‏إظهار الرسائل ذات التسميات சோழர்கள். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات சோழர்கள். إظهار كافة الرسائل

குடவோலை முறை - துரை இளமுருகு

தமிழ்நாட்டில் குடவோலை முறை பற்றிய செய்திகள் பாண்டிய நாட்டிலேயே முதலில் கிடைக்கப் பெற்றுள்ளன. கி பி 800 நூற்றாண்டிலேயே திருநெல்வேலி மானூரில் கண்டுபிடிக்கபட்ட மாறன் சடையனின் கல்வெட்டு ஒன்று பாண்டிய நாட்டு பார்ப்பனர்கள் கிராமங்களில் குடவோலை வழக்கத்தில் இருந்ததாகக் கூறுகின்றது [காண்க தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் கே கே பிள்ளை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தரமணி வெளியீடு 2009 பக்கம்310; எபி இன்டிச எண் 24}

உத்திரமேரூரில் முதல் பராந்தகன் சோழன் காலத்தில் வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டு கி பி 919/921 இல் வரையப் பெற்று உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலத்தில் கிராம நிர்வாகம் குடவோலை முறைப்படி நடைபெற்று வந்ததை உறுதி செய்கின்றது. ஆக குடவோலை முறை ராசராச சோழன் காலத்திற்கு முன்பே இருந்து வந்ததது தெளிவாக விளங்குகிறது.

2 இம்முறை பார்ப்பனர்கள் அதிகம் வசித்த, அவர்களுக்க்கு தானமாக வழங்கப்பட்ட அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் ஆகிய இடங்களில் கிராம சபை என்ற பெயரில் வழங்கப்பட்டது. வேளாண் மக்கள் வாழ்ந்து வந்த இடங்கள் ஊர் என்றும் அங்கு இருந்த சபைகள் ஊர் சபை என்றும் வழங்கப்பட்டது. மற்ற ஊர்களில் இம்முறை (குடவோலை) வழக்கத்தில் இருந்தமைக்கு தக்க ஆதாரம் இல்லை.

வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட இடங்களாக கோவில், சுடுகாடு, ஊருக்குள் ஓடும் வாய்க்கால்கள், ஏரிகள், பறைச்சேரி, கம்மளன் சேரி, ஊர் நத்தம் ஆகியவை குறிக்கப் பெற்றுள்ளன [மேற்கண்ட நூல் பக் 315], ஆகையினால் அவ்வூர்களில் சபையோ குடவோலைமுறையோ இருக்கவில்லை என்பது தெளிவாக விளங்கிறது. 

ஊர் அல்லது கிராமம் பல குடும்புகளாகப் பிரிக்கப்பட்டது. எ.கா உத்திரமேருர் 30 குடும்புகளாகவும் தஞ்சை மாவட்டம் செந்தலைக் கிராமம் 60 குடும்புகளாகவும் பிரிக்கப்பட்டு இருந்தாதகத் தெரிகிறது. ஒரு குடும்பிலிருந்து ஒருவருடைய பெயர் மட்டும் குடும்பின் சார்பில் நியமிக்கப்படும். அவர் ஆணாகத்தான் இருக்க வேண்டும் பெண்கள் நியமிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

உத்திரமேரூர் கல்வெட்டின்படி உள்ள செய்திகள்

குடவோலைமுறையில் கலந்து கொள்வதற்கான‌ தகுதிகள்

1. 35 முதல் 70 அகவைக்குள் உள்ள ஆண் மக்கள்.

2. குறைந்த அளவு 1/4 வேலி நிலம் இருக்க வேண்டும். குடியிருக்க சொந்த வீடு இருக்க வேண்டும். ஆனால் இதற்கும் விதி விலக்கு உண்டு வேதப் படிப்பில் சிறந்தவன், நான்கு பாஸ்யத்தில் ஒன்றினையேனும் நன்கு கற்று இருந்தால் அவனுக்கு 1/8 வேலி நிலம் இருந்தால் போதும். 

3. ஒருவர் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருந்தால் அவர் அந்த வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட முடியாது. ஊர் சபையின் வேறு வாரியத்திற்குத்
தேர்ந்தெடுக்கப்படலாம். 

4. ஒழுக்கமற்றவராகவும் சரிவரக் கணக்கு காட்டாதவராகவும் இருந்தால் அவர் பெயர் குடத்திலிடப்படமாட்டாது. 

குடும்பினால் நியமிக்கப்பட்டவர்களின் பெயர்கள் ஓலை நறுக்குகளிலெழுதி ஒரு குடத்தில் இடப்படும். பிறகு அவை நன்கு குலுக்கப்படும். பிறகு ஒரு சிறுவனை அழைத்து எத்தனை உறுப்பினர்கள் தேவையோ அத்தனை ஓலை நறுக்குகள் எடுக்கப்படும். அவற்றில் உள்ள பெயர்கள் உரக்கப் படிக்கப்பட்டு அவர்கள் சபையின் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுவர். இதுவே குடவோலை முறையாகும்.

சபை ஒரே அமைப்பாக வேலை செய்வது இல்லை. அதில் பல உட்பிரிவுகள் உண்டு. இவை வாரியங்கள் என வழங்கப்படும். இந்த உறுப்பினர்களில் அனுபவம் உள்ளவர்கள், வயது மூத்தவர்கள் ஆட்டை [ஆண்டு] வாரியத்திற்கும் மற்றவர்கள் ஏரி வாரியத்திற்கும் (6 பேர்) தோட்ட வாரியத்திற்கும் (12 பேர்) தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பஞ்சவாரவாரியம், பொன் வாரியம், உதாசீன வாரியம் போன்ற வாரியங்களும் உண்டு இவை பெரும்பாலும் குளத்தங்கரையிலும் மரத்தடியிலும் கூடுவது வழக்கம்.

இவற்றிற்கு என்று எழுதப்பட்ட சட்ட விதிகள் கிடையாது. பாவபுண்ணியம் சமயச் சார்பு, நம்பிக்கைகள் பண்டைய பழக்க வழக்கங்கள் இவற்றின் அடிப்படையிலேயே இவை இயங்கின. இவற்றின் முடிவுகள் ஊர் முழுவதையும் கட்டுப்படுத்தக் கூடியது {சுருக்கமாகச் சொன்னால் இன்றைய கட்டைப் பஞ்சாயத்திற்கு இணையானவை}

கிராம சபையின் கடமைகள் வரி வசூல் செய்வது, நிலம் தொடர்பான செய்திகளில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பது, நிலத்தின் விளைச்சலைக் கொண்டு வரியின் அளவை முடிவு செய்வது, தொடர்ந்து 2 ஆண்டுகள் வரி செலுத்தாத‌வர்களின் நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றை ஏலம் விட்டு வரியைப் பெறுவது, கோவிலுக்கு உரிய வரியினை வசூல் செய்வது ஆகியவை.

பார்ப்பனர் அதிகம் உள்ள அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் ஆகிய ஊர்களில் பார்ப்ப‌னர்களே சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உரிமை பெற்றவர்கள். அவர்களது பெயர்கள் மட்டுமே குடத்தில் இடப்படும். எ.கா கண்டியூருக்கு கிழகே உள்ள திருவேதிகுடி [ தஞ்சை மாவட்டம்] வேளாண் மக்கள் அதிகம் உள்ள இடங்களில் இவர்களே சபையின் உறுப்பினர்கள். [ மற்ற சாதிகளைப் பற்றி பேச்சே இல்லை என்பதைக் காண்க]

சில ஊர்களில் வேளான் மக்களும் பார்ப்பனர்களும் சேர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது. அவ்வூர்களில் இருவரும் சபைக்கு தேர்ந்தெடுக்க‌ப்படுவர். ஆனால் பார்ப்பனர்களும் வேளாண் பெருமக்களும் சரிநிகர் சமானமாக அமர்ந்து சபையினை நடத்தி வந்தனரா என்பது கேள்விக்குறியே. எ.கா. தஞ்சை ராசகிரி சதுர்வேதி மங்கலம், செங்கை மாவட்டம் வேளாச் சேரி. இந்த ஊர்களில் கிராம ஆட்சியை நடத்துவதற்கு 2 சபைகள் தனித்தனியே இயங்கி வந்தன. சதுர்வேதிமங்கல சபை பார்ப்பனர் பகுதியையும் ஊரவை வேளான் பகுதிகளையும் நிர்வகித்து வந்தன. இவ்வாறு ஒரு பகுதிக்கு இரண்டு சபைகள் என்று இருந்து வந்ததில் பல குழப்பங்கள் ஏற்பட்டன.

அத்தகைய கிராமங்கள் ஒரே ஆட்சியின் கீழ் வரவேண்டும் என்ற எண்ணம் முதல் ராச ராச சோழனுக்குத் தோன்றியதாகத் தெரிகிறது. அவ்வாறு செய்ய வேண்டுமானால் பார்ப்பனரையும் வேளாண் மக்களையும் சேர்த்து ஒரே சபையாக அமரச் செய்வதற்கு ஆணையிட வேண்டும். ஆனால் உறுப்பினர் தகுதி பற்றிய [வேதம் கற்றிருத்தல் முதலியன] விதிகள் இதற்கு இடம் கொடுக்கவில்லை. அதனால் பார்ப்பனர் வாழும் இடங்களில் பணியாளார்களுக்கு [வேலைக்காரர்களுக்கு] மானியமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களைத் தவிர வேளான் வகையால் அனுபவித்து வரும் நிலங்களை வேளான் வகையினர் (பார்ப்பனர்க்கு) விற்று விட வேண்டும் என்ற உத்திரவு இட வேண்டிய சூழ்நிலை ராச ராச சோழனுக்கு ஏற்பட்டது என்று தெரிகிறது. இவ்வுத்தரவை நிறைவேற்றும் பொருட்டு ஒரு அதிகாரியும் நியமிக்கப் பட்டான் என்பதை கருந்திட்டைக் குடிக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

[ காண்க பிற்கால் சோழர் வரலாறு சதாசிவப் பண்டாரத்தார் கவுரா பதிப்பகம் சென்னை]

நன்றி - கீற்று 2010

ஆதித்த கரிகாலன் கொலையும் கருணையும் - துரை இளமுருகு

ஆதித்த கரிகாலன் என்ற ஒரு பட்டத்து இளவரசன் இருந்தான். அவன் சுந்தர சோழன் இறக்கும் முன்னரே கொலை செய்யப்பட்டு மாண்டுபோனான் என்பதை வரலாற்று ஆசிரியர்களான் கே.கே. பிள்ளை, சதாசிவப் பண்டாரத்தார், கெ.ஏ.நீலகணட சாஸ்திரிகள் ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக் கொண்டு தங்களது வரலாற்று நூலகளை எழுதியுள்ளனர். ஆனால் திருவாலாங்காட்டு செப்பேடுகள் அந்த உண்மையை மறைத்து உள்ளன.

மேற்சொன்ன நூலாசிரியர்களும் ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதைப் பற்றித் தெளிவாக எழுதவில்லை. கே.கே.பிள்ளை ஆதித்த கரிகாலன் கொலையுண்ட பிறகு சுந்தரசோழனாகிய இரண்டாம் பராந்தகன் மனம் நொந்து தில்லை சென்று இறந்து போனான்; அதனால் பொன்முற்றத்து துஞ்சிய சோழன் அல்லது குளமுற்றத்து துஞ்சிய சோழன் என்று பெயர் பெற்றான் என்று எழுதி முடித்துக் கொள்ளுவார் [காண்க மேலது] சதாசிவப் பண்டாரத்தார் இன்னும் சற்று விரிவாக "அந்த கொலைப்பழியை மதுராந்தகன் மேல் சிலர் சுமத்துவர் ஆயின் அதற்கு தக்க சான்றுகள் இல்லை. மேலும் ராச ராச சோழன் தன்னுடைய அண்ணைக் கொன்ற மதுராந்தகன் இடத்தில் எப்படி அன்பு செலுத்தி இருப்பான்? ஆனால் ராச ராச சோழன் தன்னுடைய நாட்டு மக்கள் விரும்பியபோதும் தான் முடி சூடாமல் தன்னுடைய சிற்றப்பனுக்கு [மதுராந்தகத் தேவனுக்கு] விட்டுக் கொடுத்திருப்பானா?" என்ற வினாவை எழுப்புகிறார்.

இவ்வாறு எதிர்க் கேள்வியின் மூலம் ஆதித்த கரிகாலன் கொலையைப் பற்றி முடித்துவிடுகிறார். நமது ஆய்விற்கு இது போதாது. கெ.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் தமது நூலில் உடையார்குடி கல்வெட்டுகள் பற்றி குறிப்பிட்டு உள்ளார். அதை வைத்து கொலையாளிகள் யார் என்பதையும் அவர்களை ராச ராச சோழன் சரியாக தண்டனை கொடுக்காமல் தப்பிக்கவிட்டு விட்டான் என்ற நோக்கிலும் அவர் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் கொலையாளிகள் பார்ப்பனர்கள் என்பது ஆகும். கொலையாளிகள் யார் என்பதை வீர நாராயண நல்லூர் சதுர்வேதி மங்கலம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட [தற்போது காட்டு மன்னார்கோவில் அருகில் உள்ள உடையாளூர்] ஊரைச் சேர்ந்த பார்ப்பனர்கள் ஆகும். இவர்களுடன் பாண்டிய நாட்டைச் சேர்ந்த சில பார்ப்பனர்களும் கூடி ஆதித்த கரிகாலன் என்ற பட்டத்து இளவரசனைக் கொன்றுவிட்டனர்.

பட்டத்து இளவரசன் என்பது அரசனுக்கு மிக அணுக்கமான அதிகார மையமாகும். முப்படைகளின் தலைவன் அவனேயாகும். அவன் தனியாக ஆட்சி செய்வதற்கு என்று ஒரு பகுதியை அரசன் ஒதுக்கியும் கொடுக்கலாம். பொதுவாக இளவரசுப் பட்டம் கட்டும்போது அவனுக்கு மணம் முடித்திருப்பார்கள். ஆனால் ஆதித்த கரிகாலன் அவ்வாறு மணம் முடித்ததாகத் தெரியவில்லை.

அரசியலில் திருமணம் என்பது ஒரு குறிப்பிட்ட குறுநில மன்னனின் ஆதரவை பெற்றுத்தரும். அது போல மற்ற குறுநில மன்னர்களின் எதிர்ப்பையும் பெற்றுத்தரலாம். ஆனால் இந்த வாய்ப்பு ஆதித்த கரிகாலனுக்கு இல்லை. எனவே அவன் கொலை செய்யப்பட்டதைக் குறித்து யாரும் கவலைப்படாமல் இருந்ததிருக்கக் கூடும். அவனுடைய நண்பனாகக் கல்வெட்டுகளிலும் கல்கி ரா .கிருட்டிணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்திலும் குறிக்கப்பட்டுள்ளவன் பார்த்திபேந்திர பல்லவன் என்னும் குறுநில மன்னனாகும். இவன் பல்லவ குலத்தைச் சேர்ந்தவன். தொண்டை மணடலத்தை ஆண்டவன். அங்குள்ள பல கோவில்களுக்கு கொடை அளித்த செய்திகள் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. இவனுக்கும் வீரபாண்டிய தலைகொண்டவன் என்ற பட்டபெயரும் குறிக்கப்பெறுவதால் இவனும் சேவூர் போரில் பங்கெடுத்திருப்பான் என்று எண்ண வேண்டி இருக்கிறது.

ஆதித்த கரிகாலனைப் பற்றிய செய்திகளில் இரண்டு செய்திகள் உற்று கவனிக்கத்தக்கன.

1.கொலைக்கான காரணம் .

2. கொலையின் பயன் யாருக்குப் போய்ச் சேருகிறது?

கொலையாளிகளின் பெயர்கள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப் பட்டுள்ளது .

# 1 சோமன் ''''''

2 இவன் தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதி ராஜன் இவன் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன்

2 இவன் தம்பி பரமேசவ்ரன் ஆனா இருமுடிச் சோழ பிரும்மாதி ராஜனும்

3 இவரகள் உடன் பிறந்த மலையனூரானும் [ இவன் பெயர் மலையனூரன பார்ப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன் தாய்பெரிய நங்கைச் சாணியும்]

இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களும்

4 ராமத்ததம் பேரப்பன் மாரும்

5 இவர்களுக்கு பிள்ளைக் கொடுதத மாமன் மாரிடும் இவர்கள் உடன் பிறந்த பெண்களை வேட்டரினவும்

6 இவர்கள் மக்களை வேட்டரினவும் ஆக #

இவ்வனைவரும் கொலையில் தொடர்புடையவர்கள் என்று உடையாளூர்க் கல்வெட்டு கூறுகிறது.. இவர்களுடைய நிலத்தைப் பறிமுதல் செய்துவிடுமாறு ராச ராச சோழன் முன்பு உத்திரவு இட்டதை இந்த கல்வெட்டு சுட்டுகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தை அல்லது நிலத்தின் ஒரு பகுதியை வேறு ஒருவருக்கு (வெண்ணையூருடையார் பரதன் என்னும் விஜய மல்லன் என்பவன்)115 பொன்னுக்கு வாங்கி அதை திருவனந்தீஸ்வரர் பட்டாரகர் கோவில் சிவப் பிராம்மணர்களுக்கு உணவு கொடுப்பதற்கு உரிய தானமாக வழங்கினான் என்பதே இந்த கல்வெட்டு கூறும் நேரிடைச் செய்தியாகும். இந்த கல்வெட்டு ஒன்றில்தான் ஆதித்த கரிகாலன் கொலை பற்றி காணப்படுவதால் இதை இன்னும் சிறிது உற்று நோக்குவது கட்டாயமாகும்.

1 திரு குடவாயில் பாலசுப்ரமணியன் என்ற ஆய்வாளர் இந்த கல்வெட்டு கூறும் நேரிடையான செய்திகளை மட்டும் கணக்கில் கொண்டு உடையார்க்குடி கல்வெட்டு ஒரு மீள்பார்வை என்ற தலைப்பில் ஒரு சிறு நூலினை எழுதியுள்ளார். அதைக் கொண்டு அவர் கல்வெட்டில் கூறாத செய்திகளையும் கூறி இந்த கல்வெட்டை கொண்டு ராச ராச சோழன் தன் தமையனாகிய ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களை முறையாகத் தண்டிக்கவில்லை என்ற கூற்றை மறுக்கவும் செய்கிறார்.

அதற்கு அவர் கூறும் காரணம் கொலையாளிகள் உடனே தப்பிச் சென்று இருப்பார்கள். அதனால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. அதற்குப் பதில் அவர்களுடைய நிலத்தை ராச ராச சோழன் பறிமுதல் செய்தான் [இந்த செய்தி கல்வெட்டில் ஒருவாறு கூறப்பட்டிருக்கிறது] அந்த நிலம் ஊர் சபையின் நிர்வாகத்தில் இருந்ததது. பிறகு அதை ஒரு தனி மனிதர் வாங்கி சிவப் பார்ப்பனர்களுக்கு உணவு கொடுப்பதற்காக கோவிலுக்கு அளித்தார் என்று முடிக்கிறார். அத்துடன் விட்டிருந்தால் சரி. சேவூர் என்ற இடத்தில் நடந்த கடும் சண்டைக்குப்பிறகு ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை வென்று அவன் தலையைக் கொய்து குச்சியில் நட்டு நகர்வீதி வலம் வந்ததாக கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குடவாயில் பால சுப்பிரமணியன் இதைப்பற்றி எழுதும்போது “இது போர் விதிகளுக்கு முரண்பட்டது. இத்தகைய அறங்கொன்ற செய்கைக்கு பழிவாங்கும் பொருட்டு ஆதித்த கரிகாலன் பாண்டிய நாட்டை சேர்ந்த சதிகாரர்களால் கொலை செய்யப்பட்டான் என்று எழுதுகிறார். ஏதோ மற்ற அரசர்கள் தங்களுடைய போர்களில் நீதி தவறாமல் நடந்து கொண்டதுபோலவும் ஆதித்த கரிகாலன் விதிவிலக்கு போலவும் நமக்கு தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் உண்மையில் போர் என்பதே கொடுமையான ஒன்றுதான். எல்லா மன்னர்களும் தங்களது போர்களில் அரசர்களைக் கொல்வதுடன் மட்டுமின்றி பொதுமக்களையும் துயர்படுத்தியே வந்திருக்கின்றனர். சங்ககாலத்தில் மன்னர்கள் தாங்கள் வென்ற மன்னர்களின் பற்களைப் பிடுங்கி அதை தங்கள் அரண்மனைக் கதவுகளில் பதித்து வைத்திருந்தனர் என்ற செய்திகள் காணப்படுகின்றன.

சத்யாசிரியன் என்ற மேலைச் சாளுக்கிய மன்னன் நாட்டின் மீது படையெடுத்த ராச ராச சோழன் அந்த நாட்டில் செய்த கொடுமைகளை வேங்கி நாட்டுக் கல்வெட்டில் காணலாம். எனவே ஆதித்த கரிகாலன் எல்லை மீறி நடந்தான்; அதனால் பழி வாங்கும் நோக்கத்துடன் அவன் கொல்லப்பட்டான் என்பது சரியல்ல. எதற்காக கொல்லப்பட்டிருந்தாலும் கொலைகாரர்களை மதுராந்தகன் தன்னுடைய ஆட்சிக் காலமாகிய 15 வருடங்களும் பிடிக்கவில்லை. ராச ராச சோழன் தன்னுடைய ஆட்சிக் காலதிலும் பிடிக்கவில்லை. அவர்கள் உறவினர்கள் நிலங்களை மட்டும் பறித்துக் கொண்டான். அவ்வாறு நிலங்களைப் பறித்துக் கொண்டபோது அவர்கள் சோழ நாட்டில் இருந்தனரா அல்லது வேறு நாட்டிற்கு ஓடி விட்டனரா என்பதைப்பற்றி இக்கல்வெட்டு ஒரு சொல்லும் சுட்டவில்லை.

அப்படி இருக்க அவர்கள் சோழ நாட்டில் இருந்திருக்கமாட்டார்கள்; தப்பி சேர நாட்டுக்கு சென்று ஒளிந்து கொண்டிருப்பார்கள் என்று வலிந்து பொருள் கொள்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன். பாண்டிய நாடு என்று சொல்லவில்லை ஏன்? அப்போது பாண்டிய நாடும் சோழ ஆட்சியில் கீழ் தான் இருந்தது. இவ்வளவு வலிந்து பொருள் கொள்ளக் காரணம் ராச ராச சோழன் தவறு செய்யவில்லை என்பதை காட்டுவதற்கே ஆகும்.

இனி அவர்கள் பார்ப்பனர் என்பதற்காக ராச ராச சோழன் கொலையாளிகளைத் தண்டிக்கவில்லை என்ற செய்தியும் இதில் அடங்கியுள்ளது. கொன்றவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே. அவர்களில் பாண்டியன் நாட்டைச் சேர்ந்தவர்கள் இருவர். மீதிப்பேர் சோழ நாட்டை சேர்ந்தவர்கள். பாண்டிய மன்னன் தலையைக் கொய்ததற்கு சோழ நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர்கள் ஏன் சினம் கொள்ளவேண்டும்? பார்ப்பனர்களுக்கு நாட்டுபற்றை விட சாதிப்பற்று அதிகம் என்பது இங்கு தெரியவரும் மற்றுமொரு செய்தியாகும்.  அது செல்க.

மேலும் நமக்கு சில தகவல்களையும் அருளிச் செல்லுகிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். அக்காலத்தில் பார்ப்பனர்கள் [பிராமணர்கள் என்ற சொல்லைத்தான் அவர் பயன்படுத்தி உள்ளார்] வாளெடுத்து போர் புரிந்தனர். போர்களில் பார்பபனர்களும் கொல்லப்பட்டனர் என்பதுதான் அது! நன்றி அய்யா! உங்களது செய்திகளுக்கு நன்றி! பார்ப்பனர்கள் போர் புரியும் திறம் படைத்தவர்கள் என்பதை நாங்களும் அறிவோம். நந்த மரபைச் சேர்ந்த மன்னர்களையும் போர்வீரர்களையும் அவர்கள் உறங்கும்போதும் கொன்றவன் புஸ்யமித்ர சுங்கன் என்ற பார்ப்பனன் தான் என்பதையும் அறிவோம்.

கிருஸ்னன் ராமன் என்ற மும்முடிச்சோழன் பிரும்மாதிராஜன் ராச ராச சோழன் படைத்தலைவன் என்ற உண்மையை அருள் கூர்ந்து தமிழ்த் தேசியர்களுக்கு சொல்லவும். அவர்கள்தான் ராச ராச சோழன் பார்ப்பனர்களை தன்னிடம் நெருங்கவே விடவில்லை என்று நமக்கு பாலர் பாடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது சிக்கல் போரில் பார்ப்பனர்கள் கொல்லப்பட்டனரா இல்லையா என்பது அல்ல. ஆதித்தகரிகாலனைக் கொன்ற பார்ப்பனர்களை ராச ராச சோழன் தண்டிக்காமல் விட்டு விட்டான் என்பதே. மனுநீதி கூட கொலை, திட்டமிட்ட கொலை புரியும் பர்ப்பனர்களுக்கு மரணதண்டனை வழங்கலாம் என்றுதான் கூறுகிறது. ராச ராச சோழன் மனு நீதியையும் விஞ்சிய பார்ப்பன அடிமை என்பதே எமது முடிவு. அதைத்தான் இந்த செய்தியும் உறுதி செய்கிறது.

கல்வெட்டுகள் கூறாத செய்திகளிலிருந்து திரு குடவாயில் பாலசுப்ரமணியன் சில முடிவுகளை செய்தது போலவே நாமும் சிலமுடிவுகளை செய்யவேன்டி இருக்கிறது. ஏன் வேறு சான்றுகள் இல்லை .

ராச ராச சோழன் ஒரு பேரரசன் தன்முனைப்பும் தான் என்ற கர்வமும் மிக்கவன். தன்னுடைய ஆட்சிக் காலதில் நடந்த செய்திகள் அனைத்தையும் கல்வெட்டுகளில் பதிவு செய்தவன். தனக்கென்று ஒரு மெய்க் கீர்த்தியை ஏற்படுத்தி தன்னுடைய செயல்கள் அனைத்தையும் பதிவு செய்தவன். பதிவு என்றால் அப்படி இப்படி இல்லை. ஒரு சிறிய தகவல் கூட விட்டு விடாதபடிக்கு மிகக் கவனமாக பதிவு செய்தவன். ஒரு எடுத்துக்காட்டு காண்போம் .

தன்னுடைய பெரியகோவிலில் தேவரடியாளர்களாகக் கொண்டு வந்த பெண்டுகளின் பெயர்கள், அவர்கள் எந்த ஊரில் இருந்து வந்தனர் என்பதை எல்லாம் ஒரு தகவல் கூட தவறாமல் பதிவு செய்தவன். ஒரே ஊரில் இருந்து இரு பெண்கள் கொண்டு வரப்பட்டிருந்தால் எ.க திருவடி என்ற பெயருடைய இருபெண்கள் ஒரே ஊரில் இருந்து கொண்டுவரப் பட்டனர் எனவே அவர்களை தனித் தனியாக அடையாளம் பிரிப்பதற்காக ஒருத்திக்கு பெரிய திருவடி. மற்றவளுக்கு சிறிய திருவடி என்று வேறுபடுத்தி தளிச்சேரி கல்வெட்டில் பதிவு செய்தவன். தான் செய்த சிலைகளின் உயரம் எடை இவற்றை மிக நுணுக்கமாகப் பதிவு செய்தவன்.

கல்வெட்டுகளைப் பதிவு செய்வதற்காகவே பெரிய கோவிலைக் கட்டினானோ என அய்யுறும் விதமாக அக்கோவிலின் விமானம் தொடங்கி திருச்சுற்றுவரை [வெளி சுவர்] வரை எழுத்துக்களைப் பொறித்தவன். யாருடைய தானம் எங்கு பொறிக்கப்படவேண்டும் என்று முறைசெய்தவன்; அப்படிப்பட்ட ராச ராச சோழன் தன்னுடைய கல்வெட்டு ஒன்றில் கூட தமையன் ஆகிய ஆதித்த கரிகாலனைப் பற்றிக் குறிக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த உண்மை நம்மை மேலும் பல உண்மைகளை ஊகிக்கத் தூண்டுகிறது. சதாசிவப் பண்டாரத்தார், குடவாயில் பாலசுபிரமணியன் போன்றோர் (இவர்களுக்குப் பின் தற்போது நடன காசிநாதன்) ராச ராச சோழனைக் கொலை சதியில் இருந்து தப்புவிக்க முயல்கின்றனர். அவர்களுடைய வாதத்தை பின் வருமாறு கூறலாம்.

ராச ராச சோழன் தன்னுடைய தமக்கை [அக்கா] ஆகிய குந்தவையிடம் மிக்க அன்பு கொண்டிருந்தவன். அதுபோன்றே தன்னுடைய சிற்றப்பன் ஆகிய மதுராந்தக உத்தம சோழனிடம் மிக்க அன்பு கொண்டிருந்தான். மதுராந்தக உத்தம சோழன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுடன் தொடர்பு உடையவனாக இருந்தால் ராச ராச சோழன் அவனிடம் அன்பு செலுத்தியிருப்பானா?

நம்முடைய வாதம் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுடன் மதுராந்தக உத்தம சோழன், ராச ராச சோழன் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருந்தது. அதனால் தான் இருவரும் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களை தண்டிக்காமல் விட்டு விட்டனர். தமயன் கொலை செய்யப்பட்டவுடன் தம்பியாகிய ராசராச சோழன் முடிசூட்டிக்கொண்டால் அது மக்கள் மத்தியில் பல அய்யங்களை உண்டாக்கும். ராச ராச சோழனின் நற்பெயருக்கு களங்கம் உண்டாகும். எனவே தான் சோழ மணிமகுடத்தை மதுராந்தக உத்தம சோழனுக்கு விட்டுக் கொடுத்தான். அதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தான். ஒன்று தன்னுடைய நற்பெயருக்கு எவ்வித களங்கமும் ஏற்படாது காத்துக் கொண்டான் . இரண்டாவது, இது கவனிக்கத்தக்கது, மதுராந்தக உத்தம சோழனுக்குப் பிறகு தான் ஆட்சிக்கு வரும்படியாக ஒரு உடன்படிக்கை செய்துகொண்டான். அதன்படி மதுராந்தக உத்தம சோழன் ஆட்சிக்குப்பின்னர் ராச ராச சோழன் பதவி ஏற்கும் வண்ணம் அவனுக்கு இளவரசுப்பட்டம் கட்டப்பட்டது.

தமையன் கொலைக்குப் பிறகு துக்கத்தில் மூழ்கிப் போயிருந்த காரணத்தால் ராச ராச சோழன் மணிமகுடத்தை மறுத்துவிட்டான் என்று கூறுபவர்கள் இந்த செய்தியை கவனத்தில் கொள்ளவேண்டும். அரச பதவியை மறுதலித்தவன் இளவரசுப் பதவியை மறுதலிக்கவில்லை. என்வே இவை எல்லாம் திட்டமிட்டு நடிக்கப்பட்ட நாடகம். இந்த நாடக அரங்கேற்றத்திற்கு உடையார்குடி பார்ப்பனர்கள் உதவியுடன் ஆதித்த கரிகாலனைக் கொல்வது முக்கியமான கட்டமாகும். அதில் உதவிய பார்ப்பனர்களை மதுராந்தக உத்தம சோழனோ அல்லது ராச ராச சோழனோ எவ்விதம் தண்டிக்க இயலும்? இதுவே அவர்கள் தண்டிக்காமல் விடப்பட்டதற்கு முக்கிய காரணமாகும். மேலும் கொலையாளிகள் பார்ப்பனர்கள். எனவே அவர்களை மரண தண்டனைக்கு உட்படுத்தினால் அரசனுக்கு ப்ரம்மஹத்தி தோஸம் உண்டாகுமென்று மக்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்கும் நல்ல வாய்ப்பு. இந்த காரணத்தால் தான் தன்னுடைய எந்த கல்வெட்டிலும் ராச ராச சோழன் ஆதித்த கரிகாலனைப் பற்றி குறிப்பிடவில்லை.

அவன் மட்டுமன்று அவனுக்குப்பின்னர் வந்த எந்த சோழ மன்னனும் அவனைப் பற்றிக் குறிப்பிடவில்லை. மதுராந்தக உத்தம சோழன் கலி இருள் நீங்கும்படி ஆட்சி செலுத்தி மறைந்தவுடன் ராச ராச சோழன் மணி முடி சூடிக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது. அப்பொழுது . மதுராந்தக உத்தம சோழனின் மகன் வயதுக்கு வந்தவனாய் இருந்தான். எனவே அவனை தன்னுடைய அமைச்சரவையில் ஒரு முக்கிய பொறுப்பு கொடுத்து மகிழ்வித்தான் .

இவ்வாறாக சைவப் புலி, சிவபாத சேகரன் என்றெல்லாம் புகழப்படும் ராச ராச சோழன் சோழநாட்டின் ஆட்சி அவனுக்கு உரியதாக இருந்தும் அதை தன்னுடைய சிற்றப்பனுக்கு விட்டுக் கொடுத்த தியாகச் செம்மல்; இவ்வாறு எல்லாம் புகழப்படும் ராச ராச சோழன் ஒரு அரசியல் சாணக்கியன். சுந்தரசோழனின் இரண்டாவது மகனாகப் பிறந்தும் தனக்கு எவ்விதத்திலும் உரிமை இல்லாத சோழ நாட்டு மகுடத்தை சூதால் கைப்பற்றியவன் என்பது நமது கருத்து ஆகும். இதற்கு பார்ப்பனர்கள் மிகவும் உதவியாக இருந்திருத்தல் வேண்டும். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே அவன் பார்ப்பனர்களுக்கு பல கொடைகளை வழங்கினான். அவர்கள் மனம் கோணாதபடி தன்னுடைய ஆட்சியைச் செலுத்தினான். ஆதித்த கரிகாலன் பெயரை வரலாற்று ஆவணங்களில் பதிவு பெற்றுவிடாதபடி பார்த்துக்கொண்டான்.

அவனுடைய காலத்திற்குப் பிறகு எழுதப்பட்ட திருவாலங்காட்டு செப்பேடுகள் ஆதித்த கரிகாலன் மரணத்தைப் பற்றி பொய்யான தகவல்களைக் கூறுவதற்கும் இதுவே காரணமாகும். இந்த கொலையினால் ஏற்பட்ட குற்ற உணர்வின் காரணமாகவே பிற்காலத்தில் இறைத்தொண்டில் ஈடுபட்டு தஞ்சை பெரியகோவிலைக் கட்டினான். மரபுப்படி சோழ மன்னர்கள் தில்லையில் முடிசூடிக் கொள்ளுவதே வழக்கமாகும். ஆனால் ராச ராச சோழன் முடிசூட்டு விழா அப்படி நடக்கவில்லை. தில்லை வாழ் பார்ப்பனர்களுக்கும் அவனுக்குமிடையில் சிறிது உரசல் இருந்ததாகத் தெரிகிறது. தில்லைக் கோவிலுக்கு எவ்விதகொடையும் அளிக்காத சோழ மன்னன் ராச ராச சோழனாகத்தான் இருக்கமுடியும். தில்லைக்குப் போட்டியாக தஞ்சை ராஜராஜேஸ்வரத்துப் பெரியகற்றளியை கட்டி முடிக்க நினைத்தான். அதில் ஒர் அளவிற்கு வெற்றியும் பெற்றான். ஆனால் சிவ மதத்தில் இக் கோவில் சிறப்பிடத்தைப் பெற முடியவில்லை. கட்டிடக் கலையில் பெற்ற சிறப்பை அது மத அளவில் பெறமுடியவில்லை.

1 பிற்காலசோழர் வரலாறு சதாசிவப்பண்டாரத்தார் ராமையா பதிப்பகம் சென்னை

பாகம் 1 பக்கம் 84 -85

2 கே .கே பிள்ளை

3 குடவாயில் பாலசுப்ரமணியம். வரலாறு காம் இதழ் 2425 , 26 உடையார்க்குடி கல்வெட்டுகள் ஒரு மீள் பார்வை. இணையதளம் www. varalaru .com

4 நடன காசி நாதன் கீற்று இணையதளம் www. keetru .com

5 கே.ஏ நிலகணட் சாஸ்த்ரி THE CHOLAS
6 திருவாலாங்காட்டு செப்பெடுகள்south indian inscriptions XVI.- Inscriptions of Parakesarivarman (Aditya II Karikala) who took the head of Vira-Pandya or the Pandya (King)
# குறியிடப்பட்டவை கல்வெட்டுகளில் காணப்படும் வரிகள். அவைகளில் இருக்கும் பிழைகளை திருத்தும் உரிமை நமக்கு இல்லை

தமிழக அரசர்களும் அடிமைகளும் - துரை இளமுருகு

சோழர்கள் காலத்தில் அடிமை முறை இருந்தது. இதை கே.கே.பிள்ளை அவர்கள் தமது நூலில் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார் . சதாசிவப் பண்டாரத்தாரும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர்கள் நம்மைத் தேற்றுவிக்கும்படியாக "இந்த அடிமைகளை அமெரிக்கா போன்ற மேலைநாட்டு அடிமை முறையுடன் ஒப்பிடக்கூடாது. நம்மவர்கள் ரொம்ப நல்லவர்கள்" என்று எழுதியுள்ளனர். காந்தி ஒரு முறை "நம்முடைய நாட்டிற்கு பொதுவுடமைத் தத்துவம் சரி வராது ஏன்? நமது நாட்டு முதலாளிகள் மிகுந்த இரக்க குணம் கொண்டவர்கள்" என்று கூறினார். அது போன்றதுதான் இதுவும். கோவிலுக்கு மட்டும் இல்லை பரம்பரையாய் செல்வர்களுக்கும் அடிமைகளாய் வாழ்ந்தவர்கள் இருந்திருக்கின்றனர். ஆடு மாடுகளைப் போல் அவர்கள் சந்தையில் வாங்கப்பட்டனர்; விற்கப்பட்டனர். வயது முதிர்ந்தபிறகு கோவிலுக்கு என விற்கப்பட்டனர். இதற்கு ஏகப்பட்ட சான்றுகள் உள்ளன.

தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கொறுக்கை என்ற ஊரில் இரண்டாம் ராசாதிராசன் முதல் குலோத்துங்கன் காலத்தில் இப்படி பரிசிலாகவும் விலைக்கும் வாங்கப்பட்ட அடிமைகள் நூற்றுக்கணக்கானோர் இருந்தனர். தனிப்பட்ட மாந்தர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகளிலும் வேளாண் அடியார், புலையர் அடியார் பெண்டுகளும் உண்டு என்பதை திருப்பராய்த்துறைக் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன

பிரம்மதேய மத்தியஸ்தர்கள் பல அடிமைகளை தங்களுடைய ஆட்சியின் கீழ்க் கொண்டவர்களாகத் தெரிகிறது. அதாவது வெறும் சோற்றுக்கு வேலைசெய்யும் அடிமைகள். இவர்களை விற்பதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. வயலூர்க் கோவில் கல்வெட்டு ஒன்று இதைத் தெளிவாகத் தெரிவிக்கிறது. காவேரிக்குத் தென்கரையிலிருந்த நந்திவர்ம மங்கலத்து மத்தியஸ்தர் நாலாயிரத்து முன்னூற்றுவரான சந்திரசேகர அரசமைந்தன் கி பி 941 இல் தம்மிடம் கூழுக்குப் பணி செய்யும் தம் அடியாள் ஊரன் சோலை, அவ்வம்மையின் மகள் வேளான் பிராட்டி, அவ்வம்மையின் மகள் அமைந்தன்கண்டி ஆகிய மூன்றுதலைமுறையினரை வயலூர்த் திருக்கற்றளிப் பரமேஸ்வரர் கோவில் சாமரம் வீசவும் [கவரிப் பிணா] திருப்பதியம் பாடவும் தானமாகத் தந்தார் [காண்க தளிச்சேரி கல்வெட்டுகள் இரா கலைக்கோவன் பக் 108] இது முதலாம் பராந்தகன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு என்று கருதப்படுகிறது.

திருப்பராய்த்துரையில் உள்ள தாருகாவனேஸ்வரர் கோவில் கல்வெட்டு மகளிரில் உயர் குலத்தோர் சொத்துரிமைப் பெற்று தானம் அளிக்குமளவுக்கு வசதி படைத்து இருந்தனர் என்பதை சுட்டுகிறது. அதைப் போன்றே வசதி இல்லாத பெண்கள் அடிமைகளைப் போல் கோவிலுக்கு மட்டும் இன்றி தனியாருக்கும் பிரீதி தானமாக அளிக்கப் பட்டனர் என்பதையும் குறிக்கிறது. விசய நகர காலத்தை சேர்ந்த கல்வெட்டு ஒன்று பிரீதிதானமாக அளிக்கப்பட்ட "நன்செய் நிலங்கள் மனையும் அத்துடன் பல வேள்ளாட்டிகளும், புலை அடியாரையும் பிரீதியாகக் கொடுத்து" என்று கூறுகிறது இது ஒரு நிலக் கிழான் தன்னுடைய வைப்பாட்டிக்குக் கொடுத்தது. எதற்கு? அவள் ஒரு ஆண்மகவு ஒன்றை பெற்றதைப் பாராட்டும் வண்ணமாக! காண்க மேலது பக் 147 .

இப்படி பரிசிலாக வழங்கப்பட்ட பெண்கள் எதற்கு, பயன்படுத்தப்பட்டிருப்பார்கள் என்று முடிந்தவர்கள் ஊகித்துக்கொள்ளலாம். இப்படி பெண்கள் பரிசுகளாக வழங்கப்பட்ட காலம்தான் பொற்காலமாம். நம்புங்கள் நண்பர்களே!

15 வகை அடிமைகள் இருந்ததாகக் கருதப்படுகிறது.

1தாசியின் மக்கள் (அதாவது அடிமையின், தாசியின் மக்கள் அடிமைகள்! இது சாதி இல்லாமல் வேறு என்னவாம்) 2.விலைக்கு வாங்கப்பட்டோர் 3.கொடையாக வழங்கப்பட்டோர் 4.பெற்றோரால் விற்கப்பட்டோர் 5.வெள்ளத்தின்போது பாதுகாக்கப்பட்டோர் 6.பிரமாணத்தின் மூலம் அடிமையானோர் 7.கடன் காரணமாக அடிமையானோர் 8.போரில் பிடிபட்டோர் 9.சூதில் வெல்லப்பட்டோர் 10.தாமே வழிய வந்து அடிமையானோர் 11.வறுமையினால் அடிமையானோர் 12.தன்னைத்தானே விற்றுக்கொண்டோர் 13.இறைவனுக்கு அடிமையானோர் 14.அடிமைப்பெண்ணைத் திருமணம்செய்து அதன்வழி அடிமை ஆனோர் 15.குறிப்பிட்ட கால அடிமைகள்

இவ்வாறு 15 வகையான அடிமைகள் இருந்தனர். சமூகத்தில் இழிவானதாகக் கருதப்படும் காரியங்களை இவர்கள் செய்தனர், இவர்கள் தாசர், தாசன், தாசி என்று அழைக்கப்படுவர். அடிமைகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டதும் உண்டு. நாங்கூர் அந்தணனொருவன் தன்னுடைய அடிமைகளில் பெண்கள் உள்பட 7 பேரை ஒருமுறையும் 15 பேரை மற்றும் ஒரு முறையும் விற்றுள்ளான்.

அடிமைகளும் பொருள்களைப் போல் கருதப்பட்டனர். அவர்களை விற்கும்போது அல்லது தானமாக வழங்கும்போது பதிவு செய்யும் வழக்கம் இருந்தது, நிலத்தைப் பதிவு செய்வதுபோல. அடிமை விற்பனை பதிவு ஆவணத்திற்கு # "ஆள்விலைபிரமாண இசைவுத்தீட்டு" என்று பெயர் இடைக்குடி மக்களை அடிமைகளாக வழங்கும்போது முத்திரைகள் இட்டு வழங்கி உள்ளனர்  #" திருவிலச்சனை செய்து சந்த்ராதித்தவரை இவ்விடையரை நாம் கொள்ள" என்று குறிக்கும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முத்திரை என்பது அவர்கள் உடம்பின் மேல் இடப்படும் இலக்கமாகும். இதனை சூட்டுகோல் கொண்டோ அல்லது வேறு எப்படியோ இட்டு வந்தனர். கோவில் அடிமைகளுக்கு ஒரு விதமாகவும் அரண்மனை அடிமைகளுக்கு வேறு விதமாகவும் முத்திரை பதித்துள்ளனர்.

1காண்க அடிமைகளின் வகைகள் "ராசராசன் துணுக்குகள் நூறு" ஆசிரியர்கள் சொ.சந்திரவணன், நாக.கணேசன், இரா.சிவானந்தன் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சென்னை-600008 ஆண்டு 2010 பக்27.

2.ராசராசசோழன் தஞ்சைப் பெரிய கோவில் வடவெளிச்சுற்று சுவரில் தஞ்சை தளிச்சேரிக் கல்வெட்டுகள் காணப்படுகிறது. அதில் உள்ள செய்திகளைப் படித்து இரா.கலைக்கோவன் ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். தஞ்சை தளிச்சேரிக் கல்வெட்டுகள் - முனைவர்/மருத்துவர் இரா .கலைக்கோவன் சைவ சித்தாந்தக் கழக வெளியீடு 2002 பக்12 - 55
# குறியிடப்பட்டவை கல்வெட்டுகளில் காணப்படும் வரிகள். அவைகளில் இருக்கும் பிழைகளை திருத்தும் உரிமை நமக்கு இல்லை.

சோழர் காலக்கல்வியும் தமிழும் - துரை இளமுருகு

சங்ககாலம் தொடங்கி பல்லவர்காலம் முதல் கல்வியின் நிலை கேள்விக்குறியாகவே இருந்து வந்திருக்கிறது. சோழர் காலத்திலும் பொதுமக்களின் கல்விக்கான பள்ளிகள் இருந்ததாகத் தெரியவில்லை. பொது மக்களின் கல்வித் தரம் எப்படி இருந்தது என்பதற்கு ஒரு சான்றும் இல்லை. எத்தனை விழுக்காட்டினர் எழுத படிக்கத் தெரிந்து இருந்தனர் என்ற தகவல்கள் இல்லை. இது குறித்து கே.கே.பிள்ளை எழுதுவது குறிப்பிடத்தக்கது. [பக் 318 -320]

"ஊர், பொதுமக்களுக்கு கல்விப்பயிற்சி அளிக்கப்பட்டதா? அப்படி இருப்பின் அது எத்தகையது என்ற கேள்விக்கு விடை காண முடியவில்லை. கல் தச்சர்கள் பொறித்த கல்வெட்டுகளில் நூற்றுக்கணக்கான பிழைகள் காணப்படுகின்றன. படித்தவர்கள் கதியே இப்படி என்றால் பாமர மக்களின் கல்வி அறிவு எத்தகைய தன்மை படைத்திருக்கும் என்று அய்யம் ஏற்படுகிறது. சிற்பிகளும் ஒவியர்களும் கட்டிடப்புலவர்களும் சிறப்பாகத் தொழில் புரிந்தனர் என்று அய்யம் இன்றி சொல்லலாம் இல்லாவிட்டால் தஞ்சை பெரிய கோவில் போன்ற கலைக்கருவூலங்களை எப்படி படைத்திருக்கமுடியும்? அவர்கள் இத்தகைய அறிவினை எங்கிருந்து பெற்றனர் என்பது சரிவரத் தெரியவில்லை.

நூல்அறிவு/பயியலறிவு மூலம் பெற்றிருந்தார்களா? அதை எப்படி பெற்றனர் என்று தெரியவில்லை பள்ளிகளில் கற்றனரா? ஆசானிடம் இருந்து நேர்முகமாகப் படித்தனரா? தன்னியில்பாக அவை வந்தனவா? கம்பர், செயங்கொண்டார், சேக்கிழார் போன்ற பெரும் புலவர்கள் இயற்றிய நூல்களை அக்காலத்திய தமிழ் மக்கள் அறிந்தும் கேட்டும் மகிழ்ந்தனரா அல்லது அது அரசவையுடன் நின்றுவிட்டதா? என்பதும் சரியாகத் தெரியவில்லை மன்னர்கள் யாரும் தமிழ் கற்பிப்பதற்கு என்றும் இந்த நுண் கலைகளைக் கற்பிப்பதற்கு என்றும் தனியாகப் பள்ளிகளை நிறுவியதாக தெரியவில்லை. அதற்கான சான்றுகள் இல்லை. ஆனால் வடமொழிக்கு என்றும் வேதங்களுக்கு என்றும் தனியாக பாடசலைகள அமைத்து அதற்கு பொன்னும் நிலமும் கொடுத்து வளர்த்து இருக்கின்றனர். இத்தகைய கல்வி நிலையங்கள் பல சோழர் காலத்தில் இயங்கி வந்ததற்கு ஏரளாமான சான்றுகள் உண்டு".

"தமிழ்நாட்டு வரலாற்றில் கல்வி சாலைகள் அமைத்து மாணவர்களுக்கு கல்வி கற்பித்ததாக சான்றுகள் எதுவும் இல்லை. அவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு சில கல்விசாலைகளிலும் பார்ப்பனர்களே பயின்று வந்தனர். அதற்குத் தேவையான நிதி உதவிகள், இட வசதிகள் ஆகியவற்றை தமிழ் மன்னர்களே செய்து கொடுத்திருக்கின்றனர். கல்வியைப் பொறுத்த அளவில் சோழர்காலம் தமிழர் பார்வையில் தமிழக வரலாற்றில் ஒரு இருண்ட காலமே என்று கருதவேண்டியிருக்கிறது. எண்ணாயிரம் என்ற ஊர் அந்தணருக்கு அளிக்கப்பெற்று சதுர்வேதி மங்கலம் ஆக்கப்பெற்றது. இங்கு ஒரு வடமொழி கல்லூரி நிறுவப்பட்டு அங்கு 340 மாணாக்கர் கல்வி பயின்றனர். அவர்களுக்கு கற்பிக்க 14 ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். மாணவர்களுக்கு கல்வி உணவு, உறைவிடம், உடை ஆகியன இலவசமாக்கப்பட்டன. ஆசிரியருக்கு சோழ அரசு ஊதியம் வழங்கிற்று. இக்கல்லூரிக்கு 300 ஏக்கர் நிலம் அரசால் மானியமாக விடப்பட்டது.

இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவெனில், அங்கு கற்பிக்கப்பட்டது வடமொழியே ஆகும். மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் பார்ப்பனர்களே. இது போன்றே முதல் இராசேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில், திருவெற்றியூரில் ஒரு கல்லூரியும் சோழ மன்னர் இராசேந்திரனால் வேப்பத்தூர் திருமுக்கூடல், திருபுவனி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பார்ப்பனர்கள் கற்பதற்கென்றே வடமொழிக் கல்லூரிகள் அரசர்கள் உதவியுடன் தொடங்கப்பெற்று, நடந்து வந்தன என்பது சரித்திரக் குறிப்புகளாகும். இதில் வியப்பிற்குரிய செய்தி என்னவென்றால், தமிழ் கல்வி பயிற்றுவிக்க என்று ஒரு சிறிய பள்ளியேனும் இருந்ததாகவோ, அதற்கு மானியம் இடப்பட்டதாகவோ ஒரு கல்வெட்டு சான்று கூட இல்லை. தனிப்பட்ட முறையில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் ஆங்காங்கே இருந்திருக்கலாம். ஆனால் அவை அரசர்கள் ஆதரவுடன் நடைபெறவில்லை. மாறாக வடமொழி சாத்திரக் கல்லூரிகள் அரசு உதவியுடன் ஆங்காங்கே நடத்தப்பட்டது. (காண்க. தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புக்கள் என்னும் நூல், ஆசிரியர் க.ப.அரவாணன், பக்கம்.197)

நாயக்கர் காலத்திலும் இதே நிலை நீடித்தது. கி.பி.1610ல் மதுரையில் ஒவ்வொரு வகுப்பிலும் 200 பேர் என்ற வகையில் மதுரை மாநகரில் மட்டும் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர். இவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே என்று கிறிஸ்த்துவ பாதிரியான டி.நோபிலி தம்முடைய கடிதத்தில் தெளிவுபடுத்துகிறார். ஐரோப்பியர் வரவுவரை கல்வி என்பது வடமொழிக்கல்வியாகவும் அது பார்ப்பனர்க்கே உரியதாகவும் இருந்தது. பாமரர்க்கும் கல்வி என்ற நிலை ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே தோன்றிய ஒன்றாகும். அனைத்து அரசர்களாலும் சமஸ்கிருத கல்விச்சாலைகள் நடத்தப்பட்டன. வேதங்களை தமிழர்கள் படிக்கலாகாது என்று தடுக்கப்பட்டிருந்தனர். அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கல்வி கற்றனர். அது போர் சம்பந்தப்பட்ட கல்வி மட்டுமே ஆகும். அரசர், அந்தணர் என்ற இருவரைத் தவிர ஏனையோருக்கு எத்தகு பொதுக்கல்வியும் வழங்கப்படவேயில்லை. தமிழ்நாட்டில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. அவற்றில் வசதிபடைத்த வீட்டுப்பிள்ளைகள் தனிப்பட்ட முறையில், ஓரளவு கல்விகற்று வந்தனர். அவ்வளவுதான். இது பொதுக்கல்வியும் அன்று; பொதுமக்கள் கல்வியும் அன்று. (மேற்கண்ட நூல் பக்.192)

கே.கே.பிள்ளை மேலது பக் 320 மன்னர்கள் நிறுவிய பள்ளிகள் யாவும் பிராம்மணருக்கு மட்டும் வடமொழி பயிற்சி அளித்து வந்தது. தமிழ் இலக்கிய இலக்கணம் பயிற்றுவிக்கவில்லை---

அப்பள்ளிகளில் புராணங்கள் இதிகாசங்கள் சோமசித்தாந்தம் ராமனுசபாடியம், பிரபாகரின் மீமாமச வியாக்கரணம் ஆகிய வடமொழி இலக்கிய இலக்கணங்களையே பிராமணர்கள் பயின்று வந்தனர். வட ஆற்காட்டு மாவட்டத்தில் போலுர் அருகில் காம புல்லுர் [காப்பலுர்] என்னும் கிராமத்தில் வேத பயிற்சிப் பள்ளி ஒன்று நடைபெற்றது. செங்கற்பட்டு மாவட்டத்தில் ஆணியூர் என்ற ஆனூர் என்னும் இடத்தில் வேதம், இலக்கணம் ஆகியவற்றிற்கு பட்டவிருத்திகள் நிறுவப்பட்டன.. தென்னாற்காட்டில் ராசராச சதுர்வேதி மங்களம் / எண்ணாயிரம் என்னும் ஊரில் முதலாம் ராசேந்திரன் காலத்தில் வேதம் மீமாம்சப்பள்ளி ஒன்று நடைபெற்று வந்தது. அதில் 348 பிராமண மாணவர்கள் பயிற்சிப் பெற்று வந்தனர். 14 ஆசிரியர்கள் கல்வி அளித்து வந்தனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு கலம் நான்கு மரக்கால் நெல் ஊதியமாக வழங்கப்பட்டது. வேறு சில ஆசிரியர்கள் நெல்லுடன் பொன்னும் சேர்ந்து ஊதியமாகப்பெற்றார்கள். இது தான் சோழர்கள் தமிழ் வளர்த்த வரலாற்று உண்மை.

அரசவை செயல்பாடுகளில் தமிழ் எவ்விதம் இருந்தது என்பதைக் காண்போம். சோழர்கள் தமிழர்கள். எனவே அரசின் வாய்மொழி செயல்பாடுகள் அனைத்தும் தமிழில் நடைபெற்றிருக்கும் என்று நம்பலாம். அவற்றை பதிவு செய்வது என்பது வடமொழி, தமிழ் என்று இரண்டு மொழிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன [இப்பொழுது தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சிமொழி என்ற பொழுதும் அரசு ஆணைகள் சில தமிழிலும் பல ஆங்கிலத்திலும் வருவதுபோல] கல்வெட்டுகளில் வடமொழி கலந்த தமிழே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சில கல்வெட்டுகள் முழுவதும் வடமொழியிலேயே அமைந்துள்ளன. கல்வெட்டுகளை விடவும் அதிக சிறப்பும் நம்பகத்தன்மையும் உள்ளவை செப்பேடுகள் ஆகும். இவை அரச முத்திரை இடப்பட்டு கம்பிகளில் கோர்க்கப்பட்டுக் காணப்படுகின்றன. இந்த செப்பேடுகளில் சரி பாதிக்குமேல் வடமொழியில் எழுதப்படும். தமிழிலிலும் சில வார்த்தைகள் எழுதப்படும் எ.கா திருவாலங்காட்டு செப்பேடு முதலாம் ராசேந்திரன் காலத்தைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது. இதில், பெரும்பகுதி வடமொழியில் உள்ளது.

ஆனைமங்களச் செப்பேடு ராசராசன் காலத்தை சேர்ந்தது. இதிலும் சரி பாதி வடமொழியில் காணப்படுகிறது. இவை எல்லாம் வரலாற்று ஆவணங்கள். அக்காலத்தில் மன்னன் அளித்த கொடையையும் குறிப்பிடும் ஆவணங்கள் ஆகும். அவற்றை வடமொழியில் ஏன் எழுதவேண்டும்? தமிழ்ச் சோழர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு விட்டு செல்லும் வரலாற்று ஆவணங்களில் சரிபாதிக்கு மேல் வட மொழியில் எழுத வேண்டிய காரணம் என்ன? இன்று யாராவது ஆங்கிலம் கலந்து தமிழ் பேசினால் அவன் தமிழனா? தமிழனுக்கு பிறந்தவனா? தன்னுடைய தலைப்பு எழுத்தை மட்டும் {இனிசியல்} ஆங்கிலத்தில் போட்டு உள்ளானே? இவன் ஆங்கிலேயனுக்குப் பிறந்திருப்பானா! என்று எல்லாம் நக்கலடிக்கும் தூய தமிழ்வாதிகள் ராசராசன் ஆவியிடம் இதைக்கேட்டு சொல்லவேண்டும்.

நாகப்பட்டினத்து புத்தர் கோவிலுக்கு நீங்கள் அளித்த கொடையினை தமிழில் மட்டும் பதிவு செய்யாமல் வடமொழியிலும் பதிவு செய்தது ஏன்? என்று கேட்டு சொல்லுவர்களா? மேலும் ஒரு செய்தி தமிழிலில் பதிவுசெய்யப்பட்ட செய்திகளும் வடமொழியில் பதிவு செய்யப்பட்ட செய்திகளும் ஒரே மாதிரி இருக்குமென்று உறுதி இல்லை. அன்பில் செப்பெடுகள் தொடங்கி அண்மையில் திரு இந்தளூரில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பேடுகள் வரை இந்த நிலைதான். வடமொழி பகுதி புராணக் கதைகள் மிகுந்து காணப்படும். அதாவது கடவுள், மன்னனை வாழ்த்தும் பகுதிகள் வடமொழியில்! ஒரு வேலை இவற்றைத் தமிழில் பதிவு செய்தால் கடவுள் தீட்டுப்பட்டுப் போய்விடுவர் என்ற அச்சமிருந்திருக்குமோ என்னவோ? தமிழ் நீச பாடை வடமொழி தேவ பாடை என்று பார்ப்பனக் குருக்கள அப்பொழுதே ஓத ஆரம்பித்து விட்டனரா? இதை, சோழனுக்கு காவடித்தூக்கும் முனைவர்கள் தான் விளக்க வேண்டும். தமிழப்பகுதி தானம் கொடுக்கப்பட்ட நிலத்தின் அளவுகளை மட்டும் சுட்டி நிற்கும். இதுதான் சோழர்களின் தமிழ்த் தொண்டு! இதைக் கொண்டாடத்தான் தமிழ்நாட்டு மக்களின் வரிப்,பணத்தில் அரசு விழா ஆடம்பர நாட்டியம், பொழுது போக்குக் கூத்து! இவை எல்லாம் தமிழின் பேரில்... இதுதான் தமிழின், தமிழனின் தலைவிதி போலும்.