‏إظهار الرسائل ذات التسميات சுரேஷ்குமார் இந்திரஜித். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات சுரேஷ்குமார் இந்திரஜித். إظهار كافة الرسائل

நிகழ்காலமும் இறந்த காலமும் - சுரேஷ்குமார இந்திரஜித்

இசையமைப்பாளர் பிரபாகர்ராவ் சொல்லித்தான், சந்திரசேகர் உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்று சந்திரிகா அறிந்தாள். சந்திரிகா ஆந்திரத்தைச் சேர்ந்தவள். அவருடைய தந்தை தமிழ்ப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அவளுடைய தாயார் ரஞ்சிதம் ஆரம்பத்தில் வீட்டு மனைவியாகத்தான் இருந்தாள்.பின்னால் பொருளாதார நெருக்கடியினால்,அவள் துணை நடிகையானாள், அவளுக்கு ஆரம்பத்தில் விருப்பமில்லாமல்தான் இருந்தது. குழு நடனங்களில், சில படங்களில், குளோசப்பில் தெரிந்த பின்னர் அவளுக்கு ஈடுபாடு வந்து விட்டது.

டான்ஸ் மாஸ்டர் மாதவமேனனுக்கும் அவளுக்கும் தொழில் ரீதியாக ஏற்பட்ட தொடர்பு நெருக்கத்தைக் கூட்டிக் கொண்டிருந்தது. ஒரு படத்தில் கதாநாயகியுடன் தோழி ஆடிப்பாட வேண்டிய காட்சியில், மாதவமேனன், ரஞ்சிதத்தை சிபாரிசு செய்து, அந்தப் பாத்திரத்தை வாங்கிக் கொடுத்துவிட்டார். அந்தப் பாடல் பிரபலமானதும் ரஞ்சிதத்திற்கு, விரைவில் கதாநாயகியாகி விடுவோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. கணவரிடம் ஒதுக்கம் ஏற்பட்டது. அவருக்கு வாய்ப்புகள் வருவது அரிதாக இருந்தது. மாதவமேனனுக்கும் ரஞ்சிதத்தின் மீது ஈர்ப்பு இருந்தது. இருவருக்கும் நெருக்கம் கூடிக்கொண்டேயிருந்தது. மாதவமேனன் எப்படியும் தன்னை கதாநாயகியாக ஆக்கிவிடுவார் என்ற எண்ணம் ரஞ்சிதத்திற்கு ஏற்பட்டது. சந்திரிகா அப்போது சிறுமியாக இருந்தாள். ரஞ்சிதத்தின் கணவர் சினிமா வாய்ப்புக்காக பம்பாய் செல்வதாகச் சொல்லிச் சென்றவர், திரும்பவேயில்லை. ரஞ்சிதமும் அவரைப் பற்றி லேசாக விசாரித்து விட்டு விட்டாள்.

மாதவமேனன் வீடு பார்த்து வைத்திருந்தான். முக்கியமான கதாநாயகர்களின் படங்களுக்கு அவர்தான் டான்ஸ்மாஸ்டராக இருந்தார். மலையாளத்திலும் அவருக்கு வாய்ப்புகள் இருந்தன. பார்த்து வைத்திருந்த வீட்டில் ரஞ்சிதத்தைக் குடி வைத்தார். ஒரு மலையாளப் படத்தில் இரண்டாவது கதாநாயகி பாத்திரம் வாங்கிக் கொடுத்தார். ரஞ்சிதம் மிக மகிழ்ச்சியாக இருந்த காலகட்டம் அது. மாதவமேனன் மிகுந்த பண வசதியுடன் இருந்தார். சந்திரிகாவை பார்த்துக் கொள்வதற்கும் வீட்டு வேலைகளுக்கும் ஆட்களை நியமித்திருந்தார். இரண்டாவது கதாநாயகியாக ரஞ்சிதம் நடித்த மலையாளப்படம் சரியாக ஓடவில்லை.

மாதவமேனனின் நண்பர், புதுமுகங்களை வைத்து எடுக்கும் படத்தில் கதாநாயகியாக ரஞ்சிதம் ஒப்பந்தம் ஆனாள். மகள் சந்திரிகா வீட்டில் இருப்பது பொருத்தமில்லை என்று கருதி, வெளியூரில், விடுதியில் சேர்த்து படிக்க வைத்தாள். மாதவமேனனுக்கு ஒரு குடும்பம் ஏற்கெனவே இருந்த போதிலும், ரஞ்சிதத்திடம் பிரியமாகவும் அவள் வளர்ச்சியில் அக்கறையுள்ளவராகவும் இருந்தார்.

வெளியூரில் படப்பிடிப்பு இருந்த சமயம் ஒருநாள் அவள் அறைக்கு வந்து படத்தின் வளர்ச்சி பற்றியும் அவளுடைய திறமை பற்றியும் பேசிக்கொண்டிருந்த தயாரிப்பாளர், கிளம்பும்போது, அவளை அணைத்து உதட்டில் முத்தமிட்டுச் சென்றார். தனியாக இருக்கும் சந்தர்ப்பம் அமையும்போது அவர், அவளைத் தொடுவது என்பது பழக்கமாகி விட்டது.

மாதவமேனனுக்கு மதுப்பழக்கம் இருந்தது. ரஞ்சிதத்திடம் சில வேளைகளில் குடிக்கச் சொல்லி கேட்டுக் கொள்வார். அப்போது ஒப்புக்கு கொஞ்சமாகக் குடித்துவிட்டு செக்ஸில் அதிக ஆவேசம் வந்தவள் போல் காட்டிக்கொள்வாள். அவளுக்கு அந்தக் கசப்பான பானம் குடிப்பதற்கு மிகக் கஷ்டமானதாக இருந்தது. ஆனால், படத்தயாரிப்பாளர் கொடுத்த பானம் இனிப்பும் சற்று துவர்ப்பும் கலந்து இருந்தது. இதுதான் ஒயின் என்று அப்போது அவர் கூறினார். வெளியூர் படப்பிடிப்பு நாட்களில் இருவரும் உடல்சேர்க்கை கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.

படத்தின் கதாநாயகனுடன் காதல் காட்சியில் நடிக்கும்போது அவனுடன் உடல்சேர்க்கை கொள்ள வேண்டும் என்ற அவா திடீரென்று அவளுக்கு ஏற்பட்டது. அப்போது காரைக்கால் அருகே ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. சாப்பாட்டு நேரத்தில் உதவி இயக்குனர் சிவானந்தம் காரைக்காலம்மையார் பற்றிக் கூறினார். ரஞ்சிதத்திற்கு அப்போதுதான் காரைக்காலம்மையார் பற்றி தெரிந்தது. தெய்வாம்ச அழகுள்ளவள் என்று கணவர் விலகிச் செல்ல, தன் தோற்றத்தைக் கெடுத்து பேய் போல ஆக்கிக்கொண்டு வாழ்ந்தவள், காரைக்காலம்மையார் என்பதை அறிந்தபோது, ரஞ்சிதத்திற்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் விளங்கிக்கொள்ள முடியாத உள்மன மாறுதல்களும் ஏற்பட்டது. அவளுக்கே ஏன் என்று தெரியவில்லை. அவளுக்கு ஏற்பட்ட எண்ணம் பிறகு மறைந்து விட்டது.

அவள், கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த படம் சற்று வளர்ந்த நிலையில் பொருளாதார பிரச்சினையில் தடுமாறி பிறகு நின்றுவிட்டது. படத் தயாரிப்பாளரும் கடன் பிரச்சினையில் சிக்கி நலிந்து போனார். மாதவமேனன், அவளை நன்றாகவே, பொருளாதார சிரமமில்லாமல் வைத்திருந்தார். அவள் வீட்டில் மாதவமேனன் தங்கும் நாட்களில் அவள் வேறு ரஞ்சிதமாக மாறிவிடுவாள். காலையில் தலைக்குக் குளித்து கூந்தலை விரித்து முடிச்சுப் போட்டிருப்பாள். முகத்தில் லேசாக மஞ்சள் நிறம் கூடியிருக்கும். பளிச்சென்று இருப்பாள். ஒரு மோகினி அவளுக்குள் புகுந்து கொள்வாள். மாதவமேனனுக்கு ஊட்டிவிடுவாள். கன்னத்தைக் கிள்ளுவாள். பேசிக்கொண்டிருக்கும்போதே கட்டியணைத்து முத்தமிடுவாள். மாதவமேனன், அவள் பெயருக்கு ஒரு வீட்டை வாங்கி அதிலிருந்து வரும் வாடகை ரஞ்சிதத்திற்குக் கிடைக்கும்படியாக ஏற்பாடு பண்ணியிருந்தார்.

சந்திரிகா வயதுக்கு வந்துவிட்டாள். ஒரு காலகட்டத்தில் இனிமேல் தனக்கு சினிமாவில் எதிர்காலம் இல்லை என்ற முடிவிற்கு ரஞ்சிதம் வந்துவிட்டாள். சந்திரிகாவை அழைத்து வந்து உள்ளூரிலேயே ஒரு கல்லூரியில் விடுதியில் சேர்த்து படிக்க வைத்தாள்.

மாதவமேனனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால், முதல் குடும்பத்திலேயே வைத்து பராமரிக்குமாறுதான் ஆகிவிடும் என்று அவள் அறிந்திருந்தாள். அந்தக்கால கட்டத்தை நினைத்து பயந்து கொண்டிருந்தாள். அந்தக்கால கட்டமும் வந்தது. அவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. சிறுநீரகம் பழுதாகி விட்டது என்றார்கள். அவள் அந்த வீட்டிற்குச் சென்று அவரைப் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் மாதவமேனன் இறந்து விட்டதாக அவளுக்குத் தகவல் கிடைத்தது.

சந்திரசேகர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை குவாரி தொழிலில் ஈடுபட்டிருந்தார். தந்தையின் மறைவிற்குப் பின், குவாரி தொழிலையும் கவனித்துக் கொண்டு சினிமாவில் ஃபைனான்ஸ் செய்யும் தொழிலையும் செய்து வந்தார். சினிமாவில் அவர் நுழைந்ததற்குக் காரணம் பெண்ணாசை. அழகான பெண்களைப் பார்க்கலாம், விதவிதமான பெண்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்ற ஆசையே அவரை சினிமாவை நோக்கித் தள்ளியது.

சினிமாவிற்கு ஃபைனான்ஸ் செய்யும் தொழிலில் இறங்கிய சமயத்தில் சினிமாவிற்கு துணை நடிகைகளை அனுப்பும் பஞ்சாட்சரம் அறிமுகமானான். பஞ்சாட்சரம் மூலமாக பல பெண்கள் அறிமுகமானார்கள். அவன் மூலம் அறிமுகமான பெண்களில் மோகினி அவருக்குப் பிடித்தமானவளாக இருந்தாள். அவள் முகவெட்டும், உடலமைப்பும் அவள் பேசுவதும் அவருக்குப் பிடித்திருந்தது. அவளை அழைத்துக்கொண்டு அடிக்கடி வெளியூர் செல்வது அவருக்கு வழக்கமாகி விட்டது. அவர்கள் இருவரிடமும் நெருக்கம் கூடியது. அந்தரங்கமாக ஒருவர் மீது ஒருவர் காமமும் அன்பும் கொண்டவர்களானார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் தவிர்க்க முடியாதவர்களாகிவிட்டனர். மாமல்லபுரத்தில் ஓட்டலில் தங்கியிருந்த போது தன்னுடைய பெயர் மோகினி இல்லையென்றும் சந்திரிகா என்பது தன்னுடைய பெயர் என்றும், தன் தாயார் பெயர் ரஞ்சிதம் என்றும், தந்தை சிறுவயதிலேயே வீட்டை விட்டுச் சென்று விட்டார் என்றும் கூறினாள். அன்று மதியத்திற்கு மேல் உடல்சேர்க்கை முடிந்த சற்று நேரத்தில், சந்திரிகா தன்னை, சந்திரசேகர் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு ஆயுள் முழுவதும் விசுவாசமாக இருப்பதாகவும் தெரிவித்தாள்.

சந்திரசேகரின் மனைவிக்கு மூன்று சகோதரர்கள். மூன்று பேருமே வில்லங்கமானவர்கள். ஒருவர் மதுக்கடை உரிமம் எடுத்து நடத்தி வந்தார். ஒருவர் நகராட்சித் தலைவராக இருந்தார். இன்னொருவர் காவல்துறையில் இன்ஸ்பெக்டராக இருந்தார். மனைவி சந்திரகாந்தா அவரை அனுசரித்துப் போகக்கூடியவராக இல்லை. அடிக்கடி அவரை வம்புக்கு இழுத்துக் கொண்டேயிருப்பார். சந்திரிகாவை தனிக் குடும்பமாக வைத்தால், மனைவியின் சகோதரர்களினால் தனக்கும், சந்திரிகாவிற்கும் பிரச்சினை ஏற்படும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. சந்திரிகாவினால் அந்தப் பிரச்சினையைத் தாங்க முடியாது என்றும் தோன்றியது. எனவே, சந்திரிகா கேட்ட போது, அவர் உடனே பதில் சொல்லவில்லை. அப்போதைய நிலையில் அவளுக்கு மனச்சுருக்கத்தை ஏற்படுத்த விரும்பாததனால் `யோசித்து நல்ல பதில் கூறுவதாக' அவளிடம், அவர் கூறினார்.

தூங்கி எழுந்து குளித்துவிட்டு, சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவர், அவளிடம் `நீ சொன்னது நல்ல யோசனை. எனக்கும் அதில் விருப்பம்தான். ஆனால் என் மனைவியின் சகோதரர்கள் அக்கிரமக்காரங்க. அவுங்க அடாவடியை சமாளிக்கிறது கஷ்டம். அவனுக உன் வாழ்க்கையையே கெடுத்துருவாங்க..' என்றார். அவளுக்கு முகம்மாறியது. தொடர்ந்து அவளால் சாப்பிடமுடியவில்லை. கை கழுவவிட்டு, ஜன்னலோரமாக நின்ற வெளியே பார்த்தாள்.

சந்திரசேகருக்கு வாழ்க்கை இன்பமயமாகத் தோன்றியதற்குக் காரணம் சந்திரிகாதான். அவருக்கு பெண் அன்பு என்றால் என்னவென்றே தெரியாது. அவருக்கு பத்து வயதாகும்போதே தாயார் இறந்துவிட்டார். சகோதரிகள் கிடையாது. மனைவியிடம் பேசிக்கொள்வதற்கு அவரிடம் விஷயங்கள் இல்லை. அவளுக்கும், சாப்பாடு பரிமாறுவது; வீட்டு செலவுக்கு பணம் கேட்பது; உடல்சேர்க்கைக்கு அழைக்கும் நேரங்களில் ஒத்துழைப்பது ஆகியவற்றைத் தவிர அவரிடம் வேறு தொடர்புகள்  அரிது. சந்திரிகா அவர் வாழ்க்கையில் நுழைந்த பின்னர், அவள் மூலமாக, பெண் அன்பை அவர் அறிந்தார். சந்திரிகா, அவரை குளிப்பாட்டி விடுவாள்; துடைத்து விடுவாள்; ஊட்டிவிடுவாள், தன் மடியில் அவரை தலைவைத்து படுக்கச் சொல்லி தலைமுடிக்குள் கைகளை அலையவிடுவாள்; அடிக்கடி முத்தமிடுவாள். அவருடைய நலனில் அக்கறை கொண்டு விசாரிப்பாள். அடுத்த நாள் காரில் நந்தி மலையைச் சுற்றியுள்ள சில கோயில்களுக்குச் செல்வது என்று முடிவு செய்தார்கள்.  அவள் மனம் ஒரு நிலைக்கு வந்திருந்தது. ஏமாற்றத்தை அவள் தாங்கிக் கொண்டாள். எதுவும் நடக்காதது போல் இருந்து அவரை மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்தாள். நகைச்சுவையாக அவரிடம் பேசினாள். மிகையாக நடந்து கொள்வதாகத் தோன்றி சில நேரம் அமைதியாகவும் இருந்தாள்.

நந்திமலை, தூரத்தில் இருந்து பார்க்கும்போது நந்தி போலத் தோன்றும். காரில் வரும்போதே நந்திமலை, நந்தித் தோற்றத்தை இழந்து ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி தோற்றம் தந்ததை காரின் ஓட்டுநர் காட்டிக்கொண்டே வந்தார். தூரத்தில் வால் போலத் தோன்றிய பகுதியை அதற்கு அடுத்தாற்போல் இருந்த சாலையில் கடக்கும்போது அந்த வால்பகுதி, அவ்வாறு இல்லாமல் சிறு சிறு கற்குவியலாக இருந்ததை ஓட்டுநர் சுட்டிக் காண்பித்தார். `தூரத்திலே பார்க்கும் போது ஒரு மாதிரியா தோணும். பக்கத்துலே பாக்கறப்ப வேறு மாதிரி தோணும். ஒவ்வொரு இடத்திலே இருந்து பாக்கும் போதும் ஒவ்வொரு மாதிரி தோணும். எந்த இடத்திலே இருக்கோம்கிறதைப் பொறுத்து அதன் தோற்றமும் அமையும். எது உண்மை என்பது யாருக்கும் தெரியாது' என்றார் ஓட்டுநர். அவர் சொன்னது அவள் மனதை திடுக்கிட வைத்தது. அவள் உள்மனதிற்குள் அவை மாறுதலை ஏற்படுத்தியது.

சந்திரசேகர் சிரித்துக்கொண்டே சொன்னார். `நீ இவனை டிரைவர்னு நெனைக்காதே ஒருநாள் பெரிய கதாசிரியனா வரப்போறான். தயாரிப்பாளர்களை சந்திச்சு கதை சொல்றான். வசனம் எழுதிக் காண்பிக்கிறான். இவன் அப்பா சிவானந்தம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தார். அறிவாளி. நல்லா வர வேண்டிய ஆள். ஆக்ஸிடெண்டுலே இறந்துபோயிட்டார்.' சந்திரிகா ஓட்டுநர் கூறியதை யோசித்துக் கொண்டே வந்தாள். விளங்கிக் கொள்ள முடியாத உள் மாறுதல்கள் ஏற்பட்டன.

சந்திரசேகர், தொழில் விசயமாக, பம்பாய் சென்று ஒரு மாதம் தங்கியிருந்தார். பம்பாயிலிருந்து திரும்பியபின் இரண்டு நாட்கள் கழித்து சந்திரிகாவிடமிருந்து, அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. `அவரைச் சந்திக்க முடியுமா?'ன்னு கேட்டாள். வழக்கமாக சந்திக்கும் இடத்தில் அவளை காரில் ஏற்றிக்கொண்டு மாமல்லபுரம் சென்று திரும்புவதாக ஏற்பாடு செய்து கொண்டார்கள். அறைக்குள் நுழைந்த சற்று நேரத்திலேயே, அவள், அவர் காலைத் தொட்டு வணங்கினாள். இவ்விதமாக நாடகத்தன்மையுடன் ஆரம்பிக்க வேண்டும் என்று அவள் ஏற்கெனவே முடிவு செய்திருந்தாள். எழுந்து அவரை வணங்கிக்கொண்டே `நான் ஒருத்தரை திருமணம் செய்து கொள்ளப் போறேன். ஆசிர்வாதம் பண்ணுங்க' என்றாள்.

அவர் திகைத்தார். சுதாரித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து, அவளையும் அமரச் சொல்லி விவரம் கேட்டார். சினிமா சம்பந்தப்பட்டவரல்ல என்றும், அவருக்கு விசுவாசமாக இருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறினாள். அவளை அணுகுவதில் அவருக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. இதுபோன்ற தடுமாற்றம் அவருக்கு இதற்குமுன் ஏற்பட்டதில்லை. அவளிடம், வருங்காலக் கணவர் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார்.

உடல் சேர்க்கை முடிந்தபின் அவருக்கு சரியாகத் தூக்கம் வரவில்லை. அடுத்தநாள் காலை இருவருமே ஏதோ யோசனை செய்து கொண்டிருந்ததால் சரியாகப் பேசிக்கொள்ள முடியவில்லை. அவளை வழக்கமாக இறக்கிவிடும் இடத்திற்கு வந்தபோது, அவள் காரினுள் அமர்ந்திருந்த நிலையில் அவரை வணங்கினாள். அவரும் பதிலுக்கு வணங்கினார். அவள், இறங்கி திரும்பிப் பார்க்காமல் நடந்தாள். திரும்பிப்பார்ப்பாள் என்று சற்று நேரம் காரை நிறுத்தச் சொன்ன சந்திரசேகர், `பெரிய இழப்பு' என்று நினைத்துக்கொண்டே காரை எடுக்கச் சொன்னார்.

இசையமைப்பாளர் பிரபாகர்ராவ் சொல்லித்தான் சந்திரசேகர் உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்று சந்திரிகா அறிந்தாள். சந்திரிகாவின் கணவர் ராஜ்மோகன், தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களுக்கு ரப்பரினால் ஆன பாகங்கள் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை வைத்திருந்தார். சந்திரிகாவை திருமணம் செய்த பிறகு தொழில் வளர்ந்தது. வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து தற்போது மிகுந்த பணவசதியுடன் மன நிறைவான வாழ்க்கை   நிலையில் இருக்கிறார். சந்திரிகாவின் கவனிப்பும், அக்கறையும், ராசியும்தான் தன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது என்ற நினைப்பு அவருக்கு உள்ளது.

சந்திரிகாவை ராஜ்மோகன் திருமணம் செய்த அன்று அவருக்கு இறுதிவரை விசுவாசமாக இருப்பது என்று வைராக்கியமாக முடிவுசெய்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும்போது அந்த வைராக்கியம், அவள் நினைவிற்கு வரும். ராஜ்மோகனைத் திருமணம் செய்யும்போது, சிறிய வீட்டில் இருந்தார்கள். இன்று பெரிய பங்களா, கார்கள் என்று வசதிகள் ஏற்பட்டுவிட்டன. அவரது தொழில் பற்றி அவளுக்கு ஏதும் விளங்காது. ஆனால் அவரை அக்கறையுடன் கவனித்துக் கொள்வது; அவரின் மனம் அறிந்து சந்தோஷமாக வைத்திருப்பது; அவளது இயல்பான குணங்களாக இருந்தன. அவள் தந்த அன்பும், காமமும் அவருக்கு சக்தி கொடுத்து, தொழிலில் அவரைக் கெட்டிக்காரராக்கி விட்டது என்று நினைத்துக் கொள்வாள். ஒரு மகன் அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறான். இன்னும் திருமணமாகவில்லை. பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மகளுக்குத் திருமணமாகி சென்னையிலேயே வேறு பகுதியில் தனியாகக் குடியிருக்கிறாள்.

ராஜ்மோகனுடன் திருமணமாகி சில வருடங்கள் கழிந்த நிலையில், ஒரு திருமண நிகழ்ச்சியில், அவள் சந்திரசேகரைப் பார்த்தாள். வணக்கம் சொல்லிவிட்டு, அவள் போக்கில் சென்றாள். அவர், அவளிடம் பேச முற்படுவதைக் கவனித்த போதும் அவள், அதைப் பொருட்படுத்தாமல் சென்று விட்டாள். அவர், அதை எதிர்பார்க்கவில்லை. அவள் வாழ்க்கை மாறிவிட்டது என்று நினைத்துக் கொண்டார். பிறகு ஒருதடவை முக்கியமான மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, அவர் பார்வையாளர்கள் இடத்தில் அமர்ந்திருந்ததைப் பார்த்தாள். அவர் கவனித்தாரா என்று தெரியவில்லை. அவள் தன்போக்கில் சென்று விட்டாள்.

சந்திரசேகரின் வாழ்விலும் பெரிய பொருளாதார ஏற்றம் ஏற்பட்டது. ஃபைனான்ஸியராக இருந்த அவர் சினிமா தயாரிப்பாளராக மாறினார். புதுமுகங்களை வைத்து எடுத்த படம், வெற்றியடையவே, பிரபலமான கதாநாயகனை வைத்து படங்கள் எடுத்தார். சினிமா உலகிலும், சமூகத்திலும் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரானார். அந்நிலையில் அரசியல் கட்சியில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினரானார். மந்திரி பதவி கிடைக்கும் என்ற சூழ்நிலை கூட இருந்தது.

காலமாற்றத்தில் சினிமா சூழ்நிலை மாறி அவர் தயாரித்த பழைய பாணி படங்கள் தோல்வியடைந்தன. அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் இருந்த அரசியல் கட்சி, எதிர்க்கட்சியானது. அரசியலிலும் புதிய ஆட்கள் உருவாகியிருந்தனர். காலம் செல்லச் செல்ல, வயதும் ஆக, ஆக அரசியலும், சினிமாவும் தனக்குப் பொருந்தாத வகையில் மாறிவிட்டது என்று நினைத்தார். குவாரி தொழிலிலும், குடும்ப உறுப்பினர்களின் நலனிலும் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். இசையமைப்பாளர் பிரபாகர்ராவ், ஹைதராபாத்தில் குடியிருக்கிறார். சென்னை வந்திருந்த அவரை, தற்செயலாக ஒரு கடையில் சந்திரிகா சந்திக்குமாறு ஆகிவிட்டது. சந்திரசேகர் மருத்துவமனையில் இருப்பதாகவும், மனைவி, மகள், மகன் யாரையும் அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்றும் ஏதோ பழைய ஞாபகங்களை உளறிக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார். சந்திரிகாவிற்கு மனசஞ்சலம் ஏற்பட்டது. மனம் பழைய நினைவுகளை நோக்கிச் சென்றது. அடுத்தநாள் காரில் நந்திமலையைச் சுற்றியிருக்கிற கோயில்களுக்குச் சென்றுவிட்டு, மலையைச் சுற்றி வந்தாள். ஒரே குழப்பமாக இருந்தது.

அடுத்தநாள், வீட்டிற்குக் கூட்டிச் செல்வதற்கு முன் மருத்துவமனையில் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. காரில், கடைகளுக்குச் சென்று சில பொருட்கள் வாங்கினாள். யோசிப்பதற்கு அவகாசம் வேண்டும் என்பது போல் ஊரைச் சுற்றி வந்தாள். பிறகு மருத்துவமனையை நோக்கி காரை செலுத்தினாள். தன்னை யாரென்று கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்தாள். சந்திரசேகர், தன் கணவரின் நண்பர் என்றும், கணவர் வெளியூர் சென்றிருப்பதால் தான் மட்டும் பார்க்க வந்துள்ளதாகவும் பொய் சொல்லலாம் என்று தோன்றியது.

மருத்துவமனைக்குள் நுழைந்தாள். ஏதோ திருட்டுத்தனம் செய்வது போல் மனம் இருந்தது. அறை எண்ணை விசாரித்து, அறையின் கதவைத் தட்டினாள். அறை திறந்தது. நல்லவேளையாக பள்ளியில் படிக்கும் தோற்றத்தில் ஒரு பையன் மட்டும் இருந்தான். என்ன உறவென்று தெரியவில்லை. தயார் செய்திருந்த பொய்யைக் கூறினாள். அவர் முதுகைக் காட்டி படுத்திருந்தார்.  பையன் அவரைத் தொட்டு இந்தப் பக்கம் திருப்பினான். வயதாகியிருந்தது. தலை, மீசை, தாடி வெள்ளை நிறத்தில் இருந்தது. உடல் கனத்திருந்தது. அவரை இந்தக் கோலத்தில் பார்ப்பது பயமாக இருந்தது. வாழ்க்கையை அவரது கோலம் பகடி செய்வதாகவும் தோன்றியது. அவர் சந்திரிகாவைப் பார்த்து விழித்தார். `யாரையும் அடையாளம் தெரியலை' என்றான், அந்தப் பையன்.

`எங்கம்மா எனக்கு எக்ஸிபிஷன்லே பந்து வாங்கிக் கொடுக்க முடியாதுன்னு சொல்லியிருச்சு' என்றார். சந்திரசேகர். சந்திரிகாவிற்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. வெளியில் வந்தாள். காரை ஓட்டும்போது தடுமாற்றம் ஏற்பட்டது. வீட்டிற்குள் நுழையும் போது, அவளின் கணவர், ராஜ்மோகன் `எங்கே போயிருந்தே?' என்று கேட்டார். அவள் `கடைக்குப் போயிருந்தேன்' என்று சொல்லி வீட்டிற்குள் சென்றாள். முகத்தைக் கழுவிய பின் அவளுக்கு சற்று நிதானம் ஏற்பட்டது.

நன்றி – தீராநதி

விரித்த கூந்தல் - சுரேஷ்குமார இந்திரஜித்

இவ்வளவு பெண்கள் விரிந்த கூந்தலுடன் இருப்பது அவனுக்குத் திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பெண்கள் விரிந்த கூந்தலுடன் உட்கார்ந்திருந்தார்கள். நின்று கொண்டிருந்தார்கள். நடந்து கொண்டிருந்தார்கள். பலர் நனைந்த ஆடைகளுடன் இருந்தார்கள். அருவி, பிரம்மாண்டமான தோற்றத்துடன் இருந்தது. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்கள் நீர்வீழ்ச்சியில், பாறையுடன் தேனடை போல அப்பியிருந்தனர். மிகவும் குறுகிய ஒரு நீர்வீழ்ச்சியில் (ஒரு நபர் மட்டுமே நிற்கலாம்) வரிசையாய்ப் பெண்கள் நின்று தலையையும், உடலையும் நனைத்து வெளியேறிக் கொண்டிருந்தனர். நிற்கும் ஒவ்வொரு பெண்ணின் தலையிலும் நீர் விழுந்து முகத்திலும் உடலிலும்  வழித்து ஓடிக் கொண்டிருந்தது. விழும் நீரினூடே தெரியும் முகங்கள் தூய்மையடைந்து மின்னிக் கொண்டிருந்தன. அவனின் கண்ணெதிரே பிருஷ்டம் வரை மறைந்த நீண்டு விரிந்த கூந்தலுடன் ஒரு பெண் சென்று கொண்டிருந்தாள். இந்த இடத்திற்கு வந்ததிலிருந்து விரிந்த கூந்தல் ஏற்படுத்தும் தொந்தரவுகளை, அவன் தன் நண்பரிடம் அவருக்கு விளங்கியும், விளங்காத வகையிலும் கூறிக்கொண்டு தானிருக்கிறான்.

விரித்த கூந்தலுடன் நான்கு பெண்கள் தங்கள் ஆடவர்களுடன் அவனைக் கடந்து சென்றனர். சாலையோரத்தில் குஷ்டரோகி ஒருவன், காசு விழுந்த தகர டப்பாவை ஆட்டி ஓசையை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். பாறையில் அமர்ந்திருந்த ஒரு குரங்கு எதையோ நக்கிக் கொண்டிருந்தது. அவன், தன் நண்பரிடம் விரித்த கூந்தல் ஒரு குறியீடு போலத் தன்னைத் துரத்திக் கொண்டிருப்பதாகக் கூறினான். ''எல்லாம் நீங்கள் பாவித்துக் கொள்வதுதான்'' என்று நண்பர் கூறினார். ''விரிந்த கூந்தல் கோபத்தையும், பிடிவாதத்தையும் காட்டுகிறது'' என்றான் அவன். இருவரும் நடந்து ஒரு அடர்த்தியான மரநிழலின் கீழ் இருந்த பாறையில் அமர்ந்தனர்.

நண்பர், அவனிடம் அவளை தற்போது அடிக்கடி சந்தித்ததுண்டா என்று கேட்டார். சந்தர்ப்பம் கிடைப்பதில்லை என்றும் அபூர்வமாக சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் அவன் பதில் கூறினான். அவளின் மண வாழ்க்கையைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, அது மிகவும் கடினமானது, இந்தப் பாறையைப் போல் தன்னுடைய பிடிவாதத்தால் அவள் தன் மண வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொண்டாள். ''அவளின் பிடிவாதம் அவளின் கணவனைச் சில எல்லைகளுக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. பிடிவாதம் எற்படுத்தும் சினம் அவளிடமிருந்து பல வகைகளில் வெளிப்பட்டு அவரின் பிடிவாதம் மேலும் உறுதியாகிறது என்றே தோன்றுகிறது'' என்றான். தொடர்ந்து இருவரும் மெளனமாய் அமர்ந்திருந்தனர்.

அவளின் கைவிரல்களும், கால்களும், கழுத்தும், முகத்தின் பக்கவாட்டுத் தோற்றமும் மிகவும் அழகானவை. அவள் மெலிந்திருந்ததைக் கண்டு, அதை அவன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினான். அந்தச் சந்தர்ப்பத்தின் தொடர்ச்சியான ஒரு நிகழ்வில்தான் அவள் முதன்முதலாக மணவாழ்க்கை பற்றி அறிவதாக கூறியிருந்தாள். அன்று இரவில், இன்றுதான் தனக்கு முதன்முதலாக மணமானதாகக் கூறினாள். அவளுக்கும் அவளின் கணவனுக்கும் இடையே உள்ள தாம்பத்ய உறவு அவளின் பிடிவாதத்தினால் இவ்விதமாகவே இருந்தது.

நண்பர் 'விரித்த கூந்தல் உங்களைத் துரத்துவதாக நினைப்பது ஏன்?'' என்று கேட்டார். அவன் ஒன்றும் கூறவில்லை. நண்பருக்கு அவ்வப்போது அவன் கூறும் விஷயங்களிலிருந்து ஏதோ ஒரு வகையில் கோர்வைப்படுத்த முடிந்தாலும் பல விஷயங்கள் புரிபடாமல் யூக வெளியில் தன்னை வந்து அழைத்துச் செல்வதாக தோன்றியது.

மலைமேல் இருக்கும் ஒரு அருவியைக் காண எண்ணி இருவரும் எழுந்து நடந்தனர். சிகரெட் பற்ற வைத்துக் கொண்டனர். சாலைக்குச் சென்று அங்கிருந்து பிரியும் மலைப் பாதையில் செல்ல வேண்டும். ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது பாழடைந்த ஒரு தேரின் அருகே தரையில் அலங்கோலமான ஆடைகளுடன் இளவயதுப்பெண் அமர்ந்திருந்தாள். தலையில் கலர் காகிதங்களை பூப் போலச் சொருகியிருந்தாள். அவனுக்கு தன் மனதில் அவள் உருவம் ஓர் இடம்பிடிக்க முயல்வதாகத் தோன்றியது. இவன் உதற, உதற அவள் உருவம் தடுமாற்றமின்றி சகஜமாக நுழைவதாகத் தோன்றியது. நண்பர் அந்தப் பெண்ணை கவனித்திருந்தாரா என்பதும், அவனுக்குத் தெரியவில்லை. அவரிடம் விசாரித்தால் அப்போதுதான் அவர் கவனத்துக்கே வருவதாக இருக்குமோ என்று தோன்றியதால் அவன் மெளனமாகவே நடந்து வந்தான். மலைப் பாதையின் இருபுறமும் உயரமான மரங்கள் வினோதமான வடிவங்களில் இருந்தன. சம தளமற்ற பிரதேசங்களில் இஷ்டத்திற்கு அழகாக வளர்ந்திருந்தன.மரங்களினூடே ஒரு பெண் மறைந்திருந்து தோன்றினால் நன்றாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. மற்ற ஆண்களின் வாழ்க்கையும் இவ்விதமாகவே இருக்குமோ என்ற சம்சமயமும் அவனுக்குத் தோன்றியது. பின்னோக்கிப் பார்க்கையில் இரண்டு பெண்கள் வலை விரித்துத் தான் சிக்கிக் கொண்டதை நினைவு கூர்ந்தான். அவள்கூட ஒரு தடவை ''நீங்கள் என்னிடம் சிக்கிவிட்டீர்கள்'' என்ற தன்னிச்சையாக கூறியிருந்தாள். ஆனால் தற்போதுள்ள மனோரீதியான உறவு இதையெல்லாம் பொருட்படுத்த இயலாத வகையில் மிகவும் சீரியசாக வளர்ந்துவிட்டது. பால்ய காலத்தின் தன் மனம் தன்னிச்சையாக நாடிய ஒரு பெண்ணுக்கும், தனக்கும் ஸ்தூலமாய் உறவு ஏதும் நிகழவில்லை என்பதை அவன் இப்போது நினைத்துக் கொண்டான். அப்பெண்ணிடம் தன் மனம் கொண்டிருந்த உறவு களங்கமற்றது என்று தோன்றிய அதே நேரத்தில், தான் அப்போது ஒரு அப்பாவி என்றும் தோன்றியது. மரங்களினூடே அப்பெண்ணின் முகம் தெரியுமானால் சந்தோஷமாக இருக்குமென்று அவன் நினைத்துக் கொண்டான். இந்த எண்ணம் தோன்றியவுடன் தேர் அருகில் பார்த்த பெண்ணின் முகம் மரங்களினூடே தோன்றி மறைந்தது.

எதிரே வந்த ஒரு குடும்பத்தினர் அவர்களைக் கடக்க சென்றபோது 'டி.வி. மகாபாரதம்' என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன. ''இது டி.வியில் மகாபாரதம் திரையிடும் நேரமா?'' என்று நண்பரிடம் கேடடான். நண்பர் வாட்சைப் பார்த்துவிட்டு ''ஆமாம்'' என்றார். அதைத் தொடர்ந்து சிந்தனையில் திடீரென்று அவனுக்கு ஒன்று தோன்றியது. அது அவனுக்குப் புதிதாகவும் இந்த இடத்தில் வந்ததிலிருந்து இதுவரை தோன்றாத விஷயமாகவும் தோன்றியது. எப்படி தனக்குத் தோன்றாமல் போனது என்று ஆச்சரியம் அடைந்தான். விரித்த கூந்தல் தொந்தரவு தருவதற்கான காரணம் விளங்கிவிட்டது போலவும் தோன்றியது. திரெளபதியின் விரித்த கூந்தல் நினைவுக்கு வந்ததே, அவன் தெளிவுக்கு காரணம். ஓர் ஆஸ்திரேலியருக்கோ, ஓர் அமெரிக்கருக்கோ விரிந்த கூந்தல் இவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அவனுக்குத் தோன்றியது. இந்திய மரபின் பின்னணியில் தன்னையறியாது நம் மனதில் விரிந்த கூந்தல் தொந்தரவு ஏற்படுத்தியது போலும் என்று அவன் நினத்துக் கொண்டான்.

தற்போது தன் மனம் லேசாகிவிட்டது போல் அவனுக்குத் தோன்றியது. உற்சாகத்துடன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு நடந்தான். அவனும் நண்பரும் ஏதேதோ அளவளாவிக் கொண்டு அருவியை அடைந்தனர். சுற்றிலும் உயரமான மரங்கள் அமைந்திருந்த ஒரு பெரிய பாறையின் தலையிலிருந்து நீர் விழுந்து பாறைகளினூடே ஓடையாக ஓடிக் கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக மூன்று நான்கு குடும்பத்தினர் குளித்துக் கொண்டிருந்தார்கள். பெண்களின் விரிந்த கூந்தலை சாதாரணமாகப் பார்த்துக் கொண்ருந்தான். நண்பர் குளித்து முடித்து ஆடையணிந்த சற்று நேரத்தில் பசி எடுக்கவே இருவரும் கீழே இறங்க ஆரம்பித்தனர்.

வழியில் சென்று கொண்டிருந்த இரண்டு விரிந்த கூந்தலை இருவரும் கடந்து சென்றனர். மலைப் பாதை முடிந்து சாலையை அடைந்தனர். சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, தேருக்கு எதிர்ப்புறம் உள்ள திருமண மண்டபத்திலிருந்து நாதஸ்வர இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் தேர்ப் பக்கம் பார்வையைச் செலுத்தினான். தேரின் அருகில் ஏற்கனவே இருந்த இடத்தில் அந்தப் பெண்ணைக் காணோம். நன்றாகப் பார்த்த போது பெரிய சக்கரங்களுக்கு இடையே தேரின் அடியில் அந்தப் பெண் காய்ந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு, ஒரு காலை மடித்து, மறுகாலை குத்துக் காலிட்டு மணமகள் போல் அமர்ந்திருந்ததைக் கண்டான். சாலையில் தென்பட்ட பெண்களின் விரிந்த கூந்தல் அவனுக்கு இப்போது பயத்தை ஏற்படுத்தியது.

நன்றி அழியாச் சுடர்கள்

அந்த முகம் - சுரேஷ்குமார் இந்திரஜித்

'டா சொன்னியா இல்லியா..இன்னுமா கொண்டாரான் ? ' என்று அதட்டலாகக் கரியமால் கேட்டுக் கொண்டிருந்த போது ஒரு பையன் டாயுடன் அறை வாசலில் தோன்றினான். சலாமடித்து அவர் முன் டாயை வைத்து, சலாமடித்துச் சென்றான். டாயை எடுத்து உறிஞ்சினார், கரியமால்.

'கூட்டி வந்துட்டேன் ' என்று உள்ளே நுழைந்த 747 சொன்னான். கரியமால் கூர்ந்து பார்த்தார். மலங்க விழித்துக் கொண்டு நின்றிருந்தாள். மூக்குத்தி இரண்டு மூக்கிலும் இருந்தது. தலை முடியை முடிந்திருந்தாள். வயது முப்பதை நெருங்கிக் கொண்டிருக்கும். கறுப்பு நிறம். பிசுக்கேறிய கயிறு கழுத்தில் கிடந்தது. கரியமாலின் கண்கள் அவளின் மேலாடையைத் துளைத்தன. 747-யைப் பார்த்து 'கொண்டு வா அவனை ' என்றார்.

கைகள் முதுகுப் புறமாக விலங்கிடப் பட்டிருந்த ஒருவனை இழுத்து வந்தனர். அவன் ஜட்டியுடன் இருந்தான். அவனைப் பார்த்தவுடன் வந்திருந்தவள் கதறி அழுதாள். கரியமால் அவளைத் தோளைப் பிடித்துத் தள்ளி சுவரோரத்தில் போய் உட்காருமாறு அதட்டினார். 'கையைக் கட்டி வாயைப் பொத்து ' என்றார். அவள் பேசாமலிருந்தாள். 'என்ன .. சொன்னா செய்ய மாட்டியா ? ' என்றதும் பயந்து போய் மாணவியைப் போல் கையைக் கட்டி வாய் பொத்தி சுவரோரமாய் உட்கார்ந்தாள்.

கரியமால் 'அடிங்க ' என்றார். இருவர் விலங்கிடப்பட்டவனை கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே அடித்தனர். கரியமால் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவள் முகத்தில் தெரிந்த பீதி அவருக்குக் கிளர்ச்சியைத் தந்தது. அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.

'இவன் பொண்டாட்டி கையாலே அடி வாங்கினாத்தான் திருந்துவான். ' என்றார். மீண்டும் அவளைப் பார்த்து இங்கே வா என்றார். அவள் குழம்பிய படியே பயந்து கொண்டு வந்தாள். நாற்காலியில் சாய்த்து வைத்திருந்த லத்தியை எடுத்து நீட்டினார். 'அவனுக்கு அடி கொடு ' என்றார். அவள் தயங்கி புரியாதவளாக நின்று கொண்டிருந்தாள்.

'ஓம் புருஷனைக் கூட்டிகிட்டுப் போகணும்னு நெனைக்கிறியா இல்லையா ? ' என்றார். அவள் 'ஆமாம் ' என்று தலையசைத்தாள். 'அப்ப அடி கொடு ' என்று அதட்டினார். 'நான் எப்படி சாமி.. ' என்று ஆரம்பித்தவள் அவர் முகத்தைக் கண்டு பயந்து லத்தியை வாங்கிக் கொண்டாள்.

'இப்படியா அடிக்கிறது. ஓங்கி அடி..இன்னும் ஓங்கி.... ' என்றார், கரியமால். அவன் கைகளினால் தன்னிச்சையாகத் தடுக்க முயன்று கொண்டிருக்க அவள் அடித்துக் கொண்டிருந்தாள். கரியமாலின் கண்கள் இக்காட்சியைக் கண்டு மின்னியது.

கரியமால் ஆட்டோவில் ஏறி ஜெயந்தி நகருக்குப் போகச் சொன்னார். அங்கு அம்பாசடர் கார் நிறுத்தப் பட்டிருந்த ஒரு வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தச் சொல்லி வீட்டினுள் நுழைந்தார். வேலையாள் அவரை மரியாதையுடன் உட்காரச் சொல்லி விட்டு உள்ளே சென்றான். சற்று நேரத்தில் ஆஜானுபாகுவான ஒருவர் தோன்றி கரியமாலை வரவேற்றார்.

'நானே வரணும்னு இருந்தேன். ஊர்லேயிருந்து இன்னைக்கி காலேதான் வந்தேன். ' என்றார்.

'அதனாலென்ன, ஒங்கள்ட்டேதான் எப்பவும் வாங்கிக்கலாமே ' என்றார் கரியமால்.

வேலையாள் குளிர்பானம் கொண்டு வந்து கொடுத்தான். குளிர் பானத்தை உறிஞ்சிக்கொண்டே 'பார்ட்டி வச்சு நாளாச்சு ' என்றார் கரியமால். 'ஒண்ணும் தாக்கல் இல்லையேன்னு பர்த்தேன் ' என்றார் விட்டிலிருந்தவர். 'நாளக்கி ஃபிக்ஸ் பண்ணினா நல்லது ' என்றார் கரியமால். 'நாளைக்கா ? யார் இருக்கான்னு தெரியலை, ஸார் கோபிச்சுக்கக் கூடாது. சிகரெட்லே சுடறதா சொல்லுதுகள்... . . ' என்று தயங்கினார். 'அது எதோ போதையிலே , சும்மா ஜாலிக்கி ஏதாவது நடந்திருக்கும், அது பார்த்துக்கலாம் ' என்றார் கரியமால். 'நாளக்கி சிரமப் படும் போல இருக்கே ' என்றார் வீட்டிலிருந்தவர். 'ஒங்களாலே முடியாதா... நீங்க எவ்வளவு பெரிய ஆள் ', என்றார் கரியமால். 'சரி .. நாளக்கி சாயந்திரம் ஹோட்டலுக்கு வந்திருங்க, ரிசப்ஷனிலே சொல்லிடறேன் பார்த்து நடந்துக்கங்க ' என்றார் வீட்டிலிருந்தவர். கரியமால் எழுந்தார். ' கொஞ்சம் இருங்க. கவர் வாங்கிக்கறீங்களா ? ' என்றார் வீட்டிலிருந்தவர். 'நாளக்கி ரிசப்ஷனிலே வாங்கிக்கிறேனே ' என்று கரியமால் விடை பெற்றுக் கொண்டார்.

வீட்டுக்கதவை வேலைக்காரச் சிறுமிதான் திறந்தாள். அவர் உள்ளே நுழைந்ததும் படுக்கையிலிருந்து எழுந்து அவர் மனைவி வந்தாள். அவள் ஆடைகள், தலைமுடி கலைந்த தோற்றத்துடன் இருந்தாள். அவள் நடந்து வந்த விதத்திலேயே தளுக்கு இருப்பதாகத் தோன்றி அவருக்கு எரிச்சல் ஏற்பட்டது. 'சாப்பிடுறீங்களா ' என்றாள், அவள். அவர் 'ம் .. ..ம்.. .. ' என்ற படி அறைக்குள் ஆடை மாற்றிக் கொள்ளச் சென்றாள்.

கரியமாலின் முதல் மனைவி திருமணமாகி சில காலத்திலேயே அவள் வீட்டிற்குச் சென்று விட்டாள். அதற்குப் பிறகு சுபத்திராவைத் திருமணம் செய்து கொண்டார். அவளிடம் அவளுக்குத் தெரிந்த தளுக்கு தான் அவரைப் பாடாய்ப் படுத்தியது. இப்போது சமயங்களில் அவருக்கு எரிச்சல் ஏற்படுகிறது. சுபத்திராவிடம் அவர், ஆசைக் கிழத்தியுடன் கொண்டிருக்கும் மனோநிலையைக் கொண்டிருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை.

அவளை அவர் குடிக்கப் பழக்கியிருந்தார். போதையில் அவளுடைய வேட்கை வெளிப் படும் ஆவேசம் அவருக்குப் பிடித்திருந்தது. சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் டேபிளருகே நின்று கொண்டிருந்த அவளைப் பார்த்தார். அவளின் தேகம் அவருக்குக் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அவளுடைய வேட்கைக்கு உட்பட வேண்டும் என்று நினைத்தார். அவள் உபயோகித்திருந்த வாசனைத் திரவியம் அவர் நாசியைத் தாக்கிக் கொண்டிருந்தது. சாப்பிட்டு முடிந்து எழுந்து கை கழுவினார்.

கரியமாலின் உடல் சக்தியிழந்து கிடந்தது. வலது கையைத் தூக்க முயன்றார். முடியவில்லை. உடல் அவர் இச்சைக்கு உட்படாது கிடக்க, அதன் மேல் பெண்கள் சிறு உருவத்துடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலான பெண்கள் மூக்குத்தி ஒளிரும் கிராமப் பெண்களாக இருந்தனர். வலது கையில் ஒரு பெண் விறகுக் கட்டை இறக்கி வைத்து விட்டு வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தாள். இழுத்துச் செருகிய சேலைக்கட்டுடன் ஒரு பெண் அவர் தோள் பட்டையில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அவர் காலில் ஒரு பெண் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

பார்க்க வருபவர்களிடம் சுபத்திரா பேசும் பாவனைகளையும் , அவள் அணியும் ஆடைகளையும் அவர் பார்வை ஊடுருவிக் கொண்டிருக்க அவள் தொலைதூரம் சென்றுகொண்டிருந்தாள். கரியமாலாக அவர் உருவாகிய வரையிலான ரூபங்கள் வரிசைகளை மறந்து தோன்றி மறைந்துகொண்டிருக்க மருத்துவர் ஒருவர் இடையிடையே வந்து கொண்டிருந்தார்.

சுபத்திரா மேலாடைகளற்று தோன்றினாள். அவள் மார்புகளில் சிகரெட் நெருப்பினால் சுட்ட வடுக்கள் இருந்தன. சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கும் வேசிகள் தோன்றி அவர் முகத்தில் புகையை ஊதினர். சிகரெட்களினால் அவர் நெஞ்சைச் சுட வந்தனர்.சில பெண்கள் தோன்றுவதைக் கண்டதும் அவர் ஓட்டமெடுத்தார். அவர்கள் துரத்திக் கொண்டிருந்தனர். அவர் சாலையில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தார். கேட்டைத் தாண்டி ஒரு வீட்டிற்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டார். இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டிருந்தது. வீட்டிற்குள் யாருமே தென்படவில்லை. 'வீட்ல யாரு ? ' என்று குரல் கொடுத்தவாறு ஹாலில் நின்றார். ஒரு அறைக் கதவைத் திறந்து நுழைந்தபோது அவருக்குப் பின் தோற்றம் தெரிய ஜன்னல் வழியாகப் பார்த்த வாறு ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் திரும்பினால் அதிர்ச்சியூட்டும் படியாக ஏதாவது நடக்கும் என்று பயந்து அறையை விட்டு வெளியேற முயன்றார். அறைக்கதவு தானாகவே மூடிக் கொண்டது. அவள் திரும்பும் போது தனக்கு அழிவு ஏற்பட்டு விடும் என்று அவருக்குத் தோன்றியது.

மூச்சு முட்டுவது போல் இருந்தது. தொண்டையில் ஏதோ அடைப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. பெண்ணீன் பின் தோற்றம் தெரிந்தது. அவர் எதிர் பார்த்த அந்த முகம் கோரைப் பற்களுடன் பயங்கரமாக மாறியிருக்கும் என்று தோன்றியது. அவள் திரும்பும் போது தனக்கு மரணம் சம்பவிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று தோண்றியது. அவர் 'திரும்பாதே ' என்று கத்த முயன்றார். கத்துவதாக நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் குரல் வரவில்லை. குரல் வராமலேயே அவர் கத்த முயன்று கொண்டிருந்தார்.

(காலச் சுவடு - ஏப்ரல் சூன் 1995)

சுழலும் மின் விசிறி - சுரேஷ்குமார இந்திரஜித்

அஞ்சலையின் மனம் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவள் வேலை செய்யும் வீட்டையடைய நடந்து கொண்டிருந்தாள். வெயில் இன்னும் சரியாக வரவில்லை என்ற போதிலும் அவளுக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. யாரும் இல்லாத வேளையில் இப்போது தான் முதன் முறையாக வீட்டில் இருக்கப் போகிறாள். இன்று ஊருக்குப் போய்விட்டு இரவு வந்து விடுவதாகவும், எதிர் வீட்டில் கொடுத்திருக்கும் சாவியை வாங்கி வீட்டைத்திறந்து வழக்கமான வேலைகளைச் செய்து முடித்து சாவியைக் கொடுத்து விட்டுப் போய்விட வேண்டுமென்றும், வாழ்க்கைக்கு நம்பிக்கை தானே அவசியம் என்றும் மற்ற வீட்டுக் காரர்களைப் போல் தாங்கள் இல்லையென்றும் அவளின் எஜமானி நேற்று சொல்லியிருந்தாள்.

வீட்டுக்காரர்கள் இல்லாத வீட்டைப் பற்றிய நினைப்பு, அவளுக்கு ஆனந்தத்தை அடையப் போகும் போது ஏற்படும் மனப் படபடப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. வீடு காதலனாய் மாறி நின்று அழைத்தது. வீட்டை நெருங்க நெருங்க மனப் பட படப்பு கூடுவது போலிருந்தது. திடாரென அவளுக்கு வேறொன்று தோன்றியது. வீட்டிலுள்ளோர் ஏதாவதொரு பொருளைத் தொலைத்துவிட்டு , காணாமல் போனதற்கு தானே காரணம் என்று கூறும் சந்தர்ப்பத்தினை ஆளில்லாத வீடு உருவாக்கி விடுமோ என்று சந்தேகம் தோன்றியது. இந்தச் சந்தேகம் ஒருபுறம் ஆனந்தத்தைக் குலைக்க ஆரம்பித்தது. ஆனந்தம் வாயைத்திறக்க சந்தேகம் அதன் வயிற்றுக்குள் சென்று அமர்ந்து கொண்டது. ஆனந்தம் அவளைத் தொற்றிக்கொள்ள அவள் நடந்து கொண்டிருந்தாள்.

பார்வைக்குத் தெரிந்த வீடு அவளை வா வா என்று கட்டியணைக்கத் துடிப்பது போல் நின்று கொண்டிருந்தது. வீட்டின் தோற்றம் புதிய பொலிவுடன் இருந்தது. வீடு அளவுக்கு அவள் வளர்ந்து வீட்டின் தோள் மீது கை போட்டு நின்றாள். வீடு வெட்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தது.

எதிர் வீட்டின் முன் போய் நின்றாள். வீட்டிலிருந்து வந்த வாலிபன் ஒருவன் கேள்விக்குறியோடு அவளைப் பார்க்க , அவள் தான் எதிர் வீட்டு வேலைக்காரி என்றும் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்றும் கூறினாள். அவன் உள்ளே சென்றான். ஒரு பெண்மணி வந்தார். 'ரவி அம்மா சொல்லிட்டுப் போயிருக்காங்க. இந்தா சாவி, வேலையை முடிச்சுட்டுப் போறப்ப கொடுத்துட்டுப் போ என்ன தெரியுதா ? ' என்று சொல்லிக்கொண்டே சாவியைக் கொடுத்தார்.

சாவி கையில் ஜில்லென்று இருந்தது. ஆனந்தம் படபக்க வீட்டை நோக்கி எஜமானி போல் சென்று கொண்டிருந்தாள். கேட்டைத் திறக்கும் போது அவளிடம் அதிகாரம் எழுந்தது. வீட்டுக் கதவருகே திகைத்து நின்றாள். சற்றுத் தயங்கி பூட்டைத்திறந்து கதவைத் திறந்தாள். ஆள்களற்ற வீட்டின் மதர்ப்பின் மீது அவள் புது மணப் பெண் போலக் காலடி எடுத்து வைத்தாள். வீடு அதற்கு முன் அவள் அடைந்திராத அன்யோன்யத்தைத் தந்தது. சோபாவில் அமர்ந்தாள். கால் மேல் கால் போட்டு அமர்ந்து வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். வீடு தன் ஆளுகைகு வந்து விட்டது என்ற உணர்வு விகசித்தது. எழுந்து சென்று கதவைச் சார்த்தி உட்புறம் தாழிட்டாள். வீடு அவள் கட்டுப் பாட்டிற்குள் ஒடுங்கியது.

ஃப்ரிஜ்ஜைத் திறந்தாள். இவ்வளவு காலமும் அவள் கைப்பட ஃபிரிஜ்ஜைத் திறந்ததில்லை. எஜமானி ஃபிரிஜ்ஜைத் திறக்கும் போது பார்த்தது தான். ஃபிரிஜ்ஜினுள் முட்டை காய்கறிகள், பழங்கள், பழரச பாட்டில்கள் இருந்தன. சில மாத்திரைகளும் இருந்தன. முட்டையைத் தொட்டுப் பார்த்தாள். ஜில்லென்றிருந்தது. பழரச பாட்டிலைக் கையில் எடுத்தாள். ஃபிரிஜ்ஜைச் சாத்தினாள். பாட்டிலின் மூடியைத் திறந்து முகர்ந்து பார்த்தாள். ஒரு டம்ளரை எடுத்து அதில் சற்று ஊற்றி, பின் பிரிட்ஜைத் திறந்து பாட்டிலை எடுத்த இடத்தில் இருந்த நிலையில் வைத்தாள். டம்ளரில் ஊற்றிய பழரசத்தில் விரல் விட்டு, நாக்கில் வைத்து ருசி பார்த்தாள். பிறகு நினைவு வந்தவளாய் மீண்டும் ஃபிரிஜ்ஜைத் திறந்து குளிர்ந்த நீர் உள்ள பாட்டிலை எடுத்து நீர் ஊற்றி, மீண்டும் அதை ஃபிரிஜ்ஜில் வைத்து விட்டு , டம்ளரை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து சாவகாசமாக ருசித்துக் குடிக்களானாள். குடித்து விட்டு 'ரவி அம்மா இங்கே வா, இதைக் கழுவி வை.. ' என்றாள். பிறகு எழுந்து அவளே வாஷ் பேஸினில் கழுவி டம்ளரை சேலை முந்தானையால் துடைத்து, இருந்த இடத்தில் வைத்தாள்.

பூஜை அறை பூட்டப் பட்டிருந்தது. அதற்குள் உள்ள பீரோவில்தான் முக்கியப் பொருட்கள் இருக்கும் போலிருந்தது. அந்த அறையைப் பெருக்க அவளை அனுமதித்ததில்லை. அருகிலிருந்த படுக்கை அறைக்குள் அஞ்சலை நுழைந்தாள். கட்டில் மெத்தையில் விழுந்து புரண்டாள். எஜமானியின் சேலை, ரவிக்கை , உள்ளாடைகள் , நைட்டி தொங்கிகொண்டிருந்தன. அய்யாவின் ஆடைகளும் தொங்கிக் கொண்டிருந்தன. சற்று நேரம் படுத்திருந்தவள் எழுந்து பீரோவிலிருந்த கண்னாடியில் உருவத்தைப் பார்த்தாள்.

அய்யா டாஸெண்டானவர். ஆரவாரமில்லாதவர். அஞ்சலையை மரியாதையுடன் தான் அழைப்பார். எஜமானி இதற்கு நேர் மாறானவள். அஞ்சலைக்கு வாய்த்த புருஷனோ அவளை அடிப்பதன் மூலமே புருஷன் என்று உணர்ந்து கொண்டிருப்பவன். அய்யாவைப் போல் புருஷன் அமைந்திருந்தால் .. என்று கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குத் தோன்றியது.

எஜமானியின் நைட்டியைப் பார்த்தாள். ஆடைகளைக் களைந்து மனம் படபடக்க நைட்டியை அணிந்து கண்ணாடியில் பார்த்தாள். வாழ்வின் வெறுமை இந்நேரத்தில் அவளைக் கவ்வியது. அவசரமாக நைட்டியைக் களைந்து தன் ஆடைகளுக்கு மாறினாள். நைட்டியை இருந்த இடத்தில் வைத்தாள். நேரமாகி விட்டதென உணர்ந்து பரபரத்தாள். எஜமானியாக இருந்தவள், வேலைக்காரியாக மாறுவதில் மனம் ஒத்துழைக்க மறுக்க , வேறு வழியின்றி விளக்குமாரை எடுத்தாள். பெருக்கினாள். பாத்திரங்களைக் கழுவினாள். ஈடுபாடின்றி ஏதோ வேலை செய்தாள். நேரமாகிவிட்டதாகத் தோன்றியது.

வேலைகளை முடித்து சோபாவில் சாய்ந்து படுத்தாள். மின் விசிறி மேலே சுழன்று கொண்டிருந்தது. கண்களை மூடிக் கொண்டிருந்தாள். எஜமானி அஞ்சலையாக மாறி வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். கதவைத் திறந்து சூட் கேசுடன் அய்யா நுழைந்து கொண்டிருந்தார். கண்களைத் திறந்தாள். 'இதே போல் அடுத்து எப்போது வருவாய் ? ' என்று வீடு கேட்டது. பூட்டு சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை ஒரு தடவை நன்றாகப் பார்த்தாள். கதவைத் திறந்து வெளியே வந்து கதவைச் சாத்திப் பூட்டினாள். எதிர் வீட்டை நோக்கி நடந்தாள். மனம் வீரியமிழந்ததைப் போல் கிடந்தது. எதிர் வீட்டுப் பெண்மணியிடம் சாவியைக் கொடுத்து விட்டு நடந்தாள். முக்கிய சாலைகளிருந்து விலகி, குப்பைகளைத் தாண்டி , கத்திப் பேசும் மனிதர்களின் இரைச்சலினூடே தன் குடிசையை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். குடிசையை நோக்கிச் செல்லச் செல்ல அவள் உருவம் சிறுத்துக் குள்ளமாகிக் கொண்டே வந்தாள். குடிசை வாசலில் அவள் புருஷன் குத்துக் காலிட்டு பீடி புகைத்துக் கொண்டிருந்தான். திடாரென அவள் மனதில் பீதி ஏற்பட்டது. ஓடிக் கொண்டிருந்த மின் விசிறியை நிறுத்தாமல் வந்து விட்டோமோ என்ற சந்தேகம் அவள் மனதில் ஏற்பட்டிருந்தது. பீதி பரவ ஆரம்பித்தது.

***

மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்

TCX 6838 என்ற எண்ணுள்ள என் ஸ்கூட்டரில் விருமாண்டியைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தேன். சாலையின் இருபுறமும் தென்னந்தோப்புகளும், வயல்வெளிகளும் மாறிமாறி வந்து கொண்டிருந்தன. விருமாண்டி என் நண்பன். ஓடும் ஆற்றின் கரைகளில் விருமாண்டித்தேவர் குடும்பத்திற்குச் சொந்தமான தென்னந்தோப்புகள் இருக்கின்றன. தென்னந்தோப்புக்குள் ஓர் அழகான வீடும் அவர்களுக்கு இருந்தது. அநேகமாக விருமாண்டி மட்டுமே அங்கு இருப்பான். அவன் குடும்பத்தினர் ஊருக்குள் குடியிருந்தனர். தென்னந்தோப்பு வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர்தொலைவில் ஒரு கள்ளுக்கடை அங்கே அயிரை மீன் குழம்பு கிடைக்கும். ஆற்றில் வெகு நேரம் குளித்துவிட்டு விருமாண்டியின் தோப்பு வீட்டில், வாங்கி வைத்திருந்த கள்ளைக் குடித்துவிட்டு அயிரை மீன் குழம்புச் சாப்பாடு முடித்துத் திரும்பி வருவது ஆனந்தமான அனுபவம்.


சாலையில் ஓர் உருவம் வண்டியை நிறுத்தும் சைகையுடன் கைநீட்டி நின்று கொண்டிருந்தது. சற்று அருகில் வந்ததும்தான் நின்றுகொண்டிருக்கும் உருவம் இந்திரஜித் என்று தெரிந்தது. ஸ்கூட்டரை நிறுத்தினேன். விருமாண்டியைப் பார்த்துவிட்டு வரும் வழியில் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பழுதடைந்து நின்று விட்டதாக இந்திரஜித் கூறினான். தற்செயலாக நான் வந்தது நல்லதாகப் போயிற்று என்றும், மெக்கானிக்கை எனது வண்டியில் போய் அழைத்து வருவதாகவும் கூறினான். ‘உன்னுடைய மோட்டார் சைக்கிளுக்கு நான் காவலா?’ என்று கேட்டேன். ‘அந்த மோட்டார் சைக்கிளை எவனும் எடுத்துச் செல்ல முடியாது. அப்படி ஓர் கோளாறு. நீ இங்கு காத்திருக்க வேண்டாம். அதோ தெரிகிறதே ஓர் இடிந்த வீடு அதுவரை நடந்து சென்றுவிட்டு வா. பொழுது போகும்’ என்று கள் வாசனையடிக்க கூறினான் இந்திரஜித். ‘எதற்கு அங்கே போக வேண்டும்?’ என்று நான் கேட்டதற்கு, ‘போய்ப் பார் தெரியும்’ என்றவாறே என் ஸ்கூட்டரை வாங்கிக் கொண்டான். அவன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் போது ஞாபகம் வந்தது. விருமாண்டி தோப்பு வீட்டில் இருக்கிறானா என்று கேட்டேன். விருமாண்டி, தென்னை மரங்களுக்கு உரம் வைக்கும் வேலையைச் செய்து கொண்டிருப்பதாகக் கூறிவிட்டு இந்திரஜித் கிளம்பினான். வயல் வெளியைப் பார்த்தேன். சற்று தூரத்தில் இடிந்த வீடு தெரிந்தது. அதை ஏன் பார்க்கச் சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை. போய்ப் பார்க்கலாம் என்று தோன்றியது. தென்னந்தோப்பையும், கதிர்கள் நிற்கும் வயல்களையும் கடந்து அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். நடக்க ஆரம்பித்தேன். தென்னந்தோப்பைத் தாண்டி வயல்வரப்புகளில் செல்லும் போது எனக்குத் தடுமாற்றமாக இருந்தது. இரண்டு பெரிய புளிய மரங்களும் இடிந்த வீடும் திடல் போன்று காணப்பட்ட அந்த இடத்தில் இருந்தன. ஆள் அரவமற்ற இடம். நான் இடிந்த வீட்டை நோட்டமிட்டுக் கொண்டே உள்ளே ஜாக்கிரதை உணர்வுடன் நுழைந்தேன்.


உடைந்து கிடந்த சுவர்களின் மீது ஏறி நின்று உள் அறையை நோக்கினேன். உத்திரம் ஒன்று குறுக்காக விழுந்து கிடந்திருந்தது. உள் அறையின் ஜன்னலைப் பார்த்ததும் எனக்குத் திகில் ஏற்பட்டது. துருப்பிடித்த ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நிலைத்த பார்வையுடன் ஒரு கிழ உருவம் நின்றுகொண்டிருந்தது. நிலைத்திருந்த கண்கள் அசைந்து என்னை நோக்கின. பைத்தியம் போல எனக்குத் தோன்றியது. உள் அறையின் வாசலில் கிடந்த செங்கற் குவியலின் மீது ஏறி நின்று அந்தக் கிழ உருவம் என்னை நோக்கியது. குளித்துப் பல காலம் ஆகியிருக்கும் போல அப்படி ஓர் அழுக்குத் தோற்றம். அடர்ந்த வெள்ளைத் தாடி, மீசை, தலை முடிகளுக்கிடையே கண்கள் அசைந்து கொண்டிருந்தன.


கிழவன் என்னை நோக்கிக் கேட்டான். ’நீ யார்?’ நான் என் பெயரைச் சொன்னேன். ‘நீ வெள்ளைக்காரன் உளவாளியா? உண்மையைச் சொல், யார் நீ?’ என்றான் கிழவன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘எந்த வெள்ளைக்காரன்?’ என்றேன். ‘எந்த வெள்ளைக்காரனா? அன்னியனை ஒப்புக் கொண்ட துரோகியா நீ?’ என்றான் கிழவன். ‘அன்னியன் போனது உங்களுக்குத் தெரியாதா?’ என்றேன். கிழவன் என்னைச் சற்றுநேரம் உற்றுப் பார்த்தான். ‘அப்படித்தான் சிலர் சொல்கிறார்கள். ஆனாலும் நம்புவதுதான் சிரமமாக இருக்கிறது. நம்பி வெளியே வந்தால் திரும்பவும் சூடு வைத்து விடுவார்களோ என்றுதான் இப்படித் திரிந்துகொண்டிருக்கிறேன். அன்னியர்களின் சூழ்ச்சியையும், தாட்சண்யமற்ற தன்மையையும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். அதனால்தான் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.’ என்றான் அவன்.


‘நீங்கள் எவ்வளவு காலமாக மறைந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘பல வருடங்கள் ஆனது போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியவை அந்தப் பத்து நாட்களும்!’ என்றான் கிழவன். ‘பத்து நாட்கள் என்பது என்ன கணக்கு?’ என்றேன். ‘பத்து நாட்கள் என்பது ஓர் யுகம்தான். 1942 ஆகஸ்டு 18-ந்தேதி பிடிபட்டு, ஒரு பத்து நாட்களைப் பல வருடங்களாகக் கழித்தேன். பத்து நாட்கள் என்பது பல காலம் ஆன மாதிரி, பல காலம் பத்து நாட்களாக நீண்டு கொண்டே செல்கின்றது. பத்து நாட்களிலும் நான் நரக வேதனையில் இருந்தேன் என்பதை அறிய வேண்டும். என் நண்பர்களைச் சித்திரவதையில் இழந்தேன் - இதோ பார் சூடுபட்ட காயங்களை....’ என்று சட்டையைக் கழட்டி நெஞ்சையும் முதுகையும் காட்டினான். குறுக்கும் நெடுக்குமாகச் சூடுபட்ட வடுக்கள் குரூரமாகக் காட்சி தந்தன.


நான் கிழவனை அமரச் சொன்னேன். ‘நீங்கள் என்னைக் கண்டு அஞ்ச வேண்டாம். நான் உங்கள் நண்பன். நீங்கள் வெளியே வரலாம். அன்னியன் இங்கு இல்லை என்பதுதான் உண்மை’ என்றேன். ‘அன்னியன் இங்கு இல்லை என்றால் சுபாஷ் சந்திரபோஸ் வந்துவிட்டாரா? 1941 ஜனவரி 26-ந்தேதி வீட்டுச் சிறையிலிருந்து தப்பித்த போஸ் வந்து விட்டாரா? அவரிடமிருந்து கடிதம் கொண்டு வந்தால் நான் மறைவிலிருந்து வரலாம். திரிபுரா காஸ்கிரஸ் மாநாட்டில் நான் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். போஸ் அன்று கோபத்திலும் வருத்தத்திலும் இருந்தார். நான் மிகவும் கொந்தளித்துப் போயிருந்தேன். அவர் என்னைச் சமாதானப்படுத்தும் நோக்கில் பேசினார்.’ என்றான் கிழவன்.


நான், போஸ் இறந்துவிட்டதாகக் கூறப்படுவதைக் கூறலாமா என்று நினைத்து, பிறகு கூறாமல் பேச்சை மாற்றும் விதமாக, ’நீங்கள் எந்தக் கட்சியில் சேர்ந்திருந்தீர்கள்?’ என்று கேட்டேன். அதற்குக் கிழவன், நான், சங்கரய்யா, பெருமாள் ஆகியோர் நாராயணசாமி தலைமையில் இயங்கும் தலைமறைவு இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களாகச் சேர்ந்தோம். நீங்கள் பெயரைக் கேள்விப்பட்டிருக்கலாம்’ என்று சொல்லி ‘யுவபாரத்’ என்ற பெயரை ரகசியமாகச் சொன்னான். நான் அந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருப்பதாக ரகசியத்தைக் கேட்கும் பொறுப்பில் நானும் பாவனை செய்தேன்.


’குதிராம் போஸ் என்னைத் தனிப்பட்ட முறையில் கவர்ந்திருந்தார். அறுபத்து நான்கு நாட்கள் உண்ணாவிரதமிருந்து இறந்த ஜதீன் போஸ், சிட்டகாங் ராணுவத் தளவாடப் பாசறையைச் சூறையாடிய சூர்யா சென் ஆகியோர் எங்கள் அனைவரையும் ஈர்த்திருந்தார்கள். இவற்றையெல்லாம், ஏன் சொல்கிறேன் என்றால் நீண்டகாலமாகிவிட்ட பத்து நாட்களில் இவற்றையெல்லாம் பலர் மறந்திருக்கலாம். பலருக்குத் தெரியாமலேயே இருந்திருக்கலாம். பலருக்கு இட்டிலி தின்று கொண்டேயிருக்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டேயிருக்கும். வேறு விஷயங்கள் நினைவிலிருக்காது. யுவபாரத் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?’ என்றான் கிழவன். ‘தலைமறைவு இயக்கம் என்று நீங்கள் சொல்லும்போது அது பற்றி விபரங்கள் எனக்கு எப்படித் தெரியும். அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதைத்தான் நான் ஏற்கனவே கூறிவிட்டேனே’ என்றேன்.


'சொல்கிறேன். யுவபாரத் நாராயண சாமி தலைமையில் துவங்கியது. பெங்காலைச் சேர்ந்த அஜாய் போஸ் என்பவருக்கும் அவருக்குமிடையே தொடர்பு இருந்தது. நானும், என் நண்பர்கள் சங்கரய்யரும், பெருமாளும் அவரைத் தேவகோட்டையில் ஓரிடத்தில் ரகசியமாகச் சந்தித்தோம். எங்கள் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கை தொடர்ந்தது - நான் மிகுந்த துணிச்சல்காரன் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. காட்டுக்குள் போலீஸ் பட்டாளத்திடமிருந்து, சாமோன் ஆர்னால்டிடமிருந்து நான் மட்டும் தப்பித்து வந்தது மட்டுமே என் துணிச்சலைக் காண்பிக்காதா? அதுகூட தப்பு. அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். நாகனாறு பாலத்தை நாங்கள் வைத்த குண்டுதான் தகர்த்தது. சூப்பிரண்டு பெஞ்சமினைச் சங்கரய்யர்தான் சுட்டுக் கொன்றான். சங்கரய்யர் காங்கிரஸ் கட்சியிலும் இருந்துகொண்டு யுவபாரத்திலும் உறுப்பினராக இருந்தான். நாங்கள் ரகசியமாகக் கூடி ஒரு இடத்தில் மறைந்திருந்தபோது எங்களைப் போலீஸ் சுற்றிக் கொண்டது. பெருமாள் எல்லோரும் இறந்து விடலாமா என்று கேட்டான். பிறகு நாங்கள் கைதாகி நீதிமன்றத்தின் மூலம் சுதந்திர உணர்வை மக்களுக்கு உருவாக்கலாம் என்று நினைத்துக் கைதானோம். அது என்ன சந்தர்ப்பம் என்று தெரியுமல்லவா. காந்தி ஆகஸ்டு 8-ந்தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்திருந்தார். நாங்கள் 18-ந்தேதி கைதானோம். ஆனால், நாங்கள் போலீஸ் ஸ்டேசனுக்கோ நீதிமன்றத்திற்கோ கொண்டு செல்லப்படவில்லை. எங்கள் கண்களையும் கைகளையும் இறுகக் கட்டி அவிழ்த்தனர். காடு போலத் தோன்றியது. பிறகு கால்களில் விலங்கு போட்டனர். போலீஸ் அதிகாரி ஆர்னால்டு எங்கிருந்தோ வந்தான். அவன் வந்ததும், எங்களைத் தனித்தனியே மரத்தில் கட்டினர். அதற்கு முன் எங்கள் ஆடைகளை அவிழ்த்து விட்டனர். கையில் வைத்திருந்த லத்தியினால் முதலில் நாங்கள் பார்க்க, பெருமாளை அடித்தான். வலி பொறுக்க முடியாமல் பெருமாள் அலறியதை நாங்கள் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டுமிருந்தோம். கை ஓய்ந்ததும் சாவகாசமாகத் தண்ணீர் குடித்து ஓய்வெடுத்தான் ஆர்னால்டு. பெருமாளின் முகம், உடம்பெல்லாம் தடியினால் அடிபட்டு வீங்கிச் சிவந்திருந்தது. வலியில் முனகிக் கொண்டிருந்தான். ஓய்வெடுத்த பின் சங்கரய்யரை அடித்தான். என்னை அடிக்கும் முறை வருவதற்குள் நான் இறந்துவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இறக்கவில்லை. சங்கரய்யரை அடித்து ஓய்வெடுத்த பின் என்னருகே வந்து என்னை அடித்தான். அதைப் போன்றதொரு இம்சையை உங்களால் கற்பனை பண்ண முடியாது. வலியை அனுபவிக்காமல் இறந்துவிட வேண்டும் என்று மனம் விரும்பியது. வலியில் உயிர் துடித்தது. அப்படியே எங்களை விட்டுவிட்டு ஆர்னால்டும் அவரது பட்டாளமும் சென்றுவிட்டன. வலியில் எங்களுக்குப் பேசுவது கூட இயலாத காரியமாகிவிட்டது. பசி கொன்று கொண்டிருந்தது. நா வறட்சியில் தொண்டை தவித்துக் கொண்டிருந்தது. இரவு முழுக்கக் குளிர் பயங்கரமாகத் தாக்கியது. ஏதேதோ பூச்சிகள் உடம்பில் ஊர்ந்தன. உயிர் சீக்கிரம் போக வேண்டும் என்பதே பிரார்த்தனையாக இருந்தது. சூடு வாங்கித்தான் ஆக வேண்டும் என்று இருக்கும் போது என்ன செய்வது? அடுத்த நாள் ஆர்னால்டு பட்டாளத்துடன் வந்தான். சாவகாசமாக சிகரெட் பிடித்துக் கொண்டே நெருப்பை உருவாக்கச் சொன்னான். கையோடு கொண்டு வந்திருந்த இரும்புக் கம்பியை அதில் பழுக்கக் காய்ச்சச் சொன்னான். அவன் காரியம் எல்லாம் பதற்றமின்றி நிதானமாக இருந்தது. ஆத்திரப்பட்டோ, ஆவேசம் கொண்டோ காரியம் செய்யவில்லை. மிகவும் நிதானமாக காய்ச்சிய இரும்புக் கம்பியை எடுத்து வந்து சங்கரய்யரின் உடம்பில் இழுத்தான். கடைசியாக சங்கரய்யரின் வயிற்றில் குத்தினான். ஓர் அலறலில் சங்கரய்யரின் கழுத்து சாய்ந்தது. உயிர் போக வேண்டும் என்று என்னையறியாது அவசரமாகவும் வேகமாகவும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். ஆர்னால்டு கம்பியை நெருப்பில் காய்ச்சக் கொடுத்துவிட்டு,  ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். பிறகு சாவகாசமாக எழுந்து, அதை எடுத்து பெருமாளின் வயிற்றில் மாறி மாறிச் சொருகினான். அதற்குப் பிறகு கம்பியைக் காய்ச்சக் கொடுத்துவிட்டு ஓய்வெடுத்தான். பின் கம்பியை வாங்கிக்கொண்டு என்னை நோக்கி வந்தான். அவன் முகத்தில் அப்படி ஓர் அமைதி தவழ்ந்தது. என் உயிர் எழுந்து அவன் குரல்வளையை நோக்கிப் பாய்ந்தது. பிறகு சூன்யத்திற்குள் உயிர் சுருண்டது. கம்பியின் இழுப்பில் அலறினேன். உடம்பெல்லாம் எரிந்தது. சாவகாசமாகக் கம்பியினால் என் உடலில் கோடுகள் வரைவது போல் இழுத்தான். உயிர் அலறித் துடித்தது. சற்று நேரத்தில் கோடுகள் வரைவது நின்றது. கண்களைத் திறந்தேன். சாவகாசமாக சிகரெட் பிடித்துக்கொண்டு ஆர்னால்டு நின்றிருந்தான். பின் சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டுத் தன் பட்டாளத்துடன் வாகனத்தில் சென்றுவிட்டான். என்னை ஏன் கொல்லாமல் விட்டுச் சென்றான் என்று தெரியவில்லை. நினைவுகள் மங்கிக் கொண்டிருந்தன. உயிர் சாகத் துடித்துக் கொண்டிருந்தது. யாரோ போலீஸ்காரர் வெள்ளையாக இருந்தார். வானத்திலிருந்து வந்த வெள்ளைப் போலீஸா அல்லது இயேசுநாதரா என்று தெரியவில்லை. என் கட்டுகளை அவிழ்த்தார். என் கால் விலங்குகளை உடைத்தார். மடியில் கிடத்தி, வாயில் நீரூற்றினார். மருந்து போட்டார். என் காதருகே பிராயச்சித்தம் என்றார். போர்வையால் போர்த்தினார். வானத்தில் பறந்து மறைந்து சென்றார். பிறகு தோன்றினார். எனக்கு உணவூட்டினார். மறைந்தார். தோன்றினார். ஒரு நாள் மறைந்தே விட்டார். ரணத்தோடு எழுந்தேன். வெகு தூரம் நடந்து, பிச்சை எடுத்து உண்டு, அந்தப் புதிய இடத்தில் ஓர் அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்ந்தேன். என்னை யாருக்கும் தெரியவில்லை. வானத்திலிருந்து வந்த வெள்ளைப் போலீஸ் அல்லது இயேசுநாதர் எனக்கு அப்படி ஓர் பாதுகாப்பை அளித்திருந்தார். அவரை என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ‘மறைந்திரு’ என்றார். நானும் மறைந்திருக்கிறேன். இன்னும் மறைந்துகொண்டேயிருக்கிறேன். சுதந்திரத் தாய் வெற்றி கொண்ட பின் வரலாம் என்றிருக்கிறேன்.’ கிழவன் பேச்சை முடித்துவிட்டு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.


பிறகு எழுந்து, ‘உன்னிடம் சொன்னதை யாரிடமும் சொல்லாதே. நான் மறையப் போகிறேன். யாரிடமும் சொல்லாதே’ என்று எழுந்து என்னைப் பார்த்து மலங்கலாக விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு  ‘வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு வயல்களினூடே ஓடி, பார்வையிலிருந்து மறைந்தான்.


நான் திகைத்து நின்றிருந்தேன். கண்டதெல்லாம் கனவா அல்லது நினைவா என்ற பிரமை ஏற்பட்டது. மனம் துயரமாக இருந்தது. சிந்தனையிலேயே தென்னந்தோப்பையும் வயல்வெளிகளையும் கடந்து சாலைக்கு வந்தேன். சாலையில் என் ஸ்கூட்டர் மட்டும் நின்றிருந்தது. சாவி ஸ்கூட்டரிலேயே இருந்தது. இந்திரஜித் என்னைச் சந்தித்ததும் என் ஸ்கூட்டரை வாங்கிச் சென்றதும் உண்மைதானா என்று சந்தேகம் ஏற்படும் படியாக ஸ்கூட்டர் சாவியுடன் நின்று கொண்டிருந்தது. சாலையில் ஒருவரும் இல்லை.


புதிய பார்வை, 16-30 ஜூன் 1993

பிரம்மாண்டம் - சுரேஷ்குமார இந்திரஜித்

எல்லாமே பிரம்மாண்டமாக இருந்தது. மன எழுச்சியில் பிரம்மாண்டத்தை உள்ளடக்கி இரண்டு நாட்களாக கலை நிகழ்ச்சிக் கொண்டிருக்கிறார்கள் அரங்கில். நான், வெண்புரவியாய் மாறி சைக்கிளில் வந்திரங்கினேன். கட்டிடத்தின் பிரம்மாண்டம் என்னை ஈர்த்தது. வாசலில் பளிங்குத்தரையில் நின்றிருந்த வேளை, காற்று உற்சாகத்தைத் தூண்டும்படியாக , பிரம்மாண்ட கட்டிடத்தை எதிர்கொள்ளும் முறையில் வீசியது. காற்றில் குதூகலித்த, புல்லாங்குழல் இசையில் என் சிந்தை சென்றது. புல்லாங்குழல் இசை தன் இடத்தை நோக்கி என்னை இழுத்துச் சென்றது. மாடிப்படிகளின் வழியே நான் ஓடினேன். இசையின் இடத்தை நெருங்கி விட்டேன். அறை வாசலில் நிதானித்து உள்ளே பார்த்தேன். இருள்வெளியை தன் இயற்கையகக் கொண்டிருந்தவன், ஆற்றலை இசையாக்கிக் கொண்டிருந்தான். இருள்வெளி குதூகலித்துக் கொண்டிருக்கவேண்டும். எதிரே ஒரு பெண். ஆனந்த பைரவி. நான் ஏற்படுத்திய சலனத்தில், திரும்பி என்னைப் பார்த்தாள். ராகமே அவளென வடிவெடுத்திருந்தாள்; உற்சாக வெளியில் நான். வாசிப்பவனின் வலப்பக்கத்தில் அவன் பின்னே சென்று அமர்ந்தேன். அவளைப் பார்க்க என்னால் இயலாது என்று தோன்றியது. என் நலன் கருதிய விசித்திர சக்தியொன்று பெரிய நிலைக்கண்ணாடியொன்றை வாசிப்பவனின் இடப்பக்கச் சுவரையொட்டி வைத்திருந்தது. கண்ணாடியில் அவள். இரண்டு டியூப் லைட்டுகளின் வெளிச்சத்தில் கண்ணாடி மின்னியது. மின்னும் கண்ணாடிக்குள் ராகமென அவள்.

இருளில் வாசிப்பவன், இசையை முடித்து, புல்லாங்குழலை வைத்துவிட்டுக் கைகளினால் தரையைத் தடவி அதைக்காட்டிலும் பெரிய புல்லாங்குழலை எடுத்து வைத்துக்கொண்டான். ராகமென நின்றிருந்தவள் ஒரு பாடலை வாசிக்கச் சொன்னாள். இருள்வெளி மீண்டும் குதூகலித்தது. கானடா. மின்னும் கண்ணாடியில் அவள். கண்ணாடிக்குள் நான் நுழைந்தேன். எங்கும் அவள் பிம்பமெனக் கண்ணாடி ஜொலித்தது. இசை அவளின் முழங்கையாக, பின் விரல்களுமாக மாறியது. பாறைகளில் வெண்மையாய் சிதறிக்கொண்டு நதி பாய்ந்து வருகிறது. பசும்புல்வெளி எங்கும் படர்ந்தது. அவள் கைகள் கண்ணாடியுள். திரும்பும் திசையங்கும் அவளின் மின்னும் கண்ணாடி பிம்பங்கள்.

கண்ணாடியுள்ளே, அவள் என்னைப் பார்த்துவிட்டால், நான் அதைத் தாங்க இயலாது நொய்ந்து விடுவேன் என்றும் தோன்றியது. கண்ணாடியின் ஜொலிப்பில் கண்கள் கூசின. அவளின் மின்னும் கண்ணாடி பிம்பங்கள் என்னைச் சுற்றிச் சுழன்றன. இசையின் ஒரு கட்டத்தில் அவள் கண்களை மூடினாள். அவள் சிந்தையெங்கும் இசையே ஆனதான பிரகாசத்தை முகம் கொண்டது. மேக மண்டலம், பனிமலை, எங்கு நோக்கினும் பனி படர்ந்த குன்றுகள். சந்நதியின் முன்னே தோன்றுவது, அந்தப் பாவம். ஆஹா ஆஹா என்று கோஷமிட்டு தேவராட்டம் ஆடினர், மனிதர்கள். திரைவிலக சூத்ரதாரி கூத்தனாய் ஆடினான். அரங்கில் கேட்ட பாகேஸ்வரி இப்பாட்டிற்குள் ஊடுருவியது. கண்களைத் திறந்தாள். கண்கள் ஒளிர்ந்தன. பரவசத்தில் முகம் வசீகரம் கூடி பிரகாசித்தது. பாறைகள் முழங்கின.

மனிதர்கள் வினோத ஆடைகளுடன் ஒரு சேர ஒழுங்காக ஆடிக்கொண்டே பாடினர். மீண்டும் கண்ணாடிக்குள் நான். அவள் முகம். அவள் வடிவம். அவள் முழங்கை. அவள் விரல்கள். கண்ணாடியின் ஜொலிப்பு. ஆனந்த பைரவியும் அவளேல்; பாகேஸ்வரியும் அவளே; கானடாவும் அவளே. புலம்பாதே மனமே. அதீத கற்பனை வயப்படாதே. நான் கற்பனை வயப்படுவேன். குதூகலிப்பேன். இதுபோன்ற சந்தர்ப்பங்கள் எனக்கு அரிது. சிறு குருவியெனக் காற்றைக் கிழிப்பேன். கிளைகளில் அமருவேன். மரம் விட்டு மரம் பறப்பேன். ஸாக்ஸ்போனின் கல்யாண வசந்தமாக காற்றில் படர்வேன். இருளில் வாசிப்பவன், அந்த வாசிப்பை நிறுத்தினான்.

அவள் கூட வந்திருந்த மனிதர், கிளம்புவà
®¤à®±à¯à®•ு சமிக்ஞை காட்டினார். இருளில் வாசிப்பவனையும் சாப்பிட கூப்பிட ஆட்கள் வந்தனர். இக்குழப்பத்தில் அவள் அவனிடம் சொல்லிக்கொண்டு விடை பெற்றாள். மாயம் போல மறைந்தாள். கண்ணாடி வெறுமையாய் மின்னியது. சாப்பிடக் கூப்பிட வந்தவர்களை பொருட்படுத்தாது அவன் தேக்ஷை வாசிக்க ஆரம்பித்தான். நிர்ப்பந்ததால் நிறுத்திவிட்டுப் புல்லாங்குழலை உறையில் வைத்துவிட்டு, கழியைத் தேடினான். நான் அறையை விட்டு வெளியே வந்தேன். பிரம்மாண்டமான கட்டிடம். அதற்கேற்ற காற்று. ஒன்றிரண்டு நண்பர்களே நின்றிருந்தனர். விடைபெற்று என் வெண்புரவியில் ஏறி, முன்னால் சாக்கடை ஓடும் என் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அப்போது பிரம்மாண்டங்களை விழுங்கி இருள்வெளி விகசிக்க ஆரம்பித்தது.

***

கனவு எண் 11

***

சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் - சுரேஷ்குமார் இந்திரஜித்

நான் சிங்கப்பூரிலிருந்து, தாய்லாந்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதிர்ஷ்டவசமாக எனக்கு அடுத்த இருக்கையில் ஜப்பான் எழுத்தாளர் டோகுடோ ஷோனினைச் சந்தித்தேன். முதலில் அந்தப் பெயரை பார்த்ததும் 'சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும், என்ற நாவல் எழுதியிருந்த டோகுடோ ஷோனின் ஞாபகமே எனக்கு வந்தது. அதனால் அவரை விசாரித்து அவர்தான் இவர் என்று அறிந்து கொண்டேன். நான் விசாரித்தது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருப்பதை அவர் முகம் காட்டியது. 'நீங்கள் இந்தியாவா, ஸ்ரீலங்காவா ? ' என்று அவர் கேட்டார்.

ராபர்ட் அகஸ்ஸி மொழிபெயர்த்திருந்த அவரின் 'சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும் ' நாவல் என்னை மிகவும் ஈர்த்திருந்தது. ஒரு சிறுமியின் இயற்கையான அறிவுக்கூர்மையும் சிருஷ்டிகரமும் அவரின் பெற்றோர், சுற்றத்தார், பள்ளி ஆசிரியைகள் ஆகியோரினால் நாசமாக்கப்படுகின்றது என்பதை வெவ்வேறு கோணங்களில் அந்நாவலில் அவர் சித்தரித்திருக்கிறார். நாவலில் வரும் சிறுமிக்குப் பெயர் கிடையாது. அவள் மனம் இயற்கையாக கட்டமைக்கப்படுவதைச் சுற்றியுள்ளவர்கள் காலங்காலமாகச் சொல்லப்பட்டுவரும் கருத்துக்கள் ஆக்கிரமிப்பதையும், பள்ளிக்கூடங்கள் பயத்தை உருவாக்கி மதத்தைச் சாரும் மனத்தை உருவாக்குவதையும் ஆழமான பார்வையுடன் பார்த்திருந்தார். வீட்டின் பின்புறத்திலுள்ள நந்தவனத்தில் திரியும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் சிறுமிக்கும் உள்ள உறவை அவர் சித்தரிக்கும் இடங்களில் இயற்கையான கவித்துவம் வெளிப்பட்டிருந்தது.

நான் டோகுடோ ஷோனிடம் இந்த நாவலை சிலாகித்துப் பேசினேன். தான் எழுதிய நாவல்களில் பிடித்தமான நாவலாக இதைக் கருதுவதாகவும், ஆனால் பெரும்பாலோர் 'சுழலும் காலம் ' என்ற நாவலையெ முக்கியமானதாகச் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். அவர் எழுத்துத்துறைக்கு வந்த விதம் பற்றிக் கேட்டேன். அவர் கூறியதின் சுருக்கத்தைக் கூறுகிறேன்.

நான் எழுத்தாளர் யாசுனாரி கவாபாட்டாவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தேன். அதன் விளைவாக எழுத முற்பட்ட எனக்கு என் ஆசிரியர் கரஷமாவின் வழிகாட்டல் உதவியாக இருந்தது. அவர் மது அருந்தும் சந்தர்ப்பங்கள் என் விருப்பத்துக்குரியனவாக இருந்தது. அவருக்கும் தெரிந்த எந்த ஒரு விஷயம் பற்றியும் கூர்மையான பார்வையுடன் வித்தியாசமாகப் பேசுவார். நான் எழுதியிருந்த கதையை முதலில் அவரிடம் காட்டியதும், அவர் அதை படித்துவிட்டு 'இந்த கதையைக் கிழித்து உன் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு மலர்ச்செடியின் கீழே புதைத்துவிடு ' என்று கூறினார். சில நாட்கள் கழித்து என்னைக்கூட்டிக்கொண்டு மியூசியம் சென்றார். அங்கு இருந்த சிலைகள் அவர் சுட்டிக்காட்டிய பின்னே அவற்றினுடைய சிருஷ்டிகரம் என்னைத் தாக்கியது. அவர் கூடச் சென்று கொண்டிருக்கும்போது திடாரென்று ஒரு மரத்தையோ, செடியையோ கல்லையோ காட்சியையோ சுட்டிக் காண்பித்துப் பார்க்கச் சொல்லுவார். அவற்றின் அழகு என் மனத்தில் பதியத்தக்கதாக இருக்கும். அவர் கூட ஒரு நாள் சென்று கொண்டிருக்கும்போது வழியில் ஒரு வாடகைக்கார் டிரைவர், அவரைப் பார்த்து ஓடிவந்தான். அந்த டிரைவர் தன்னுடைய குடும்ப விவகாரங்களை ஏற்கெனவே இவருக்குத் தெரிவித்திருப்பான் போலிருக்கிறது. மனைவியை இழந்த இரண்டு குழந்தைகளையுடைய அவனை மறுமணத்திற்கு உறவினர்கள் வற்புறுத்திக்கொண்டிருந்த போதிலும் மறுத்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. நோயுற்ற மனைவி உயிரோடு இருந்தவரை அவளது நலனுக்காகவும் தற்போது குழந்தைகளின் நலனுக்காகவும் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளவனாகத் தோன்றினான். தியாகியாக பாவித்து இயங்கிக் கொண்டிருப்பது மனத்திற்கு சோரà
¯à®µà¯ˆà®¤à¯à®¤à®°à¯à®®à¯ என்றும், உட்புறமாக மறுமணத்தின் விருப்பத்தை மனம் வற்புறுத்திக்கொண்டேயிருப்பதால் வெளிப்புறத்தில் மனம் அதை மறுத்துக்கொண்டேயிருக்கிறது என்றும், மறுமணம் செய்வதின் மூலம் மனம் சோர்விலிருந்து விடுதலையடைந்து உற்சாகமுறும் என்றும் ஆனால் மறுமணத்திற்குப் பின்னாலும் ஏதாவது ஒரு தியாகத்தைத் தேடி மனம் அலைந்தால் அதை அவன் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கரஷ்மா கூறினார்.

அவருக்கு பல வகையான மனிதர்கள் நண்பர்களாக இருந்தனர். எவ்வாறு இத்தனை வகையான மனிதர்களிடம் இவர் நட்புறவு கொண்டிருக்கிறார் என்று நான் ஆச்சரியமடைவதுண்டு. சமூகத்தின், அந்தஸ்து மிக்க மனிதர்கள், வட்டாரப் போக்கிரிகள், சிறு வியாபாரிகள், கெய்ஷா பெண்கள் என்று அவருடைய உலகம் பெரியதாக இருந்தது. ஒரு நாள் நான் அவரை காணச் சென்றிருந்தபோது வெளியே கிளம்பிக்கொண்டிருந்தார். ஒரு கெய்ஷா பெண்ணைப் பார்க்கச் செல்வதாகக் கூறி, நான் மறுத்த போதும், விடாது என்னையும் கூட்டிச் சென்றார். கரஷீமா மீது மிகுந்த மரியாதையுடையவளாக அவள் தோன்றினாள். அவளுக்கு லெளகீகக் காரியங்களில் இவர் பல உதவிகள் செய்திருக்கிறார் என்று என்னால் யூகம் செய்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய பேச்சு, பிரதானமாக குழந்தைகளுக்கும், பெரியவர்கள், சூழல், சமூகம் ஆகியவற்றிற்கும் இடையேயான உறவைப் பற்றியதாக இருந்தது. ஒரு சுற்றுலா மையத்தில் மரங்கள் சூழ்ந்திருந்த குளக்கரையில் சிறுமியான தன் மகளுடன் அமர்ந்திருந்த போது, பளபளக்கும் நீரைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுமி கையில் இருந்த சிறு தட்டை அக்குளத்தில் மிதக்கும் படியாக வீசி எறிய வேண்டும் போல் இருப்பதாகத் தெரிவித்த சம்பவத்தை அப்பெண் கூறினாள். இதே போல் இன்னொரு நாள் டேபிள் வெயிட்டான கண்ணாடி கோளத்திற்குள்ளே செல்லவேண்டும் போல் இருப்பதாகக் கூறியதாகவும் மற்றொரு நாள் வண்ணத்துப் பூச்சிகளுடன் பறந்து திரியும் கனவு கண்டதாகவும் கூறியதாகவும், இவை எல்லாம் மனத்தின் சிருஷ்டிகர அடையாளங்கள் என்றும், இவற்றை நாசப்படுத்தும் சக்திகளே குழந்தைகளைச் சுற்றிலும் உள்ளதாகவும் அந்தப்பெண் தெரிவித்தாள். அனைத்து விஷயங்களிலும், பெரியவர்களின் கருத்து திணிக்கப்படும் நிலையில், குழந்தைகளின் இயற்கையான கூர்மை அறிவு நிலையில் சிதைக்கப்படுவதாக கரஷ்மா கூறினார். அந்தப்பெண்ணின் பெயர் எனக்கு நினைவில் இல்லை. இது நடந்த பலகாலம் ஆகிவிட்டது. கரஷ்மாவும் இறந்து விட்டார். இந்த உரையாடல் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்போது அந்த அறையில் இருந்த சிலபொருட்கள் அவற்றின் வடிவம், நிறம், அவர்கள் உட்கார்ந்திருந்த தோரணை ஆகியவை தற்போதும் அப்படியே நினைவில் உள்ளன. எழுத ஆரம்பித்தபின் இந்த உரையாடல் என்னை தொந்திரவு செய்து கொண்டேயிருந்தது. கலை வடிவமாக எழுத இயலாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். தொந்திரவை தாள இயலாமல் எப்படியோ எழுத ஆரம்பித்து முடித்துவிட்டேன். அதுதான் நீங்கள் விரும்பும் 'சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் ' என்ற நாவல்.

- டோகுடோ ஷோனின் கூறியதின் சுருக்கத்தை மேலே கொடுத்திருக்கிறேன். அவரின் தொழில் பற்றி விசாரித்ததற்கு ஒரு எலக்ட்ரானிக் கம்பெனியில் பணிபுரிவதாகக் கூறி அது சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கூறினார். அதில் எனக்குச் சிறிதளவிற்கு மேல் எதுவும் விளங்கவில்லை. தவிர அவை இந்தக் கதைக்கு அவசியமானதுமல்ல.

***

மறைந்து திரியும் கிழவன், சிறுகதைத் தொகுப்பு 1993

***

திண்ணை நவம்பர் 6, 1999

***