08/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 9 - ப.முருகன்


அந்தாதி

அமாவாசையை பவுர்ணமி என்று சொல்பவர் யாராவது உண்டா? அப்படி ஒருவர் சொன்னதாகவும், அப்படியா, அதை நிரூபிக்கவில்லை என்றால் நெருப்பின் மீது நிற்க வைப்பேன் என்று ஒரு மன்னன் கூறியதாகவும் ஒருபுராணக் கதை உண்டு. அப்படிச் சொன்னது அபிராமி பட்டர் என்பார்கள்.

ஆதி பராசக்தி என்றொரு திரைப்படம் இதைக் காட்சியாக்கி, அபிராமி பட்டர் ஆதி பராசக்தியை வேண்டிப் பாடுவதாக ஒரு பாடலும் இடம் பெற்றிருக்கும். கீழே நெருப்பு எரியும் மேலே ஊஞ்சலில் அபிராமி பட்டர் நின்று கொண்டு பாடுவார். சொல்லடி அபிராமி. வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி என்ற பாடலை எப்போதாவது கோவில் திருவிழாக்களில் கேட்டிருக்கலாம்.

அந்தப் பாடல் முடியும் தறுவாயில் பராசக்தி வானில் தோன்றுவதாகவும், அவளது காதணியை கழற்றி எறிவதாகவும், அது நிலவாக ஜொலிப்பதாகவும். அதைக் கண்ட மன்னன் ஆகா, நாம் அபிராமி பட்டரை துன்புறுத்தி விட்டோமே. அவரது பக்திக்காக அமாவாசையே பவுர்ணமியாக மாறிவிட்டதே என்று மனம் மாறி அபிராமி பட்டரை வாழ்த்தி வணங்குவதாகவும் காட்சிகள் விரியும்.

இவற்றில் நமக்கு வேண்டியது அந்த அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதிதான்.

அந்தாதி என்றால் என்ன? அந்தம் என்பது இறுதி. ஆதி என்பது தொடக்கம். அதாவது ஒரு பாடலின் இறுதியில் வரும் சொல் அடுத்த பாடலின் முதல் சொல்லாக அமைந்து தொடர்ந்திடும் பாடல் அமைப்புடன் கூடிய சிற்றிலக்கிய வகை அந்தாதி.

அழகிய மணவாளதாசர் என்றும் திவ்யகவி என்றும் அழைப்பட்ட பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திரு வேங்கடத்தில் கோவில் கொண்டிருக்கும் திருமாலை பற்றிய அந்தாதி நூலை எழுதி உள்ளார். இவர் திருமலை நாயக்கர் அரசவையில் ஓர் அலுவலராய் பணி புரிந்தவர்.

திருவேங்கடத்து நிலை பெற்று நின்றன; சிற்றன்னையால்...... என்று தொடங்கும் மணவாள தாசரின் பாடல், அஞ்சலென்று ஓடின மால் கழலே என்று முடியும்.

இந்த பாடலின் இறுதியில் உள்ள மால் என்ற சொற்பொருளை முதலாகக் கொண்டு மாலை மதிக் குஞ்சி ஈசனும் போதனும்.... என்று அடுத்த பாடல் தொடங்கும்.

இத்தகைய பாடல் வகை அந்தாதி எனப்படும். ஒரு சொல் என்று கூட இல்லை. கடைசி அடியோ, சீரோ, அசையோ, எழுத்தோ கூட வரும் வண்ணம் அமைந்திருக்கலாம். இந்த இலக்கிய வகையை தொல்காப்பியர் ‘இயைபு’ என்று குறிப்பிடுகிறார். யாப்பருங்கலக் காரிகை இதை அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி என்று கூறுகிறது. சொற்றொடர் நிலை என்றும் சொல்வார்கள்.

இந்த வகை நூல் வெண் பாவிலோ கட்டளைக் கலித்துறையிலோ பாடப்படும். பக்தி இலக்கியத்தில் அதாவது, தேவார, திருவாசகத்தில் திவ்யப்பிரபத்தத்தில் இருக்கும் அந்தாதிப் பாடல்கள் இதற்குச் சான்றாகும். சங்க காலத்தில் கூட அந்தாதிப் பாடல் வடிவம் இருந்திருக்கிறது.

மண்திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளிதலை இய தீயும்

தீமுரணிய நீரும்

என்கிறது புறநானூற்றில் வரும் (2: 1-5) பாடல்.

ஒரு பாடல் இன்னொரு பாடல் தொடராமல் ஒரு சொற்தொடர் இன்னொரு சொற்தொடரைத் தொடர்வதாக புறநானூற்றுப் பாடல் இருப்பதும் கவனிக்கத்தக்கது.

கம்பர் கூட சடகோபர் அந்தாதி எனும் அந்தாதி எழுதியதாகக் கூறப்படுகிறது. நக்கீர தேவ நாயனார் கயிலை பாதி களாத்தி பாதி அந்தாதியும் கபில தேவநாயனார் சிவபெருமான் திருவந்தாதியும் எழுதியுள்ளனர். பரணதேவ நாயனாரும் சிவ பெருமான் திரு அந்தாதி எழுதியிருக்கிறார் 101 பாடல்களில்.

சேரமான் பெருமாள் நாயனார் பொன்வண்ணத்து அந்தாதி எழுதியிருக்கிறார். பொன்வண்ணம் என்ற சொல் தொடர்ந்து வருவதால் இந்தப் பெயர் பெற்றது. அவரே திருவாரூர் மும்மணிக் கோவை எனும் நூலை எழுதியிருக்கிறார். அதில் உள்ள 20 பாடலும் கட்டளைக் கலித்துறையில் அந்தாதியாக உள்ளன. பட்டினத்தாரின் 100 வெண்பா கொண்ட திருவேகம்பமுடையார் திருவந்தாதி சைவ இலக்கியமாய் விளங்குகிறது.

நம்பியாண்டவர் நம்பி கோவில் திருப்பண்ணியர் விருத்தம் என்று 70 பாடல்களில் தில்லை நடராசர் மீது அந்தாதி முறையில் பாடியிருக்கிறார். அவரே திருத்தொண்டர் திருவந்தாதி என்று 63 நாயன்மார்கள் மீது 86 பாடல்கள் எழுதியுள்ளார். நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றழைக்கப்படும் வைணவ இலக்கியத்தில் பல அந்தாதி உண்டு.

பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வாராம் பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதியும் 2வது ஆழ்வாராம் பூதத்தாழ்வார் 2ம் திருவந்தாதியும் எழுதியுள்ளனர். அவர் 100 வெண்பாக்களை பாடியுள்ளார். பேயாழ்வார் 3ம் திருவந்தாதியும் திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதியும் நம்மாழ் வார் பெரிய திருவந்தாதியும் படைத்துள்ளனர்.

காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதியும் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் திருவேங்கடத் திருவந்தாதியும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை எழுதிய தில்லையமக அந்தாதியும் எல்லப்ப நாவலர் எழுதிய திருவருணை அந்தாதியும் குறிப்பிடத்தக்கவையாகும். கவிஞர் கண்ணதாசன் கூட அந்தாதி எழுதியுள்ளார் அதன் பெயர் கிருஷ்ணன் அந்தாதி.

நன்றி - தீக்கதிர்

கருத்துகள் இல்லை: