19/10/2013

காலம் அரங்கேற்றிய புரட்சி நாடகம்: பாரதி - பேராசிரியர் கு.சுந்தரமூர்த்தி

மானுடத்தை வாழ்விக்க வந்த நம் மகாகவி பாரதிக்கு டிசம்பர் 11-ல் 130 வயது. அந்தக் கவிதைப் புலவனின் இலக்கியப் பயணம், சகல திசைகளிலும் புரட்சி வெளிச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எரிமலைக் குழம்பைத் தொட்டுத் தொட்டு கவிதை எழுதிய பாரதி, மலர்ச்சாறு கொண்டும் மனதுக்கு இதமாக மாகவிதைகள் தந்தவன். கவிதை, பாடல், சிறுகதை, கட்டுரை, வசன கவிதை என புதுப்பாய்ச்சல் நடத்திய பாரதி, நாடகக் களத்தை மட்டும் விட்டுவைப்பானா என்ன? நிறைய நாடகங்களை அவன் எழுதிக்குவிக்கவில்லை. எனினும் நாடக முயற்சியிலும் களமிறங்கி, சிலம்பம் சுற்றிப்பார்த்திருக்கிறான். பாரதியின் ஏனைய படைப்புகளின் மீது ஆய்வாளர்கள் பார்வை செலுத்திய அளவிற்கு அவனது நாடகப் படைப்புகளின் மீது பெரிதாக யாரும் பார்வை செலுத்தவில்லை. 

அந்தக் குறை என்னுள் நீண்டநாளாய் நெருடியதால் நான், பாரதியின் நாடகத் தமிழன்பால் ஆர்வம் கொண்டு அவற்றை அலசினேன்.

பாரதி, சொற்ப வயதிற்குள் சில நூற்றாண்டுகளுக்கான வாழ்க்கையை வாழ்ந்தவன். அவன் அக்கிரஹாரத்தில் இருந்து முளைத்து வந்த புரட்சி விருட்சம். சடங்கு சம்பிரதாய வலைகளில் சிக்க மறுத்த வீறுமிகும் விலாங்குமீன். அவன் சமூகத்திற்காக உதடு திறந்தவன். விடுதலைக்காக எழுதுகோல் பிடித்தவன். அச்சங்கள் அறியா அடர்நெருப்பு பாரதி. அவனது எழுத்துக்களின் வெம்மையும் கதகதப்பும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும். அவன், காலம் அரங்கேற்றிய புரட்சி நாடகம், நவரசங்களாலும் நிரம்பி வழிந்த நாடகம். 

""கலை என்பது சமூக - அழகியல் நிகழ்வு  ஆகும். அது சமூகத்தின் பண்பாட்டினுள் நிலை கொண்டு நிற்பது. பண்பாடு என்பது (அச்) சமூகத்தின் வாழ்க்கை முறைமையாகும். அதற்குள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் யாவும் (மதம், உணவு, சூழல், மனித உறவு முறைமை, 

பொருளாதார நடவடிக்கைகள், சமூக ஒருங்கமைப்பு, வாழ்க்கை நோக்கு முதலியன) இடம் பெறும்'' என்னும் கா.சிவத்தம்பியின் கூற்றுடன் பொருத்தப்பாடு உடையதாக மகாகவி பாரதியின் படைப்புகளைக் காணமுடிகிறது.

பாரதி வாழ்ந்த காலம் குறைவானது என்றாலும் தன் படைப்பின் மூலம் சிகரங்களைத் தொட்டவன். கவிதையாளனாக இதழாசிரியனாக, கட்டுரை யாளனாக, சிறுகதை ஆசிரியனாக, எல்லாவற்றிலும் புதுமைச் சிந்தனை கொண்டவனாக வெளிப்பட்ட பாரதி நாடகப் படைப்பாக்க முயற்சியிலும் கவனத் திற்கு உரியவனாகத் திகழ்கிறான்.

தமிழ் நாடகத் தொடக்கமும் பாரதியும்

19-ஆம் நூற்றாண்டின் இறுதி தமிழ் நாடக வரலாற்றில் குறிப்பிடத் தகுந்ததாகும். இக்காலத்தில் தோன்றிய சங்கரதாஸ் சுவாமிகள் (1867-1922), பம்மல் சம்பந்த முதலியார் (1873-1964), பரிதிமாற் கலைஞர் (1870-1903) ஆகியோர் தமிழ் நாடகத்தின் முன்னோடி களாவர். இவர்களில் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகம் இந்துத்துவத் தன்மை கொண்டது. புராண இதிகாசக் கதைகளைக் கூத்து வடிவில் அரங்கேற்றம் செய்தது. பம்பல் சம்பந்த முதலியாரின் நாடகமோ இந்தியத் தன்மை கொண்டதாக இருந்தாலும் மேனாட்டு நாடக வடிவமைப்பை உள்ளடக்கியதாக விளங்கியது. ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் ஆகியன படைத்த பரிதிமாற் கலைஞரின் நாடகங்கள் படித்தவர்களால் கற்கப் பட்டனவே அன்றி நடிக்கப் பெறவில்லை.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயேருக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. விடுதலை உணர்வை ஊட்டும் வகையில் நாடகங்கள் நிகழ்த்தப் பெற்றன. இதனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த,""வெள்ளையர்களுக்கு அடிமையாகி வாழ்ந்த சூழலில் நாடகம் எதிர்ப்பு உணர்வின் குரலாக மாறியது. நாடகமேடை அரசியல் தளமானது. பாடல்களும் வசனங்களும் உருமாறின. நடிகர்கள் மேடையில் கைது செய்யப்படுவதும் பிரதிகள் தடை செய்யப்படுவதும் தொடர, நாடகம் எதிர்ப்பின் விளைநிலமாகி விட்டது... நாடகம் ஓர் எதிர்ப்புக் குரல் என்றே அறியப்பட்டது''  என்னும் எஸ்.இராமகிருஷ்ணனின் கூற்று விடுதலைப் போராட்டக் கால இயங்குநிலையை வெளிப்படுத்துகிறது.

இதே காலகட்டத்தைச் சேர்ந்த பாரதியின் (1882-1921) நாடகப் படைப்பாக்க முயற்சி புதிய தன்மை உடையதாய்க் காணமுடிகிறது. ஆங்கிலேயேரை எதிர்த்து விடுதலைப் பாடல்கள் இயற்றி வந்த பாரதி 1912-ல் வியாச பாரதத்தின் ஒரு பகுதியாகிய "பாஞ்சாலி சபத'த்தை "மறுவாசிப்புத் தன்மையில் படைத்தான். பாரத தேவியாக உருவகம் செய்து படைக்கப்பட்ட பாஞ்சாலியின் உரையாடல்கள் அடிமைப்பட்டிருந்த இந்திய மக்களின் அவல நிலையை எடுத்து இயம்பின. பொறுப்பற்ற பொறுமையைச் சாடின. இவைகள் விடுதலை வேண்டிப் போராடிய மக்களினை மேலும் தீவிரமாகப் போராடத் தூண்டின. ஆனால் பாஞ்சாலி சபதத்தின் வடிவம் நாடகப் படைப்பாக்கம் என்று கூறுவதற்கான சாத்தியக் கூறுகள் ஏதுமின்றி காவிய வடிவம் கொண்டதாக அமைந்து இருந்தது. இதன்பிறகு இயற்றப்பட்ட ஜகத் சித்திரம், விடுதலை ஆகியன புதிய நோக்கிலான நாடக முயற்சியாய்க் காணமுடிகிறது. 

ஜகத் சித்திரம்-தோற்றுவாய்

1919 -ல் புதுவையிலிருந்து தன் தாய்மண்ணான தமிழ் நாட்டிற்குள் பாரதி வருகிறான். ஆங்கிலேயர்கள் அவனைக் கைது செய்து தனிமைச் சிறையில் அடைக்கின்றனர். ஏறக் குறைய ஒருமாதத் தனிமைச் சிறைவாசமும் புதுவை குள்ளச்சாமியின் மூலம் ஏற்பட்ட "கஞ்சா' பழக்கமும் அவன் மனதைப் பல்வேறு குழப்பங்களுக்கு உள்ளாக்குகிறது. சிறையிலிருந்து வெளிவரும் பாரதி அப்பழக்கத்திலிருந்து மீண்டாலும் குடும்பச் சூழலும் பொருளாதாரமும் அவன் வாழ்க்கையில் பெரும் நெருக்குதலை உண்டாக்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் "ஜகத் சித்திரம்' நாடகம் பிறக்கிறது. அந்நாடகத்தில் அவனது மன உளைச்சல், குழப்பம், பொருளாதாரச் சிக்கல்கள், பசி, அதனை எதிர்கொள்ளல் ஆகியன தெளிவாக வெளிப்படுகின்றன.

ஜகத் சித்திரம்- நாடகம்

காட்சி, இடம், நேரம், இடம்பெறும் பாத்திரங்கள் என அனைத்தும் நாடக வடிவ முறைப்படி எழுதும் பாரதி, பாத்திரங்களாக காக்கையரசன், தேவேந்திரன், தேவசேவகன், நாரதர், கிளி, குயில், குருவிகள், நாகணவாய், காக்கை, அணில், பசுமாடு, எருமை எனப் பலவற்றைப் படைத்துள்ளார்.  காளி கோவில், வானுலகம், கடற்கரை என மூவிடங்களில் நாடகம் பயணம் செய்கிறது. மொத்தம் ஐந்து காட்சிகளைக் கொண்டதாக ஜகத் சித்திரம் விளங்குகிறது.

நாடகம் உயிர் பெறுவதென்பது பாத்திரங்கள் மூலம்தான். படைக்கும் பாத்திரங்கள் சரியான வகையில் அமைய விட்டால் அதன் உயிர்த்தன்மை கெட்டுப் போகும். மேலும் அப்பாத்திரங்களுக்கான வசனமும் அவை வெளிப்படுத்தும் மௌனமும் கூட நாடகத்தை வலுவறச் செய்யும். இவ்வகையில் பாரதி பாத்திரப்படைப்பினை, உரையாடலை மிகத் திறமையாகவே கையாண்டுள்ளான்.

முதல் காட்சியில் காக்கையரசன் காளிக் கோவிலின் தெப்பக்குள மண்டபத்தின் மையப் பகுதியில் அமர்ந்தபடி, இந்த உலகத்தில் எல்லாம் இனியன. புட்கள் பூங்குரலுடையன. 

ஆனால் மனித குலத்தின் உள்ளத்தில்தான் இன்பம் இல்லை என்கிறது. 

அதற்குக் காரணமாக, 

""மனம்தான் சத்துரு. வேறு பகை நமக்குக் கிடையாது. மனந்தான் நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு நம்மை வேரறுக்கிறது. அடுத்துக் கெடுக்கிறது. மனந்தான் பகை'' (ப-267)

எனக் கூறும் காக்கையரசன் மேலும்,

""அதைக் கொத்துவோம் வாருங்கள். அதைக் கிழிப்போம் வாருங்கள். அதை வேட்டையாடுவோம் வாருங்கள்''  (பக்-268) என்றும் கூறுவதாகக் காட்சி அமைகிறது.

இதில் கொத்துவோம், கிழிப்போம், வேட்டையாடுவோம் என்னும் பாரதியின் எழுத்துக்களில் ஒரு புதிய ஒளி வீசுகிறது. எங்கு வாழ்ந்தால் என்ன? எந்தச் சூழ்நிலை இருந்தால் என்ன? மனம்தான் சூழ்நிலைகளைத் தாங்கிக் கொள்ள மறுக்கிறது. அதுதான் பகை. அதைக் கிழிப்போம், கொத்துவோம், வேட்டையாடுவோம் எனக் கூறுவது போல் அமையும் இக்காட்சி தமிழகத்திலிருந்து புதுவைக்கும் புதுவையிலிருந்து தமிழகத்திற்கும் இடம் பெயர்ந்து வாழ்ந்தும் அங்கு கிடைத்த அனுபவங்களும் சிறை அனுபவமும் ஏற்படுத்திய மனக் குழப்பங்களின் வெளிப்பாடாகும். 

பசிப்பிணி

பாரதியின் இத்தகைய வாழ்க்கைச் சூழல் அவனை இறைவன் உள்ளானா? எனத் தனக் குள்ளாகக் கேட்கும் துணிவை ஏற்படுத்துகிறது. ஓர் அத்வைதியாக வாழ்ந்தவன் "தத்வமஸி' என்று கவிதையில் உரைத்தவன், நாராயணன் எங்கிருக்கிறான்?  என்கிற வினாவை எழுப்புகிறான். பின்னர் ஏதோ ஒரு வகையில் தெளிவு பெற்றவனாக,""இந்திரன் : உங்களுடைய நாராயண ஸித்தாந்தத்தின் துணிவு யாது?

நாரதர் :     எல்லா வஸ்துக்களும் எல்லா லோகங்களும் எல்லா நிலைமைகளும் எல்லாத் தன்மைகளும் எல்லா சக்திகளும் எல்லா சூழல்களும் எல்லாம் ஒன்றுக் கொன்று சமானம்'' 

என்ற உரையாடல்கள் மூலம் தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்வதனைக் காணமுடிகிறது. ஆனாலும் கூட வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடி இறைவன் இருக்கிறான் என்பதனையும் ஒன்றுக்கொண்று சமானம் என்பதனையும் மறக்கடிக்கிறது. மனம் சோர்வடைகிறது. தைரியம் அற்றுப் போகிறது. கவலை வளர்கிறது. தற்கொலைக்கு முனைகிறது. இதற்கு அடிப்படையாகப் "பசி' அமைகிறது. மனிதர்களுக்கு எப்போதும் துன்பம் தரும் பசியினால் ஏற்படும் விளைவு பற்றி நாடகத்தின் மூன்றாவது காட்சியில்,""எங்களுக்கு உடம்பு சிறிது; ஆதலால் தீனி சொற்பம் .அதைச் சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம் ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம். மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதைக் காட்டிலும் எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம்''

என நாகணவாய் என்னும் பாத்திரம் கூறுவதாகத் தன் கருத்தினைப் பதிவு செய்கிறான் பாரதி. பசி மனிதர்களுக்கு ஏற்படுத்தும் மிகப் பெரிய துன்பம் அவர்களுக்குள்ளாக காதலின்பத்தை (அன்பினை) அழிப்பதேயாகும். அதனால்தான் பாரதி, "தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாடுகிறான். மேலும் அவனின் "பசி' அனுபவமே இங்கு "ஜகத் சித்திரமாய்' எல்லோருக்குமானதாய் வடிவங் கொள்கிறது.

விடுதலை - நாடகம்

பசியிலிருந்தும் உலக ஏற்றத் தாழ்வுகளிலிருந்தும் விடுபடும் வழிதான் எது? என எண்ணும் பாரதியை ருஷ்யாவின் சோசலிசம் கவர்கிறது. எல்லாம் எல்லார்க்கும் உடைமை என்னும் தத்துவம் அவனுக்குள்ளாக மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது அவனுடைய இரண்டாவது நாடகமான "விடுதலை'யில் வெளிப்படுகிறது. இரண்டு காட்சிகளை மட்டும் கொண்டு முழுமையற்ற நிலையில் இந்நாடகம் காணப்படுகிறது. பாத்திரங்களாக இந்திரனும் அவன் ஏவலுக்கு உரியவர்களும் வசுபதி என்னும் கற்பனை (!) பாத்திரமும் படைக்கப்பட்டுள்ளன.

இந்நாடகத்தில் தேவர்களின் தலைவனான இந்திரன் தனக்குக் கீழேயுள்ள ஏவலாள்களான பிற தேவர்களைத் "தோழர்' என்றே விளிக்கிறான். அவர்களும் இந்திரனைத் "தோழர்' என்றே அழைக்கின்றனர். இது பாரதிக்குள்ளே ஏற்பட்டு இருக்கும் சோசலிசப் பொதுவுடைமை சித்தாந்தத் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது. நாடகத்தினுள் காணும் உரையாடல்கள் அதனை உறுதிப்படுத்துகின்றன. அதற்கு, தேவர்களுக்குப் பிரம்மன் இட்ட பணியாக வரும், 

""மண்ணுலகத்து மானுடன் தன்னைக்
கட்டிய தளையெலாம் சிதறுக''

என்னும் உரையாடலை இந்திரன் வழி கூறுவதும் அதனைத் தொடர்ந்து வேற்றுமைகளைத் தவிர்ப்பதற்காக அனைவரும் அமிழ்தம் உண்போம் அது அனைவரையும் சமமாக்கும் என்றும் கூறுவது போல உரையாடலை வளர்த்துச் செல்வதும் மேலும் மேலும் உறுதி செய்வதாக அமைகிறது. 

சுதேசமித்திரனில் பாரதி படைத்த கட்டுரைகளில் ஒன்று "செல்வம்' என்பதாகும். இதில் ருஷ்யாவில் சோசலிசக் கொள்கையால் ஏற்பட்ட மாற்றம் குறித்து எழுதியுள்ளார். மேலும் இந்தியாவில் அக்கொள்கையைப் பரவலாக்கம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் நிலவுடைமைச் சமுதாயமான இந்தியாவில் அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை அலசுகிறான். அதற்கான முக்கியக் காரணமாக,""கோடிக் கணக்கான ஜனங்கள் வயிறு நிறைய உணவு கிடைக்குமென்ற நிச்சயமில்லாமலும் லஷக்கணக்கான ஜனங்கள் ஒருவேளை கஞ்சி கிடைக்காமலேயே சுத்தப் பட்டினியால் மரணம் எய்தும்படியாகவும் நேர்ந்திருக்கும் தற்கால நிலையை நாம் ஒரு ஷணங் கூட சகித்திருப்பது நியாயமில்லை'' (பக்-509) என்று இந்தியப் பொருளாதாரச் சூழ்நிலையைக் குறித்துக் கட்டுரைக்கிறான். இதே கருத்தினை மையமாகக் கொண்டுதான் அவனுடைய இறுதிக் காலப் படைப்பான நாடகங்கள் அமைவதனை விளங்கிக்கொள்ள முடிகிறது. 

முடிவு

நாடகம் முக்கிய இடத்தினைப் பெற்ற காலத்தில் வாழ்ந்த பாரதியின் படைப்பில் இரண்டு நாடகங்களை மட்டுமே காண முடிகின்றது. அவையும் முழுமையற்று மிகச்சிறிய அளவில் எழுதப்பட்டுள்ளன. இது பாரதி நாடகம் எழுத முயன்றதின் தொடக்கமாக அறிய முடிகின்றது. 

நாடகங்கள் தொடக்க காலத்தில் புராண இதிகாசப் பாத்திரங்களைக் கொண்டு இந்துத்துவத் தத்துவங்களை விளங்கும் வகையில் அமைய, பாரதியின் நாடகத்திலோ அவை மட்டுமின்றி அஃறிணை உயிர்களும் மானுட குலத்தின் நன்மை நோக்கியே படைக்கப்பட்டன. அவ்வகையில் தன்னைச் சார்ந்தும் தன் வாழ்நிலை, குடும்பச் சூழல், சமுதாயச் சூழல் சார்ந்தும் உலகம் தழுவிய பார்வையோடு பாரதி நாடகம் படைத்திருப்பதனை உணரமுடிகிறது.

மேலும் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நிகழ்ந்த காலத்தில் உலகப்போரின் விளைவில் தாமதமானாலும் நிச்சயமாய் தேசத்திற்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவனை முன்னதாகவே "விடுதலைக்கும்மி' பாட வைத்தது. அதன் தொடர்ச்சியாகவே அடுத்த தளத்திற்கு நகரும் வகையில் மனிதனைத் துன்பத்தில் உழல வைக்கும் வறுமை, பசி, பொருளாதாரச் சிக்கல், மனக்கவலை, காதலற்ற நிலை, மரண பயம் போன்றன நீங்க வேண்டியும் சமத்துவ சமுதாயம் காண வேண்டியும் நாடக வடிவத்தைப் பாரதி பயன்படுத்த முயன்றிருக்கலாம் என்பதாக ஊகிக்க சாத்தியக் கூறுகள் இருக்கவே செய்கின்றன.

நன்றி - இனிய உதயம் 2012

கருத்துகள் இல்லை: