‏إظهار الرسائل ذات التسميات சுந்தர ராமசாமி. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات சுந்தர ராமசாமி. إظهار كافة الرسائل

சுந்தர ராமசாமியின் 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ' நாவல் விமர்சனம் - க.பஞ்சாங்கம்


சுரா என்கிற அகழ்வாராய்ச்சியாளர்
...
சுராவின் இந்த 634 பக்கம் நாவல் வாழ்க்கை போல விரிந்து கிடக்கிறது. படித்து முடிக்கும் போது மூளையெல்லாம் தேன் கூடு போலாயிற்று என்று உணர்கிற இந்தக் கணத்தில், நுகர்கிற வாசகன் என்ற அளவில் எனக்குள் நிகழ்ந்த விளைவுகளைப் பதிவு செய்துள்ளேன். ஏதாவதொரு கோணத்தில் இந்த வார்த்தைக் குவியலைக் கிளறிப் பார்க்கும்போது முற்றிலும் வேறான கூறுகள் அப்போது கிடைத்தாலும் கிடைக்கலாம்; கிடைத்தால் அப்போது அதை எழுதிக்கொள்ளலாம்; வாழ்க்கைப் பற்றி எப்படியெல்லாமோ எழுதிப் பார்த்துக் கொள்ளலாம்தானே.

ஆலப்புழையில் 15 பிள்ளைகளோடு பிறந்த எஸ்.ஆர்.எஸ் தந்தை தலைகீழாகக் கவிழ்ந்தபோது சிதறிய நெல்லிக்காய்களில் ஒன்றாய் கோட்டயம் வந்து விழுகிறார். ஒரு கதை மாந்தர் போல நாவலில் வரும் 'ஸ்ரீநிவாஸ் ' என்ற வீடு, எஸ்.ஆர்.எஸ்,. அவர் மனைவி லட்சுமி,. தொடர்பு வைத்துள்ள ஒரே சகோதரி பங்கஜம், அவர் கணவன் அனந்து, பிள்ளைகள் பாலு, ரமணி, கல்விகற்க ஸ்ரீநிவாஸ் வந்து சேர்ந்த லட்சுமியின் தங்கை வள்ளி, அதரவற்ற அனந்தம், வேலைக்காரி கெளரி, கணக்கெழுதும் கரீம் மாப்ளே - இது ஒரு குடும்பம். ஒன்று விட்ட சித்தப்பா பையன் சாமு, அவன் மனைவி சீதா, பிள்ளைகள் லச்சம், கோமு இது ஒரு குடும்பம். எஸ்.ஆர்.எஸ்-இன் மாமா சேது அய்யர், அவரது பிள்ளைகள் லட்சுமி, வள்ளி, கோமதி, கோபு, வாசு, மாது, மருமகள் ருக்கு-இது ஒரு குடும்பம்; டாக்டர் பிஷாரடி, பைத்தியமான அவர் மனைவி சாவித்திரி, பிள்ளைகள் ஸ்ரீதரன், சுகன்யா, அப்புக்குட்டன் -இது ஒரு குடும்பம்; கைலாசமடம் நாராயண அய்யர் குடும்பத்தின் வாரிசுகளான கைலாசமடம் சுப்ரமணியம், ஐந்தாவது மகன் சம்பத் இப்படி ஒரு குடும்பம். சனிக்கிழமை பிற்பகலில் வேனல் பந்தலில் செங்கல்சூளை கருநாகப் பள்ளி, ஆசிரியர் காந்தியவாதி கோவிந்தன் குட்டி, அவர் சீடர் செல்லப்பா, டாக்டர் பிஷாரடி, தேயிலைக்கம்பனியின் பிரதிநிதி சம்பத், பிடில் ராமய்யர், கைலாசமடம் சுப்ரமணியம், கே.ஆர் நீலகண்டப்பிள்ளை; எஸ்.ஆர்.எஸ்இன் பெயரைக் கெடுக்கவென்று அவதாரம் எடுத்துள்ள புதுப்பணக்காரன் -அரசியல்வாதி - அவுரான் மாப்ளே, எலிசபெத் டாச்சர், இவர் கணவர் -கோட்டயம் காந்தி என்று அழைக்கப்படும் ச.எம்.தோமஸ், கார்த்தியாயினி, பலருடனான பாலியல் உறவுக்கு பலியாகி அழியும் நாராயணி, லச்சத்தை தவறான உறவுக்குப் பயன்படுத்தும் வைத்தியர், வாழைத்தோட்டம், லட்சுமியின் ஆஸ்த்மா நோய், டாக்டர் மேத்யூ தரகன் என்று வருகின்ற பல்வேறுபட்ட மனித உறவுத் தளத்தில் நிகழ்த்தப்படும் மொழியாடலில் கரைந்து கிடக்கும் சூட்சமங்களையும், இடுக்குகளையும் மெளனங்களையும் வக்கிரங்களையும் தனக்கான மொழியில் பதிவு செய்வதே நாவலின் இயக்கமாக அமைகிறது 'மனித மனங்கள் எவ்வளவு வக்கிரமாக ஒன்றையொன்று பின்னி முடிச்சு போட்டுக் கொண்டு விடுகின்றன ' (ப.591) நாவல் முழுக்க இதை வெளிக் கொணரத்தான் முயற்சி நடப்பதுபோலத் தெரிகிறது.

சு.ராவின் ஒட்டுமொத்தமான எழுத்து இயக்கத்தைக் கவனித்தால், உடன்பாட்டிற்கு (Thesis) எதிர்ப்பாட்டை (anti-thesis) உருவாக்குவதுதான் கலை இலக்கியத்தின் இயக்கப்போக்காக இருக்கிற சூழலில், இவர் எப்போதுமே ஒத்திசைவைத்(Synthesis) தேடுவதிலேயே கவனம் கொள்கிறார். இந்தப் புதினத்திலும் இதுதான் வெளிப்படுகிறது. ஒரு பொருள் 'அது 'வாக இருக்கும் அதே கணத்தில், அதற்கு எதிரான ஒன்றாகவும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற இயங்கியல் உணர்வை எஸ்.ஆர்.எஸ், லட்சுமி, டாக்டர், ஸ்ரீதரன், வள்ளி, சுகன்யா என்ற தன் கதை மாந்தர் ஒவ்வொருவருக்குள்ளும் கண்டு வியக்கும்போது கதை சொல்லி 'சித்தரிக்கின்றவனாக ' மட்டுமே இயங்கிவிடுகிறார். அவருக்குக் கதை சொல்ல-புனைந்து கூற- ஒன்றும் இல்லாமல் போய்விடுகிறது. எனவேதான் நடப்பியல் நாவல் என்றுகூடச் சொல்ல முடியாதபடி, தனக்கென எந்தத் தேர்வும் இல்லாமல், இயற்கையியல்( Naturalism) பண்பு நாவலாகச் செயல்படுகிறது. ஒரு விவரணப்படம்( Documentary Film) போல நாவல் நகர்கிறது. பெரும்பாலும் பிராமணச் சமூகத்தில் நிலவும் பொதுப்புத்தி சார்ந்த மதிப்பீடுகளை விமர்சனம் ஏதும் இன்றி ஒரு பார்வையாளனாகப் பதிவு செய்வதே நோக்கம் என்று கதைசொல்லிக்கு ஒரு திட்டவரையறை இருப்பது புலப்படுகிறது. எனவேதான் தனது மதிப்பீடுகளை எங்கே மனிதர்களுக்கே உரிய அதிகப்பிரசங்கித்தனம் மேலிடப் பதிவு செய்துவிடுவோமோ என்று தன்னிலிருந்து தப்பித்து ஓடுவதிலும் மிகக் கவனமாகச் செயல்படுவது நாவலின் இயக்கப்போக்காகவே அமைந்துள்ளது (சான்று பிச்சைக்காரர்கள் பற்றிய பதிவு; மார்க்ஸ் பற்றி பிஷாரடி கூறுவது (510-511)
தன்னைப்பற்றிய 'போதாமை ' உணர்வினால் ஒவ்வொரு பாத்திரமும் தன்னைப் பொட்டுப் பூச்சியாய் உணர்ந்து புழுங்கி வெந்து வெம்பும் கொடுமை பக்கம் முழுவதும் பரந்து கிடக்கிறது. கதை சொல்லிக்குள் துடிக்கும் இந்தப் 'போதாமை ' பற்றிய உணர்வின் தீவிரம், இப்படி எல்லாப் பாத்திரங்களுக்கும் முகவரி இருந்தும்கூட முகமில்லாமல் ஆக்கி இருக்கிறது. காரணம், நாவல் அடிப்படையில் சுய வரலாற்று நாவலாக இயங்குவதுதான். கதைசொல்லியின் ஆளுமை எஸ்.ஆர்.எஸ்-க்குள் மட்டுமல்ல, எல்லாப் பாத்திரங்களுக்குள்ளும் நீக்கமற நிறைந்து வழிகிறது. மேலும் சு.ரா என்கிற மனிதரும் நாவலின் கதைசொல்லியும் பிரித்துப் பார்க்கமுடியாதபடி கரைந்து கிடக்கின்றனர். கழிந்து போன தன் இளமைக் கால வாழ்க்கையை, அறுபத்தி ஐந்து வயதுக்கான மன்நிலையோடு வாழ்ந்து பார்க்க அளாவுகிற விசித்திரமான மனத்தின் செயல்பாடுதான் நாவலை இப்படி ஆக்கியிருக்கிறது. 'இரண்டு வார்த்தைகளால் நான்கு வார்த்தைகளால் கூறமாட்டேன் ' என்கும் சுரா, ஏனிந்த நாவலில் இப்படி வார்த்தை மோகம் கொண்டார் என்பதற்கான விடை இதில்தான் அடங்கியிருக்கிறது.; கூடவே நாவல் எழுதுகிறோம் என்ற வடிவம் பற்றிய பிரக்ஞையும் நாவலை இந்த அளவிற்குப் பெரிதாக்கி இருக்கிறது. நாவல் பற்றிய பிரக்ஞை தனக்குள் செயல்பட்டதை முன்னுரையிலேயே குறிப்பாக பதிவு செய்துள்ளார். இந்த பிரக்ஞையோடு செயல்பட்டதால்தான் 107 கவிதைகள் போல 108 சிறுகதைகளாகப் (இதையும் 107 அத்தியாயமாகவே வைத்திருந்தால் வேடிக்கையான பல விளக்கங்கள் கிடைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கும்) போய்விடும் விபத்திலிருந்து நாவல் தப்பித்திருக்கிறது. அப்படியும் 'பல சிறுகதைகள் ' தப்புக்கடலையாக முளைப்பதற்குத் தயாராக மறைந்து கிடக்கத்தான் செய்கின்றன(சான்றாக நாராயணி கதை (28) தபால்காரன் கதை (30) முதலியன)

அடிப்படையில் நாவல் தந்தை X மகன் என்ற ஆதித் தொன்மத்தின் மேல்தான் எழுப்பப்பட்டிருக்கிறது. 'தாத்தா இறந்ததும் பாட்டி, இன்னிக்குத்தான் உங்க முன்னால தைரியமா உக்கார்ந்திண்டிருக்கேன் ' என்று அழுதாளாம். அந்தத் தாத்தாவின் பேரன் நான் ' என்கிறார் எஸ்.ஆர்.எஸ். இத்தகைய மரபில் வந்ததால், 'உங்களுடன் ஒப்பிடமுடியாத பிள்ளை நான், ஒப்பிடும்படி நான் பாலுவை வளர்க்க வேண்டும். அதுதான் நான் உங்களுக்குச் செய்யும் அஞ்சலி அப்பா ' எனக் கருதுகிறார் எஸ்.ஆர்.எஸ். அதே நேரத்தில் 'நான் ஒரு பழமைவாதி, என்னை உசுப்பிக் கொள்ள நான் விரும்புகிறேன் ' என உதறிவிட்டு எழுவதற்கும் முயல்கிறார். ஆனால் 'எதிலும் ரிஸ்க் எடுக்க விரும்பாத ' எஸ்.ஆர்.எஸ், நம்பிக்கை, அவநம்பிக்கை என்ற இந்த இரண்டு தூண்கலையும் ஓடி ஓடித் தொடும் குழந்தை போல ' ஆகிவிடுகிறார். நாவலை இந்த இழுப்பு விசைதான் (tension) நகர்த்துகிறது. 'எனக்கு வந்து சேர்ந்த வழியில் நம்பிக்கை இல்லை; போய்ச்சேர வழியும் தெரியவில்லை ' எனக்கூறும் எஸ்.ஆர்.எஸ், தனக்கும், தன் மனைவிக்கும், தன் மகனுக்கும் புரியாத புதிராய் மாறி, மகனின் மனவியலையே அச்சம் என்னும் பேய்க்கு ஒப்படைக்கிறவராக மாறிவிடுகிறார்; டாக்டர் மாத்யூ தரகன் மூலம் இதை உணர நேரும் போது குழந்தை போல அழுகிறார்; இத்தகைய முரணின் விளைவாக, தான் என்னும் 'முழுமையைப் ' பிளந்து, கூர்மையான ஊசிக்கண்களால் 'பகுதிகளைச் சோதனைச் சாலையில் குத்தி வைத்து முள்கம்பி ஆயுதங்களால், வேதியல் திரவங்களால் ஆய்ந்து கண்டவைகளை முன்வைத்து, இத்தகையப் பகுதிகளா ' ஒன்று சேரும்போது இப்படி 'நானாக ' வெளிப்படுகின்றன ' என்று வியப்பில் விளையாடுகிற விளையாட்டாக இந்த எழுத்துக்கள் பல இடங்களில் இயங்குகின்றன.

*****

இங்கே தந்தை X மகன் உறவு எந்த விதத்திலும் சீர்படுத்தக்கூடியதாக இல்லை; அதற்கொரு விஞ்ஞான நெறிமுறையும் இல்லை. மரபு சார்ந்த சேது அய்யருக்கும் தந்தை X மகன் உறவு ஒழுங்காக இல்லை. திருமணமானவுடன் எல்லா அதிகாரத்தையும் தனது இரண்டாவது மனைவி ருக்குவிடம் சமர்ப்பித்துவிட்டு மனைவியை இழந்த சேது அய்யரை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறான். நவீனக் கல்வி கற்ற டாக்டர் பிஷாரடி-யின் பையன் ஸ்ரீதரனோ, தந்தையின் ஆசையை நிறைவேற்ற நான் ஒரு உபகரணமா ? நான் ஒரு மனுஷன் இல்லையா ? என்று கேட்கிறான். தன் அம்மா பைத்தியமானதற்குக்கூட தந்தைதான் காரணம் என்று கூறும் அளவுக்கு பகையுணர்வு தனக்குள் வந்து அடர்த்தியாய் அடைவதற்கு இடம் கொடுக்கிறான்.

ஊதாரியான அப்பனுக்குப் பிறந்த பிள்ளை 'லச்சை ' மிகவும் புத்திசாலிப் பையனாக இருந்தும், தான் தோன்றித்தனமாய்ச் சுற்றியதால் யாருக்கும் பயன்படாமல் போய்ப் பிணமாக வந்து வீட்டுக்குள் விழுகிறான். தன் விருப்பம் போல் உருவொக்கச் சிலத் தந்திரமான நடவடிக்கைகளை மகன் மேல் செலுத்தியதன் மூலம், குடும்பத்தையே நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறார் எஸ்.ஆர்.எஸ்.
சரி! பிள்ளையே இல்லாத பங்கஜம்- அனந்து வாழ்வும் அமைதியாக நகரவில்லை.

இப்படி எதற்கும் பிடிபடாத உறவாக இது திமிறிக்கொண்டே ஓடுகின்றது. குடும்ப உறவுதான் இப்படி என்றால் சமூக உறவிலும் பதற்றம் எதிரொலிக்கிறது. புதிதாக முளைத்த புதுப்பணக்காரன் சூழ்ச்சியால் 'தான் பொல்லாதவன் ' எனக் கணிக்கப்படும் கொடுமையை எண்ணிக் கலங்குகிறார் எஸ்.ஆர்.எஸ். மேலும் பெருந்தன்மையோடு, ஆதரவின்றி வந்த விதவை ஆனந்தத்திற்கு வாழ்வு கொடுத்தார். தன்னோடு இணைத்து நினைத்துப் பார்ப்பதில் ஒரு சுகம் கண்டார். அவளும் இப்பொழுது ஒரிரவில் செல்லப்பாவுடன் ஓடிவிட்டாள். தன் வீட்டில் இருந்து கல்வி கற்க வந்த கொழுந்தியாள் வள்ளியும், வேறு சாதியிலுள்ள ஸ்ரீதரனைக் காதலிக்கிறாள். அவனோடு இணைத்து வைக்க எந்த முயற்சியும் செய்யாமல், அப்பன் வந்து கூப்பிட்டுப் போகும்போதும் 'சும்மாவே ' இருந்து விடுகிறார்.

கடைசியில் எல்லாம் சூனியம்தானா ? வேனிற் சபையில் காரசாரமாக விவாதித்தவை எல்லாம் வீண்தானா ? 'துல்லியமாய்ச் சிந்திப்பவன் செயலுக்கு ஆகமாட்டான்! என்பதும் உண்மையா ? கதைசொல்லி நம்மைச் சூன்யத்தில் தள்ளவில்லை. புதிய பிறவி எடுக்கச் சொல்கிறார். செத்த பிறகு தான் புதிய பிறவி என்பதில்லை. இந்த இப்பிறவியிலேயே பலப்பல புதிய பிறவிகளை உற்பத்திச் செய்து கொள்ள முடியும். அதற்கு என்ன வழி ? தட்டுமுட்டுச் சாமான்களைத் தூக்கி கொண்டு இடம் பெயர்ந்து விடுவதுதான் அந்த வழி. நாடோடியாகு! எந்த அளவிற்கு உன்னை நாடோடியாக்கிக் கொள்கிறாயோ அந்த அளவிற்கு இங்கே வாழ்க்கை வாழத் தக்கதாக இருக்கும். அறியத் தக்கதாக இருக்கும். நம்முடைய வனங்களிலும் மலைகளிலும் காடுகளிலும் காய்ந்த நிலப்பகுதிகளிலும் அலைகிற சிலப்பதிகார, இதிகாசக் கதை மாந்தர்கள் நினைவுக்கு வருகிறார்கள்; அப்படி அலைந்தாலும் இந்த மனித உயிருக்கு விடுதலை சாத்தியம்தானா ? பனி பொழியும் காலையில் நடந்து கொண்டிருக்கிறேன். ஒரு சில்லான் தார்ச்சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு மூச்செடுத்து ஓடிப் புல்தரையை அடைந்தவுடன் 'பார்த்தாயா! உன் காலில் மிதிபடாமல் பாதுகாப்பான இடத்திற்கு வந்து விட்டேன் ' என்று தலையைத் தூக்கிப் பேசுவதுபோல் தோன்றுகிறது.

இப்படி இன்னும் எழுதிக் கொண்டே போவதற்கு வாய்ப்பாக இந்த நாவல் நிறைய வெளிகளோடும், மெளனங்களோடும் படைக்கப்பட்டிருக்கிறது. பிராம்மணர்களைப் பற்றிய இடங்களில் மட்டும் பிராமணப் பேச்சு நடை; மற்ற இடங்களில் எழுத்து நடை எனப் பின்பற்றப் படுகிறது. மிகவும் கவனமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. சுத்தம் துல்லியம் என்று அடைய முடியாத ஒன்றிற்காக மேன் மேலும் கழுவிக் கொட்டுகிற 'வாளித்தண்ணியோடு குழந்தையும் போய்விடக்கூடாதே என்ற விழிப்புணர்வோடும் ' இந்தப் பிரதி தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதே அளவிற்குக் கவனத்தோடும் நிதானத்தோடும் இப்பிரதி தமிழ்ச்சூழலில் வாசிக்கப்படுமா ? 'ஜே.ஜே சில குறிப்புகள் ' எழுப்பி இருக்கிற இமேஜ் தடையாக நிற்குமா ? என்கிற பல சந்தேகங்கள் எழுகின்றன. நாவலில் எஸ்.ஆர்.எஸ் கூறுவது போல 'சந்தேகப் பிராணிகளால் லோகத்திற்குப் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கு; கூட இருக்கிற மனுசங்களுக்கு அவனைப் பிடிக்காது; காலத்திற்கு அவனைப் பிடிக்கும் ' நானும் அப்படித்தான் நம்புகிறேன்.

***

கதைசொல்லி - மார்ச் - மே-99

நன்றி - திண்ணை



ஆத்மாநாம் கவிதைகள் - சுந்தர ராமசாமி


ஆத்மாநாமின் மறைவும், அவர் மறைந்த விதமும் அவரது கவிதைகளைப் பற்றி சற்றுத் தூக்கலாகப் பேச நம்மைத் தூண்டிற்று என்று நினைக்கிறேன். பிரிவின் கொடுமையை எதிர் கொள்ளும் தருணங்களில் மிகை எப்போதும் தவிர்க்க முடியாததாகவே இருந்திருக்கிறது. அவர் நம்மை விட்டுப் பிரிந்து இப்போது ஒன்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன. அவர் கவிதைகளும் நம் இலக்கியத்தின் ஒரு பகுதியாகி விட்டது. இன்று அவரைப் பரிசீலனை செய்ய இந்த இடைவெளி நமக்கு உதவக்கூடும்.

ஒவ்வொரு கவிஞனும் தான் அழிந்த பின்னும் தன் கவிதைகள் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறான். 'என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்க இயலாது ' என்றார் ஆத்மாநாம். என்னை அழித்தும் என்னை அழிக்க இயலாது என்றும் சொல்லியிருக்கிறார். அது சரிதான். அவருடைய் சாரம் இன்றும் நம்மிடம் இருக்கிறது. அவருடன் உறவாட முடிகிறது. இந்த நேரத்தில் ஆத்மாநாமின் கவிதைகளை முழுமையாகவும் சிறப்பாகவும் பதிப்பித்து தந்திருக்கும் பிரம்மராஜனின் பணியை நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.

புதுக் கவிஞர்களில் பிரக்ஞைபூர்வமான கவிஞர்கள் மிகக்குறைவு. ஆத்மாநாம் பிரக்ஞைபூர்வமானவர். தன் செயல்பாடுகள் குறித்தும் தான் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் அவருக்கு யோசனைகள் இருந்திருக்கின்றன. காலத்தின் வரிசையில் கடைசியாக தன்னிடம் வந்து சேர்ந்திருக்கும் கவிதைகளின் பொதுக் குணத்தை பிரதிபலித்தல் இவருக்கு இயற்கையாக இல்லை. தன்னுடைய கவிதைகளை கண்டுபிடிக்கும் முயற்சியாகவே இவர் கவிதைகள் இருக்கின்றன. ஞானக்கூத்தனின் ஆரம்பகாலக் கவிதைப் போக்கை பிரதிபலித்து இவர் எழுதியுள்ள 'இன்னும் ' என்ற தலைப்பிட்ட கவிதையில்தான் இவர் சுத்தமாக இல்லாமல் இருக்கிறார். மற்றக் கவிதைகளில் - மொத்தம் 143 கவிதைகள் - இவரது ஆளுமை, பலவற்றில் மங்கலாகவும் ஒரு சிலவற்றில் மிகச் சிறப்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. பிரதிபலிப்பு படைப்பாகாது என்ற விழிப்பு இவரிடம் கூர்மையாக செயல்பட்டிருக்கிறது.

வாழ்நிலையில் தான் பெற்ற அனுபவங்களை கவிதை மூலம் இவர் ஆராய்ந்து கொண்டே போகிறார். தன்னை அறிந்து தன் பார்வையைத் தெளிவு படுத்திக் கொள்ளும் முனைப்பு இது. இந்த தெளிவு கூடிவரும் வகையை உணருவது இன்று சிரமமாக இருக்கிறது. இவரது கவிதைகளை கால வரிசைப்படுத்தித் தர பிரம்மராஜனுக்குச் சாத்தியப்பட்டிருக்கும் என்றால் இவர் பெற்றுள்ள வளர்ச்சியை இன்னும் துல்லியமாக நாம் மதிப்பிட்டிருக்க முடியும்.

சுதந்திரம் மனித ஆளுமைக்கு தரும் விகாசம், வாழ்நிலை சார்ந்த அபத்தங்களும் கேவலங்களும் தரும் வருத்தம், மனிதனை ஆசுவாசப்படுத்தக் காத்துக் கொண்டிருக்கும் இயற்கை, நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம், இவை சார்ந்த உணர்வுகள் அவர் கவிதைகளில் அழுத்தம் பெறுகின்றன. தன் கவிதைகள் மூலம் ஒரு உயர்நிலை பாதிப்பை நிகழ்த்த வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருந்தார் இவர். இதனால் தன் கவிதை மொழி தன் சக மனிதனுக்குப் புரிய வேண்டும் என்பதில் அவருக்கு கவனம் இருந்தது. ஏற்கும் புதுமையின் பொருள் என்ன என்பதிலும் இந்த மண் சார்ந்து அதன் பொருத்தம் என்ன என்பதிலும் அவர் கவனங்கள் கொண்டிருந்தார்.

மேற்கத்திய சோதனைகளின் பிரமிப்புகள் மீது அல்ல; உலக இலக்கியத்தின் தரம் மீதே இவர் பற்றுக் கொண்டிருக்கிறார். பழைய கவிதைகளின் அலங்காரங்கலை புறக்கணித்த புதுக்கவிதைகள் மூலம் உறுதிப்பட்டு வந்து கொண்டிருந்த புதிய அலங்காரங்களையும் இவர் புறக்கணித்திருக்கிறார். பேச்சு அல்லது கடிதங்களில் நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு மேற்பட்ட 'கவிச்சொற்கள் ' அவர் கவிதையில் இல்லை. கவிதைக்குரிய வலுக்களாகக் கருதப்படும் உவை, உவமேயம், படிமங்கள் இவற்றின் மீது சார்ந்து நிற்காமல் -இயற்கையாக கூடிவருவது வேறு- அர்த்தங்கள் தரும் அனுபவ அலைகளை நம்பி கவிதைகளை எழுதியிருக்கிறார். அநேக கவிதைகளில் குழாயின் ஒரு நுனியிலிருந்து மறு நுனிக்கு தண்ணீர் ஓடி இறங்குவது போல முதல் வரியிலிருந்து கடைசி வரிக்கு அர்த்தம் விரைந்து ஓடுகிறது. ஒரு சில கவிதைகளில் முன் பகுதியும், பின் பகுதியும் தொடர்பின்றி பிளந்து கிடக்கின்றன. இது வாசிப்பு சார்ந்த நம் குறையாகவோ அல்லது நோயுற்ற காலங்களில் கவிஞருக்கு ஏற்பட்ட தடையாகவோ இருக்கலாம்.

ஆத்மாநாமின் அநேக கவிதைகள் குறிக்கோளைச் சென்றடையவில்லைதான். நிறைவான கவிதையை அடைய முன்னுவதும் குறையாக அவை முடிந்து போவதும் கவிதைத் தொழிலின் விதி என்று கூறும் அளவுக்கு மிகச் சிறந்த கவிஞர்கள் கூடி வராமலேயே கவிதையை முடித்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.

ஆனால் ஆத்மாநாமின் கவிதைகளில் அலங்காரத்தினால் தடைபட்டவை என்றோ பிரமிப்பினாலோ மயக்கத்தினாலோ செயற்கையினாலோ இருப்பை மிகைப்படுத்திக்காட்ட விரும்பியதினாலோ தடைபட்டவை என்றோ அதிகம் இல்லை. அனுபவத்த்தில் மனம் இழையும் பயணம் எந்தப் புள்ளியில் கவிதையின் உடலாக மாறுகின்றது என்ற கேள்விக்கு திட்ட வட்டமான பதில் இல்லை. அநேக கவிதைகளில் இந்த உடல் உயிராக மாறும் காரியம் அவருக்கு நடக்கவில்லை.
கவிஞரான ஆத்மாநாமை அவர் வாழ்ந்த காலத்தின் நேர்மையான மனிதன் என்றும் சொல்லலாம். இது அபூர்வமான தகுதி. அவருடைய தொடர்புகள் சிறு வட்டத்தினுள் இருந்திருக்கலாம். உடல், காலம் இடம் சார்ந்த வரையறை கொண்டது. ஆனால் அவருடய கனவுகளின் எல்லை மேலான கவிதையின் விரிந்த தளத்தில் இருந்தது. மேலான கவிதையை மேலான வாழ்விலிருந்து பிரிக்க இயலாத லட்சியவாதியாகவும் அவர் இருந்தார்.

அவரது கவிதைகள் அவரது அனுபவ சாரங்களின் நாட்குறிப்புப் போல இருக்கின்றன. தன் அனுபவங்களை தான் விளங்கிக் கொண்ட விதத்தை சக மனிதனிடம் - மக்களிடம் அல்ல - அநேக சமயங்களில் ஒரு நண்பனுக்குச் சொல்லும் விதமாக - இவர் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். ஒலி பெருக்கியால் எழுதாமல் தன் மனதால் எழுதிய கவிதைகள் சக மனிதனின் கரங்களைப் பற்றிக் கொண்டு அவன் காதோடு சொல்லும் வரிகளுக்குரிய அந்தரங்கத்தோடு இருக்கின்றன. அந்த வரிகள் பொருட்படுத்தத் தகுந்தவை என்றால் தன்னுடைய நண்பனிடம் அவன் இந்த வரிகளைச் சொல்வான். ஒரு மனதிலிருந்து மற்றொரு மனதிற்கு கவிதை இப்படித்தான் தவழ்ந்து செல்கிறது.
மென்மையான கவிஞர் என்று இவரைச் சொல்லலாம். இவருடைய ரீங்காரம் தான் மென்மையானதே தவிர ரீங்காரத்துக்கு ஆதாரமான கம்பி - உள்பலம்- வலிமையானது. சுயத்தின் மீது நம்பிக்கை கொண்ட உள்பலம் இது. தன் அனுபங்களை சதா அசை போடுவதில் கூடிவரும் உள்பலம். அனுபவங்களின் சாரங்களை அறிய தனக்கு உகந்த தயாரிப்புகளிலும் இவர் கவனம் கொண்டிருந்தார். படிப்பும், தொடர்புகளும், விவாதங்களும், இதனால் காலத்தைப் பற்றிய உணர்வு இவருக்குச் சாத்தியமாயிற்று. கூடிவராத கவிதைகளில் கூட காலத்துக்கும் கவிதைக்கும் இடையே பழமையின் களிம்பு இல்லை.

பிறப்பு, வளர்ப்பு, தேசம், மொழி, ஜாதி, மதம் இவற்றின் குறுகல்கள் தாண்டிய முகம் இவருடையது. இதனால் அடையாளங்கள் அற்று வெற்று அம்பலத்தில் வெளிறிப்போன கவிதைகளாக இவருடையவை இருக்கின்றன என்பது இல்லை. ஒரு தமிழ் நகரத்தில் வாழ்ந்த தமிழனின் நவீனக்கவிதைகளாக இவை இருக்கின்றன. இந்தக் கவிதைகளின் வேர் இந்த மண்ணில் இருக்கிறது. இந்த மண்ணின் வேதனை இந்தக் கவிதையிலும் இருக்கிறது.

-1993

நன்றி - திண்ணை

என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும் - சுந்தர ராமசாமி

வாசகர்களை நேரடியாகச் சந்திக்கும் அனுபவங்களை அதிகம் நான் பெற்றதில்லை. அச்சந்திப்புகளைக் கூடுமான வரையிலும் தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறேன். வாசிப்பினூடேயே வாசகன் படைப்பாளியுடன் முழுமையான உறவைக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறேன். வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமான நேர்ச் சந்திப்பு பல சந்தர்ப்பங்களில் வாசிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய அனுபவத்தை எதிர்மறையாகப் பாதிக்கிறது என்றும் கருதுகிறேன்.

காலத்தில் வாழும் ஆற்றல் பெற்றிருந்தால்தான் ஒருவன் படைப்பாளி. ஒரு படைப்பாளி அவன் படைப்புக்களின் மரணத்திற்குச் சாட்சியாக இருந்துவிட்டுக் கடைசியாக அவன் மறைகிறான் என்றால் அவனைப் படைப்பாளி என்று எப்படிச் சொல்ல முடியும் ? படைப்பாளி மறைந்ததும் அவனைப் பின் தொடர்ந்து அவனுடைய படைப்புப்களும் மறைந்துபோய்விட்டால் அப்போதும் அவனைப் படைப்பாளி என்று கூற முடியாது. தான் இல்லாதபோதும் தன் சாராம்சத்தை வாழ வைத்துக்கொண்டிருப்பவன்தான் படைப்பாளி.

லியோ தோல்ஸ்த்தாய் இப்போது இருக்கிறாரா ? மறைந்துவிட்டாரா ? தோல்ஸ்தாய் என்ற மனிதன் மறைந்துவிட்டான். ஆனால் அவருடைய சாராம்சம் இப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. 'போரும் காதலும் ', 'அன்னா கரீனினா ', 'புத்துயிர்ப்பு ' இவையெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் வரையிலும் தோல்ஸ்தாயும் வாழ்ந்து கொண்டிருப்பார். இவற்றைக் கற்றறிய தோல்ஸ்த்தாய் என்ற மனிதனின் உதவி இல்லாமல் இருப்பது நமக்குக் குறையாக இருக்கிறதா ? எழுத்தாளனின் நேரடியான உறவு இல்லாமலேயே அவனது படைப்புக்களுடன் வாசகன் முழுமையான உறவு கொள்ள முடியும். படைப்புக்கு வெளுயே எழுத்தாளனின் தேவையைப் படைப்பு உணர்த்தாமல் இருந்தால்தான் அது முழுமையானது. இது போன்ற எண்ணங்கள் - இவை சரியோ தவறோ - ஏற்பட்டது காரணமாக வாசகனுடன் உறவு கொள்ள வேண்டியவை புத்தகங்களே அன்றி எழுத்தாளன் அல்ல என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம்.

இப்படியெல்லாம் வரையறை செய்துகொண்ட பின்பும் எழுத்தாளனுக்கு வாசகனைச் சந்திப்பதில் அறிவு ரீதியான நிலை தாண்டி உணர்வுபூர்வமான ஒரு மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. எழுத்தாளனின் படைப்புக்களைப் பற்றி அவனிடமே வாசகன் பேசுகிறான். பாராட்டுகிறான். தன் மட்டற்ற மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறான். கூரான விமர்சனம் ஒன்றை முன்வைக்கிறான். குறைகளை அடுக்கிக்கொண்டேபோகிறான். சில சமயம் படைப்பையே மொத்தமாக நிராகரித்துவிடுகிறான். ஒரு விவாதத்தை உருவாக்க முடிகிறது. படைப்பைப் பற்றிய சில சூட்சுமங்களை எழுத்தாளனால் வாசகனுக்கு எடுத்துச் சொல்ல முடிகிறது. படைப்பைப் பற்றிச் சில குறைகளை வாசகன் மூலம் எழுத்தாளன் தெரிந்துளகொள்ள முடிகிறது.

சேலத்தில் முதல் முறையாகப் பேசுகிறேன். அது உண்மைதான். ஆனால் சேலம் எனக்கு மிகவும் நெருக்கமான இடம். தொடர்ந்து என் இளம் வயதிலிருந்து இங்கு வந்துகொண்டிருந்திருக்கிறேன். சேலம் தெருக்களும் ஹோட்டல்களும் எனக்குப் பழக்கமானவை. சுமார் 30 வருடங்களுக்கு முன் பெரியாரின் பேச்சு ஒன்றை இங்கு கேட்டேன். எங்கள் ஊரில் பல முறை அவருடைய பேச்சை அதற்கு முன்னாலேயே கேட்டிருக்கிறேன். பல ஹோட்டல்களின் பெயர்கள், தெருக்களின் பெயர்கள், தங்கும் விடுதிகளின் பெயர்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. மிக மோசமான தெருச்சண்டைகளைச் சேலத்தில் பார்த்திருக்கிறேன். மிகச் சிறந்த காப்பியைச் சேலத்தில் அருந்தியிருக்கிறேன். 25, 30 வருடங்களுக்கு முன்னால் வெளுயான தமிழ்ப் படங்கள், அவை வெளுயாகிற அன்று கொட்டகை வாயிலில் களேபரமும் சந்தடியும் சண்டையும் உற்சாகமும் இருக்கும். அவற்றைப் பல முறை சேலத்தில் பார்க்கக் கிடைக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன்.

ஒரு முறை நான் என் நண்பர்களுடன் இங்கு வந்து கவிஞர் சி. மணியுடன் இரண்டொரு நாட்கள் இருக்க நேர்ந்தது. 'அஃக் ' பத்திரிகை வந்துகொண்டிருந்த காலத்தில் - வந்துகொண்டிருந்த காலத்திலோ அதற்குப் பின்னாலோ எனக்கு நினைவில்லை -அஃக் பரந்தாமனைச் சந்தித்திருக்கிறேன். நீண்ட இடைவெளுக்குப் பின் இங்கு இப்போது வந்தபோது அந்த நினைவுகள் மனதில் சுழன்றுகொண்டிருக்கின்றன. இப்போது காலம் வெகுவாக மாறிவிட்டது. ஊரே மாறிவிட்டது. புதிய எழுத்தாளர்களும் புதிய வாசகர்களும் தோன்றியிருக்கிறார்கள். புதிய எழுத்து முறைகள் தோன்றியிருக்கின்றன. தமிழ்ச் சூழலிலேயே ஒரு மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நாம் விரும்பும் வகையிலான மாற்றங்கள். அவை பற்றியெல்லாம் பேச இன்று நமக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

'படிப்பு அனுபவமும் படைப்பு அனுபவமும் ' ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாத அனுபவங்கள். படிப்புதான் படைக்க வேண்டும் என்ற ஆசையையே தூண்டுகிறது. நான் படித்த விஷயங்கள் என்னைப் படைக்கத் தூண்டின என்ற வாசகத்தைச் சொல்லாத எழுத்தாளர்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். என்னுடைய அனுபவமும் அதுதான். என் பேட்டிகள், என் புத்தகங்களில் இணைக்கப்பட்டிருக்கின்றன. என் படிப்பு, என் படைப்பு பற்றிய விவரங்கள் அடங்கிய கட்டுரைகளும் என் புத்தகங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் நான் கூறியுள்ள விவரங்களை மிகச் சுருக்கமாகக் கூறிவிட்டு அவற்றில் சொல்லாத விஷயங்களை அதிகம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

என் படிப்பிலிருந்தோ படைப்பிலிருந்தோ புதுமைப்பித்தனைப் பிரிக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிப் படிப்பு என்று எனக்குச் சொல்லும்படி ஒன்றும் இல்லை. ஒரு நிர்பந்தத்தை முன்னிட்டு நான் பள்ளிக்கு ஒரு சில வருடங்கள் சென்றிருக்கிறேன். அப்படிச் சென்ற காலங்களில் நான் விருப்பத்துடன் என் பாடங்களை ஒருநாள்கூடக் கற்ற நினைவில்லை. ஆசிரியர் பள்ளியில் பாடம் எடுக்கும்போது அவருடைய பேச்சு என் காதில் பெரும்பாலும் விழுந்ததேயில்லை. வகுப்பைக் கவனிக்காத மாணவன் என்று பெயர் பெற்று மோசமான தண்டனைகள் பெற்றிருக்கிறேன். வகுப்பில் கவனத்தைச் செலுத்துவது என்னால் முடியாத ஒரு காரியமாகத்தான் இருந்தது. மனம் எப்போதும் வகுப்புக்கு வெளுயே, மற்றொரு இடத்தில், மற்றொரு காலத்தில், உலக வாழ்க்கைக்கு அதீதமான ஜீவராசிகளுடன் சஞ்சரித்துக்கொண்டிருக்கும். வகுப்பில் என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியாது.

நான் படித்த பள்ளி மிகப் பெரிய கட்டடம். வகுப்பறைகள் எனக்குப் பிடிக்காவிட்டாலும் நீளமான வராண்டாக்கள் பிடிக்கும். படிக்கட்டுகள் பிடிக்கும். போர்டிகோ பிடிக்கும். ராட்சசத் தூண்கள் பிடிக்கும். முகப்புக் கோபுரங்கள் பிடிக்கும். நந்தவனம் பிடிக்கும். கால் பந்தாட்ட மைதானங்கள் - எண்ணிக்கை நான் படித்த காலத்தில் ஏழெட்டு என்று சொல்லலாம் - இவையெல்லாம் பிடிக்கும். பள்ளியிலிருந்த எல்லா மரங்களுடனும் எனக்கு மானசீகமான உறவு இருந்தது. பள்ளிக் கட்டடத்தையும் அது இருக்கும் இடத்தையும் ஒரு நாள்கூட மறந்து இப்போது வாழ முடியவில்லை. அநேகமாக ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் அங்கு போகிறேன். எனக்கு விருப்பமான வேப்ப மரத்தடியில் உட்கார்ந்துகொண்டிருப்பேன்.

பள்ளியில் வீரபத்திரத் தேவர் என்ற பெயரில் எனக்கு நண்பன் ஒருவன் இருந்தான். அவனுக்கு என் மீது ஆழ்ந்த பிரியம் இருந்தது. என்னை வகுப்பில் கேலி செய்யும் பையன்களை எண்ணி நான் உள்ளூர நடுங்கிக்கொண்டிருந்தேன். 'உன்னை யாராவது கேலி செய்தா என்கிட்ட சொல்லு. அலகைத் திருப்பிடறேன் ' என்று வீரபத்திரத் தேவர் என்னிடம் சொன்னான். அவனுடைய இந்த நிலைப்பாட்டை பகிரங்கமாக வைத்துக்கொண்டிருந்தான். அவனுடைய இருப்பு எனக்குப் பெரிய ஆறுதலைத் தந்தது. 1945, 46 காலம். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் உச்ச கட்டம். 1942ல் நடந்த ஆகஸ்டுப் புரட்சியிலிருந்து தொடர்ந்து மாணவர்கள் பல்வேறுபட்ட காரணங்களை முன்னிட்டு ஜெயிலுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். என்னுடைய பள்ளித் தோழர்களும் போய்க்கொண்டிருந்தார்கள். வீரபத்திரத் தேவர் ஜெயிலுக்குப் போகத் துடித்துக் கொண்டிருந்தான். ஒரு தடவை வீரபத்திரத் தேவர் அவன் கைதாவதற்கான அனைத்துக் காரியங்களையும் செய்த பின்பும்கூட போலீஸ் அவனை அலட்சியப்படுத்திவிட்டு, அவன் செய்த காரியங்களுக்குப் பாதிக் காரியம்கூடச் செய்யாத சுப்பையா என்ற மாணவனைக் கைதுசெய்து கொண்டுபோய்விட்டது.

வீரபத்திரத் தேவர் அவமானம் தாங்காமல் பள்ளிக்கே வரவில்லை. நான் அவனைத் தேடிக்கொண்டு அவனுடைய வீட்டிற்குப் போனேன். அவன் ஒரு நார்க்கட்டிலில் சம்மணம் கூட்டி உட்கார்ந்துகொண்டு ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான். பாட புத்தகம் அல்லாத ஒரு புத்தகத்தை என் சக மாணவன் படிப்பதை அப்போதுதான் முதன் முறையாகப் பார்க்கிறேன். என் மனதில் மிகப் பெரிய கிளர்ச்சி தோன்றிற்று. இவ்வளவு பெரிய புத்தகத்தை ஒரு மனிதனால் படிக்க முடியுமா ? தேவர் புத்தகத்தைக் காட்டினான். 'எரிமலை அல்லது இந்திய சுதந்திரப் போர் ' என்பதே புத்தகத்தின் தலைப்பு. சாவர்க்கர் எழுதியது. இரத்தம் கொதிக்கிறது என்றான் தேவர். வாழ்க்கையில் ஒரு புத்தகம் கிளர்ச்சியை ஏற்படுத்திய முதல் தருணம் அதுதான். இந்தப் புத்தகத்தைப் பற்றி 'ஒரு புளியமரத்தின் கதை 'யில் குறிப்பிட்டிருக்கிறேன். 'எரிமலை 'யை நான் படிக்கவில்லை. அந்தப் புத்தகத்தின் மீது எனக்கு பயம் இருந்ததுதான் காரணம். அதற்கு முன் நான் எந்தப் புத்தகத்தையும் படித்ததில்லை. கதை அல்லாத ஒன்றை, அதிகப் பக்கங்கள் கொண்ட ஒரு நூலை என்னால் படிக்க இயலுமென்றே அப்போது நான் நம்பவில்லை. தேவர் 'எரிமலை 'யைப் பல நாட்கள் என்னிடம் தந்துவைத்திருந்தான்.

அந்தப் புத்தகத்தை நான் வெகு நேரம் அளைந்திருக்கிறேன். புத்தகங்களைக் கையில் வைத்துப் பக்கங்களை விசிறியிருக்கிறேன். முன் பக்கம், பின் பக்கம் உள்ள துண்டு துணுக்குகளைப் படித்திருக்கிறேன். இதிலிருந்து ஒன்று தெரிகிறது. மனிதர்கள் போல் தான் புத்தகங்களும். மனிதர்களிடம் நமக்கு விளக்கத் தெரியாத, முன்கூட்டி நாம் சேர்த்துவைத்துக்கொள்ளும், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட பயம் இருந்ததென்றால் நாம் நெருங்கிப் பழக முடியாது. உறவு கொள்ள சகஜம் வேண்டும். நிம்மதி வேண்டும். நெருக்கம் வேண்டும். நம்பிக்கை வேண்டும். இவையெல்லாமே புத்தகம் சார்ந்தும் தேவையான உறவுநிலைகள்தான். வாசகனுக்கும் புத்தகத்துக்குமான உறவு -பயமற்ற அன்னியோன்னியம் - மிக முக்கியமானது.

இந்த உறவை உருவாக்கத்தான் சிறந்த விமர்சகர்கள், மதிப்புரையாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். எந்தத் தொழிலில்தான் கோணலும் வக்கிரமும் இல்லை ? அது போல் விமர்சனத்திலும் மதிப்பீட்டிலும் கோணல்களும் வக்கிரங்களும் இருக்கின்றன. இவர்கள் எழுத்தைப் படித்துவிட்டு விமர்சகர்களைப் பற்றியும் மதிப்புரையாளர்களைப் பற்றியும் தவறான கற்பனைக்கு ஆளாகிறோம். விமர்சனம் என்பது ஆரோக்கியம் சார்ந்தது. சமூக நலம் சார்ந்தது. நோய்க்குணம் கொண்டதல்ல.

என் வீட்டில் படிப்பவர்கள் அதிகம் இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. புத்தக அலமாரியைச் சுற்றித் தவழ்ந்து விளையாடியவன் அல்ல நான். தந்தைக்குப் புத்தக வாசிப்பில் நம்பிக்கை இருந்தது என்று சொல்வதற்கில்லை. தாயை ஆழமான வாசகி என்று சொல்ல முடியாவிட்டாலும் வாசிப்பில் ஆசை கொண்டவர் என்று சொல்லலாம்.

நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டுப் படுத்துக்கொண்டிருந்தபோது உறவினர் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். பொழுது போகாத அலுப்புக்கு நான் மிகவும் ஆட்படுவதாக என் தாய் அவரிடம் சொல்லி வருந்தினார். அவர் ஒரு நூல் நிலையத்தின் தலைவராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார். மறுமுறை என்னைப் பார்க்க வரும்போது ஒரு சில புத்தகங்களைக் கொண்டுவந்தார். அதில் ஒன்று புதுமைப்பித்தனின் 'காஞ்சனை ' தொகுப்பு. அந்தச் சிறுகதைகளை எழுதியிருப்பவர் புதுமைப்பித்தன் என்பதே அப்போது எனக்குத் தெரியாது. புத்தகத்தைப் படிப்பதற்கு முன் ஆசிரியர் பெயரை கவனிக்க வேண்டும் என்பதும் அப்போது எனக்குத் தெரியாது. பள்ளியில் தமிழ் படிக்கவில்லை என்பதால் மிகவும் சிரமப்பட்டு அந்தக் கதைகளைப் படிக்கத் தொடங்கினேன். அதில் 'மகாமசானம் ' என்ற கதை என்னை வெகுவாகக் கவர்ந்தது. எழுத்தின் மீதும் படிப்பின் மீதும் கனவு சார்ந்த அக்கறை முதலில் எப்போது தோன்றிற்று என்று எவரேனும் என்னிடம் கேட்டால் மகாமசானம் படித்தபோது என்றுதான் சொல்லுவேன். அப்போது ஏற்பட்ட கிளர்ச்சியை மனத்தளவில் மட்டுமல்ல உடல் ரீதியாகவும் நான் உணர்ந்தேன். மகாமசானத்தை உருவாக்கியவன் என்ன காரியத்தைச் செய்துகொண்டிருக்கிறானோ அந்தக் காரியத்தைத்தான் நானும் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் உருவாயிற்று. தொடர்ந்து புத்தகங்களை நேசிக்கும் ஒரு வெறி மலர்ந்தது. இன்றளவும் அந்த வெறி இருந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அதை ஒருவிதமான காதல் என்றுதான் சொல்ல வேண்டும். கட்டுக்கடங்காத காதல். கண்மூடித்தனமான காதல். தறிகெட்டு அலைபாயும் காதல். புத்தகத்தைப் படிப்பதைவிட முக்கியமானதாக இருக்கிறது புத்தகங்களைப் பார்ப்பது. படிப்பதைவிட முக்கியமானதாக இருக்கிறது புத்தகங்களை ஸ்பரிசிப்பது. அவற்றின் அழகில் மனதைப் பறிகொடுப்பது. புத்தம்புதிய புத்தகங்கள் இறைந்து கிடக்கும் ஒரு மேஜை பூத்துக் குலுங்கும் ஒரு நந்தவனம் போல்தான் எனக்குத் தோன்றுகிறது. பூக்களின் அழகுக்குச் சற்றும் குறைந்த அழகு கொண்டவை அல்ல புத்தகங்கள் என்றுதான் தோன்றுகிறது.

வாங்கும் புத்தகங்களில் பாதிதான் படிக்க முடிகிறது. இது தெரிந்தும் புத்தகங்களை வாங்கிக்கொண்டேயிருக்கிறேன். என்னுடைய இயற்கை அபூர்வமான ஒன்று என்பது அல்ல. பல வாசகர்களும் இந்தக் கண்மூடித்தனமான வெறிக்கு ஆட்பட்டுத்தான் இருக்கிறார்கள். புத்தகங்களின் மீது வாசகன் கொள்ளும் நேசம் தர்க்க ரீதியானது மட்டுமல்ல.

17, 18 வயதில் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டேன். அதற்கு முன் கையில் கிடைத்த வரையிலும் புதுமைப்பித்தனின் படைப்புக்களைப் பலமுறை படித்திருந்தேன். புதுமைப்பித்தனின் எழுத்து மீது நான் கொண்ட ஒரு ஆவேச உறவை மனநிலை சற்றுப் பிசகிய ஒரு வெளுப்பாடாகவே என் தாய் கருதினாள். ஒரு வாசகன் எழுத்தாளனாக மாறும்போது அவனுடைய மனநிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. எழுத்து ஒரு சமூகச் செயல்பாடு; லெளகீகச் செயல்பாடு அல்ல. லெளகீகச் செயல்பாட்டுக்கு எப்போதும் அடிப்படையாக இருப்பது நான் என்ற உணர்வு. படைப்புக்கு அடிப்படையாக இருப்பது நாம் என்ற உணர்வு. பிரபஞ்சத்திலிருந்து, சமூகத்திலிருந்து வேறுபடுத்தித் தன்னில் ஆழ்ந்து கிடப்பதுதான் லெளகீகம். ஊருடன் இணைந்து, உலகத்துடன் இணைந்து பிணைந்து கிடப்பது படைப்பு என்று சொல்லலாம். புதுமைப்பித்தன் மீது ஆவேச வெறி கொண்டிருந்த காலத்தில் - அந்த வெறி இப்போது இல்லை என்பது மட்டுமல்ல;ள அதைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற நோக்கமும் இப்போது இருக்கிறது - வேறு பல எழுத்தாளர்களையும் படித்தேன். முக்கியமாக மணிக்கொடி எழுத்தாளர்கள் எல்லாரையும் படித்தேன். 1950இலிருந்து பதினைந்து இருபது வருடங்கள் நாள் ஒன்றுக்கு ஒரு புத்தகம் என்று படித்திருக்கிறேன். புத்தகங்கள் சார்ந்து சில விருப்பு வெறுப்புகள் இருந்திருக்கின்றன. ஆனால் ஆரம்ப நாட்களில் பிரக்ஞை பூர்வமான தேர்வு என்பது இல்லை. புத்தகங்களின் தோற்றம் அன்றிலிருந்து இன்று வரையிலும் முக்கியமானதாக இருந்துவருகிறது. மோசமான தோற்றங் கொண்ட பல நல்ல புத்தகங்களை அவற்றின் தோற்றம் காரணமாகப் படிக்காமல் விட்டிருக்கிறேன்.

இன்றும் மோசமான புத்தகங்களைப் படிக்க மனது சங்கடப்படுகிறது. மற்றொரு விருப்பு வெறுப்பு, காகிதம் சம்பந்தப்பட்டது. நான் பொதுவுடமைக் கட்சியின் அனுதாபியாக இருந்த காலத்தில் சோவியத் யூனியனில் இருந்து வந்த பல புத்தகங்களையும் படிக்கச் சங்கடப்பட்டிருக்கிறேன். கட்டமைப்பை உருவாக்குவது, அதாவது பைண்டிங்கை உருவாக்குவதில் அவர்கள் நிபுணர்கள். சோவியத் கம்யூனிசத்துக்கு முற்பட்ட காலத்திலும் சரி பிற்பட்ட காலத்திலும் சரி அவர்களுக்கு இணையான பைண்டிங்கை வேறு யாரும் உருவாக்கவில்லை. எனக்கும் அந்த பைண்டிங் மீது மிகுந்த மதிப்பு உண்டு. ஆனால் காகிதத்தின் மணத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு புத்தகமும் அதன் பக்கங்களுக்குள்ளே ஒரு ரசாயனத் தொழிற்சாலையை நடத்துவது போல் ஒரு ரசாயன வாடை இருந்துகொண்டேயிருக்கும். ருஷ்ய எழுத்தாளர்களின் எழுத்துக்களைக்கூட நான் கூடுமானவரை சோவியத் பதிப்புகளில் படிக்காமல் வேறு நாட்டுப் பதிப்புகளில்தான் படித்தேன்.

முரட்டுத்தனமான மொழியில் எழுதப்பட்ட எந்தப் புத்தகத்தையும் படிக்கச் சிரமமாக இருக்கிறது. முரட்டுத்தனமான மொழி என்று சொல்லும்போது கெட்ட வார்த்தைகள், ஆபாசமான வார்த்தைகள் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டாம். மொழிக்கும் படைப்பாளிக்குமான உறவில் ஒரு முரட்டுத்தனம் இருக்கக்கூடாது. உறவு இணக்கமற்று இருந்தால், இங்கிதமற்று இருந்தால் ஒத்திசைவு என்பது அறவே இல்லாதிருந்தால் அந்தப் புத்தகங்களைப் படிக்கக் கஷ்டமாக இருக்கிறது. சில தாம்பத்திய உறவுகள் மிகக் கோணலாக அமைந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கல்யாணம் ஆனதிலிருந்து ஓயாமல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சண்டை. எடுத்ததற்கெல்லாம் சச்சரவு என்று சில தாம்பத்தியங்கள் அமைந்துவிடுகின்றன. அதைப் போன்றதொரு உறவு எழுத்தாளனுக்கும் மொழிக்கும் இருந்ததென்றால் அதைத்தான் நான் முரட்டுத்தனம் என்கிறேன். எப்படி கணவனும் மனைவியும் சண்டைபோட்டுக்கொள்கிற இடத்தில் நிம்மதியாக நிற்க முடியாமல் போகிறதோ, அது போல் இந்தப் புத்தகங்களுடன் நமக்குத் தோழமை கொள்ள முடியாமல்போகிறது. தமிழில் ஒரு அம்மையார் எழுதிக்கொண்டிருக்கிறார். நிறையவே எழுதியிருக்கிறார். முற்போக்கான முக்கியமான படைப்பாளி என்று பெயர் பெற்றவர். அவருடைய படைப்பில் ஒன்றைக்கூட என்னால் படிக்க முடியவில்லை. முரட்டுத்தனம் என்று நாம் எதைக் கற்பனை செய்துகொள்கிறோமோ அந்த அம்சமே அவர் எழுத்தில் கிடையாது. இருந்தாலும் அவருக்கும் மொழிக்குமான உறவு மிகுந்த சங்கடத்தை எனக்கு ஏற்படுத்துகிறது. ஒரு புத்தகத்தையேனும் முழுமையாகப் படித்துவிட்டு அந்தப் புத்தகத்தின் மீதான விமர்சனத்தை ஆதாரபூர்வமாகச் சொல்வோம் என்றால் அந்தக் காரியம் நடக்கவேயில்லை.

இந்த நூற்றாண்டில் முக்கியமானவர்கள் என்று கருதப்படும் பலருடைய நூல்களையும் நான் படித்திருக்கிறேன். முக்கியமாகச் சிறுகதைகள், நாவல்கள், சமூக விமர்சனங்கள், இலக்கிய விமர்சனங்கள், சமயம் சார்ந்த புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள், சமயத்துக்கெதிரான புத்தகங்கள், ஆன்மிகத்தைப் பற்றி விளக்கும் புத்தகங்கள் என்று பல. குறைந்தது இந்த நூற்றாண்டைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் மீதாவது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். உங்கள் முன் அந்த ஆசிரியர்களுடைய பெயர்களையெல்லாம் நான் வரிசைப்படுத்திக்கொண்டுபோவது என் உணர்ச்சிகளை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடிய ஒரு விஷயம்.

நான் வாசிப்பில் நம்பிக்கை கொண்டவனே ஒழிய என்னை ஒரு படிப்பாளி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. எனக்கு மூன்று தகுதிகள் இருக்கின்றன. அவை என்னுடைய இயற்கை சார்ந்த எளிமையான தகுதிகள். நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இதற்கு மேற்பட்ட எந்தத் தகுதிகளையும் நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. புலவர் என்றோ அறிவாளி என்றோ சிந்தனையாளர் என்றோ ஒருவர் என்னை அழைத்தால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அழைப்பது அவர் சுதந்திரம். ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது என் சுதந்திரம். அத்துடன் நான் சீரான படிப்பாளியும் அல்ல. ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுத்து அந்த விஷயத்தைச் சார்ந்த புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் என்னிடம் கிடையாது. ஒரு பொருள் சார்ந்த தேர்ச்சியைப் புத்தகங்களின் மூலம் உருவாக்கிக்கொள்ளும் பழக்கம் என்னிடம் கிடையாது. ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கும், ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்திற்கும், ஒரு ஆசிரியரிடமிருந்து மற்றொரு ஆசிரியருக்கும், என் விருப்புகள் சார்ந்து, என் மனோநிலை சார்ந்து, தாவிக்கொண்டேயிருப்பேன். எனக்குச் சில அக்கறைகள் இருக்கின்றன. இடங்கள் சார்ந்த அக்கறை. காலங்கள் சார்ந்த அக்கறை. கடவுள் சார்ந்த அக்கறை. கடவுள் மறுப்பு சார்ந்த அக்கறை. தத்துவம் சார்ந்த அக்கறை. மனிதர்கள் சார்ந்த அக்கறை. மனித உறவுகள் சார்ந்த அக்கறை. இவையெல்லாம் இருக்கின்றன. இந்த அக்கறைகள் மனதில் சில ஆவல்களை உருவாக்குகின்றன. இந்த ஆவல்களைத் தீர்க்க நான் புத்தகங்களைப் படிக்கிறேன்.

1952இலோ 53இலோ நான் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளுயிட்டேன். அந்த மலரில் சேர்ப்பதற்காக நான் ஒரு கதை எழுதினேன். அதுதான் என் முதல் படைப்பு. அது 'நிஜமும் நிழலும் ' என்ற தலைப்பில் பின்னால் 'சாந்தி ' யில் வெளுவந்தது. புதுமைப்பித்தனின் மொழி நடையும் பார்வையும் ஊடுருவியிருந்த, அவருடைய பாதிப்பை வெகுவாகக் கொண்ட கதை. அப்போது தமிழில் வெளுவந்த முற்போக்கு எழுத்துக்களையும் - படைப்பு, இலக்கியங்கள் என்று சொல்வதைவிட சிந்தனைகள் என்று சொல்ல வேண்டும் - தொடர்ந்து படித்துவந்தேன். மலையாளத்திலும் முற்போக்கு இலக்கியங்கள் - அவை அதிகமும் படைப்புகள் - தொடர்ந்து படித்துவந்தேன். அப்போது நான் தகழி, வைக்கம் முகம்மது பஷீர், லலிதாம்பிகா அந்தர்ஜனம், கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி, எஸ். கே. பொற்றகாட் போன்ற பலரையும் படித்தேன். மலையாளத்தில் விமர்னங்களையும் நிறையவே படித்தேன் என்று ஞாபகம். எம்.பி. பாலின் புத்தகங்களும் சி.ஜே. தாமஸ், எம். கோவிந்தன் ஆகியோரின் எழுத்துக்களும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. படைப்பிலக்கியம் சார்ந்து புதுமைப்பித்தன் என்னை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறாரோ அந்த அளவுக்கு எம். கோவிந்தன் என் சிந்தனைகளைப் பாதித்திருக்கிறார்.

ரகுநாதனுடனும் 'சாந்தி ' யுடனும்தான் முதலில் எனக்குப் படைப்பு சார்ந்த உறவு ஏற்பட்டது. 'தண்ணீரி 'லிருந்து தொடங்கி நான் எழுதிய பல கதைகள் அவர் வெளுயிட்டவைதான். அந்தக் கதைகளெல்லாம் வாழ்க்கை என்னைப் பாதித்த விதத்திற்கு நான் தந்த எதிர்வினை என்று சொல்லலாம். புற உலகத்தில் மனித வாழ்க்கை எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. இடதுசாரிச் சிந்தனைகள், முக்கியமாக மார்க்சியம் சார்ந்த பார்வை என்னை வெகுவாக ஆட்கொண்டது. புதுமைப்பித்தனின் பார்வை, மலையாளத்தில் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் என்று கருதப்பட்ட எழுத்தாளர்களின் படைப்பிலக்கியம் சார்ந்த பார்வை, ஜீவாவுடன் நான் கொண்ட தோழமை, பின்னர் நெல்லையில் எனக்கு வாய்த்த நண்பர்கள் என். டி. வானமாமலை, அண்ணாச்சி சண்முகம்பிள்ளை, நா. வானமாமலை, தொ.மு.சி. ரகுநாதன், அண்மையில் மறைந்துபோன கம்யூனிஸ்ட் தலைவர் ப. மாணிக்கம், பாலதண்டாயுதம், முருகானந்தம், தி. க. சி. ஆகியோருடன் ஏற்பட்ட தோழமை, அவர்களுடன் நிகழ்ந்த விவாதங்கள் எல்லாமே என் பார்வையை உருவாக்கியதில் பங்கு பெற்றிருக்கின்றன. இந்தக் காலத்தில்தான் நான் 'இன்றைய இந்தியா ' என்ற நூலைப் படித்தேன். இரண்டு பாகங்கள். ரஜினி பாமிதத், பிரிட்டிஷ் பொதுவுடைமைவாதி, எழுதியது. தமிழில் எஸ். ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஒட்டச் சுரண்டிய பின் நாம் அடைந்துவிட்ட கேவலமான நிலைமையைப் பொருளாதார அளவுகோல் சார்ந்து விவரிக்கும் புத்தகம். இந்த நூல் என்னை வெகுவாகப் பாதித்தது.

மலையாள இலக்கியம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றுக்கு அடுத்தாற் போல் என் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது ரஷ்ய இலக்கியம். புஷ்கின், துர்கனேவ், தோல்ஸ்தாய், அந்தான் செகாவ், அலெக்ஸாண்டர் குபின், மார்க்சிம் கார்க்கி, ஷோலக்கோவ் எல்லோருமே என் மனதைக் கவர்ந்தவர்கள். மாக்சிம் கார்க்கியின் கதைகள் தமிழிலும் நிறைய மொழிபெயர்க்கப்பட்டு வெளுவந்திருக்கின்றன. அவருடைய 'அமெரிக்காவிலே ' என்ற புத்தகத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. கு. அழகிரிசாமி அந்தக் கட்டுரைகளை அவருடைய 23ஆவது வயதில் மொழிபெயர்த்திருக்கிறார். மிகவும் அடர்த்தியான மொழியில், வர்ணனைகள் நிரம்பக் கொண்ட மொழியில் கார்க்கி அந்த நூலை எழுதியிருக்கிறார். கிராமியப் பின்னணி கொண்ட அழகிரிசாமி, உயர் கல்வி கற்பதற்கான வசதிகள்கூடப் பெற்றிராத அழகிரிசாமி, அதை மிகுந்த உழைப்பைச் செலுத்தி மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நூல் என்னை வெகுவாகப் பாதித்தது.

என்னை பாதித்த மற்றொரு புத்தகம் ஜான் ஸ்டான்பெக் எழுதிய 'க்ரேப்ஸ் ஆஃப் ராத் ' (Grapes of Wrath) என்ற அமெரிக்க நாவல். தமிழில் 'கோபத்தின் கனிகள் ' என்று ஏகதேசமாக மொழிபெயர்த்துக் கொள்ளலாம். 'கோபத்தின் கனிகள் ' நாவலால் கவரப்பட்ட நான் அவரின் வேறு பல நூல்களையும் படித்தேன். இவருடைய ஒரு சில நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கின்றன. 'கடல் முத்து, ' 'சிவப்புக் குதிரைக் குட்டி ' ஆகிய நாவல்கள்.

படைப்புமொழி என்பது எனக்கு ஆரம்ப நாட்களிலிருந்தே ஒரு சவாலாகத்தான் இருந்தது. என் ஆரம்ப காலச் சிறுகதைகளில் நான் பயன்படுத்திய மொழி எனக்கு அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை. வசப்பட வேண்டிய மொழி பற்றி மனதில் ஒரு கனவு இருந்தது. அந்தக் கனவைப் பிறரிடம் சொல்லி விளக்கவும் முடியவில்லை. எனக்கு நானே சொல்லி விளக்கிக்கொள்ளவும் முடியவில்லை. ஆனால் கைவசம் இல்லாத ஒரு மொழி வந்துசேர வேண்டும் என்ற ஏக்கம் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. என் இளமைக்காலத்தில் எனக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்தவர் கிருஷ்ணன் நம்பி. அவருக்கு ஆரம்பத்தில் என் மொழி மீது அதிருப்தி இருந்தது. 'ஒரு புளியமரத்தின் கதை 'யில் முதல் அத்தியாயத்தைப் படித்துவிட்டு மொழி திருப்தியாக இருக்கிறது என்று நம்பி என்னிடம் சொன்னார். அப்படி அவர் சொன்னபோதுதான் மொழி மீது முன்புவரை இருந்த ஒரு குறை தெரிந்தது. அதன்பின் அந்தக் குறை எனக்கு ஏற்படவேயில்லை.

ஏன் மனிதனால் சந்தோஷமாக இருக்க முடிவதில்லை ? இதைப் பற்றி நான் ஒருவனிடம் விசாரிக்கும்போது அவன் தன்னிடம் இல்லாதவற்றைப் பற்றிச் சொல்கிறான். உணவு இல்லை என்கிறான். உறைவிடம் இல்லை என்கிறான். பணி இல்லை, ஆரோக்கியம் இல்லை என்கிறான். இந்தக் குறைகள் எதுவும் இல்லாத ஒரு மனிதன் மற்றொரு விதத்தில் சந்தோஷம் இல்லாமல் இருக்கிறான். முதல் மனிதன் போல் இவனால் திட்டவட்டமான காரணங்களைச் சொல்ல முடிவதில்லை. எல்லாம் இருந்தும் தனக்கு ஏன் சந்தோஷம் இல்லை என்பது அவனுக்கே ஒரு கேள்வியாக இருக்கிறது.

மனிதனைச் சார்ந்த இந்த இரண்டு நிலைகளும் எனக்கு முக்கியமானவைதான். இந்த இரண்டு நிலைகளைப் பற்றியும் நான் மாறிமாறி எழுதியிருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். இல்லாமை காரணமாக உருவாகும் மனிதத் துக்கத்தைப் பற்றிச் சொன்னால் மட்டும்தான் முற்போக்கு என்று நான் நினைக்கவில்லை. மனிதத் துக்கத்தைச் சார்ந்த விசாரணை எல்லாமே முற்போக்கானது. மனிதத் துக்கத்தை விசாரிப்பவன், எந்த நிலையிலும் மனிதத் துக்கத்திற்கு ஒரு விடை காண வேண்டும் என்று தேடிச் செல்பவன் எப்போதும் ஒரு முற்போக்காளன்தான். சாதி சார்ந்தும் சாதி தாண்டியும், மதம் சார்ந்தும் மதம் தாண்டியும், வர்க்கம் சார்ந்தும் வர்க்கம் தாண்டியும், தேசம் சார்ந்தும் தேசம் தாண்டியும் மனிதனுக்குப் பிரச்சனைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள் எல்லாமே ஆராயப்பட வேண்டிய பிரச்சனைகள்தான்.

என் எழுத்துக்களை முழுமையாகப் படித்துப் பார்ப்பவர்களுக்கு என் படைப்புக் கருத்துக்கள் ஓரளவேனும் புரியும் என்றுதான் நினைக்கிறேன். இவையெல்லாம் படைப்பு விஷயம் சார்ந்த கருத்துக்கள். விஷயத்தை நேர்த்தியாக முன்வைத்தால்தான் படைப்பிற்குரிய ஆற்றலை அது பெறுகிறது.

இப்படிப் பார்க்கும்போது விஷயம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு மொழி முக்கியம். மொழி எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு வடிவம் முக்கியம். வடிவம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உத்தி முக்கியமானது. இவையெல்லாம் படைப்பில் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாதபடி முயங்கிக் கிடக்கின்றன. இவ்வாறு ஒன்றுபட்டு, ஒன்றில் மற்றொன்று முயங்கி, ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாதபடி ஒன்றாக வார்த்தெடுத்தது போல் காட்சி தரும் படைப்புக்களில் எளிதில் விவரிக்க முடியாத சக்தி உள்ளார்ந்து கிடக்கிறது. சூட்சுமமான மனங்கள், மென்மையான மனங்கள், மொழியின் தொனியிலிருந்து எண்ணற்ற விஷயங்களை கிரகித்துக்கொள்ளும் மனங்கள், படைப்பை வெறும் படைப்பாக மட்டும் கருதாமல் வாழ்க்கையின் கரைக்கு நம்மைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் தோணியாகப் பார்க்கின்றன. கரைசேர்ந்ததும் படைப்பெனும் தோணியிலிருந்து கீழே இறங்கி வாழ்க்கைக்குள் வெகு தூரம் போகின்றன.

படைப்புக்குப் படிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு வாழ்க்கை அனுபவங்களும் முக்கியம்தான். வாழ்க்கை அனுபவங்களை ஒரு இழை என்று சொன்னால் படிப்பை மற்றொரு இழை என்று சொல்லலாம். ஆனால் ஆதாரமான இழை அனுபவம் சார்ந்த இழைதான். அனுபவங்கள்தான் உங்கள் சூழல் சார்ந்து கேள்விகளை உருவாக்குகின்றன. புதிர்களை உருவாக்குகின்றன. விளக்க இயலாத துக்கத்தை வாழ்க்கை உருவாக்குகிறது. வியப்பை உருவாக்குகிறது. இதற்கான விடைகளைத் தேடும் மனம்தான் புத்தகங்களைத் தேடிக்கொண்டு போகிறது. உடனடியாகப் புத்தகங்களில் விடை கிடைத்துவிடுகிறது என்பதுமில்லை. நம் மனதில் ஒரு வினா எழும்போது தெரிந்தவர்களிடம் அதற்கு விடை தேடுகிறோம். அவர் ஒரு அபிப்ராயம் சொல்கிறார். அதில் நம்பிக்கை கொள்கிறோம். ஆறுதல் ஏற்படுகிறது. அதில் அவநம்பிக்கை கொள்கிறோம். கேள்வி தொடர்கிறது. அபிப்ராயங்களின் தொகுப்புக்கள்தான் புத்தகங்கள். இறுதி விடையாகக் கருதத்தக்கவை அதில் ஒன்றும் இல்லை. நாம் ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்ததும் அதன் ஆசிரியர் பேசத் தொடங்குகிறார். அவருடைய பேச்சுக்குச் செவிசாய்க்கிறோம். தோல்ஸ்தாய் அவருடைய நாவல் மூலம் மிக விரிவாகப் பேசுகிறார். அரைப் பக்கம் ஒரு பக்கம் என்று கவிதைகள் இருக்கின்றன. அவ்வளவு சிறிய வடிவங்களில் கவிஞர்கள் பேசுகிறார்கள். 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதன் பேசுவதை இன்று கேட்க முடிகிறது.

ஒரு படைப்பாளியாகச் செயல்பட வாழ்க்கை அனுபவங்களும் புத்தகப் படிப்பும் எனக்கு எந்த அளவுக்குத் துணை செய்திருக்கின்றனவோ அந்த அளவுக்கு ஊர் சுற்றும் பழக்கமும் துணை செய்திருக்கிறது. ஊர் சுற்றும் பழக்கத்திலிருந்து 'ஒரு புளியமரத்தின் கதை 'யைப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. என் ஊர் விரிந்து கிடக்கும் கோலம் எனக்கு ஒரு வியப்பைத் தந்துகொண்டிருக்கிறது. அதை வாரிச் சுருட்டிக் கட்டிக் கொள்ள ஊருக்குள் நான் ஒரு மையப்புள்ளியை உருவாக்கிக்கொண்டேன். அவ்வாறு ஒரு மையப் புள்ளியை உருவாக்கிக்கொண்டு ஊரின் பகுதிகளை அந்தப் புள்ளியுடன் சேர்த்து இணைத்துக்கொண்டேன். அந்தப் புள்ளிதான் புளியமரம். இடங்களுக்குச் சாட்சியாக உருவான அந்த மரம் காலத்திற்கும் சாட்சியாக விரிவு கொண்டது. படைப்பு தந்த புதிய பரிமாணம் இது. காலத்திற்கும் இடத்திற்குமான உறவைக் கூறுவது புளிய மரத்தின் கதை. காலத்திற்கும் கருத்திற்குமான உறவைக் கூறுவது 'ஜே.ஜே : சில குறிப்புகள். ' காலத்துக்கும் உறவு நிலைகளுக்குமான உறவைக் கூறுவது 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள் '. இவ்வாறு என் படைப்புகளை ஏகதேசமாக வகுத்துக் கொள்ளலாம்.

'ஜே.ஜே : சிலகுறிப்புக 'ளைப் பற்றிப் பல்வேறு பார்வைகளில் விமர்சனங்கள் வந்திருக்கின்றன. நவீனத்துவ நாவல், இருப்பியல் தத்துவத்தின் பாதிப்பைக் கொண்டது என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் வந்திருக்கின்றன. இது போன்ற விவரிப்புகளை ஏற்று நான் எந்த எதிர்வினைகளையும் தந்ததில்லை. ஆனால் திரும்பத் திரும்ப ஒரு கருத்தைச் சொல்லிக்கொண்டுவந்திருக்கிறேன். அது தமிழ்க் கலாச்சார வாழ்வின் மீது வைக்கப்பட்ட ஒரு விமர்சனம். உங்கள் குறைகளை உங்கள் முகத்துக்கு எதிரே சொன்னால் நீங்கள் சுருங்கிப்போவீர்கள். ஆனால் உங்கள் குறைகளை மற்றொருவருக்கு இருக்கும் குறைகளாக நான் பாவித்துச் சொன்னால் அவற்றைச் செவிமடுக்கவும் அதைப் பற்றிச் சிறிது சிந்திக்கவும் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கும் என்பதுதான் அதிலிருக்கும் உத்தி. இந்த நம்பிக்கை சார்ந்துதான் அந்த நாவலின் உத்தி உருவாகியிருக்கிறது.

சேலம் இலக்கிய வட்டம், 17.8.99

கலையும், படைப்பு மனமும் - சுந்தர ராமசாமி

நண்பர் கள்ளழகர் அவர்கள் ‘கலையும், படைப்பு மனமும்’ என்ற தலைப்பில் பேசும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். விரிந்த பரப்பைத் தலைப்பு கொண்டிருந்தால் பேச்சாளர் உல்லாசமாகத் துள்ளித் திரியலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். பலவற்றையும் உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்குத் தலைப்பு விசாலமானதாக இருந்தால் நெருக்கடி இல்லை என்றும் அவர் எண்ணியிருக்கலாம். தலைப்பு எதுவாக இருந்தாலும் சரி; நான்கு பேர் முன்னிலையில் பேசுவதே ஒரு நெருக்கடி சார்ந்த விஷயம்தான். தொழில்முறை பேச்சு பழக்கத்திற்கு வந்து மொழி எந்திரமயமாகி பேச்சாளனை அது ஒரு கருவியாக ஆக்கிக் கொண்டு நன்கு அறிந்த தண்டவாளத்தில் வழக்கமான கூச்சல்களை எழுப்பியவாறு ஓடத் தொடங்கும்போது பேச்சாளருக்கு நெருக்கடி என்பது இல்லை. மரபில் பதிவாகிவிட்ட கருத்துக்களை நினைவாற்றலின் வலுவில் தொகுத்து மேற்கோள் காட்டி வின்னியாசம் புரிகிற போதும் நெருக்கடி என்பதில்லை. ஆனால் பேசுகிறவன் தலைப்புடன் ஒரு தீவிரமான உறவை ஏற்படுத்திக் கொண்டு தலைப்புக்குத் தன் மனம் கற்பிக்கும் பொருள் என்ன என்று சிந்திக்கத் தொடங்கினால் - அது பரந்த பலவற்றையும் ஏற்றுக் கொள்கிற தலைப்பாக இருந்தாலும் கூட - நெருக்கடி தவிர்க்க முடியாததுதான்.

படைப்பாளியோ - பேச முற்படும்போது மட்டுமல்ல - எப்போதும் உள்ளூர நெருக்கடியுடன் இருக்கிறான் என்பது என் எண்ணம். காலம், பிரக்ஞை சார்ந்த நெருக்கடி இது. நான் மதிக்கும் படைப்பாளிகளுடன் நெருங்கிப் பழகிய நேரங்களில் அவர்களது நெருக்கடியை அநேக சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். அவர்கள் உல்லாசமாக இருப்பது போன்ற பாவனையைக் காட்டிக் கொண்டிருக்கும் போது கூட மனதின் அடி ஆழத்தில் நெருக்கடி அலை மோதிக் கொண்டிருக்கும். இந்த அவதானிப்பு உண்மை என்றால் படைப்பாளி ஏன் நிம்மதி இல்லாமல் இருக்கிறான் என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

இப்போது கலை என்றால் என்ன ? படைப்பு மனம் என்றால் என்ன ? இவை பற்றி என் மனதிலிருக்கும் பிம்பங்களை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இங்கு நான் பயன்படுத்தும் ‘பிம்பங்கள்’ என்ற சொல் முக்கியமானது. நான் பயன்படுத்தியிருக்க வேண்டிய சொல் ‘சிந்தனைகள்’ என்பது. இந்த இரண்டு சொற்களுக்கான வேற்றுமையைப் பற்றி நாம் யோசிக்கலாம்.

சிந்தனையின் தளத்துக்குள் நுழைய முடியாமல் தொடர்ந்து நாம் வெளியே வழுக்கி விழுந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். கலை என்றால் என்ன என்ற கேள்வி எழுந்ததும் ஆங்கில மொழி மூலமாகத்தான் அதற்கு விடை கிடைக்கும் என்றே தொடர்ந்து நம்பி வந்திருக்கிறோம். படைப்பு மனம் என்றால் என்ன என்ற கேள்வி சார்ந்தும் இதே நம்பிக்கைதான் வெளிப்பட்டிருக்கிறது. நம் உப்பு, புளி பிரச்சனைகளைப் பற்றி நாமே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். வாழ்க்கை சார்ந்த அடிப்படை பிரச்சினைகளைப் பற்றி நமக்காகவும் மேற்கத்திய உலகம் சிந்தித்து வருகிறது என்று நம்ப ஆசைப்படுகிறோம்.

இருபதாம் நூற்றாண்டுக்குரிய சிந்தனைத் தளம் பற்றிய கற்பனை ஒன்று நம் மனத்தில் இருக்கிறது. இந்தக் கற்பனை, வாசிப்பு சார்ந்த பிம்பங்களால் உருவாக்கப்பட்டது. ஆங்கில வாசிப்பின் மூலம் தெளிவின்றியும் இடறி விழுந்தும் திரட்டிக் கொண்ட சிந்தனைகள் பலவும் இந்த வாசிப்பு சார்ந்த வெளிப்பாடுகள் - பேச்சு அல்லது எழுத்து இரண்டுமே - ஆங்கில மொழி அறியாதவர்களுக்கும் சிந்தனை சார்ந்த கற்பனைத் தளத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. நம் வாழ்வு சார்ந்தும் நம் இலக்கிய மரபு சார்ந்தும் ஒரு சிந்தனைத் தளத்தை உருவாக்க நம்மால் இன்று வரையிலும் முடிந்ததில்லை. இன்றைய நம் வாழ்க்கையை மேற்கத்திய சிந்தனை சதா கசக்கிக் கொண்டிருக்கிறது. இதை ஒரு அவஸ்தை என்று சொல்லலாம். சிந்தனைத் தளத்திற்குள் நுழைய முடியாமல் நாம் சறுக்கி விழுந்து கொண்டிருப்பதால் நம் மனங்களில் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தத்துவங்களைச் சார்ந்த தெறிப்புக்களைப் பிம்பங்கள் என்றுதான் சொல்ல முடியும். கலை பற்றியும் படைப்பு மனம் பற்றியும் நம் மனங்களில் இருக்கக்கூடிய பிம்பங்களை நாம் ஒருவருக்கொருவர் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். அல்லது இரவல் சிந்தனைக்குள் போய் இரவல் சிந்தனைதான் என்பதைக் காட்டிக் கொள்ளும் வகையிலோ அல்லது காட்டிக் கொள்ளாத வகையிலோ சில வித்தைகள் செய்து காட்ட முடியும். வெட்கப்பட வேண்டிய இந்த வித்தைகளை வெட்கப்படாமல் பலரும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நம் வாழ்க்கை சார்ந்து சிந்திக்க முடியாமல் போன வெட்கம் நம்மீது கவியாமல்போனது, நாம் வாழ்க்கை சார்ந்து சிந்திக்க முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம்.

கலை ஒரு வலுவான பொருள் என்பது ஒரு பிம்பம். ஒரு பொருள் அதன் உள்ளார்ந்த சக்தியின் எழுச்சியில் சுவாசிக்கத் தொடங்கிவிடுகிறது. ‘கல்லும் பிராணன் எடுத்து மேலெழுந்து பறந்தது’ என்று தொடங்குகிறது என் கவிதை ஒன்று. கல் பறவையாக மாறும் கதைதான் கலையின் கதை. இது மிக விந்தையானது. ஆனால் இந்த விந்தைதான் பரிணாமத்தில் நிகழ்ந்தது. ஜடத்திலிருந்து மனிதன் தோன்றியது போல் ஜடப்பொருளுக்கு உயிர் தருகிறான் மனிதன். கலையில் ஒளுரும் இந்த உயிரம்சம்தான் முக்கியம். அந்த அம்சம்தான் மனத்தைத் தொடுகிறது. தொடர்ந்து மனித மனங்களை ஸ்பரிசித்துக் கொண்டேபோகிறது. இந்த ஸ்பரிசம் காலத்தின் மீதான ஒரு பயணத்தைக் கலைக்கு சாத்தியப்படுத்துகிறது. மனித உறவு நிகழவில்லையென்றால் கலை ஜடமாகிவிடும். மனித உறவு நிகழும் போது கலை உயிர்ப்புக் கொள்ளும். நான் கண்ட கனவு ஒன்றில் குழம்பி மறிந்த ஒரு காட்சியைத் தெளிவுபடுத்திச் சொல்வது என்றால் உறங்கிக் கொண்டேயிருக்கும் ஒருவனின் கட்டிலருகே மற்றொருவன் வந்து கூர்ந்து பார்க்கும் போது அவன் விழித்துக் கொள்கிறான். பார்ப்பவன் விலகி மறைந்ததும் மீண்டும் தூக்கத்தில் அவன் ஆழ்ந்துவிடுகிறான். இது விட்டுவிட்டு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஓவியத்தை ஒருவன் பார்க்கும் போது அது உயிர் பெறுகிறது. நாவலை ஒருவன் படிக்கும் போது அது உயிர்ப்புக் கொள்கிறது. மனித உறவை நம்பித்தான் கலைகள் உயிர்வாழ முடிகிறது.

இப்போது கலை என்ற சொல்லை விட்டுவிட்டு படைப்பு என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம். அதாவது இலக்கியப் படைப்பை. நமக்குள் பொதுவாக நிற்பது அது. படைப்பில் மனித உறவை சாத்தியப்படுத்தும் கூறு எப்படிக் கூடுகிறது ? நான் போற்றும் படைப்புக்கு என் மனம் தரும் பொருள் என்ன ? ஒரு உதாரணத்தை முன்வைத்துப் பார்க்கலாம். நான் என் 25 வயதிற்கு மேல் 30 வயதிற்குள்ளான ஐந்தாண்டு காலத்தில் லேவ் தல்ஸ்தோயின் ‘போரும் வாழ்வும்’ நாவலை இருமுறை படித்தேன். இப்போது அந்த நாவலைப் பற்றிய என் அனுபவத்தை என் மனத்தில் மறு உருவாக்கம் செய்வது, அந்த ஐந்தாண்டுகாலத்தில் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மறு உருவாக்கம் செய்வதைவிடச் சுலபமாகப்படுகிறது. அப்படியென்றால் எது ஆழமான பாதிப்பை நிகழ்த்தியிருக்கிறது. வாழக்கையா ? படைப்பா ? ஏறத்தாழ கடந்த நாற்பது வருடங்களில் ‘போரும் வாழ்வும்’ தந்த அனுபவம் பெரிய அளவுக்குப் பின்னகர்ந்துவிடவில்லை என்பதும் தெரிகிறது. அன்று உருவான காட்சிகள் இன்றும் தெளிவாகவே இருக்கின்றன. பல குதிரைகளின் முகங்கள் நினைவில் இருக்கின்றன. அவற்றின் உடல்களின் பல்வேறு இடங்களை அவை சிலிர்த்துக் கொள்கின்றன. ஆனால் ஒவ்வொரு குதிரையும் தன் உடம்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டுமே சிலிர்த்துக் கொள்ளும் காட்சி வடிவம் காலத்தின் போக்கில் எந்தவிதமான மாற்றமும் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. துணை கதாபாத்திரங்களின் பெயர்கள் மங்கிப் போன ஒன்றுதான் காலம் அனுபவத்தின் மீது சரிந்ததற்கு ஒரே அடையாளமாக மிஞ்சியிருக்கிறது. அப்படியென்றால் வாழ்க்கையின் சாராம்சம் மனதில் பதிவது போல் வாழ்க்கை பதியவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.

படைப்பு எந்த அளவுக்கு வாழ்க்கையின் சாராம்சத்தைத் தேக்குகிறதோ அந்த அளவுக்கு அது உயிர்ப்புப் பெறுகிறது என்று சொல்லலாமா ? படைப்புக் கொள்ளும் உயிரின் இழைகளைப் பிரித்துக் கொண்டே போனால் அதனுள் மொழிக்கும் படைப்பாளிக்குமான ஒரு பிரத்யேகமான உறவு, மனித ஜீவன்கள் - அவர்கள் எப்படியிருப்பினும் சரி - அவர்கள் மனித ஜீவன்கள் என்பதாலேயே அவர்கள் மீது படைப்பாளி கொள்ளும் ஒரு பிரத்யேக நேசம், வாழ்க்கை தரும் தத்தளிப்பைப் பற்றிய ஊடுருவல்கள், பிரபஞ்ச நாடகத்தின் பிரம்மாண்டம், மனித மனங்களின் அடியாழங்களில் சதா கசிந்து கொண்டிருக்கும் நெகிழ்ச்சி என்று பல ஆற்றல்களின் கூடி முயங்கிய சங்கமம் நம் நினைவிற்கு வருகிறது. படைப்பு என்பதை நாம் ஈரம் என்று சொல்லத் தோன்றுகிறது. சிறு கசிவாகவோ அல்லது பெரிய கடலாகவோ. எப்படியும் ஈரம். மனித வாழ்க்கைக்கு ஆதாரமாக இன்றுவரையிலும் இருப்பதும் இதுவாகவே இருக்கலாம்.

படைப்பு மனத்தின் கூறுகளைப் பற்றிப் பார்க்கலாம். படைப்பு மனத்தைத் தமிழ் மனம் என்றோ இந்திய மனம் என்றோ பிரிக்காமல் உலகப் படைப்புக்கள் அனைத்தையும் உருவாக்கிய ஒரே மனம் என்ற கற்பனையில் பார்க்கலாம். அப்படிப் பார்க்கும் அளவுக்குப் பல கூறுகள் எல்லா படைப்பாளிகளுக்கும் பொதுவாக இருக்கின்றன.

சமூக இயக்கத்திற்கு அவசியமான நெறிகளையும் சமயம் போற்றும் நெறிகளையும் - இவை ஒன்றோடொன்று கலந்து கிடக்கின்றன என்று நினைக்கிறேன் - வாழ்க்கையின் ஆரோக்கியம் சார்ந்த கூறுகளாக நாம் எடுத்துக் கொள்வோம் என்றால் படைப்பாளியை ஒரு ‘நோயாளி’ என்றுதான் நாம் வரையறை செய்ய நேரும். சமூக இயக்கங்களும் சமய இயக்கங்களும் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு நன்னெறிப்பாதையில் படைப்பாளி விலக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட ஒரு ஜீவனாகவே இருந்து வந்திருக்கிறான். ஏன் படைப்பாளியை சமூகம் உள்ளூர ஒதுக்க வேண்டும் ? அவ்வாறு தன்னை ஒதுக்கும் சமூகத்தைப் படைப்பாளி வென்றெடுத்த வரலாறைப் பின்னகர்த்தி வைத்து நாம் இப்போது சிந்திக்க வேண்டும். வென்றெடுத்த பின்பும் புறக்கணிப்பின் எச்சங்கள் இன்றும் பாக்கி இருக்கின்றன. பின்னகர்ந்து கிடக்கும் சமூகங்களின் முக்கியமான குணங்களில் ஒன்று படைப்பாளிகளை அசட்டை செய்வது.

தமிழ்ச் சமூகத்தின் ஆசிரியர் வர்க்கம் படைப்பாளிகளை மதிக்கிறதா ? அரசியல்வாதிகளும், வணிகர்களும், சமயத் தலைவர்களும், சக மனிதனைக் கவிழ்ப்பதற்குத் திரைப்படம் எனும் அறிவியல் ஆயுதத்தைப் பயன்படுத்துகிறவர்களும் படைப்பாளிகளை நேசிக்கிறார்களா ? இந்தக் கேள்விக்கான பதிலைக் காண நீங்கள் ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினால், ‘படைப்பாளிகளை நாங்கள் நேசிக்கத்தானே செய்கிறோம்’ என்ற கெட்டிக்காரத்தனமான பதிலில் படைப்பாளிகளின் ஜடங்களைத்தான் அவர்கள் நேசிக்கிறார்கள் என்ற நடைமுறைவாதம் இருப்பதை நாம் பார்க்க முடியும்.

புதுமைப்பித்தனை நேசிக்கச் செய்ய நாம் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. புதுமைப்பித்தனிடம் உயிர்ப்பு இருக்கிறதென்றால் அவரிடம் சாராம்சம் இருக்கிறது என்று பொருள். அந்தச் சாராம்சம் தமிழ் வாழ்வின் சரிவை அனுபவப்படுத்துகிறது. சரிவை உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் சரிவின் மீது கவனத்தைத் திருப்புபவர்களை நேசிப்பார்களா ? சாராம்சம் சார்ந்த பார்வை வலுப்படும்போது சமூக விமர்சனம் கூர்மை கொள்கிறது. உயிரியக்கத்திற்கும் உறக்கத்திற்குமான வேற்றுமையும் உறக்கத்திற்கும் ஜடத்தன்மைக்குமான வேற்றுமையும் புலப்படத் தொடங்குகின்றன. அதிகாரத்தின் சகல பீடங்களிலும் வெவ்வேறு முகங்களுடன் உட்கார்ந்து கொண்டிருக்கும் எல்லோருமே உயிரற்ற, சதையற்ற, வனப்பிற்குரிய கோலங்களுமற்ற எலும்புக்கூடுகளாகவே இருப்பதை உணர முடிகிறது. ஆற்றல் வேறு, ஆற்றல் சார்ந்த பாவனைகள் வேறு. இதை நாம் பிரித்தறியும் போது பாவனைகள் கலகலக்கத் தொடங்குகின்றன. பாவனைகளைக் கண்டுகொள்ளவும் ஆற்றலின்மையை உணரவும் அவசியமான கூர்மையைப் படைப்பு உருவாக்க முயல்கிறது. மொத்த படைப்புக்களிலிருந்து பெற்ற அனுபவங்களை இப்படித்தான் சுருக்கிச் சொல்ல முடிகிறது.

படைப்பாளி ஒரு பாதுகாப்பற்றச் சூழலில்தான் இயங்க வேண்டியிருக்கிறது. சமூகம் ஏற்பது - சமூகம் மறுப்பது. இந்தப் பிரிவினையின் அடிப்படையில் படைப்பாளி சிந்திப்பதில்லை. இது தன் இருப்பைப் படைப்பாளி கணக்கிலெடுத்துக் கொள்ளும் சிந்தனை. படைப்பாளியின் சிந்தனை ஒரு விசேஷ அர்த்தத்தில் கனவு சார்ந்த சிந்தனை. அதை புரட்சிகரமான கனவு என்று நாம் சொல்லலாம். அது எப்போதும் நிதர்சனம் சார்ந்த, நடைமுறைவாதம் சார்ந்த புரட்சிகரத்தைவிடப் புரட்சிகரமானது. வரலாறு படைப்பாளியின் புரட்சியை பலமுறை ஆமோதித்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் புரட்சிகரமான சமுதாயத்தை உருவாக்க முயன்ற புரட்சிவாதிகளின் கைகளில் படைப்பாளிகள் மிக மோசமான கொடுமைகளுக்கு ஆளானார்கள். இந்தக் கொடுமை முற்பட்ட நூற்றாண்டுகளிலும் நிகழ்ந்திருக்கிறது. இது நிதர்சனம் சார்ந்த புரட்சிகரத்தைவிடப் படைப்பாளியின் கனவு சார்ந்த புரட்சி, புரட்சிகரமானது என்பதைத்தான் காட்டுகிறது. இக்கருத்தை நாம் இங்கு விவாதிக்க முற்பட்டால் தமிழ் வாழ்க்கை சார்ந்த உதாரணங்களை நான் உங்களுக்குத் தர முடியும்.

படைப்பாளி சார்ந்த உணர்வுகளை நாம் தொகுக்கும்போது நாம் விரும்பியோ விரும்பாமலோ அதன் மீது ஒரு புனிதம் ஏறிவிடுகிறது. படைப்பாளிகளில் ஒரு பகுதியினரேனும் அந்தப் புனிதத்தைத் தொடர்ந்து உடைத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். சமூகப் பார்வையில் படைப்பாளி ஆற்றல் மிகுந்தவனாகவும் பலவீனம் மிகுந்தவனாகவும் இருக்கிறான். படைப்பாளிகள் லெளகீகம் சார்ந்த தன் கையாலாகாத்தனத்தைச் சுய மதிப்பீட்டில் உணர்ந்து வந்திருக்கிறார்கள். எந்த இடத்திலும் பொருந்தாமல் போய்விடும் அவலம் அவர்களை ஆட்கொள்கிறது. மொழியை எந்தக் காரியத்திற்காகத் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் பயன்படுத்துகிறார்களோ அந்தக் காரியத்திற்காக அதைப் பயன்படுத்தக் கூடாது என்ற பிடிவாதம் படைப்பாளிக்கு இருக்கிறது. இவ்வாறு லெளகீகத் தளத்திலும் மேல்நிலைப் பயணம் என்ற ஆன்மீகத் தளத்திலும் மொழி பொருந்தாமல் இருக்கும் அவலம் படைப்பாளியின் மீது கவிகிறது. தன் படைப்புடன் தொடர்பு கொண்டு நிற்கும் போதோ அல்லது மற்றொரு படைப்பில் தன்னை இழக்கும் போதோதான் படைப்பாளிக்கு தன் இருப்பு நிறைவாக இருக்கிறது. பிற நேரங்களில் படைப்பாளி தன் இருப்பு சார்ந்த அடையாளத்தை உணரமுடியாமல் தவிக்கிறான்.

படைப்பு நீங்கலான பிற லெளகீகப் பணிகளை ஏற்பதில் படைப்பாளி கொள்ளும் தயக்கம் பிறருடைய பார்வையில் அவனைச் சோம்பேறி ஆக்குகிறது. லெளகீகத்தை முற்றாகத் தவிர்க்க முடியாத படைப்பாளி தன் சோம்பேறித்தனத்தை நினைத்து வருந்துகிறான். அவன் மிகப்பெரிய உழைப்பாளியுங்கூட. ‘உழைப்பாளியாகிய நான் எப்படி சோம்பேறியாக இருக்கிறேன் ?’ என்பது அவனுக்கு விளங்காமல் இருக்கிறது. மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவன் போல் தங்களைக் காட்டிக் கொள்ளும் படைப்பாளிகளில் பலரும் மிகுந்த தாழ்வு மனப்பான்மைக்கு ஆளானவர்கள். இளமையில் கவ்விய தாழ்வு மனப்பான்மை, புற்று நோய் உடலைப் பாதிப்பது போல் அவர்கள் மனங்களைச் செல்லரித்திருக்கிறது. வாளின்றிக் கேடயம் மட்டுமே கொண்ட ஒரு வீரன் எதிராளியின் வாள் வீச்சு தன் மீது பாயாமல் தடுத்துக் கொள்வது போல் படைப்பை முன்வைத்துத்தான் படைப்பாளி வாழ்க்கையின் வாள் வீச்சைத் தடுத்துக் கொள்கிறான்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிக மோசமான அவமானத்திற்கோ அல்லது புறக்கணிப்பிற்கோ அல்லது ஈவிரக்கமற்ற மிதிபடலுக்கோ ஆளாகும் போது படைப்பாளி, ‘நான் மிகச் சிறந்த படைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்’ என்று தனக்குத்தானே அரற்றிக் கொள்கிறான். தன்னைப் புறக்கணிக்கும் சமூகத்திற்கு மிகப்பெரிய படைப்புக்களை அளித்து அதை அவமானத்திற்கு ஆட்படுத்திவிட முடியும் என்று அவன் கற்பனை செய்து கொள்கிறான். அவனுடைய பழிவாங்கல் முறை இது. சமூகத்தின் தடித்தனம் அவன் அறியாதது அல்ல. திரைகளை அகற்றி யதார்த்தத்தின் நிஜ முகங்களை நிரூபிக்கவும் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கற்பனை படைப்பாளிக்குத் தேவையாக இருக்கிறது. இப்படிப் பார்க்கும் போது படைப்பாளி புனிதங்கள் எதுவுமற்று துன்பியல் நாடகத்தின் கதாநாயகன் போல் காட்சி தருகிறான்.

திருநெல்வேலி ஹோட்டல் ஆரியாஸில், உரைகல் (இலக்கிய வட்டம்) கூட்டத்தில் வாசித்த கட்டுரை. 12.12.1998. (சொல்புதிது, ஜூலை-செப். 1999)

தமிழ்ப் படைப்புலகம் - சுந்தர ராமசாமி

இக்கூட்டத்தின் தலைவரும் என் நண்பருமான பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய திருமதி ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களுக்கும், பிற நண்பர்களுக்கும் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கருத்தரங்கை உருவாக்கிய நண்பர் பச்சைமால் அவர்களுக்கும் அவருடன் உடனின்று செயல்பட்ட நண்பர்களுக்கும் என் படைப்புலகத்தைத் தங்கள் மதிப்பீடுகள் மூலம் வாசகர்கள் முன் வைத்த எழுத்தாளர் நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்ப் படைப்புலகம் பற்றி ஒருசில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். முற்றாகவோ முடிவாகவோ சொல்ல எனக்கு அதிகம் இல்லை. நான் இக்கருத்துக்களை முன் வைப்பதனாலேயே நீங்கள் அவற்றை ஏற்றுக் கொண்டுவிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. என் கருத்துக்களை நீங்கள் பரிசீலனை செய்து பார்க்க வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே கொண்டிருக்கிறேன். ஏற்கும் கருத்துக்களை ஏற்று, மறுக்கும் கருத்துக்களை நீங்கள் மறந்துவிடலாம். ஏற்கும் கருத்துக்களைப் பற்றி நீங்கள் தொடர்ந்து சிந்தித்து அவற்றையேனும் உங்களால் இயன்ற அளவு தமிழ்ச் சமூகத்தில் பரப்பலாம்.

இலக்கியம், கலைகள், திரைப்படம், தொலைக்காட்சி, கல்வித்துறை இவை சார்ந்து நாம் வெகுவாகப் பின்தங்கி நிற்கிறோம் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. இந்தப் பின்தங்கலுக்கான காரணங்கள் பற்றி யோசித்து வருகிறேன். சில காரணங்கள் தட்டுப்படுகின்றன. ஒவ்வொரு துறை சார்ந்தும் நாம் பெற்றிருக்கும் அறிவு குறைவு. இத் துறைகள் பற்றி என்னைவிடவும் அதிகம் அறிந்தவர்கள் தமிழ்நாட்டில் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் துறை சார்ந்த சீரழிவுகளை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள். அவ்வாறு பகிரங்கப்படுத்துவது பணிகள் சார்ந்து அவர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் தத்தம் துறைகளில் உள்ள பிரச்சனைகளைச் சொல்லலாமே என்று தோன்றுகிறது. சொல்லலாம். ஆனால் சொல்வதில்லை என்பது நமக்குத் தெரியும். விமர்சனம் என்பது வம்பு என்றும், தமிழ் ஜென்டில்மேன் விமர்சனத்தை முன் வைக்காதவன் என்றும் நமக்குள் ஒரு எண்ணம் இருக்கிறது. ஜென்டில்மேன்கள் அழித்த கலாச்சாரத்தைத்தான் இப்போது நாம் எதிர்கொண்டு வருகிறோம்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். நாகர்கோவிலை அடுத்திருக்கும் பாம்பன்விளை என்ற இடத்தில் எழுத்தாள நண்பர்கள் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை கூடிப் பேசுகிறோம். மிக சமீபத்தில் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். நிகழ்ச்சி நிரல் என்று திட்டவட்டமாக எதுவுமில்லை. கல்வித்துறையைப் பற்றிய விவாதம் இயற்கையாக வந்தது. கல்வித்துறைப் பற்றி எனக்கு உயர்வான எண்ணம் ஒன்றுமில்லை. வளர்ந்த சமூகங்களில் கல்வித் துறைகள் எவ்வாறு இயங்கி வருகின்றனவோ அந்த அளவுக்கு நம்மால் இயங்க முடியாவிட்டாலும் அவர்கள் நிறுவியிருக்கும் தரத்தின் முக்கால் பங்கை அல்லது அரைப்பங்கை நாம் எட்டிவிட்டாலே நம் சமூகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழும். பாம்பன்விளையில் கல்வியின் சீரழிவைப் பற்றிப் பேசியவர்கள் ஆசிரியர்கள். மேல்நிலைப் படிப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் முன்வைக்கும் செய்திகள் ஒவ்வொன்றுமே மிகப் பெரிய அதிர்ச்சியை எனக்கு அளித்தன. அதாவது கல்வித்துறை பணிகள் செம்மையாக நடைபெறவில்லை என்ற எண்ணத்தில் இருந்து கொண்டிருக்கும் எனக்கே அவை அதிர்ச்சியாக இருந்தன. பேராசிரியர் ஜேசுதாசன் அவர்கள், மதிப்பிற்குரிய ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்கள் போன்ற நேற்றைய லட்சியவாதிகளான ஆசிரியர்கள் பாம்பன்விளையில் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் முன்வைத்த விமர்சனங்களைக் கேட்டிருந்தால் தாங்கிக் கொள்ள இயலாத வேதனையை அடைந்திருப்பார்கள். அந்த ஆசிரியர்கள் முன் வைத்த செய்திகளை நான் இங்கு சொல்லவில்லை. அவை என் பேச்சின் மையம் அல்ல. தமிழ் சமூகத்தை முன்னின்று வளர்க்க வேண்டிய துறை வெகுவாகப் பின்தங்கிச் சிறுமைக்கும் சீரழிவுக்கும் ஆளாகிவிட்டது என்பதை மட்டுமே நினைவுபடுத்துகிறேன்.

தமிழில் எண்ணற்ற இதழ்கள் வெளிவருகின்றன. ஒரு லட்சம், இரண்டு லட்சம், மூன்று லட்சம், நான்கு லட்சம் என்று அவை விற்பனையாகின்றன. எல்லா இதழ்களின் மொத்த விற்பனையையும் கூட்டிப் பார்த்தால் மாதம் ஒன்றுக்கு விற்பனையாகிற இதழ்கள் ஒரு கோடிக்கு மேலேயே இருக்கும். மாதம் ஒன்றுக்குத் தமிழர்கள் இந்தச் சஞ்சிகைகளை வாங்குவதற்காகச் செலவிடும் தொகை ஒரு சில கோடிகள் இருக்கும். அத்தனை இதழ்களின் பக்கங்களும் சீரான புத்தகங்களாக மறு அச்சாக்கம் பெற்றால் ஆயிரம் பக்கங்கள் கொண்ட எத்தனை தொகுதிகள் வரும் என்பதை எனக்குக் கணக்கிட்டுச் சொல்லத் தெரியவில்லை. இதற்குப் பயன்பட்ட காகிதங்களுக்காக எத்தனை மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் என்பதையும் எனக்குக் கணக்கிட்டுச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஒன்று எனக்குத் தெரியும். இத்தனை பக்கங்களில் தமிழ் வாழ்வைப் பற்றித் தமிழனைச் சிந்திக்க வைக்கிற அல்லது மிக முக்கியமான அனுபவத்துக்கு அவனை ஆளாக்குகிற அல்லது கூரான புதிய மொழியுடன் அவனை இணைக்கின்ற ஒரு பக்கம் கூட கிடையாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

லாபத்திற்காகக் கலாச்சாரத்தைச் சீரழிப்பவர்கள் இவர்கள். லாபத்திற்காக மதிப்பீடுகளை அழிப்பவர்கள். பாலியல் வக்கிரங்களைத் தூண்டிக் கொண்டிருப்பவர்கள். பெண்மையை இழிவுபடுத்திக் கொண்டிருப்பவர்கள். சமூகத்திலுள்ள பெரிய மனிதர்களுக்கு எதிராகவோ அல்லது அரசியல்வாதிகளுக்கு எதிராகவோ இவர்களில் சிலர் முன் வைக்கும் செய்திகள் உங்கள் நினைவுக்கு வரலாம். பரபரப்பான செய்திகள் இதழின் விற்பனையைக் கூட்டும் என்ற நியதியில் நம்பிக்கை வைத்துச் செய்யப்படும் காரியங்கள் இவை. அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. இச்செய்திகளை வெளியிட அவர்கள் பயன்படுத்தும் மொழி உண்மையைத் தொடுவதற்கே வலுவற்றது.

தமிழில் நல்ல சிறுகதைகள் எழுத இன்றும் சிலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். சிலர் நல்ல நாவல்கள் எழுத முயன்று கொண்டிருக்கிறார்கள். அறிவியல், வரலாறு, இலக்கியம் சார்ந்து தரமான கட்டுரைகளை எழுத முயன்று கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய எழுத்தை எந்தப் பிரபல பத்திரிகையும் வெளியிடாது. பல மொழிகளிலும் பிரபல பத்திரிகைகள் நடுத்தரமான எழுத்துக்களுக்கு ஒருசில பக்கங்களையும் தீவிரமான எழுத்துக்களுக்கு ஒருசில பக்கங்களையும் ஒதுக்கி வருகின்றன. தமிழ் இதழ்களிலோ தீவிர எழுத்துக்கோ நடுத்தர எழுத்துக்கோ இடமில்லை. கேளிக்கை எழுத்துக்களுக்கு மட்டுமே இடம் தரப்படுகிறது. மிகச் சிறந்த நூல் ஒன்று தமிழில் வெளிவந்திருக்கும் தகவலைக் கூட பிரபலமான பத்திரிகைகள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியாது. தமிழில் பொருட்படுத்தத் தகுந்த எழுத்துக்கள் எல்லாம் பெரும்பாலும் சிற்றிதழ்களில்தான் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் அதிகபட்சம் ஐயாயிரம் வாசகர்களைச் சென்றடையும் வாய்ப்பையே தீவிர எழுத்தாளர்கள் பெறும் நிலை உள்ளது. பிரபல கேளிக்கை எழுத்தாளர்கள் வளைத்துப் போட்டிருக்கும் வாசகர்களின் எண்ணிக்கை பத்து லட்சமாகக் கூட இருக்கலாம். இவ்வளவு மோசமான ஒடுக்குமுறையிலும் தமிழ் இலக்கியம் உயிரை தன் குரல் வளையில் தக்க வைத்துக் கொண்டிருப்பது உலக அதிசயங்களில் ஒன்று.

தமிழில் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கவிதைகள் எல்லாமே பொதுவாக இன்று பலவீனமாகத்தான் இருக்கின்றன. உண்மையான படைப்பாளிகளை ஒரு சமூகம் அங்கீகரிக்க மறுத்து ஒதுக்கித் தள்ளும்போது இவ்வாறு நிகழ்ந்துவிடுவது இயற்கையான காரியம்தான். சிறுகதைகளைவிடவும், நாவல்களை விடவும், கவிதைகள் பலவீனமாக இருக்கின்றன. கடந்த நாலைந்து வருடங்களில் சற்றே வலுப்பெற்றிருப்பது கட்டுரை இலக்கியம் மட்டுமே. கட்டுரை இலக்கியம் இந்த அளவுக்கு இதற்கு முன் எப்போதும் வலுப்பெற்றிருந்ததில்லை என்று கூடச் சொல்லலாம். இவ்வாறு நான் சொல்வதில் சற்று மிகை உண்டு. ஒரு உண்மையை அழுத்த அந்த மிகை தேவையாக இருக்கிறது.

இந்தக் கட்டுரைகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். சுயசிந்தனை சார்ந்த கட்டுரைகள் என்றும் தகவல்களைத் தொகுத்துத் தரும் கட்டுரைகள் என்றும் பிரிக்கலாம். நாம் அறிந்திராத சிந்தனை ஒன்றை அறிந்து அது நம் வாழ்வுக்கு ஊட்டம் தரும் என்று நம்பி அதனைத் தன்னளவில் செரித்துக் கொண்டு அச் சிந்தனைகளைத் தமிழ் வாழ்வோடு இணைக்கும் விவேகத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகளையே சுய சிந்தனை சார்ந்த கட்டுரைகள் என்று கூறுகிறேன். இங்கு கட்டுரையாளரின் குறிக்கோள் தமிழ் வாழ்வின் மேன்மை. மற்றொரு வகை நாம் அறிந்திராத சிந்தனைகளை, அந்த சிந்தனைகளின் புதுமைக்காகவே திரட்டித் தருவது. இங்கு குறிக்கோள், எழுத்தாளர் தன்னை அறிவாளி என்று காட்டிக் கொள்வது. ஆக, ஒட்டு மொத்தமாகப் பார்க்கிறபோது கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை ஆகிய இலக்கிய வடிவங்களில் சுய சிந்தனைகள் சார்ந்த கடடுரைகள் மட்டுமே ஆறுதல் தரும் அளவில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இன்றையப் படைப்புக்களில் சற்று வலுவானவற்றை ஒருவர் சுட்டிக்காட்டி என் வாதத்தை மறுக்க முன்வரலாம். அதுபோன்ற மறுப்பு தோன்றுவதை நான் வரவேற்கிறேன். ஏனெனில் அப்போது இன்றைய இலக்கியப் படைப்புக்களை ஏன் பலவீனமானவையாகக் கருதுகிறேன் என்பதை விளக்க எனக்குக் கூடுதல் சந்தர்ப்பம் கிடைக்கும். மேலும் எந்த இலக்கிய உருவங்கள் சார்ந்தும் வெளிப்படும் விதிவிலக்குகளை வைத்து இலக்கியத்தின் பொதுக் குணத்தையோ வலுவையோ நிர்ணயிக்க முடியாது. நல்ல படைப்புக்கள் விதிவிலக்காக இருப்பதே படைப்புக்கள் பலவீனமானதாக இருக்கின்றன என்பதைத்தான் காட்டுகிறது.

மேலும் சாதனைகளை அளக்கத் துல்லியமான அளவுகோல்கள் இல்லை. நடுத்தரமான படைப்புக்களை மீண்டும் மீண்டும் படித்து ஒருவன் அனுபவம் பெறும்போது நடுத்தரமான எழுத்தே அவனது அதிகபட்ச எல்லையாகிவிடும். கேளிக்கை எழுத்தில் ஒருவன் முங்கி முங்கி எழுந்து கொண்டிருந்தால் அவனிடம் ஒரு சிறந்த படைப்பைத் தரும்போது அப்படைப்பில் கேளிக்கை இல்லையென்று சொல்லி அவன் அதை உதறிவிடுவான். தமிழன் அவனுடைய நடுத்தரமான படைப்புக்களுக்கு ஏற்ப அவனுடைய பார்வையைச் சுருக்கிக் கொண்டு வருகிறான். நடுத்தரமான படைப்புக்களை மேலான படைப்புக்கள் என்று சாதிக்க தங்கள் பார்வைகளை எந்த அளவுக்குச் சுருக்கிக் கொள்ள வேண்டுமோ அந்த அளவிற்குப் படைப்பாளிகள் சுருக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படைப்பாளிகளை ஊக்குவித்து உரம்போட இலக்கிய விமர்சனத்தின் ஆனா ஆவன்னா கூடத் தெரியாத விமர்சகப் பெருந்தகைகளும் இருக்கிறார்கள். மேலான படைப்புக்கள் வரும்போது அவை தங்கள் நடுத்தரமான படைப்புக்களைப் பின்னகர்த்திவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். இவர்களைத் தூக்கிப்பிடிக்கும் விமர்சகர்களுக்கும் இவ்வகையான படைப்பாளிக்கும் தனியான வாழ்வு இல்லாததால் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு தங்களுக்கு ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்ள அலைகிறார்கள்.

ஒரு படைப்பாளிக்கு நேற்றையத் தமிழ் சார்ந்த சவால் மனதில் இல்லாவிட்டால் அவனைப் படைப்பாளி என்றே சொல்ல முடியாது. தொல்காப்பியன் வரையறுத்த மொழி இது. நுட்பமான கருத்துக்களை மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் வேகமாகவும் சொன்ன வள்ளுவன் வளர்த்த மொழி. கம்பனும், இளங்கோவும் சாதனைகள் புரிந்த மொழி. இந்த நூற்றாண்டில் மட்டும் சிந்தனைகள் சார்ந்தும் சிறுகதைகள் சார்ந்தும் கவிதைகள் சார்ந்தும் பல கலைஞர்கள் சாதனை புரிந்த மொழி. உலக மொழிகளில் மிகத் தொன்மையான மொழி. நம் மக்கள் தொகை உலக இனங்கள் பலவற்றையும் தாண்டி நிற்பது. இந்தப் பின்னணிகள் எல்லாம் படைப்பாளியின் மனதில் இருந்தால்தான் அவனுக்கு சவால் இருக்கும்.

நான் உருவாக்கும் விமர்சனக் கருத்துக்கள் என்னுடைய நடுத்தரமான படைப்புக்களின் ஆயுளைக் கூட்டுவதற்காக உருவாக்கப்படுபவை அல்ல. என் விமர்சனக் கருத்துக்களை என் வாசகர் சரிவரப் புரிந்து கொள்கிற போது அவனிடமிருந்து முதல் ஆபத்து எனக்கு வருகிறது. என் விமர்சனக் கருத்துக்களை அறியாத நிலையில் மிகச் சிறப்பாக நாவல்கள் எழுதியிருக்கிறீர்கள் என்று அவன் என்னைப் பாராட்டுகிறான். என் விமர்சனக் கருத்துக்களைத் தெரிந்து கொண்ட நிலையில் சிறந்த உலக நாவல்கள் போலவோ, சிறந்த இந்திய நாவல்கள் போலவோ ஒன்றை ஏன் உங்களால் படைக்க இயலவில்லை என்று அவன் என்னிடம் கேட்கிறான். என்னை நிராகரிக்க நான் அவனுக்குக் கற்றுத் தந்து, நான் எழுதவிருக்கும் படைப்புக்கள் மூலம் என்னை அவனால் நிராகரிக்க முடியாமல் ஆக்குவதே நான் ஏற்றுக் கொண்டிருக்கும் சவால்.

எல்லா மொழிகளிலும் கவிதைகளும், சிறுகதைகளும், நாவல்களும், நாடகங்களும், இலக்கிய விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன. இவற்றை வைத்து அம்மொழி சார்ந்த இலக்கியம் மதிப்பிடப்படுகிறது. பொதுவான உண்மை இது என்றாலுங் கூட இன்று உலக மொழிகளில் அம்மொழி சார்ந்த இலக்கியம் உறுதிப்பட, அம்மொழியில் வெளிவந்துள்ள நாவல்கள்தான் அதிகப் பங்காற்றியிருக்கிறது. கவிதையைவிட, சிறுகதையைவிட, நாடகங்களைவிட அதிகப் பங்காற்றக்கூடியவையாக நாவல்கள் இருக்கின்றன.

இன்றைய உலகில் நாடுகளின் எல்லைகள் மங்கிப் போய்விட்டன. மொழிபெயர்ப்புகள் மூலம் மொழிகளின் எல்லைகள் மங்கிப் போய்விட்டன. கடல்கள் தாண்டிப் பறக்க மனிதன் கற்றுக் கொண்ட பின் தேசங்கள் மிகவும் நெருங்கி வந்துவிட்டன. மனித உறவுக்கு உலகத் தளம் உறுதியாகிவிட்டது. வாசிப்பு மூலம் உறுதிப்படும் உறவு இது. மனிதனுடைய பல அடிப்படையான பிரச்சினைகள் உலகம் சார்ந்த பிரச்சினைகளாக இருக்கின்றன. எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி இன்று உலக மனிதனின் பொதுக் கேள்வியாகிவிட்டது. இந்தக் கேள்விக்கு பின்னால் நிற்கும் கேள்வி எதற்காகச் சீரழிந்து கொண்டிருக்கிறேன் என்பதுதான். அதற்கும் பின்னால் நிற்கும் கேள்வி சீரழிவிற்கு நான் ஏன் துணை நிற்கிறேன் என்பதுதான். மற்றொரு கேள்வி நான் யார் என்பது. என் அடையாளம் என்ன என்பது. என் முகம் எங்கே என்பது. மிகப் பெரிய சந்தையில் மிகப் பெரிய சந்தடியில் பணம் சார்ந்த போட்டா போட்டியில், புகழ் சார்ந்த போட்டா போட்டியில், பொருட்களை வாங்கிக் குவிக்கும் போட்டா போட்டியில், நான் என்னை இழந்து கொண்டிருக்கிறேனா என்பது.

தமிழனைப் பொறுத்தவரையில் இந்தக் கேள்விகள் அவனிடம் இல்லையென்றும் அவன் துருத்தியில் சோற்றை அடைத்து அவன் இடுப்பில் கெளபீனத்தைக் கட்டிவிட்டால் நுகத்தடியை ஒருபோதும் கழற்ற மாட்டான் என்றும் பலர் கற்பனை செய்து கொண்டிருக்கலாம். உலக மக்களுக்கு இருக்கக்கூடிய சகல பிரச்சினைகளும் தமிழனுக்கும் இருக்கின்றன. ஆனால் அந்தப் பிரச்சினைகள் இங்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை. அந்தப் பிரச்சினைகளுக்கு இன்று மொழி உருவம் இல்லை. ஒரு பிரச்சினைக்கு மொழி உருவம் இல்லையென்றால் அந்தப் பிரச்சினையில் அழுந்தி கிடப்பவனால் கூட அவன் பிரச்சினையைத் தெரிந்து கொள்ள இயலாது. பிரச்சினைகளுக்கு மொழி உருவம் ஏற்படாத நிலையில் அவற்றுக்குப் பரிகாரம் காண முடியாது. தான் போக வேண்டிய திசையும் அவனுக்குத் தட்டுப்படாது. துன்பத்தைத் துல்லியமாக வரையறுக்கும் மொழியற்ற நிலையில் எதார்த்தத்தை எதிர் கொள்ள முடியாதவனாக ஆகிவிட்டான் தமிழன். இந்த நெருக்கடியிலிருந்து உருவாகும் மனக் கலக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள அவன் போதை வஸ்துக்களைத் தழுவிக் கொள்கிறான். போதை வஸ்து ரசாயனத் திடப் பொருளாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. போதை வஸ்து திரவமாக இருக்க வேண்டுமென்பதுமில்லை. திரைப்படங்களில் வெளிப்படும் பெண்ணுடல், உடலுறவு சமிக்ஞைகள், வன்முறை, இதழ்கள் தரும் கிளுகிளுப்பு, மேடையில் முழங்கும் மொழி அலங்காரம், லாட்டரிச் சீட்டு, அரசியல், திரையுலக கிசுகிசுப்புகள், வம்புகளில் கொள்ளும் ஆர்வம், மனதில் கற்பனை எதிரிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் எல்லாமே எதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாத மலட்டுத்தனம் உருவாக்கித் தரும் போதை வஸ்துக்களே. இந்தப் போதை வஸ்துக்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தாத தமிழ் ஜென்டில்மேன் ஒருவன் கூட இன்று தமிழகத்தில் இல்லை. பலவற்றையும் ஏக காலத்தில் பயன்படுத்தி வருபவர்கள் எங்கும் நீக்கமற காண முடிகிறது.

தமிழ் வாழ்வு நமக்கு இரண்டு முகங்களைத் தந்திருக்கின்றன. ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம். மேடையில், சமூகக் கண்களின் முன், ஜாதியை முற்றாகத் தாண்டிவிட்டதான பாவனையை நாம் கொள்கிறோம். இங்கு ஜாதியைத் தாண்ட முயன்று கொண்டிருப்பதாகக் கூறும் நேர்மையாளர்களைக் கூட அவ்வளவாகப் பார்க்கக் கிடைப்பதில்லை. ஆனால் நம் குடும்பங்கள் ஜாதியில் அழுந்திக் கிடப்பது நமக்குத் தெரியும். நம் உறவும் சுற்றமும் ஜாதியைத் தக்க வைத்துக் கொள்ள பிரயாசை மேற்கொண்டு வருவது நமக்குத் தெரியும். குடும்பத்திற்காக முகமும் குடும்பத்திற்கு வெளியே முகமூடியும் நமக்கு இருக்கின்றன. ஜாதியை விட்டு மதத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டாலும் இதே கதைதான். படைப்பாளியாக நாம் போற்றுவது வள்ளுவனை, கம்பனை, இளங்கோவை, பாரதியை, பாரதிதாசனை. நாம் படிப்பது வணிக இதழ்களில் வரும் தொடர்கதைகளை. கிளுகிளுப்பூட்டும் எழுத்துக்களை. இலக்கியத்தைப் போற்றுபவர்கள் உண்மையாகவே சிறந்த நவீன படைப்புக்களை வாங்கத் தொடங்கினால் நல்ல புத்தகங்களின் முதல் பதிப்பு இருபத்தையாயிரம் பிரதிகள் ஆகிவிடும். இப்போது நல்ல புத்தகங்கள் ஆயிரம் பிரதிகள் அச்சேற்றப்பட்டு இரண்டு மூன்று வருடங்களில் அவை விற்று முடிகின்றன. இங்கும் முகமும், முகமூடியும் இருப்பதை நாம் உணரலாம். ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம் ஒரு பக்கம் மிக அதிகம். கற்பைக் கடைத்தேற்ற தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் பெண் இன்றும் நம் மனங்களில் இலட்சிய உருவமாகவே நிற்கிறாள்.

ஆனால் நாம் எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பது தொலைக்காட்சி திரைப்படங்களில் வெளிப்படும், நம் பண்பாட்டுக்கு எதிரானவை என்று நாம் நம்பும், காட்சிகளையே. நம் பண்பாட்டை மீறுபவை என்று நாம் கருதும் சொற்களை எழுத்துருவமாக கண்டால் பதறித் துடிக்கும் நாம், நம் பண்பாட்டை மீறும் காட்சிகளைக் குடும்பமாகக் கூடியமர்ந்து ரசித்து மகிழ்கிறோம். இங்கும் முகமும் முகமூடியும் வெளிப்படுகிறது. இவ்வாறு வாழ்வின் தளத்தில் ஒவ்வொரு நிமிடமும் முகமும் முகமூடியும் இணைந்து அவற்றிற்குரிய காரியங்களை மாறி மாறி செய்து கொண்டிருக்கிற போது, எது முகம் எது முகமூடி என்பதில் நமக்கு மிகுந்த குழப்பம் ஏற்படுகிறது. நான் உறங்கும்போது முகமூடி இல்லாமல் உறங்குகிறோம் என்று கற்பனை செய்து கொள்ள எனக்கு ஆசையாக இருந்தாலும் முகமூடிகளை உற்பத்தி செய்யும் ஆழ்மனம், விழித்திருக்கும் நிலையைப் பார்க்கிலும் உறக்கத்தில் அதிகச் சுறுசுறுப்புக் கொள்வதால், அந்த ஆழ்மனங்கள் உருவாக்கும் கனவுகளில் எண்ணற்ற முகமூடிகளை நான் அணிந்திருக்கும் துரதிர்ஷ்டத்தைப் பார்க்க வேண்டியவனாகிறேன்.

தமிழனின் சுய அடையாளம் சார்ந்த பிரச்சினையை அவன் தாய் மொழியை வைத்துப் புரிந்து கொள்ள முயலலாம். தாய் மொழிக்கும் தமிழனுக்குமான உறவு என்ன ? தன் எண்ணங்களைத் தெளிவாகச் சொல்லவும் பிறருடைய எண்ணங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் அவசியமான அளவுக்கு ஒருவன் தாய்மொழியில் பயிற்சி பெற்றிருந்த சமூகத்தை மொழி சார்ந்து அவன் நிம்மதியாக எதிர்கொள்ள வேண்டும். இந்த நிம்மதி தமிழனுக்கு இன்றில்லை. வரலாற்றில் எந்த காலகட்டத்திலேனும் அவன் இந்த நிம்மதியைப் பெற்றிருக்கிறானா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது. தமிழ் மொழியின் பயிற்சி தராத நிம்மதியை, கெளரவத்தை மற்றொரு மொழியின் பயிற்சி தரும் என்ற நிலை, அந்த நிலை உருவாக்கும் அமைதியின்மை வரலாற்றில் எப்போதும் அவனிடம் இருந்திருக்குமா ? ஒரு சந்தர்ப்பத்தில் அம்மொழி சமஸ்கிருதமாக இருக்கிறது. மற்றொரு சந்தர்ப்பத்தில் தெலுங்காகவோ, கன்னடமாகவோ, மராட்டியாகவோ இருக்கிறது. இப்போது நெடுங்காலமாக அது ஆங்கிலமாக இருக்கிறது. தமிழ் மட்டுமே கற்றவர்கள் அடைந்திருக்கும் அவமானங்கள், இன்றும் அடைந்து வரும் அவமானங்கள் ரகசியமானவை. கற்றிருக்க வேண்டிய ஆங்கிலத்தைக் கற்காமல் போனது தன்னுடைய குறை என்று தமிழன் நம்புவதால் ஆங்கில மொழி சார்ந்து அவன் பட்ட அவமானங்களை அவன் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. அலுவலகங்களில், நீதி மன்றங்களில், மருத்துவமனைகளில் ஆங்கிலம் அவனை அவமானப்படுத்துகிறது. சிறுநீர் என்ற சொல்லைப் பயன்படுத்தும் தமிழனான அலோபதி டாக்டர் ஒருவரைக் கூட நான் இன்று வரையிலும் பார்த்ததில்லை. மிகப் பெரிய தமிழ் புலவர்கள், தங்கள் புலமையின் காரணமாக தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியவர்கள் ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்திற்காக உள்ளூர கூசிக் குறுகிக் கொண்டிருக்கிறார்கள். உலக அரங்கில், இந்திய அரங்கில் தமிழனை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ள பல நியாயங்கள் இருக்கின்றன. தமிழ் மண்ணிலேயே தமிழனை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது ஆங்கிலம். தமிழும் ஆங்கிலமும் சார்ந்தும் தமிழனுடைய நெருக்கடியை நாம் பார்க்கலாம். தமிழனுடைய அடிப்படைப் பிரச்சனைகளில் மிக முக்கியமானது சுய அடையாளம் சார்ந்த பிரச்சனையே. 'ஐடென்ட்டி கிரைஸிஸ் ' என்று ஆங்கிலத்தில் சொல்லும் பிரச்சனை. மற்றொன்று வாழ்வியல் நெருக்கடி சார்ந்த பிரச்சனை. 'எக்ஸிஸ்டென்சியல் கிரைசிஸ் ' என்று ஆங்கிலத்தில் சொல்லும் வாழ்வியல் சார்ந்த நெருக்கடி.

தமிழன் தன்னுடைய நெருக்கடிகளைப் பகிரங்கமாக விவாதிக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் இருக்கிறான். இந்த விவாதத்தின் பல்வேறு முகங்கள், மிகப் பெரிய சவாலை ஏற்றுக் கொள்ளும் நாவலாசிரியர்களைச் சார்ந்து இருக்கிறது. நம் வாழ்க்கை சார்ந்த அடிப்படைகளை இதற்கு முன் எவரும் விவாதிக்கவில்லையா ? முதன் முதலாக விவாதிக்கப் போவது நாவலாசிரியர்கள்தானா என்ற கேள்வி எழலாம். விவாதங்கள் நடந்திருக்கின்றன என்றும், நடக்க வேண்டிய தளத்தில் விவாதங்கள் நடக்கவில்லை என்றும் சொல்லலாம். அரசியல், சமூகவியல், வரலாற்றியல் சார்ந்த விமர்சனங்கள் பார்வையில் ஒருமையை வற்புறுத்துபவை. அதாவது ஒரு குரலின் நீட்சியாக நிற்பவை. இத் துறைகள் சார்ந்த விவாதங்கள் மூலம் பிரச்சனையின் முழுமையைத் தேடி நாம் போக முடிவதில்லை. அரசியல், விவாதம் எப்போதும் அரைகுறையானது. அதிகாரத்தைக் கைப்பற்ற அவசியமான கண்டுபிடிப்புகளை மட்டுமே அது முன் வைக்கிறது. அதிகாரத்திற்கு இட்டுச் செல்லத் தடையாக நிற்கும் எதிர்நிலை கருத்துக்கள் எப்போதும் அரசியலில் மறைக்கப்படுகின்றன.

மேலும் வரலாற்றாய்வு, சமூகவியல் ஆய்வு எல்லாம் இன்று நிறுவனங்கள் சார்ந்தவை. நிறுவனங்கள் அரசாங்கத்தின் அங்கமாகச் செயல்படுகின்றன. அவர்கள் வாழ்வியல் சார்ந்த சிந்தனைகளை முழுமைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

படைப்பாளி அவன் உண்மையான படைப்பாளி என்றால் அதிகாரத்திற்கு வெளியே நிற்கிறான். நிறுவனத்திற்கு வெளியே நிற்கிறான். அறியாத உண்மைகளைத் தொகுத்து நம் பார்வையை விரிவுபடுத்த முன்னுகிறான். அவனிடம் மகத்தான நவீன கலைச் சாதனம் ஒன்று இருக்கிறது. அந்தக் கலைச் சாதனமான நாவலில் எதிரும் புதிருமான எண்ணற்ற குரல்களைஅவன் எழுப்பிக் கொண்டு போக முடியும். புறமனதைத் தாண்டி அக மனதிற்குள் அவன் நுழைய முடியும். சருமத்தைத் தாண்டி சாரத்திற்கு அவன் போக முடியும். கண்ணுக்குத் தெரியாமல் வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் அடிமனங்களின் ஆழங்களை அவன் தோண்ட முடியும். இதுதான் நவீன நாவலாசிரியனின் செயல். நாவல் பெரிய கலை உருவமாக தமிழில் நிறுவுவதற்கு ஏற்ற சூழலைத்தான் நாம் உருவாக்க முடியும். பெரிய நாவலை உருவாக்குவது பெரிய நாவலாசிரியனின் செயல்பாடு.

முதலில் நம் வாழ்வு சார்ந்து மறைக்கப்பட்ட உண்மைகளை நாம் பகிரங்கப்படுத்த முயல வேண்டும். இவ்வாறு பகிரங்கப்படுத்துவதன் மூலம் படைப்பாளி அவனுக்குரிய சுதந்திரத்தையும் அவன் முன் அடிவானம் வரையிலும் விரிந்து கிடக்கும் வெளியையும் உணரலாம். உலக மொழிகளில் தோன்றியுள்ள பெரிய நாவல்களின் குறிக்கோள்களை சூட்சுமமாக வகைப்படுத்தி அந்த வகைப்படுத்தலின் முன் நாம் படைத்துள்ள நாவல்களின் சோகை தட்டிய தன்மையை, சோனித் தன்மையை அனுபவ ரீதியாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு நாம் வரவேண்டும்.

சமூகத்தின் மீது நாவல் கொண்டுள்ள ஆட்சியை நாம் மிகைப்படுத்த வேண்டியதில்லை. குறைத்து மதிப்பிட வேண்டியதுமில்லை. புதிய சமூகத்தைப் புதிய நாவல்கள் மூலமே உருவாக்கிவிட முடியாது. இன்றைய சமூகத்தை அதன் மறைக்கப்பட்ட ஆழம் சார்ந்து புரிந்து கொள்ளாத வரையிலும் புதிய சமூகத்தை உருவாக்க முடியாது. இன்றைய சமூகத்தின் சூட்சுமங்களை உணர நாவல் மிகப் பெரிய கருவியாக செயல்பட முடியும்.

மனித சூட்சுமங்களை முன்னிறுத்தி நாவல் சமூகத்தைப் புரிந்து கொள்ள வழிவகை செய்கிறது. நம் அடிப்படைப் பிரச்சனைகளை நாவல்களுக்குள் பல்வேறு நோக்கில் கண்டு நாம் தெளிவடைய முடியும். நம் பிரச்சனைகளுக்கு மொழி உருவம் கிடைக்கும். பல்வேறுபட்ட பின்னணிகள் கொண்ட படைப்பாளிகள் உருவாக்கும் பெரிய நாவல்கள் மூலம் மொத்த வாழ்வின் பெரும் பகுதி துலக்கம் பெற வாய்ப்புண்டு. மொழி மிகப் பெரிய ஆற்றல் பெறும். மொழி பெறும் ஆற்றல்கள் மூலம் இன்று நாம் வெளிப்படுத்த திக்கித் திணறிக் கொண்டிருக்கும் எண்ணற்ற விஷயங்களைக் கூர்மையாக முன் வைத்துவிட முடியும். நம்மை நாம் அறிந்து கொள்ள விழையும் திசையை நோக்கித் தள்ளுகின்றன பெரிய நாவல்கள். பெரிய நாவலாசிரியர்களின் வருகைக்காக தமிழ் காத்துக் கொண்டிருக்கிறது.

நாகர்கோவில், சுந்தர ராமசாமி படைப்புகள் பற்றிய ஆய்வு கருத்தரங்குச் சிறப்புரை 31.5.1991