13/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 10 - ப.முருகன்

ஒருபா ஒரு பஃது

சங்க இலக்கியங்களான பாட்டும் தொகையும் பதினெண் மேல்கணக்கு நூல்கள். திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள். மேல்கணக்கு நூல்களான ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவை எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தவை. இவற்றில் பதிற்றுப்பத்து, பத்து அரசர்கள் பற்றிப் பாடப்பட்ட பத்துப்பத்துப் பாடல்களைக் கொண்டது.


கீழ்க்கணக்கு நூல்களில் இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார்நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணை மொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது போன்றவை எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தவை. இவை சங்கம் மருவிய காலத்திய படைப்புகள். அதற்கடுத்த பக்தி இலக்கிய காலத்தில் விளைந்தவை தான் பிரபந்தங்கள். பிரபந்தங்கள் 96 வகை என்று கூறப்பட்டாலும் அதற்கு மேலும் உண்டு என்பதைப் பல இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.
“தெய்வம் பற்றி தோன்றியுள்ள பிரபந்த வகைகளும் வேறுபாடுகள் சிறிதும் இன்றி ஒரே அச்சில் வார்த்தன போல் உள்ளன. உதாரணமாக கோவை, உலா முதலிய பிரபந்தங்களைக் கூறலாம். இவற்றில் உலாப் பிரபந்த வகையிலாவது சிலவேற்றுமைகள் உண்டு; கோவையில் அதுவும் இல்லை. கோவையில் காட்சி முதல் காரிப் பருவம் கண்டு இரங்கல் வரையுள்ள பலதுறைகளும் அழகு யாதுமின்றி, கவித்துவச் சிறப்பின்றிப் பாடப்பட்டுள்ளன. ஸ்தலம் பற்றியுள்ள சரித்திரக் குறிப்புகள் கூட இவற்றில் கிடைத்தல் அருமை....” என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை தமது தமிழின் மறு மலர்ச்சி நூலில்.


பாவேந்தர் பாரதிதாசன் கூட மகாகவி பாரதி பற்றிய தனது புதுநெறி காட்டிய புலவன் பாடலில்


“கலம்பகம் பார்த்தொரு கலம்பகத்தையும்
அந்தாதி பார்த்தோர் அந்தாதி தனையும் மாலை பார்த்தொரு மாலை தன்னையும்
காவியம் பார்த்தொரு காவியம் தன்னையும்
வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று விரைந்து தன்
பேரை மேலே எழுதி” என்று, குறிப்பிடுகிறார்.


பிற்கால நாயன்மார் பாடல்கள் சைவ சித்தாந்த நூல்கள் என குறிக்கப்படுகின்றன. கி.பி. 12, 13,14ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த உய்ய வந்த தேவ நாயனார் போன்ற புலவர்கள் பாடிய 14 நூல்கள் இத்தகையவை. இவற்றை சாத்திர நூல்கள் என்று அழைப்பர். இந்த சாத்திர நூல்கள் பற்றிக் கூறும் வெண்பாப் பாடல்.


“உந்திகளிறு உயர் போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்தவருட்
பண்புவினா போற்றி கொடி பாசமிலா நெஞ்சு விடு
உண்மை நெறி சங்கற் பகம் மூன்று”


அதாவது திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை வெண்பா, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை நெறிவிளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகியவை.
இதில் உள்ள இருபா இருபஃது நூலை அருள் நந்தி சிவாச்சாரியார் என்பவர் எழுதியுள்ளார். இதன் நூற்பாக்கள் வெண்பாவிலும் கலிப்பாவிலும் உள்ளவை. காப்புப் பாடல் தவிர ஆணவம், மாயை, கர்மம் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 20 பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.


இதுபோன்றே ஒருபா ஒருபஃது, இதில் எத்தனை படைப்புகள் உள்ளன என்பது சரியாக தெரியவில்லை. மகாகவி பாரதி எழுதிய ‘ஒருபா ஒருபஃது’ எளிதில் கிடைக்கக் கூடியதாகும். பிரபந்தம் எனும் தலைப்பிலே இளசை ஒருபா ஒருபஃது என எழுதியுள்ளார். இளசை என்பது எட்டையபுரத்தைக் குறிப்பது. அது பற்றிய பாடல் பத்தும் முதலில் அதன் காப்புச் செய்யுளும் என 11 பாடல்கள் உள்ளன. காப்புச் செய்யுள் உள்பட பதினொரு பாடல்களிலும் இரண்டாம் அடியில் தனிச்சீர் பெற்று வரக் கூடியவையாக உள்ளன. இது வெண்பா பாடலாக மட்டுமே அமைந்துள்ளது.


தேனிருந்த சோலை சூழ் தென்னிளசை நன்ன கரின்
மானிருந்த கையன் மல ரடியே - வானிற்
சுரர்தம னியன்மால் தொழுங்காற் கிரீடத்
தரதனங்கள் சிந்து மகம்


இது முதல் பாடல்.


காப்பு, பத்துப்பாடல் தவிர தனிப் பாடல் ஒன்றும் எட்டப்ப ராஜாவை புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.


கண்ணனெனும் எங்கள் கருணைவெங்கடேசு ரெட்ட
மன்னவன் போற்றுசிவன் மாணடியே - அன்னவனும்
இந்நூலுந்த தென்னாரி ளசை எனும் நன்னகரும்
எந்நாளும் வாழவைக் கும்மே

நன்றி - தீக்கதிர்

கருத்துகள் இல்லை: