‏إظهار الرسائل ذات التسميات வேருக்கு நீர் வார்த்தவர்கள். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات வேருக்கு நீர் வார்த்தவர்கள். إظهار كافة الرسائل

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 40 : தமிழின் தலைவிதி!

 "கவியோகி மகரிஷி' டாக்டர். சுத்தானந்த பாரதியார்

தமிழின் தலைவிதி தமிழர் கையில் உள்ளது; தமிழர் கால வேகத்தையறிந்து முன்னேற வேண்டும். தமிழ் ஏதோவொரு காலத்தில், தொண்டர்நாதனைத் தூதிடைவிடுத்தது; முதலையுண்ட பாலகனையழைத்தது; எலும்பைப் பெண்ணாக்கியது; மறைக்கதவைத் திறந்தது; எமகண்டத்தையும் வென்றது; மந்திரத் திறமை பெற்று விளங்கிற்று; தொல்காப்பியமென்னும் பொற்காப்பணிந்தது; சிலம்பு குலுங்க நடை தவழ்ந்தது; முன்னே திபேத்து மட்டும் தமிழ் வழங்கியது; ஹீப்ரு மொழியிலும் புகுந்தது; மேனாட்டுடனே வாணிபஞ் செய்தது; யவனரையும் சோனகரையும் பணியாளராகப் பெற்றது. தமிழ்ச் சித்தர் சீனத்திலுலாவினர். தமிழ் வணிகர் பொன்னும் முத்தும் வாரிக் குவித்தனர். தமிழரின் தேக்குக் கப்பல் உலகையெல்லாம் வாணிப வெற்றி கொண்டது. தமிழர் மொழி தனி மொழி. தமிழர் நாகரிகம் தற்காலத்து முற்போக்காளரும் வியக்கத்தக்கது. வள்ளுவரையும், சேக்கிழாரையும், அப்பரையும், மணிவாசகரையும், கம்பனையும், நம்மாழ்வாரையும், üவைப் பிராட்டியையும் ஈன்ற தமிழ்த் தாயின் பெருமை அளவு கடந்ததே. எல்லாம் சரிதான்!

"இன்று தமிழரின் நிலைமை எப்படியுள்ளது? தமிழரைப் பிற நாட்டார் எப்படி மதிக்கின்றனர்? தமிழை மற்ற மொழியினர் எவ்வாறு கருதுகின்றனர்?' என்று சற்று அனுபவ வாயிலாக ஆராய்ந்தால், தமிழ் படுஞ்சிறுமை நமது மனத்தைக் குத்தும். தமிழ்ப் புலவர் மணிகள் கூடுமிடங்களில், ""கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமுந் துளுவும் உன்னுதரத்துதித்தெழுந்து... ஆரியம்போல் சீரிளமைத்திறம்...'' எல்லாம் பாடலாம். ஆனால் ஓர் ஆந்திரன் காதிற் படும்படி, ""ஆந்திரம், தமிழினின்று உதித்தது'' என்று வாயெடுங்கள் பார்ப்போம்: ""அரவம் அத்வானம்'' என்று இடித்துரைப்பான் தெலுங்கன். தமிழினின்று உதித்தனவென முன்னே ஒப்புக்கொண்ட மொழிகளும் இன்று ஆரியத்தையே தாயாகப் பாராட்டத் தொடங்கியுள்ளன.

கி.மு. 5000-இல் பரதகண்டமெல்லாம் தமிழே பரவியிருந்தது. சிந்து மாகாணத்திலுள்ள மொஹஞ்சதாரோ, ஹரப்பா என்னுமிடங்களில் மண்ணிற்கடியே இரண்டு பெரிய திராவிட நகர்களைக் கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அதிலுள்ள பொருளெல்லாம் தமிழர் நாகரிகச் சின்னங்களேயாம். தமிழைச் சார்ந்த மொழிகள் பன்னிரண்டென்பர். இவையே முற்காலம் இந்தியர் மொழியாயிருந்தன. அவற்றுள் இராஜ் மஹால், ஓராயன், கூயி, கோண்டு, தூடா, கோடா முதலிய மொழிகள் வளர்ச்சியற்றுப்போயின. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு முதலியன நன்கு வளம் பெற்றவை. 300 ஆண்டுகளுக்கு முன்பே தலை தூக்கிய வங்கத்திற்கு உலகிற் பெருமதிப்புள்ளது. அக்பர் காலத்திலெழுந்த இந்தி, இந்திய மொழியானது. ஆங்கிலமும், பிரெஞ்சும், ஜர்மனும் காலத்தை ஆளுகின்றன. இம்மொழிச் செல்விகளெல்லாம் செங்கோல் பிடித்துலாவும் புகழ் வனத்தில் நமது தமிழன்னை எங்கே! அந்தோ! தமிழை நினைத்தால் நல்லதங்காள் கதைதான் முன்னே நிற்கிறது; சந்திரமதிதான் கண்ணீர் வடித்து எதிரே நிற்கிறாள். பிள்ளைகளே தாயை மதிக்கவில்லையே! பிறர் எப்படி அவளை மதிப்பர்?

பதினெண் கீழ்க்கணக்கும், ஐம்பெருங் காப்பியங்களும், கம்பச் சித்திரமும், சைவ-வைணவத் தொண்டரின் தீஞ்சுவையருட்பாக்களும் உள்ளன. ஆனால், அவற்றோடு தமிழ் நின்று விடுவதா? தமிழ்க் கலை வற்றாத உயிராக ஓடி, உலகிற்கே உண்ணீராகப் பெருக வேண்டாவா? பிரெஞ்சு லாரூஸ் அகராதியையும், ஆங்கிலப் பேரகராதியையும், வங்கம், ஹிந்தியில் வர்ணப் படங்களுடன் வரும் நூல்களையும் ஒருபுறம் பார்த்துவிட்டு, மற்றொருபுறம் தற்காலத் தமிழையும் பாருங்கள். அம்மொழிகளினும் உயர்ந்த அருட் செல்வம் தமிழுக்குள்ளது. அது கதிர் வீசிப் பரவ வேண்டும். புதுப் புதுத் துறையிற் புகுந்து அவரவர் திறனுக்கேற்றவாறு தமிழர் தமிழை வளர்க்க வேண்டும்.

உலகில் எங்கு ஓர் அரிய நூல் எழுதப் பெற்றாலும், ஹிந்தி உடனே அதைத் தனதாக்கிக் கொள்ளுகிறது. வங்கத்தில் ஓர் அரிய நூல் வெளிவந்தால், உடனே ஐரோப்பிய மொழிகளில் அது உலாவுகிறது. ஒரு வங்காளி முதலில் தனது தாய்மொழிப் பத்திரிகையைப் படித்தே, ஆங்கிலத்தைத் தொடுகிறான். எவ்வளவு ஆங்கிலப் புலமை வாய்ந்த வங்காளியும் தனது சகோதர வங்காளிக்குத் தாய்மொழியிலேயே கடிதம் எழுதுகிறான்; அவனுடன் தாய்மொழியே பேசுகிறான். படித்த தமிழன், எடுத்ததும், ""கமான் சார், பீச்சுக்குப் போவோம்; இன்று வெதர் ப்ளெசண்டாயிருக்கிறது'' என்று பேசுகிறான். ஆங்கிலந் தெரிந்த தமிழரில் எத்துணைப்பேர் தமிழ்ப் பத்திரிகை படிப்பவர்?

""என்ன சார் தமிழ்? இங்கிலீஷில் டிலைட்புஃல், ஹாப்பி, ஜாயஸ் என்று வகையான இன்பம் இருக்கிறதே; இதற்கெல்லாம் தமிழிற் சொற்களுண்டோ?''
 என்று ஒருவர் கேலியாகக் கேட்டார். அடுத்தவரும், ""ஆமாம் சார் தமிழிலே என்ன இருக்கிறது? ஏதோ சில தமிழைய்யாக்கள், "குசுடுதுபுறு' என்று சத்தம் போடுகிறார்கள்'' என்றார்.

""அன்பரே, "தமிழே இன்பம்'. அந்த இன்பம் ஆங்கிலத்திலுள்ளது போலவே, ஓகை, உவப்பு, மகிழ்வு, களிப்பு, இனிமை, கனிவு எனப் பலவகைப்படும்'' என்று பளிச்செனச் சொன்னதும் அவர் வாய் பிறகு நீளவில்லை.

தமிழுக்கு இந்நாட்டில் முதன்மை பெற உரிமையுண்டு. அதுதான் முன்மொழி, தொன்மொழி. இதை யாரும் மறுக்கமுடியாது. நாடெல்லாம் பரவியிருந்து, இன்று ஒரு சிறு எல்லையில் துடித்துக் கொண்டிருக்கும் நம் நாட்டு முன்மொழியான தமிழ்மொழி வளர்ச்சியும், அரசியல் இயக்கத்தில் ஆதரவும் பெறவேண்டும். வட மொழிக்கும், ஹிந்திக்கும் எவ்வளவு பொதுவுரிமையுண்டோ அதைவிட நூறு பங்கு தமிழுக்கு உண்டென்போம். இன்று தமிழ் பேசுவோர் தொகை குறைந்ததினால், தமிழின் பெருமை குறைந்ததாகுமா? வேதம் படிப்போர் மிகச் சிறு தொகையினர் எனில், வேதத்தின் பெருமை குறைந்துபோமோ?

 இன்னும் உறங்கினால், தமிழ், பிற மொழிகளுக்குப் பலியாகும். தமிழ்போன பிறகு, தமிழர் உயிர்ப்பிணமாயிருந்தென்ன பயன்? பிறகு, லெமூரியாவைப் பற்றி நாம் இப்போது பேசுவது போலவே இனி வரும் உலகோர், ""ஒரே ஒரு காலத்தில் "தமிழ்' என்று ஒரு மொழியிருந்ததாம். தமிழர் என்ற ஒரு மரபினர் இருந்தார்களாம். அவர்களைக் கால வெள்ளம் கொண்டுபோயிற்றாம்!'' என்று பேசுவர். தமிழைச் சிரஞ்சீவியாக்க வாருங்கள் தமிழர்களே!

ஹிந்துஸ்தானி வந்த பிறகு, தமிழுக்கு ஒரு புதிய ஆற்றல் பிறந்துள்ளது. தூக்கம் ஒழித்து துணிவுற்றெழுந்தோம். இனி, "எம்மை எந்த அயல் மொழியும் விழுங்கக் காணிலோம்; எம்மொழிக்கும் எமது தாய்மொழி தாழ்ந்ததன்று' என்றுணர்ந்தோம். தமிழன்பர்களே! இப்போது நமது பெருமையும் உரிமையும் அறிந்தோம். இத்துடன் நாம் அயர்ந்து போகக்கூடாது. ஒவ்வொரு தமிழனும் இவ்வாறு உறுதி பூணட்டும்:

 ""நான் தமிழன். தமிழ் எனது தாய்மொழி. நான் தமிழுக்கே, தமிழர் உயர்விற்கே, தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கே வாழ்வேன். நான் எதைச் செய்தாலும் தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகிய இவை பெருமை பெறவே செய்வேன். தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழருக்கும் கேடு சூழும் எதனையும் துணிந்தெதிர்த்து வெல்லுவேன். என்னுயிரை மறந்தாலும், தமிழை மறவேன். என்னுடலைச் செகுத்தாலும், தமிழைக் கைவிடேன். எனது தமிழ் மொழிதான் உலகில் முதன் முதல் தோன்றிய முதுமொழி. எனது அன்னையை மீண்டும் மொழியரசியாக அரியணையேற்றவே நான் உயிர் வாழ்வேன். என்னுயிர் உள்ளமட்டும் ஒவ்வொரு நாளும், தமிழ் முன்னேற்றத்திற்காகவும், தமிழர் தலைநிமிர்ந்து உலகில் ஓங்கவும், இரண்டு மணி நேரமாவது ஏதாயினும் பயனுள்ள ஒரு தொண்டு செய்வேன். அத்தொண்டு செய்தாலன்றி, நான் உணவு கொள்ளேன். காலையும் மாலையும் எனது தமிழ் நாட்டைத் தமிழாலயமாகக் கருதித் தமிழ் வாழவே திருவருளை வணங்குவேன். "என் தாய் வாழ்க' என்ற மந்திரத்தை எப்போதும் நினைப்பேன். என்னை எதிர்த்த அன்னியருக்குத் தமிழின் பெருமையை, தமிழ்ப் பெரியாரின் சிறப்பை, தமிழ் நாட்டின் மாண்பை விளக்குவேன். இன்றியமையாத சமயமன்றி, மற்றெப்போதும் தமிழிலேயே பேசுவேன்; எழுதுவேன். எந்தாய் வாழ்க! எந்தாய் வாழ்க!'' இவ்வுறுதி தமிழன் உயிர்ப்பாகும்.

 (கட்டுரைத் தகவல் உதவி: பெ.சு.மணி)

நன்றி - தமிழ்மணி

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 39 : தமிழ்த்தாய்!

"தனித்தமிழ் இயக்கத் தந்தை' மறைமலையடிகள்

 தமிழராகிய நாம் நாடோறும் பேசிவருந் தாய்மொழி தமிழேயாகும். நாம் சிறு குழவியாய் இருந்தபோது நம் அன்னையின் தீம்பாலைப் பருகிப் பசி தீர்ந்து அவள் மடியிற் கிடக்க, அவள் நம்மைக் கொஞ்சி முத்தம் வைத்து நம்மைப் பாராட்டிப் பேசியது தமிழ் மொழியிலன்றோ?

சிறு குழந்தையாய் இருந்த அந்தக் காலந்தொட்டு மறுபடியும் நாம் இந்த உலகை விட்டு அகன்று போகும் வரையில், நம் தாய்-தந்தையாரோடும், உடன் பிறந்தவரோடும், மனைவி மக்களோடும், நம் நாட்டில் உள்ளவரோடும் நாம் ஊடாடி உறவாடிப் பேசுவதும் நமதருமைத் தமிழ் மொழியிலன்றோ? இங்ஙனம் நமது உயிரோடும் உடம்போடுங் கலந்து நமதறிவைத் தன் வண்ணம் ஆக்கி, கனாக்காணுங் காலத்துங் கனவுலகில் உள்ளவரோடு நாம் பேசுகையில் அப்பேச்சோடும் உடன் வந்து நிற்பதாய்க் கிளர்ந்து விளங்குவது நமது இனிய செந்தமிழ் மொழியேயாய் இருத்தலின், நமதுயிர் இவ்வுலக வாழ்வைத் துறந்து மறுமையுலகில் சென்று உலவும்போதும், நமக்கு உற்ற துணையாய் நம்மோடு உடன்வந்து நிற்பது தமிழ்மொழியே யாகுமென்பது தெளிவாகப் பெறப்படுகின்றதன்றோ?

இவ்வாறு இம்மை மறுமை யிரண்டிலும் நமது உயிர்க்கு உற்ற துணையாய் இருந்து உதவுவது "தமிழ்மொழி' ஒன்றுமே யாகையால், நடுவே நாம் கற்கும் ஆங்கிலம், ஆரியம் முதலான மொழிகள் அதுபோல் நமக்கு எப்போதும் உதவியுந் துணையுமாய் இருந்து பயன்படமாட்டா என்றுணர்க.

நமது வயிற்றுப் பிழைப்புக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் ஆங்கிலம் சமஸ்கிருதம் முதலான மற்ற மொழிகளை நாம் வருந்திக் கற்க வேண்டுவது கட்டாயமாய்த் தோன்றினாலும், இவற்றின் பொருட்டு நமது இனிய செந்தமிழை மறப்பதும் அதனைப் பயிற்சி செய்யாமற் கைவிட்டிருப்பதும் நமதுயிரையே நாம் அழிப்பதாய் முடியும்.

தமிழ் முதலான மொழிகளுள் ஒன்றையேனும் அல்லது இரண்டு, மூன்றையேனுந் தமது குழந்தைப் பருவந்தொட்டுப் பேசிவருபவர், தாம் பேசும் அவ் இயற்கை மொழிகளையே மேலும் மேலுங் கற்றுத் தமது அறிவை வளப்படுத்தாமல் அவற்றைக் கைவிட்டு முற்றும் புதியவான ஆங்கிலம், ஆரியம் முதலியவற்றையே கற்றுப் பழகும் நம் நாட்டவர் பலர் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் பலவகை நோய்களாற் பிடிக்கப்பட்டு மாய்ந்து போகின்றனர்!

அறிவிற் சிறந்தவரான ஆங்கில நன்மக்கள் தமக்கு இயற்கையில் உரிய ஆங்கில மொழியை நன்றாகக் கற்ற பிறகுதான் வேறு மொழிகளைக் கற்கின்றார்கள்; தமது மொழியைக் கல்லாமல் வேறு மொழிகளைச் சிறிதுங் கற்கவே மாட்டார்கள். இப்படிப்பட்ட உயர்ந்த பழக்கம் அவர்களிடத்தில் இருப்பதனாலேதான் அவர்கள் தமது மொழியில் நிகரற்ற புலமையுடையவராய்ச் சிறந்து விளங்கி, நீண்டநாள் உயிர்வாழ்ந்து உலகத்திற்கு அளவிறந்த நன்மைகளையெல்லாம் விளைவித்து வருகின்றார்கள். நம்மவர்களோ தமக்குரிய செந்தமிழ் மொழியைச் சிறிதுங் கல்லாமலுஞ், சிறிது கற்றாலுந் தமிழ் நூற்பயிற்சி நன்கு நிரம்பாமலும், வயிற்றுப் பிழைப்புக்குரிய ஆங்கிலம் முதலான அயல் மொழிகளையே மிகுந்த பொருட் செலவு செய்து, பல ஆண்டுகள் அல்லும் பகலும் உழைத்துக் கற்றுக் கொள்கின்றார்கள்.

கற்றும் என்! நம் தமிழ்நாட்டுக்குரிய தென்னங்கன்றைப் பெயர்த்துக்கொண்டு போய்ப் பனிமிகுந்த ஆங்கில நாட்டில் வைத்தால் அஃது அங்கே வளராமல் அழிந்துபோவதுபோல, நமது செந்தமிழை விட்டு மற்ற மொழிகளையே தம் காலமெல்லாங் கற்ற அவர், அதனால் வலிவிழந்து மெலிந்து விரைவில் உயிர் துறக்கின்றனர். வயிற்றுப் பிழைப்புக்கென்றே முழுதுங்கற்ற மற்ற மொழி அவரது பிழைப்புக்கே இடையூறு விளைவித்து வருதலை நம்மவர் அறியாமல் வரவரத் தமது வாழ்வில் அருகிப்போவது நினைக்குந்தோறும் நமதுள்ளத்தை நீராய் உருக்குகின்றது. இந்நிலைமையைச் சிறிதாயினுங் கருதிப் பார்ப்பவர்கள் நமது தமிழ் மொழிப் பயிற்சி நம் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத அருமருந்தாமென்பதை உணராமல் போவரோ?

ஏழெட்டு நூற்றாண்டுகளாய் புதிதாய் முளைத்தெழுந்து, இப்போது ஆங்காங்கு வழங்கிவரும் பல வேறு மொழிகளையும் போல்வதன்று நமது தமிழ்மொழி; இது இன்ன காலத்திலேதான் தோன்றியதென்று எவராலுங் கட்டுரைத்துச் சொல்ல முடியாத பழமையுடையதாய், இத்தனை காலமாகியுந் தனது இளமை சிறிதுங் குன்றாததாய் உலாவி வருகின்றது. தமிழைப் போலவே பழமையுடையனவென்று சொல்லத்தக்க ஆரியம், கிரேக்கு, இலத்தீன், ஈபுரு, அராபி, சீனம் முதலான பல தேய மொழிகளெல்லாம் இப்போது உலக வழக்கில் இன்றி இறந்தொழிய, நம் செந்தமிழ் மொழி ஒன்றுமே எல்லாம் வல்ல இறைவனைப் போல் என்றும் இறவாத இளமைத் தன்மை வாய்ந்து இலங்குகிறது. இவ்வுண்மையை மனோன்மணீயம் தமிழ்த்தாய் வணக்கச் செய்யுளிலுங் கண்டுகொள்க.

பழமையில் இதனோடு ஒத்த ஆரியம் முதலான மொழிகளெல்லாம் இறந்தொழியவும், இதுமட்டும் இன்னும் இளமையோடு விளங்குகிறது எதனால் என்றால், தமிழ் அல்லாத மற்ற மொழிகளில் எல்லாம் மக்கள் இயற்கைக்கு மாறான உரத்த ஓசைகளும் பொருந்தா இலக்கண முடிபுகளுங் காணப்படுதலால் அவை வழங்குவதற்கு எளியனவாய் இல்லாமல், நாளடைவில் மாய்ந்துபோகத் தமிழில் இயல்பாற் பிறக்கும் அமைந்த இனிய ஒலிகளும் மிகவும் பொருத்தமான இலக்கண முடிபுகளும் இயைந்து, இது ஓதுதற்கு எளிதாய் இருத்தலினாற்றான் அங்ஙனம் இஃதின்னும் இளமை குன்றாமல் நடைபோடுகின்றதென்று உணர்ந்து கொள்க.

மொழியின் அமைப்பையும் மக்களியற்கை உலக இயற்கைகளையுந் திறம்பட விரித்துரைத்த தொல்காப்பியம் போன்ற மிகப்பழைய நூலை நமது செந்தமிழிலன்றி வேறு மொழிகளிற் காணல் இயலுமோ? அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் முற்றும் எடுத்து விளக்கிய திருக்குறள், நாலடியார் போன்ற அரும்பெரு நூல்களை நம் செந்தமிழ் மொழியன்றி வேறு எந்த மொழியேனும் உடையதாமோ? சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பெரும் பழந்தமிழ்க் காப்பியங்களோடு ஒத்தவை எம்மொழியிலேனும் உளவோ? உலக இயற்கை பிறழாது பாடிய பத்துப்பாட்டு, கலித்தொகை முதலான பழைய தமிழ் பாட்டுக்களுக்கு நிகரானவை வேறெந்த மொழியிலேனும் எடுத்துக்காட்டல் இயலுமோ? திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவை, தேவாரம், பெரியபுராணம் என்னுந் தெய்வத் தமிழ் நூல்கள், கன்னெஞ்சமுங் கரைந்துருகி எத்திறத்தவரும் இறைவன் அருட்பெருக்கில் அமிழ்ந்து இன்புருவினராய் நிற்குமாறு செய்தல்போல, வேறு எந்த மொழியில் உள்ள எந்நூலேனுஞ் செய்தல் கண்டதுண்டோ? மக்கள் முடிவாய்த் தெரிய வேண்டும் மெய்ப்பொருள்களை யெல்லாந் தெளிவித்துக்கூறி, முடிவு கட்டிய சிவஞானபோதம், சிவஞானசித்தி போன்ற மெய்ந்நூல்களும், அவற்றிற்கு மெய்யுரை விரித்த சிவஞான முனிவர் நுண்ணுரை போன்ற உரை நூல்களுந் தமிழிலன்றி வேறெந்த மொழியிலேனுங் காணப்படுவதுண்டோ?

இந்நூற் பொருள்களென்னுந் தீம்பாலை
 நமது உயிரெல்லாந் தித்திக்கக் குழைத்தூட்டும் நம் தமிழ்த்தாயை மறவாது பேணும் பெரும் பேற்றை நம் தமிழ் மக்கள் எல்லாம் பெற்றுச்
 சிறந்திடுவாராக!

நன்றி - தமிழ்மணி