‏إظهار الرسائل ذات التسميات எம்.கோபாலகிருஷ்ணன். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات எம்.கோபாலகிருஷ்ணன். إظهار كافة الرسائل

ஊதாநிற விரல்கள் - எம்.கோபாலகிருஷ்ணன்

தாடையை லேசாக அசைத்தபோதே மண்டைக்குள் வலி தெறித்தது. காதோரத்தில் எரிச்சல் காந்தியது. அவன் ஏன் என்னை அப்படி அறைந்தான் என்று எனக்குப் புரியவில்லை. சுதாரித்து விலகுவதற்குள் கன்னத்தில் அவன் கை இறங்கிவிட்டது. அந்த நொடிக்கு முன்னால்வரை அவன் அவ்வாறு அடிப்பான் என்று நினைக்கவில்லை. ஆனால் அடித்த கணத்தில் என் உடல் மொத்தமும் கிடுகிடுத்தது. அடுத்தடுத்து இனி இப்படித்தான் நடக்கும் என்று உதறலெடுத்தது. ஒரே அறைதான். அதன்பின் அவன் அங்கே நிற்கவில்லை. உதட்டோரத்தில் ரத்தம் கொப்புளித்திருந்ததை உணர்ந்தேன். வலியுடன் எரிந்தது. நாக்கால் தொட்டபோது புளிப்புச் சுவை. கடகடவென்று கண்ணீர் உருண்டு முன்னங்கையில் சிதறியது. போலிஸ் அடி. சில மணி நேரங்களுக்கு முன்பு வரையிலும் போலிஸ் அடி வாங்கும் யோகம் எனக்கு இருக்கிறது என்று யாராவது சொன்னால் நம்பியிருக்க மாட்டேன்; ஆனால் பயந்திருப்பேன். எனக்கெதற்கு வம்பு என்று ஒதுங்கி நகர்ந்திருப்பேன். ஆனால் இப்போது அடி விழுந்துவிட்டது. இது முதல் அடிதானா? மேலும் அடிப்பார்களா? அடிதாங்கும் உடம்பா இது? பயமாய் இருந்தது. அடிவயிற்றில் மூத்திரம் முட்டியது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தின் புதிய கட்டடத்தின் பளபளப்பான வராந்தாவில் நின்றிருந்தபோதுதான் அது நடந்தது. வடக்குப் பகுதி வீட்டுவரி ஆய்வாளருக்காகக் காத்திருந்தேன். மதிய உணவுக்குப் பிறகான மந்தமான பகற்பொழுது. மண்டையைப் பிளக்கும் வெயில். மின்விசிறிகள் அசுரவேகத்தில் சுற்றிக்கொண்டிருந்த அலுவலக அறையில் இன்னும் யாரும் வந்திருக்கவில்லை. என்னைப்போன்றே பலரும் வெளியே காத்திருந்தார்கள். ஆய்வாளரின் உதவியாளன் சின்னு செல்போனில் பேசியபடியே உள்ளே நுழைந்ததைப் பார்த்தேன். ஆய்வாளர் வருவாரா என அவனிடம் கேட்கலாமா என்று நினைத்த அந்த நொடியில்தான் அவசரமாய் வெளியே பாய்ந்தான். ஏற்கெனவே அறிமுகமானவன். முகத்தைப் பார்த்தால் தெரிந்துகொள்வான் என்று தயங்கியபடியே சிரித்தேன்.

என் சட்டைப் பாக்கெட்டுக்குள் பணத்தைத் திணித்துவிட்டு “இதா வந்தர்றேன்னா...” என்று கூட்டத்துக்குள் நுழைந்து மறைந்தான் சின்னு. என்ன இது என்று யோசித்தவாறே பையிலிருந்து பணத்தை எடுத்த மறுநொடியில் யாரோ ஒருவன் என் வலதுகையைப் பற்றினான். அதுவரையிலும் அவன் என் அருகில்தான் நின்றிருந்தானா? என்னால் உறுதியாய் சொல்ல முடியவில்லை. கையை அசைக்கமுடியாத முரட்டுப் பிடி. அதற்காகவே காத்திருந்தவன்போல கையில் காமிராவுடன் என் எதிரில் வந்து நின்றான் இன்னொருவன். பிளாஷ் வெளிச்சம் பளிச்பளிச்சென மின்ன புகைப்படங்கள் எடுத்தான். மந்தமாய்ச் சோம்பிக் கிடந்த வராந்தா பரபரப்படைந்தது. மளமளவென ஆட்கள் சூழ்ந்தனர். எங்கிருந்தார்கள் இத்தனை பேர்? செல்போன்களில் படமெடுக்கும் ஆவலுடன் நெருக்கியடித்தனர். “வெலகுங்க... வெலகுங்க...” என்று கூட்டத்தை விலக்கி என்னை அறைக்குள் அழைத்துச் சென்றனர் இருவர்.