"பெருமானே, நான் தென்னாடு போக வேண்டுமாயின், அங்கே நாலு பேரோடு பேசிப் பழக வேண்டாமா? சிறப்பான நிலையில் இருக்க வேண்டாமா? அங்கே வழங்கும் தமிழ் மொழியில் எனக்குப் பழக்கம் இல்லையே!" என்று அகத்திய முனிவர் சிவபெருமானிடம் விண்ணப்பித்துக் கொண்டார்.
தேவரும் மக்களும் கூடியதால் கைலாசம் என்றும் இல்லாத பெருஞ்சிறப்போடு விளங்கியது. உலக முழுவதுமே காலியாகிவிட்டதோ என்று கூடத் தோன்றியது. தென்னாட்டிலிருந்து பார்வதி கல்யாணத்தைத் தரிசிக்கும் பொருட்டு ஜனங்களெல்லாம் வடக்கே வந்துவிட்டார்கள். வந்தவர்களை மறுபடியும் போய்த் தென்னாட்டில் வாழ்க்கை நடத்தும்படி சொல்ல முடியவில்லை. தென்னாட்டில் அரக்கர்கள் தங்கள் ஆட்சியை விரித்து, மலைகளிலும் ஆற்றங்கரைகளிலும் வாழ்ந்து வந்த நல்லோரை நலிவு செய்தார்கள். ஆதலின், அந்த நாட்டில் நல்லோர் வாழ்வு அமைதியாக இருக்கவில்லை; சிவபெருமானுடைய கல்யாணத்தை வியாஜமாக வைத்துக்கொண்டு அறிவும் தவமும் மிக்க பல பெரியோர்கள் கைலாசத்துக்கே வந்து விட்டார்கள்.
தென்னாட்டில் அரக்கர் கொடுங்கோன்மை பரவுமானால், அங்கே வாழும் குடிமக்கள் என்னாவது! பெரிய வர்களே அஞ்சி ஓடி வந்துவிட்டால், தென்னாடு முழுவதும் அரக்கருக்கு அடங்கி, தெய்வநினைவின்றிக் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் ஆகிவிடுமே! என் செய்வது?