‏إظهار الرسائل ذات التسميات ஆர்.சூடாமணி. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات ஆர்.சூடாமணி. إظهار كافة الرسائل

சொந்த வீடு - ஆர்.சூடாமணி

அரண்மனை மாதிரி வீடு என்பார்களே. அதுபோன்ற விசாலமான வீடு. பெரிய பெரிய அறைகள் இரண்டு கட்டு. முற்றம் கூடம் தாழ்வாரம் என்று தினம் ஒரு கல்யாணம் செய்யலாம். ஏன். அவர் பெரிய பெண்ணுக்கு நிஜமாகவே இந்த வீட்டில் வைத்துத்தான் கல்யாணம் நடந்தது.

அரண்மனை ஆனால் வேறொருவரின் அரண்மனை விட்டுப் போகும் காலம் வந்துவிட்டது. சொந்தக்காரன் போகச் சொல்லிவிட்டான்.

அவன் எப்போதோ போகச் சொல்லியிருப்பான்.

கார்த்திகேயன் “நான் சொந்தமா ஃப்ளாட் வாங்கப்போறேன் சார். வாங்கினதும் அங்க போயிடுவோம். சீக்கிரமே ஏற்பாடாயிடும். அதுவரை கொஞ்சம் பொறுத்துக்குங்க. வாடகை வேணும்னாலும் சேர்த்துத் தரேன்.” என்று பேசி கடந்த ஐந்து மாதங்களாக ஆயிரம் ரூபாய் வாடகை தந்து கொண்டிருந்தான். இத்தனை பெரிய வீட்டுக்கு இந்த நாளில் ஆயிரம் ரூபாய் கூட பிச்சைக்காசுதான். ஆனால், பழைய வட்டாரம் “பாஷ் லொக்கா-டி” இல்லை. கட்டடமும் “ஹைதர் காலத்து வகை. ஆகவே. முன்பை விடக் கூடுதலான முந்நூறு ரூபாயை வீட்டுக்காரர் ஒப்புக்கொண்டு “வாய்தா” தந்திருந்தார்.

மேலும், இக்குடும்பத்துக்கு வெகு காலம் பழக்கப்பட்டவர். வீட்டைத் தரைமட்டமாக்கி அங்கு அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டி ஒவ்வொரு தளத்தையும் மூவாயிரம். நாலாயிரம் என்ற வாடகையில் கம்பெனிகளுக்கு விடுகிற திட்டத்தைச் சிறிது காலம் இவர்களுக்குத் தள்ளிப்போட இசைந்தார்.

இப்போது கார்த்திகேயன் ஃப்ளாட் வாங்கி விட்டான். அடையாறுக்கு அருகே இடம். தற்கால பாணி வீடு. வாஷ்பேஸின். மேனாட்டு வகை ஃப்ளஷவுட். சுவருக்குள் அமைந்த “வார்ட்ரோப்”. கண்ணுக்குத் தெரியாத மின் இணைப்பு கீஸருக்கு வசதி. மிக்ஸி. கிரைண்டர்களுக்குத் தயாராய் சாக்கெட்டுகள் என்று எல்லாம் உண்டு. புதிய காலனியின் நாகரிகச் சூழல் ஜன்னல்களைத் திறந்தால் “முடியைப் பிய்த்துக் கொண்டு போகிற” கடற்காற்று. கார்த்திகேயனை விடவும் அவனுடைய “டீன் ஏஜ் பெண் ஜோதிக்கு இன்னும் அதிக மகிழ்ச்சி உற்சாகம்.

“அப்பாடா. இனிமே வெக்கப்படாம என் பெரண்ட்ஸயெல்லாம் வீட்டுக்கு இன்வைட் பண்ணலாம்” என்றாள்.

நாகராஜன்தான் சோர்ந்து காணப்பட்டார். தம் அறையில் பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்திருந்தார். பிள்ளை சொந்தமாய் வீடு வாங்குகிறான் என்ற மகிழ்ச்சி. பெருமை எல்லாம். ஆனால் வீடு என்ற சொல் உடனுக்குடன் மனசில் பதிந்தது. அவருக்குப் பழகிய வீட்டு இலக்கணம்தான். பெரிசு பெரிசாய் நிறைய அறைகள். விசாலமான உறைவிடம். காலார வீட்டுக்குள் இரண்டு சுற்று நடந்து வந்தாலே தேகப்பயிற்சி கிடைத்துவிடுகிற விஸ்தாரம்.

பால் காய்ச்சிக் குடிக்க உற்சாகமாய்க் குடும்பத்தின் ரோடு சென்ற அன்றுதான் யதார்த்தம் முகத்தில் அறைந்தது. ஃப்ளாட் என்பதன் அர்த்தம் அவருக்கு மட்டும் தெரியாதா? ஃப்ளாட்டும் வீடுதான் என்றாலும் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு கண்கூடாய் பார்க்கும் வரை ஏன் உணர்வில் பதிவாகவில்லை?

இது “இரு படுக்கையறை ஃப்ளாட். பதினாலுக்குப் பத்தடி அறைகள். நடுவில் அதற்குச் சற்று சிறிய அளவில் பொது ஹால். அங்கு அடுக்கி அலங்கரிக்க மருமகளும். பேத்தியும் நிறைய நாகரிகப் பதுமைகள் வாங்கப் போகிறார்கள். இன்னும் சோபா செட்டும் டி.வியும் வேறு இருக்கிறது. பத்துப் பேரை சேர்ந்தாற்போல உட்காரவைத்து இலைபோட இடம் கிடையாது. ஒரு மூளையில் பெரிய அண்டாவின் அளவும் வடிவமும் கொண்ட. காது வைத்த. பித்தளைத் தொட்டியில் குரோட்டன்ஸ் வைக்க வேண்டுமென்று பேத்தி தீர்மானமாய்ச் சொல்லிவிட்டாள். இப்போதெல்லாம் அதுதான் பாஷனாம். சிநேகிதிகளை வீட்டுக்கு அழைக்கக் கூடியவர்களாக்கும் தகுதிகளில் அந்த அண்டாத் தொட்டியும் ஒன்று என்று தோன்றியது. பேத்திக்கு ஓர் அறை. மற்றொன்று மகனுக்கும் மருமகளுக்கும் முன்னால் இருந்த சின்ன வராந்தாவின் முனையில் மரத் தடுப்பால் அவருக்கு ஓர் அறை உருவாக்கிக் கொடுக்க கார்த்திகேயன் எண்ணியிருந்தான்.

“எப்பவும் போல் உங்களுக்குன்னு ஒரு தனி ரூம் இருக்கும் அப்பா. அங்கே நீங்க படிக்கிறதோ. ஓய்வெடுக்கிறதோ எல்லாம் செய்யலாம். வீட்டில் யார் வந்தாலும் போனாலும் உங்களுக்குத்
தொந்தரவு இருக்காது. உங்க ப்ரைவஸிக்கு இடைஞ்சல் இல்லை. நீங்களாய் இஷ்டப் பட்டா மத்தவங்களோடு கலந்துக்கலாம். ராத்திரியில் மட்டும் பாதுகாப்பாய் உள்ளே ஜோதி ரூமில்
படுத்துக்குங்க.”

மகன் நல்லவன். அவருக்கு வேண்டியதையெல்லாம் கவனித்துச் செய்கிறவன்.

“அதெல்லாம் சரிதான் கார்த்தி. ஆனா…..” என்று நாகராஜன் இழுக்கிறார். பால் காய்ச்சிக் குடித்துவிட்டு வீடு திரும்பிய அன்று மாலை.

“என்ன ஆனா?”

“ரொம்ப சின்ன இடமாயிருக்கேடா!”

கார்த்திகேயன் புருவங்கள் வியப்பில் உயர்ந்தன.

என்னப்பா சின்னது? நாம இருக்கறது நாலே பேர். நாளைக்கே ஜோதி கல்யாணமாகிப் போய்ட்டால் மூணு பேர்தான். நம்ம தேவைகளுக்கு அந்த ஃப்ளாட் போதாதா? இப்ப இந்த வீட்டுல பாதி இடம் பூட்டித்தானே கிடக்குது?”

ஒரு காலத்தில் இங்கே நிறைய மனுஷங்க புழங்கி இருக்காங்க. தெரியுமா? உங்கம்மா உயிரோடு இருந்தப்ப; உனக்கும் உன் அக்கா. தங்கச்சிகளுக்கும் கல்யாணமாகறதுக்கு முந்தி; நம்ம தூரத்து உறவுக்காரங்கள்லாம் இங்கே வந்து தங்கிப் படிச்சி கிட்டிருந்த காலத்துல.”

“அந்த காலமெல்லாம் முடிஞ்சு போச்சுப்பா; இப்ப இந்த வீட்ல நாம நாலு பேர்தான்னு எத்தனை வாட்டி ஞாபகப்படுத்தணும்? முந்தி புழங்கின இடத்தில் முக்கால்வாசி இப்போ நமக்குத் தேவையில்லாம தட்டுமுட்டு சாமான்கள் போட்டுப் பூட்டி வச்சிருக்கோம். வீடு “ஹோ”ன்னு இருக்கு.

நீங்க ஒண்டி ஆளாய் உங்க ரூமில் கமலாவும் நானும் இன்னொரு ரூமில் ஜோதி மூணாவது மூலையில் ஒருத்தரையொருத்தர் தேடிக்கிட்டு கண்ணாமூச்சி ஆடலாம். அத்தனை காலி இடம்.”

“இவ்வளவு சாமான்களும் அந்த ஃப்ளாட்டில் எப்படிக் கொள்ளும்?”

“இவ்வளவு சாமான்களையும் யார் அங்க எடுத்துட்டுப் போகப் போறாங்க?”

நாகராஜன் திடுக்கிட்டார்.

“பூட்டி வச்சிருக்கிற சாமானெல்லாம் நமக்குத்தேவைப்படாதப்பா! பழைய மரச்சாமான்கள் கள்ளிப்பெட்டிகள்.  கட்டில்கள். யாருக்கானும் கொடுத்துடலாம். இல்லே வித்துடலம்.”

“யாரு வாங்குவாங்களாம். பழங்கால கிராமபோனும் உடைஞ்சுபோன ஊஞ்சப்பலகையும் மாதிரியான சாமான்களை?” என்றாள் மருமகள் இடையில்.

“சரியாய்ச் சொன்னே கமலா. இத பாருங்கப்பா. இதெல்லாம் சும்மா இடத்தை அடைச்சுக்கிட்டுத்தூசி சேர்த்துக்கிட்டு இருக்கற அநாவசியப் பொருள்கள்தான். நம்ம பர்னிச்சரையும் தான் பாருங்க. யானை யானையா சோபாக்களும் பீரோக்களும்! இதையெல்லாம் லாரி வச்சு மர்ரே கம்பெனிக்கு அனுப்பிச்சிட்டு லேசா. எளிமையா. ஆனா நாகரிகமான சோபா செட் வாங்கி நம்ம ஃப்ளாட் ஹால்ல போடப் போறேன்”.

“பீரோ…… பீரோக்களையுமா போட்டுடப் போறே?” என்றபோது நாகராஜன் குரல் லேசாய் நடுங்கியது.

பின்னே? இத்தனை பீரோக்களுக்கு அங்க இடம் எது?

“இந்த வீட்டுல ரூமூக்கு நாலு பீரோ. முக்கால்வாசி பூட்டியே கிடக்குது. சாவி எங்கேன்னு கூடத் தெரியாது. எந்தக் காலத்திலோ யாரோ உபயோகிச்சா இப்போ என்னப்பா? நம்ம தேவைக்கு ஒரு காட்ரெஜ் பீரோ. இன்னும் ஒண்ணு இருந்தா போதும். உங்களுக்குப் படிக்கிறதில் ஆசை. அதனால் உங்க புஸ்தகங்களுக்கு ஒரு சின்ன பீரோ. மத்தபடி பீரோ எதுக்கு? புது மோஸ்தர் கட்டடத்தில் பில்ட்-இன் வார்ட்ரோட் இருக்கு. சமையால் ரூமில் பில்ட்-இன் ஷெல்ப்கள் இருக்கு. வேற எதுக்கு
பீரோ.”

நாகராஜன் சிறிது நேரம் தலைகுனிந்து பேசாதிருந்தார்.

திடீரென்று சொன்னார். “இல்லடா கார்த்தி. இத்தனை சாமான்களையும் தூரப் போட்டுடறது சரின்னு தோணலே அந்த ஃப்ளாட் வேணாம்……”

“ரொம்ப அழகாயிருக்குப்பா. கோவாப்ரேடிவ் சொஸட்டியில் முதல் தொகை டௌன் பேமென்ட்
செஞ்சுபாலெல்லாம் காய்ச்சிக் குடிச்சிட்டு வந்தப்புறம், பாழடைஞ்ச வீடு மாதிரி இந்தப் பெரிய இடத்தைக் கட்டிக் கிட்டு ஆயுசுக்கும் கிடக்கணும்னுதான் உங்களுக்கு ஆசையா? எனக்கு அந்தத் தண்டனை கொடுக்காதீங்க?”

“இல்லேடா. நான் அப்படி சொல்லலே…..”

“நீங்க இருக்கணும்னு சொன்னாலும் வீட்டுக்காரர் இனிமே பொறுக்கமாட்டார். முப்பத்தோராம் தேதி நாம கிளம்பிப் போனதுமே ஒண்ணாந்தேதி காலையில் மம்முட்டி கடப்பாரையோட இங்க வாசல்ல ஆளுங்க வந்து நிக்கப் போறாங்க.”

“நான் இங்கேயே இருக்கணும்னு சொல்லலே கார்த்தி! அவ்வளவு சின்ன ஃப்ளாட் வேணாம்னுதான் சொல்றேன். கொஞ்சம் தாரளமாய் இடம் இருக்காப்ல பாரேன்….. இன்னும் நாலு பீரோ வைக்க முடியறாப்பல……”

“இந்த ஃப்ளாட்டுக்கே எனக்கு அஞ்சு லட்சம் ஆகப் போகுது தெரியுமா? ஹவுஸ் லோன் வாங்கியிருக்கேனே. அதைப் பத்தி எத்தனையோ கவலை. இத்தனையும் தாண்டி ஏதோ நம்ம மகன் சொந்த வீடு வாங்கறேன்னு பாராட்டத் தெரியாட்டியும் குறை சொல்ல நல்லாத் தெரியுது.”

“கோச்சுக்காதேடா! நான் அதுக்குச் சொல்லலே….. ஏ கார்த்தி! கார்த்தி!”

அவர் கூவக் கூவ அவன் திரும்பிப் பாராமல் எழுந்து சென்றான்.

“சே. இந்த அப்பா! ஒவ்வொரு குடும்பத்தில் பிள்ளை அப்பனை அநாதரவாய்த் தெருவில் விட்டுவிடுகிறான். நான் அப்படியா? எவ்வளவு அக்கறையோடு பார்த்துக் கொள்கிறேன். முழங்கால் மூட்டு வலியால் படி ஏற சிரமப்படப்போகிறாரே என்று கிரௌண்ட் ஃப்ளோரில் இடம் வாங்கியிருக்கிறேன். இத்தனைக்கும் மாடியில்தான் இன்னும் நல்ல காற்று. தெரு இரைச்சல்களால் தொல்லை இல்லை. சே! பெற்ற தகப்பனாயிருந்தாலும் கொஞ்சம் நன்றியுணர்வு வேண்டும்…..”

நாகராஜன் நின்ற இடத்தில் வெகு நேரத்தில் வெகு நேரம் கல்லாய் இருந்தார். கார்த்தி கோபித்துக் கொண்டு விட்டான்.

இனி எதுவும் சொல்வதில் பயனில்லை.

அவர் மெல்லத் தம் அறைக்கு நடந்தார். அவருடைய பிரத்தியேக அறை. எப்பவும் போல் உங்களுக்குன்னு ஒரு தனி ரூம் இருக்கும்” என்றானே. இந்த அறையும் அந்த மரத்தடுப்பும் பொந்தும் ஒன்றா? மூக்குக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டு அறையைச் சுற்றி அவர் பார்வையை மெல்ல செலுத்தினார். இந்தப்பக்கம் மூன்று.அந்தப்பக்கம் மூன்று பீரோக்கள். பெரியவை.

ஒவ்வொன்றிலும் முட்ட முட்டப் புத்தகங்கள். பற்பல பொருள் பற்றி. தமிழ். ஆங்கிலம் வடமொழி.
எத்தனை காலமாய்ச் சேர்த்தவை! ஆண்டுகள் ஒன்றா இரண்டா! நாற்பது ஆண்டுகள் சேகரிப்பு.
இளமைப் பருவத்திலிருந்தே முளைவிட்ட ஆசை உத்தியோக காலத்தில் நிறைவு காண ஆரம்பித்தது. இரும்புச் சாமான்கள் நிறுவனம் ஒன்றில் இருபத்திரண்டு வயதில் வேலைக்குச் சேர்ந்தபோது மாதச் சம்பளம் இருநூற்றைம்பது ரூபாய். அதில் பத்து ரூபாயைப் புத்தகம் வாங்கவென்று எடுத்து வைத்து விடுவார். மிச்சத்தில் ஓர் ஆள் அதிக சிரமமின்றி வாழ முடிந்தது அந்தக் காலத்தில். எந்த நெருக்கடியிலும் அந்தப் பத்து ரூபாயைத் தொட்டதில்லை.அது புத்தகங்களுக்காக மட்டுமே.

பின்னால் நிலைமையும். சம்பளமும் உயர உயர புத்தகப்பணமும் உயர்ந்தது. “விலை இரண்டு அணா” என்று அச்சிட்ட உள்ளங்கையளவு தல புராணங்களிலிருந்து இப்போது இரண்டு மாதம் முன்பு புத்தகக் கண்காட்சியில் இரண்டு பாகங்களில் இந்திய வரலாற்று நூல் நூற்றெழுபது வரை ஆயிரத்தைந்நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அவரை நட்புடன் பார்த்துக் கொண்டு இந்த பீரோக்களில் நிற்கின்றன.

ஒவ்வொரு பீரோவினுள்ளும் புத்தகங்களைக் கண்களால் கொஞ்சித் தடவினார். பிறகு திறந்து கைகளால் தடவினார். தொட்டுச் சீராட்டினார். தேவையானால் ஒருவேளை சோறுண்டு அவரால் வாழ முடியும். இரண்டே ஆடைகளை மாற்றி மாற்றி உடுத்திக் கொண்டு வாழ முடியும். பொந்து அறைக்குள் சந்தோஷ்மாய் வாழ முடியும். ஆனால் இந்தப் புத்தகங்கள் இல்லாமல் வாழ்வது……?

இவை யாவற்றையுமே முறை வைத்துக் கொண்டு ஒன்று விடாமல் திரும்பத் திரும்பப் படிக்கிறார் என்பதில்லை. மிகவும் பிடித்தவை என்று சில உண்டு. திரும்பத் திரும்பப் படிக்க வேறு சில. ஆண்டுக்கணக்காய்த் தொடப்படாமலேயே பீரோவுக்குள் தூசி படிந்து பழுப்பாகிக் கொண்டு வருவதும் உண்டு. அதற்காக அவற்றைத் துறந்துவிட முடியுமா? இந்த நூல்கள் அனைத்தும் அவர் வாழ்ந்த நாட்களின் சாட்சி. அவர் மனநிறைவின் ஸ்தூல அடையாளம். படிக்காத நேரங்களில் கூட அவற்றின் பின்னணியில் மௌனமாய் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது சொந்த வீட்டில் இருப்பது போன்ற இதம் சுரக்கிறது.

ஒரு சின்ன பீரோவுக்குள் அடங்கும் அறைக்குத்தானே அனுமதி கொடுக்கிறான். மிஞ்சிப் போனால் நூறு புத்தகங்கள் தேறுமா? நூற்றைம்பது? இருநூறா? எவற்றைத் தேர்ந்தெடுப்பது எவற்றையெல்லாம் விடுவது? உன் உடம்பின் அங்கங்களில் இரண்டொன்று வைத்துக் கொண்டு மற்றதையெல்லாம் வெட்டி எறி என்றால் என்ன பதில் சொல்ல? சுண்டுவிரலேயானாலும் வெட்டிவிட மனம் வருமா?

தட்டுமுட்டு சாமான்கள் போலவும். பழங்காலக் கட்டில் சோபாக்கள் போலவும் இவற்றை அநாவசியம் என்று தூக்கிப்போடுவதா?

பேத்தியிடம் புத்தக ஆசையை வளர்க்க அவர் பலதரம் முயன்றதுண்டு. ஆனால் அவர்களுக்குத் தொலைக்காட்சி பார்ப்பதிலிருந்த ஆர்வம் புத்தகம் படிப்பதில் இல்லை. “இவ்வளவு பெரிய புஸ்தகத்தை யார் தாத்தா உக்கார்ந்து படிப்பாங்க? போர். இந்தக் கதையைத்தான் விறுவிறுப்பாக பி.பி.சி.யில் சின்ன சீரியலாய்க் காட்டினாங்களே” என்பாள்.

வண்ணப் படங்களைக் காட்டிச் சுவையூட்டப் பார்த்தால், “இதைவிட தத்ரூபமா இந்தக் காட்டு மிருகங்களைப் பத்தி ஒரு டாகுமெண்டரி வந்துதே டிவி.யில!” என்பாள்.

தலைமுறை இடைவெளி என்பது இதுதானா? அல்லது நான்தான் இந்த ஜெட் யுகத்தில் வாழவே தகுதியற்றவனாகி விட்டனோ? நானும் தூசி படிந்து பழுப்பாகி…….

புத்தகங்களைத் தொட்டுத் தடவிய விரல்கள் நடுங்கின. கண்களில் ஈரம் திசை கவித்தது.

என்ன செய்வான் என் புத்தகங்களை? ஏதாவது லைப்ரரிக்காவது நன்கொடையாய்த் தருவானா அல்லது கிலோவிற்கு இவ்வளவென்று பேரம் பேசி பேப்பர்காரனிடம்……முருகா!

உள்ளுக்குள் மௌனமாய் ஓர் அலறல் வெடித்தது. கண்முன் இருள் சூழ ஆரம்பித்தது தெரியும். உடல் தரையைத் தொட்டது தெரியாது.

மங்கல் மாங்கலாய். கருவளையங்களாய். கண்ணினுள் ஏதோ சுழற்சிகள். உரக்கக் கத்துவதுபோல் இருந்தது. முடிவற்ற பள்ளத்தின் இருளில் மௌனமாய் மூழ்குவது போலவும் இருந்தது. இது மகனின் முகம்தானே? ஆனால் அடையாறு ப்ளாட் அல்லவா இந்த முகத்தோடு சிரிக்கிறது? இன்னொரு பக்கம் அழுகையொறீ. பீரோக்களிறீருந்தா? கைகால்களை உதைத்துக் கொள்கிற அமைதியின்மை. மீண்டும் இருள்.

மீண்டும் மங்கலாய் ஒளி ஊடுருவல். வெள்ளத்தில் சிறிது சிறிதாய் நீச்சல் போட்டு மூச்சு வாங்க ஒருவாறு மெல்லத் தலையை நீர்மட்டத்திற்கு மேல் தூக்கி நிமிர்ந்தபோது எதிரே இருந்த முகம் ஒரு கணம் மங்கிக் குழம்பிப் பிறகு தெளிந்தது.

“அப்பா கண்ணை விழிச்சிட்டார்! கண்களை மலர்த்தினார். இப்போதுதான் தூங்கப் போய்க் கண் விழித்தது போல் இருந்தது. ஆனால் சுவர்க் காலண்டரில் மூன்று தாள்கள் கிழிக்கப்பட்டிருந்தன.

“அப்பா”

கார்த்திதான் எதிரில். கண்களை அசைத்தபோது பக்கத்து மேஜைமேல் ஏதோதோ பாட்டில்கள். மருந்துகள்.

“இப்போ எப்படிப்பா இருக்கு?”

கார்த்திகேயன் கை அவர் நெற்றியில் படிந்தது. “அப்பாடா. ஜுரம் இறங்கியிருக்கு.”

மருமகளின் முகம் நாற்காலியருகில் அவன் பின்னால் தோன்றியது. புன்னகையுடன்.

“கமலா. டாக்டருக்கு போன் பண்ணி அப்பாவுக்கு விழிப்பு வந்திடிச்சுன்னு சொல்லு.”

எனக்கு… இப்போது தந்தையும் மகனும் மட்டுமே.

“என்ன ஆச்சு கார்த்தி?” அவர் குரல் அவர் காதுக்கே வித்தியாசமாய் மெலிந்து ஒலித்தது. யாரோ எங்கிருந்தோ பேசுவதுபோல்.

“கடுமையான காய்ச்சல்ப்பா. நூத்துநாலு டிகிரி. கண் திறக்காம மயக்கம். மூணு நாளாச்சு. பயந்தே போய்ட்டோம்…டாக்டர் நல்லா இருக்கணும்.”

மூன்று நாட்கள். மீண்டும் காலண்டர் மேல் கண்கள் நினைவுகள் மெல்லப் புரண்டு கொடுத்தன. வீட்டைக் காலி செய்ய இன்னும் ஒன்பதே நாட்கள்…. கண்களுக்குள் உப்பு உறுத்தியது.

“மயக்கத்தில் ஏதேதோ பேசினீங்கப்பா.” அவன் குரலிலும் முகத்திலும் இரக்கம் குரல் தாழ்ந்தது.

“என்கிட்ட முதல்லயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கக் கூடாதா?”

கார்த்தி அவர் புறங்கை நரம்புகளை மெல்ல நீவிக் கொடுத்தான்.

“கவலைப்படாதீங்க. உங்கள் அத்தனை புஸ்தகங்களும் நம்மோட வரும். எப்படியோ நான் வச்சுக் கொடுக்கறேன்.”


வெளியறையில் மருமகள் டாக்டருக்கு டெலிபோன் செய்யும் குரல் கேட்டது. 

கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி - ஆர்.சூடாமணி

கிழவி தன் கறுப்பு நிற ப்ரீமியர் பத்மினியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாள். தனியாக இருந்தாள். கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காற்று வாங்கிக் கொண்டிருந்தாள். தண்ணீர் ஒற்றைக் காலடியில் வைத்திருந்தாள்.

மெரீனா கடற்கரையில் இன்று நல்ல காற்று. தினம் இப்படி இருக்கும் என்று நம்ப முடியாது. சில மாலை நேரங்களில் கதவடைத்த அறைபோல் கடற்கரையே புழுக்கமாயிருக்கும். வெளிறிய வானத்திலிருந்து காற்றுக்குப் பதில் அனல் இறங்கும். கழுத்தும் முகமும் வேர்வையாய்ப் பெருகும். ‘ராத்திரி மழை பெய்யப் போகுது’ என்று மனசுக்கு லாலிபாப் தந்து ஆறுதலுறுத்த வேண்டி இருக்கும். இன்று அப்படியில்லை. உண்மையாகவே இரண்டு நாள் நல்ல மழை பெய்திருந்த ஈரத்தின் குளிர்ச்சி, காற்றில் விரவியிருந்தது. தன்மையாய்க் கிழ உடலுக்குச் சாமரம் வீசியது. மழைக்கால இருளும் சூழ ஆரம்பித்திருந்தது. அல்லது மாலை ஆறரை மணியின் இருளாகவும் இருக்கலாம். “ஆறரையா?” மூக்குக் கண்ணாடியைச் சரிப்படுத்திக் கொண்டு கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். ஆறரைக்கு எட்டு நிமிஷம் இருந்தது. கடற்கரையில் வழக்கமான கூட்டம் இல்லை. சுண்டல் விற்கும் பொடிசுகளைக் கூடக் காணோம். மழைப் பயத்தாலோ அல்லது இருட்டி விட்டதாலோ பெரும்பாலும் மக்கள் கிளம்பிப் போய்விட்டிருந்தார்கள். வெறிச்சோடிய மணற்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பொறுக்கி எடுக்கலாம் போல தலைகள்.

அவனும் இருந்தான். இளைஞன். சாயம் போன பழுப்பு நிற பான்ட் அணிந்திருந்தான். “இன்” பண்ணிய முழுக்கை சாம்பல் நிறச் சட்டை, ஒரு காலத்தில் வெள்ளையாய் இருந்திருக்கலாம். சட்டைக் கைகளை மடக்கி விட்டிருந்தான். ஒட்டு மீசை, ஒட்டிய தாடைகள், சராசரிக்கு மேல் உயரம் ; ஒல்லியோ – பருமனோ இல்லாத உடல்வாகு. அவன் இங்கேயே வட்டமிட்டுக் கொண்டிருந்ததைக் கிழவி முன்னமே கவனித்திருந்தாள். சற்று நேரம் முன்பு வரை அவள் காருக்கருகில் ஒரு யமாஹா பைக்கில் இரு இளம் பெண்கள் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பையலுக்கு அங்கேயே திருட்டுப் பார்வை. அந்தப் பக்கமாய் வாக்கிங் செய்கிறவன் மாதிரி முன்னேயும் பின்னேயுமாய் நடை போட்டுக் கொண்டிருந்தான். அவ்வப்போது ஓரக் கண்ணால் கிழவியையும் பார்த்துக் கொண்டான். இளசுகளிடம் வம்பு செய்ய முடியாமல் கிழடு ஒன்று பக்கத்தில் இருப்பது அவனுக்கு சுத்தமாய்ப் பிடிக்கவில்லை என்று தோன்றியது.

இந்த அசடுகள், இறுக்கிப் பிடிக்கும் பனியன்களின் பிரக்ஞை இல்லாமல், கண்ட கழிசடைகளின் கண்களுக்கு விருந்தாய் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறதுகளே! சினிமா பற்றிய பேச்சாயிருக்கும். அதுதான் அத்தனை லயிப்பு. கடற்கரையில மனித நடமாட்டம் குறைந்து வருகிறது என்ற எச்சரிக்கை கூட இல்லாமல்… இருட்டு நேரம் வேறு. என்ன பைத்தியக்காரத் துணிச்சல்! என்னதான் மாடர்ன் என்றாலும் பெண்மைக்குள் எப்போதும் சிவப்புக் கண் விழித்திருக்க வேண்டாமோ?

அந்தப் பயல் இன்னும் இங்கேயே சுற்றிக்கொண்டிருந்தான்.

ஒரு தீர்மானத்துடன் கிழவி காரை விட்டிறங்கி அந்தப் பெண்களை அணுகினாள்.

“எக்ஸ்கியூஸ் மீ.”

தலை நரைத்து முகத்தில் கோடுகளுடன் கைத்தறிப் புடவை சுற்றிய ஒரு கிழ வடிவம் சாந்தி நிகேதன் ஹேண்ட்பாகும் ஷோலாப்பூர் சப்பல்களுமாய் ஆங்கிலம் பேசக் கேட்ட அதிர்ச்சியில், பேசிக் கொண்டிருந்தவர்கள் வாயில் “பிரசாந்த்…” பாதியில் நின்றார்.

“நான் சொல்றத தப்பா எடுத்துக்காதீங்க யங் லேடீஸ். உங்களுக்குப் பாட்டியாயிருக்கக் கூடிய வயசு எனக்கு. உங்க நல்லதுக்காக ஒன்று சொல்றேன்…”

“என்ன, ஜீஸஸ் வரப் போறாரா?” என்றாள் ஒருத்தி சீரியஸான முகத்துடன். இன்னொருத்தி சிரமப்பட்டுச் சிரிக்காமல் இருந்தாள்.

“சமத்து சொட்டுது. கிண்டல் பண்ணாலும் பொருத்தமாப் பண்ணணும். நெத்தியில் கால் ரூபா அளவுக்கு இருக்குற குங்குமப் பொட்டைப் பார்க்கமா பேசறீங்களே. இவ்வளவுதானா உங்க கவன சக்தி? போகுது. இப்ப நான் சொல்றதையாச்சும் கவனமா கேளுங்க. அதோ அங்க பாருங்க. தீவட்டித் தடியன் ஒருத்தன் இங்கயே சுத்திக்கிட்டிருக்கான். நான் ரொம்ப நேரமா கவனிக்கறேன். பயல் உங்களத்தான் டாவடிக்கறான். இருட்டிட்டு வருது. ஆள் நடமாட்டம் அதிகமில்லே. வம்பை விலைக்கு வாங்காம்ம சேதமில்லாம வீடு போய்ச் சேருங்கம்மா குழந்தைகளா. பிரசாந்த் விமர்சனத்தை வீட்ல வச்சிக்கலாம். அதுக்குள்ள அவருக்கு ஒண்ணும் வயசாயிடாது.”

அந்த “டாவடிக்கறான்” என்ற அருமையான சொற்பிரயோகம். அவள் வெறும் பஞ்சாங்கமல்ல ; இன்றைய பிரக்ஞை உள்ள நாகரிகப் பாட்டி என்று உணர்த்தியிருக்க வேண்டும். ஒரு கணம் ஆராய்ச்சியுடன் அவளை நிமிர்ந்து பார்த்த இளம் பெண்கள் தலை திருப்பி நோக்கினார்கள். “தீவட்டித் தடியன்” இவர்கள் மீது பதிந்திருந்த கண்களைச் சட்டென்று வேறெதையோ பார்ப்பது போலத் திருப்பிக் கொண்டதைக் கவனித்த போது முகங்களில் கலவரம் தெரிந்தது.

“ம்.ம் கிளம்புங்கடியம்மா. பாட்டி சொல்லைத் தட்டாதேண்றது வெறும் சினிமா மட்டும் இல்லே.”

“ஷி இஸ் ரைட், சுசி. வா, போயிடலாம்.”

“சரிடி. நாங்க போயிடறோம் பாட்டி, தாங்ஸ்.”

“வெல்கம்.”

அந்த மறுமொழி கேட்டு மீண்டும் ஒரு சிறிய ஆச்சரியத்துடன் மறு கணம் இரு பெண்களும் பைக்கில் சிட்டாய்ப் பறந்து மறைந்தார்கள். கிழவி மிதப்பாய் புன்னகை செய்து கொண்டாள். தடியன் மேல் திருப்தியுடன் ஒரு பார்வை வீசிவிட்டு, திரும்பி வந்து காரில் உட்கார்ந்தாள்.
இதெல்லாம் முடிந்து சிறிது நேரம் ஆகியிருந்தது. பயல் இன்னும் ஏன் இடத்தைக் காலி பண்ணவில்லை? இங்கேயே சுற்றிக் கொண்டிருக்க, வேறு யாரும் இளம் பெண்கள் கண்களில் படவில்லையே?

மூன்று ஆண்கள் வானத்தைப் பார்த்து, “இன்னிக்கும் மழை வரும்” என்று
பேசியபடி, செருப்பு சரசரக்க விரைந்து கடந்து சென்றார்கள்.

கிழவி கவனித்தாள். பயல் தலை தெரியவில்லை. ஒரு வழியாய்ப் போய்த் தொலைந்தானா? அப்பாடா, தானும் கிளம்ப வேண்டியதுதான்.

இந்த ‘பார்க்கிங்’ பகுதியில் அவள் காரைத் தவிர வேறு வாகனங்கள் இல்லை. அவள் வந்த போது இங்கிருந்த இரண்டு டூரிஸ்ட் பஸ்களும் ஓர் ஊதா நிற மாருதியும் மூன்று பைக்குகளும் எப்போதோ போய்விட்டிருந்தன. அந்தப் பெண்களும் போன பின்பு வேறு வாகனங்களில்லை.
சில்லென்று அடித்த காற்றில் நரைமுடி படபடத்தது. கையால் சரிப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். தலையைத் திருப்பினாள். வியப்புற்றாள். அவள் கார் பக்கத்திலேயே முளைத்திருந்தான் அந்த இளைஞன்.

திறந்திருந்த கார் கதவின் மேல் லேசாய் சாய்ந்த படி அவளையே பார்த்தான். உதடுகளில் வினோதமான புன்னகை. அந்த அருகாமையில் ஷர்ட்டின் லேசான வியர்வை வாடை அடித்தது.

ஏன் இங்கே வந்து நிற்கிறான்? அந்தப் பெண்களை அப்புறப்படுத்தி விட்டாளென்ற ஆத்திரத்தில் அவளிடம் கூச்சலிட வந்திருக்கிறானா? ஜிவ்வென்ற கோபடம் இழை காட்டியது.

“யாருப்பா நீ? எதுக்காக இங்க வந்து நின்னுட்டிருக்கே? உன் வேலையப் பார்த்துக்கிட்டுப் போ.”

“என் வேலையத்தான் பார்த்துக்கிட்டுப் போறேன்.” நாகரிகக் குரல். உரக்காத, ஆனால் தெளிவான தொனி. மறுபடியும் அந்தப் புன்னகை. “ஏன் பெர்சு, உன் கூட யார் வந்திருக்காங்க? புருஷனா? புள்ளயா? பேரனா?

அவள் பேச்சின்றி வெறித்தாள்.

“சொல்லு பெர்சு, யார் வந்திருக்காங்க? சமுத்திரத்துல கால் நினைக்கப் போய்ட்டாங்களா, இங்க உன்னை தனியாவிட்டுட்டு?”

கோபத்தை மீறிக் கலக்கம் எழுந்தது. கண் எட்டும் தூரம் வரை, தான் தனியாக இருப்பது உறைத்தது. எதையும் காட்டிக்கொள்ளாமல் தைரிய நகலுடன் பேசினாள்.

“ஏய் யாருடா நீ? எதுக்கு இங்க வந்து அநாவசியமா கலாட்டா பண்றே? மரியாதையா போயிடு.”

“இல்லாட்டி என்ன செய்வே?”

கிழவியின் வாய் உலர்ந்தது. இளைஞன் கையில் திடீரென்று பளீரிடும் அந்த மின்னல் கத்தி, இடது சட்டைக் கை மடிப்பு பிரித்துவிடப்பட்டிருந்தது. எப்படிச் செய்தான் இமை நேரத்தில்-
“உன் புருஷனோ, புள்ளையோ, பேரனோ இல்ல. எல்லாருமோ திரும்பி வரதுக்குள்ள நான் என் வேலைய முடிச்சுக்கிட்டுப் போயிடறேன். நோ, நோ, நோ பயந்துக்காத பெர்சு. நான் சொல்றபடி கேட்டியானா உன்னை ஒண்ணும் செய்யமாட்டேன். முதல்ல, கொஞ்சம் அந்த சைடுக்கு தள்ளி உக்காரு. நான் உள்ள ஏறி உன் பக்கத்துல உக்காந்துக்கறேன். ஒருத்தர் ரெண்டு பேர் எதிர்க்க நடந்து போறவங்களுக்கு அப்பத்தான் சந்தேகம் வராது.”

அவன் சரேலென்று பின் இருக்கையில் அவள் பக்கத்தில் ஏறி அமர்ந்து கதவை மூடி இரு கதவுகளையும் “லாக்” செய்தான். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் அவன் இடது கை கத்தியோடு அவள் முதுகுக்குப் பின் இருந்தது.

“முனை உறுத்துதில்ல பெர்சு? ஜாக்கிரதை. நீ ஏதானும் சத்தம் போட்டு கலாட்டா பண்ணினே, முனையோடு முழுக்கத்தியும் உன் உடம்புக்குள்ள பூந்துடும்.”

பயங்கரக் கனவு காண்பது போல் இருந்தது. ஏதோ திகில் படம் டி.வி.யில் பார்ப்பது போலிருந்தது. அவளும் ஒரு பாத்திரம். கதை தெரியாமல் பங்கேற்கும் பாத்திரம். எப்படி முடியப் போகிறது?

நரை மயிர்க்கால்களிலிருந்து வெப்ப அலைகளாய் வியர்வை பெருக்கெடுத்தது.

“ஒரு வேடிக்கை தெரியுமா பெர்சு? உன் கார் பக்கத்துல பைக் மேலே ரெண்டு பொண்ணு உக்காந்திருந்தாங்க இல்லே? அவங்க இருக்கறபோது எப்படி உன்னை நெருங்கி வந்து மிரட்டறது அப்படின்னு எனக்கு ஒரே டென்ஷன். இந்த நாள் பொண்ணுங்க வெவரமானவங்க. சந்தேகமான ஆளுனு தோணிச்சுன்னா அப்படியே பாஞ்சு வந்து ஆளுக்கு நாலு கராத்தே உதை உதைச்சு போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்தாலும் கொடுத்துடுவாங்க. என்னடா செய்யறதுன்னு யோசனையோடு குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டே இருந்தேன். அவங்களோ கிளம்பற வழியாத் தெரியல. அப்புறம் என் அதிர்ஷ்டம் ; நீயே அவங்களண்ட போய் ஏதோ சொல்லி விரட்டியடிச்சிட்டே!” மறுபடியும் சிரித்தான்.

அவள் அதிர்ச்சியுற்றாள். அட ஈஸ்வரா, இப்படி ஒரு விதி விளையாட்டா? தானே தன் தலையில் மண் அள்ளிப் போட்டுக் கொண்டு… இன்று அவளுக்கு ஆபத்து என்பது விதியின் தீர்மானம் போல் இருக்கிறது. இனி பயந்து ஆவதொன்றுமில்லை.

“சரி பெர்சு, விஷயத்துக்கு வருவோம்…”

“இந்தாப்பா, பேச்சுக்குப் பேச்சு அது என்ன, ஏளனமாய் ‘பெர்சு’? பெரியவங்களா ஆகறது ஒரு குத்தமா? மனுஷன் ஆயுசை எப்படியெல்லாம் நீட்டிக்கலாம்னு ஒரு பக்கம் அறிஞர்கள் மாஞ்சு மாஞ்சு ஆராய்ச்சி பண்றாங்க. கட்டுரை எழுதறாங்க. இன்னொரு பக்கம் வயசாளின்னா கிண்டலா? நீ கிழவனா ஆகவே மாட்டியா? ஒரு நாள் நீயும் ‘பெர்சு’ ஆகமாட்டியா? ஒருவேளை அற்பாயுசுலேயே செத்துப்போயிடலாம்னு ஏதானும் சங்கல்பம் பண்ணியிருக்கிறயா என்ன?”
அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான்.

“அட, பலே கிழவியாயிருக்கியே! பெர்சுங்கள்ளாம் கூட இப்படிப் பேச முடியுமா? சரி. இனிமே பெர்சுன்னு கூப்பிடலே. அதுக்காக உன்னை விட்டுடப் போறேன்னு அர்த்தமில்ல.”

அவளுக்கு மறுபடியும் பயம் பற்றியது. தொலைவில் கடலலைகள் இரைச்சல். மணல்மேல் ஒரு சிலர் தென்பட்டார்கள். இங்கு கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு எதிராக சிலர் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். கார்மீதும் இரண்டொரு பார்வைகள் பட்டன. பாட்டியும் பேரனும் அழகான குடும்பக் காட்சி. இந்த நாளிலும் இப்படியொரு பாசமுள்ள பேரனா என்று வியந்திருப்பார்கள் ஒருவேளை.

கூச்சல் போடலாமா? கொலை கொலை என்று கத்தலாமா? வாயைத் திறப்பதற்குள் கூர் முனை ஒன்று முதுகில் உரசியது. திறக்க இருந்த வாய் மூடிக் கொண்டது.

அவர்கள் கடந்து போய்விட்டார்கள். கடற்கரையில் இப்போது ஈ, காக்காய் இல்லை. இருட்டில் அழுத்தம் கூடியிருந்தது. மப்பு மூடிய இரவின் சோடியம் வேப்பர் விளக்கொளியை அது சட்டை செய்யவில்லை. சிலுசிலுவென்ற காற்றினாலோ, பயத்தாலோ கிழ உடம்பு முள்குத்தி நின்றது.

“ஏண்டாப்பா உனக்குப் பாட்டியே கிடையாதா? இந்த அக்கிரமம் பண்றியே!”

“நிச்சயம் நீ புது டைப்தான் ஆயா, வம்பு பண்ற பசங்களண்டை பொண்ணுங்க உனக்கு அக்கா, தங்கச்சி கிடையாதான்னு கேட்பாங்க. நீ என்ன, உனக்குப் பாட்டி கிடையாதான்னு கேக்கற?”

“ஒரு பாட்டியத்தான நீ மிரட்டிகிட்டிருக்கே. அதுவும் தவிர, இதுதான் சரியான கேள்வி. எல்லாப் பசங்களுக்குமே அக்கா, தங்கச்சி இருக்கணும்னு அவசியமில்லே. ஆனா உலகத்துல ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு பாட்டி இருந்துதானே ஆகணும்.”

அவன் சிரித்தான். “கில்லாடி ஆயா நீ, ஆமா உன் ஆளுங்க என்ன இன்னும் திரும்பி வரல்லே? இருட்டி இவ்வளவு நேரத்துக்கப்புறமுமா ஒரு வயசான பொம்பளயை தனியா விட்டுட்டு தண்ணியில அளைஞ்சி கிட்டிருப்பாங்க?”

கிழவி பேசவில்லை. அவன் அவளைக் கூர்ந்து பார்த்தான். “ஓ தனியாத்தான் வந்திருக்கியா?” மௌனம். “குருட்டு தைரியம்தான். அப்போ கார் ஓட்டத் தெரியும்னு சொல்லு.” மௌனம். “பின்ன ஏன் பின் சீட்டில் உட்கார்ந்திருக்கே?” “காத்து வாங்கணும். அதுக்காக முன் சீட்டில் கதவைத் திறந்து உக்காந்திருந்தா கார் லைட் கண்ணைக் குத்தாதா? என் கூட பூனை – எலி விளையாட்டு விளையாடாதேப்பா. கையெடுத்துக் கும்பிடறேன். இந்தக் கிழவிக்குத் தாங்காது. உனக்கு என்ன வேணும்?”

“ஒரு கிழவிகிட்ட என்ன வேண்டியிருக்கும்? நகை, பணம், இல்லாட்டி உயிர்.” காத்து வாங்க வந்து உக்காந்த இடத்துல நகைக்கும் பணத்துக்கும் எங்கே போக? காத்ரேஜ் பீரோவா கொண்டு வந்திருக்கேன்?” “இருக்கறதைக் கொடுத்தால் போதும். அதோ உன் காதுல பெரிசா தங்கக் கம்மல் மின்னுதே. உனக்குத் தேவையில்லாத கனம். அப்புறம் கழுத்துல தங்கச் செயின். மூணு பவுன் தேறுமா?” வெடுக்கென்று செயினை இழுத்துப் பார்த்துக் கையில் எடையைக் கணித்தான். “தேறும். கையில் ரிஸ்ட்வாட்ச் வேற கட்டியிருக்கே. க்வார்ட்சா? நல்ல விலை போகும். இன்னொரு கையில் தங்க வளையல்.”

“நகையெல்லாம் கவரிங்.” “அதை நான் பார்த்துக்கறேன். அப்புறம் ஹேண்ட் பாக். பலே, ஸ்டைலான ஆயாதான். ஹேண்ட் பேக் காலியாவா இருக்கப் போகுது? பேரனுக்காக ஏதேனும் கொண்டு வந்திருப்பியே?” அவசரமாய் தொடைக்கடியில் மறைத்துக் கொள்ள முயன்ற கைப்பையை உரிமையாய் வெளியே இழுத்து, திறந்தான். இந்தத் தங்கக் கம்மலும் செயினும் வளையும் கடிகாரமும் பார்த்துவிட்டுத்தானா அவளைக் குறி வைத்திருந்தான்? கடங்காரன்! திருட்டு ராஸ்கல்! இன்று உயிரோடு தப்பிச் சென்றால் நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான்.

கார் விளக்கை ஏற்றிக் கொண்டு கைப்பையில் இருந்தவற்றை அவன் ஆராய்ந்து கொண்டிருந்தான். “பேரு, அட்ரஸ் – கிழவிங்களுக்குக் கூட சரோஜான்னு பேர் இருக்குமா என்ன? டிரைவிங் லைசென்ஸ், கார் சாவி, சின்னப் பொட்டலத்தில் ஏதோ மாத்திரை, இன்னொரு பொட்டலத்தில் குங்குமம், ஒரு கைக்குட்டை, பால்பாயிண்ட் பேனா, கொஞ்சம் வெத்துக் காகிதம்… பணமே இல்லையே?” அவள் பேசாதிருந்தாள். “ஆ. இதென்ன இன்னொரு ஜிப்? அட, இந்தப் பையில் நோட்டுங்கதான்! ஒருநூறு, ஒரு அம்பது. இவ்வளவுதானா? காரெல்லாம் வச்சிருக்க, ஒரு ஆயிரமாவது கொண்டுவரக் கூடாது?” உதட்டைப் பிதுக்கினான். “கஞ்சப் பாட்டி! போகுது ; அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்.”

“பாதி வழில திடீர்னு கார்ல பெட்ரோல் தீர்ந்து போயிட்டா அஞ்சு லிட்டராவது போட்டுக்கிட்டு போயிடலாம்னுதான்.”

“அதான் முன்யோசனையுள்ள ஆயாவுக்கு அழகு. இப்போ பேரனுக்கு உதவுது பாரு! பையிலேர்ந்து பணத்தை மட்டும் எடுத்துக்கறேன் ஆயா?” விளக்கை அணைத்துவிட்டு நோட்டுகளை பான்ட் பாக்கெட்டினுள் போட்டுக் கொண்டு மற்ற எதையும் எடுக்காமல் ஹேண்ட் பேகை மூடி அவளிடம் கொடுத்தான். “அதென்ன, காலண்டை ஏதோ பளபளக்குது? ஓ, தண்ணி பாட்டில்தானா? சுத்தமான வீட்டுக் குடிநீராக்கும்! வச்சிக்க. சரி ஆயா, சத்தமில்லாம நகைங்களையும் ரிஸ்ட் வாட்சையும் கழட்டிக் குடு. நான் போயிடறேன். நீயும் வீட்டுக்குப் போவாணாமா? உன் புருஷனும் புள்ளயும் பேரனும் கவலைப்படுவாங்களில்ல?”

கிழவி தலை குனிந்து அசையாமல் உட்கார்ந்திருந்தாள். “ம் ம், சீக்கிரமாக கழட்டிக் குடு கிழவி, எனக்கு நேரமாகுது. இன்னும் ரொம்ப நேரம் என் பொறுமை நிக்காது.”

கிழவி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். காருக்குள் மங்கலாய் விழுந்த கடற்கரை விளக்கின் ஒளியில் அவன் சில கணங்கள் அந்தப் பார்வையை எதிர்கொண்டான். பிறகு கண்களை விலக்கிக் கொண்டான். “என்னை அப்படி உருக்கமா பார்க்காதே ஆயா. ஒண்ணும் பிரயோஜனமில்லை. சீக்கிரம் நகைங்களும் வாட்சும் குடுத்துட்டியானா நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது.” கிழவி மௌனமாய் கைக்கடிகாரத்தைக் கழற்றினாள். வளையலைக் கழற்றினாள். கழுத்துச் சங்கிலியைக் கழற்றினாள். காதுக் கம்மல்களைக் கழற்றினாள். எல்லாவற்றையும் உள்ளங்கையில் வைத்து அவனிடம் நீட்டினாள். “துண்டு துண்டாயிருந்தா எப்படி எடுத்துட்டுப் போறது? ஒண்ணு கீழே விழுந்தாக் கூடத் தெரியாது. கர்சீஃப் வச்சிருக்கயில்ல? அதில் சுத்திக் கொடு.” சுற்றி முடிச்சுப் போட்டுக் கொடுத்தாள்.

அவன் வாங்கினான். பான்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். கத்தியை மடக்கி, பிரித்து விட்டிருந்த சட்டைக் கையில் வைத்து மறுபடியும் சுருட்டி மடித்துக் கொண்டான். கார் கதவைத் திறந்துகொண்டு இறங்கினான். அவளைப் பார்த்துத் தலையசைத்தான்.

“போய் வரேன் ஆயா. குட் நைட். நைஸ் டு ஹவாவ் மெட் யு.”

அவன் வேகமாய் நடந்து சிறிது தூரம் சென்று விட்டான். காற்று, விட்டு விட்டுச் சுழன்று வீசியது. மேக அடர்த்தியில் நட்சத்திரங்கள் மறைந்து கொண்டிருந்தன. திடீரென்று பின்னாலிருந்து அவள் குரல். தொலைவினால் பலவீனமாய் இருந்தாலும் இயன்ற வரையில் உரக்க அழைத்த அவசரக்குரல். “இந்தாப்பா… இந்தாப்பா… பையா… யங்மேன், உன்னைத் தான். ஒரு நிமிஷம் நில்லேன் ப்ளீஸ்!” அவன் நின்று திரும்பினான். நாலடி முன்னால் வந்தான். “என்ன ஆயா, ஏதானும் ட்ரிக் செய்யாலாம்னு பார்க்கிறியா? என்னாகும் தெரியுமில்ல?”

மடித்த சட்டைக் கையைப் பிரிக்க முனைந்தான். “இங்கே ரெண்டாம் பேர் கிடையாது, கவனமிருக்கட்டும்.” “இல்லேப்பா, அபடியெல்லாம் ஒண்ணுமில்ல.” “பின்னே என்ன?”

“கொஞ்சம்… கொஞ்சம் அந்த கடிகாரத்தில் மணி பார்த்துச் சொல்றியா? ஏழரை மணிக்கு நான் என் பி.ப்பி மாத்திரை சாப்பிடணும் நேரப்படி அந்த மாத்திரையை முழுங்காட்டி ரத்த அழுத்தம் எகிறிடும். டாக்டர் ரொம்ப ஜாக்கிரதையாய் இருக்கணும்னு சொல்லியிருக்கார்.”

கெஞ்சலாய் வந்த குரல். கண்களும் கெஞ்சியிருக்கும் மப்பலான வெளிச்சத்தில் அவனால் தெளிவாய்ப் பார்க்க முடியவில்லை. அவள் கிழக் கண்களுக்கும் அவன் முகபாவம் சரியாய்ப் பிடிப்படவில்லை. அவன் தன்னையே சிறிது நேரம் உற்றுப் பார்ப்பது மட்டும் தெரிந்தது. அவன் நெருங்கி வந்தான். கார் கதவைத் திறந்தான். பான்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை வெளியே இழுத்து முடிச்சைப் பிரித்து கடிகாரத்தை எடுத்து, கார் விளக்கை ஏற்றி அதனடியில் பிடித்துப் பார்த்தான்.

“ஏழு நாப்பது, கொஞ்சம் லேட். பரவாயில்லே.” கைப்பையிலிருந்து மாத்திரைப் பொட்டலத்தைப் பிரித்து மாத்திரையை எடுத்துக் கொண்டாள். வாயில் போட்டுக் கொண்டு பிளாஸ்டிக் பாட்டிலைத் திறந்து தண்ணீரோடு சேர்த்து மாத்திரையை விழுங்கினாள். நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள். “ரொம்ப தாங்ஸ்ப்பா.” அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் நிதானமாய் மீண்டும் காரில் ஏறி அமர்ந்தான். “என்னப்பா…? எ… எதுக்கு…? அவன் ஏதும் பேசாமல் அவள் கையை மென்மையாய்ப் பற்றி எடுத்து கடிகாரத்தை அவள் மணிக்கட்டில் கட்டிவிட்டான். நகைகளை மறுபடியும் கைக்குட்டையில் முடிந்து அவள் ஹேண்ட்பேக்கினுள் வைத்தான். தன்பான்ட் பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாய் நோட்டையும் ஐம்பது ரூபாய் நோட்டையும் எடுத்து அவற்றையும் அவள் கைப்பையில் வைத்து மூடி அவள் மடியில் பையை வைத்தான். கார் விளக்கை அணைத்து விட்டு இறங்கி நின்றான்.

வியப்பில் அவளுக்கு வாயெழவில்லை.

“வரேன் ஆயா. நான் பிறவித் திருடனில்லை. தொழில் முறைத் திருடன் இல்லை. சொன்னா நம்புவியோ என்னமோ, நான் சரியா சாப்பிட்டு அஞ்சு நாளாகுது. நேத்திலிருந்து என் ஆகாரம் வெறும் டீ தான். அதுக்காக என்னை என்னமோ அப்பு சப்புன்னு நினைச்சிடாதே, எம்.காம். படிச்சிருக்கேனாக்கும்! ஒரு கழுதையா பிறந்திருந்தா அந்தப் பட்டம் அச்சிட்ட காகிதத்தையாவது சாப்பிட்டுப் பசியாறியிருக்கலாம்.” கார் கதவை மூடினான். “குட் நைட் ஆயா. உடனே கிளம்பி ஒழுங்கா வீட்டுக்குப் போய் சேரு. உன் வயசுக்கு இந்த நேரத்துல ஒத்தையில வெளிய கிளம்பறது நல்லதில்லே. ஊர்ல திருட்டு பயம் ஜாஸ்தி!”

சிரித்து விட்டுப் பரபரவென்று நடந்து செல்லலானான். “இந்தாப்பா… ஏ பையா… பேர் தெரியாதது கஷ்டமா இருக்கு. ஏ ஜென்டில்மேன் திருடா. கொஞ்சம் நில்லுப்பா யங் மேன்…” “வாட் நௌ?” எரிச்சலுடன் திரும்பினான். இரைக்க இரைக்க ஓடி வந்து அவன் எதிரே நின்றிருந்தாள் கிழவி. அவன் கையில் எதையோ திணித்தாள்.


இரண்டு நோட்டுகள். நூறு, ஐம்பது. “பிச்சை போடறியா?” என்றான் சீற்றமாய். “இல்லை. நான் உயிர் தப்பிச்சச் சந்தோஷத்தைக் கொண்டாடறேன். முதல்ல போய் ஒரு நல்ல ஹோட்டல்ல ஒரு முழுச் சாப்பாடு வாங்கி வயிறாரச் சாப்பிடு. மிச்சப் பணத்தைக் கைச் செலவுக்கு வச்சிக்க. அப்புறம் – அடிக்க வராதே – உன் எம்.காமைக் கொஞ்சம் ஒதுக்கி வச்சிட்டு அந்த ஹோட்டல்லயே ஏதாவது எடுபிடி வேலையாவது இப்போதைக்குக் கிடைக்குமான்னு கேட்டுப் பாரு. ஒண்ணும் தப்பில்லே. நீ நல்ல பையன். ஆல் தி பெஸ்ட்.” காரிடம் விரைந்து திரும்பினாள். வேகமாய் அதை செலுத்திக் கொண்டு அவனைக் கடந்து சென்றபோது பலமாக விழத் தொடங்கியிருந்த மழைத் துளிகளின் உணர்வே இல்லாமல் அவன் அதே இடத்தில் பிரமித்து நின்று கொண்டிருப்பது தெரிந்தது. 

நன்றி - இந்தியா டுடே மார்ச் 2000

இறுக மூடிய கதவுகள் - ஆர் சூடாமணி

பார்வை மங்கியது. எதிரில் கிடந்த அம்மாவின் முகம் பனிப்படலத்தினூடே மொத்தையாய்த் தெளிவின்றித் தெரிந்தது. கண் டாக்டர், மருந்து போட்டுக் கண் பாப்பாக்களை விரித்து வைத்தால் இருக்குமே, அந்த மாதிரி.

கண்களைத் துடைத்துக்கொண்டேன்.

இந்தக் கண்ணீர் ஏதோ நிமோனியாவில் காய்ச்சல் தகிக்க ஆக்ஸிஜன் குழாயினால் மூச்சு விட்டுக்கொண்டு நினைவின்றிப் படுத்திருக்கும் அம்மாவுக்காக மட்டும்தானா?

எனக்காகவும்தான்.

மற்றவருக்காக அழும்போது அந்த அழுகை பெரும்பாலும் நமக்காகவேதான் இருக்கிறது. நாம் அவருக்குச் செய்யத் தவறிய கடமைகளுக்காக, அவரிடம் காட்டாத அனுதாபத்துக்காக, அவரைப் புரிந்து கொள்ளாமல் போனதற்காக.

அம்மாவுக்கு மாநிறம். இப்போது காய்ச்சல் வேகத்தில் கறுப்பாகவே தெரிந்தாள். கரிய முகத்தில் ஜுரப் பளபளப்பு. கரிய முடியில் தலை சாமான் வைத்துக் கட்டியது போல், வகிட்டையொட்டி நெற்றியின் மேல் விளிம்பில் இருபுறமும் வெள்ளை முடி. திலகமில்லாத வெறும் நெற்றி, எனக்கு நினைவு தெரிந்த நாளாக வெறுமையாய் இருந்து வரும் நெற்றி.

டாக்டர் இனி அதிக நம்பிக்கை இல்லை என்று சொல்லி விட்டார். அதாவது, ‘‘பார்ப்போம் மிஸ்டர் கேசவன், நம்மாலான முயற்சியெல்லாம் செய்யறோம். காட் இஸ் க்ரேட்’’ என்று சொன்னார்.
அறைக் கதவிடை சலனம். வேகமாய்த் திரும்பிப் பார்த்தேன், என் மனைவிதான். என் முகம் விழுந்துவிட்டதா? என ஏமாற்றத்தை அவள் உணர்ந்திருக்க வேண்டும்.

‘‘யாரை எதிர்பார்க்கிறீங்க?’’

‘‘ம்? யாரையுமில்லே.’‘

‘‘இந்த நேரத்துக்கு நான்தான் வருவேன்னு உங்களுக்குத் தெரியும்.’’

‘’ஆமாம்.’’

‘’பின்னே?’’

‘‘பின்னே? ஒண்ணுமில்லே.’’

‘‘நாலு நாளா கவனிக்கறேன். வீட்டிலேயும் சரி, இங்கேயும் சரி, அடிக்கடி வாசல் பக்கமே பார்த்துக்கிட்டிருக்கீங்க. யாரை எதிர்பார்க்கறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கக்கூடாதா?’’

அவள் குரலில் சற்று சூடு உறைத்தது. நியாயம் இருக்கும் இடத்தில் சூடு அவசியம் இருக்கும். அன்பான மனைவி. முகம் கோணாமல் என் தாயைக் கவனித்துக் கொள்பவள். நான் யாரை எதிர்பார்க்கிறேன், யாருக்கு அம்மா உடல்நிலை பற்றி எழுதி அனுப்பியிருக்கிறேன் என்று அறிந்துகொள்ள அவளுக்கு உரிமை இல்லையா என்ன? ஆனால், அது அம்மாவின் உரிமையில் குறுக்கிடுவதாயிருந்தால்? யாருக்கும் தம் அந்தரங்கத்துக்கான உரிமை உண்டல்லவா?

‘‘முக்கியப்பட்ட யாருமில்லை நீலா’’ என்று பொய் சொன்னேன்.

‘‘இருந்தாலும் எனக்குச் சொல்றது! யாரது?’’

‘‘எங்களோட ஒரு பழங்காலக் குடும்ப நண்பர். அப்பாவுக்கு ரொம்ப வேண்டியவர். சொந்தம்னு அதிகமா யாருமில்லாத எங்களுக்கு அவரை ஒரு சொந்தக்காரராய் நினைச்சு, அம்மா முடியாமல் படுத்திருக்கிறதைத் தெரிவிச்சிருக்கேன், அவ்வளவுதான்’’ என்றேன், அதில் அதிக சிரத்தை இல்லாதவன்போல்.

மிஸ்டர் செல்லப்பா இந்த ஊரில் இருந்ததே எனக்குத் தற்செயலாய்ச் சென்ற மாதம்தான் தெரிய வந்திருக்கிறது. அப்போதிலிருந்தே அம்மாவிடம் சொல்லலாமா என்ற எண்ணம், அவரை வீட்டுக்கு அழைக்க வேண்டும் என்ற துடிப்பு. என் நினைவில் தெரிந்த வாலிப செல்லப்பா வெளியூருக்கு மாற்றலாகிச் சென்று இப்போது வயோதிகச் செல்லப்பா. தம் இலாகாவின் தலைவராய்ச் சென்னைக்கே வந்து சேர்ந்திருக்கிறார். முடி பஞ்சாய் நரைத்திருக்குமோ? வழுக்கை, கைத்தடி? சே சே, அவருக்கு ஐம்பத்தைந்து ஐம்பத்தாறு வயதுக்கு மேலே இருக்காதே. நிமிர்ந்த உடலும் சுறுசுறுப்பான நடமாட்டங்களும் கருமை மாறாத தலைமுடியுமாய் நாற்பது என்று மதிக்கத்தக்க எத்தனையோ ஐம்பத்தைந்துகளை நான் பார்த்ததில்லையா என்ன? இது ஓர் அசட்டுத்தனம், நமக்கு முந்தைய தலைமுறை என்றதுமே தொண்டுக் கிழமாய்க் கற்பனை செய்து கொள்வது. குழந்தைக் கண்களுக்குத்தான் முப்பது என்றாலே முதுமை. என் வயதிலுமா?

அவரை நான் வீட்டுக்கு அழைக்கவில்லை. அம்மாவிடம் சொல்லக்கூட இல்லை. சொல்லவேண்டுமென்று நினைத்துக்கொண்டே இருக்கையில் அம்மா கடுமையான நிமோனியாவில் படுத்துவிட்டாள்.

அம்மா முகத்தைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். மனம் உணரும் உணர்ச்சிகளையெல்லாம் பேச நாவுக்குத் திறமை இல்லை. ஆனால் கண்களுக்கு உண்டு. உணர்ச்சிகள் வெள்ளமிட்டு வரும்போது கண்களால் மட்டும்தான் பேச முடிகிறது. புலன் ஆற்றல் ஒன்று இடம் மாறிப் போகிறது.

‘‘என்ன அப்படியே உட்கார்ந்திருக்கீங்க? எழுந்து வீட்டுக்குச் கிளம்புங்க. நான்தான் வந்துட்டேனே!’’
நான் மெள்ள எழுந்து கொண்டேன்.

‘‘அப்பப்பா! இன்னிக்கு அந்த ரெண்டு வாலுங்களையும் ஸ்கூலுக்கு அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சு. ‘அப்பா லீவு போட்டிருக்காரே, நாங்க மட்டும் போடக்கூடாதோ?’ன்னு ஒரே ரகளை. சாயங்காலம் அதுங்க வர்றப்பக் கொஞ்சம் அதட்டி, கொஞ்சம் நயமாப் புத்தி சொல்லி, டிபன் சாப்பிட்டுட்டுப் பாடம் படிக்கச் சொல்லுங்க’’ என்றாள் நீலா.

‘‘ஆஸ்பத்திரிக்கு வந்து பாட்டியைப் பார்க்கணும்னு அருண் நேத்தே சொன்னான். சாயங்காலம் அழைச்சிட்டு வரட்டுமா? பார்த்துட்டு உன்கூட வீட்டுக்குத் திரும்பிடட்டுமே?’’

அவள் கணநேரம் யோசித்தாள். ‘‘எதுக்கு… இப்ப எதுக்குங்க? சின்னப்பையன். இந்த ஆக்ஸிஜன் குழாயையெல்லாம் பார்த்து பயந்துப்பான். நாலு நாள் போகட்டுமே, அதுக்குள்ள அத்தைக்கும் கொஞ்சம் குணம் தெரிஞ்சு டாக்டர் ஆக்ஸிஜனை எடுத்துடலாமில்லையா?’‘

ஆக்ஸிஜனை எடுத்து விடலாம் என்பது உண்மை. குணம் தெரிவதால்தானா? இன்னொரு சாத்தியக்கூறு பற்றி நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. எங்கள் மௌனத்துள் அது ஆயிரம் நாவுகளோடு பதுங்கியிருந்தது.

நீலா பகலுணவு சாப்பிட்டாகி விட்டது. கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தையும் பிற்பகல் காப்பி இருந்த பிளாஸ்கையும் மூலையிலிருந்த மேஜைமேல் வைத்துவிட்டுக் கட்டிலை நெருங்கிக் குனிந்து, என் தாயின் பிரக்ஞையற்ற வடிவைச் சில கணங்கள் உற்றுப் பார்த்தாள். பிறகு என் முகம் நோக்கி நிமிர்ந்தாள். நோயாளியின் நிலையில் எவ்வித மாற்றமுமில்லை. எங்கள் கண்கள் சந்தித்தபோது பேச இவ்வளவுதான் விஷயம்.

‘‘அப்ப, நான் கிளம்பறேன் நீலா.’’

‘‘ம். ஸிஸ்டர் வந்து இன்ஜெக்ஷன் போட்டுட்டாங்க, இல்லே?’’

‘‘நான் பார்த்துக்கறேன்.’’

தெருவில் இறங்கினேன். முற்பகல் வெயில் சுள்ளென்று உறைந்தது. நான் வீடு வந்து சேர்ந்தபோது மணி பத்தரை. ஆஸ்பத்திரியிலிருந்து நடக்கும் தூரத்தில்தான் வீடு. குளித்தேன். ஹாட் ஃப்ளாஸ்கில் நீலா எனக்கு வைத்திருந்த உணவை உண்டுவிட்டு ஆயாசத்துடன் படுத்துக் கொண்டேன். ஆயாசம் வெயிலினால்; ஐந்து நாட்களாய் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாய் அலைவதனால்; அம்மாவைப் பற்றிய கவலையினால்; மனப்பாரத்தால்.

இரவு முடிய ஆஸ்பத்திரியில் அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து கண் விழித்திருந்ததால் இப்போது கண்கள் எரிந்தன. மூடிக்கொண்டேன். விட்டு விட்டுத் தூக்கம். அதில் கனவென்று சொல்லமுடியாத தாறுமாறான பிம்பங்கள். அமுங்கி அமுங்கி வெளிவரும் அம்மாவின் முகம். கூட ஓர் எட்டுவயதுச் சிறுவன். ஒரு விநாடி கண்களைத் திறந்துவிட்டு மூடினேன். மறுபடியும் தூக்கமா? இப்போது வேறொரு முகம். சிவந்த, நீளவாட்டு முகம். இதமான புன்சிரிப்பு. பிரகாசக் கண்களில் ஆழமான பார்வை. சுருட்டை கிராப். நான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்த முகமும் நழுவியது. திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன்.
புரண்டு படுத்தேன். மறுபடியும் அரைத் தூக்க நிலை. கண்களுள் மீண்டும் இளம் அம்மாவின் முகம். அதில் ஒருவித ஆவல். உதடுகள் ஏதோ சொல்கின்றன. சிறுவனின் கண்களில் அதிர்ச்சி. மறுப்புக் குறியில் தலை இடவலமாய் அசைகிறது. மறுபடியும் விழித்துக் கொண்டேன். உடல் முழுவதும் வியர்வை. ஆழ்ந்த, தொடர்ச்சியான உறக்கமில்லாததால் ஓய்வு எடுத்த உணர்வே இல்லை. எழுந்து உட்கார்ந்து கடிகாரத்தைப் பார்த்தேன். பிற்பகல் மூன்று மணி. போய் முகம் கழுவிக்கொண்டு காஸ் அடுப்பை ஏற்றிப் பாலைக் காய்ச்சி, உப்புமா செய்தேன்.

வாசல் மணி ஒலிப்பது கேட்டது. ஓடிப் போய்க் கதவைத் திறந்தேன். தபால்காரர், ஒரு நண்பர் வீட்டுத் திருமணத்துக்கு வந்திருந்த அழைப்பிதழைக் கொடுத்துவிட்டுப் போனார்.

நான் எதிர்பார்த்தவர் வரவே மாட்டாரா? அம்மாவின் உயிர் பிரியுமுன் அவள் முகத்தையாவது அவர் பார்க்கட்டும் என்று எண்ணி அவள் உடல்நிலை பற்றியும் மற்ற விவரங்களையும் அவருக்கு எழுதியிருந்தேனே, அந்த அற்பப் பணி செய்வதுகூட எனக்குக் கொடுத்து வைக்கவில்லையா? நேரில் போய்ச் சொல்லலாமென்றால் காலையும் மாலையும் அவர் வீட்டில் இருக்கும்போது நான் ஆஸ்பத்திரியில் அம்மாவுடன் இருக்கிறேன். பகல் முடிய எனக்கு நேரம் இருக்கும்போது அவர் அலுவலகம் போயிருப்பார். நீலாவைப் போய்ச் சொல்லச் சொல்லலாமென்றால் அவளுக்கு இவ்விஷயத்தின் முக்கியத்துவம் தெரியாது. அதை அவளுக்கு விளக்க எனக்குத் தயக்கம்தான். இன்று மாலை ஆஸ்பத்திரிக்குப் போனபின் சிறிது நேரம் பணிப்பெண் எவளையாவது அறைக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு நானே போய் அவரிடம் சொல்லிவிட்டு வந்தால் என்ன? டாக்டரின் முகமோ, ‘இன்னும் அதிக காலமில்லை’ என்று சொல்லிவிட்டது. இன்னும் இரண்டு நாட்கள் ஞாயிற்றுக்கிழமைக்காகக் காத்திருந்தால் காலம் கடந்து விடலாம்.

மாலை நாலரை மணிக்கு என் குழந்தைகள் பத்மாவும் அருணும் பள்ளியிலிருந்து திரும்பினார்கள். அவர்களுக்குச் சிற்றுண்டியும் காப்பியும் கொடுத்துவிட்டு நீலாவுக்குத் தனியாய் எடுத்து வைத்துவிட்டு நானும் உட்கொண்டேன்.

‘‘பாட்டி இன்னிக்கு எப்படிப்பா இருக்காங்க?’’ என்றான் அருண்.

‘‘அப்படியேதான். புதுசா ஒண்ணுமில்லே.’’

‘‘நான் உங்ககூட ஆஸ்பத்திரிக்கு வந்து பாட்டியைப் பார்க்கறேம்ப்பா!’’

‘‘அண்ணா வந்தா நானும் வருவேன்’’ என்றாள் பத்மா.

‘‘ரெண்டு பேருமே இப்ப வேணாண்டா கண்ணு.’’ பத்மாவைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டேன். ‘‘ஒருநாள் ரெண்டுநாள் போகட்டும். பாட்டிக்கு எப்படி இருக்குன்னு பார்த்துக்கிட்டு நானே உங்களை அழைச்சுக்கிட்டுப் போறேன்.’’

‘‘இப்ப கொஞ்ச நேரத்தில் நீங்க ஆஸ்பத்திரிக்குப் போயிடுவீங்க. நாங்க ரெண்டு பேரும் தனியாத்தானே இருக்க வேண்டியிருக்குது?’’

‘‘தனி என்ன? ஒரு அரை மணி நேரம் பக்கத்து வீட்டு ஆன்ட்டிகிட்டப் போய் இருக்கப் போறீங்க. அரை மணியில் அம்மா ஆஸ்பத்திரியிலேர்ந்து திரும்பி, உங்களை வந்து அழைச்சுக்கிட்டு இங்கே வந்துடப்போறாங்க.’’

‘‘நீங்க எப்பப்பா மறுபடியும் ராத்திரியிலே வீட்டியே இருப்பீங்க? எனக்குத் கதை சொல்லுவீங்க?’’ என்று என் மேல் நெருங்கி ஒன்றிக்கொண்டாள் பத்மா. அவள் தலைமுடியைக் கோதி முத்தமிட்டேன்.

‘‘பாட்டி, ஆஸ்பத்திரியில் இருக்கிற வரைக்கும் நான் அவங்ககூட துணைக்கு அங்கே இருக்க வேண்டாமா கண்ணு? சொந்த மனுஷங்க யாரானும் கூடவே இருக்கணும்னு டாக்டருங்க சொல்றாங்களே. அதனாலதானே அம்மாவும் நானும் மாத்தி மாத்திப் பாட்டியோடு இருக்கோம்.’’

‘‘ஊஹும், நீங்க இங்கேதான் இருக்கணும். ஆஸ்பத்திரிக்குப் போகக்கூடாது.’’

அழத் தொடங்கிய குழந்தையைத் தேற்றிச் சமாதானப் படுத்தினேன். ‘‘அழக்கூடாதும்மா கண்ணு. சமர்த்தில்ல? ராத்திரியில் பாட்டி கண் விழிச்சுப் பார்த்து ‘ஐயோ, நம்ம மகன் இங்கே இல்லையே’ அப்படின்னு வருத்தப்படக்கூடாதில்லையா? பாட்டி வீட்டுக்கு வந்ததுமே நானும் வந்துடுவேனே! அப்புறம் ராத்திரியிலேயும் வீட்டில்தான் இருப்பேன். பத்மாவுக்கு ஒவ்வொரு ராத்திரியும் புதுப்புதுக் கதையெல்லாம் சொல்லுவேன்…’’

இந்தக் குழந்தை சொல்வதைக் கேட்டு நான் ஆஸ்பத்திரிக்குப் போகாமலே இருந்தால் எவ்வளவு தவறாக, அநியாயமாக இருக்கும்! குழந்தைகளுக்கு என்ன தெரியும்? அவர்களுடைய பேச்சில் எதைப் பெரிதாய் எடுத்துக்கொண்டு மதிப்பளிக்க வேண்டும் என்னும் அறிவும் தெளிவும் பெரியவர்களுக்கல்லவா இருக்க வேண்டும்?

அம்மா ஏன் அந்த எட்டு வயதுச் சிறுவனின் பேச்சைக் கேட்டாள்?

மறுபடியும் மாலையில் ஆஸ்பத்திரி, அம்மாவின் பிரக்ஞையற்ற உருவம்.

‘‘டாக்டர் வந்தாரா நீலா?’’

‘’ம்…’’

‘‘புதுசா ஏதானும் சொன்னாரா?’’

‘‘ஊஹும், மருந்துகள், இன்ஜெக்ஷன், ஆக்ஸிஜன், காட் இஸ் கிரேட் எல்லாமே வழக்கம்போல்.’’

சற்றுத் தயங்கிவிட்டு, ‘‘அவர் வந்திருந்தாரா? அதான், நான் சொல்லியனுப்பினேன்னு, சொன்னேனே, அந்தாளு’’ என்றேன்.

‘‘யாரும் வரல்லே’’ என்றவள் என்னைக் கூர்ந்து பார்த்தாள். ‘முக்கியப்பட்டவரில்லை என்கிற ஒருவருக்காகவா இப்படிப் பறக்கிறாய்? இதை என்னை நம்பச் சொல்கிறாயா?’ என்று கேட்கும் பார்வை.
நான் தலையைத் திருப்பிக்கொண்டேன். நீலாவுக்குச் சொல்லவேண்டியதுதான். ஆனால் அவளுக்குச் சம்பிரதாய மனம். அம்மாவைப் பற்றிக் குறைவாக நினைத்து விட்டால்?

‘‘அப்போ நான் வீட்டுக்குப் போகவா?’’

‘‘ம், கிளம்பு, குழந்தைங்க எதிர்பார்த்துக்கிட்டிருக்கும்.’’

அவள் போனபின் அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன்.

அம்மா சலனமின்றிப் படுத்திருந்தாள். செயற்கை சுவாசத்தில் நோயின் முனகல்கள் ஏதுமில்லை. மார்பு சீராய் ஏறி இறங்கியது. ஒருகால் இந்த மயக்கத்தின் திரைக்குப் பின்னே, ஆழ்மனத்தில், வேறேதோ ஒரு காலத்தில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறாளா?

நெற்றியின் கோடுகள். வாழ்வின் தடங்கள். அதில் ஒரு தடத்தில் நிற்கும் அம்மா. இளைய அம்மா. பயம் கலந்த ஒரு சந்தோஷத்தில் உருவமே வேறாகி ஒளியால் நிறைந்தது போன்ற அம்மா. அவள் அணைப்பினுள் எட்டு வயதுப் பையன்.

‘‘செல்லப்பா அங்கிளை உனக்குப் பிடிச்சிருக்குதா கேசவா?’’

‘‘ஓ… ரொம்பப் பிடிக்குமே!’’

‘‘எனக்கு… எனக்குக்கூட அவரைப் பிடிக்குதுடா கண்ணா!’’

‘‘நல்ல அங்க்கிள் அவரு.’’

‘‘அவரை… அந்த நல்ல அங்கிளை… உனக்கு அப்பாவாய்ப் பண்ணட்டுமா?’’

பையன் முகத்தில் ஒன்றும் புரியாத வெற்றுப் பார்வை. அது ஒரு தடை என்பதுபோல், அம்மாவின் முகத்தில் கணநேரத் தடுமாற்றம்.

‘’என்னம்மா?’’

‘‘அவரை… நான் கல்யாணம் செய்துக்கட்டுமா?’’

‘‘ஊஹும், கூடாது, அது தப்பு!’’

‘‘உனக்கு ஒரு அப்பா கிடைப்பார்டா கண்ணா!’’

‘‘என் அப்பா செத்துப்போய்ட்டார். நீ என் அம்மா, அம்மால்லாம் தப்புச் செய்யக்கூடாது…’’

மறுப்பில் தலையாட்டும் மகன்.

அந்தத் தலையாட்டலில் ஒரு வாழ்க்கைக் கதவை இறுக மூடிப் பூட்டிவிட்டதை அந்தச் சிறுவன் அறிய மாட்டான். நான்தான் அதை அறிந்து, உணர்ந்து, நொந்து, வெட்கி அதற்காகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தேன்.

குழந்தைகளின் உலகம் சுயத்தில் தொடங்கிச் சுயத்தில் முடிகிறது. தம்முடன் சம்பந்தப்படுத்தித்தான் எதையும் அவர்களால் பார்க்க முடியும். என் அம்மா, என் அப்பா, என் தம்பி, என் நண்பன், என் டீச்சர்.
மனிதர்களைத் தனி மனிதர்களாய்ப் பார்க்கும் ஆற்றல் ஒரு குழந்தைக்கு எப்படிச் சாத்தியமாகும்? அவனைப் பொறுத்த வரை அம்மா ஒரு பெரியவள், தன் அம்மா, தன்னைப் பார்த்துக்கொள்கிறவள். தன் பாதுகாப்பான பின்னணி.

அம்மாவை முப்பது வயதான வாலிப மங்கையாக, எதிர்பார்ப்புகள் நிறைந்தவளாக, வருங்காலம் தன் முன் நீண்டு கிடக்கக் காண்பவளாக, இனம் கண்டு கொள்கிற முதிர்ச்சியும் விலகி நின்று வெறும் பார்வையாளராய்ப் பார்க்கும் தெளிந்த கண்டோட்டமும் ஒரு குழந்தைக்கு எப்படி வரும்?

அந்தக் குழந்தையின் பேச்சை நீ ஏனம்மா கேட்டாய்? தன் அம்மா என்பதற்குமேல் நினைக்கத் தெரியாத குழந்தையின் பேச்சை ஏன் கேட்டாய்? விதவை மறுமணம் தவறு என்று கருதும் ஒரு மரபுச் சமுதாயத்தின் வார்ப்படமான குழந்தையின் பேச்சை ஏன் கேட்டாய்? முதலில் ஒரு குழந்தையிடம் யோசனை கேட்பதே தவறில்லையா? குழந்தையைக் குழந்தையாகவே வைத்துவிட்டு உன் இதயம் காட்டிய வழியில் நீ சென்றிருந்தால் அந்தக் குழந்தை முதலில் முரண்டியிருக்கலாம். ஆனால் நான் புரிந்து கொண்டிருப்பேன், மகிழ்ந்திருப்பேன். இரண்டு பேரின் சந்தோஷ வாய்ப்பைக் கெடுத்துவிட்ட குற்றச் சுமையை நெஞ்சில் தாங்கி இப்படி வருஷக்கணக்காய்ப் பரிதவித்துக் கொண்டிருக்க மாட்டேன்.

எல்லாம் வேறுவிதமாய் நடந்திருந்தால்!

அம்மாவின் நெற்றியில் குங்குமம், சிரிப்பில் சந்தோஷம், முகத்தில் பிரகாசம். முதுமையும் மரணமும் யாருக்கும் நேர்வதுதான். ஆனால் தனிமை இருந்திருக்காது. நாளுக்கு நாள் வளர்ந்து பெரியவனாகித் தன் வாழ்வை நோக்கிக் கிளை பிரிந்து போகும் மகன் – அடுத்த தலைமுறையினன் – எத்தனை பாசமிருந்தாலும் எந்த அளவுக்குத் தோழனாயிருக்க முடியும் பெற்றவளுக்கு?

அம்மாவின் தலைமுடியைத் தடவிக் கொடுத்தேன். கன்னத்தைத மெல்லத் தீண்டினேன். கையைப் பற்றினேன். எதற்குமே அவளிடம் எதிர் விளைவு இல்லை. உடம்பில் அசைவில்லை.

அம்மா, அம்மா, உன்னை எப்படி எட்டுவேன்? உன்னுடன் நான் எத்தனையோ பேசவேண்டும். எனினும் என் நாவு புரளவில்லை. நான் பேசினாலும் உனக்குக் கேட்காது. ஆனால் உன் மனம் என் மனத்தை உணர்கிறதா? என் அன்பை, என் துயரத்தை, என் கழிவிரக்கத்தைப் பேச்சின்றியே புரிந்துகொள்கிறாயா? இப்போது உடல் குலுங்க நான் மௌனமாய்க் கொட்டும் இந்தக் கண்ணீர் உனக்காக மட்டுமல்ல. எனக்காகவும்தான் என்பதை நீ உணர்கிறாயா அம்மா? உணர்ந்து என்னை மன்னிக்கிறாயா?
நெடுநேரம் ஆகியிருக்குமென்று நினைக்கிறேன். தலை நிமிர்ந்து மூக்கை உறிஞ்சிக் கண்களைத் துடைத்துக் கொண்டேன். குளியலறைக்குச் சென்று வாளியிலிருந்து சிறிது நீரை முகத்தில் இறைத்துக் கழுவிக் கொண்டேன்.

மணி எட்டை நெருங்கியிருந்தது. ஒரு நர்ஸை அழைத்த அம்மா பக்கத்தில் அமர்த்திவிட்டு மிஸ்டர் செல்லப்பாவின் வீட்டுக்கு நான் போய்…

எண்ணம் முடியவில்லை. எதிரே, அறைக்கதவுக்கு வெளியே நின்றிருந்தவரை என் கண்கள் கண்டுகொண்டன.

சிவந்த நீளவாட்டு முகத்தில் இப்போது சில சுருக்கங்கள். சுருள் முடியில் அங்கங்கே நரை. எனினும் அந்த முகத்தின் நேர்த்தியை, இதமான புன்சிரிப்பை, ஒளிமிக்க விழிகளை, எட்டு வயதுப் பையனுக்குப் பரிச்சயமான அவன் அப்பாவின் நண்பரை, எனக்கும் அடையாளம் புரிந்தது.

பேசத் தெரியாமல் அவரையே பார்த்துக்கொண்டு நின்றேன். வந்துவிட்டார். வந்துவிட்டார். வந்துவிட்டார்.

‘‘கேசவ்? கேசவன்தானே? நான் செல்லப்பா.’’

அந்தக் குரலும் மாறவில்லை.

‘‘தெரியும்’’ என்று எப்படியோ தடுமாறிக் கூறினேன்.

‘‘நான் ரெண்டு வாரமா ஊர்ல இல்லை. இன்னிக்குச் சாயங்காலம்தான் வந்தேன். உன் – உங்க – லெட்டரைப் பார்த்தேன். உடனே கிளம்பி வந்தேன்.’’

அவர் கண்கள் படுக்கைமீது கிடந்த உருவத்தில் சென்று நிலைத்தன. உதடுகள் லேசாய்த் துடிப்பது தெரிந்தது. அவர் பார்வையில் ஒரு வாழ்நாளின் உணர்ச்சிகள் அனைத்தும் ஒருங்கே கட்டவிழ்ந்து உடைந்தன. கணப்பொழுதில் அம்மாவுடன் அவர் அங்கே தனியாய் இருந்தார். இது அவ்விருவருடைய கணம். அவர்களுடையதாய் இருந்திருக்க வேண்டிய எத்ததனையோ ஆண்டுகளின் ஒரு சின்னஞ்சிறு, கடைசிப் பிரதிநிதி.


‘‘உள்ளே வந்து உக்காருங்க ஸார். நான் இதோ வந்துடறேன்’’ என்று கூறி அந்த அறையைவிட்டு நான் வெளியேறினேன்.

நன்றி - கல்கி 1988

நின்று எரியும் விளக்கு ஆர்.சூடாமணி - சு.இரமேஷ்


எழுத்தே உயிர்மூச்சாகக் கொண்டிருந்தவர்; சமூக முன்னேற்றத்தைத் தம் எழுத்தில் அடி நாதமாக வைத்திருந்தவர்; தன் எழுத்தின் பயன் சமூக சீர்திருத்தத்துக்கு சென்று சேர வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டவர். அவர் விருப்பப்படி அவரின் மறைவுக்குப் பிறகு பல கோடி மதிப்புள்ள சொத்து இராமகிருஷ்ண மடத்துக்கே எழுதி வைக்கப்பட்டது. இத்தகு சிறப்பு மிகுந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணி 1931-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி பிறந்தவர். தந்தை ராகவன், சென்னை மாநில தலைமைச் செயலராக இருந்தார். தாய் கனகவல்லி  சிற்பம், ஓவியத்தில் ஈடுபாடு மிக்கவர். பின்னாள்களில் சூடாமணி தன்னை ஓர் ஓவியராக நிலைநிறுத்திக் கொள்ள அவருடைய தாயும் காரணமாக இருந்திருக்கிறார். சூடாமணியோடு பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன்.

எல்லாக் குழந்தைகளையும் போல ஆரோக்கியமாக வளர்ந்த சூடாமணிக்கு, ஐந்தாம் வயதில் அம்மை நோய் தாக்கியது. பலகட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு மரணத்துக்கு மிக அருகில் சென்று மீண்டு வந்தார். ஆனாலும் அம்மை நோயிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. இவரின் இயல்பான உடல் வளர்ச்சி தடைபட்டது. வளர்ச்சி குறைவான குழந்தையாகவே வளர்ந்தார். இதன் காரணமாக இவருடைய தந்தை இவரைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. தன்னுடைய அருமை மகளுக்குப் பாடம் சொல்லித்தர ஆசிரியரை வீட்டுக்கே வரவைத்தார். கற்பதில் ஆர்வம் மிகுந்த சூடாமணி, தமிழ் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் புலமை பெற்று விளங்கினார். சூடாமணியின் வாசிப்புத்தளம் விரிவடைந்தது. புத்தகங்களுக்குத் தன்னை அடிமையாக்கிக்கொண்டார்.

சூடாமணி 1954 முதல் எழுதினாலும், இவரது முதல் சிறுகதை "காவேரி' என்னும் பெயரில் 1957-ஆம் ஆண்டு கலைமகளில் வெளியாகி பாராட்டைப் பெற்றது. இக்கதைக்காக இவருக்கு கலைமகள் வெள்ளிவிழா பரிசு வழங்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டு வெளிவந்த "மனதுக்கு இனியவள்' என்னும் நாவல் இவரை அனைவரும் அறியும்படி செய்தது. இந்நாவல் சூடாமணியின் வாழ்க்கையை மறைமுகமாகப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது. தன் வரலாற்றுச் சாயல் கொண்டது. உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்த இந்நாவலுக்கு  சிறந்த நாவலுக்கான கலைமகள் ஸ்ரீநாராயணசாமி ஐயர் விருது வழங்கப்பட்டது.

சூடாமணி, விவேகானந்தர் மீது அளவற்ற அன்பும் காந்தியத்தின் மீது நம்பிக்கையும் கொண்டவராக இருந்தார். எளிமையான வெண்மைநிற ஆடைகளை அணிவதையே விரும்பினார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிகதிர், கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், இந்தியா டுடே, புதிய பார்வை போன்ற இடைநிலை மற்றும் வணிக இதழ்களில் தொடர்ந்து எழுதினார். பெண் எழுத்தாளர் பலரை உருவாக்கிய கலைமகள் இதழ்தான் இவரையும் உருவாக்கியது. அதனால், "கலைமகள் எழுத்தாளர்' என்றே தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தமிழைத் தவிர ஆங்கிலத்திலும் "சூடாமணி ராகவன்' என்ற பெயரில் புனைகதைகளை எழுதியுள்ளார். இவருடைய நாவலொன்று "யாமினி' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "சிரத்தையான எழுத்துக்கும் வெகுஜன எழுத்துக்குமிடையே உள்ள இடைவெளியை நிரப்பியவர் சூடாமணி' என்று விமர்சகர்களால் அடையாளம் காணப்பட்டவர். தமிழில் பெண்ணியமும் அதுசார்ந்த கோட்பாடுகளும் உருவாவதற்கு மறைமுகமாகக் களம் அமைத்துக் கொடுத்தவர் என்பதை அவரது படைப்புகளை வாசித்தவர்கள் நன்கறிவார்கள். ஆனாலும் தன்னை ஒரு பெண்ணியவாதியாக வெளிக்காட்டிக் கொள்ளாதவர்.

சூடாமணியின் பெரும்பான்மையான கதைகள் குடும்பம் சார்ந்தவை. மனிதனின் ஆழ்மனச் சிக்கலை உளவியல் பூர்வமாக ஆராய்பவை. குழந்தைகள் குறித்து இவர் எழுதிய கதைகள் மிக முக்கியமானவை. தனக்குக் கிடைத்த வாழ்க்கையை அதன் குறைகளோடு ஏற்றுக்கொண்ட சூடாமணி தன் எழுத்தின் வழியே அன்பை விதைத்தவர்;  உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுத்தவர்; "உளவியல் எழுத்தாளர்' என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

ஒளியின் முன், என்ன மாயமோ, பணம் பறித்த செல்வம், அவன் வடிவம், படிகள், உடன் பிறப்பு, அந்த நேரம், ஓர் இந்தியன் இறக்கிறான், உலகத்திடம் என்ன பயம், சூடாமணி கதைகள் போன்றவை இவருடைய சிறுகதைத் தொகுப்புகள். இவை தவிர, விடிவை நோக்கி, ஆழ்கடல், சோதனையின் முடிவு, வாழ்த்துவோம், உள்ளக்கடல், இரவுச்சுடர், முக்கோணம் போன்ற குறுநாவல்களும் புன்னகைப் பூங்கொத்து, நீயே என் உலகம், தீயினில் தூசு, தந்தை வடிவம், மானிட அம்சம், கண்ணம்மா என் சகோதரி போன்ற நாவல்களும் எழுதியுள்ளார். தற்போது "நாகலிங்க மரம்' என்ற பெயரில் இவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு வெளியாகியுள்ளது.  புனைகதைகள் தவிர்த்து நாடகங்கள் எழுதுவதிலும் சூடாமணி ஈடுபாடு கொண்டிருந்தார். இருவர் கண்டனர், அருணோதயம், அருமை மகள் ஆகியவை நாடகத் தமிழுக்கு சூடாமணியின் பங்களிப்பு. இவரின் சிறுகதைகள் சின்னத்திரை வடிவம் பெற்றன. "காவலை மீறி' என்னும் குறுநாவல் பி. லெனின் இயக்கத்தில் தொலைக்காட்சியில் வெளியானதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்!

பரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத இவருக்கு இலக்கியச் சிந்தனை பரிசை பலமுறை இவரது கதைகள் பெற்றுத்தந்தன. இருவர் கண்டனர் என்ற நாடகம் ஆனந்த விகடன் நடத்திய நாடகப் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றது. மும்பை தமிழ்ச் சங்க விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. சூடாமணிக்கு 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தகக் காட்சியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சிறப்புச் செய்தது. 

இத் தொகையைக்கூட பல்வேறு சேவை அமைப்புகளுக்குப் பகிர்ந்தளித்து மனநிறைவடைந்தார் சூடாமணி. தவிர, 2001-இல் வெளியான "ஆர்.சூடாமணி கதைகள்' என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு வழங்கப்பட்டது.

2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி சூடாமணி காலமானார்.

அவர் தன் வாழ்நாளில் சேர்த்துவைத்த புத்தகங்கள் அனைத்தும் அவர் விருப்பப்படி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. விலை மதிப்பில்லாத இவருடைய ஓவியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. கைம்மாறு கருதாமல் தன் சொத்துகளை சேவை இல்லங்களுக்குக் கொடுத்துச்சென்ற சூடாமணிக்கு அவரது எழுத்துகளைப் படிப்பதன் மூலம் நன்றி சொல்லலாம்!

நன்றி - தமிழ்மணி

இணைப் பறவை - ஆர்.சூடாமணி

வாசலில் அரவம் கேட்டது. முன் அறை ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்த தாத்தா வேகமாகப் பின் கட்டுக்குச் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் ஸ்ரீமதி அவரைத் தேடிக்கொண்டு அங்கே வந்தாள்.

"யாரோல்லாம் வந்திருக்கா தாத்தா"

"தெரியும்."

"அங்கே வரேளா?"

"ம்ஹூம்."

"உங்களைப் பார்க்கத்தானே அவா...."

"எனக்கு யாரையும் பார்க்கவேணாம். நீயே அவா சொல்றதையெல்லாம் கேட்டுண்டு அனுப்பிச்சுடு."

"உங்களைப் பார்க்காம போவாளா ?"

"ஏதானும் காரணம் சொல்வேன். எனக்கு உடம்பு சரியாயில்லேன்னு சொல்லேன்"

"நம்பவே மாட்டா"

"அப்போ நான் செத்துப் போயிட்டேன்னு சொல்லு போ"

ஸ்ரீமதி மறு பேச்சில்லாமல் திரும்பினாள். நெஞ்சம் கனத்தது. இதுவரை தாத்தாவிடம் எத்தனை பேர் வந்து விட்டார்கள், தம் சொல்லடுக்குகளுடன்! பாடம் ஒப்பிகிற மாதிரிதான். "பாவம் இந்த வயசில் உங்களுக்கு இந்த கஷ்டம் வந்திருக்க வேணாம்". "போனவ புண்ணியவதி, பழுத்த சுமங்கலியாய் மஞ்சக் குங்குமத்தோட ஜம்னு கல்யாணப் பொண்ணாட்டம் போய்ட்டா. அதை நினைச்சுத்தான் நீங்க மனசைத் தேத்திக்கணும்". "பிள்ளையும் மாட்டுப் பெண்ணும் உங்களை உள்ளங்கையில் வச்சுத் தாங்கறா. பேரன் பேத்திகளுக்கு உங்க மேல உசிரு. அதை நினைச்சு ஆறுதாலாயிருங்கோ."

"பாவம் தள்ளாத வயசில் உங்களுக்கு எப்பேர்ப்பட்ட இடி !...." ஸ்ரீமதிக்கே அதெல்லாம் அர்த்தமற்ற, உயிரற்ற, உண்மையின் விளிம்பைக்கூட நெருங்காத, வார்த்தைக் குப்பையாகத் தோன்றியதென்றால். தாத்தாவுக்கு எப்படி இருக்கும்...?

வந்தவர்களை அப்படி பேசி வெளியே அனுப்பிவிட வேண்டுமென்ற உறுதியோடு அவள் சென்றாள். ஆனால் பயனில்லை; அவள் நாசூக்காக எவ்வளவு உணர்த்தியும் கேட்காமல் அவர்களில் ஒருவர் தாத்தாவைப் பார்த்தே தீருவதென்று பின் கட்டுக்கு வந்து விட்டார்.

"என்ன, மிஸ்டர் சாரி...."

மாட்டுக்கொட்டிலின் பக்கத்தில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவின் உடல் விறைத்துக் கொண்டது.

"யாரு! வரதனா ? வாங்கோ, ஆகாசத்தைப் பார்த்தேளா ? மழை வரும்போல இல்லே?" என்றார் தாத்தா திரும்பாமலே.

வந்தவர் திகைத்துப் போனார். சட்டென்று பேச முடியவில்லை....

"என்ன பேசவே காணோம் ? மழை வந்தா இப்போ ஊரிலிருக்கிற தண்ணிக் கஷ்டத்துக்கு விமோசனம் பிறக்கும், இல்லையா ?" என்றார் தாத்தா தொடர்ந்து. பிறகு திரும்பி நின்று வந்தவரைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

"நீங்க அப்படி நினைக்கல போலிருக்கு. அதுவும் சரிதான். நம்ம வறட்சிக்கு கொஞ்ச மழை போறாதுதான். நன்னா அடிச்சுப் பெய்யணும், உங்களுக்கு என்ன தோண்றது?"

துக்கம் விசாரிக்க வந்தவர் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டார். "விஷயத்தைக் கேள்விப்பட்டேன் மிஸ்டர் சாரி. அப்போ நான் ஊரில்லே. திருச்சிக்கு ஒரு காரிய்மாப் போயிருந்தேன். வந்ததுமே இப்படின்னு சொன்னா. மனசு ரொம்ப சங்கடப்பட்டுது. ஆறுதலா உங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே...."

"உங்க ரெண்டாவது பையன் ஏதோ இன்ட்டர்வ்யூக்குப் போயிருந்தானே என்ன ஆச்சு ?"

"நீங்க அதை நெனைக்கூடாதுன்னு இருக்காப்ல இருக்கு. ரொம்ப விவேகந்தான். துக்கத்துக்கு இடம் கொடுத்தா அப்புறம் மனுஷன் மீளமுடியாது. நீங்களாவே தான் எப்படியோ மனசைத் தேத்திக்கணும். இந்த வயசில் உங்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்திருக்கப்படாது. என்னதான் மாமி தன் வரைக்கும் ஒரு குறையும் இல்லாம மகாலக்ஷ்மியாட்டம் போய்ட்டாள்னாகூட......"

"பாங்க் வேலையாத்தானே அந்த இன்ட்டர்வ்யூ ? அல்லது வேறேதும் கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டுருந்தானா ? "

வரதன் அவரை வெறிக்கப் பார்த்தார். ஒரு விநாடி மனத்தில் மின்னிய சந்தேகத்தை அடக்கிக் கொண்டார். சேச்சே அப்படியெல்லாம் இருக்காது.

"சில சிநேகிதாளோடு வந்திருக்கேன். அவாளுக்கு எங்கேயோ கடைத் தெருவுக்குப் போகணுமாம்...இத்தனைப் பெரிய உலகித்தில் மாமிக்குத்தான் இடமில்லாமல் போய்டுத்து ? ஆனா நம்ம கையில் என்ன இருக்கு ? எல்லாம் அவன் செயல். உயிர் என்னிக்கிருந்தாலும் அநித்தியந்தான். மனசைச் சமாதானப் படுத்திகணும். பெருமாள் உங்களுக்கு அதுக்கான தெம்பை கொடுக்கட்டும். தைரியமாய் இருங்கோ ஸார்... இந்த மாதிரி சந்தர்ப்பத்திலே போயிட்டு வரேன்னு சொல்லக்கூடாதுன்னு சொல்வா...."

"அப்போ கிளம்பிட்டேளா ? சரி போயிட்டு வாங்கோ. இன்னொரு நாள் சாவகாசமா வாங்களேன். வெய்யத்தாழ வந்தால் 'ப்ளெஸண்ட் வாக்'காகவும் இருக்கும்" என்றார் தாத்தா.

வந்தவர் போனபோது தன் நண்பர்களிடம் , "என்னைக்குமே மண்டைக்கனந்தான். இந்த சந்தர்ப்பத்தில் கூட மூஞ்சி கொடுத்துப் பேச இஷ்ட்டப்படலே பாருங்களேன். அந்தம்மா எப்படித்தான் இந்த மனுஷன் கூட குடித்தனம் பண்ணினாளோ, பாவம் !" என்று சொல்லிக்கொண்டு போனது ஸ்ரீமதியின் காதில் விழுந்தது. அவள் மீண்டும் கொல்லைப் பக்கம் வந்தாள்.

தாத்தா இப்போது வானத்தைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பார்வையை இறக்கி மாட்டுத் தொழுவத்தைப் பார்த்தார். அதனருகில் இருந்த துணி துவைக்கும் கல்லைப் பார்த்தார். பிறகு வேலியாகப் படர்ந்திருந்த மல்லிகைக் கொடிகளைப் பார்த்தார். ஒவ்வொன்றையும் பார்வை தடவிக் கொடுப்பதுப்போல் இருந்தது. பாட்டி தொழுவத்திலே மாட்டுக்கு தவிடும், பிண்ணாக்கும் வைப்பது, கல்லில் தன் மடிப்புடவையைத் தோய்ப்பது, மல்லிகைக் கொடிகளை ஆசையுடன் வளர்ப்பது எல்லாம் ஸ்ரீமதிக்கு நினைவு வந்தன. பாட்டி இறந்தபோது சடலத்தை தாத்தா இமைக்காமல் நோக்கினார். ஆனாலும் அழவில்லை. அப்போது சரி, பிறகு இந்த இரண்டு வாரங்களிலும் சரி, அவர் அழுது யாரும் பார்க்கவில்லை. இப்படி வீட்டை இடம் இடமாக பொருள் பொருளாக கண்களினால் வருடிக் கொடுக்கிறாரே அவ்வளவுதான் !.

வந்த சுவடு தெரியாமல் திரும்பிவிட அவள் முனைந்தபோது தாத்தாவின் பார்வை தற்செயலாக அவள் மேல் விழுந்தது.

"என்ன, இன்னும் யாரானும் வந்திருக்காளோ, துக்கம் விசாரிக்க ?"

ஸ்ரீமதி எச்சிலை விழுங்கிக்கொண்டாள். அறுபதாண்டுகால உறுதுணையின் இழப்பு. அதை இழப்பு என்று சொல்லிவிட்டால் போதுமா ? அதை ஏந்துவதற்கு வார்த்தையில் இடமுண்டா ? அறுபது ஆண்டுகள் ! பிரபவ, விபவ என்று தொடங்கி அக்ஷய வரையில் ஒரு வட்டமே முழுசாக அடங்கிவிட்ட தாம்பத்தியம். அறுபது வருடத் தோழமை மட்டுந்தானா? பாட்டியைத் தவிர இன்னொரு பெண்ணை இவர் திரும்பிக்கூடப் பார்த்ததில்லை. "நான் ரொம்ப குடுத்து வச்சவடீ" என்று பாட்டி எத்தனைதரம் கண்களில் நீர் மல்கச் சொல்லிக் கசிந்திருக்கிறாள் !. செத்த முகத்தில் கூட அந்த பரவசம் மாறாமல் இருந்தது. அதன் அர்த்ததின் விரிவுகளையெல்லாம் கேவலம் துக்க விசாரிப்பு என்ற சம்பிரதாயத்தின் எல்லைகளுக்கு அடக்கி வைக்க முடியுமா? வார்த்தைகளுக்கு எப்போது மௌனமாய் இருக்கவேண்டும் என்று தெரிவதில்லை.

"இனிமே இப்படி யாரானும் நீட்டி முழக்கிப் பேசிண்டு என்கிட்ட அழவந்தாளோ. ஜோட்டாலேயே அடிச்சு வெரட்டிடுவேன். ஜாக்கிரதை" என்றார் தாத்தா.

"சரி தாத்தா. யாரும் வராம பாத்துக்கறேன்"

"நல்ல பொண்ணு. இப்படி வா"

பின்கட்டுத் தாழ்வாரப் படிகளிலே மேல் படியில் பாட்டி வழக்கமாக உட்கார்ந்து காற்று வாங்கும் படியில் தாத்தா உட்கார்ந்துக் கொண்டார். அவளை அருகில் இருத்திக் கொண்டு அவள் கையைத் தம் கையில் பற்றிக் கொண்டார். பார்வை மறுபடியும் மல்லிகைக் கொடியில் நிலைத்தது. அவர் எதுவும் பேசவில்லை. நிறைந்து ததும்பும் பாத்திரத்திலிருந்து துளிகள் சிந்திவிடாதபடி ஜாக்கிரதையாகப் பற்றுவதுபோல், ஸ்ரீமதி அந்த மௌனத்தை வெகு கவனமாகப் பாதுகாத்தாள். தாத்தாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் சிறு சலனங்கூட ஒரு குறுக்கீடென்று கருதி அசையாமல் உட்கார்ந்திருந்தாள். அவ்வப்போது அவர் உடம்பில் ஒரு நடுக்கம் பாய்வதை மட்டும் அவளால் உணர முடிந்தது.

"அப்பா, சாப்பிட போகலாமா ?"

இரவு ஆகிவிட்டதா என்ன ? ஸ்ரீமதியின் தந்தை பின்னால் நின்று குரல் கொடுத்தப் போது, அந்த ஒலி ஒரு பாறாங்கல்லாக மௌனத்தின் மீது விழுந்தது. ஸ்ரீமதி பதறிக் கொண்டு தாத்தாவைப் பார்த்தாள். ஆனால் அவர், "ம்.. வரேன் போ" என்றார். சாதாரணமாக, ஸ்ரீமதியின் கையை விட்டுவிட்டு, "நீயும் போய் எலையிலே உக்காரு, வந்துடறேன்" என்றார். ஆனால் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்த பிறகும் அவர் வரவில்லை.

"இன்னுமா அங்கேயே இருட்டிலே வெறிச்சுண்டு உக்காண்டிருக்கார்" என்றார் ஸ்ரீமதியின் தந்தை.

"சாப்பிட வரணும்னெ மறந்துட்டாப் போல் இருக்கு" என்றான் ஸ்ரீமதியின் தம்பி. "பாட்டி இருந்தால் அவருக்கு இப்போ ஒரு டோஸ் குடுத்து அழைச்சுண்டு வருவா"

ஸ்ரீமதியின் அண்ணன் எதுவும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் புதிதாகத் திருமணம் ஆனவன். மனைவி இன்னம் வீட்டுக்கு வரவில்லை.

"இது தினம் தினம் நடக்கற கூத்தாப் போயிடுத்து" என்றாள் ஸ்ரீமதியின் தாய்.

"பாவம் அப்பா ! அவர் வாய்விட்டுக் கதறி அழுத்துட்டார்னா தேவலைன்னு எனக்கு தோன்றது. துக்கத்தை எல்லாம் இப்படி உள்ளேயே வெச்சுண்டு மறுகக்கூடாது" என்றார் ஸ்ரீமதியின் தந்தை தம் மனைவியைப் பார்த்து.

"அது என்ன துக்கமோ ! என்னதான் மனசை அடக்கிண்டாலும் நிஜமாய்த் துக்கம் இருந்துதானால் கட்டின பொண்டாட்டி செத்து கிடக்கிற போதுகூடவா கண்ணில ஜலமே வராமல் இருக்கும்?"

"நீ என்ன, அப்பாவுக்கு அம்மாமேல பிரியமே இல்லேன்னு சொல்றியா"

"நான் என்னத்தைக் கண்டேன். ஆனா இந்த ஆண்பிள்ளைகளை மட்டும் நம்பவே முடியாது"

ஸ்ரீமதி எழுந்துவிட்டாள். "நான் போய்த் தாத்தாவைக் கூப்பிட்டு வர்ரேன்" என்று சொல்லி வேகமாய் அறையை விட்டுச் சென்றாள்.

தாத்தா வந்து உட்கார்ந்துச் சாப்பிட்டார். எதுவுமே பேசவில்லை. ஸ்ரீமதியின் தாய் எப்போதும் போல அவருக்கு மரியாதையுடன் பரிமாறினாள். தாத்தா அவ்வப்போது தலை நிமிர்ந்த போதெல்லாம் அவர் பார்வை நாற்புறமும் ஏதோ தேடுவதுபோல் அலைந்தது. சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்துப் போய்க் கைக்கழுவிக் கொண்டார்.

சிப்பல் தட்டில் சாதம் எடுத்து வந்த ஸ்ரீமதியின் தாய் வியப்புடன், "என்ன மாமா, அதுக்குள்ளே எழுந்துட்டேளே?" என்றாள்.

"ஏன் ? சாப்டுட்டேன், எழுந்துண்டேன்" என்று தாத்தா பதிலளித்தார்.

"மோர் சாதம் சாப்பிடலையே இன்னும் ?"

"ஓ" என்றார் தாத்தா. பிறகு, "பரவாயில்லை, வயிறு ரொம்பிடுத்து" என்றார்.

ஸ்ரீமதியின் தந்தை அவரை அனுதாபத்துடன் நோக்கினார். "புரியறது அப்பா! எனக்கும் அதே மாதிரிதான் இருக்கு. துக்கம் நெஞ்சை அடைக்கற போது என்ன செய்யறோம்னே சில சமயம் நினைவிருக்கிறதில்ல. ஒவ்வொரு நிமிஷமும் அம்மா ஞாபகம் வந்துண்டே இருக்கு. எங்கே பாத்தாலும் அவ நிக்கற மாதிரியே தோண்றது. அம்மா உயிரோடு இல்லேன்னே இன்னமும் நம்ப முடியலே...."

"ஸ்ரீமதி நன்னா வளர்ந்துட்டா. சீக்கிரம் அவளுக்கும் வரன் பார்க்க ஆரம்பிக்கணும்" என்றார் தாத்தா.

அவர் அந்த அறையை விட்டுச் சென்றதும் ஸ்ரீமதியின் தம்பி தன் தந்தையிடம், "தாத்தாவுக்கு கல்யாணம் ஆகறச்சே அவருக்கு என்ன வயசுப்பா ?" என்று கேட்டான்.

"நீ அவசியம் தெரிஞ்சுண்டாகணுமோ. போடா, சாப்ட்டாச்சுன்னா எழுந்து கையலம்பிண்டு போய்ப் படி"

ஸ்ரீமதியும் அவள் சகோதரர்களும் அங்கிருந்து சென்றார்கள்.

ஸ்ரீமதியின் பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"அப்பா ஆனாலும் அழுத்ந்தான்" என்றான் ரங்கன்.

"எனக்கு அவரைப் பாக்கறபோது பயமா இருக்கு" என்றாள் கனகம்.

"ஏன்?"

"இப்படி உணர்ச்சியில்லாம மனுஷன் நடந்துக்க முடியுமான்னுதான். பாவம் உங்கம்மா அவருக்காக கொஞ்சமாவ உழைச்சா? ஆயுசெல்லாம் கூடவே இருந்தவள் போய்ட்டாளேன்னு துளிக்கூட இல்லையே"

"உனக்கு என் அம்மாக்கிட்டே இது என்ன புதுக் கரிசனம்! அவள் உயிரோடு இருந்தப்போ அப்படி ஒன்னும் நீ ரொம்ப அனுசரிச்சுப் போகலையே ! அவள் தேமேன்னு மாட்டைக் குளிப்பாட்டினாலும், தன் புடவையைத் தோய்ச்சுண்டாலும் கொஞ்சம் ஒத்தாசைப் பண்ணக் கூடக் கிட்டப் போகமாட்டியே !" என்று ரங்கன் சிரித்தப் போது கனகம் கோபமாய் அவரை விழித்துப் பார்த்தாள்.

"நீங்களும் சமயம் பாத்துதான் சொல்லிக்காட்றாப்ல இருக்கு! ஏன், அப்போ சொல்றதுக்கென்ன, என் அம்மாவுக்கும் போய் ஒத்தாசைப் பண்ணுடீன்னு ?"

"இதெல்லாம், சொல்லித்தான் தெரியணுமா ?"

"மனசுக்குள்ளே வைச்சுண்டால் மத்தவாளுக்கு மூக்கிலே வேர்க்குமா என்ன ? நான் கொஞ்சம் கிட்டே போனாலும் என்னமோ ஆசாரம் கெட்டுபோயிடுத்துன்னு உங்கம்மா ஆகாசத்துக்கும் பூமிக்குமா குதிப்பாளே, அது எங்கே தெரிஞ்சிருக்கப்போறது உங்களுக்கு! நான் செய்யறதுதானே கண்ணிலேபடும்"

"அவள் போனப்புறம் கூடவா அவள் மேலே குத்தம் சொல்லணும்? அதான் இருக்கிறவரைக்கும் தினம் வீட்டிலே குரு§க்ஷத்திரம் நடத்தியாச்சே?"

"அடேயப்பா, இத்தனை ஆங்காரம் இருக்கா உங்களுக்கு மனசுக்குள்ளே ? இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமான்னு இருந்தேளே அப்போ ! ம்ஹ்ம், ஆயிரம்தான் இருந்தாலும், ஆம்பிள்ளை ஒவ்வொருத்தருமே கடைசியில் அம்மாக் கோதண்டராமன்தான். பொண்டாட்டி எத்தனை செஞ்சாலும் எடுபடாது. மனசிலே ஆழமான இடம் என்னிக்கும் அம்மாவுக்குன்னு தத்தம் பண்ணினதுதான்."

"அப்படித்தான் வச்சுக்கோயேன், நம்ம நாணுவும் அதே மாதிரி பொண்டாட்டிகிட்ட எத்தனை ஆசையாயிருந்தாலும், மனசில் முக்கிய இடத்தை உனக்கு தத்தம் பண்ணியிருப்பான்னு நீயும் சந்தோஷப்படேன்! அவனுக்கு கல்யாணம் பண்ணிட்டதனால் இனிமே இந்த சந்தோஷம் எனக்கு ரொம்ப அவசியமில்லையா? இந்த உணர்ச்சி இல்லேன்னா எந்த அம்மாவானாலும் தன் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணுவாளான்னு சந்தேகம்தான்."

"நான் ஒன்னும் அப்படி இல்லே. பாவம்னு உங்கம்மாவுக்குப் பரிஞ்சுண்டு வந்ததுக்கு எனக்கு இது நன்னா வேணும்" என்று கனகம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

உள்ளதைச் சொன்னால் கோபம் வருகிறது என்று நினைத்துக் கொண்டு ரங்கன் கூறினார், "கோவிச்சுக்காதே கனகம், சும்மா சொன்னேன். அப்பா போக்கு எனக்கு மட்டும் பிடிக்கிறதா என்ன? சாவு என்கிறதே ஒரு அன்னியமான எண்ணம். அழுது அதுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டால் கொஞ்சத்துக்கு கொஞ்சம் அந்த திகைப்பு குறையறாப்பலே இருக்கும். அதைக் கொடுக்காம ஒருத்தர் கல்லாட்டாம் இருந்தால் நீ சொன்னாப்பலே ஒருவிதத்தில் பயமாத்தானிருக்கு."

"அதுக்கில்லேன்னா! உங்கம்மாவுக்காக உங்கப்பா அழாமலிருக்கிறத பாக்கிறபோது, ஒரு பொண்டாட்டியாய்ப் பாடுபடறது எல்லாமே கடைசியில் இத்தனை வியர்த்தம் தானான்னு தோணிப்போறது. நம்மை நிராகரிச்சுட்டா பாத்தியான்னு மனசைத் தாக்கறது..." கனகத்தின் குரல் கம்மியது.

தன்னை அந்த இடத்தில் வைத்துப் பார்த்திருக்கிறாள் இவள்! உலகத்தில் எல்லோருமே... மரணம் என்ற மகாகர்மம் கூட - ஒரு சிறு தன்னுணர்ச்சியில்தான் அஸ்திவாரம் கொண்டிருக்கிறதா? ம்ஹ்ம் ! மனிதனைப் பொறுத்தவரையில் உலகம் என்றுமே சிறியதுதான். அதற்குச் சந்திரமண்டலம் போகவேண்டியதில்லை.

"என்னத்தையானும் நினைச்சு மனசைக் கஷ்டப்படுத்திக்காதே கனகம் " என்று ரங்கன் அவள் முதுகில் தட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.

"நம்ம மாட்டுப் பொண்ணு ஆத்துக்கு வரட்டும். அவளும் நானும் எத்தனை ஒத்துமையாயிருக்கப்போறோம் பாருங்கோ" என்றாள் கனகம்.

**********************

ஸ்ரீமதியின் அண்ணன் சாப்பாடு முடிந்ததுமே ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டு தன் வேட்டகத்துக்குச் சென்றான். வத்ஸலாவின் முகம் அவனைப் பார்த்ததுமே மலர்ந்து விட்டது.

"என்ன திடீர்னு? இன்னிக்கு வரப்போறதாச் சொல்லவே இல்லையே? சாப்பாடு ஆச்சா? " என்று விசாரித்தாள்.

"ஆச்சு" என்றான் நாராயணன். இருவரும் வத்ஸலாவின் அறைக்குச் சென்றார்கள். அவர்களுக்குக் கல்யாணமாகி ஒரு மாதமாகியிருந்தது. அவளை அவனுடைய வீட்டுக்கு அழைத்துவர நல்ல நாள் பார்த்துக் கொண்டிருந்த போது, அவன் பாட்டி இறந்துவிடவே அது தள்ளிப் போய்விட்டது.

"வீட்டிலே பாட்டி பேச்சாவே இருந்தது. பாட்டிக்காத் துக்கம் கொண்டாடறவா பாட்டியை புரிஞ்சுக்காதவா. அப்படிப் பார்த்தால் தாத்தா நடந்துகிட்ட விதம் சரின்னுதான் சொல்லனும்"

"உங்க தாத்தா துளிகூட அழவேயில்லையாமே? இது வரை ஒருவார்த்தைக்கூட உங்க பாட்டியப்பத்தி பேசவும் இல்லையாம்? ஆமா, உங்க குடும்பத்தில எல்லா ஆம்பிள்ளைகளுக்குமே இந்த மாதிரிக் கல்லு மனசுதானா? "

"போக்கிரி!... புருஷன் பெண்டாட்டிக்குள் எத்தனையோ இருக்கும். தாத்தா போக்குக்குத் தக்க காரணம் ஏதாவது இருக்கலாம். மத்தவாளுக்குப் புரிய முடியுமா? நான் அதைச் சொல்லலே."

"பின்னே?"

நாராயணன் கண்கள் மிருதுவாயின.

"எங்க பாட்டி ரொம்ப அருமையான மனுஷி."

"உங்க எல்லாருக்குமே அவள் கிட்ட உயிராம், ஸ்ரீமதி சொல்லியிருக்கா."

"பாட்டியைத் தெரிஞ்ச யாரும் அதைப்பற்றி ஆச்சரியப்பட முடியாது. அவளோட எலியும் பூனையுமா சண்டை போட்ட எங்கம்மா கூட..."

"ஐயையோ, மாமியார் மாட்டுப் பெண் சண்டை உண்டா உங்க வீட்டிலே? எனக்கு இப்பவே பயமா இருக்கே!... வந்து எங்கப்பா கூடச் சொன்னார், முதல்லேருந்தே தனிக் குடித்தனமாய்ப் போயிடுங்களேன்னு...."

நாராயணன் சிரித்துக் கொண்டே அவள் காதை விளையாட்டாகக் கிள்ளினான். "ஸில்லி! பயம் எதுக்கு? மாமியார் மாட்டுப் பெண் சண்டைங்கிறது எல்லாம் அவாளுக்குள் சும்மா ஒரு சம்பிரதாயம், அவ்வளவுதான். வெளியிலே வெட்டி மடிஞ்சும்பா. ஆனா தினம், பாட்டிக்கு ராத்திரியில் பாலை எங்கம்மா தன் கையாலேதான் குங்குமப்பூச் சேர்த்துச் சுண்டக் காய்ச்சித் தயார் பண்ணுவா, அந்த வேலையை ஸ்ரீமதி கிட்டகூட நம்பி விடமாட்டா. அதே மாதிரி பாட்டியும் எதை மறந்தாலும் எங்கம்மாவின் பிறந்த நாளை மறக்காம அன்னிக்குக் கோவிலுக்குப் போய் அவள் பேரிலே அர்ச்சனை பண்ணிட்டு வருவா."

"ஓ. அப்படியா அது !"

"எதுக்குச் சொல்றேன்னா, பாட்டியோடு பழகினவாளிலே அவள் அருமை தெரியாதவாளே கிடையாது. அதுக்கு காரணம் என்ன தெரியுமா? "

"என்ன?"

"அவளைப் பார்த்தாலே யாருக்கும் தான் உயிரோடு இருக்கிறதைப் பத்தியே இரு சந்தோஷம் ஏற்படும். அவள் உயிரே வடிவமாயிருந்தவள். வாழ்க்கையோடு பிணைஞ்சிருந்தவள். நாங்க குழந்தைகளாயிருந்த போது அவள் எங்களுக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள், புராணக் காவியக் கதைகள், தேவதைக் கதைகள் எல்லாத்திலேயும் நல்லது ஜயிக்கிறது, கெட்டது தோற்கறது என்கிறதை இன்னும் அடிப்படைக்குப்போய் வாழ்க்கை வளர்ச்சி என்கிற உயிர்த் தத்துவம் ஜயிக்கிறதுன்னும், அழிவும் சாவும் தோற்கறதுன்னும் மனசிலே பதியறாப்பலே சொல்வா. நன்மை ஏன் ஜயிக்கிறதுன்னா அது வாழ்வு. தீமை ஏன் தோற்கறதுன்னா அது அழிவு. அவள் பார்வையில் வாழ்க்கையே ஒரு பெரிய திருவிழா; உயிர் நிரந்தரமான வசந்தம். அவளுக்குச் சாவில் நம்பிக்கை கிடையாது. அதனால் தான் சொன்னேன், அவளுக்குத் துக்கம் கொண்டாடினால் அவளைப் புரிஞ்சுக்காத மாதிரின்னு."

வத்ஸலா அதிசயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள். கணவனின் முகத்து பூரிப்பு. கண்களின் நினைவுப் பரவசம். அவளை ஒருமாய வட்டத்தினுள் இழுத்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.

"உங்க பாட்டியை எனக்கு தெரியாதேன்னு இப்போ வருத்தமாயிருக்கு" என்றாள்.

"வருத்தமே வேணாம். வருத்தமிருக்கிற மனசாலே பாட்டியைத் தெரிஞ்சுக்க முடியாது. வாழ்க்கை அற்புதமானதுன்னு உணர்கிற உணர்ச்சிதான் என் பாட்டி."

சிறிது நேரம் இருவரும் மௌனமாயிருந்தார்கள். நாராயணன் மனைவியைக் கனிவோடு பார்த்தான். "நாம் துக்கம் கொண்டாட வேணாம் வத்ஸலா! வாழ்க்கையைக் கொண்டாடுவோம். உயிரை அழுத்தமாய் ஆமோதிப்போம். பாட்டிக்கிட்ட என் பிரியத்தை இதைவிட அழகாயும் பொருத்தமாயும் வேறெப்படியும் காட்ட முடியாதுன்னு தோணித்தான் நான் அவள் பேச்சுலே உன்னை நினைச்சிண்டு வந்தேன்"

*****************

"ஏண்டி அழுதுண்டிருக்கே?" என்று கேட்டுக் கொண்டு ஸ்ரீமதியின் தம்பி அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

ஸ்ரீமதி கண்களைத் துடைத்துக் கொண்டாள். "எனக்கே தெரியலேடா ?" என்றாள்.

"பாட்டியை நெனச்சுண்டியா? எனக்குக் கூட மனசு தாங்கலே ஸ்ரீமதி, பாட்டி இல்லாமே வீடே நன்னாயில்லே."

"ஆமா, ஆனா நான் இப்போ பாட்டிக்காக அழலேடா வாசு. என்ன வேடிக்கை பாரேன் ! எனக்கு தாத்தாவை நெனச்சாதான் அழுகை வரது"

"அவருக்கென்ன கேடு ! அவர் துளிக்கூட அழல்லே. அவருக்காக இவள் அழறாளாம். போடி நீ ஒரு பைத்தியம். அது கிடக்கிறது, ஸ்ரீமதி, நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன். கேக்கறியா?. பாட்டி செத்துப் போனதைப் பத்தி"

"எங்கே, படியேன் கேக்கலாம்."

வாசு தன் கவிதையை எடுத்து வந்து உற்சாகமாய்ப் படித்துக் காட்ட ஆரம்பித்தான். பாட்டியின் மறைவை உருக்கமாக வர்ணித்திருந்தான். சிறிது சிறிதாகப் பொருளின் உருக்கம் மறைந்து படைப்பின் கிளர்ச்சி அவன் முகத்தில் ஒளி கூட்டியது. "இந்த இடத்திலே அப்படியே அழுகை வராப்பலே 'மூவிங்'கா இல்லே?" என்று கேட்டபோது அவன் முகம் சந்தோஷமாக இருந்தது.

அவன் படித்துக் கொண்டிருந்தபோது ஸ்ரீமதியின் கண்கள் முன்வாசல் தரையில் நிலைத்திருந்தன, அந்த இடம் கோலத்தின் சுவடு படாமல் மூளியாயிருந்தது. இன்னும் ஒரு வருஷத்துக்கு அங்கே கோலம் காணப்படாது.

வெளி வராந்தாவில் தான் ஒரு பக்கமாகத் தாத்தா நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். பலபேரோடு இருக்கும்போது அவர் தனியாயிருப்பது போல் தெரிகிறார். ஆனால் இப்படித் தான் மட்டுமாக முகத்தில் அந்த லயிப்புடன் இருக்கும் போது அவர் தனியாயில்லாத மாதிரி தோன்றுகிறதே, என்ன ஆச்சரியம் என்றி ஸ்ரீமதி வியந்தாள்.

அவன் தம்பி எழுந்து போன பிறகுகூட தாத்தா அதே நிலையில் இருந்தார், ஸ்ரீமதி மெள்ள அவரிடம் வந்தாள். "தூக்கம் வரவில்லையா தாத்தா? முந்திமாதிரி ராமாயணம் ஏதானும் படிச்சுச் சொல்லட்டுமா? "

"வேணாம்மா. தூக்கம் வராப்பலே இருக்கு; போய்ப் படுத்துக்கறேன்."

ஹாலில் தாத்தாவும் ஸ்ரீமதியும் அவள் தம்பியும் படுத்துக் கொண்டு வெகு நேரமாகிவிட்டது. தம்பி எப்போதோ தூங்கி விட்டான். ஆனால் தாத்தா இன்னும் தூங்கவில்லை என்று ஸ்ரீமதிக்குத் தெரியும். அது அவளுக்கு இப்போதெல்லாம் ஒவ்வொரு இரவும் தெரிகிற விஷயம் என்பது தாத்தாவுக்குத் தெரியாது. அவர் புரண்டு புரண்டு படுப்பதும், உலகம் உறங்கும் நள்ளிரவு வேளையில் கிழக் கண்களைத் திறந்து கொண்டு விட்டத்து இருளை வெறித்துக் கொண்டிருப்பதும் அவளுக்குத் தெரியுமென்பது அவருக்குத் தெரியாது.

அவர் படுக்கையில் எழுந்து உட்காரும் மெல்லிய சத்தம் வந்தது. அவள் திடுக்கிட்டுப் பார்த்தாள். "தீர்த்தம் வேணுமா?" என்று கேட்கலாமா? ஆனால் அவருடைய அந்தரங்கத்தை தீண்டத் தைரியம் வரவில்லை.

தாத்தா எழுந்து நின்றார். நடக்க ஆரம்பித்தார். ஸ்ரீமதி ஒர் அச்சத்துடன் எழுந்து அவர் அறியாமல் இருளில் மறைந்து மறைந்து அவரைப் பின் தொடர்ந்தாள்.

தாத்தா வீட்டினுள் ஒவ்வொரு அறையாகச் சென்றார். நின்று நின்றி இடங்களை வெறித்தார். பாட்டி பூஜை செய்த அறைக்குச் சென்று அசையாமல் சிறிது நேரம் நின்றார். பிறகு கொல்லைக் கதவைத் திறந்து கொண்டு பின்கட்டுக்குப் போனார். தூக்கத்தில் நடப்பது போல் நடை யந்திரப்போக்காய் இயங்கியது. தொழுவம், துவைக்கும் கல், மல்லிகைக் கொடி ஒவ்வொன்றின் அருகிலாக இருட்டினூடே சென்று நின்றார். அங்கங்கே தயங்கித் தயங்கி நின்று மண்ணிலும் வானத்திலும் பார்வையை நெடுக அலையவிட்டார். பிறகு வீட்டுக்குள் திரும்பி வந்தார். தட்டு தடுமாறி நடந்து வந்து தன் படுக்கையை மீண்டும் அடைந்தார். நடையின் தள்ளாட்டம் இருட்டினால்தானா என்று புரியவில்லை. பயத்துடன் தொடர்ந்து சென்ற ஸ்ரீமதி நிம்மதியுடன் பூனைப் போல் உள்ளே வந்து தன் படுக்கையில் படுத்துக் கொண்டு தூங்குவது போல் பாவனை செய்தாள்; பார்வை மட்டும் அரை இமைத் திறப்போடு தாத்தாவின் மேலே படிந்திருந்தது.

தாத்தா சிறிது நேரம் அசையாமல் படுக்கையின் மீது உட்கார்ந்திருந்தார். பிறகு படுத்துக் கொண்டார். ஆனால் தூங்கவில்லையென்று தெரிந்தது. அவர் கண்கள் திறந்துதான் இருந்தன வென்பதை கருமணிகள் இருளில் பளபளப்பதிலிருந்து ஸ்ரீமதி தெரிந்து கொண்டாள். அவர் ஆழமாகப் பெருமூச்சு விடுவது அவளுக்குக் கேட்டது.

மறுநாள் காலை தாத்தா எழுந்திருக்கவில்லை.

*********

பூமாலை - ஆர்.சூடாமணி

அன்புள்ள ரம்யா,

உன் கடிதம் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். சக்கையாய் புலம்பித் தீர்த்திருக்கிறாய். என் வருத்தம் நீ துக்கப்படுகிறாயே என்பதற்காக இல்லை. இப்படி இருக்கிறாயே என்பதற்காக.

கடைசியில் உன் துக்கம்தான் என்ன? சிறு வயதில் உன் சித்தி உன்னைக் கொடுமைப்படுத்தினாள். உன் அப்பா தனியாய் உன்னிடம் வந்து ''எனக்காகப் பொறுத்துக்கோம்மா ரமி! அப்பாவுக்கு உன்கிட்ட கொள்ளைப் பிரியம். ஆனா சித்தியை நான் கண்டிக்க முடியாது. அப்புறம் வீட்ல பிரளயம் தான் வரும். எனக்காகப் பொறுத்துக்கோ'' என்று சொல்வாரே தவிர உன்னைச் சித்தியின் கொடுமையிலிருந்து காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. உனக்கு நான்கு வயதாகும்வரை உன் அம்மா உயிரோடு இருந்தாள். ''என் பட்டுச்சுட்டி! என் செல்லக்குட்டி!'' என்றெல்லாம் கொஞ்சி உன் உள்ளங்கையில் அவள் முத்தமிடுவது ஏதோ கனவுபோல் உனக்கு லேசாக நினைவிருக்கிறது. அந்தக் கையில் சித்தி சூடு போட்டாள் என்ற நினைவு தகிக்கிறது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் வரை உன்னைச் சீராட்டிச் செல்லம் கொடுத்து உன் சுருள் முடியைச் சீவிக் கிருஷ்ணன் கொண்டை போட்டு அழகு பார்த்திருந்த அதே சித்தி, தனக்கு ஒரு மகன் பிறந்த பிறகு உன்னை வெறுத்துத் துன்புறுத்தலானாள் என்ற நினைவு அதை விட அதிகமாய்த் தகிக்கிறது.

அப்புறம் உன் கணவன்.

கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் உன் தர்க்கப் புலமையைக் கண்டு பிரமித்து உன்னை மணக்க விரும்பியவர். அவர் பெற்றோர் உன்னைப் பார்க்க வந்தபோது உன் சித்தி பேசியதையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறாய்.

''ரம்யாவையா பிடிச்சிருக்காம் உங்க பையனுக்கு? நிச்சயமாய் இந்த வீட்டு ரம்யாதானா?''

''ஆமாம்''

''அவ அவ்வளவு சேப்பு கூட இல்லையே? கிட்டத்திலேர்ந்து பார்த்தாரா?''

''அவ மேடைப் பேச்சில் அறிவு ததும் பித்தாம்..''

''குடித்தனம் பண்ணப் போற பெண்ணுக்கு எதுக்கு அறிவும் பேச்சும்? எதிர்த்து வாயாடவா?''

''ஏன் பார்க்கவும்தான் அழகாயிருக்கா!''

''அதுசரி. கழுதைகூட பருவத்தில் அழகாய்த் தானிருக்கும்...''

இது எதுவும் உன் நினைவிலிருந்து இன்றும் அழியவில்லை. இதுபோல் எத்தனையோ குரூரங்களைச் சித்தியிடம் சந்தித்து நீ உணர்ந்த நோவும் அவமானமும் கோபமும் இன்னும் மறக்கவில்லை. ஐம்பது வயதாகிறது உனக்கு!

நான்கு மாதங்கள் முன்பு நீ அரை நூற்றாண்டு முடித்த போது உன் கணவர் உனக்கு மல்லி மொக்கு டிஸைன் தங்க நெக்லஸ் வாங்கிப் பரிசளித்தார்.

''உனக்கும் நாட்டுக்கும் பிறந்தநாள் பொன்விழா. என் ரம்யாதேவிக்கு அன்பான வாழ்த்துக்கள்!''

அவர் முகத்தில் மலர்ச்சி. பல ஆண்டுகள் முன்பு முதல் முதலில் உன்னைக் கண்டு விரித்திருந்த அதே லயிப்பு.

நீ முகம் சுளித்தாய். எனக்கு எழுதியிருக்கிறாய்.

''ஆமாம். தங்க நகை பரிசளித்தால் ஏமாந்துவிடுவேனாக்கும்! பொன்விழா அது இது என்று அலங்காரமாய் பேசிவிட்டால் போதுமா? பேச்சில் இருக்கும் அன்பு மனசில் இருக்க வேணாமா? கண்தான் அலைகிறதே?''

அவர் மனசில் என்ன இருக்கிறதோ என்னமோ, உன் மனசில் ஊட்டி இன்னும் இருக்கிறது.

அப்போது உனக்கு இருபத்தைந்து வயது. நளினி மூன்று வயதுக் குழந்தை. உன் மடியில் நளினி. சுற்றிலும் உதக மண்டலத்தின் குளிர்ச்சி. தொலைவில் வானத்துக்கு அவாவுறும் யூகலிப்ட்ஸ் மரங்கள். பொட்டானிகல் கார்டனில் இருக்கிறாய். பூக்களஞ்சியத்தின் வர்ணக் கோலாகலம். டேலியா, பிட்டூனியா, கிளாடியோலஸ், சாமந்தி, ரோஜா, லார்க்ஸ்பர், பெயர்களை அடுக்குவதால் இன்பம் கூடுமா என்ன? இன்பம் ஒரு பரிபூரணம். கூடுவதோ குறைவதோ அதற்கில்லை. மேடுகளின் உச்சியிலுள்ள மரங்களின் இலைப் பின்னல் வெப்பத்தை வடிக்கட்டித் தணித்துத் தரும் மிருதுவான சூரிய ஒளி, சரிவுகளில் சறுக்கி விளையாடும் பட்டுக் குழந்தைகள். வண்ண வண்ண ஸ்வெட்டர்களுள் ரோஜாக் கன்னங்கள் குலுங்கப் பந்துகளாய் உருண்டு வரும் உற்சாக ஒளிக் குவியல்கள். அவர்களின் கலீர் கலீரென்ற சிரிப்பு.

நீ அழகின் நடுவில் அமர்ந்திருந்தாய்.

பிக்னிக் கூடையை திறந்து ·ப்ளாஸ்கிலிருந்து சூடான, மணமிக்க தேநீரை ஒரு கப்பில் வார்த்து உன்னிடம் புன்னகையோடு நீட்டினார் உன் கணவர்.

''களைப்பாத் தெரியறே ரமி. ஸ்நாக்ஸ் அப்புறம் சாப்பிடலாம். முதல்ல டீயைக் குடி.''

நீ கையை நீட்டினாய். உன்னை நோக்கியிருந்த அவர் விழிகள் கணநேரம் அசைந்தன. எங்கே பார்க்கிறார்? நீயும் தலையை லேசாய்த் திருப்ப, கண்ணைக் கட்டி நிறுத்தும் ஒரு வடிவம். பச்சை நிறச் சேலையில் அழகின் பூர்ண அருள் பெற்ற உருவம். கூந்தல் மல்லிகையைவிட வெள்ளையாய்ப் புன்னகை. உடனிருந்தவர்களிடம் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தாள். இந்தத் தொலைவில் பேச்சு கேட்க வில்லை. ஆனால் இவள் பேசினால், அந்தப் பேச்சும் அழகாய்த்தானிருக்க வேண்டும் என்று எண்ண வைக்கும் தோற்றம்.

உன் முகத்தில் மலர்ச்சி மறைந்து சுருசுருவென்று கோபம் ஏறியது. ''எனக்கு டீயும் வேணாம் ஒரு இழவும் வேணாம்'' குழந்தையைப் பொத்தென்று தரையில் இறக்கிவிட்டு எழுந்து நடந்தாய்.

உன் மனசில் ஊட்டி இன்னும் மறையவில்லை. அதனால்தான் இப்போதுகூட உன் ஐம்பதாம் பிறந்த நாளுக்கு அவர் பரிசளிக்கும் போது ''பேச்சில் இருக்கிற அன்பு மனசில் இருக்க வேணாமா?'' என்று கேட்கத் தோன்றுகிறது உனக்கு.

எப்படி அழுது தள்ளியிருக்கிறாய் இதையெல்லாம் நினைவுகூர்ந்து! ''சுவரோ டாயினும் சொல்லி அழு என்பதற்கிணங்க எழுதுகிறேன்'' என்று பழமொழியை வேறு துணைக்கு அழைத்திருக்கிறாய். நான் சுவர் இல்லை ரம்யா, உன்னுள் இருக்கும் கண்ணாடி. உன்னை நீ என்னில் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த அழுகையெல்லாம் ஒரு பீடிகைதான், உச்ச அழுகைக்கு வருவதற்கு.

சித்தியின் பிள்ளை உனக்குக் கடிதம் எழுதியிருக்கிறான். ஒரு புது மனிதன் போல் தன்னை அறிமுகம் செய்து கொண்டபின்:

"அக்கா! சென்ற காலத்தில் ஏதேதோ நடந்திருக்கலாம். அது ஒன்றையும் மனசில் வைத்துக் கொள்ளாதே. என்னை மன்னித்து விடு. நான் உன் சகோதரன் என்ற உரிமையை என்னிடமிருந்து பறித்து விடாதே. அந்த உரிமையின் பேரில் உன் கருணையை எதிர்நோக்கும் தீனனாக, இந்த வேண்டுகோளை உன்முன் வைக்கிறேன்.

''அம்மாவுக்குத் தீவிர இருதய நோய். சில ஆண்டுகளாகச் சிகிச்சை அளித்து வந்தும் பயனில்லை. வால்வ் கோளாறு. இனி அறுவைச் சிகிச்சை செய்வதுதான் ஒரே நம்பிக்கை என்று டாக்டர்கள் ஒன்று போல் சொல்லிவிட்டார்கள்.

''என் பொருளாதார நிலை மோசமென்று சொல்ல மாட்டேன். ஆனால் நான் பணக்காரனுமில்லை. பட்டுப்போர்த்திய வைக்கோல் பொம்மையான மத்திய வர்க்கக் குடும்பஸ்தன். அறுதியிட்ட வருவாயில் செலவு போக சேமிப்பு அதிகமில்லை. நிச்சயமாக, தொடரும் வைத்திய செலவுகளுக்கு ஈடு கொடுக்கும் செழுமை இல்லை. அதற்காக விதவைத் தாயை கைவிட முடியுமா? அங்கே இங்கே கடன் வாங்கி பெரும்பாலும் பணம் புரட்டிவிட்டேன். ஆனால் சுமார் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. தயவு செய்து தந்து உதவுவாயா? தொழிலதிபரான உன் கணவரின் செல்வச் செழிப்புப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தத் தொகை உனக்குப் பெரிசில்லை. கேட்கும் உரிமை எனக்கு இல்லை என்று நீ கருதலாம். ஆயினும் என் தாயின் உயிரைக் காப்பாற்ற - ஒரு மனித உயிரைக் காப்பாற்ற - இந்த நெருக்கடி சமயத்தில் இவ்வுதவியை நீ செய்வாயா அக்கா?''

''என்ன கொழுப்பு!'' என்று நீ வெகுண்டாய், ''அக்காவாவது ஆட்டுக்குட்டியாவது! எத்தனையோ காலமாய்த் தொடர்பு விட்டுப் போன ஒருவன் இப்போது உதவி தேவைப்படுகிறதென்று உறவு கொண்டாடுகிறானா?'' என்று பொங்கினாய். ''என் கணவரிடம் பணம் இருப்பது மாற்றாம் மாமியாருக்கு வைத்தியம் பார்க்கவா?'' என்று நினைத்துப் பொருமினாய்.

உன்னைக் கொடுமை செய்த சித்தி சாகக் கிடக்கிறாள் என்ற எண்ணம் இனிக்கிறது. சாகட்டும் என்று வஞ்சம் தீர்க்கும் எண்ணம் இனிக்கிறது. பின்னே உனக்கென்ன பிரச்சினை? ''பணம் தர முடியாது'' என்று தம்பிக்கு எழுதிப் போட்டுவிட்டு உன் இனிப்பான எண்ணங்களை ரசித்து கொண்டிருக்க வேண்டியதுதானே? மாறாக, வாழ்க்கையில் உனக்குள்ள குறைகளையெல்லாம் பட்டியலிட்டு, போதாதற்கு உன் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், மெனோபாஸ் தொல்லை போன்ற உடல் உபாதைகளையும் சொல்லி ஒரு பாட்டம் அழுதுவிட்டு ''நான் எத்தனை கஷ்டப்படுகிறேன்! இப்போதும் படுகிறேன். இந்நிலையில் அந்தப் பயல் வேறு பணம் கேட்டு என்னைத் தொந்தரவு செய்கிறானே! இது எனக்கு இழைக்கப்படும் அநீதியில்லையா?'' என்று தன்னிரக்கத்தில் புலம்பி, உன் மனசைக் கொட்டிக் காற்றில் எனக்கொரு கடிதம் எழுதியிருக்கிறாயே, இது ஏன்? உன் எண்ணத்தை நான் ஆமோதிக்க வேண்டும் என்பதற்காகவா? என் ஆமோதிப்பு உனக்கு அத்தனை முக்கியமா?

ஆனால் எனக்குக் குமட்டுகிறது ரம்யா? வருஷக்கணக்காய் வெறும் குப்பையாகவே மனசில் சேர்த்து வைத்திருக்கிறாயே! எப்படி இதனோடு வாழ்கிறாய்? இந்த மக்கிய நாற்றம் அருவருப்பாயில்லையா?''

கசப்பும் வெறுப்புமாக எண்ணங்கள், வெறும் குப்பைகள், மனசில் எடுத்து வைத்துக் கொள்ள உனக்குப் பூக்களே கிடைக்கவில்லையா ரம்யா? அதாவது, நல்ல விஷயங்களோ இனிய நினைவுகளோ ஏதுமில்லையா?

அம்மா முத்தமிட்ட உள்ளங்கையிலே சித்தி சூடு போட்டாள் என்று ஏழு வயதில் நடந்ததை ஐம்பது வயதிலும் அக்கறையாய் நினைவு வைத்துக் கொண்டு அழுதிருக்கிறாய். வரிசையைக் கொஞ்சம் மாற்றிப் பாரேன்! சித்தி சூடு போட்ட உள்ளங்கையில் அம்மா முத்தமிட்டிருந்தாள். இப்படி நினைத்து அந்த இனிமையில் ஆழ்ந்து போகலாமே! குப்பையைத் தள்ளு, பூவை எடுத்துக் கொள்.

தனக்கொரு மகன் பிறந்த பின் சித்தி உன்னைக் கொடுமைப்படுத்தலானாள் என்பதை ஏன் நினைக்கிறாய்? தனக்கொரு மகன் பிறக்கும் வரை உன்னிடம் பாசத்தைப் பொழிந்தாள் என்பதை நினைத்துக் கொள்ளேன் இன்னொரு பூ.

சித்தி உன்னை வெறுத்தாள் என்பதை விட்டுவிட்டு, அப்பாவின் அன்பு உனக்கு எப்போதும் இருந்து என்பதை மனசில் பதித்துக் கொள். குழந்தையான உன்னிடம் இரவில் வந்து உன்னைக் கையிலேந்திக் கண்ணைத் துடைத்து, ''உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் சொட்டுதடி?'' என்று நெஞ்சுருகப் பாடிக் கதை சொல்லிப் படுக்க வைத்துத் தட்டித் தூங்கச் செய்வாரே... அந்த நினைவை உன்னுடன் பத்திரப்படுத்திக்கொள். ஆமாம். அப்பா சித்தியின் கொடுமையிலிருந்து உன்னைக் காப்பாற்றவில்லை என்பதை வெகு அக்கறையாய் நினைவு வைத்துக் கொண்டு எழுதியிருக்கிறாயே, அப்பாவைப் பற்றிய இந்த நல்ல நினைவை ஏன் குறிப்பிடவில்லை?

உன் சித்தியின் விஷப் பேச்சால் உன் கல்யாணம் ஒன்றும் நின்று போய்விட வில்லையே! பேச்சுப் போட்டியில் உன் அறிவை வியந்தவர் இன்றுவரை உன்னிடம் அன்பு மாறாமல்தான் இருக்கிறார். அவர் கண் அழகிய பெண்ணின் பக்கமாய் அலைந்ததாம், பைத்தியமா உனக்கு? அழகை அதன் எந்த வெளிப்பாட்டிலும் ரசிப்பது என்பது மனித இயல்பு. ஊட்டியின் பசுமையான எழில் சூழலில் பச்சை ஆடையுடுத்து நின்றவள் அந்தக் கணம் அவ்விடத்தின் உயிர்நாடியாக, அதன் அழகுக்கெல்லாம் ஒரு முத்தாய்ப்பாகத் தோன்றியிருக்கலாம். ஏன் கூடாது? உன்னிடம் அவர் அன்பின் ஆந்தரிகம் என்றாவது மாறியதுண்டா? விகல்பமில்லாத அந்தப் பார்வையால் முகம் சுளித்த நீ அதற்குப் பதில் அந்த இடத்தின் வண்ண மலர்களும் பட்டுக் குழந்தைகளும் தண்ணென்ற காற்றும் மெத்தென்ற கதிரொளியு மான அழகிய சூழ்நிலையின் இனிமையை மனசில் தேக்கியிருக்கலாமே! உன் மடியில் குழந்தையோடு நீயே அழகின் மடியில் அமர்ந்திருந்த இன்பம் உன் மனசில் புகவில்லை. தேநீர் எடுத்து நீட்டிய அவர் அக்கறை, அந்த இன்பத்தின் ஒரு பாகமாய் உனக்குத் தோன்றவில்லை. அவர் கண் அலைந்தது என்று ஒரு கசப்பைத்தான் உள்வாங்கிக் கொண்டாய்.

வேறு நினைவுகளுக்கு எத்தனை சந்தர்ப்பங்கள் இருக்கின்றன! டை·பாய்ட் ஜுரத்தில் நீ படுத்தபோது இரவு பகல் பாராது அவர் உனக்குப் பணிவிடை செய்ததும், நீ விரும்பிக் கேட்டிருந்த புத்தகத்தைக் கொட்டும் மழையில் ஊரெல்லாம் அலைந்து தேடி எங்கோ நகர்க் கோடியில் ஒரு சிறு சந்துக்கடையில் கண்டுபிடித்து வாங்கி வந்து உன் கையில் வைத்து உன் முகம் மலர்வதைக் கண்டு பூரித்து நின்றதும்... இவை போன்ற எதுவும் உன் நினைவில் தங்கவில்லை. ஊட்டிக் கசப்பு ஒன்றைத்தான் இத்தனை ஆண்டு களும் நெஞ்சில் காப்பாற்றி வைத்திருக்கிறாய். குப்பை சேர்ப்பதில்தான் உனக்கு எத்தனை ஆசை!

உனக்கென்ன குறைச்சல் ரம்யா? வளமான வாழ்க்கை, அன்பான கணவன், எம்.எஸ்ஸி., எம்.சி.ஏ, முடித்து வெளிநாட்டில் கணிப் பொறி உயர்நிலைக் கல்வி பயிலும் அறிவுமிக்க மகள். எத்தனை பூக்கள் உனக்கு!

எனினும் நீ புலம்புகிறாய். இப்போது உன் முக்கியப் புலம்பல், உன்னைக் கொடுமை செய்த சித்தியின் வைத்தியத்துக்காக அவள் பிள்ளை உன்னிடம் பணவுதவி கேட்பது உனக்கு இழைக்கப்படும் அநீதி என்பது. அவள் உயிர் பிழைக்க நீ ஏன் உதவ வேண்டும்? அவள் செத்தால் உனக்கென்ன? சொல்லப்போனால் அது உனக்கு மகிழ்ச்சியல்லவா தரும்?

இருப்பினும், உடனடியாய்த் தம்பிக்கு ஒரு மறுப்புக் கடிதம் எழுதிப் போடாமல் என் ஆமோதிப்புக்காகக் காத்திருந்து காலம் தாழ்த்துகிறாய். அப்படியானால் உன் முடிவைப் பற்றி உனக்கே மூலையில் எங்கோ ஒரு சிறு சந்தேகம் இருக்கிறதென்று அர்த்தமா?

ஆபத்து என்று கேட்கும் போது உதவ மறுத்தால் அது உனக்குள் எங்கேயோ உறுத்தும் போல் தோன்றுகிறது. அதுதானே? அவள் இறந்தால் நீ சந்தோஷப்படுவாய் என்ற நினைப்பைவிட அதிக கனமாயிருக்கிறதா இந்த உறுத்தல்?

'இல்லை!' என்று கூவுகிறாய். 'பணம் அனுப்ப முடியாது என்று இப்போதே அவனுக்கு எழுதிவிடுகிறேன்' காகிதமும் பேனாவுமாய் மேஜையடியில் உட்கார்ந்து விட்டாய்.

ஒரு நிமிஷம் பொறு ரம்யா. நான் சொல்லும் மிச்சத்தையும் கேட்டபிறகு எழுது. ப்ளீஸ். எனக்காக.

''சரி, சொல்லு!''

நமக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அவர்களுடன் வாழ்வது சுலபமான காரியமா?

''இல்லை, ஒரு போதும் இல்லை...''

கடைசி மூச்சுவரை நாம் நம்மோடு தானே வாழ்ந்தாக வேண்டும் ரம்யா?

'ஆமாம்'.

அப்படியானால் நம்மை நமக்குப் பிடிக்க வேண்டியது எவ்வளவு அவசியம்!

'நீ என்ன சொல்ல வருகிறாய்?'

நீ காப்பாற்றியிருக்கக்கூடிய ஒரு மனித உயிர் உதவி கிடைக்காததால் இறந்து போயிற்று என்றால் அதன் பிறகு உன்னை உனக்குப் பிடிக்குமா? உன்னோடு நீ வாழ சகிப்பாயா?''

சிறிது நேரம் வரை உன்னிடம் பேச்சில்லை. அசைவில்லை. சுவரை வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாய். பிறகு பேனாவை மெல்ல மூடி வைக்கிறாய். நெற்றியில் கைபதித்து யோசனையில் ஆழ்கிறாய்.

உன்னை வெறுப்பவளுக்கு இந்த உதவியைச் செய்தாயானால் அதில் உனக்குப் பெரிய லாபம் இருக்கிறது ரம்யா. வெறுப்பு, கசப்பு என்றெல்லாம் மனசில் நீ சேர்த்து வைத்திருக்கும் குப்பை கூளங்கள் அனைத் தையும் இந்த ஒரே செயல் ஒரே வீச்சில் பெருக்கித் தள்ளித் துப்புரவாக்கிவிடும். அப்படிச் சுத்தமாகிய இடத்தில், நீ இதுவரை புறக்கணித்து வந்துள்ள நல்ல நினைவுகளை - அந்தப் பூக்களை எடுத்து வந்து வைத்துக் கொள்ளலாம். அவற்றை அழகான மாலையாய்த் தொடுக்கலாம். சித்திக்கு உதவி செய்வதன் மூலம் கசப்புத் தளை உடைந்து நீ பெறும் விடுதலையுணர்வு அந்தப் பூமாலையில் ஒரு பாரிஜாத மலர்போல் நடு நாயகமாய் விளங்கும். எனக்கும், குப்பையின் மக்கிய நாற்றம் நீங்கிப் பூமணம் கமழும் உன் மனசில் குடியிருப்பது கொஞ்சம் வசதியாய் இருக்கும்.

மீண்டும் பேனாவை எடுத்துத் திறக்கிறாய். மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொள்கிறாய். என்ன எழுதப் போகிறாய்?

உனக்குப் பதில் சொன்னதோடு என் வேலை முடிந்தது. இனி உன் இஷ்டம். வரட்டுமா ரம்யா?

உன் பிரிய

ரம்யா

******

நன்றி : ஒன்பது சகோதரிகள்

(உலகப் பெண் எழுத்தாளர் சிறுகதைகள்),தொகுப்பாசிரியர் : முனைவர் சுபாசு

சிந்தியன் பதிப்பகம், நந்தனம், சென்னை 35.

*******