நூலின் பெருமை
நான்மணிக் கடிகை ஒரு சிறந்த நூல். இதனுள் இன்று 106 வெண்பாக்கள்
காணப்படுகின்றன. நூறு வெண்பாக்கள் தாம் நூலாசிரியரால் பாடப்பட்டிருக்க
வேண்டும். ஆறு வெண்பாக்கள் எப்படியோ வந்து சேர்ந்துவிட்டன.
இவற்றுள் இரண்டு வெண்பாக்கள் கடவுள் வாழ்த்தாக இருக்கின்றன.
இரண்டும் திருமாலைப் பற்றியே கூறுகின்றன இந்த இரண்டும், நூலினுள்
நான்கும், இந்நூலாசிரியரால் பாடப்பட்டவை அல்ல என்றே கொள்ள
வேண்டும்.
நான்மணிக் கடிகை-நான்கு மணிகள் பதித்த ஆபரணம். ஒவ்வொரு
பாடலும் ஒவ்வொரு அணிகலன். அந்த அணிகலன்களிலே நான்கு நான்கு
இரத்தினங்கள் பதித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இதுவே நான்மணிக் கடிகை
என்பதன் விளக்கம்.