இடைச்சங்க கால கவி வாலசுந்தரக் கவிராயரும், 17ம் நுõற்றாண்டில் கார்மேக கவிஞரும் பாடியுள்ளனர். அதில் 24 நாடுகளில் திருப்பூர் குறுப்பு நாட்டில் உள்ளதாக அழகு தமிழில் பாடியுள்ளனர். இம்மண்ணை ஆண்ட சேரன் உதயன், பாண்டவர் படைகளுக்கு பெருஞ்சோறு அளித்ததாகவும், அதனால், "பெருஞ்சோற்று உதயன்' எனும் பெயர் வந்ததாக முரஞ்சியூர் முடிநாகராயரும்; "பெருஞ்சோறு தானளித்த சேரன்' என, இளங்கோவடிகளும் பாடியுள்ளனர்.

கரிகால்சோழன் மகன் மூத்தவேல் பல்தடக்கை பெருவிறற்கிள்ளி, கொங்கு மண்ணை ஆண்ட குடக்கோ நெடுஞ்சேரலாதனை போரில் வீழ்த்துகிறான். சேரன் இறக்கும் தருவாயில் தம்மிடம் கவிபாடிய கழாஅத்தலையருக்கு, தான் அணிந்திருந்த பொன் ஆபரணத்தை பரிசாகத் தந்துள்ளான். இறக்கும் போதும் தமிழ்க்கவிக்கு பரிசு தந்த மன்னன் வாழ்ந்த மண். இது, "அரும்பொறனால் உலகம் நிறைய விருந்து பெற்றனரால் பொலிக நும்புகழே' என்ற புறநானூறு பாடலால் அறியலாம். சோழன் கோச்செங்காணன், சேரன் கணைக்கால் இரும்பொறையை சிறை வைக்கிறான். சங்கப்புலவர் பொய்கையார் "களவழி நாற்பது' எனும் நுõலைப் பாடி, சேரனை சிறை மீட்கிறார். களவழி நாற்பது நுõலில் உழவர் களச்சிறப்பும், போர்க்களச்சிறப்பும் பாடப்படுகிறது. கலிங்கத்துப்பரணி பாடிய ஜெயங்கொண்டாரும் இதை உறுதிப்படுத்துகிறார். கவிபாடி ஒரு அரசனை மீட்ட பெருமை இம்மண்ணுக்கு உரியது.


திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில், ராமனுஜர் "மங்களாசனம்' செய்து சிறப்பித்துள்ளார். அவிநாசியில், சைவ நால்வருள் ஒருவரான சுந்தரர் முதலையுண்ட பிள்ளை மீட்க பாடிய அவிநாசி திருப்பதிகமும், திருமுருகன் பண்டி திருப்பதிகளும் அழகிய தமிழுக்கு மணிமகுடம் சேர்ப்பவை. ஐம்பெருங் காப்பியங்களுக்கு இணையாகப் பேசப்படும் "உதயணன் பெருங்காதை' என்னும் நுõலை இயற்றியவர் கொங்கு வேளீர் எனும் புலவர். இவர் திருப்பூர் அடுத்த விஜயமங்கலத்தை சேர்ந்தவர். இவர் தமிழ்ச்சங்கம் வைத்து, தமிழ் வளர்த்தவர். தொல்காப்பியத்துக்கு இணையான இலக்கண நுலான நன்னுõலை இயற்றியவர் பவணந்தி முனிவர். இவரும் விஜயமங்கலம் அடுத்த சீனாபுரத்தை சேர்ந்தவரே. சுருங்கச் சொல்லின், மகாபாரத காலத்து பண்டை புராதன சிறப்புடையது திருப்பூர்.

"காஞ்சிமாநதி' என்றழைக்கப்பட்ட நொய்யலின் நீர்வளம்' கம்பன் இருந்து வேளாளர் விருந்தோம்பல் செய்து, கவிபாடி தமிழ் வளர்த்த இடம்; சங்க நுõல் பதிற்றுப்பத்தினுள் திருப்பூர் பற்றிய செய்தி; அலகுமலை ஓதாளக்குறவஞ்சி எனும் அற்புத குறவஞ்சி நுõலை தந்த மண்; கொங்கு மண்டல சதகம் தந்த ஊர்; புலவர் கழாஅத் தலையார் பாடிய புறநானுõற்று பாடல்களில் சேர மன்னனின் கொடைத்திறம்; பகை நீக்கி பண்பு வளர்க்கும் பொய்கையார் இயற்றிய "களவழி நாற்பது'; ராமானுஜரின் அழகிய திருவாய்மொழிகள்; சுந்தரரின் அற்புத திருநெறிய தேவாரம்; உதயணன் பெருங்காதை; நன்னுõல், என செம்மொழியாம் தமிழ்வளர்த்த திருப்பூர் நகரம் "ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே' என்ற பிசிராந்தையாரின் வரிகளுக்கு ஏற்ப விளங்கியுள்ளது. திருப்பூர் மண்ணில் ஆன்றோர் பலர் வாழ்ந்து செம்மொழித் தமிழை வளர்த்துள்ளனர்.

- கட்டுரையாளர் செயலாளர், திருப்பூர் கம்பன் கழகம்.

கருத்துகள் இல்லை: