29/03/2011

எதிர்மறை விடுகதைகள் - முனைவர் கா.சத்தியபாமா

நாட்டுப்புற வழக்காறுகளில் அங்கு வாழும் மக்களின் அறிவிற்குச் சான்றாகவும் சிந்தனையின் தூண்டுகோலாகவும் விளங்கும் விடுகதைகள் பல உத்திகளைக் கொண்டவையாக விளங்குகின்றன. அத்தகைய உத்திகளுள் எதிர்மறை உத்தி என்பதும் ஒன்று. அவ்வுத்தி பல்வேறு நிலைகளில் எடுத்தாளப்பட்டுள்ளதற்கு விடுகதைகள் பல சான்றாதாரங்களாக விளங்குகின்றன.

விடுகதை:-

விடுகதை என்ற சொல் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் வேறு வேறு பெயரால் சுட்டப்படுகின்றது. விடுகதை, வெடி, அழிப்பான கதை, நொடி என இது கூறப்பட்டாலும் ''விடுகதை'' என்ற பெயராலேயே அதிக அளவில் சுட்டப்படுகிறது எனலாம்.

''விடுவிப்பது'' என்றால் ''சொல்வது'' என்பது பொருள். விடுவிப்பது காரணமாக ''விடுகதை'' என்ற பெயர் பெற்றிருக்கலாம். விட்டகதை, விடுகின்ற கதை, விடும்கதை என வினைத்தொகையாக இச்சொல் அமைந்துள்ளது என்பார் புலவர் இரா. சுரேந்திரன்.

கதையை ஒத்த சம்பவம் இருந்து அல்லது பாடலுக்கு விடையாக ஒரு கதை அல்லது சம்பவம் கூறப்பட்டு அல்லது கதையில் உள்ள புதிர் விடுவிக்கப்படுகிறது. இவை அனைத்திலும் விடுவிக்கப்படுவது கதையாக இருப்பதால் ''விடுகதை'' என்ற சொல்லால் ஒரு வகையான விடுகதைகளைக் குறிப்பிடலாம் என்பார் முனைவர் ஆறு. இராமநாதன். இவர் விடுபுதிர் என்ற பெயரில் விடுகதைகளைக் குறித்து 2 வகையாகப் பாகுபடுத்துவர். 1. வினா விடுபுதிர், 2. உண்மை விடுபுதிர் இவற்றுள்ளும் உண்மை விடுபுதிரை எதிர்மறையானது என்றும் எதிர்மறை அல்லாதது எனவும் இருவகையாகப் பாகுபடுத்திக் காணுகின்றார். இந்தவகைப் பாகுபாட்டில் அமைந்துள்ள எதிர்மறை விடுகதைகளில் ஒரு அமைப்பியல் ஒழுங்கு இருப்பதைக் காணலாம்.

எதிர்மறை விடுகதைகள்:-

விடுகதைகளில் விடையை ஊகித்து அறிந்து கொள்ள வாய்ப்பளிக்க பல்வேறு குறிப்புகள் விடுகதையுள் அமைந்திருக்கும். அவற்றுள் எதிர்மறையான செய்திகளாக குறிப்புகள் அமைந்திருப்பின் அவற்றை எதிர்மறை விடுகதைகள் என்ற பாகுபாட்டினுள் அடக்கலாம்.

1. எதிர்மறைக் குறிப்புகள் அமைந்துள்ள விடுகதைகள்

2. எதிர்மறைப் பெயரெச்சம் அமைந்துள்ள விடுகதைகள்

3. எதிர்மறைப் பெயரெச்சம், வினை அமைந்துள்ள விடுகதைகள்

1. எதிர்மறைக் குறிப்புகள் அமைந்த விடுகதைகள்:-

ஒரு விடுகதையில் விடைக்கு ஒத்த பண்புகள் பல குறிப்புகளைக் கூறி மறுத்தலின் வாயிலாக விடையை உணர்த்துதல் எனலாம்

''பச்சைப்பசே லென்றிருக்கும் பாவக்காயு மன்று

பக்கமெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயு மன்று

உள்ளே வெளுத்திருக்கும் தேங்காயு மன்று

உண்டால் மயக்கமாம் புகையிலையு மன்று'' - அது என்ன? (ஆமணக்கு)

இந்த விடுகதையில் பாவக்காய், பலாக்காய், தேங்காய், புகையிலை போன்றவை இல்லை என்று மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் விடையை உணரத் தேவையான குறிப்புகளாக, 1. பச்சைப்பசேல் என்றிருக்கும், 2. பக்கமெல்லாம் முள்ளிருக்கும், 3. உள்ளே வெளுத்திருக்கும், 4. உண்டால் மயக்கமாம் ஆகியவை தரப்பட்டுள்ளன. இவை விடையை எளிதாகப் புரிய வைக்கக் கூடிய விடுகதைகள் எனலாம். செயல், தோற்றம், பெயர் இவற்றை உணர்த்துவதன் குறிப்புகள் பொதுவாகக் கூறப்படுகின்ற நிலையைக் காணலாம்.

2. எதிர்மறைப் பெயரெச்சம் அமைந்துள்ள விடுகதைகள்:-

விடுகதைகளில் எதிர்மறைப் பெயரெச்சங்கள் குறிப்புகளாக அமைந்துள்ள விடுகதையை இப்பகுதியில் அடக்கலாம்.

சான்று,

தலையில்லாத எலி என்ன எலி? இட்டெலி

குடலில்லாத மாடு என்ன மாடு? சும்மாடு

இவற்றில் விடுகதைகளுக்குரிய விடைகளின் ஒரு பகுதி விடுகதைகளிலேயே அமைந்திருப்பது நோக்கத்தக்கது. சில விடுகதையில் ஒன்றுக்கு மேற்பட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் அமைந்தும் காணப்படும்.

சான்று,

வற்றாத ஜலமே ஜலம்

பிரிக்காத பந்தலே பந்தல்

ஓடாத ரதமே ரதம் - அது என்ன? கடல், வானம், கோபுரம்

3. எதிர்மறைப் பெயரெச்சம், வினை அமைந்துள்ள விடுகதைகள்:-

ஒரு விடுகதை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களும் அவற்றோடு தொடர்புடைய செயல்களும் உடையதாக விளங்கினால் அத்தகைய விடுகதையை எதிர்மறைப் பெயரெச்சம், வினை அமைந்துள்ள விடுகதைகள் என்ற பகுப்பினுள் அடக்கலாம்.

மொழி அமைவைக் கொண்டு.

1. பாட்டு வடிவிலமைந்த எதிர்மறைப் பெயரெச்சம், வினை அமைந்துள்ள விடுகதைகள்.

2. உரையாடல் வடிவில் அமைந்த எதிர்மறைப் பெயரெச்சம், வினை அமைந்துள்ள விடுகதைகள்.

3. கதைவடிவில் அமைந்த எதிர்மறைப் பெயரெச்சம் வினை அமைந்துள்ள விடுகதைகள்.

என்ற மூன்று நிலைகளில் பாகுபடுத்திக் காணலாம். இத்தகைய விடுகதைகள் ஓர் அடிப்படையான கூறு உடையனவாக விளங்குகின்றன. அதன் அடிப்படையில் ஓர் அமைப்பிற்குள் வடிவமைக்க முடியும். ஓர் உயிரினம் அல்லது பொருள் இயல்பிற்கு மாறான எதிர்மறையான செயல் செய்வதாக இவ்விடுகதைகளில் அமையும். குறிப்பிற்கும் விடைகளும் இடையேயான தொடர்புப் பொருள் வெளிப்படையாக விடுகதையில் அமைந்திருக்கும்.

ஓர் உயிரினம்

அல்லது ........ பொதுத்தன்மை ........ இல்லை ........ எதிர்மறைச்செயல்

ஓர் பொருள்

விடை ......... பொதுத்தன்மை .......... இல்லை ........ செயல்

இத்தகைய விடுகதைக்குச் சான்றாக,

''எலும்பில்லா மனிதன்

எழுந்தெழுந்து ஆடுகிறான்'' (நாக்கு)

என்ற விடுகதையைக் குறிப்பிடலாம். மனிதன் முதுகெலும்பு உள்ளவன். இவ்விடுகதையில் இயல்பிற்கு மாறாக ''எலும்பு இல்லாதவன்'' என்று சுட்டப்படுகிறது. அது நாக்காகும். நாக்கு மனிதனாக உருவகிக்கப்படுகிறது. இயற்கைக்கு மாறான - இயல்பிற்கு மாறான எதிர்மறையான ஓர் உயிரினம் (மனிதன்) இவ்விடுகதையில் கூறப்பட்டுள்ளது.

இதனை,

மனிதன் ........... எலும்பு ........ இல்லை .......... எழான்

நாக்கு ......... எலும்பு ............ இல்லை ........... எழும்

இவ்விடுகதையில் குறிப்பிற்கும் விடைக்கும் இடையேயான தொடர்புப் பொருளாக எலும்பு அமைந்துள்ளது. இத்தகைய பகுப்புமுறை விடை தெரியாத நிலையில் குறிப்பை முழுமையாக உணர்ந்து கொள்வதற்கு எளிமை பயப்பதாகும்.

''திரியில்லாத விளக்கு

திரிலோகம் எல்லாம் தெரியுதாம்''

என்ற விடுகதையின் விடை ''சூரியன்'' என்பதாகும். விளக்கு என்றால் எண்ணெய் ஊற்றி எரிக்கும் விளக்கு என்பதே நாட்டுப்புறங்களில் வழங்கப்படுவது. இன்று மின்சாரம் பரவலாகப் பயன்பாட்டில் இருப்பதால் மின்சார விளக்கைச் சுட்டலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இந்த விடுகதையில் திரிலோகம் எல்லாம் தெரியுதாம் என்பதால் சூரியன் என்பதை ஊகித்து அறியலாம். எண்ணெய் விளக்கில் திரி இருப்பது இயல்பு. இங்கு ''திரி'' குறிப்பிற்கும் விடைக்கும் இடையேயான தொடர்புப் பொருளாக அமைந்துள்ளது. இந்த விடுகதையைப் பிரித்து அமைக்க,

விளக்கு .......... திரி ........ இல்லை ....... ஒளி தெரியாது

? ......... திரி ....... இல்லை ...... ஒளி தெரியும்

என்றமையும். இந்த அமைப்பின்படி எளிமையாக விடுகதையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

விளக்கு திரி இல்லை ஒளி தெரியாது

............. திரி இல்லை ஒளி தெரியும் (திரிலோகம் எல்லாம்)

விடையை ஊகித்தறிய வாய்ப்பளிக்கிறது.

3.1 பாட்டு வடிவமைந்த எதிர்மறைப் பெயரெச்சம், வினை அமைந்துள்ள விடுகதைகள்:-

பாடலாக அமைந்த விடுகதைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களும் அவற்றோடு தொடர்புடைய செயல்களும் அமையின் இப்பகுதியில் அடங்கும். இத்தகைய விடுகதைகளில் எதிர்மறைப் பெயரெச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்,

1. ஓர் எதிர்மறைப் பெயரெச்சம், ஒரு வினை அமைந்தவை.

2. இரு எதிர்மறைப் பெயரெச்சங்களும் வினைகளும் அமைந்தவை.

3. மூன்று எதிர்மறைப் பெயரெச்சங்களும் வினைகளும் அமைந்தவை.

4. பல எதிர்மறைப் பெயரெச்சங்களும் வினைகளும் அமைந்தவை.

என்று வகைப்படுத்திக் காணலாம்.

3.1.1. ஓர் எதிர்மறைப் பெயரெச்சம், ஒருவினை அமைந்தவை:-

சான்று,

''பூமியிலே வளராத மரம்

கிளையுண்டு இலை இல்லை (மான் கொம்பு) - அது என்ன?''

இதன் அமைப்பு,

மரம் ......... பூமி ...... இல்லை ....... வளராது

மான்கொம்பு ........ பூமி .......... இல்லை ...... வளர்கிறது

3.1.2. இரு எதிர்மறைப் பெயரெச்சங்களும் வினைகளும் அமைந்தவை:-

சான்று,

''எலும்பில்லாத ஒருவன்

கிளையில்லாத மரத்தில் ஏறுகின்றான் - அது என்ன'' (பேன், முடி)

இதன் அமைப்பு,

ஒருவன் ........... எலும்பு ...... இல்லை .......... ஏறமுடியாது

பேன் ......... எலும்பு ...... இல்லை ........ ஏறுகிறான்

மரம் ........ கிளை ......... இல்லை ......... ஏறுமுடியாது

முடி ......... கிளை ........ இல்லை ......... ஏறுகிறான்

தென்னை, பனை முதலானவை கிளைகளில்லை என்றாலும் ஏறமுடியும். இங்கு பெரும்பான்மை கருதி கிளையில்லாத மரத்தில் ஏறமுடியாது என்று கூறப்பட்டுள்ளது.

3.1.3. மூன்று எதிர்மறைப் பெயரெச்சங்களும் வினைகளும் அமைந்தவை:-

ஒரு விடுகதையில் ஏதேனும் மூன்று எதிர்மறைச் செயல்கள் அமைந்துவரின் மூன்று எதிர்மறைச் செயல்கள் அமைந்த விடுகதை எனலாம். ஓர் உயிரினம் அல்லது பொருளைக் குறித்த இயல்பிற்கு மாறான மூன்று எதிர்மறைச் செயல்கள் இவ்விடுகதையில் அமையும்.

''செடியில் விளையாத பஞ்சு

தறியில் நூற்காத நூல்

கையில் தொடாத துணி'' (சிலந்தி)

என்ற விடுகதையை இவ்வகைக்குச் சான்றாகக் கூறலாம்.

பஞ்சு ........ செடி ......... இல்லை .......... விளையாது (உருவாகும்)

சிலந்தி ....... செடி ........ இல்லை ........ விளையும்

நூல் ....... தறி ....... இல்லை ........ நூற்காது

சிலந்தி ......... தறி ........ இல்லை ........ நூற்கும்

துணி ....... கை ......... இல்லை .......... தொடுதல்

சிலந்தி ....... கை ....... இல்லை ........ தொட இயலாது

மற்றொரு சான்று,

''எண்ணற்ற பழுவுகள் பண்ணாத ஏணி

எட்டாத உயரத்தில் கட்டாத கோட்டை

சரியாத செம்புக்குள் பேயாத தண்­ர்'' (இளநீர்)

என்பதாகும். இவ்விடுகதையில் இயல்பிற்கு மாறான எதிர்மறையான மூன்று செயல்கள் அமைந்துள்ளன. இவை விடையைக் காணுவதற்கு உதவுவனவாக உள்ளன.

3.1.4. பல எதிர்மறைப் பெயரெச்சங்களும் வினைகளும் அமைந்தவை:-

சான்று,

''ஆற்றிலே போகாத தண்­ர்

யாரும் குடிக்காத தண்­ர்

வானம் தராத தண்­ர்

வாய்க்காலில் ஓடாத தண்­ர்

கடலில் கிடைக்காத தண்­ர்

கண்ட இடமெல்லாம் கிடைக்கும் தண்­ர்

தினம்தினம் வேண்டும் தண்­ர்

தின்னத் தின்ன வற்றாத தண்­ர் - அது என்ன'' (மண்ணெண்ணெய்)

இவ்விடுக€யில் ஆற்றிலே போகாத, யாரும் குடிக்காத, வானம் தராத, வாய்க்காலில் ஓடாத, கடலில் கிடைக்காத, தின்னத் தின்ன வற்றாத தண்­ர் என இயல்பிற்கு மாறானவை தண்­ரின் இயல்புகளாகச் சுட்டப்படுகின்றன. இவை கேட்போரின் ஆர்வத்தை வளர்த்துச் செல்வனவாகவும் விடையை அறிந்து கொள்ள பல குறிப்புகளை நல்குவனவாகவும் அமைந்துள்ளன. இவ்வகை விடுகதைக்கு மற்றொரு சான்று,

''உழவன் விதைக்காத விதை

கொத்தன் கட்டாத கட்டிடம்

வண்ணான் வெளுக்காத வெள்ளை

சிற்பி செதுக்காத கல் - அது என்ன?'' (பல்)

என்பதாகும். இவையன்றி கூட்டு அமைப்பினை உடைய பல எதிர்மறைப் பெயரெச்சங்களும் வினைகளும் அமைந்த விடுகதைகளும் காணப்படுகின்றன.

சான்று,

தலையில்லா ராசா வெட்டிய

குளத்துக்குக் கரையில்லை (வானம்)

கரையில்லாத குளத்தில் முளைத்த

கோரைக்கு வேர் இல்லை (கடல்பாசி)

வேரில்லாத கோரையைத் தின்னவந்த

மானுக்குக் கால் இல்லை (மீன்)

காலில்லாத மானை எய்யவந்த

வேடனுக்கு அம்பு இல்லை (வலை) - அவை என்ன?

இந்த விடுகதையில் தலையில்லாத ராசா, கரையில்லாத குளம், வேரில்லாத கோரை, காலில்லாத மான் ஆகிய எதிர்மறைப் பெயரெச்சங்கள் சுட்டப்பட்டுள்ளன.

3.2 உரையாடல் வடிவிலமைந்த எதிர்மறைப் பெயரெச்சங்களும் வினைகளும் அமைந்த விடுகதைகள்:-

உரைநடை வடிவிலமைந்த விடுகதைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களும் அவற்றோடு தொடர்புடைய செயல்களும் அமையுமாயின் இப்பகுப்பில் அடங்கும். இருவர் உரையாடும் பாங்கில் இவ்வகை விடுகதைகள் அமைந்திருக்கும்.

சான்று,

ஆண்: நெய்யாத புடைவையைக் கொய்யாமல் உடுத்தியிருக்கும் பெண்ணே மதுரைக்கு வழி எது? (தென்னைமரப் பன்னாடை)

பெண்: பண்ணாத செம்பில் பன்னீர் கொண்டு போகும் பையா மதுரைக்கு வழி அதுதான் (இளநீர்)

இவ்விடுகதை ஓர் ஆணும், பெண்ணும் உரையாடுவதாக அமைந்திருப்பதைக் காணலாம். மற்றொரு விடுகதையில் நண்டு ஒன்றும் தாழம்பூவும் உரையாடுவதாக அமைந்துள்ளது.

நண்டு - உச்சியிலே பூப்பூக்கும் சங்கத் தாரே (தாழம்பூ) உம்மை உள்ளங்கை மூக்கனார் கொல்லவாறார் (யானை)

தாழம்பூ - கழுத்தில்லாக் குயவரே உனக்கெப்படித் தெரியும் (நண்டு)

நண்டு - பல்லில்லா நாக்கனார் சொல்லக் கேட்டேன் (மணி)

3.3 கதை வடிவில் அமைந்த எதிர்மறைப் பெயரெச்சங்களும் வினைகளும் அமைந்துள்ள விடுகதைகள்:-

இடையில்லாத பெண்னொருவள் வாயில்லாத குடமெடுத்துக் கரையில்லாத ஏரிக்குத் தண்­ருக்குப் போனாள் - அங்கு காலில்லா மானொன்று வேரில்லாப் புல்லை மேய்ந்து கொண்டிருக்க அதைக் கண்ட வேடனொருவன் வானத்தை வில்லாய் வளைத்து ஆற்று மணலை மானின் மேற்படாமல் மான் வயிற்றுக்குள்ளிருந்த குட்டியின் மேல்பட்டது. அதைக் கொண்டு வந்து காலில்லாப் பந்தலில் கட்டி வைத்தான். அதனை முகமில்லா நாய் கொண்டு போய்விட்டது.

இந்த விடுகதையில் இடையில்லாத பெண் வாயில்லாத குடம், கரையில்லாத ஏரி, காலில்லாத மான், வேரில்லா புல், காலில்லா மண்டபம், முகமில்லா நாய், என ஏழு எதிர்மறைப் பெயரெச்சங்களும் அவற்றோடு தொடர்புடைய செயல்களும் கதை கூறும் பாங்கில் அமைந்துள்ளன.

இடையில்லாத பெண்ணாகிய சூரியன் வாயில்லாத குடமாகிய சூரிய வெப்பத்தைக் கொண்டு கரையில்லாத ஏரியாகிய கடலுக்கு தண்­ர் எடுக்கப் போனான். அங்கு காலில்லாத மானாகிய மேகம் வேரில்லாத புல்லாகிய நீரை ஊறிஞ்சிக் கொண்டிருந்தது. இடியாகிய வேடம் மின்னலாகிய வில்லைக் கொண்டு எய்தான். அப்பொழுது மேகமாகிய மானின் வயிற்றுக் குட்டியாகிய மழை வெளிப்பட்டு அதை காலில்லாத மண்டபமாகிய வானில் கட்டி வைக்க அதில் முகமில்லாத நாயாகிய பூமி எடுத்துக் கொண்டது என்பது இவ்விடுகதையில் கூறப்படுவதாகும்.

இவ்வாறு எதிர்மறை விடுகதைகளை பல்வேறு வகையில் பாகுபடுத்திக் கண்டாலும் விதிவிலக்காக ஒருசில விடுகதைகள் உள்ளன.

நன்றி: வேர்களைத்தேடி

 

கருத்துகள் இல்லை: