‏إظهار الرسائل ذات التسميات மயிலை சீனி. வேங்கடசாமி. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات மயிலை சீனி. வேங்கடசாமி. إظهار كافة الرسائل

தமிழில் பாளிமொழிச் சொற்கள் - மயிலை சீனி. வேங்கடசாமி

வாணிகம், மதம், அரசாட்சி முதலிய தொடர்புகளினாலே ஒரு தேசத்தாரோடு இன்னொரு தேசத்தார் கலந்து உறவாடும்போது அந்தந்தத் தேசத்து மொழிகளில் அயல்நாட்டுச் சொற்கள் கலந்துவிடுவது இயற்கை. வழக்காற்றிலுள்ள எல்லா மொழிகளிலும் வெவ்வேறு பாஷைச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். இந்த இயற்கைப்படியே தமிழிலும் வெவ்வேறு மொழிச் சொற்கள் சில கலந்து வழங்குகின்றன. இவ்வாறு கலந்து வழங்கும் வேறுமொழிச் சொற்களைத் திசைச்சொற்கள் என்பர் இலக்கண ஆசிரியர்.

தமிழில் போர்ச்சுகீசு, ஆங்கிலம், உருது, அரபி முதலிய அயல்மொழிச் சொற்கள் சில கலந்துவிட்டது போலவே, பாகத (பிராகிருத) மொழிகளில் ஒன்றான பாளி மொழியிலிருந்தும் சில சொற்கள் கலந்து காணப்படுகின்றன. பாளி மொழி இப்போது வழக்காறின்றி இறந்து விட்டது. என்றாலும், பண்டைக் காலத்தில், வட இந்தியாவில் மகதம் முதலான தேசங்களில் அது வழக்காற்றில் இருந்துவந்தது. 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்' எனப் போற்றப்படும் கௌதம புத்தர், இந்தப் பாளி மொழியிலேதான் தமது உபதேசங்களை ஜனங்களுக்குப் போதித்து வந்தார் என்பர். பாளி மொழிக்கு மாகதி என்றும் வேறு பெயர் உண்டு. மகத நாட்டில் வழங்கப்பட்டதாகலின், இப்பெயர் பெற்றது போலும். வைதீக மதத்தாருக்குச் சம்ஸ்கிருதம் 'தெய்வ பாஷை'யாகவும் ஆருகதருக்குச் சூரசேனி என்னும் அர்த்த மாகதி 'தெய்வ பாஷை'யாகவும் இருப்பதுபோல, பௌத்தர்களுக்கு மாகதி என்னும் பாளிமொழி 'தெய்வபாஷை'யாக இருந்துவருகின்றது. ஆகவே, பண்டைக் காலத்தில் எழுதப்பட்ட பௌத்த நூல்கள் எல்லாம் பாளிமொழியிலே எழுதப்பட்டுவந்தன. பிற்காலத்தில், மகாயான பௌத்தர்கள், பாளி மொழியைத் தள்ளி, சம்ஸ்கிருத மொழியில் தமது சமய நூல்களை இயற்றத் தொடங்கினார்கள். ஆனாலும், தென் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய இடங்களில் உள்ள பௌத்தர்கள் தொன்று தொட்டு இன்று வரையில் பாளிமொழியையே தங்கள் 'தெய்வ மொழி'யாகப் போற்றிவருகின்றார்கள். பௌத்த மதம், தமிழ் நாட்டில் பரவி நிலைபெற்றிருந்த காலத்தில், அந்த மதத்தின் தெய்வ பாஷையான பாளி மொழியும் தமிழ் நாட்டில் இடம் பெற்றது.