‏إظهار الرسائل ذات التسميات கோபி கிருஷ்ணன். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات கோபி கிருஷ்ணன். إظهار كافة الرسائل

மகான்கள் – கோபி கிருஷ்ணன்


நீங்கள் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். கரடி மோட்டார் சைக்கிள் விடுவதை, யானை ஆசையுடன்     அழகியைத் தன் தும்பிக்கையால் தூக்குவதை, நாய் தீ வளையத்தினூடே தாவி வெளியேறுவதை,     குதிரைகள் வட்டமாய் ஓடுவதை, புலி இரட்டைக் கயிற்றில் நடந்து சிரமப்படுவதை எல்லாம்.     மேலோட்டமாக பார்க்க போனால் இது விலங்கின மானுட சங்கமம் போல் தோன்றும். விஷயம்     அப்படி அல்ல. மனிதன் இம்மிருகங்களை இம்சைப்படுத்தித் தனது ஆதாயத்துக்காகப்     பயன்படுத்திக் கொள்கிறான். இதில் உறவு என்பது ஏதும் இல்லை. வன்மம்,ஒடுக்குமுறை என்ற     அடிப்படையில் உறவு ஏற்பட எந்தச் சாத்தியமும் இல்லை.

இந்த மிருகங்களும் பூ பறித்துக் கொண்டிருப்பதில்லை. அவ்வப்போது மனிதர்கள் மீதான தங்கள்     எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.இளம் பிராயத்தில் 

பாட்டி வீட்டில்  புறா வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் புறாக்களுக்குத் தானியம் வைக்கப் போன  என்னைப் புறா ஒன்று டொக் என விரலில் ரத்தம் வருமளவுக்கு கொட்டி விட்டது. இந்த     அனுபவம் அதிபர் யாருக்காவது ஏற்பட்டிருந்தால் அவர் சமாதானப் புறாக்களைப் பறக்க     விடமாட்டார். ஒரு தடவை அலுவலக ஷெட்’டில் அமைதியாகப் புகைபிடித்துக் கொண்டிருந்த     என்னை ஒரு காகம் விருட்டென்று செவிட்டில் தனது இறக்கையால் அறைந்துவிட்டுச் சென்றது.     சிகரெட் கீழே விழ, காதை அம்மா என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். நான்கு     நாட்கள் இடது காதில் வலி. நான் என் வாழ்நாளில் எந்த ஒரு காகத்துக்கும் தீங்கு     நினைத்தது கிடையாது.

    விஷயம் தெரியாத சில அம்மாக்கள் தங்கள் மகனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்விக்க     சிபாரிசு செய்யும் போது, ‘மூக்கும் முழியுமாகப் பெண் கிளி மாதிரி இருக்கிறாள்’     என இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே கிளி மாதிரி மூக்கும்     முழியுமாக இருந்தால் பெண் எவ்வளவு கோரமாக இருப்பாள் என்பதை இவர்கள் மறந்து     விடுகிறார்கள். அப்புறம், கிளி மாதிரி இருந்து சிறிது காலம் வாழ்ந்துவிட்டு     அலுத்துப் போகும் போது பறந்து சென்றுவிட்டால்…? திருநிறைச் செல்வ மணாளன் பாடு     திண்டாட்டம்தான். இதையெல்லாம் அம்மாக்கள் யோசிக்க வேண்டும். சும்மா பஞ்சவர்ணக் கிளி,     மயில், கவ்தாரி என்றெல்லாம் சொல்லப்படாது.

    மனித, மிருக துர்குணங்களைப் பற்றி சொன்னது போக நல்லிணக்கங்கள் மீது பார்வையைத்     திருப்புவோம்.

    வேலாயுதம் என் நண்பர். ஃபிட்டராக பணிபுரிகிறார். நிறைய நண்பர்கள் அவருக்கு. தன்     சக்திக்கு மீறி நண்பர்களுக்கு உதவும் குணம் படைத்தவர். பழகுவதற்கு தங்கமானவர். மீர்     சாகிப் பேட்டைக்கு போயிருந்த போது வேலாயுதம் வீட்டில் எட்டிப் பார்ப்போம் என்று     போனேன். அறையில் சாப்பிடுக் கொண்டிருந்தவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். ” ஒரு     சம்பவத்தைப் பாருங்கள்” என்றார். அவர் காட்டிய கூரையின் மூலையில் குறிப்பாக     ஒன்றுமில்லை. “என்ன” என்றேன். இப்பொழுது பாருங்கள் என்றார் வேலாயுதம். “க்ளுக் க்ளுக்”     என வாயால் சத்தம் எழுப்பினார். அவர் சுட்டிய மூலையிலிருந்து மரநிற பூதாகர     பல்லியொன்று தீர்க்கமாகக் கீழே இறங்கி வந்தது. அதன் நடையில் தயக்கமில்லை,பயமில்லை,ஓர்     உறுதியும் நட்புணர்வும் தெரிந்தது. நேரே வேலாயுதம் அருகே வந்தது. அவர் ஓரிரு     பருக்கைகளைத் தரையில் சிந்தினார். ஒவ்வொரு பருக்கையாக உட்கொண்டது. ஒரு கவள அளவு     உட்கொண்ட பிறகு அது தன் இருப்பிடத்துக்குத் திரும்பியது.

    ” என் ராச் சாப்பட்டுத் தோழன்” என்றார் வேலாயுதன்.

    ” அருவருப்பாக இல்லையா..? ” என்றேன்.

    ” அன்பாயிருங்கள் எப்பொழுதும்” என்றார் வேலாயுதம் கனிவுடன்.

    ஒரு ஞாயிறு இக்பால் வந்தார் வீட்டுக்கு. ஓவிய நண்பர் எட்வர்டைப் பார்க்க போய்க்     கொண்டிருப்பதாகவும் நானும் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அமைதியான இடம்.     ஜிலுஜிலுவென்ற காற்று. இங்கும் அங்கும் நவீன கட்டிடங்கள். எட்வர்டின் அறைக்குச்     சென்றோம். தான் வரைந்த சட்டமிட்ட நவீன ஓவியங்களை எடுத்துக் காட்டினார் எட்வர்ட்.     மலைப்பும் பிரமிப்பும் என்னுள் ஏற்பட்ட பிராதன உணர்வுகள். பிறகு நிறைய நேரம் பேசிக்     கொண்டிருந்தோம்.

    ” டீ சாப்பிடுவோமே” என்றார் எட்வர்ட். கேண்டீனுக்குப் போனோம். கூட்டமே இல்லை. சொறி     பிடித்த நாய் ஒன்று எட்வர்ட் அருகே வாலாட்டிக்கொண்டு வந்தது. அவர் அதை வாஞ்சையுடன்     தடவிக் கொடுத்தார். நான் அவரைப் பார்த்தேன். என் முகபாவம் என் எண்ணத்தை     வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

    ” சுத்தம் பார்த்தால் அன்பு கிடைக்காது” என்றார் எட்வர்ட்.

    வேலாயுதம் வீட்டில் ஏற்பட்ட தெளிவு இப்பொழுது இரட்டிப்பு துல்லியத்துடன் உட்சென்றது.

***

நன்றி - அழியாச்சுடர்கள்

இழந்த யோகம் - கோபி கிருஷ்ணன்

மாரிச்சாமி அந்தப் பெண் -- மருத்துவரின் அறையில் இருந்தான். அது ஒரு சிறிய பொது மருத்துவமனை.
அவன் கேட்டான், 'இந்த நிக்கோடின் அடிமைத்தனத்தை நிறுத்த மனநல மாத்திரைகள் தருவீர்களா ? ' என்று.
'என்ன ? ஒரு நாளைக்கு எத்தனை ஊதுகிறீர்கள் ? ' என்றாள் மருத்துவர்.
'ஒரு நாற்பது, நாற்பத்தஞ்சு இருக்கும். ஒன்றையடுத்து இன்னொன்று சங்கிலி மாதிரி ' என்று தன் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டான் மாரிச்சாமி.
'என்ன செயின் ஸ்மோக்கிங்கா ? ' கிண்டலடித்தாள் மருத்துவர்.
மாரிச்சாமிக்குக் கொஞ்சம் கடுப்பாக இருந்தது. இருந்தும் சொன்னான், 'பெரிய சிகரெட் எல்லாம் ஒன்றும் இல்லை. சிறு அளவிலான மினி சிகரெட்தான் ' என்று.
'இந்த மினி ஸ்கர்ட் மாதிரியா ? ' என்றாள் மருத்துவர்.
மாரிச்சாமிக்கு வெறுப்பாக இருந்தது. மருத்துவர் ரொம்பவும் பழைமைவாதி என்றும் நவீனத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவள் என்றும் நினைத்துக்கொண்டான். சற்று ஏறிட்டுப் பார்த்தான். மருத்துவர் புடவை தான் கட்டியிருந்தாள். இன்னும் பெரிய புடவை கட்டிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றிற்று அவனுக்கு.
மருத்துவர் சொல்லிவிட்டாள், 'எல்லாம் சுய கட்டுப்பாட்டில்தான் நிறுத்த வேண்டும். மாத்திரை மருந்தெல்லாம் ஒன்றும் இல்லை ' என்று.
மாரிச்சாமி வீழ்ந்தான். பாதாளத்தில். அதலபாதாளத்தில். எழுந்திருக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டான். அவ்வளவு தானா ? யாரும் காப்பாற்ற மாட்டார்களா ? நெஞ்சடைத்துச் சாக வேண்டியது தானா ? இவர்கள் விஞ்ஞானம் என்கிறார்கள்.முன்னேற்றம் என்கிறார்கள். சனியன், ஒரு சின்ன, மிக மிகச்சின்ன மினி சிகரெட்டை நிறுத்த மருத்துவம் இல்லையா ? மாரிச்சாமி வீழ்ந்தான். மீண்டும் மீண்டும் திரும்பவும் திரும்பவும் மறுபடியும் மறுபடியும் வீழ்ந்து கொண்டேயிருந்தான். ஆபத்து காலத்தில் கைதூக்கிவிட யாரும் வர மாட்டார்களா இந்தப் பரந்த மாநகரில் ? ஒரு ஜீவன் ' ஓர் உயிர் '
ஒரு வாரம் சென்றது. இரண்டு வாரம் சென்றது. யாருமே தன்னைக் காப்பாற்ற வரவில்லையே என்ற கவலையும் தொற்றிக்கொள்ள நாற்பது நாற்பத்தைந்திலிருந்து ஐம்பது ஐம்பைத்தைந்தாக மினி சிகரெட் உயர்ந்தது.
மூன்றாவது வாரம். தற்கொலை செய்துகொள்ளலாமா என்றிருந்தது மாரிச்சாமிக்கு. மினி சிகரெட்டே ஒரு சிறு சிறு அளவிலான சின்னச் சின்ன அளவிலான மெதுமெதுவான குட்டியூண்டு குட்டியூண்டான தற்கொலை நகர்வுகள்தான் என்று தோன்றிற்று. ஆகவே பெரிய அளவில் திட்டமிட்டுத் தற்கொலை செய்துகொள்வது அவ்வளவு சரியானதாகப்படவில்லை. அந்த ஆசையும் நிராசையாகிவிடவே மாரிச்சாமியின் மனம் மிகவும் சோர்ந்துவிட்டது. மினி சிகரெட் ஐம்பத்தேழு எட்டாக உயர்ந்தது மனச்சோர்வுடன் சேர்ந்து.
நான்காவது வாரம். மிகவும் தொய்ந்து போனான் மாரிச்சாமி. அலுவலகத்தில் இருந்தான் கவலையே உருவான முகத்துடன் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவனாகக் காணப்பட்டான். நிறைய இருமினான். கண்ணாடி போத்தல் உடைந்து சிதறியது போல இருந்தது இருமல் சப்தம். நிறையத் தண்ணீர் குடித்தான். நாக்கு வறண்டு வறண்டுப் போய்க்கொண்டிருந்தது. 'ஆட்டம் க்ளோஸ் தான் போல ' என்று நினைத்துக் கொண்டான் மாரிச்சாமி. கொஞ்சம் வேகமாக நடந்தாலே மூச்சிரைத்தது. படியேறுவதைப்பற்றிப் பேச்சே வேண்டாம்.
நாற்காலியில் அமர்ந்திருந்தவனுக்கு நினைவில் டக்கென்று ஒரு பொறி தட்டிற்று. 'பராமரிப்பு ' என்ற ஒரு நிலையம் ஞாபகத்துக்கு வந்தது. அதுதான் மருத்தடிமைத்தனத்திலிருந்தும் குடிப்பழக்கத்திலிருந்தும் பிரச்சினை உள்ள நபர்களை மீட்டுக் கொண்டிருந்தது.
தொலைபேசி எண் புத்தகத்தைப் புரட்டி விலாசத்தையும் எண்ணையும் குறித்துக் கொண்டான். அவசர அவசரமாக எண்களைச் சுழற்றினான். ஒரு பெண் குரல். நிலையத்தின் பணி நேரத்தைத் தெரிந்து கொண்டான். நான்கரை மணிக்கு அனுமதி பெற்றுக் கொண்டு நிலையம் நோக்கி விரைந்தான். நிலையம் அடையாரில் இருந்தது.
'பராமரிப்பு ' கீழ் தளத்தில் இருந்தது. மாரிச்சாமி மோபெட்டை முன்பக்க வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.
நடு அளவிலான ஓர் அறை. அது முன் பக்கமிருந்தது. இரண்டு மேசைகளில் கோப்புகள் நிறைந்திருந்தன.
ஒரு வாலிபர் இருந்தார். மாரிச்சாமி தன் பிரச்சினையைச் சொன்னான். உள் அறையிலிருந்து ஒரு பெண்மணி வந்தாள். 'என்ன, புது கேஸா ? ' என்று கேட்டாள். வாலிபர் தலையசைத்தார்.
வாலிபர் தன்னைச் சமூகப்பணியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பெயர் ராமேஸ்வரன் என்றார். மாரிச்சாமி தன் பெயரைச் சொல்லிக் கைகுலுக்கினான்.
சமூகப்பணிக்கென்றே தான் முதுகலைப்பட்டம் படித்திருப்பதாகச் சொன்னார் வாலிபர். மாரிச்சாமி 'இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் ? ' என்று கேட்டான் அப்பாவித்தனமாக.
'சமூகப்பணி தான். மருந்தடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்கும் சமூகப்பணி ' என்றார் வாலிபர்.
'அது மீட்புப்பணி இல்லியோ ' ' என்று வியந்தான் மாரிச்சாமி.
'மீட்புப்பணியும் சமூகப்பணியும் ஒன்றுதான். ஆங்கிலத்தில் intervention என்பார்கள் ' என்றார் வாலிபர்.
'ஓ, அப்படியா ' ' என்றான் மாரிச்சாமி.
மாரிச்சாமி மீண்டும் தன் பிரச்சினை குறித்துச் சிறு அளவில் எடுத்துச்சொன்னான்.
'அட, மினி சிகரெட் தானே ? கவலையை விடுங்கள். 'பராமரிப்பு ' காஞ்சா, குடி, எல்.எஸ்.டி., ஹெராயின், பெத்தடின், ப்ரவுன் ஷ்உகர், புகையிலை, சிகரெட், பான்பராக் அனைத்தையும் நிறுத்த உதவிக் கொண்டிருக்கிறது ' என்று சொன்னார் வாலிபர்.
மாரிச்சாமிக்கு மூச்சு வந்தது, மினி சிகரெட் புகை வாசம் கலந்த மூச்சே என்றாலும். மிகவும் ஆறுதலாக உணர்ந்தான்.
மருத்துவர் வர இன்னும் அரை மணி செல்லும் என்றும் காத்திருக்குமாறும் வாலிபர் கேட்டுக் கொண்டார்.
ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். மாரிச்சாமிக்கு ஒரு மினி சிகரெட் தேவைப்பட்டது. இவர்கள்தான் விடவைப்பதாகச் சொல்லியிருக்கிறார்களே என்று வெளியே வந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான்.
மீண்டும் உள்ளே நுழைந்தபோது மருத்துவர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அங்கிருந்த ஆட்களிடையே நிசப்தம் போன்ற எதோ ஒன்று தோன்றியிருந்தது. பேச்சு தணிந்த குரலில் இருந்தது. ஓராள் அடுத்து இன்னொரு ஆளாக உள்ளே போய் வந்து கொண்டிருந்தார்கள்.
'கடைசியாகத்தான் புது கேஸ் பார்ப்பார்கள் ' என்று நோயாளி ஒருவர் சொன்னார். மாரிச்சாமி தலையசைத்தான்.
மாரிச்சாமியின் முறை வந்தது. உள்ளே சென்றான். மருத்துவர் அமர்ந்திருந்தாள். சல்வார் கமீஸில் ஷால் பரத்திக் கொண்டிருக்க ஜாலியாக அமர்ந்திருந்தாள். மாரிச்சாமிக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. அவள் மினி ஸ்கர்ட் பற்றித் தரக்குறைவாகப் பேசாத நவீனப் பெண் - மருத்துவராகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். மாரிச்சாமிக்கு நவீன உடைகள் பிடிக்கும், குறிப்பாக மினி ஸ்கர்ட் வகையறாக்கள்.
தன் மினி சிகரெட் பிரச்சினை குறித்து மாரிச்சாமி சொன்னான். மருத்துவர் கைவிரித்தாள். ஒன்றும் செய்வதற்கில்லை என்பதை நிறைய வார்த்தைகளில் மிருதுவாகச் சொன்னாள்.
மாரிச்சாமி மீண்டும் வீழ்ந்தான்.
அன்றிரவு முழுக்க மினி சிகரெட்டுகளை ஊதியவண்ணமிருந்தான்.
அடுத்த நாள் அரை நாளுக்கு மேல் அவனால் வேலை செய்ய முடியவில்லை. விடுப்பு எடுத்துக் கொண்டான்.
மிகுந்த சிக்கல்களுடன் ஒரு மாதம் கழிந்தது. மாரிச்சாமி மிகவும் மெலிந்திருந்தான். ஒரு சீக்காளிக்களை முகத்தில் குடியேறியிருந்தது.
அந்த ஞாயிறுதான் சிதம்பரம் வந்திருந்தார். பிராந்தியத்திலேயே முதல் நம்பர் மருத்துவரிடம் அவனை அடுத்த நாள் அழைத்துச் செல்வதாக வாக்களித்தார். அவனிடமிருந்த மினி சிகரெட் பெட்டிகளைப் பறித்துச் சென்றார். சிதம்பரம் சென்று பத்து நிமிடம் கழித்து மாரிச்சாமி அறையைப் பூட்டிக்கொண்டு கீழே வந்து பக்கத்திலிருந்த பங்க் கடையில் ஒரு பெட்டி மினி சிகரெட் வாங்கிக்கொண்டான். அன்றிரவு மாரிச்சாமி ஓரளவு ஆசுவாசத்துடன் தூங்கினான்.
திங்கள் மாலை அலுவலகம் விடும் சமயம் சிதம்பரம் வந்தார். ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவனை அழைத்துச்சென்றார். மருத்துவர் ஓர் அம்மையார். முதியவர். சாந்தமே உருவானவர். சிதம்பரம் மாரிச்சாமியின் பிரச்சினையை எடுத்து சொன்னார். அம்மையார் ஒரு துண்டுக் காகிதத்தில் ஏதோ எழுதி மாரிச்சாமியிடம் நீட்டினார். அது ஒரு யோக கேந்திரத்தின் விலாசம். அண்ணாநகர் கிழக்கில் மீட்பர் ஆலயம் அருகில். மாரிச்சாமி தங்கியிருந்த விடுதியிலிருந்து சுமார் ஏழுகிலோ மீட்டர் தொலைவு.
அடுத்த நாள் காலை மாரிச்சாமி எழத் தாமதமாகிவிட்டிருந்தது. யோக கேந்திரத்தை அடையும்போது மணி ஒன்பது ஆகிவிட்டது. அது ஒரு பிரம்மாண்டமான மூன்றடுக்கு பங்களா. வெளியே கார் நிறுத்த இடம். பிற வண்டிகள் விட பெரிய வெளி. மாரிச்சாமி தன் வண்டியை நிறுத்து விட்டு உள்ளே நுழைந்தான். அழைப்பு மணி. அழுத்தினான்.
சில கணக் காத்திருப்பின் பின் அவன் முகத்தில் ஓர் இன்பப்புயல் வீசிற்று. புயலில் சிக்கித் தவித்தான் மாரிச்சாமி.
ஓர் அழகான, மிக மிக அழகான ஓர் இளம் பெண் - இருபத்து இரண்டு வயது மதிக்கத்தக்க இளம்பெண் - வந்து கதவைத் திறந்தாள். சின்ன வெள்ளை குர்தாவும் அதே நிற மினி ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். முகம் கிழக்கத்திய - மேற்கத்தியக் கலவையாக இருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் அழகை வெளிப்படுத்திற்று. இதழின் வலது ஓரத்தில் ஓர் இளம் நெளிவு, நகை, முறுவல், வேறென்ன..
முப்பத்து ஐந்து வயது வரை உடலில் உயிரைப் பாதுகாத்து வைத்திருந்தது பற்றி மாரிச்சாமி முதல் முறையாக சந்தோசப்பட்டான். தன் ஆதர்சப் பெண்ணை, இலட்சியப்பெண்ணை முதல் முதலில் சந்தித்திருந்தான் மாரிச்சாமி. அவன் மிகவும் நேசித்த அழகு, அவன் விரும்பிய முக இனிமை, குறிப்பாக அவன் மிகவும் ஆசைப்பட்ட உடைகள்.
புயலிலிருந்து மீட்டுக்கொள்ளச் சற்று நேரம் ஆயிற்று மாரிச்சாமிக்கு. அம்மையார் கொடுத்த துண்டுக் காகிதத்தை அவளிடம் நீட்டினான்.
பெண் தலையசைத்தாள் உள்ளே அழைத்துச் சென்றாள். அவளது நடை மிகவும் ஒயிலுடன் இருப்பதாகப் பட்டது மாரிச்சாமிக்கு. மீண்டும் புயலில் சிக்கிக்கொள்ளாமலிருக்கக் கடுமையான முயற்சி தேவைப்பட்டது.
பெரிய வரவேற்பு அறை. மூன்று பக்கங்களிலும் விலையுயர்ந்த சோஃபாக்கள். ஒரு பக்கத்தில் பெரிய மேசை ஒன்று. பக்கத்துக்கு ஒன்றாகக் கைவேலைப்பாடுகள் அமைந்த இரண்டு நாற்காலிகள்.
ஒரு நாற்காலியைச் சுட்டினாள் பெண். மாரிச்சாமி மிகவும் கூசி குறுகலுடன் உட்கார்ந்துகொண்டான். தான் இதுநாள் வரை காதலித்து வந்த ஒரு பேரழகின் முன்னால் ஒரு துரும்பாக உணர்ந்தான் மாரிச்சாமி.
'சொல்லுங்கள் ' என்றாள் பெண்.
'மினி சிகரெட் விட யோகாசன முறையில் இங்கு சிகிச்சை கொடுக்கிறார்கள் என்று அம்மையார் சொன்னார் ' என்றான் மிகுந்த தடுமாற்றத்துடன்.
'என்ன சிகரெட் ' ' வியந்தாள் பெண்.
'மினி சிகரெட் ' என்றான் மாரிச்சாமி சாதாரணமாக.
அந்தப் பெண் இப்பொழுது சிரித்தாள். வாய்விட்டுச் சிரித்ததாக மாரிச்சாமிக்குத் தோன்றிற்று. பல் வரிசை நேர்த்தியாக இருந்தது. குறிப்பாக அந்த மேல் வரிசைத் தோசைப் பற்கள் இரண்டும் சரியான அளவில் அமைந்திருந்தன. மாரிச்சாமிக்குச் சந்தோசமாக இருந்தது மீண்டும். ஆனால் ஏன் அவள் சிரிக்கவேண்டும் என்று புரியவில்லை. ஒரு வேளை தன்னைச் சந்தித்ததில் அவளுக்கும் சந்தோசம் பொங்கியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.
பெண் அவனைச் சற்று காத்திருக்குமாறு சைகை செய்துவிட்டு உள்ளே சென்றாள். பதினைந்து நிமிடக் காத்திருப்பிற்குப் பின் உயரமான, பருமனும் இல்லாமல் ஒல்லியும் இல்லாமல் தாடியும் மீசையுமாகச் சிவந்த நிறத்தில் ஒருவர் அங்கு தோன்றினார். ஐம்பது வயது இருக்கும். தன் பெயர் கிஷன்சந்த் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மாரிச்சாமி கைகுலுக்குவதற்காகக் கை நீட்ட அவர் கை கூப்பினார்.
மாரிச்சாமி தன் மினி சிகரெட் பிரச்சினையைச் சொல்ல கிஷன்சந்த்ஜியும் முறுவலித்தார். மாரிச்சாமிக்குக் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் தான் தன் பிரச்சினையைத் தெளிவாக முன் வைத்துவிட்டதான திருப்தி ஏற்பட்டது.
அடுத்த திங்களிலிருந்து ஓர் ஐந்து நாட்கள் இரவு 8.00மணி முதல் 8.30வரை வர வேண்டும் என்றார். பிறகு காலை வகுப்புகளில் 6.30முதல் 7.30வரை பிற மாணவர்களுடன் கலந்துகொள்ளலாம் என்றார் கிஷன்சந்த்ஜி.
மாரிச்சாமிக்கு நம்பிக்கை வரவில்லை. 'மினி சிகரெட்டை விட்டுவிட முடியும்தானே ? ' என்று மீண்டும் ஒரு முறை திட்டவட்டமாகக் கேட்டான்.
'சேர்ந்த ஒருமாதத்தில் பலன் தெரியும் ' என்றார் குருஜி.
கட்டணம் ரூ.4130/- எட்டுமாதப்பயிற்சி தினமும் காலை ஒரு மணி நேரம் மட்டும்.
மாரிச்சாமி ரூ.130/-ஐ முன்பணமாக நீட்டினான். குருஜி கூடுதலாக ஒரு ரூபாய் கேட்டார். ஏனென்று தெரியாவிட்டாலும் மாரிச்சாமி கொடுத்தான். எவ்வளவு பெரிய சமாச்சாரம் நடக்கப்போகிறது. காசு பணம் பார்த்தால் முடியுமா ' மீதியைக் கூடிய விரைவில் கொடுப்பதாக வாக்களித்து விட்டுக் கிளம்பினான் மாரிச்சாமி. குருஜி கைகூப்பினார்.
மாரிச்சாமி அலுவலகத்தில் பி எஃப் லோன் போட்டான். கிடைக்கச் சில நாட்கள் ஆகும் என்றார்கள்.
மாரிச்சாமிக்கு ஒரு திடார் சந்தேகம் வந்தது. ஆகையால் வியாழன் மாலை யோக கேந்திரத்துக்கு மீண்டும் சென்றான். குருஜியிடம் கேட்டான், 'யோகப் பயிற்சி மதம் சம்பந்தப்பட்டதா ? ' என்று. 'இல்லை ' என்றார் குருஜி. 'ஆனால் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது ' என்றார்.
மாரிச்சாமி காலையில் தினமும் நான்கைந்து க்ளாஸ் டா குடிப்பான். இடையிடையே மினி சிகரெட். ஒரு கட்டத்தில் கக்கூஸ்உக்கு வரும். போய் வருவான். வந்து ஒரு டாயும் சிகரெட்டும் குடிப்பான். அந்தச் சமயத்தில் மிகவும் ஓய்வாகவும் ஆசுவாசமாகவும் உணர்வான். அது மட்டும்தான் தான் உணரும் ஆன்மீக அனுபவம் என்று ஒருமுறை சிதம்பரத்திடம் சொல்லியிருந்தான். சிதம்பரம் ஒரு முற்போக்குவாதி ஆனால் சில சமரசங்களுடன் 'ஒரு முழு நாளில் சில கணங்களேயாயினும் உங்களால் ஆசுவாசமாக உணர முடிவது ஒரு பெரிய விஷயமல்லவோ ? நீங்கள் அதற்கு என்ன பெயர் வைக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல ' என்று சொல்லிவிட்டிருந்தார் சிதம்பரம்.
ஆரம்பத்திலேயே காரசார விவாதங்கள் வேண்டாம் என்று மாரிச்சாமி சும்மா இருந்துவிட்டான். தவிர அந்தப் பெண்ணை பார்க்கவாவது தான் அங்கு போக வேண்டும் என்று நினைத்தான்.
அடுத்த வாரம் திங்கள் முதல் வகுப்பு. எட்டு மணி வகுப்புக்கு ஏழே முக்காலுக்கே சென்றிருந்தான் மாரிச்சாமி. வழியில் மோபெட்டை நிறுத்தி ஒரு மினி சிகரெட் பிடித்திருந்ததில் நாக்கு வறண்டிருந்தது. அவனுக்குத் தண்ணீர் தேவைப்பட்டது. வரவேற்பறையில் அந்தப் பெண்தான் தண்ணீர் தந்தாள் முகத்தில் மென்னகையுடன். வெறும் தண்ணீர் அல்ல. மூலிகை கலந்த தண்ணீர். ஒரு வினோதமான சுவையுடன் இருந்தது அது. இனிப்பு, கசப்பு, புளிப்பு மூன்றும் சேர்ந்த கலவைச் சுவை. நாக்கு வறண்டிராவிட்டாலும் தினமும் அவள் கையால் ஒரு லோட்டா மூலிகைத் தண்ணீர் அருந்த வேண்டும் என்றிருந்தது மாரிச்சாமிக்கு.
வகுப்பில் ஆரம்ப கட்ட மாணவர்கள் பதினைந்து பேர் இருந்தார்கள். பாதி நேரம் விரிவுரை. மீதி எளிய யோகாசனப் பயிற்சிகள். மாரிச்சாமிக்கு மூச்சு வாங்கியது. முழுதாகவெல்லாம் மூச்சை உள்ளிழுத்து வெளிவிட முடியவில்லை. மூச்சுத் திணறல். போகப் போகச் சரியாகிவிடும் என்றார் குருஜி.
கண்களை மூடிக்கொண்டார் குருஜி. மாணவர்களும் கண்களை மூடிக்கொண்டார்கள். குருஜி 'ஓம் ' என்றார் நீளமாக. சற்றுக் கழித்துச் சமஸ்கிருதச் சுலோகம் ஒன்றை உச்சாடனம் செய்தார். சில வினாடிகள்தான்.
பிறகு பூசை நடந்தது. ஒரு மூலையில் மேடை போன்ற அமைப்பு ஒன்றில் இந்துச் சாமி படம் ஒன்றும் ஒரு துறவியின் படமும் இருந்தன. பக்கவாட்டில் ஒரு குத்து விளக்கு சுடர்விட்டுக் கொண்டிருந்தது. குருஜி கற்பூரம் காட்டினார். பழகிய மாணவன் ஒருவன் மணியடித்தான். குருஜி வாக்குத் தவறுகிறார் என்று நினைத்தான் மாரிச்சாமி.
மாரிச்சாமியிடம் கற்பூரத் தட்டு நீட்டப்பட்டது. வேறு வழியில்லாமல் கண்களில் ஒற்றிக் கொண்டான். பாழாய்ப் போயிருந்த மாரிச்சாமியின் நெற்றியில் வாழ்க்கையில் முதல் முறையாக விபூதி ஏறிற்று. சற்றுக் கழித்துக் குங்குமமும். பெரும் பக்திமானாகக் காட்சியளித்தான் மாரிச்சாமி. தட்டில் கற்கண்டுப் படிகங்கள் இருந்தன. அது மாரிச்சாமிக்குப் பிடிக்கும் நிறைய அள்ளி வாயிலும் மீதியைச் சட்டைப்பையிலும் போட்டுக் கொண்டான்.
ஐந்து நாட்கள் முடிந்தன. மினி சிகரெட் ஓரளவு, ஓரளவேனும் குறைந்திருந்தது. குருஜி நிறைய கட்டுப்பாடுகள் விதித்திருந்தார். அதில் பாதியைக் கூட மாரிச்சாமியால் பின்பற்ற முடியவில்லை. ஆனால் இப்போது கொஞ்சம் தெம்பாக இருந்தான். தினமும் அந்தப் பெண்ணை மூலிகைத் தண்ணீரைச் சாக்கிட்டுப் பார்ப்பதைக் கைவிடவில்லை.
அடுத்த நாளிலிருந்து காலை வகுப்புகள். காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குருஜி கொடுத்திருந்த காவிக் கலர் முழுக்கால் சட்டையை அணிந்து கொண்டு தினந்தோறும் தவறாமல் யோகாசன வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தான். மூன்றாம் மாடி தாண்டி மொட்டை மாடியில் பயிற்சி. கீத்துக் கொட்டகை. ஓலைகளால் மூடப்பட்ட பெரிய ஒரு கூடம். சுமார் அறுபது மாணவர்கள். ஐந்து மாணவியர். ஒவ்வொருவருக்கும் ஒரு பாய். நல்லவேளையாகக் காலை வகுப்புகளில் பூசை இல்லை.
அவனுக்குப் பிடித்த யோகாசனப் பயிற்சிகளுள் ஒன்று குழந்தை தவழும் நிலையில் உடலை இருத்திக் கொள்வது. ஒரு பாவமும் அறியாத குழந்தையாக உணர்ந்தான் மாரிச்சாமி அப்பொழுதெல்லாம்.
மாரிச்சாமிக்கு பி.எஃப் லோன் கிடைத்தது. அடுத்த நாள் பத்தாம் நாள். வகுப்பு முடிந்ததும் குருஜியிடம் வள்ளிசாக நாலாயிரம் ரூபாய் கட்டி தன் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டான் மாரிச்சாமி.
நடுவில் மாரிச்சாமி சிதம்பரத்துடன் தொலைபேசி மூலம்பேசினான். தான் யோகாசன வகுப்புகளில் சேர்ந்துவிட்டதாகவும் நிலைமை பரவாயில்லை என்றும். 'நான் தான் சொன்னேனே. எல்லாம் சரியாகிவிடும் ' என்றார் சிதம்பரம்.
காலை வகுப்பு மாணவர்களில் நான்கைந்து பேர் மாரிச்சாமிக்குப் பரிச்சயமானார்கள். தனை ஒத்த வயதுடைய ஒரு மாணவரிடம் மாரிச்சாமி அந்த மூலிகைத் தண்ணீர்ப் பெண் பற்றி விசாரித்தான்.
குருஜியின் பூர்வீகம் வார்தா. அந்தப் பெண் மகாராஷ்டிராவில் சேவாக்கிராமில் காந்தி மருத்துவ நிலையக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து விட்டு வார்தாவில் தனிப்பயிற்சி மேற்கொள்ளுமுன் ஓய்வாக இருக்கத் தன் தகப்பனரான கிஷன்சந்த்ஜி வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்தாள். பெயர் சாரதா. வந்து மூன்று வாரங்களே ஆகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் போய்விடுவாள். ஆனால் 'அந்தக் குட்டையான பாவாடைப் பெண்தானே ? ' என்று மாணவர் கேட்டதைத் தான் மாரிச்சாமியால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. 'மினி ஸ்கர்ட் என்று சொல்லவேண்டும் ' என்று மாரிச்சாமி கட்டாயப்படுத்தி அவரைத் திருத்த நிலைமை கொஞ்சம் எக்கச்சக்கமாகிவிட்டது. நவீன உடை ரசிகனான மாரிச்சாமிக்கு உடைகளின் பெயரைச் சரியாகச் சொல்லாவிட்டால் உணர்ச்சி பொங்கியெழுந்துவிடும்.
பணம் சுளையாக. ரூ.4131/- கட்டணமாகவும் தொளதொளக் காவிக் கலர் துறவறக் கால் சட்டைக்காக ரூ.300/-வும் செலவானது குறித்து மாரிச்சாமி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கணிசமான அளவு மினி சிகரெட்டுகளை அவனால் குறைக்க முடிந்திருந்தது.
பணம் கட்டிய இரண்டு தினங்கள் கழித்து மாரிச்சாமி அலுவலகக் களப்பணிக்காகப் பூந்தமல்லி அருகே தன் மொபெட்டில் சென்று கொண்டிருந்தான். பின்னால் வேகமாக வந்த அம்பாஸடர் அவனை முந்த முயன்றுச் சற்றுப் பலமாக அவன் மோபெட்டின் பின் பகுதியில் இடிக்கத் தான் சாலையில் மல்லாக்க விழுந்து கிடப்பதை உணர்ந்தான் மாரிச்சாமி. ஒன்றும் பிரச்சினை பண்ணிக்கொள்ளவில்லை. அம்பாஸடரைப் போகவிட்டான். மோபெட்டை ஓரங்கட்டினான். வலது முழங்காலுக்குக் கீழே கொஞ்சம் அடி, வலது கையில் முட்டியருகில் ஒரு நீண்ட சிராய்ப்பு. பக்கத்திலிருந்த ஓர் 24 மணி நேர மருத்துவமனையில் ஏ.டி.எஸ் ஊசி ஒன்று போட்டுக் கொண்டான். ஒரு பெண் அவனது காயங்களில் டிங்க்சர் போட்டுத் தேய்த்தாள். எரிந்தது, மருத்துவர் மருந்து எழுதித் தந்தார் மூன்று நாட்களுக்கு. வண்டிக்குப் பெரிதாகச் சேதம் ஒன்றுமில்லை. அது பழையபடிக்கு நன்றாகத்தான் ஓடிற்று.
அடுத்த நாள் காலை மறக்காமல் யோக கேந்திராவுக்கு சென்றான் மாரிச்சாமி. குருஜியிடம் விபத்துப் பற்றிச் சொன்னான், காயங்களைப் பற்றியும், 'அப்படியானால் கால் காயம் ஆறின பிறகு வந்தால் போதும் ' என்றார் குருஜி. மிக மிக அதிர்ஷ்டவசமாக வரவேற்பறையில் சாரதா இருந்தாள். 'மூலிகைத் தண்ணீர் வேண்டுமா ? ' என்று கேட்டு மாரிச்சாமியின் நெஞ்சைத் தொட்டாள். மறுக்காமல் சந்தோசமாக நீர் பருகினான் மாரிச்சாமி.
'பெண்ணே மூலிகைத்தண்ணீர் பெண்ணே, உன் இதழோர நெளிவுக்காக இந்த மாரிச்சாமி தன் உயிரையே கொடுப்பான் ' என்றான் அவளிடம் மானசீகமாக. மினி சிகரெட் விட முடியாத இயலாமையில் தற்கொலை செய்துகொள்வதற்கும் சாரதாவின் அழகுக்காக உயிர் விடுவதற்கும் இடையிலான பல்வேறு வித்தியாசங்களை அவன் மனம் அலசிப்பார்த்தது.
செத்த பிறகு நிக்கோடின் அடிமையாக இருந்த பாவத்துக்காகத் தனக்கு நரகம்தான் கிடைக்கும் என்று தன் கடவுள் மறுப்புக் கொள்கையையும் மறந்து, மீறி நினைத்துக்கொண்டான். யார் சாவார்கள் முதலில் என்ற பிரச்சினை எழுந்தது. சந்தேகமென்ன ? மாரிச்சாமிதான். அவனுக்குத்தான் சாரதாவைவிட அதிகவயது.
ஆனால், தான் தான் இப்பொழுது யோகாசனப் பயிற்சி மேற்கொண்டு கூடியவிரைவில் மினி சிகரெட்டை விட்டு விடுவோமே; மனம் திரும்பியவர்களுக்குப் பாவமன்னிப்பு உண்டு; எனவே தனக்குச் சொர்க்கம் ஒரு கால் கிடைக்கலாம் என்று நினைத்துகொண்டான் மாரிச்சாமி. அப்படியானால் முதலில் இறந்த மாரிச்சாமி சொர்க்கத்தில் சாரதாவின் வருகைக்காகக் காத்திருப்பான். அழகான சாரதாவுக்கு நரகம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. அவள் வந்த கையோடு அவளிடம் மனம் விட்டுப் பேசுவான் மாரிச்சாமி. பூலோகத்தில் கைகூடா நெருக்கம் நிகழச் சொர்க்கத்தில் நிச்சயம் போதிய வசதிகள் இருக்கும். சாரதா சொர்க்கத்திலும் மினி ஸ்கர்ட் தான் அணிந்திருப்பாள்.
சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்து குருஜியிடமிருந்து விடை பெற்றான் மாரிச்சாமி.
அலுவலகத்திலிருந்து பத்து நாட்கள் சிறப்பு விடுப்பில் இருந்தான் மாரிச்சாமி. விபத்து பணியின்போது நிகழ்ந்திருந்ததால் அவனுக்குச் சிறப்பு விடுப்பு கிடைத்திருந்தது.
இப்பொழுது மீண்டும் சிந்தனைவயப்பட்டவனான் மாரிச்சாமி. யோகாசனப் பயிற்சி, குறிப்பாக இந்த மூச்சுப் பயிற்சி மூலம் மினி சிகரெட் பெரும் அளவில் குறைந்திருந்தது..
ஆறேழு நாட்களில் சாரதா வார்தா போய்விடுவாள். இனிப் பார்க்க இயலாது. முப்பதாகக் குறைந்திருந்த மினி சிகரெட் முப்பத்து ஐந்தாக அதிகப்பட்டிருந்ததற்குக் காரணம் இனி சாரதாவைப் பார்க்க இயலாது என்பதால் தான் என்பது மாரிச்சாமிக்கு மட்டுமே தெரியும்.

புயல் - கோபி கிருஷ்ணன்

அதிகாலையிலிருந்தே பலத்த மழை. சென்னை அருகே புயலாம்.

தொழிற்சாலை நேரம் முடிந்து, தள்ளிப்போட முடியாத ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி சக ஊழியர் குதரத் உல்லா பாட்சாவுடன் பேச,  அவரது இல்லத்திற்குச் சென்று, பேசி முடித்துவிட்டு, சுமார் ஒன்பது மணியளவில் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான் ஏக்நாத். நைந்துபோன, பித்தான்கள் என்றைக்கோ  தெறித்து, அவை இல்லாத நிலையில், ஸேஃப்டி பின்களைப் போட்டு ஒருவாறாக மழைக்கோட்டை அணிந்து கொண்டு, தொப்பி தொலைந்துபோய் வெகு மாதங்கள் ஆகியிருந்தும், அதை வாங்காதிருந்த அசிரத்தையின் தண்டனையான தலைநனைதலை அனுபவித்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தான். தொழிற்சாலையில் ஒரு குப்பைக் கூடை அருகே கிடந்த சிறு துண்டு மழைத்தாள் ஒன்றை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தான். வழியில் ஒரு கடையில் புதிதாக சந்தையில் அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்த ‘நௌ’ சிகரெட் ஒரு பாக்கெட்டையும் ஒரு வத்திப்பெட்டியையும் வாங்கி மழைத்தாளில் சுற்றி வைத்துக்கொண்டான். இரண்டு மெழுது வர்த்திகளையும் வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். நல்ல நாட்களிலேயே அடிக்கடி தடைப்படும் மின்சாரம் மழையில் சீராக இயங்கும் என்று சொல்வதற்கில்லை. குழந்தைக்கு இரு தினங்களாக வெதுவெதுப்பான ஜூரம். மருந்துக்கடை ஒன்றில் மாத்திரை இரண்டை வாங்கினான்.

ஜூரத்தால் அவதிப்படும் குழந்தையை ஏதோ ஒரு வகையில் சந்தோஷப்படுத்தி உற்சாகத்துடன் இருக்கச் செய்ய வேண்டும் என்று தோன்றவே, ஒரு கடையில் காட்பரீஸ் மில்க் சாக்கலெட் ஒன்றை வாங்கினான். சிகரெட் ஒன்றைப் பெட்டியிலிருந்து கவனத்துடன் உருவி மழைச் சொட்டுக்களிலிருந்து அதை அரைகுறையாக ஒருவாறு காத்து கைகளைக் குவித்துப் பற்ற வைத்துவிட்டு நடந்து கொண்டிருந்தான். வீட்டை அடைய இன்னும் ஒரு டொக்குச் சந்தையும், ஒரு நீண்ட சந்தையும், இரண்டு சிறு சந்துகளையும் கடக்க வேண்டும்.

வழியில் ஒரு மளிகைக் கடை. வீட்டில் காப்பிப் பொடி. சர்க்கரை காலையில் கொஞ்சம்தான் மீதம் இருந்தது. ப்ரூ ரீஃபில்பேக் காப்பிப் பொட்டலம் ஒன்றையும் 250 கிராம் சர்க்கரையையும் கொடுக்குமாறு கடைப் பையனிடம் சொல்லிவிட்டு சிகரெட்டை உறிஞ்சி புகையை வெளித்தள்ளிக் கொண்டிருந்தான். அருகில் ஒரு நடுவயது மாமி. அவள் முகம் கோணினாள். “ஸாரி மாமி” - மன்னிப்புக் கோரி, கால்வாசிதான் புகைத்திருந்த சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கினான்.

வீட்டின் மிக அருகாமையில் வந்ததும் நேற்று நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அவன் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளி ஒரு வீட்டின் முன் கிட்டத்தட்டத் தெருவின் முழு அகலத்தையும் அடைத்தபடி ஒரு பெரிய கோலத்தை ஒரு பெண்மணி போட்டுக் கொண்டிருந்தாள் லயித்து. ஏகநாத் கவனமாகக் கோலக்கோடுகள், புள்ளிகள் முதலியவைகளைத் தவிர்த்து, ஏடாகூடமாகக் கால் வைத்ததில் கீழே சாயப்போய், ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, கோலத்தின் மேல் கால் பாவாமல் சிரத்தையுடன் தாண்டி நடந்து கடந்தான்.

மணி தோராயமாக 9.30. “காலைலே வீட்டெ விட்டுக் கெளம்பினா வீட்டு ஞாபகமே இருக்கறதில்லை ஒங்களுக்குக் கொஞ்சங்கூட. நான் ஒருத்தி இருக்கேங்கற நெனெப்பே ஒங்களூக்குச் சுத்தமா மறந்தாச்சுன்னுதான் தோண்றது. நீங்க சீக்கிரம் வரணும்னு நான் வேண்டாத தெய்வங்க இல்லெ” ஸோனா பொரிந்து தள்ளினாள். “ஆனா, இண்ணெக்கி என்ன விசேஷம்? நான் சீக்கிரம் வரணும்னு சாமிங்களை வேண்டிக்கற அளவுக்கு எனக்கு என்ன திடீர் முக்கியத்துவம்?” - இது ஏக்நாத். “ஒண்ணுமில்லெ, சொல்றேன்.” “என்ன வீட்டுக்காரம்மா ஏதாவது கத்தினாளா?” - “இல்லெ.” “மளிகைக்காரன் பாக்கிக்காக வந்து கேட்டுக் கத்தினானா?” “இல்லெ.” “வேறென்ன சொல்லேன்.” ஸோனாவின் முகத்தில் கலவரமும் பரபரப்பும் அவசரமும் குடிகொண்டிருந்ததை ஏகநாத்தால் கண்டுகொள்ள முடிந்தது. கணவனைச்  சந்தோஷத்திலாழ்த்தும் செய்தி போன்ற எதுவுமில்லை என்று அவனால் ஊகிக்க முடிந்தது. சராசரிகளுக்குச் சந்தோஷம் என்பதே ஒரு அரிதான விஷயம். அது அவனுக்கு ஒரு அனுபவபூர்வமான நிஜம். “நீங்க மொதல்லெ கைகால் அலம்பிண்டு வாங்க. வெளியே போக வேணாம். இந்த மழைச் சனியன் வேறெ நின்னு தொலைய மாட்டேங்கறது.” ஸோனா சொன்னபடி சமையற்கட்டின் முன்பகுதியில் முகம், கைகால் அலம்பிக்கொண்டு, தலையைத் துவட்டிக்கொண்டு ஏகநாத் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

ஸோனா ஏகநாத்தின் மனைவி. பெயரைப் போலவே தங்கமானவள். மணமான புதிதில் ஏகநாத் அவள் பெயரை மனதில் அசைபோட்டுப் பார்த்திருந்தான். ஸோனா - தங்கம். இன்னொரு அர்த்தம் உறங்குதல். நம் மனநிலைகளின் அதீதங்களினாலோ பிறத்தியான் பிசகாக நடந்து கொள்வதினாலோ அவன்மீது ஏற்படும் கசப்புணர்வு அறவே மறந்து அடுத்த நாள் அவன் தோள்மீது கைபோட்டு அன்னியோன்னியமாயிருக்க உதவும். தீவிர வெறுப்புகள் தொடராமல் தடைபோடக் கைகொடுக்கும் ஒரு அற்புதமான இயற்கை ஔஷதம். ஸோனாதான் எவ்வளவு ரம்மியமான ஆரோக்கியமான பெயர்!

குழந்தைக்கு ஸிந்தியா என்று பெயரிட்டிருந்தான். ஜனித்தவுடன் முதலில் தன் சிசுவைப் பார்த்ததும் உடனே அவன் நினைவில் நிழலாடியது நீல ஆகாயத்தின் மையத்தில் ஒரு முழு நிலா. சந்திர தேவதையின் பெயரையே அவளுக்கு சூட்டிவிட்டான்.

ஸிந்தியா: “டாடீ, எனக்கு இன்னா கொண்டாந்தே?” “ஒனக்காடா கண்ணா, ஒரு மத்திரெ, ஒனக்கு ஜொரமில்லெ? அப்பறம் ஒரு சாக்கலெட்” “இன்னா டாடீ எனக்கு ஸ்வீட்டு, இன்னெக்கி எனக்கு பெர்த் டேவா?” அவளுக்கு எப்பொழுதாவது அரிதாக இனிப்பு கொண்டு கொடுக்கும் சமயமெல்லாம் அவள் கேட்கும் கேள்வி. சாக்கலெட்டை இரண்டு விள்ளல் கடித்துவிட்டு ஸிந்தியா வாந்தி எடுத்துவிட்டாள். “இப்பொ ஸ்வீட் ஒண்ணு இல்லேன்னு இங்கெ யார் அழுதா?” ஸோனா வெடித்தாள். “என்ன நடந்திச்சு, சொல்லு. காப்பி போடு. சாப்பிட்டிட்டே கேக்கறேன்.” “ஒங்களுக்குக் காப்பிதான் முக்கியம். என்னோட அவஸ்தெயெப் பத்தி ஒங்களுக்கென்ன அக்கறை?” வாந்தியை வாருகாலால் தண்ணீர்விட்டுக் கழுவிக்கொண்டே ஸோனா எரிந்து விழுந்தாள். “சரி, காப்பிகூட அப்புறம் போட்டுக்கலாம். விஷயத்தெச் சொல்லு. தேவதூதன் ஒண்ட்டே வழியிலே சந்திச்சுப் பேசி ஆசியெல்லாம் வழங்கிட்டுப் போனான்ற அற்புத நிகழ்ச்சியெலாம் நீ சொல்லப் போறதில்லெ. அல்ப விஷயம் ஏதாவது சொல்லப் போறே. அதுக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்? சொல்லேன்.”

“என்னெ எதுக்கு வேலைலெ சேத்து விட்டீங்க?”

“புதுஸ்ஸா இதிலெ சொல்றதுக்கு என்னா இருக்கு? சமூகத்தெப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும். நாலு பேரோட நீ பழகணும். அப்பொதான் உலகம்ன்னா என்னான்னு ஒனக்குப் புரியும். ஒன்னோட வாழ்க்கை புருஷன், கொளந்தெ, அடுப்படி, வீட்டுச்சுவர் இதுக்குள்ளேயே முடிஞ்சுவிடக் கூடாதுன்னுதான். இப்பொ ஏன் அதெத் திரும்பக் கேக்கறே?”

“என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா நீங்க இந்த மாதிரிப் பேச மாட்டீங்க.”

“நானென்ன யேசுநாதரா, பார்க்காமலேயே எல்லாத்தெயும் தெரிஞ்சுக்க? சொன்னாத்தானே தெரியும்?”

“இன்னெக்கி நர்ஸிங் ஹோம்லெ அந்த தியேட்டர் டெக்னீஷிய ராஸ்கல் கோவிந்தன் டியூட்டி ரூம்லெ நர்ஸுப் பொண்ணுகள்ட்டெ அம்மணமா போஸ் கொடுத்துண்டு நிக்கிற வெள்ளெக்காரச்சி ஒருத்தி ஃபோட்டோவைக் காட்னான். அந்த நாலும் சிரிச்சி கொளெஞ்சி நெளியறதுக. வெக்கங்கெட்ட ஜன்மங்க.”

“இதுக்கு ஏன் இவ்வளவு கத்தல்? கோவிந்தன் ஒண்ட்டெ ஒண்ணும் காட்டலியே?”

“ஓ, அந்தக் கண்றாவி வேறெ நடக்கணும்ன்னு ஒங்களுக்கு ஆசையோ?”

“நீ இண்ணெக்கி நல்ல மூட்லெ இல்லே. கொஞ்சம் தண்ணி சாப்பிட்டு அமைதியா இரு.”

“அந்த டாக்டர் கெழம் - பேரம் பேத்தி எடுத்தாச்சு. ஹார்மோன் இன்ஜெக்‌ஷன் போட்டுண்டு ஹெட் ஸ்டாஃப் - அதுக்கு ஊர்லெ ரெண்டு பசங்க படிச்சிண்டிருக்கு - அதோட ராத்திரியிலே குடும்பம் நடத்தறானாம்.”

என்ன பதில் சொல்வதென்று புரியாத நிலையில் ஏகநாத் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டான்.

”ஒங்களுக்கென்ன, ஸ்மோக் பண்ணினா எல்லாம் தீந்து போச்சு. நான் இங்கெ கெடந்து குமுறிண்டிருக்கேன். நர்ஸிங் ஹோம்லேருந்து Creche-க்கு வந்து ஸிந்தியாவெ அழச்சிண்டு மழைலெ நனைஞ்சு வீட்டுக்கு வந்திண்டிருந்தேன். கொட்ற மழைலெ கொடெ இருந்தும் ஒண்ணுதான் இல்லாட்டியும் ஒண்ணுதான். ரோட்லெ ஆள் நடமாட்டம் இல்லெ. ஒரு ஆள் பாண்ட்ஸ், ஷர்ட் போட்டுண்டு கையிலே ஒரு சிகரெட்டோட காரிலே உட்கார்ந்துண்டு ஜன்னக் கதவையெல்லாம் ஏத்தி மூடி வச்சிண்டு சுட்டு வெரலெ வளைச்சி, “மேடம், ஒரு நிமிஷம் இங்கெ வர்றீங்களா?”ன்னு கூப்பிட்டது. யாரெக் கூப்பிட்றான்னு திரும்பிப் பார்த்தா, “மேடம், ஒங்களெத்தான். ஒரு நிமிஷம் கிட்டெதான் வாங்களேன்”ன்னது. ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ சினிமாவில் ஸ்ரீகாந்த் லக்ஷ்மியை காரிலெ லிஃப்ட் கொடுத்து அனுபவிச்சுட்டு எறக்கி விட்டுப் போனது ஞாபகம் வந்தது. பயந்து நடுங்கிண்டு விறுவிறுன்னு நடந்து வீட்டுக்கு வந்தேன்.”

ஸோனா தொடர்ந்தாள். “வந்து அரை மணி நேரமாகல்லெ. ஒரு வாரத்துக்கு முன்னாலெ காலி செஞ்சுண்டு போனாங்களே, அந்த பார்வதி வீட்டுக்காரன் வந்தான். ‘எப்படீம்மா இருக்கே? கொளந்தெ சௌக்கியமா?’ன்னு கேட்டுண்டே உள்ளாரெ வந்து சேர்லெ ஒக்காந்துக் கிட்டான். ‘இங்கே இருக்கறப்போ அந்த மனுஷண்ட்டெ பேசினதுகூட கிடையாது. காபி சாப்பிட்றீங்களான்னு கேட்டேன். சரின்னது. போட்டு டேபிள்ல்லெ வச்சேன். ‘வேணாம். சும்மா தமாஷுக்குத்தான் கேட்டேன்’ அப்படின்னான். என்ட்டெ என்ன தமாஷ்ன்னு நெனெச்சிண்டிருக்கறப்போ ‘வாங்களேன், இளமை சுகம் சினிமாவுக்கு ரெண்டு டிக்கட் வச்சிருக்கேன். சேர்ந்து போகலாம்’ன்னது. எனக்கு ஒதறல் எடுத்துப் போச்சு. ஸிந்தியவெத் தூக்கிண்டு, அந்தப் பக்கத்து போர்ஷன் பொண்ணு குமுதினி இல்லெ, அதான் நைன்த் படிக்கறதே, அதைக் கூப்பிட்டேன். நல்லகாலம் வந்தது. கொஞ்ச நேரம் அந்த ஆள் அப்படியே ஒக்காந்திண்டிருந்தான். ‘நான் அப்பொ போயிட்டு இன்னொரு நாளெக்கி வர்றேன். நான் இப்பொ ஏன் போறேன் தெரியுமா? நான் இப்பொ ஒங்களோட தனியா இருக்கேன். ஒங்க வீட்டுக்காரரு இப்போ வந்தா நம்மளை என்னன்னு நெனைச்சிக்கிருவாரு?’ன்னு சொல்லிட்டே எழுந்தது. குமுதினிப் பொண்ணு கன்னத்தெத் தட்டிக் கொடுத்துட்டே ஏறக்கட்னது. அந்தப் பொண்ணு சொல்றது, அந்த மனுஷன் நல்லவனாம். குடிச்சுட்டு வந்ததுனாலெ இப்படி நடந்துக்கிட்டதாம்.”

ஸோனா இன்னும் முடிக்கவில்லை. “இந்த இழவெல்லாம் முடிஞ்சாவிட்டு கொடெயெ எடுத்துண்டு ஸிந்தியாவெத் தூக்கி இடுப்பிலெ வச்சிண்டு அரைக்கக் கொடுத்த மாவெ வாங்கிவரப் போனேன். ஒரு வீட்டுத் திண்ணைலெ ரெண்டு கேடிப் பசங்க. ‘குட்டி ஷோக்காயிருக்கில்லெ’ அப்படீன்னு கமெண்டு அடிக்குதுங்க.”

ஸோனா கொட்டித் தீர்த்தாள். விசும்பிக்கொண்டே ஸிந்தியாவுக்குச் சோறு ஊட்டிப் படுக்க வைத்தாள். ஸோனாவுக்கு அமைதியின்மை காரணமாகச் சாப்பிடத் தோன்றவில்லை. ஏகநாத்துக்குத் துக்கம் மனம் பூராவும் வியாபித்திருந்த நிலையில் சாப்பாட்டுச் சிந்தனைக்கே இடம் இல்லாமல் போயிற்று. படுக்கையில் கிடந்தார்கள். ஸோனா ஏகநாத்திடமிருந்து ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்தாள். “சமூகம் இண்ணெக்கி ஒன்கிட்டெ அதனோட விஸ்வரூபத்தைக் காட்டியிருக்கு, அவ்வளவுதான். தூங்கு. எல்லாம் சரியாப் போகும்” என்றான்.

“உலகத்தெத் தெரிஞ்சுக்கணும்னீங்க. புரிஞ்சுகிட்டவரைக்கும் சகிக்கல.”

அவள் கண்களில் கசிந்த நீரைத் துடைக்கக்கூடத் திராணியில்லாமல் கிடந்தான் ஏகநாத்.

ஏகநாத் பாவமே செய்யாத புண்ணிய ஆத்மா அல்ல. இருப்பினும், அசிங்கமாகவோ, அநாகரிகமாகவோ, கொச்சையாகவோ, பச்சையாகவோ, விரசமாகவோ நடந்துகொண்டதாக அவனுக்கு நினைவில்லை. அப்பா பண்ணின பாவம் பிள்ளையின் தலைமேல் விடியும் என்று சொல்லக் கேட்டிருக்கிறான். கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப் பெரியவரும் சொன்னதாகக் கேள்வி இல்லை. மேலும் சமீபத்தில், ஒரு மாமி மனம் கோணாமலும், ஒரு பெண்மணி உளம் நோகாமலும் அவன் அனுசரணையுடன் நடந்து கொண்டிருந்திருக்கிறான். இதற்குச் சன்மானம் கிடைக்கா விட்டாலும், கேடாவது விளையாவது இருந்திருக்கலாம்.

கடைசியில் ஒன்றும் செய்யத் தோன்றாமல், “சாக்கடையில் உழலும் பன்றிகள்” என்று சற்று உரக்கவே கத்தினான். ஏகநாத்தால் இயன்றது அவ்வளவே.

*****