‏إظهار الرسائل ذات التسميات கட்டுரை மாலை. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات கட்டுரை மாலை. إظهار كافة الرسائل

எப்படிப் பிறக்கிறது கதை? - வாஸந்தி

எழுத்தாளர்கள் எப்படிக் கதை எழுதுகிறார்கள் என்கிற கேள்வி கதை பிறந்த காலத்திலிருந்து கேட்கப்படுவது. வியாசர் உண்மையில் மகாபாரதத்தை எப்படி எழுதினாரோ என்னவோ, அதற்கும் விளக்கமாக ஒரு கதை உண்டு. வியாசர் இடைவெளியில் நிறுத்தாமல் கதை சொல்வதற்குத் தயாரென்றால் எழுத நான் தயார் என்று விநாயகர் வந்து அமர்ந்து தனது தந்தத்தை உடைத்து எழுதியதாகப் புராணம். தெய்வீக அருள் இருந்தால்தான் அத்தகைய ஒரு முயற்சி சாத்தியம் பெறும் என்று அர்த்தமாக இருக்கலாம்.

சாதத் ஹசன் மண்டோ பாகிஸ்தானின் பிரபல உருது சிறுகதை எழுத்தாளர் [1912-1955] அவரது எழுத்தின் வசீகரம் மங்காத ஒன்று. அவரைச் சந்திக்க வரும் நிருபர்களும் வாசகர்களும் அவரை விடாமல் கேட்பார்கள். ‘எப்படி எழுதுகிறீர்கள்?’

அவர் ஒருமுறை ஒரு சொற்பொழிவில் விளக்கினார்.

“என் அறையில் சோஃபாவில் அமர்ந்து ஒரு தாளையும் பேனாவையும் எடுத்து ‘பிஸ்மில்லாஹ்’ என்று சொல்லிவிட்டு எழுத ஆரம்பிப்பேன். என்னைச் சுற்றிலும் எனது மூன்று பெண்களும் ஏகமாய் சத்தம் போட்டுக்கொண்டிருப்பார்கள். எழுதும்போது இடையில் அவர்களுடன் பேசுவேன். அவர்களது சண்டைகளைத் தீர்த்துவைப்பேன். ஏதேனும் கொரிக்க எடுத்துவருவேன். நடுவில் யாரேனும் என்னைச் சந்திக்க வந்தால் அவரை உபசரிப்பேன். நான் எப்படித்தான் எழுதுகிறேன் என்கிற கேள்விக்கு பதில் சொல்லவேண்டுமென்றால், எனது எழுத்துப் பாணிக்கும் அன்றாட நடவடிக்கைகளுக்கும் அதாவது சாப்பிடுவது, குளிப்பது, சிகரெட் பிடிப்பது அல்லது சும்மா இருப்பது போன்ற விஷயங்களுக்கும் ஏதும் வித்தியாசமில்லை என்றுதான் சொல்வேன்.

நான் ஏன் எழுதுகிறேன்? ஏன் என்றால் அது ஒரு போதை எனக்கு, மதுவின் போதையைப் போல. எழுதவில்லை என்றால் நான் நிர்வாணமாக இருப்பதுபோல, நீராடாமல் இருப்பதுபோல, மது அருந்தாததுபோல உணர்கிறேன்.

ஆனால் ஒரு சிறுகதையையும் என் மூளை உற்பத்தி செய்யாது. கர்ப்பமாக முடியாத பெண்ணைப் போலக் களைத்துப் படுப்பேன். எழுந்து பறவைகளுக்குத் தீனி வைக்கிறேன். பெண்களை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டுகிறேன். இறைந்து கிடக்கும் காலணிகளை ஒழுங்காக அடுக்கிவைக்கிறேன். குப்பையை அள்ளிக் கொண்டுபோய் வைக்கிறேன். அந்தப் பாழாய்போன கதை என்னவோ பையிலிருந்து வெளியேறி என் மூளைக்குச் செல்ல மாட்டேன் என்கிறது.

நிஜத்தைச் சொல்ல வேண்டுமென்றால், இறைவன் முன்னிலையில் சொல்கிறேன், எப்படி எழுதுகிறேன் என்பது எனக்கு சத்தியமாகத் தெரியாது. எதுவும் எழுத வரவில்லை என்று மனைவியிடம் சொல்லும் போதெல்லாம், அவள், ‘யோசிக்காதே, சும்மா பேனாவையும் பேப்பரையும் எடுத்து எழுதி ஆரம்பி’ என்கிறாள்.

அவள் சொல்வதைக்கேட்டு நானும் பேனாவையும் தாளையும் எடுத்து காலி மண்டையுடன், கதை நிறைந்த சட்டைப் பையுடனும் எழுத அமர்வேன். திடீரென்று கதை ஒன்று தானாக வந்து நிற்கும். நான் ஒரு பிக்பாக்கெட் மட்டுமே. என்னுடைய பாக்கெட்டில் இருப்பதைத் திருடி உங்கள் முன் வைப்பவன். நீங்கள் உலகம் முழுவதும் பயணித்தாலும் என்னைப் போன்ற ஒரு முட்டாளைப் பார்க்க முடியாது.”

மண்டோ சர்ச்சைக்குரிய எழுத்தாளராக இருந்தார். போலித்தனமான மதக் கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் வெளிப்படையாகத் தாக்கினார். ஆபாச எழுத்து என்று பல வழக்குகளில் சிக்கினார். என் எழுத்து ஆபாசமில்லை, ஆபாசம் இருப்பது சமூகத்தில் என்பார். ஒரு முறை நீதிபதியிடம், ‘தனது உணர்வுகள் புண்படுத்தப்படும் போதுதான் எழுத்தாளன் தனது பேனாவை எடுக்கிறான்.’ என்றார்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் குடியேறிய மண்டோ பிரிவினை காலத்துக்கு முந்தைய பிந்தைய காலகட்டத்துத் துயரங்களைத் தனது கதைகளில் மிக நுணுக்கமாகப் பதிவுசெய்தவர். மிக மோசமான காலம் அது. அந்நாட்களில் காண நேர்ந்த தார்மீகச் சரிவு அவரை விரக்தி கொள்ளச் செய்தது. அதன் வெளிப்பாடு அவரது எழுத்தில் தெரிந்தது. பிரிவினையால் நேர்ந்த அபத்தங்களை அவை ஏற்படுத்திய மனப் பிறழ்வுகளை தோபா தேக் சிங் என்ற அவரது கதை அற்புதமாகப் படம் பிடிக்கிறது.

அவர் தனது கல்லறையில் கீழ்க்கண்ட வாசகங்கள் எழுதப்படவேண்டும் என்று அறிவித்திருந்தார்:

‘கருணை நிறைந்த இறைவன் நாமத்தில், சாதத் ஹசன் மண்டோ இங்கு படுத்திருக்கிறான். அவனுடன் புதைந்திருக்கின்றன சிறுகதை எழுத்துக் கலையின் எல்லா ரகசியங்களும் மர்மங்களும். பல டன் கணக்கு மண்ணுக்கு அடியில் படுத்திருக்கிறான், யார் சிறந்த கதாசிரியன், அவனா அல்லது இறைவனா என்கிற திகைப்பில்…’


அந்தப் போட்டியில் தான் தோற்றுபோனதாக அவர் உண்ர்ந்திருக்க வேண்டும்.

நன்றி - தி இந்து 30 08 2014

கலகக் குரல் எழுப்பிய கவிஞர் கம்பதாசன் - சென்னிமலை தண்டபாணி

சந்திர சூரியர்கள் -என்றன்
தாளங்க ளாகுமடாலி
விந்தைக் கடலலைகள்- அதிலே
விம்மி எழும் ஒலியாம்
பளிச்சிடும் தாரகைகள்- என்றன்
பாடலின் வார்த்தைகளாம்
ஒளித்திரு வானவில்லே- என்றன்
உள்ளத் துணர்ச்சியடா''

என்ற கம்பீரத்தோடு கவிதை வானில் வலம் வந்தவர் கவிஞர் கம்பதாசன். 1916-ல் திண்டிவனத்துக்குப் பக்கத்தில் உலகாபுரத்தில் கொலுபொம்மைகள் செய்து விற்றுவந்த சுப்பராயர்- பாலம்மாளுக்கு மகனாகப் பிறந்து 1973-ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டை அரசினர் மருத்துவமனையில் தன் பாட்டுப் பயணத்தை நிறுத்திக்கொண்ட கவிஞரின் பள்ளிப்படிப்பு ஆறாம் வகுப்போடு நின்றுவிட்டது, சின்ன வயதிலேயே சென்னைக்கு சிறகு விரித்து வந்த கவிஞர்- பாரதி, பாரதிதாசனின் கருத்தாக்கங்களில் உருப்பெற்று காலப்போக்கில் தன் சிந்தனைத் திறத்தால் தனக்கொரு தனியிடத்தைக் கவியுலகில் கட்டிக்கொண்டவர். கவிஞரின் பல கவிதைகள் பாரதி, பாவேந்தர் கவிதைகளை அடியொற்றி எழுதப்பட்டதுதான் என்றாலும் 

    ""நீ சிரித்தால் என்ன
    நிலா சிரித்தால் என்ன?
    கான் சிரித்த பூக்கள்
    காலக் காற்றில் போச்சே! -காதல்
    கனவும் மறையலாச்சே!''

என்று புதிய திசையில் புறப்பட்டுக் குரலெழுப்பியவர். ஆண்டவனுக்கும் ஆள்பவர் களுக்கும் பல்லக்குத் தூக்கிக்கொண்டிருந்த பாட்டை எளியவர்களை நோக்கித் திருப்பிவிட்ட பெருமை பாரதிக்கும் பாவேந்தருக்குமே உரித்தது என்றாலும் கம்பதாசனும் பாவேந்தரைப்போலவே எளிய வாழ்நிலை மாந்தர்களைத் தன் கவிதைகளில்  உச்சத்தில் ஏற்றிவைத்து உள்ளம்மகிழ்ந்தவர். தொழிலாளி, செம்படவன், கொல்லன், பரவர், ரிக்ஷாக்காரன், படகோட்டி, நெல் அறுப்போன், நெல்குத்தும் பெண், மாடுமேய்க்கும்சிறுவன், வளையல்காரன், கூடைமுடைபவன், ஒட்டன், பிச்சைக்காரன், குலாலன், பஞ்சாலைத் தொழிலாளி என்று எவரைத்தான் எழுதாமல் விட்டார் கவிஞர்? காரணம் என்ன?  அவர் காண விரும்பிய சமத்துவ சமுதாயம் தான்.

""மண்பாண்டம் செய்யும் குயவனும் -புது
மனைகட்டித் தந்திடும் கொத்தனும்
எண்ணெய் விளைத்திடும் வாணியன் -சிகை
எழிலுறச் செய்திடும் நாவிதன்
புண்ணைத் துடைக்கும் மருத்துவன்- கல்வி
போதிக்கும் பள்ளியின் ஆசானும்
கண்ணுக்குத் தோற்றம் வேறாயினும்- அவர்
காணும் பசியே சமத்துவம்''

 என்ற தெளிவு அவருக்கு இருந்தது. காந்தியத்தின் பக்கம் கவிஞர் கண்பதித்திருந்தபோதும் அவர் சிந்தையில் செங்கொடி அசைந்தாடியது. சமத்துவம், இயற்கை, உழைப்பு, சோசலிஸம் என்று அவர் மனம் 

பல்வேறு வெளிகளில் பயணப்பட்டது. 
""சிற்றெறும்பு ஒன்றன்பின் ஒன்ற தாக -மலை
தினைக்காட்டில் வெய்யிலிலே செல்லல் போல
அற்றவரும் உற்றவரும் அணிவகுத்து -நொய்
அரிசிக்கு நிற்குநிலை பாராய் தம்பி''

என்று மனம்வருந்தி

""பன்றி வசிக்கும் நிலைபோல்- மிகு
 பஞ்சை மக்கள் குடும்பம்
 இன்றும் வதிகின்ற தெனிலோ- மனம்
 ஏக்கத் தீயால் எரியும்''

என்று தனக்குள் எரிந்து கொண்டேயிருந்தார். சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பாத கவிதை என்ன கவிதை?  நமுத்துப்போன சொல்லடுக்குகளில் தங்களுக்குள் தாங்களே முணு முணுத்துக் கொண்டிருந்தால் அது கவிதையுமல்ல; அதைக் காகிதத்தில் கக்குபவன் கவியுமல்லன்.  நம் கவிஞரோ,

    ""தீண்டாத குப்பையைத் தீண்டியே -தேச
     சேவைசெய் தோட்டி குடிசையில்''

என்று சொல்லி,

    ""கண்ணன் இருந்தானாம் -திரௌபதி     
    கட்டத் துகில் தந்தானாம்
    உண்மையில் அவனிருந்தால் -எனக்கே
    ஓர் கந்தை தாரானோ?''

என்று ஏளனக் குரலில் வெப்ப வினாவை வீசுகிறார். 

அதுமட்டுமல்ல; “கெடுக உலகியற்றியான் என்று வள்ளுவப் பெருந்தகை கொந்தளித்தாரே அந்தக் 
கொந்தளிப்பு அடங்காமல் நம் கவிஞர் கம்பதாசனிடம்-

    ""உண்ண உணவது இல்லை என்று -ஏழை
    உயிரும் துடித்து  இறப்பதற்கோ? -புவி
    பண்ணிய குயப்பயலான தெய்வம் -இன்றே   
    பட்டொழிய வழிகண்டிடுவேன்''

என்று எதிரொலிக்கிறது ஒருபிடிச் சோற்றுக்கு வழியின்றி அலையும் அவலத்தைவிட, கொடுமையைவிட வேறென்ன அவலம், கொடுமை இருந்துவிட முடியும்? இதோ கவிஞரின் குரல் கேட்கிறது-

 ""கண்ணிளைப் பாறிடத் தூக்கமுண்டு- அற்பக்
 கழுதை யிளைப்பாறிடத் துறையுமுண்டு
 பண்ணிளைப் பாறிடத் தாளமுண்டு -எங்கள்
    பசியிளைப் பாறிட உண்டோ இடம்?''

என்று கேட்டுவிட்டு அவரே சொல்கிறார்

 ""சொரிதவளை தங்கக் கேணியுண்டு -.சாவைக்
 சொல்லிடும் கூகைக்குப் பொந்துமுண்டு
 வறியவர் எஙகட்கு என்ன உண்டு? -உங்கள்
 வாயேச்சும் வயிற்றுப் பசியுமுண்டு!''  

என்பதோடு நிற்கவில்லை.

""தெருச்சுற்றும் நாய்களைச் சுட்டுத்தள்ளி -தோலைச்
சீராக்கி விற்றிடக் கற்றவரே!
அருளின்றேல் எங்களைச் சுட்டுத்தள்ளி- உற்ற
ஆவியைக் காற்றாய் அனுபவிப்பீர்!'' 

என்கிறார். ஏன் இப்படிப் பாடுகிறார் என்றால் அவர் கண்முன்னால் எப்போதும் எளிய மனிதர் களின் வாழ்க்கை எங்களுக்கு என்ன வழி என்று கேட்டுக்கொண்டே இருக்கிறது.

 ""வயிறாம் அடுப்பில் பசித்தீயுண்டு- விழி
 வழங்கும் நீர்த்துளி சமைப்பதற்கு
 உயிர்தளும்பும் உடல் பானையுண்டு- தங்கி
 உண்டிட சாவாம் விடுதியுண்டு

என்று அவர்களின் அவலக் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு? கவிஞர்  முழங்குகிறார்..

 ""விவசாயி..! விழி! அச்சம்
 விடுவிடு!- ஏரின்
 தவச்சாலை நிலம்... வித்தை
 நடு!நடு!'' 

என்று.  ஆனால் என்ன நடக்கிறது?  அதையும் கவிஞரின் மொழியிலேயே கேட்போம்..

 ""உடல்பொருள் ஆவிய தெல்லாம்
 பண்ணைச் செல்வருக் கீந்து -ஆலை
 பட்ட கரும்பென வாகி
 கண்ணீர் உகுக்கையில் கண்டேன்- அய்யோ
 கலந்திருந்தது ரத்தம்! -அதில்
 கடவுள் துடித்திடக் கண்டேன்''

தன்னுடைய கலகக் குரலை மிக அழுத்தமாகப் பதிவுசெய்கிறார்.. எப்படித் தெரியுமா?

 ""நீங்கள் சிலபேர் நிலம்படைத்தோர்
 நாங்கள் பலபேர் ஏர்உழுவோர்
 நீங்கள் சிலபேர் விருந்துண்போர்
 நாங்கள் பலபேர் பசித்திருப்போர்!
 நீங்கள் சிலபேர் ரோஜாமலர்
 நாங்கள் பலபேர் கூர்முட்கள்
 நீங்கள் சிலபேர் தோன்றுபிறை
 நாங்கள் பலபேர் நட்சத்திரம்''  

என்று நெஞ்சுயர்த்திச் சொல்லி

 ""நாளுக்கு நூறுமுறை - அஞ்சி
 நாய்போல் வாழ்வதிலும்
 தோளுயர்த்திச் சாவின் -முத்தம்
 சூடுவோம் ஓர் முறையே.. 

என்று பிரகடனப்படுத்துகிறார். இவை மட்டுமல்ல; மணக்க மணக்க இயற்கையை தன் கவிதைகளில் பதியனிட்டு வைத்திருக்கிறார் கவிஞர்.  வசந்தம் வருவதை,

 ""மாமரம் செந்தளிர் நாவை நீட்டிட
 மலர்கள் பூத்து வியந்து நோக்கிட
 காமனின் சரம்போல் கோகிலம் கூவிட
 கந்தம் சுமந்து தென்றல் தள்ளாட
 வந்தது வசந்தம்! வந்தது வசந்தம்!
 இன்பக் காவியம் இயற்கை ஏட்டில்
 எழிலுறக் காணுது மலர் எழுத்தினால்'' 

என்று வசந்தத்தை நம் கண்முன்னால் கொண்டுவந்து மலர்களைப் பொழியவைக்கிறார். விண்மீன் களைப்பற்றி எப்படி எழிலோவியம் தீட்டுகிறார் என்றால்-

  ""நீலமல ரொன்றில் பட்டாம்பூச்சி- பல
  நின்று மஞ்சள் நிறச்சிறகை மெள்ளக்
  கோலம் ஒளிர அசைப்பதுவோ?- இமை
  கொட்டும் குளிரொளித் தாரகைகள்
  வானெனும் பெரிய கம்பளமேல்- இருள் 
  வஞ்சியே சொக்கட்டான் தானாட
  மீனெனும் சோழி குலுக்கிக்கொட்டி- அதில்
  மிளிர்ந்திடும் எண்ணினைக் கூட்டுறாளோ?''

 கம்பதாசனின் சொற்சித்திரங்கள் படிக்கப்படிக்க பற்பல வண்ணங்களை நமக்குள் வாரியிறைப்பவை.  வானவில்லைக் கவிதையாக்கியவர்-

  ""பூமியாம் காதலி தன்னுடனே -வானம்
  பொங்கிக் கலவிகொள் போதினிலே
  தேமலர் வாய்மென்ற தாம்பூலத்தை -துப்பச்
  சித்திர வானவில் ஆனதடா!''   

என்று நமக்குள் ஒரு பெருஞ்சித்திரத்தை வரைந்துவைக்கிறார். இயற்கையை, மானுடத்தை உண்மையில் நாம் நேசிக்கிறோமா என்றால் எதிர்மறையான விடைதான் நமக்கு எப்போதும் கிடைக்கும்.  அதனால்தான் கவிஞர்-

 ""மூடிய வானக் கூடையின் கீழே
 கோழிக் குஞ்சென நாழிகை போக்கி
 வாழும் மானிட வாழ்வின் குருத்தே!'' 

என்று நம்மை விளித்து

 ""தரைமகள் அணிந்த தாவணிதான்
 சரிந்தே காற்றில் பறப்பதைப்போல்
 விரிவோடு வளைந்து செலும்பாதை
 விசித்திரம் காணக் காண இன்பம்.''

என்பதை விளக்குகிறார்.

 அவருடைய சொல்லாட்சியும் உவமைகளும் உருவகங்களும் அன்றைய காலத்தில் எத்தனையோ பேரை எழுதவைத்தது. 

 1941-ல் கவிஞரின் "கனவு' கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து "முதல்முத்தம்', "விதியின் விழிப்பு', 
"அருணோதயம்', "புதுக்குரல்', பாட்டுமுடியுமுன்னே, "தொழிலாளி', "கம்பதாசன் கவிதைகள்' என்று பல படைப்புகள் படையெடுத்தன. தன்னுடைய "பாட்டு முடியுமுன்னே' என்ற கவிதை நூலுக்கு 1952-ல் கவிஞர் எழுதிய முன்னுரை இப்படிப் போகிறது: "இந்தப் புத்தகத்தில் உள்ள பாட்டுகள் எனது உணர்ச்சி வேகத்தில், என் காதலி என்னைப் பிரிந்தபோது, ஒரே இரவில் எழுதிய பாட்டுகளாகும். அன்பை உணர்ந்த கலை உள்ளங்கள். குற்றங்களைப் பார்க்காமல் ஏற்றுக்கொண்டால் அதுவே எனது இதய நோய்க்கு மருந்தாகும்' என்று. கவிஞரின் காதல் காயம் அவரை எவ்வளவு ஆழமாக பாதித்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

கவிஞர் பாவேந்தரின்  அடியொற்றி வளர்ந்தவர். அவரால் பாராட்டப்பட்டவர். இவருடைய கலையுள்ளம் பம்மல் சம்பந்தம் முதலியாரால் விரிந்தது. ஆரணி குப்புசாமி முதலியாருடன் ஏற்பட்ட நட்பால் எழுதத்தொடங்கிய கவிஞர், நடிகராகவும், பாடகராகவும், திரைப்பட நடிகராகவும் வலம்வந்தார். இவர் எழுதிய திரைப்படப் பாடல்கள் திசைகளில் பட்டுத் தெறித்தபோது, கேட்ட உள்ளங்கள் எல்லாம் கிறுகிறுத்தன. 1945-ல் "சாளவாகனன்' படத்துக்குப் பாடலோடு கதை, வசனமும் எழுதினார். புகழ் அவருக்குப் பூமாலை சூட்டியது. மகாகவி வள்ளத்தோள் கவிஞருக்கு உறவானார். செல்வச்செழிப்போடும் புகழோடும் வளைய வந்த கவிஞரை வறுமை வட்டமிடத்தொடங்கியது.

""பாட்டு முடியுமுன்னே மீட்டிய வீணையை
பக்கம் வைத்தே நடந்தாய்''

என்று பாடியவர் தன் கவிதைகளை,

      ""சின்னஞ் சிறுகவிதை -மலர்மேல்  
      சிந்தும் பனித்துளிபோல்
      சின்னஞ் சிறுகவிதை- உழவன் 
      சிந்தும் விதைநெல்போல்
      சின்னஞ் சிறுகவிதை -அகலின்
      தீப ஒளியதுபோல்
      சின்னஞ் சிறுகவிதை -குழந்தை 
      செவ்விதழ் முத்தம்போல்''

என்று சொற்சித்திரமாக்கினார். கவிதை, திரைப் படப் பாடல்கள், காவியங்கள், நாடகங்கள், சிறுகதை கள் என்று நிறைய எழுதிக் குவித்த கவிஞரை வறுமை காவுகொண்டது. ஈரல் கோளாறும் காசநோயும் கவிஞரின் பயணத்தை முடித்துவைத்தன.

""காரிருள் நேரம்
காலையோ தூரம்
கண்ணீர் பாரம் நெஞ்சிலே''

என்று கண்மூடிய கவிஞரை வழியனுப்ப வந்தவர்கள் மூன்றுபேர்தான் என்றசெய்தி எவ்வளவு வேதனைக்குரியது? என்றாலும்-

""சிலர் விழிப்பார் சிலர் துயில்வார் -நான்    
விழித்துக் கொண்டே துயில்கின்றேன்
சிலர் வாழ்வார் சிலர் சாவார் -நான்
வாழ்ந்து கொண்டே சாகின்றேன்''


என்று தொடர்ந்து வாழ்வோடு போராடிய கவிஞரின் கலகக் குரல் எழுப்பிய  கவிதைகள் எப்போதும் கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதை கவிதை நெஞ்சங்கள் மறுக்க முடியுமா?

நன்றி - இனிய உதயம் 01 03 2014

வையாபுரிப் பிள்ளையும் தமிழும் - முனைவர் தமிழண்ணல்

பேரா.வையாபுரிப் பிள்ளையின் சில கருத்து முடிபுகள் மட்டும் விமர்சனத்திற்கு உட்பட்டன என்பது உண்மையே. அதற்காக அவரது தமிழ் ஆய்வுப் பணியைக் குறைத்து மதிப்பிட இயலாது.

அவரது காலத்தில் வடமொழிச் சார்புக் கருத்துரு, தமிழ்ச் சார்புக் கருத்துரு என இரண்டு பார்வைகள் முளைவிட்டிருந்தன என்பதும் உண்மையே. இதில் வடமொழிச் சார்பினர் "தமிழ் தம் மொழியின் துணையோடுதான் வளர்ந்தது' என்பது போன்ற கருத்தினைப் பலவாறு வெளிப்படுத்தினர். மேலும், இது சிலருக்கு விமர்சனத்திற்கு உட்பட்டது. இது, வடமொழிச் சார்பினர் சிலர், "தமிழில் எதுவுமே சொந்தமாக இல்லை' என்ற கருத்துக்கு இட்டுச் சென்றது. இதற்கு மறுதலையாக எல்லாமே தமிழ்தான் என்ற குரல் ஓங்கி ஒலிப்பதாயிற்று. அன்று வடமொழிச் சார்பினர்க்கு செல்வாக்கு மிகுதி. இதுவும் சிலருக்கு எரிச்சலை உண்டாக்கியது. குறிப்பாக சிலவற்றைப் பார்ப்போம்:

1.   திருக்குறள் வடமொழி அர்த்த சாத்திரம், காமசூத்திரம் போன்றவற்றைப் பார்த்து எழுதப்பட்டது.

2.   திருக்குறளின் காலம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு.

3.   புறநானூற்றில் "மோரியர்' என்று வரும் ஐந்து இடங்களையும் மாற்றி "ஒளரஸ்' என்ற சொல்லே "மோரியர்' என ஆயிற்று எனக் குழம்பியது.

4.   சிலப்பதிகாரத்தின் காலத்தினைப் பின்னுக்குத் தள்ள பெருமுயற்சி மேற்கொண்டமை. வஞ்சிக்காண்டம் பிற்சேர்க்கை என்றெல்லாம் பலவாறு திரித்து எழுதியதில் பிள்ளை அவர்கட்கும் பங்குண்டு.

5.   அவர் தொகுத்த பேரகராதியில் பல சொற்கள் வடமொழி வழிப்பட்டவை எனக் குறித்திருப்பது. தமிழர் - விளிம்பில்லாத பாத்திரம் என எழுதியிருப்பது.

6.   தமிழ் அகத்திணைப் பாடல்களை, கிரந்தத்தில் உள்ள "கதா சப்தகவியோடு' ஒப்பிட முயல்வது.

7.   தொல்காப்பியம் வடமொழிப் பாணினியத்தைப் பார்த்து எழுதப்பட்டது எனல்.

8.   பல்வேறு இடங்களில் தமிழ் வடமொழி வழிப்பட்டு வளர்ந்தது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது.

9.   பாரதப் போரில் கடுமை காரணமாகப் படைகள் சோர்வுற்றபோது, சேரமன்னன் இரண்டு படைகளுக்கும் பெருஞ்சோறு படைத்தான் என வருவதைப் "புனைகதை' என்பார். அது பாரதப்போர் என்ற நாடகம் என்பார். சங்கப் பாடல்களில் புனைவு என்பதில்லை.

10.   குறுந்தொகையில் "பொன்மலி பாடலி பெறீஇயர்' என வருமிடத்தில், "பாடிலி' என்பது தவறான பாடம். பாடலி என்பதே சரியான பாடம் என்று கண்டு சொன்னவர், "அப்பாடல் கேள்விப்பட்டு பாடியது' என்பார். அவர் உள்ளம் தமிழின் தொன்மையை ஏற்க மறுக்கிறது. பாடலி (பாடலிபுத்திர நகரம்) எனக் கண்டு சொன்னவர், அந் நகரத்தின் காலத்தே பாடப்பட்டது அது என்பதை ஏற்கவில்லை. சுருங்கச் சொன்னால், அவர்தான் வையாபுரிப் பிள்ளை!

இன்னோரன்னவற்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நிறையும் குறையும் உள்ளதில் குறையைச் சுட்டிக் காட்டினாலே, "இவர்கள் தனித் தமிழார்வலர்கள்' என்ற சிமிழுக்குள் அடக்க முயன்ற காலம் மலையேறிவிட்டது. நடுவுநிலை என்றால் அது இரு சார்பினருக்கும் பொருந்தும்தானே!

நன்றி - தமிழ்மணி

சங்க இலக்கியத்தில் வன்புணர்ச்சியும் தண்டனையும்! - சு. சொக்கலிங்கம்

பாலியல் குற்றம் செய்வோருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென உலகில் பல மூலைகளிலிருந்தும் பலத்த குரல் இன்று எழும்புகின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த இவ் வன்கொடுமை அன்றாட நிகழ்வாக அமைந்துவிட்டமையால் வன்கொடுமை புணர்ச்சிக்கான எதிர்ப்புக் குரலில் வியப்பொன்றுமில்லை. சரியானதே.

பாலியல் குற்றம் புரிந்தோர்க்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருப்பதை சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. இத் தண்டனை வழங்கும் பொறுப்பை நடுவுநிலை தவறாச் சான்றோர் மக்கள் முன்னிலையில் வழங்கியுள்ளனர் என்பதே சிறப்பு.

அகநானூறு "மணிமிடைப் பவளத்தில்' இந்நிகழ்வு பாடப் பட்டுள்ளது. அழகு விளங்க பழைமையான புகழ்மிக்கப் பலவகையான பூக்கள் நிறைந்த வயல்களையும் கரும்பு மிக்க தோட்டங்களையும் உடைய சிறப்புடைய கள்ளூர் என்னும் ஊரினன் நிகழ்வாகக் கூறப்பட்டுள்ளது.

அழகிய நெற்றியியையுடைய இளையாள் ஒருத்தியடன் கூடி, அவளின் அழகிய நலத்தினைத் தீவினையே தொழிலாகக் கொண்ட ஒருவன் நுகர்ந்து விடுகிறான். அதன்பின் அவளை நாடி அவன் வரவே இல்லை. அவளைக் கைவிட்டு விடுகிறான். அந்நிலையில் என்ன செய்வதென்று அறியாத நங்கை இறுதியாகச் சான்றோரிடம் முறையிட்டுக் கதறுகிறாள்.

அவளின் துயர்நிலை கேட்ட சான்றோர், அத்தீயவனை அழைத்து உசாவுகின்றனர். அத் தீயவனோ சற்றும் மனசாட்சியின்றி "இதற்கு முன் இவளை அறியேன்'; இவள் யார் என்பது கூட தனக்குத் தெரியாதென்றும் துணிவுடன் பொய்சூள் கூறி அவளை ஏற்க மறுக்கிறான். நீதியிலா அவனின் சூளினை நன்கு ஆய்ந்த அவையினர், அவன் கூறியது முற்றிலும் பொய் என்பதைச் தக்க சாட்சியாளர் கூற்றினால் தெளிவடைகின்றனர். அதனால் அவன்மேல் மேலும் சினம் கொள்கின்றனர். அவனுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று முடிவு செய்து, தண்டனையை மக்கள் முன்னிலையில் வழங்குகின்றனர்.

தளிர்கள் பொருந்திய மூன்று கவராய கிளைகளின் நடுவே அவனை இறுகப் பிணித்துக் கட்டி, அவன் தலையில் அதிக அளவில் நீற்றினைப் (சுண்ணாம்பு தண்ணீர்) பெய்கின்றனர். சுண்ணாம்பு தண்ணீர் தன் தலையில் பட்டதினால் எரிச்சல் தாங்காமல் அவன் துடிக்கிறான். "ஐயோ' என்று அலறுகின்றான். அவன் துடிப்பதைக் கண்ட ஊர் மக்கள் அவன் மேல் இரக்கம் கொள்ளாமல், மாறாக "இது அவனுக்குச் சரியான தண்டனையே' என்று எண்ணி மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்கின்றனர். இதனை, ..... ...... ...... 

காண்தகத் தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனி
கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருநுதற் குறமகள் அணிநலம் வவ்விய
அறனி லாளன் அறியேன் என்ற
திறனில் வெம்சூள் அறிகரி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே!
(அகம் .256 )

என்று மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் என்ற புலவர் தோழியின் கூற்றாகப் பாடியுள்ளார்.

இப்பாடல் வன்புணர்ச்சி செய்வோருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்ற எண்ணம் அன்று தொட்டு இன்று வரை பால் வேறுபாடின்றி மக்களிடையே இருந்து வருகிறது என்பதையே புலப்படுத்துகிறது. நம் தமிழ்ச் செம்மொழி இலக்கியத்தில் இல்லாத செய்திகளே இல்லை என்பது உண்மையிலும் உண்மை!

நன்றி - தமிழ்மணி 2012

தமிழ் இலக்கியங்களில் ஓசோன் - கா.மு.சிதம்பரம்


தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக ட்ரோஸ்பியர், ஸ்ட்ரோட்ஸ்பியர், மெúஸôஸ்பியர், தெர்மாஸ்பியர், எக்úஸôஸ்பியர், நத்திங்னஸ் என அவை அமைந்துள்ளன.

இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான். ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்குதான் இருக்கிறது.

இன்றைக்கு ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.


""இருமுந்நீர்க் குட்டமும்

வியன்ஞாலத்து அகலமும்

வளிவழங்கு திசையும்

வறிதுநிலைஇய ஆகாயமும்''

(புறநா-20)

  என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.


""செஞ்ஞாயிற்றுச் செலவும்

அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்

சூழ்ந்த மண்டிலமும்

வளிதரு திசையும்

வறிதுநிலை காயமும்''

(புறநா-30)

  என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.


""மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக

இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய

வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்''

(புறநா-365)


என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றுள் திசை என்னும் பகுதியில் காற்று இருக்கும். ஆகாயம், நீத்தம் என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. நீத்தம் என்பது இன்றைய அறிவியலார் கூறும் வெறுமை (நத்திங்னஸ்) என்னும் பகுதி.

புவிக்கு மேல் இருக்கின்ற இரண்டாவது பகுதியான ஸ்ட்ரோட்ஸ்பியர் என்னும் பகுதியில்தான் ஓசோன் எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது. இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக்கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்துவருகிறது.

20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?


""நிலமிசை வாழ்வர் அலமரல் தீர

தெறுகதிர் வெம்மை கனலி தாங்கி

காலுண வாக சுடரொடு கொட்கும்

அவிர்சடை முனிவரும் மருள''

(புறநா-43)


என்னும் பாடல் வரிகளின் கருத்து, "புவியில் வாழும் மக்களின் துன்பம் தீர கதிரவனின் வெப்பம் மிக்க கனலைத் தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற முனிவர்கள்' என்பதாகும்.

மேலும், முருகக் கடவுளின் ஒருகை, ""விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது'' என்று திருமுருகாற்றுப்படை(107)யிலும், ""சுடரொடு திரிதரும் முனிவரும் அமரரும் இடர்கெட அருளிநின் இணையடி தொழுதேம்'' என சிலப்பதிகாரத்திலும் (வேட்டுவ வரி-18) இக்கருத்து கூறப்பட்டுள்ளது.

முனிவர்கள் என்று கூறப்பட்டதாலேயே, மற்ற மதத்தினரும் பகுத்தறிவு வாதிகளும் இது அறிவியல் கருத்தன்று; கற்பகமரம், காமதேனு போன்ற கற்பனைகளுள் ஒன்றுதான் என்று சொல்லக் கூடும்.

முனிவர்கள் என்றாலும் சரி அல்லது பிறவற்றைச் சுட்டினாலும் சரி அது ஒரு பொருட்டன்று.

கதிரவனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஒரு சக்தியைப் பற்றித் தமிழர்கள் (சங்கப் புலவர்கள்) சிந்தித்திருக்கிறார்கள் என்னும் செய்தி நம் அனைவரையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறதல்லவா?

நன்றி - தமிழ்மணி

தமிழர் வாழ தமிழ் போதுமா..? - அம்சன் குமார்


தமிழுக்கு மிகுந்த சோதனைகள் வாய்த்துள்ளதாகத் திரும்பத் திரும்பக் குரல் எழுப்பப்பட்டு வருகிற ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். தமிழுக்கு  அப்படி என்னதான் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்று பார்ப்போம். ஒரு வகையில் பார்த்தால் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தமிழ் பல ஏற்றங்களைக்  கண்டிருக்கிறது. உலகெங்கிலும் சுமார் எட்டு கோடித் தமிழர்கள் இன்று வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழ் பேசத் தெரிந்தவர்கள். பல தலைமுறைகளாக வெளிநாடுகளில் தங்கி அந்நாட்டு மொழியையும் வேறு மொழிகளையும் கற்றுக் கொண்டுவிட்டு, தமிழைப் பயன்படுத்தவே முடியாத சூழலில் தமிழ் பேசாத தமிழர்களும் இருக்கிறார்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டாது என்று கொள்ளலாம். இப்படியொரு அதிக அளவில் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் தமிழினம் தொடங்கிய காலம் முதல் இப்போதுதான் இருக்கிறார்கள். உலக மக்கள் தொகை பெருக்கத்தின் நேரடி விளைவாகவும் இதனைப் பார்த்தால் இதற்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் கொள்ளமுடியாது. ஆனால் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கையும் இப்பொழுது உள்ள அளவிற்கு இதுநாள்வரை  இருந்ததில்லை என்பதை ஒரு பலமாகவும் பார்க்கலாம். தமிழில் பத்திரிகைகள், புத்தகங்கள் எண்ணற்ற அளவில் ஆண்டுதோறும் பிரசுரமாகின்றன. தமிழ்புத்தகங்களின் மொத்த ஆண்டு விற்பனைத் தொகை ரூ.80 கோடியைத் தாண்டிவிட்டது. எட்டு கோடி தமிழர்களின் புத்தகச் செலவு இதுதான் என்று பார்க்கும் பொழுது இந்த தொகை அவ்வளவு பொருட்படுத்தத்தக்கதாக இல்லை என்று கூறலாம். ஆனால் இவர்களில் ஆறரை கோடித் தமிழகத் தமிழர்கள்தான் புத்தகங்களை அதிகம் வாங்கியவர்கள். அது சுலபமான யூகம்தான். தமிழகத் தமிழர்களிலும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருபது சதவிகிதத்தினருக்கு மேற்பட்டவர்கள். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களில் பலரும் புத்தகம் வாங்கும் பழக்கத்தை இன்னமும் கைக் கொள்ளாதவர்கள் என்றெல்லாம் பார்க்கும் பொழுது புத்தக விற்பனையின் ஏறுமுகம் நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது. நூலகங்கள் தவிர ஒரு சிறுபான்மையினரே புத்தகங்கள் வாங்குகின்றனர் என்றாலும் தமிழ்ப் புத்தகம் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் பெருகி வருவதைக் கண் கூடாகப் பார்க்கலாம். தமிழ் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்துள்ளது. கணினியிலும் தமிழ் காலந்தாழ்த்தாது நுழைந்து விட்டது.

ஆனால் தமிழைக் கல்வி நிலையங்களில் கற்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைஞர்கள் விருப்புடன் தமிழைக் கற்பதில்லை. மேடைகளில், தொலைக்காட்சிகளில் தமிழ் நிகழ்ச்சி நடத்துபவர்கள் தமிழ் சொற்களைச் சரியாக உச்சரிப்பதில்லை. ஆங்கிலத்தை விரும்பி உபயோகிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இரண்டு தமிழர்கள் சந்தித்தால் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடவே விரும்புகிறார்கள். தமிழ் மத்தியில் ஆட்சி மொழியாகவில்லை. தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் தமிழ் போதிக்கப்படுவதில்லை. அவ்வாறே போதிக்கப்படும் இடங்களிலும் மேல்நிலை வகுப்புகளில் தமிழ் இடம்பெறுவதில்லை. அங்கெல்லாம் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. குழந்தைகள் அப்பா அம்மா என்றெல்லாம் அழைக்காமல் டாடி, மம்மி என்று அழைக்கின்றனர். சுருங்கக் கூறினால் தமிழின் மிகப் பெரும் அச்சுறுத்தலாக ஆங்கிலம் கருதப்படுகிறது.

தனித்தமிழை வேண்டியவர்கள் வடமொழி மீதுதான் வெறுப்பு கொண்டிருந்தனர். ஆங்கிலத்தின் மீது அல்ல. இப்பொழுது குறைந்த அளவில் மட்டுமே வடமொழி தமிழுக்கு ஊறு விளைவிக்கும் மொழியாகக் கருதப்படுகிறது. வடமொழிச் சொற்களைத் தமிழில் கலக்கக்கூடாது என்பது பலரின் வேண்டுகோள். இந்த வேண்டுகோள் பெருமளவில் நிறைவேற்றப்பட்டதாகவே கொள்ளலாம். மணிப்பிரவாள நடை வழக்கொழிந்து போய்விட்டது. வட மொழிச் சொற்களுக்கு மாற்றான தமிழ்ச் சொற்களைப் பலரும் விருப்புடன் எடுத்தாளத் துவங்கிவிட்டனர். வட மொழியினால் தமிழுக்கு அபாயம் எதுவும்  இல்லை. ஏனெனில் தமிழும் வடமொழியும் தனித்தனியேயான உள்ளார்ந்த குணங்கள் கொண்டவை. வடமொழியில் இதிகாசங்களும் வேதங்களும் வளர்ந்தன. தமிழில் இலக்கியங்களும் நீதி நூல்களும் படைக்கப்பட்டன. பக்தி இலக்கியங்கள் தோன்றும்வரை இந்த நடைமுறை இருந்திருக்கிறது. வட மொழி வழக்கொழிந்து போனதற்கும் தமிழ் இன்றளவும் மக்கள் மொழியாக இருப்பதற்கும் இவையும் கூட காரணங்கள்  எனலாம்.

ஆனால் தமிழர்கள் தங்களுக்கு வைத்துள்ள பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேற்றுமைகள் உள்ளன. இந்து சமயத்தைச் சேர்ந்த தமிழர்கள் இந்துக் கடவுள்களின் மற்றும் மகான்களின் பெயர்களைத் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் வைப்பதால் அவை தமிழ்ச் சொற்களாக இருப்பதில்லை. பெரும்பாலும் அவை வடமொழி சார்ந்தவை. ஆனால் அப்பெயர்களை வைப்பவர்கள் சமய இறையுணர்வு காரணமாகச் செயல்படுகிறார்களேயன்றி அவர்கள் தமிழ் உணர்வற்றவர்கள் என்று கொள்வது தவறான கற்பிதம். தமிழர்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள் போன்றோரும் தங்கள் இறைவழிபாட்டு பண்பினையொட்டி சமயப் பெயர்களைச் சூட்டுகிறார்கள். அப் பெயர்களும் அந்நிய மொழியிலிருந்து பெறப்பட்டவை. அவற்றுக்கும் மூலம் தமிழ் கிடையாது. கார்ல் மார்க்ஸ், சாக்ரடீஸ், இங்கர்சால் போன்ற அறிஞர்களின் பெயர்களை விரும்பி வைத்துக் கொள்பவர்களும் உள்ளனர். அப்பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல. எனவே இந்துக்கள் மட்டும் தங்கள் இறை நம்பிக்கை அடிப்படையில் அமைந்த பெயர்களை அவை வடமொழி மூலம் கொண்டிருக்கின்றன என்கிற காரணத்தால் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவது எவ்வகையிலும் நியாயமானதல்ல.

அது போன்றே ஷ,ஜ,ஸ ஆகிய எழுத்துகள் வந்தால் அவற்றுக்குப் பதிலாக ச என்ற எழுத்தையும் ஹ வந்தால் அதற்குப் பதிலாக அ என்ற எழுத்தையும் போட்டு எழுதுகிற பழக்கம் தமிழ்ப் பற்றை நிரூபிப்பதாகக் கொள்வது. வடமொழியில் மட்டும் இன்றி இந்த எழுத்துகள் பாரசீகம், அரபு, ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் காணப்படுகின்றன. எனவே பிறமொழிச் சொற்கள் கொண்டுள்ள ஒலியினை வரி வடிவத்தில் தமிழில் தர வேண்டும் என்றால் இந்த எழுத்துகளைக் கட்டாயமாக நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதை மொழி பெயர்ப்பு இலக்கியம் அசட்டை செய்ய இயலாது. ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று எழுதுவதால் என்ன பயன்? இவரல்ல அவர் என்கிற முடிவிற்கு வருவதைத் தவிர? ஒருவரது பெயரையே ஒப்புக்கொள்ளாதவர்கள் அவருடைய படைப்புக்கு எத்தகைய நியாயத்தை வழங்கி விட முடியும்? நம் மொழிக்குப் பிறர் இத்தகைய சிதைவுகளைச் செய்தால் நாம் மனம் ஒப்புவோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆங்கிலேயர்கள் நம் ஊர் பெயர்களைச் சிதைத்ததை நாம் மீட்டெடுக்க முயற்சிக்கிறோம். தனித்துவம் மிக்க ழ என்கிற தமிழ் எழுத்து ஆங்கிலத்தில் LA என்று எழுதப்படுவதைவிட zha என்று அதன் உச்சரிப்பு கெடாமல் வரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதே ஆற்றலை நாம் மற்ற மொழிகளுக்கும் தர வேண்டுமல்லவா? வடமொழி உள்ளிட்டு எந்த மொழி மீதும் வெறுப்பினை வளர்த்துக் கொள்ளக் கூடாது. மொழிகள் பரஸ்பரம் கொள்கிற பாதிப்புகள் நாகரிகத்தின் அடையாளம். "பிற மொழிகள் மீது பகைமை கொள்ளாதே பாப்பா" என்கிற வரியையும் பாப்பா பாட்டில் சேர்த்துப் படிக்க வேண்டும்.
ஆங்கிலத்தைப் பொறுத்தவரை அதன் மீதான எதிர்கொளல் சிந்தித்துச் செயல்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. ஆங்கிலத்தை விரும்பிக் கற்பவர்களாயும் அதைப் பயன்படுத்துபவர்களாயும் உள்ள தமிழர்களை ஆங்கில மோகிகள் என்று வர்ணிப்பது பிழை. மோகம் என்பது பயனற்ற அர்த்தமற்ற விளைவுக்கு இட்டுச் செல்கிற மனோபாவத்தைக் குறிக்கும். தேர்ச்சி பெறுவதென்பது காலத்தின் இன்றியமையாமை ஆகும். ஆங்கிலத்தில் இரண்டு தமிழர்கள் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் உரையாடுவது தவறு என்று பேசப்பட்டு வருகிற காலம் இது. ஆங்கிலத்தில் உரையாடினால் தமிழ் மெல்லச் சாகும் என்று சொல்லுமளவுக்குத் தமிழ் பலவீனமான மொழி அல்ல. தமிழர்களும் தமிழைத் தவிக்க விடுவதற்காக ஆங்கிலம் பேசுவதில்லை. தேவை கருதியும் தன்னம்பிக்கையின் அடையாளமுமாயும்தான் அவர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்கள் முழுதும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பதில்லை என்பதையும், அது இயலாத ஒன்று என்பதையும் கூட கவனிக்க வேண்டும். இன்று தமிழர்களின் சமூக, பொருளாதார நிலை உயர்ந்திருக்கிறதென்றால் அதற்கு மிக முக்கிய காரணம் ஆங்கிலக் கல்வி. தமிழர்களின் வாழ்வில் வளம் சேர்ப்பது ஆங்கிலம்தான். தமிழர்களாகிய நாம் நம்மிடையே உள்ள பிற வளங்கள் என்ன என்பதைப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும். நம்மிடம் இயற்கை வளங்கள் குறைவு. வற்றாத நதிகள் என்று எதுவும் இல்லை. குடிநீருக்கே பிற மாநிலங்களை யாசிக்க வேண்டிய நிலை. ஏற்றுமதி செய்யத்தக்க கனிமப் பொருட்களோ நுகர் பொருட்களோ கணிசமான அளவில் இங்கு கிடையாது. 

நாடு என்ப நாடாவளத்தன நாடல்ல / நாட வளம் தரும்நாடு என்றார் வள்ளுவர். நமக்கே இயற்கையாக வாய்க்கப்பெற்ற வளம்தான் நம்முடையது என்னும் பட்சத்தில் நம்மிடம் இருப்பதெல்லாம் மனித வளம்தான். நாம் மற்றவரிடமிருந்து எதையாவது பெறவேண்டுமென்றால் நாம் எதையாவது அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா? நம்மால் கொடுக்க முடிவது மனித வளத்தைத்தான். காலம் காலமாகத் தமிழர்களாகிய நாம் நம் உழைப்பைத்தான் மற்றவர்களுக்குக் கொடுத்து வந்திருக்கிறோம். பிஜி, ஆப்ரிக்கா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்குக் கூலி வேலை செய்பவர்களைத் தருபவர்களாக தமிழகம் இருந்திருக்கிறது. ஆனால் இன்று அந்த அவல நிலை மாறி பிற நாடுகளுக்கு நாம் அறிவு சார்ந்த துறைகளில் வேலை செய்வதற்காக தமிழர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் ஆங்கில அறிவுதான். ஆங்கிலத்தில் நம்மவர்கள் பேசவும் எழுதவும் பெற்ற தேர்ச்சியின் விளைவே இது.

இந்தத் தேர்ச்சியை நாம் எவ்வாறு பெற்றோம்? 

பல வருடங்களாக ஆங்கிலம் கற்றுப் பேசி எழுதிப் பெற்ற தேர்ச்சி இது. எனவே ஆங்கிலத்தில் பேச தேர்ச்சி பெற வேண்டுமென்றால் தமிழர்கள் பிற தமிழர்களிடம்தான் பேச வேண்டும். தமிழ் தெரியாதவர்களிடம் மட்டுமே ஆங்கிலம் பேச வேண்டுமென்றால் இந்தத் தேர்ச்சி வந்திருக்காது. சிறு வயது முதல் ஆங்கிலம் படித்தாலும் ஆங்கிலமே பேசியிராதவர்கள்  இருபது வயதுக்கு மேல் வேலை நிமித்தமாக திடீரென சரளமாக ஆங்கிலத்தில் உரையாட முடியுமா? மொழிப் பயிற்சி சிறு வயதிலிருந்தே வருவது நல்லது.

நான் மம்மி என்று கூப்பிடுகிறேன். அதனால் நீ கவுன் அணிந்து முள் கரண்டியால் எனக்கு ரொட்டியை ஊட்டு என்றெல்லாமா அக்குழந்தை தன் தாயிடம் கேட்கிறது? தமிழ் உணர்வுடன் பண்பாட்டுடன்தான் அக்குழந்தை பேசுகிறது. மம்மி என்பது அக்குழந்தையின் ஆங்கில மழலை. நீ எனக்கு அம்மா என்ற சொல்லைக் கற்றுக் கொடுத்தாய், நான் மம்மி என்ற சொல்லைக் கற்று வந்திருக்கிறேன் பார் என்று அது பெருமிதத்துடன் சொல்வதைத் தமிழுக்கு எதிரான செயலாகப் படம் பிடித்துக் காட்டுவதும் ஆங்கிலத்தை விட்டுத் தமிழில் பேசுகிற குழந்தைகளுக்கு அபராதம் போடுகிற ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளி ஆசிரியர்களின் கொடூரமும் மொழி பற்றிய புரிதலின்மை என்கிற ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும். மம்மி, டாடி என்பதெல்லாம் சரி, நீ அம்மா அப்பா என்றுதான் கூப்பிட வேண்டும் என்று அன்பாகக் கூறினால் அக்குழந்தை ஒரே நொடியில் தன்னை மாற்றிக் கொள்ளும். 

ஆங்கிலம் தமிழ்ச் சமூகம் வளர்ந்துள்ளது. ஆங்கிலம் போன்ற ஒரு மொழியின் வளத்தையும் உபயோகத்தையும் அம்மொழி தரும் வாய்ப்புகளையும் தமிழ் தரவேண்டுமென விரும்பும் நாம் ஆங்கிலத்தை ஒதுக்கி வைப்பது கூடாது. இந்தியாவின் எதிர்காலத்தை தொலைநோக்குடன் பார்த்த காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார் போன்றோர் நம்மை அடிமைப்படுத்தியவன் ஆங்கிலேயன் என்ற ஒரு காரணத்திற்காக ஆங்கிலத்தைப் பகைத்துக் கொள்ளுமாறு போதிக்கவில்லை. தலித் மக்களுக்கு ஆங்கிலக் கல்வி அவர்களது பின்தங்கிய நிலைகளிலிருந்து விடுதலையை அளிக்கும் என்று நம்பினார் அம்பேத்கர்.
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான பாரதிக்கு மட்டும் ஏனோ அச்சிறப்பு மிக்க கண்ணோட்டம் வாய்க்கவில்லை. ஆங்கிலக் கல்வியையும் ஏன், தன்னிடம் ஆங்கிலம் பேச வந்த தமிழர்களையும் சினந்தார் பாரதி. ஆங்கிலத் தேர்ச்சி மற்றும் பெற்றிராவிடில் பாரதி நவயுகத்தின் மகாகவியாக ஆகியிருக்க முடியாது என்பது நிச்சயம். ஷெல்லி, வால்ட் விட்மன் ஆகியோரின் நேரிடையான பாதிப்புகளுக்கு மட்டுமின்றி அவரது கவிதைகளில் இடம்பெற்ற முன்னோடியான சிந்தனைகளுக்கும் அவரது ஆங்கில அறிவே காரணம். கவிஞராக மட்டுமல்ல, ஒரு பத்திரிகையாளராக பாரதி ஆங்கில அறிவினால் அடைந்த பயன்களும் ஏராளம். ஆனால் பாரதி உட்பட அனைத்துத் தமிழர்களும் புத்திசாலிகள். அவர்கள் ஒருபோதும் மெய்யாக ஆங்கிலத்தைப் பகைத்துக் கொள்வதில்லை. தலைவன் முதல் தொண்டன்வரை ஆங்கிலத்திற்கு எதிராகப் பொது வெளிகளில் பேசுகிற அனைவரும் ஆங்கிலம் மீது விருப்பு கொண்டவர்கள். தங்கள் பிள்ளைகள் நன்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதில் உறுதியானவர்கள். ஒரு பக்கம் வாழ்க்கை வெற்றிக்குத் தேவையான ஆங்கில அறிவை அடையும் முயற்சி. இன்னொரு பக்கம் தமிழ் பின்தங்கிவிடக்கூடாது என்று எண்ணிச் செயல்படுகிற தவிப்பு. இவைதான் தமிழனின் இன்றைய நிலை.

தமிழ் அசாதாரணமானதும் அற்புதமானதுமான ஒரு மொழி என்பதில் சந்தேகம் இல்லை. இத்தனை ஆயிரம் வருடங்களாக அது எத்தனையோ இடர்களைக் கடந்து இன்றும் இளமையுடன் தோன்றுகிறது. உலக ஓட்டத்துடன் தமிழ்  தன்னைச் சளைக்காமல் இணைத்துக் கொள்கிறது. எந்த மொழியில் புதிய சொல்லாக்கங்கள் ஏற்பட்டாலும் அதற்குத் தமிழில் தக்க ஒரு சொல்லை உருவாக்கிவிட முடிகிறது. ஆனால் இதனால் நாம் எதையோ இழக்கிறோமோ என்றும் தோன்றுகிறது. ஆங்கில வழியில் வரும் சொற்கள் தான் தமிழில் மிகுதியாக இவ்வாறு மறு ஆக்கம் செய்யப்படுகின்றன. ஆங்கிலப் பதங்களுக்கு தமிழ்ச் சொற்களை உருவாக்குவது என்றில்லாமல் சுயமாக ஒரு கருத்துக்குத் தமிழில் சொல்லாக்கம் செய்வது என்பது அரிதாக உள்ளது. அவ்வாறு சமீபத்தில் வெற்றிகரமாகப் பெறப்பட்ட ஒரு சொல் திருநங்கை. நேரிடையாக பல ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. குதிரை பேரம், பங்குச் சந்தை வார்த்தைகளான கரடி, காளை, தொங்கு பாராளுமன்றம், ஓடு தடம், மென்பொருள், அலை வரிசை, கறுப்பு ஆடு, நீர்வீழ்ச்சி, தொலைக்காட்சி இப்படி ஏராளமான சொற்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை நேரிடையாக இல்லாமல் பொருளை உள்வாங்கி உருவாக்கப்படும் சொற்களும் உள்ளன. நகை, முரண், புகைப்படம், பேருந்து, காசோலை, கணினி, வானொலி போன்ற பல சொற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

அவ்வாறு இருவகையிலும் உருவாக்கப்பட்ட சொற்கள் கலைச் சொற்கள் போன்றவை. தமிழ் எழுத்து நடையில் இத்தகைய சொற்கள் நாளும் பெருகி வருவதைப் பார்க்க  முடிகிறது. இன்னும் சில  ஆண்டுகளில் இத்தகைய சொற்களின் வரத்து அதிகமாகி எழுத்து தமிழ் உருவாக்கப்பட்ட சொற்களின் கோவையாக விளங்கக்கூடும். பேச்சுத் தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் மேலும் இடைவெளி இதனால் அதிகமாகும் என்பதோடு மட்டுமின்றி, இது நாள் வரை தமிழ் மொழி என்பது வாழ்விலிருந்து பெறப்பட்டது என்கிற வழக்கிலிருந்தும் மாறுபட்டதாகி தமிழுக்கு செயற்கைத் தன்மை வந்து சேரும். இது தமிழ் மட்டுமின்றி பிற இந்திய மொழிகளுக்கும்கூட பொருந்தும்.

இதற்கெல்லாம் காரணம் தமிழர்களாகிய நாம் உலகை ஆள்வதில் பங்கேற்பதில்லை என்பதுதான். பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் முன்னோடி அங்கம் ஏற்பதில்லை என்பதில் மட்டுமல்ல, அறிவு சார்ந்த இயக்கங்களையும் நாம் உருவாக்குவதில்லை. தமிழில் இலக்கியம் தவிர புதிதாக எதுவும் படைக்கப்படுவதில்லை. கண்டுபிடிப்புகள், கருத்தாக்கங்கள் அனைத்தும் நமக்கு மேற்கிலிருந்து வருகின்றன. நாம் அவற்றை நம் மொழியில் செவ்வனே பொருத்திக் கொள்கிறோம். அதற்கேற்ப மாற்றுச் சொற்களை உருவாக்கிக் கொள்கிறோம். சுயமாக கண்டுபிடிப்புகளும் கருத்தாக்கங்களும் தமிழர்களால் செய்யப்பட்டு அவை தமிழில் பதிக்கப்படும் வரை இந்த வறுமை நீடிக்கும். அதுவரை கோடிக்கணக்கானவர்களின் அன்றாட மொழியாகத் தொடர்ந்தாலும் தமிழ், மொழி சார்ந்த பெருமையில்தான் திளைக்க வேண்டியிருக்கும். நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானிகளான சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் ஆய்வுகளைத் தமிழிலும் எழுதி வெளியிட்டிருந்தார்களேயானால் இந்த நிலைமை மாறியிருக்கும். இனிவரும் காலங்களில் பல்துறை சார்ந்த தமிழ் அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளை ஆங்கிலத்தில் வெளியிடுகிற அதே சமயத்தில் சற்றும் காலம் தாழ்த்தாது தமிழிலும் வெளியிட்டால் அது ஒரு முன் மாதிரியான முயற்சியாகத் தமிழை உலகத்திற்கு எடுத்துச் செல்கிற செயலாக இருக்கும். இவ்வாறு செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை, விருது என்றெல்லாம் எதுவும் தரப்பட வேண்டியதில்லை. இயல்பான தமிழ் உணர்வு எல்லா தமிழர்களிடமும் செயல்பட வேண்டும். 

தமிழை மற்ற மொழிகளுடன் குறிப்பாக, ஆங்கிலத்துடன் போட்டியிடும் மொழியாகப் பாவிப்பதனால் தான் பல பிரச்சினைகள் எழுகின்றன. வேலை வாய்ப்புக்கும் வெளி உலகத் தொடர்புக்கும் தமிழ்  உபயோகமாக இருக்குமா என்ற கோணத்தில் தமிழைப் பார்க்கக்கூடாது. அவ்வாறு தமிழ் இல்லாத பட்சத்திலும் தமிழ் நம் மொழி, அதை நன்கு கற்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும். தமிழ்நாட்டிற்குள் மட்டும் செயல்படுகிற நீதிமன்றங்கள், அரசு நிர்வாகங்கள் ஆகியன தமிழில் இருக்க வேண்டும்.

வருங்கால சந்ததியினருக்கு தமிழின்பால் தன்னார்வத்தை தூண்டுமாறு இன்றைய தலைமுறையினர் செய்யவேண்டும். தமிழ் படிக்க வரும் மாணவர்களை வேதனைப்படுத்தக்கூடாது. கடினமான தமிழைப் படிப்பதைவிட பிரெஞ்சு, வடமொழி ஆகியவற்றைப் படித்தால் சுலபமாக மார்க் வாங்கிவிடலாம் என்ற யதார்த்தத்தை மாற்றும் வகையில் தமிழ் படிப்பும் சுலபமாக இருக்க வேண்டும். தமிழை வைத்து தமிழ் மாணவர்களையே மிரட்டினால் பின்னர் அதைப் படிக்க வேறுயார் வருவார்கள்? பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இன்று இருப்பது போல் வெறும் இலக்கிய, இலக்கணப் படிப்பாக மட்டும் தமிழ் இருக்கக் கூடாது.

தமிழ் அதிகாரப்பூர்வ செம்மொழியாகி விட்டபடியால் உலகெங்கிலுமுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதை அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்றில்லாது வசதி படைத்த தனியார்களும் செய்ய விரைந்து முன்வரலாம். தமிழைப் பரப்புவது என்பது தமிழைத் தமிழர்களின் எல்லைக்கு அப்பால் கொண்டு செல்வதாகும். தமிழைத் தமிழர் மட்டுமே படிப்பது, எழுதுவது என்றில்லாது தமிழைத் தமிழ் அல்லாதோரும் அறிந்து கொள்ளுமாறு செய்யவேண்டும். அதுவே தமிழருக்கும் தமிழுக்கும் பெருமை!. 

நன்றி: உயிர்மை செப் 2010

இசை நினைவுகள் - அசோகமித்திரன்


சிகந்தராபாத் மார்க்கெட் தெருவில் ஜம்ஷட் ஹால் எப்படி வந்தது? மார்க்கெட் தெரு சிகந்தராபாத் மார்க்கெட்டையும் 'கிளாக் டவர்' என்னும் கடிகாரத் தூண் பூங்காவையும் இணைப்பது. இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் ஏற்கெனவே மங்கலாக எரியும் தெரு விளக்குகளுக்குப் பாவாடை போன்றதைப் பொருத்தி வெளிச்சமே தெரியாது செய்துவிட்டார்கள். காரணம், ஜப்பான் எந்த நேரமும் எந்த இடத்திலும் குண்டு வீசக்கூடும்.

மார்க்கெட் தெருவில் முதல் ஐம்பது அடிகளுக்கு இருபக்கமும் கடைகள். அதன் பிறகு வீடுகள்தான். கடிகாரத் தூண் அருகே ஒரு ஹால் இருந்தது. அது மஹபூப் காலேஜைச் சேர்ந்தது. அங்கே எப்போதாவது உரை நிகழ்த்தப்படும்.

ஜம்ஷட் ஹால், மார்க்கெட் தெருவில் வீடுகளுக்கு நடுவே இருந்தது. அந்தக் கட்டடத்துக்கு நீலவண்ணம் அடித்திருப்பார்கள். கீழே என்ன இருந்தது என்று தெரியாது. மாடியில் சுமார் இருநூறு பேர் உட்காரக்கூடிய பெரிய அறை. அந்த அறையின் முக்கியச் சங்கடம் நான்கு பெரிய தூண்கள். அந்த அறையில் நிகழ்த்தப்படும் நாடகத்துக்கோ இசைக் கச்சேரிக்கோ சற்றுத் தாமதமாக வருபவர்களுக்குத் தூண்களுக்கு பின்னால் இருக்கும் நாற்காலிகள்தான் கிடைக்கும். நிகழ்ச்சி முடியும்வரை அவர்கள் இப்பக்கமும் அப்பக்கமுமாக எட்டிப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

அப்படித்தான் நானும் என் அப்பாவும் தண்டபாணி தேசிகர் கச்சேரியைக் கேட்டோம். ஜகந்நாத பக்த சபா என்ற அமைப்பு, அக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆண்டுக்கு இரண்டு ரூபாயோ ஐந்தோ சந்தா. அது ஏழைகள் சபா என்று அறியப்பட்டது. பெரிய மனிதர்கள் சபா கிருஷ்ண கான சபா என்று ஹைதராபாத்தில் இருந்தது. அவர்கள் வருடாவருடம் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் பெரிய கச்சேரிகள் நிகழ்த்துவார்கள். அங்கு எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் கச்சேரி செய்ய வருவார்கள். அவருக்கு மட்டும் ஆயிரம் ரூபாய்.

தண்டபாணி தேசிகருக்குச் சில நூறு ரூபாய்தான் கொடுத்திருப்பார்கள். அதற்கு ஈடுசெய்வதுபோல்

மஹபூப் காலேஜ் பிரின்சிபால் கோடீசுவரன் அழகாக அறிமுகம் செய்து பாடகர்களைக் கௌரவிப்பார். நான் அவர் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று எப்படி எப்படியோ நெளிவேன். ஆனால் அவர் பார்த்துவிடுவார். திடீர் திடீரென்று பொது இடங்களில் என்னைப் பாடச் சொல்லி என்னை நடுநடுங்க வைப்பது அவருக்குப் பிடித்தமான செயல்.

அந்த 1944ஆம் ஆண்டு தண்டபாணி தேசிகர் புகழேணியின் உச்சியில் இருந்தார். சிகந்தராபாத்தில்கூட அவருடைய 'நந்தனார்' திரைப்படம் ஒரு மாதம் ஓடிற்று. திரைப்படத்தில் மூன்று சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுக்க 'ஆனந்த விகடன்' ஒரு போட்டி அறிவித்திருந்தது. முதல் பரிசு பத்தாயிரம் ரூபாய்.

தண்டபாணி தேசிகர் உரத்தே பாடமாட்டார். செம்பை, மகாராஜபுரம்போல உடலையும் தலையையும் ஆட்ட மாட்டார். மிகத் தெளிவான தண்ணீர் ஓடைபோல அவரிடமிருந்து இசை பொழியும். அவரும் ராக ஆலாபனம், சுவரம் எல்லாம் பாடுவார். ஆனால் அலட்டலே கிடையாது.

அன்று ஜம்ஷட் ஹாலில் அவருடைய கச்சேரியைக் கேட்டவர்கள் கொடுத்துவைத்தவர்கள். பல சம்பிரதாயக் கீர்த்தனைகளை எல்லாம் பாடிவிட்டு அவர் 'ஐயே மெத்தக் கடினம்' பாடினார். அந்தப் பாட்டைக் கேட்டு உருகாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

கச்சேரி முடியப்போகும் தருணத்தில் கோடீசுவரன் பேச வந்தார். அவர் பரம பக்தர். நல்ல ரசிகர். சுருக்கமாக, ஆனால் மனநிறைவு ஏற்படும் வகையில் பேசித் தேசிகருக்கும் இதர இசைக் கலைஞர்களுக்கும் மாலை அணிவித்தார்.

இன்றைக்கு அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோடீசுவரன் தேசிகருக்குப் பின்பாட்டுப் பாடிய இளைஞரை விசேஷமாகப் பாராட்டினார். அடுத்தமுறை அந்த இளைஞரே தனிக் கச்சேரி செய்பவராக இருப்பார் என்றார். அந்த இளைஞர் மதுரை சோமு.

நான் இதெல்லாம் மறந்துவிட்டேன். தேசிகர் கச்சேரி நடந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு சார்லஸ் ரயர்ஸன் என்ற அமெரிக்க ஆய்வாளர், தான் உடன் அழைத்துவந்த அமெரிக்க மாணவர்களுக்கு, மதுரை சோமு கச்சேரிக்கு ஏற்பாடுசெய்திருந்தார். அன்று எவ்வளவோ பாடகர்கள் சோமுவைவிடப் புகழ்பெற்று இருந்தார்கள். ஆனால் சார்லஸ் ரயர்ஸன் அந்த ஆண்டு என்றல்ல, ஒவ்வொரு ஆண்டும் அவர் அழைத்துவரும் ஆய்வாளர் குழுவுக்கு மதுரை சோமு கச்சேரிதான் ஏற்பாடுசெய்தார். நானும் போயிருந்தேன். ஒரு விஷயத்தை அமெரிக்கர்கள் கவனித்தார்களா என்று தெரியாது. சோமு பாடும்போது அவர் உடல் அனைத்தும் அப்பாட்டில் ஈடுபட்டிருக்கும். "அவருடைய கச்சேரியைக் கேட்பது ஓர் உணர்ச்சிகரமான அனுபவம்" என்று சார்லஸ் ரயர்ஸன் கூறுவார். சோமு பாடும்போது என் நண்பர் உடலெல்லாம் சிவந்துவிடும். அப்படி ஒரு உறவு அவருக்குச் சோமுவின் இசையோடு இருந்தது.

சார்லஸ் ரயர்ஸன் பற்றிச் சில வார்த்தைகள் கூற வேண்டும். அவர் அங்கி அணியாத மதப் போதகர். (இதற்குப் பட்டப் படிப்பு, உயர் பட்டப் படிப்பு எல்லாம் உண்டு.) இந்தியாவில் அவருக்கு நங்கூரமாக இருந்தது மதுரை அமெரிக்கன் கல்லூரி. அவருடைய ஆய்வுத் தலைப்பு 'தமிழகத்தில் எதிர்ப் போக்குகள்'. அவருடைய முதல் வழிகாட்டி திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி. சார்லஸ§க்கு அவரோடு ஆங்கிலத்தில் விவாதம் புரியக் கிடைத்தவர்கள் நானும் என் போன்ற ஐந்தாறு பேரும். நட்பு தோன்றவும் இருப்பார், நம்பவும்மாட்டார். இப்போது அவருக்கும் வயது எழுபதுக்கு மேலாகிவிட்டது. அவருடைய வீட்டைவிட்டு நகர முடியாதபடி பருமனாகிவிட்டார். இப்போதும் ஆண்டுக்கு இரு முறையாவது கடிதம் கையெழுத்தில் எழுதுவார். அவருக்கு இன்னும் இரு நண்பர்கள் - தியடோர் பாஸ்கரன், எஸ்.வி. ராஜதுரை - உள்ளார்கள்.

உணர்ச்சிகரமான இசை என்பதை ஓரளவு நான் சோமுவின் முதிர்ந்த காலக் கச்சேரிகளைக் கேட்டுத்தான் ஒருமாதிரி புரிந்துகொண்டேன். தென்னிந்திய முன்னணிக் கலைஞர்கள் மிகவும் சிறப்பாகப் பாடுவார்கள். ஆனால் அநேகமாக எல்லாருமே சபையையும் பக்கவாத்தியக்காரர்களையும் கவனத்தில் இருத்தியே பாடுவார்கள். இவ்வளவு ஏன் புன்சிரிப்பு செய்ய வேண்டும் என்றுகூட நான் நினைத்திருக்கிறேன். அது கர்நாடக இசையின் இயல்போ என்று தோன்றுகிறது.

இப்போது சோமு பாட்டைக் கேட்க முடியாது. ஆனால் பாடும்போது தன் முழு உடலுடன் பாடுபவர்கள் இருக்கிறார்களோ? வேப்பத்தூர் கிட்டு என்று எனக்கொரு நண்பர் இருந்தார். ஒருமுறை இரு நடிகைகள் பற்றிப் பேச்சு வந்தது. இந்தியில் நடித்த தென்னிந்திய நடிகை பற்றி அவர் சொன்னார். "பாருங்கள், அவர் தன் வருங்கால மாமனாரைப் பார்க்க வருகிறார். முகம் மட்டுமல்ல, உடலெல்லாம் அந்த உணர்வைக் காட்டும், பாருங்கள்," என்றார்.

உடலெல்லாம் உருகப் பாடுபவர்கள் பஜனைத் துறையில் இருக்கிறார்கள். "பாண்டுரங்கா, பாண்டுரங்கா" என்று அவர்கள் உடலெல்லாம் அந்த விட்டலனைக் கோரி உருகும்.

வட இந்திய இசை உணர்ச்சிபூர்வமானது என்பார்கள். அது ஓரளவு உண்மை. எல்லாக் கலைஞர்களும் தம்மை மறந்து தலை முதல் பாதம் வரை இசையில் கரைந்து பாடுவதில்லை. நான் பார்த்து படேகுலாம் அலிகான் அப்படித்தான் மெழுகாக உருகுவார். சாகித்யமென எடுத்துக்கொண்டால் அது ராதை, கிருஷ்ணன், யமுனா தீரம் என்று இருக்கும். ஆனால் அவர் ராதையாக முறையிடும்போது எங்கோ ஒரு முலையில் அவருக்குக் கண்ணன் தோன்றிக்கொண்டிருப்பார் என்றுதான் நினைக்கிறேன்.

பிஸ்மில்லாகான் அந்தக் கீச்சுக் கீக்சு ஷெனாய் வாத்தியத்தில், இதைச் சாத்தியமாக்கிவிடுவார். காசியில் வசித்த அவருக்குச் சிவன், பார்வதி தோன்றிக் கொண்டிருப்பார்களோ?

மியூசிக் அகாடமி கட்டடம் கட்டிக் கச்சேரிகள் நடக்கத் தொடங்கிய பின், ஒவ்வொரு ஆண்டும் ரவி ஷங்கர் வருவார். எனக்குக் கிருஷ்ணானந்த் என்றொரு வட இந்திய இசைப் பாடகர் நண்பர். நான் அவர் மூலம் ரவிஷங்கர் கக்சேரிக்கு வரிசையாக நான்கைந்து ஆண்டுகள் சென்றிருக்கிறேன். இரவு பத்து மணிக்குக் கச்சேரி தொடங்கும். முதலில் ஒரு சுவரத்தைத் தாண்டி அடுத்ததற்கு வரப் பத்து நிமிடங்களாவது ஆகும். ஒரு ராகத்தின் முழு சுவரங்களையும் கொண்டு அவர் விஸ்தரிக்க ஒரு மணி நேரம் ஆகும். அதன் பிறகு உங்கள் மூளையே ஸ்தம்பித்துவிடும் வேகத்தில் இசை பெருகி ஓடும். 'கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம்' என்று சொல்லலாம். ஆனால் திடீரென்று ரவி ஷங்கர் நம்மைக் கீழே தள்ளிவிடுவார். சிதார் வாசிப்பதை நிறுத்தி, "நண்பர்களே, உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்" என்று அறிவிப்பார். டிசம்பர் முடிந்து ஜனவரி இரவு 12 மணிக்குப் பிறந்திருக்கும். கொட்டகையில் அநேகமாக எல்லாரும் கரகோஷம் செய்வார்கள். எனக்கு ஏமாற்றமாக இருக்கும். அடுத்த ஆண்டு ரவிஷங்கர் கச்சேரிக்குப் போகக் கூடாது என்றுகூட நினைத்திருப்பேன். ஆனால் அடுத்த ஆண்டு நான் போகத் தவறவில்லை. எனக்கு அவருடைய சினிமா நட்சத்திரப் போக்கு பிடிக்காமலிருக்கலாம். ஆனால் மகத்தான கலை அவரிடமிருந்தது. எனக்குக் குறை என்று தோன்றியதை நான் ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?

புளூட்மாலிக்கு எனக்குத் தெரிந்து இரு சிஷ்யர்கள். ஒருவர் உலகமறிந்த ரமணி. இன்னொருவர் அகில இந்திய வானொலியில் தன்னைக் கரைத்துக்கொண்ட ஸ்ரீனிவாசன். இருவரும் எனக்கு நண்பர்கள் என்றாலும் ஸ்ரீனிவாசன் அநேகமாக என்னைத் தினமும் பார்க்க வந்துவிடுவார். என்னுடைய ஆங்கில நாடகங்களை அவர்தான் முதலில் படிப்பார். அப்போதுதான் டேப் ரிக்கார்டர்கள் வர ஆரம்பித்த காலம். ஸ்ரீனிவாசனுக்கு அவரே புல்லாங்குழல் வாசித்து அதற்கு அவரே மிருதங்கமும் வாசிக்க முடியுமா என்று பரிசோதித்துப் பார்க்க ஆசை. அப்போது ஆர்.ஏ. பத்மநாபன் (ஆம். 'சித்திர பாரதி' பத்மநாபன்தான்) அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு டேப் ரிக்கார்டர் உண்டு. நானும் ஸ்ரீனிவாசனுமாக அவரிடம் சென்று, எங்கள் பரிசோதனை பற்றிச் சொன்னோம். அதாவது முதலில் ஸ்ரீனிவாசன் குழல் வாசித்துவிடுவார். பிறகு அதே காஸட்டைத் திரும்பப் போட்டு மிருதங்கம் வாசிப்பது. உண்மையில் இந்த உத்தி திரைப்பட ஒலிப்பதிவில் சாதாரணமாகப் பயன்படுத்துவது. ஆனால் டேப் ரிக்கார்டரில் குழலொலி அழிக்கப்பட்டு, வெறும் மிருதங்க வாசிப்புத்தான் கேட்டது. இரண்டு டேப் ரிக்கார்டுகள் இருந்தால் அது சாத்தியம். ஆர். ஏ. பத்மநாபன் அலுவலகத்தில் ஒரு கருவிதான் இருந்தது என்று கூறிவிட்டார். ஸ்ரீனிவாசன் மூலம்தான் பி.எஸ். ஹைஸ்கூல் என்பது பென்னத்தூர் சுப்பிரமணிய அய்யர் பள்ளி என்று எனக்குத் தெரியவந்தது. ஸ்ரீனிவாசன், சுப்பிரமணிய அய்யருடைய பேரன். அவர்கள் வீடு டி.டி.கே. சாலையில் மியூசிக் அகாடமிக்கு எதிர்ச்சாரியில் இருந்தது.

நடிகர் ரஞ்சனுடைய சகோதரர் வைத்தியநாதனும் புல்லாங்குழல் வாசிப்பார். அவர் மேலைய சங்கீதத்திலும் குறிப்பாக, பியானோ வாசிப்பதிலும் மிகுந்த தேர்ச்சிபெற்றவர். அவர் புல்லாங்குழலுக்கு இணையாக இன்னொரு இசைக் கருவி கிடையாது என்பார். "எவ்வளவு எளிமையானது! ஓரடி மூங்கில், அவ்வளவுதான். மேலும் எங்கு வேண்டுமானாலும் ஒரு சிரமம் இல்லாது எடுத்துச் செல்லலாம். பியானோவையோ வீணையையோ அப்படி எடுத்துச்செல்ல முடியுமா? ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சுருதியில் ஒலியெழுப்பிச் சங்கடப்படுத்தும்" என்பார்.

இந்திய இசையில் பக்திதான் பிரதானம். இறையுணர்வுதான் சிகரங்களை எட்டவைத்தது. எனக்குத் தெரிந்து அரசியல் சார்புடைய இசை நிபுணர்களையும் கேட்டிருக்கிறேன். அவர்களும் தியாகய்யர் கிருதி வாசிக்கும்போது அவர்கள் தோற்றமே மாறிவிடும்.

மேலைய சங்கீதத்தில் சில பிரிவுகளே இறையுணர்வோடு தொடர்பு கொண்டவை. பதினெட்டு-பத்தொன்பதாம் நூற்றாண்டில் கொடூரமாகவும் ஈவிரக்க மற்றும் ஆப்பிரிக்கர்களை விலங்குகள்போலக் கடத்திக் கூண்டிலடைத்து, அமெரிக்காவில் பெரிய எஸ்டேட்டுகளில் அடிமைகளாக உழைக்கவைத்தார்கள். அவர்களைக் கிறித்துவர்களாக மதமாற்றி அவர்களுக்குத் தனிச் சர்ச்சும் ஏற்படுத்திவிட்டார்கள். அந்த அடிமைகள் ஒரு தனிப் பிரிவாக ஒரு இசையை உருவாக்கினார்கள். அது 'புளூஸ்' என்று பெயரிடப்பட்டது. அந்த ஆப்பிரிக்கர்கள் மனதார ஏங்கிக் கதறுவார்கள். அந்தச் சோகம் வயிற்றைக் கலக்கும். இன்றும் 'புளூஸ்' இருக்கிறது. ஆனால் அந்தச் சோகம் இருக்குமா என்று உறுதி கூற முடியாது.

நன்றி - காலச்சுவடு 2008

ஆத்மாநாம் கவிதைகள் - சுந்தர ராமசாமி


ஆத்மாநாமின் மறைவும், அவர் மறைந்த விதமும் அவரது கவிதைகளைப் பற்றி சற்றுத் தூக்கலாகப் பேச நம்மைத் தூண்டிற்று என்று நினைக்கிறேன். பிரிவின் கொடுமையை எதிர் கொள்ளும் தருணங்களில் மிகை எப்போதும் தவிர்க்க முடியாததாகவே இருந்திருக்கிறது. அவர் நம்மை விட்டுப் பிரிந்து இப்போது ஒன்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன. அவர் கவிதைகளும் நம் இலக்கியத்தின் ஒரு பகுதியாகி விட்டது. இன்று அவரைப் பரிசீலனை செய்ய இந்த இடைவெளி நமக்கு உதவக்கூடும்.

ஒவ்வொரு கவிஞனும் தான் அழிந்த பின்னும் தன் கவிதைகள் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறான். 'என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்க இயலாது ' என்றார் ஆத்மாநாம். என்னை அழித்தும் என்னை அழிக்க இயலாது என்றும் சொல்லியிருக்கிறார். அது சரிதான். அவருடைய் சாரம் இன்றும் நம்மிடம் இருக்கிறது. அவருடன் உறவாட முடிகிறது. இந்த நேரத்தில் ஆத்மாநாமின் கவிதைகளை முழுமையாகவும் சிறப்பாகவும் பதிப்பித்து தந்திருக்கும் பிரம்மராஜனின் பணியை நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.

புதுக் கவிஞர்களில் பிரக்ஞைபூர்வமான கவிஞர்கள் மிகக்குறைவு. ஆத்மாநாம் பிரக்ஞைபூர்வமானவர். தன் செயல்பாடுகள் குறித்தும் தான் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் அவருக்கு யோசனைகள் இருந்திருக்கின்றன. காலத்தின் வரிசையில் கடைசியாக தன்னிடம் வந்து சேர்ந்திருக்கும் கவிதைகளின் பொதுக் குணத்தை பிரதிபலித்தல் இவருக்கு இயற்கையாக இல்லை. தன்னுடைய கவிதைகளை கண்டுபிடிக்கும் முயற்சியாகவே இவர் கவிதைகள் இருக்கின்றன. ஞானக்கூத்தனின் ஆரம்பகாலக் கவிதைப் போக்கை பிரதிபலித்து இவர் எழுதியுள்ள 'இன்னும் ' என்ற தலைப்பிட்ட கவிதையில்தான் இவர் சுத்தமாக இல்லாமல் இருக்கிறார். மற்றக் கவிதைகளில் - மொத்தம் 143 கவிதைகள் - இவரது ஆளுமை, பலவற்றில் மங்கலாகவும் ஒரு சிலவற்றில் மிகச் சிறப்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. பிரதிபலிப்பு படைப்பாகாது என்ற விழிப்பு இவரிடம் கூர்மையாக செயல்பட்டிருக்கிறது.

வாழ்நிலையில் தான் பெற்ற அனுபவங்களை கவிதை மூலம் இவர் ஆராய்ந்து கொண்டே போகிறார். தன்னை அறிந்து தன் பார்வையைத் தெளிவு படுத்திக் கொள்ளும் முனைப்பு இது. இந்த தெளிவு கூடிவரும் வகையை உணருவது இன்று சிரமமாக இருக்கிறது. இவரது கவிதைகளை கால வரிசைப்படுத்தித் தர பிரம்மராஜனுக்குச் சாத்தியப்பட்டிருக்கும் என்றால் இவர் பெற்றுள்ள வளர்ச்சியை இன்னும் துல்லியமாக நாம் மதிப்பிட்டிருக்க முடியும்.

சுதந்திரம் மனித ஆளுமைக்கு தரும் விகாசம், வாழ்நிலை சார்ந்த அபத்தங்களும் கேவலங்களும் தரும் வருத்தம், மனிதனை ஆசுவாசப்படுத்தக் காத்துக் கொண்டிருக்கும் இயற்கை, நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம், இவை சார்ந்த உணர்வுகள் அவர் கவிதைகளில் அழுத்தம் பெறுகின்றன. தன் கவிதைகள் மூலம் ஒரு உயர்நிலை பாதிப்பை நிகழ்த்த வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருந்தார் இவர். இதனால் தன் கவிதை மொழி தன் சக மனிதனுக்குப் புரிய வேண்டும் என்பதில் அவருக்கு கவனம் இருந்தது. ஏற்கும் புதுமையின் பொருள் என்ன என்பதிலும் இந்த மண் சார்ந்து அதன் பொருத்தம் என்ன என்பதிலும் அவர் கவனங்கள் கொண்டிருந்தார்.

மேற்கத்திய சோதனைகளின் பிரமிப்புகள் மீது அல்ல; உலக இலக்கியத்தின் தரம் மீதே இவர் பற்றுக் கொண்டிருக்கிறார். பழைய கவிதைகளின் அலங்காரங்கலை புறக்கணித்த புதுக்கவிதைகள் மூலம் உறுதிப்பட்டு வந்து கொண்டிருந்த புதிய அலங்காரங்களையும் இவர் புறக்கணித்திருக்கிறார். பேச்சு அல்லது கடிதங்களில் நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு மேற்பட்ட 'கவிச்சொற்கள் ' அவர் கவிதையில் இல்லை. கவிதைக்குரிய வலுக்களாகக் கருதப்படும் உவை, உவமேயம், படிமங்கள் இவற்றின் மீது சார்ந்து நிற்காமல் -இயற்கையாக கூடிவருவது வேறு- அர்த்தங்கள் தரும் அனுபவ அலைகளை நம்பி கவிதைகளை எழுதியிருக்கிறார். அநேக கவிதைகளில் குழாயின் ஒரு நுனியிலிருந்து மறு நுனிக்கு தண்ணீர் ஓடி இறங்குவது போல முதல் வரியிலிருந்து கடைசி வரிக்கு அர்த்தம் விரைந்து ஓடுகிறது. ஒரு சில கவிதைகளில் முன் பகுதியும், பின் பகுதியும் தொடர்பின்றி பிளந்து கிடக்கின்றன. இது வாசிப்பு சார்ந்த நம் குறையாகவோ அல்லது நோயுற்ற காலங்களில் கவிஞருக்கு ஏற்பட்ட தடையாகவோ இருக்கலாம்.

ஆத்மாநாமின் அநேக கவிதைகள் குறிக்கோளைச் சென்றடையவில்லைதான். நிறைவான கவிதையை அடைய முன்னுவதும் குறையாக அவை முடிந்து போவதும் கவிதைத் தொழிலின் விதி என்று கூறும் அளவுக்கு மிகச் சிறந்த கவிஞர்கள் கூடி வராமலேயே கவிதையை முடித்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.

ஆனால் ஆத்மாநாமின் கவிதைகளில் அலங்காரத்தினால் தடைபட்டவை என்றோ பிரமிப்பினாலோ மயக்கத்தினாலோ செயற்கையினாலோ இருப்பை மிகைப்படுத்திக்காட்ட விரும்பியதினாலோ தடைபட்டவை என்றோ அதிகம் இல்லை. அனுபவத்த்தில் மனம் இழையும் பயணம் எந்தப் புள்ளியில் கவிதையின் உடலாக மாறுகின்றது என்ற கேள்விக்கு திட்ட வட்டமான பதில் இல்லை. அநேக கவிதைகளில் இந்த உடல் உயிராக மாறும் காரியம் அவருக்கு நடக்கவில்லை.
கவிஞரான ஆத்மாநாமை அவர் வாழ்ந்த காலத்தின் நேர்மையான மனிதன் என்றும் சொல்லலாம். இது அபூர்வமான தகுதி. அவருடைய தொடர்புகள் சிறு வட்டத்தினுள் இருந்திருக்கலாம். உடல், காலம் இடம் சார்ந்த வரையறை கொண்டது. ஆனால் அவருடய கனவுகளின் எல்லை மேலான கவிதையின் விரிந்த தளத்தில் இருந்தது. மேலான கவிதையை மேலான வாழ்விலிருந்து பிரிக்க இயலாத லட்சியவாதியாகவும் அவர் இருந்தார்.

அவரது கவிதைகள் அவரது அனுபவ சாரங்களின் நாட்குறிப்புப் போல இருக்கின்றன. தன் அனுபவங்களை தான் விளங்கிக் கொண்ட விதத்தை சக மனிதனிடம் - மக்களிடம் அல்ல - அநேக சமயங்களில் ஒரு நண்பனுக்குச் சொல்லும் விதமாக - இவர் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். ஒலி பெருக்கியால் எழுதாமல் தன் மனதால் எழுதிய கவிதைகள் சக மனிதனின் கரங்களைப் பற்றிக் கொண்டு அவன் காதோடு சொல்லும் வரிகளுக்குரிய அந்தரங்கத்தோடு இருக்கின்றன. அந்த வரிகள் பொருட்படுத்தத் தகுந்தவை என்றால் தன்னுடைய நண்பனிடம் அவன் இந்த வரிகளைச் சொல்வான். ஒரு மனதிலிருந்து மற்றொரு மனதிற்கு கவிதை இப்படித்தான் தவழ்ந்து செல்கிறது.
மென்மையான கவிஞர் என்று இவரைச் சொல்லலாம். இவருடைய ரீங்காரம் தான் மென்மையானதே தவிர ரீங்காரத்துக்கு ஆதாரமான கம்பி - உள்பலம்- வலிமையானது. சுயத்தின் மீது நம்பிக்கை கொண்ட உள்பலம் இது. தன் அனுபங்களை சதா அசை போடுவதில் கூடிவரும் உள்பலம். அனுபவங்களின் சாரங்களை அறிய தனக்கு உகந்த தயாரிப்புகளிலும் இவர் கவனம் கொண்டிருந்தார். படிப்பும், தொடர்புகளும், விவாதங்களும், இதனால் காலத்தைப் பற்றிய உணர்வு இவருக்குச் சாத்தியமாயிற்று. கூடிவராத கவிதைகளில் கூட காலத்துக்கும் கவிதைக்கும் இடையே பழமையின் களிம்பு இல்லை.

பிறப்பு, வளர்ப்பு, தேசம், மொழி, ஜாதி, மதம் இவற்றின் குறுகல்கள் தாண்டிய முகம் இவருடையது. இதனால் அடையாளங்கள் அற்று வெற்று அம்பலத்தில் வெளிறிப்போன கவிதைகளாக இவருடையவை இருக்கின்றன என்பது இல்லை. ஒரு தமிழ் நகரத்தில் வாழ்ந்த தமிழனின் நவீனக்கவிதைகளாக இவை இருக்கின்றன. இந்தக் கவிதைகளின் வேர் இந்த மண்ணில் இருக்கிறது. இந்த மண்ணின் வேதனை இந்தக் கவிதையிலும் இருக்கிறது.

-1993

நன்றி - திண்ணை