‏إظهار الرسائل ذات التسميات முத்திரைப் பதிவுகள். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات முத்திரைப் பதிவுகள். إظهار كافة الرسائل

முத்திரைப் பதிவுகள் - 4 - பட்டக்காரர் மீது நான்மணிமாலை பாடிய அப்துல் சுகூர் சாஹிப்!


இவர் கோவை மாவட்டம் கணியூரைச் சேர்ந்தவர். தமிழ்ப் புலவர். "பண்டிதர்' எனப் பலராலும் பாராட்டப் பெற்றவர். இவரை
"கொங்கு நாட்டுப் புலவர் தலைமணி'' என்று கி.ஆ.பெ.விசுவநாதம் பாடியுள்ளார். 26ஆவது பழைய கோட்டைப் பட்டக்காரர் நல்லதம்பிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் மீது இவர் "நான்மணிமாலை' என்ற இலக்கியம் பாடியுள்ளார். இந்நூல் 1930-ஆம் வருடம் அச்சாகியுள்ளது. நான்மணிமாலை 40 பாடல்கள் கொண்டது. இவரைப் பற்றி ஒரு புலவர்,

 

"தென்னாட்டு மகமதியர் குலதிலகன்

தீன்மார்க்கத் திறமை வாய்ந்தோன்

தென்னாட்டுத் தமிழ்முனியும் திறமையற்றுப்

பின்நிற்கும் தேர்ச்சி பெற்றோன்

முன்னாட்டுப் பேரறிஞர் மனமகிழப்

பிரசங்கம் முனைந்து செய்வோன்

சொன்னாட்டும் அப்துல்சுகூர் என்றழைக்கும்

திருநாமம் துலங்கப் பெற்றோன்''

 

என்று பாடியுள்ளார். கா.அப்துல் சுகூர் அவர்கள் நூலைப் பாராட்டி ந.மு.வேங்கடசாமி நாட்டார், கி.ஆ.பெ.விசுவநாதம், திருச்சி தி.பொ. பழனியப்பா பிள்ளை, திருப்பத்தூர் கா.அ.சண்முக முதலியார், கணியூர் சுப்பராமையன், உத்தமபாளையம் ஆர்.நாராயணசாமி, திருநெல்வேலி தி. கருணாலயப் பாண்டியப் புலவர், நாவலூற்று சுவாமி சிவநேசன், தாராபுரம் பஞ்சாபகேசய்யர், கோயமுத்தூர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அய்யர், காங்கயம் தெய்வசிகாமணி முதலியார், தாராபுரம் ஆறுமுகம் பிள்ளை போன்றோர் சாற்றுக்கவிகள் கொடுத்துள்ளனர். இந்நூலாசிரியர் தம் சொந்த ஊராகிய உடுமலை வட்டக் கணியூரில் இருந்த சன்மார்க்க சங்கம், தமிழ்ச் சங்கம் ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பு வகித்தவர்.


நான்மணிமாலை என்பது வெண்பா, கட்டளைத் கலித்துறை, விருத்தம், ஆசிரியப்பா என்ற வரிசையில் அந்தாதித் தொடை அமையப் பாடுவது. அதில் ஒரு பாடல்:

 

 "ஏர்பிடித்த காராளர் இன்குலத்து நற்றவத்தின்

சீர்பிடித்த நல்லதம்பிச் சீமான்போல் - யார்பிடித்தார்

வாகையெனும் மாலையணி மாஅரையர் இன்குழுவில்

ஈகையெனும் மாகொடையை யே'' (பா.13)

 

 (புலவர் செ. இராசு தொகுத்த "தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்' நூலிலிருந்து...)


முத்திரைப் பதிவுகள் - 3

தொல்காப்பியத்தில் மொழிபெயர்ப்புக் கொள்கை!

முதல்நூல், வழிநூல் என நூல் இருவகைப்படும் என்பார் தொல்காப்பியர். வழி நூல்கள் நான்கு வகை என அவர் பகுத்துக் கூறியுள்ளார்.

 

"மரபு நிலை திரியா மாட்சியவாகி

உரைபடு நூல்தாம் இருவகை இயல

முதலும் வழியும் என நுதலிய நெறியின''

(தொல்.பொருள்.மரபியல்-92)

 

என்பது நூல்கள் முதல்நூல், வழிநூல் என் இருவகைப்படும் என்பதைக் குறிக்கின்ற நூற்பாகும்.

 

"வழியெனப்படுவது அதன் வழித்தாகும்''

(மேற்படி-95) என்பதும், "வழியின் நெறியே நால்வகைத்தாகும்'' (95) என்பதும் வழிநூல் பற்றிய பொதுவிளக்கம் தருவன.

 

"தொகுத்தல் வகுத்தல் தொகைவிரி மொழிபெயர்த்து

அதர்ப்பட யாத்தலோடு அன்ன மரபினவே'' (97)

 

என்பது வழி நூல்களின் வகைகளைப் பெயரிட்டுக் கூறும் சூத்திரமாகும். "மொழிபெயர்த்து அதர்ப்படயாத்தல்” என்று சுட்டுவதில் இருந்து மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றித் தொல்காப்பியர் அறிந்திருந்தார் என்பது தெளிவு.


"மொழிபெயர்ப்பு' என்பதில் மூல மொழி நூலைப் பெயர்க்கும்போது இலக்கு மொழிக்குரிய மரபு கட்டாயம் பேணப்பட வேண்டும். "அதர்ப்படயாத்தல்” என்ற சொற்றொடர் இதனை உணர்த்தும். சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் பொருள் விளங்காது. காரணம், அந்தந்த மொழிக்குரிய நடை மரபு உண்டு என்பதேயாகும்.

முத்திரைப் பதிவுகள் - 2

மாத்திரை என்பதை ‘அளவு’ என்னும் பொருளில் சங்க இலக்கியங்கள் குறித்துள்ளன.

கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்

காண்டல் செல்லாது யாண்டு பல கழிய

(புறநா.216)

முலைக்கோள் விடாஅ மாத்திரை

(பொ.ஆ.படை141)

 

மிக விரைவில் நிகழும் செயலை ‘மாத்திரை அளவில்' நிகழ்ந்ததாக உரைத்தல் மரபு. மாத்திரை என்பதை ‘நொடி', ‘கணம்' எனவும் வழங்குவர்.

 

மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான்   (திருவாய்மொழி 10:7-8)

 

‘நொடி' என்பது இங்கு மாத்திரை என்னும் பொருளில் வருகிறது.

முத்திரைப் பதிவுகள் - 1

விருப்பும் வெறுப்பும் அற்ற வள்ளுவருக்குப் பகைவர் இருக்க வாய்ப்பில்லை. பகைவர்களைக் குறித்து வள்ளுவர் கையாண்டுள்ள பல்வேறு சொற்களைப் பற்றிக் காண்போம். ‘பகைவர்' என்ற சொல்லுக்கு இணையான சொற்கள் தமிழில் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு சொல்லும் வெவ்வேறு நுட்பமான பொருளைத் தருவதால், தமிழ் மொழியின் வளத்தினை அறிந்து மகிழலாம்.

அபிதானமணிமாலை என்னும் நூல், ‘பகைவர்’ என்னும் சொல்லுக்கு இனமான பல்வேறு சொற்களைப் பட்டியலிட்டுத் தருகிறது.