07/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 7 - ப.முருகன்


சதகம்

இந்தப்பாடல் மாணிக்க வாசகரால் பாடப்பட்டது. நடுநிலைப் பள்ளிவரை படித்தவர்கள் இந்தப்பாடலை படிக்காமலும் கேள்விப்படாமலும் இருக்க வாய்ப்பில்லை.

தமிழ் இலக்கிய வரலாற்றில் பக்தி இலக்கிய காலம் என்று குறிப்பிடப்படும் காலம் ஒன்றுண்டு. அதற்கு முந்தைய காலம் காப்பிய காலம் எனப்படும். அதில் பெரும்பகுதி தர்க்கவாதம் புரியும் காட்சிகளும் கருத்துக்களும் இடம்பெற்றிருக்கும். இது, புத்த, சமண சமயங்கள் கோலோச்சிய காலம். பொதுவாகச் சொல்வதெனில் பல்லவ மன்னர்களின் காலம். அதையடுத்த பிற்காலச் சோழர்களின் காலம், சைவ, வைணவ சமயங்கள் ஆட்சி புரியத் தொடங்கிய காலம்.

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பின்வருமாறு கூறுகிறார். சைன சமயம் அறிவு வலியாலும் சாஸ்திர ஞானத்தாலும் தர்க்க வன்மையாலும் சிறந்து விளங்கிற்று. வைதீக சமயங்கள், (சைவ, வைணவம்) பக்தியையே பெருந்துணையாகக் கொண்டு அந்த பக்தி நெறியையே வலியுறுத்தி வந்தன. சிறிதுகாலம் தர்க்க நெறியின் முன்எதிர் நிற்கலாற்றாது இவை தளர்ச்சியுற்றிருந்தன. ஆனால் உணர்ச்சி மேலீட்டால் எழுந்த இந்த பக்தி நெறி வெகுவிரைவில் தர்க்க நெறியைப் புறங்கண்டு விட்டது. நாடு முழுவதும் பக்திப் பெருவெள்ளம் பரந்து பாய்ந்து தர்க்கமாகிய பெருநெருப்பை அவிழ்த்துவிட்டது. பக்திக்கு வித்தூன்றியவர்கள் அப்பர், சம்பந்தர் முதலிய சைவ நாயன்மார்களும் பெரியாழ்வார், குலசேகரர் முதலிய வைணவ ஆழ்வார்களுமே ஆவர்.

(இலக்கிய சிந்தனைகள் - நூற்களஞ்சியம் :தொகுதி-1)

நாயன்மார்களில் ஒருவரும் சமயக்குரவர் நால்வர் என்றழைக்கப்படுபவர்களில் ஒருவருமான மாணிக்கவாசகர் பாடியது திருவாசகம், திருக்கோவையார், திருச்சதகம் முதலியன. திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்று புகழப்பட்டது. தமிழ் பக்தி மொழி என்று கூட ஆங்கில கல்வியாளர்களால் குறிப்பிடப்பட்டது.

மாணிக்கவாசகர் மதுரை மாவட்டம், திருவாதவூரைச் சேர்ந்தவர், இது அவரது இயற்பெயரா எனத் தெரியவில்லை. ஊர்ப்பெயரால் ‘திருவாதவூரார்’ என்றும் ‘வாதவூர் அடிகள்’ என்றும் அழைக்கப்பட்டவர். இவர் பாண்டிய மன்னன் அரிமரித்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர். அவன் மாணிக்கவாசகரை ‘தென்னவன் பிரம்ம ராயன்’ என்ற பட்டமளித்துப் பாராட்டினான் என்றும் கூறப்படுகிறது. திருவிளையாடல் புராணத்தில் உள்ள நரியைப் பரியாக்கியது இவருக்காகத்தான் என்பது புராணம்.

அவர் சமண மதத்தின் தர்க்கவாதப் போக்கை மாற்றிட அவர்களது வழியிலேயே சென்று திருப்புபவராக இயற்கையோடு இயைந்தவன்தான் இறைவன் என்று இத்தகைய பாடல்களை பாடினார். இந்தப் பாடல் திருவாசகத்தில் உள்ளது அல்ல. திருச்சதகம் என்பதில் உள்ள 15வது பாடல்.

பதிற்றுப்பத்து போன்றும் பிள்ளைத்தமிழ் போன்றும் பத்துப்பத்துப் பாடல்களாக நூறு பாடல்களைக் கொண்டு பாடுவது சதகம் என்று அழைக்கப்படும். இந்த திருச்சதகம் தான் தமிழின் முதல் சதக நூல் என்று கூறப்படுகிறது. சதகம் என்பது வட சொல். கி.பி. 17, 18, 19ம் நூற்றாண்டுகளில் தோன்றிய சதக இலக்கியங்களை நீதிக் களஞ்சியங்கள் என்று அழைப்பர் என்கிறார் முனைவர் சா.சவரிமுத்து.

சதக இலக்கியம் பொதுவாக அரசன், இறைவன், சான்றோர், அடியார் பற்றி பாடப்படுபவை. இவற்றுள் தொண்டை மண்டல (பல்லவ) சதகம், பாண்டி மண்டல சதகம், சோழ மண்டல சதகம், ஈழ மண்டல சதகம், நந்தி மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம் முதலியவை தமிழில் உள்ள சிறந்த நூல்கள் எனப்படுகின்றன.

சோழ மண்டல சதகத்தை ஆத்ம நாத தேசிகரும் பாண்டி மண்டல சதகத்தை ஐயம்பெருமாளும் கொங்கு மண்டல சதகத்தை கார்மேகக் கவிஞரும் தொண்டை மண்டல சதகத்தை படிக்காசுப் புலவரும் பாடியுள்ளனர்.

அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகம் நீதிக்கருத்துக்கள் நிறைந்தது எனக்கூறப்படுகிறது. அதில் உள்ள 10வது பாடல் பின்வருமாறு:-

கோவில் இல்லாத ஊர், நாசி இல்லாத முகம்

கொழுநன் இல்லாத மடவார்

குணம் இல்லாத விதை, மணம் இல்லாத மலர்

குஞ்சரம் இல்லாத சேனை

காவல் இல்லாத பயிர், பாலர் இல்லாத மனை

கதிர்மதி இல்லாத வானம்

இதுபோன்ற பாடலின் தாக்கம்தான் “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது போன்ற மூதுரை மொழி. இது மனிதனை உணர்வுகள் மூலம் தாக்கி, கோவில் இல்லாத ஊரில் குடியிருப்பது பாவம் என்ற எண்ணத்தை திணித்து விடுகிறது. அதற்காகத்தான் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி மனிதனை யோசிக்கவிடாமல் திணறடித்து ஒரே அமுக்காய் அமுக்கிவிட முயற்சிக்கின்றன.

தண்டலையார் சதகம், கோவிந்த சதகம், செயங் கொண்டார் சதகம் போன்றவை பழமொழிகளைக் கொண்டு பாடப்பட்டவையாகும். குருபாததாசர் எழுதிய குமரேச சதகம், மனிதர்களில் லஞ்சம் வாங்கும் ஆசையால் பிறர்க்கு துன்பம் விளைவிப்பவனைப் ‘பேய்’ என்று குறிப்பிடுகிறது. திருவண்ணாமலை, திருப்பதி போன்ற தலங்களைப் பற்றியும் சதக நூல்கள் பாடப்பட்டுள்ளன.

அகத்தீசர் சதகம், அரபிச்சதகம் போன்றவற்றை இஸ்லாமியர்கள் பாடியுள்ளனர். இயேசுநாதர் திருச்சதகம், திருக்குமார சதகத்தை யாழ்ப்பாணம் சதாசிவப்பிள்ளையும் தாவீது அதிசயநாதனும் எழுதியுள்ளனர்.

நன்றி - தீக்கதிர்

கருத்துகள் இல்லை: