27/03/2011

கிராமப்புறங்களில் பேச்சு வழக்கில் உள்ள பழமொழிகள் - சி.பாண்டியராஜன்

மனித வாழ்வியலின் காலங்காலமாகப் பட்டுணர்ந்த பட்டறிவின் காரணமாகத் தோன்றியவையே பழமொழிகள். ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வில் பல்வேறு நேர்வுகளில் பலவித நிகழ்வுகளைச் சந்தித்திருப்பர். அந்நிகழ்வுகளில் நல்லதும் நடந்திருக்கும் கெட்டவையும் நடந்திருக்கும். அவற்றை உற்று நோக்கிச் சில காரணத்தால் ஏற்பட்டிருக்கும் என்று நம்பி உரைத்த வாய்மொழிச் செய்திகளே பழமொழிகளாக ஆயின.

நாட்டுப்புற வாய்மொழி இலக்கியக் கூறுகளுள் ஒன்றான பழமொழியை முதுமொழி எனத் தொல்காப்பியம்

''நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்

மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்

குறித்த பொருளை முத்தற்கு வரும்

ஏது நுதலிய முதுமொழி என்ப''

என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். இன்றும் மலையாள மொழியில் பழமொழியைப் பழஞ்சொல் என்றே கூறுவதைக் காணலாம்.

''பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்

வாயே யாகுதல் வாய்த்தமை தோழி''

என அகநானூறும்,

''நீ அறிந்திலையோ நெடுமொழி அன்றே''

எனச் சிலப்பதிகாரமும் எடுத்துரைக்கும் இலக்கிய மேற்கோள்கள். பழமொழியானது தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் அவர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்களுக்கு ஏற்ற வகையில் கையாளப்பெற்று வருகின்றது.

தமிழகக் கிராமப்புறங்களில் இன்றைக்கும் பேச்சு வழக்கில் பல வகையான பழமொழிகள் கையாளப்பட்டு வருகின்றன. பேச்சு வழக்கில் இன்றைக்கும் பாமரமக்கள் மற்றும் படித்த மக்களால் பேசப்பட்டு வரும் பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளது இக்கட்டுரை.

பழமொழிகள் கையாளப் பெறும் சூழல்கள்:-

அனுபவத்தால் பிறக்கும் பழமொழிகள் அன்றாடப் பேச்சு வழக்கில், இன்ப நிகழ்வுகளின் போதும், துன்ப நிகழ்வுகளின் போதும், ஏசலாகவும், கேலியாகவும் அண்டை வீட்டாருடன் சண்டைகள் போடும்போதும், ஒருவரை ஒருவர் மறைமுகமாகச் (சாடை பேசுதல்) சாடுகின்றபோதும் பழமொழிகளைக் கையாளுகின்றனர். இவ்வகையில் பிறக்கும் பழமொழிகளை,

1. உவமையாக வரும் பழமொழிகள்.

2. உறவுகள் பற்றி வரும் பழமொழிகள்.

3. பொதுவாக வருவன.

1. உவமையாக வரும் பழமொழிகள்:-

1. ஒரே குட்டையில் ஊறிய மட்டைபோல.

2. கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் போல.

3. பார்த்தால் பசுப்போல், பாய்ந்தால் புலிபோல்.

4. எருமை மாட்டில் மழை பெய்தது போல.

5. இருதலைக் கொள்ளியின் ஓர் உயிர் போல.

6. தேன் எடுப்பவன் வீரல் சூப்புவது போல.

7. குப்பைமேடு கோபுரமானது போல.

8. குறைகுடம் கூத்தாடுவது போல.

2. உறவுகள் பற்றி வரும் பழமொழிகள்:-

1. பருவத்தே பயிர் செய்தல் வேண்டும்.

2. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.

3. மாமியார் உடைத்தால் மண்சட்டி; மருமகள் உடைத்தால் பொன்சட்டி.

4. ஆடு பகை குட்டி உறவு.

5. நல்ல மாடு உள்ளுரில் விலைபோகும்.

6. பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம்.

7. அப்பன் எவ்வழியோ பிள்ளை அவ்வழி.

8. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.

9. நித்தம் நித்தம் வந்தால் நெய்யும் புளிக்கும் பலநாளும் வந்தால் பாலும் புளிக்கும்.

10. ஆகாத பொண்டாட்டி கால் பாட்டாலும் குத்தம் கைப்பட்டாலும் குத்தம்.

11. பொருள் ஒரு பக்கம் போக பொல்லாப்பு ஒரு பக்கம் வரும்.

12. பெட்டியிலே பூட்டினாலும் போட்ட விதி தப்பாது.

13. தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு.

இவை போன்று வரும் பழமொழிகள் உறவுகள் பற்றியும், உறவுகளால் வரும் துன்பங்கள் பற்றியும் கூறுவதாக அமைந்துள்ளன.

3. பொதுவான பழமொழிகள்

1. நாற்றில் வளையாதது மரத்தில் வளையாது.

2. நம்பினவனை நட்டாத்தில் விடுதல்.

3. சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான்.

4. தன் முதுகு தனக்குத் தெரியாது.

5. எலி வளையானாலும் தனிவளை வேண்டும்.

6. வல்லவனையும் வழுக்கும் வழுக்குப் பாறை.

7. குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப் போச்சு.

8. கோடி கோடியா வாழ்ந்தாலும் இறுதியில் ஒரு கோடிதான் மிச்சம்.

9. குவளையைக் கழுவினாலும் கவலையைக் கழுவ முடியாது.

10. உப்பைத் தின்னவன் தண்­ர் குடித்தாக வேண்டும்.

11. உழுகிறவர்கள் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.

12. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி.

13. மடியில கனம் இருந்தால் தான் விழியல பயம்.

14. சிறு துரும்பும் பல்குத்த உதவும்.

15. அற்பனுக்கு வாழ்க்கை வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.

16. ஈட்டி எட்டின வரைதான் பாயும் பணம் பாதாளம் வரையும் பாயும்.

17. ஏழையின் பேச்சு அம்பலம் ஏறாது.

18. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல்.

19 பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.

20. பேராசை பெரும் நட்டம்.

21. முழு பூசணிக்காயை சோத்துல மறைத்தல்.

22. ஆசை காட்டி மோசம் செய்தல்.

23. ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்கவில்லை.

24. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.

25. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்.

26. இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பான்.

27. அவனே! அவனே! என்பதைவிடச் சிவனே! சிவனே! என்பது மேல்.

28. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா இரு.

29. தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.

30. தன் வினை தன்னைச் சுடும்.

31. நாய் நடுகடலுக்குப் போனாலும் நக்கித்தான் தண்­ர் குடிக்க வேண்டும்.

32. ஓட்டச் சட்டியினாலும் கொழுக்கட்டை வெந்தா சரி.

இவை போன்று வரும் பழமொழிகள் பெண்களாலும், ஆண்களாலும், படித்தவர்களாலும், பாமர மக்களாலும் அவர்கள் இருக்கும் இடம் கருதியும் சூழலுக்குத் தக்கவாறும் கையாளப்படுகின்றன.

மேற்கூறப் பெற்றுள்ள பழமொழிகள் தமிழகத்தில் சில பகுதிகளில் வாழும் மக்கள் இன்றைக்கும் பேச்சு வழக்கில் பேசி வருகிறார்கள் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளன.

நன்றி: வேர்களைத் தேடி.

 

கருத்துகள் இல்லை: