‏إظهار الرسائل ذات التسميات அசோகமித்திரன். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات அசோகமித்திரன். إظهار كافة الرسائل

இசை நினைவுகள் - அசோகமித்திரன்


சிகந்தராபாத் மார்க்கெட் தெருவில் ஜம்ஷட் ஹால் எப்படி வந்தது? மார்க்கெட் தெரு சிகந்தராபாத் மார்க்கெட்டையும் 'கிளாக் டவர்' என்னும் கடிகாரத் தூண் பூங்காவையும் இணைப்பது. இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் ஏற்கெனவே மங்கலாக எரியும் தெரு விளக்குகளுக்குப் பாவாடை போன்றதைப் பொருத்தி வெளிச்சமே தெரியாது செய்துவிட்டார்கள். காரணம், ஜப்பான் எந்த நேரமும் எந்த இடத்திலும் குண்டு வீசக்கூடும்.

மார்க்கெட் தெருவில் முதல் ஐம்பது அடிகளுக்கு இருபக்கமும் கடைகள். அதன் பிறகு வீடுகள்தான். கடிகாரத் தூண் அருகே ஒரு ஹால் இருந்தது. அது மஹபூப் காலேஜைச் சேர்ந்தது. அங்கே எப்போதாவது உரை நிகழ்த்தப்படும்.

ஜம்ஷட் ஹால், மார்க்கெட் தெருவில் வீடுகளுக்கு நடுவே இருந்தது. அந்தக் கட்டடத்துக்கு நீலவண்ணம் அடித்திருப்பார்கள். கீழே என்ன இருந்தது என்று தெரியாது. மாடியில் சுமார் இருநூறு பேர் உட்காரக்கூடிய பெரிய அறை. அந்த அறையின் முக்கியச் சங்கடம் நான்கு பெரிய தூண்கள். அந்த அறையில் நிகழ்த்தப்படும் நாடகத்துக்கோ இசைக் கச்சேரிக்கோ சற்றுத் தாமதமாக வருபவர்களுக்குத் தூண்களுக்கு பின்னால் இருக்கும் நாற்காலிகள்தான் கிடைக்கும். நிகழ்ச்சி முடியும்வரை அவர்கள் இப்பக்கமும் அப்பக்கமுமாக எட்டிப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

அப்படித்தான் நானும் என் அப்பாவும் தண்டபாணி தேசிகர் கச்சேரியைக் கேட்டோம். ஜகந்நாத பக்த சபா என்ற அமைப்பு, அக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆண்டுக்கு இரண்டு ரூபாயோ ஐந்தோ சந்தா. அது ஏழைகள் சபா என்று அறியப்பட்டது. பெரிய மனிதர்கள் சபா கிருஷ்ண கான சபா என்று ஹைதராபாத்தில் இருந்தது. அவர்கள் வருடாவருடம் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் பெரிய கச்சேரிகள் நிகழ்த்துவார்கள். அங்கு எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் கச்சேரி செய்ய வருவார்கள். அவருக்கு மட்டும் ஆயிரம் ரூபாய்.

தண்டபாணி தேசிகருக்குச் சில நூறு ரூபாய்தான் கொடுத்திருப்பார்கள். அதற்கு ஈடுசெய்வதுபோல்

மஹபூப் காலேஜ் பிரின்சிபால் கோடீசுவரன் அழகாக அறிமுகம் செய்து பாடகர்களைக் கௌரவிப்பார். நான் அவர் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று எப்படி எப்படியோ நெளிவேன். ஆனால் அவர் பார்த்துவிடுவார். திடீர் திடீரென்று பொது இடங்களில் என்னைப் பாடச் சொல்லி என்னை நடுநடுங்க வைப்பது அவருக்குப் பிடித்தமான செயல்.

அந்த 1944ஆம் ஆண்டு தண்டபாணி தேசிகர் புகழேணியின் உச்சியில் இருந்தார். சிகந்தராபாத்தில்கூட அவருடைய 'நந்தனார்' திரைப்படம் ஒரு மாதம் ஓடிற்று. திரைப்படத்தில் மூன்று சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுக்க 'ஆனந்த விகடன்' ஒரு போட்டி அறிவித்திருந்தது. முதல் பரிசு பத்தாயிரம் ரூபாய்.

தண்டபாணி தேசிகர் உரத்தே பாடமாட்டார். செம்பை, மகாராஜபுரம்போல உடலையும் தலையையும் ஆட்ட மாட்டார். மிகத் தெளிவான தண்ணீர் ஓடைபோல அவரிடமிருந்து இசை பொழியும். அவரும் ராக ஆலாபனம், சுவரம் எல்லாம் பாடுவார். ஆனால் அலட்டலே கிடையாது.

அன்று ஜம்ஷட் ஹாலில் அவருடைய கச்சேரியைக் கேட்டவர்கள் கொடுத்துவைத்தவர்கள். பல சம்பிரதாயக் கீர்த்தனைகளை எல்லாம் பாடிவிட்டு அவர் 'ஐயே மெத்தக் கடினம்' பாடினார். அந்தப் பாட்டைக் கேட்டு உருகாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

கச்சேரி முடியப்போகும் தருணத்தில் கோடீசுவரன் பேச வந்தார். அவர் பரம பக்தர். நல்ல ரசிகர். சுருக்கமாக, ஆனால் மனநிறைவு ஏற்படும் வகையில் பேசித் தேசிகருக்கும் இதர இசைக் கலைஞர்களுக்கும் மாலை அணிவித்தார்.

இன்றைக்கு அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோடீசுவரன் தேசிகருக்குப் பின்பாட்டுப் பாடிய இளைஞரை விசேஷமாகப் பாராட்டினார். அடுத்தமுறை அந்த இளைஞரே தனிக் கச்சேரி செய்பவராக இருப்பார் என்றார். அந்த இளைஞர் மதுரை சோமு.

நான் இதெல்லாம் மறந்துவிட்டேன். தேசிகர் கச்சேரி நடந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு சார்லஸ் ரயர்ஸன் என்ற அமெரிக்க ஆய்வாளர், தான் உடன் அழைத்துவந்த அமெரிக்க மாணவர்களுக்கு, மதுரை சோமு கச்சேரிக்கு ஏற்பாடுசெய்திருந்தார். அன்று எவ்வளவோ பாடகர்கள் சோமுவைவிடப் புகழ்பெற்று இருந்தார்கள். ஆனால் சார்லஸ் ரயர்ஸன் அந்த ஆண்டு என்றல்ல, ஒவ்வொரு ஆண்டும் அவர் அழைத்துவரும் ஆய்வாளர் குழுவுக்கு மதுரை சோமு கச்சேரிதான் ஏற்பாடுசெய்தார். நானும் போயிருந்தேன். ஒரு விஷயத்தை அமெரிக்கர்கள் கவனித்தார்களா என்று தெரியாது. சோமு பாடும்போது அவர் உடல் அனைத்தும் அப்பாட்டில் ஈடுபட்டிருக்கும். "அவருடைய கச்சேரியைக் கேட்பது ஓர் உணர்ச்சிகரமான அனுபவம்" என்று சார்லஸ் ரயர்ஸன் கூறுவார். சோமு பாடும்போது என் நண்பர் உடலெல்லாம் சிவந்துவிடும். அப்படி ஒரு உறவு அவருக்குச் சோமுவின் இசையோடு இருந்தது.

சார்லஸ் ரயர்ஸன் பற்றிச் சில வார்த்தைகள் கூற வேண்டும். அவர் அங்கி அணியாத மதப் போதகர். (இதற்குப் பட்டப் படிப்பு, உயர் பட்டப் படிப்பு எல்லாம் உண்டு.) இந்தியாவில் அவருக்கு நங்கூரமாக இருந்தது மதுரை அமெரிக்கன் கல்லூரி. அவருடைய ஆய்வுத் தலைப்பு 'தமிழகத்தில் எதிர்ப் போக்குகள்'. அவருடைய முதல் வழிகாட்டி திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி. சார்லஸ§க்கு அவரோடு ஆங்கிலத்தில் விவாதம் புரியக் கிடைத்தவர்கள் நானும் என் போன்ற ஐந்தாறு பேரும். நட்பு தோன்றவும் இருப்பார், நம்பவும்மாட்டார். இப்போது அவருக்கும் வயது எழுபதுக்கு மேலாகிவிட்டது. அவருடைய வீட்டைவிட்டு நகர முடியாதபடி பருமனாகிவிட்டார். இப்போதும் ஆண்டுக்கு இரு முறையாவது கடிதம் கையெழுத்தில் எழுதுவார். அவருக்கு இன்னும் இரு நண்பர்கள் - தியடோர் பாஸ்கரன், எஸ்.வி. ராஜதுரை - உள்ளார்கள்.

உணர்ச்சிகரமான இசை என்பதை ஓரளவு நான் சோமுவின் முதிர்ந்த காலக் கச்சேரிகளைக் கேட்டுத்தான் ஒருமாதிரி புரிந்துகொண்டேன். தென்னிந்திய முன்னணிக் கலைஞர்கள் மிகவும் சிறப்பாகப் பாடுவார்கள். ஆனால் அநேகமாக எல்லாருமே சபையையும் பக்கவாத்தியக்காரர்களையும் கவனத்தில் இருத்தியே பாடுவார்கள். இவ்வளவு ஏன் புன்சிரிப்பு செய்ய வேண்டும் என்றுகூட நான் நினைத்திருக்கிறேன். அது கர்நாடக இசையின் இயல்போ என்று தோன்றுகிறது.

இப்போது சோமு பாட்டைக் கேட்க முடியாது. ஆனால் பாடும்போது தன் முழு உடலுடன் பாடுபவர்கள் இருக்கிறார்களோ? வேப்பத்தூர் கிட்டு என்று எனக்கொரு நண்பர் இருந்தார். ஒருமுறை இரு நடிகைகள் பற்றிப் பேச்சு வந்தது. இந்தியில் நடித்த தென்னிந்திய நடிகை பற்றி அவர் சொன்னார். "பாருங்கள், அவர் தன் வருங்கால மாமனாரைப் பார்க்க வருகிறார். முகம் மட்டுமல்ல, உடலெல்லாம் அந்த உணர்வைக் காட்டும், பாருங்கள்," என்றார்.

உடலெல்லாம் உருகப் பாடுபவர்கள் பஜனைத் துறையில் இருக்கிறார்கள். "பாண்டுரங்கா, பாண்டுரங்கா" என்று அவர்கள் உடலெல்லாம் அந்த விட்டலனைக் கோரி உருகும்.

வட இந்திய இசை உணர்ச்சிபூர்வமானது என்பார்கள். அது ஓரளவு உண்மை. எல்லாக் கலைஞர்களும் தம்மை மறந்து தலை முதல் பாதம் வரை இசையில் கரைந்து பாடுவதில்லை. நான் பார்த்து படேகுலாம் அலிகான் அப்படித்தான் மெழுகாக உருகுவார். சாகித்யமென எடுத்துக்கொண்டால் அது ராதை, கிருஷ்ணன், யமுனா தீரம் என்று இருக்கும். ஆனால் அவர் ராதையாக முறையிடும்போது எங்கோ ஒரு முலையில் அவருக்குக் கண்ணன் தோன்றிக்கொண்டிருப்பார் என்றுதான் நினைக்கிறேன்.

பிஸ்மில்லாகான் அந்தக் கீச்சுக் கீக்சு ஷெனாய் வாத்தியத்தில், இதைச் சாத்தியமாக்கிவிடுவார். காசியில் வசித்த அவருக்குச் சிவன், பார்வதி தோன்றிக் கொண்டிருப்பார்களோ?

மியூசிக் அகாடமி கட்டடம் கட்டிக் கச்சேரிகள் நடக்கத் தொடங்கிய பின், ஒவ்வொரு ஆண்டும் ரவி ஷங்கர் வருவார். எனக்குக் கிருஷ்ணானந்த் என்றொரு வட இந்திய இசைப் பாடகர் நண்பர். நான் அவர் மூலம் ரவிஷங்கர் கக்சேரிக்கு வரிசையாக நான்கைந்து ஆண்டுகள் சென்றிருக்கிறேன். இரவு பத்து மணிக்குக் கச்சேரி தொடங்கும். முதலில் ஒரு சுவரத்தைத் தாண்டி அடுத்ததற்கு வரப் பத்து நிமிடங்களாவது ஆகும். ஒரு ராகத்தின் முழு சுவரங்களையும் கொண்டு அவர் விஸ்தரிக்க ஒரு மணி நேரம் ஆகும். அதன் பிறகு உங்கள் மூளையே ஸ்தம்பித்துவிடும் வேகத்தில் இசை பெருகி ஓடும். 'கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம்' என்று சொல்லலாம். ஆனால் திடீரென்று ரவி ஷங்கர் நம்மைக் கீழே தள்ளிவிடுவார். சிதார் வாசிப்பதை நிறுத்தி, "நண்பர்களே, உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்" என்று அறிவிப்பார். டிசம்பர் முடிந்து ஜனவரி இரவு 12 மணிக்குப் பிறந்திருக்கும். கொட்டகையில் அநேகமாக எல்லாரும் கரகோஷம் செய்வார்கள். எனக்கு ஏமாற்றமாக இருக்கும். அடுத்த ஆண்டு ரவிஷங்கர் கச்சேரிக்குப் போகக் கூடாது என்றுகூட நினைத்திருப்பேன். ஆனால் அடுத்த ஆண்டு நான் போகத் தவறவில்லை. எனக்கு அவருடைய சினிமா நட்சத்திரப் போக்கு பிடிக்காமலிருக்கலாம். ஆனால் மகத்தான கலை அவரிடமிருந்தது. எனக்குக் குறை என்று தோன்றியதை நான் ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?

புளூட்மாலிக்கு எனக்குத் தெரிந்து இரு சிஷ்யர்கள். ஒருவர் உலகமறிந்த ரமணி. இன்னொருவர் அகில இந்திய வானொலியில் தன்னைக் கரைத்துக்கொண்ட ஸ்ரீனிவாசன். இருவரும் எனக்கு நண்பர்கள் என்றாலும் ஸ்ரீனிவாசன் அநேகமாக என்னைத் தினமும் பார்க்க வந்துவிடுவார். என்னுடைய ஆங்கில நாடகங்களை அவர்தான் முதலில் படிப்பார். அப்போதுதான் டேப் ரிக்கார்டர்கள் வர ஆரம்பித்த காலம். ஸ்ரீனிவாசனுக்கு அவரே புல்லாங்குழல் வாசித்து அதற்கு அவரே மிருதங்கமும் வாசிக்க முடியுமா என்று பரிசோதித்துப் பார்க்க ஆசை. அப்போது ஆர்.ஏ. பத்மநாபன் (ஆம். 'சித்திர பாரதி' பத்மநாபன்தான்) அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு டேப் ரிக்கார்டர் உண்டு. நானும் ஸ்ரீனிவாசனுமாக அவரிடம் சென்று, எங்கள் பரிசோதனை பற்றிச் சொன்னோம். அதாவது முதலில் ஸ்ரீனிவாசன் குழல் வாசித்துவிடுவார். பிறகு அதே காஸட்டைத் திரும்பப் போட்டு மிருதங்கம் வாசிப்பது. உண்மையில் இந்த உத்தி திரைப்பட ஒலிப்பதிவில் சாதாரணமாகப் பயன்படுத்துவது. ஆனால் டேப் ரிக்கார்டரில் குழலொலி அழிக்கப்பட்டு, வெறும் மிருதங்க வாசிப்புத்தான் கேட்டது. இரண்டு டேப் ரிக்கார்டுகள் இருந்தால் அது சாத்தியம். ஆர். ஏ. பத்மநாபன் அலுவலகத்தில் ஒரு கருவிதான் இருந்தது என்று கூறிவிட்டார். ஸ்ரீனிவாசன் மூலம்தான் பி.எஸ். ஹைஸ்கூல் என்பது பென்னத்தூர் சுப்பிரமணிய அய்யர் பள்ளி என்று எனக்குத் தெரியவந்தது. ஸ்ரீனிவாசன், சுப்பிரமணிய அய்யருடைய பேரன். அவர்கள் வீடு டி.டி.கே. சாலையில் மியூசிக் அகாடமிக்கு எதிர்ச்சாரியில் இருந்தது.

நடிகர் ரஞ்சனுடைய சகோதரர் வைத்தியநாதனும் புல்லாங்குழல் வாசிப்பார். அவர் மேலைய சங்கீதத்திலும் குறிப்பாக, பியானோ வாசிப்பதிலும் மிகுந்த தேர்ச்சிபெற்றவர். அவர் புல்லாங்குழலுக்கு இணையாக இன்னொரு இசைக் கருவி கிடையாது என்பார். "எவ்வளவு எளிமையானது! ஓரடி மூங்கில், அவ்வளவுதான். மேலும் எங்கு வேண்டுமானாலும் ஒரு சிரமம் இல்லாது எடுத்துச் செல்லலாம். பியானோவையோ வீணையையோ அப்படி எடுத்துச்செல்ல முடியுமா? ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சுருதியில் ஒலியெழுப்பிச் சங்கடப்படுத்தும்" என்பார்.

இந்திய இசையில் பக்திதான் பிரதானம். இறையுணர்வுதான் சிகரங்களை எட்டவைத்தது. எனக்குத் தெரிந்து அரசியல் சார்புடைய இசை நிபுணர்களையும் கேட்டிருக்கிறேன். அவர்களும் தியாகய்யர் கிருதி வாசிக்கும்போது அவர்கள் தோற்றமே மாறிவிடும்.

மேலைய சங்கீதத்தில் சில பிரிவுகளே இறையுணர்வோடு தொடர்பு கொண்டவை. பதினெட்டு-பத்தொன்பதாம் நூற்றாண்டில் கொடூரமாகவும் ஈவிரக்க மற்றும் ஆப்பிரிக்கர்களை விலங்குகள்போலக் கடத்திக் கூண்டிலடைத்து, அமெரிக்காவில் பெரிய எஸ்டேட்டுகளில் அடிமைகளாக உழைக்கவைத்தார்கள். அவர்களைக் கிறித்துவர்களாக மதமாற்றி அவர்களுக்குத் தனிச் சர்ச்சும் ஏற்படுத்திவிட்டார்கள். அந்த அடிமைகள் ஒரு தனிப் பிரிவாக ஒரு இசையை உருவாக்கினார்கள். அது 'புளூஸ்' என்று பெயரிடப்பட்டது. அந்த ஆப்பிரிக்கர்கள் மனதார ஏங்கிக் கதறுவார்கள். அந்தச் சோகம் வயிற்றைக் கலக்கும். இன்றும் 'புளூஸ்' இருக்கிறது. ஆனால் அந்தச் சோகம் இருக்குமா என்று உறுதி கூற முடியாது.

நன்றி - காலச்சுவடு 2008

அசோகமித்திரனின் 'விமோசனம் ': ஒரு சிறு குறிப்பு - திலீப்குமார்


தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று 'விமோசனம் '. கதையைப் பற்றிக் கூறும்முன் அசோகமித்திரனின் மொழிநடையைப் பற்றிக் கூறவேண்டும். அசோகமித்திரனின் மொழிநடையின் ஆதார இயல்பு மிகவும் எளிமையானது. வாக்கிய அமைப்புக்களிலும் சொற்பிரயோகங்களிலும் மிகச்சாதாரணமான ஒரு பாணியையே கையாள்பவர் அவர். அவரது எழுத்தின் ஆற்றல் என்பது அவரது மொழிநடைக்கு அப்பாற்பட்டே உள்ளது. அசோகமித்திரன் பிரக்ஞை பூர்வமாக கடைபிடிக்கும் இந்த எளிமை பல சந்தர்ப்பங்களில் ஒரு வாசகனை அலுப்புறச் செய்துவிடும். ஆனால் நுண்ணுணர்வு கொண்ட ஒரு வாசகனுக்கு இந்த எளிமை ஒரு இலக்கிய அனுபவத்தைத் தரக்கூடும். தவிர, ஒரு வாசகன் பெறக்கூடிய இலக்கிய அனுபவம் பெரிதும் இக்கதைகளின் மொழிநடையின் எளிமையையே மறைமுகமாகச் சார்ந்திருக்கிறது.

'விமோசனம் ' என்ற கதை ஒரு பெண்ணின் பார்வையிலிருந்தே சொல்லப்படுகிறது. கீழ்-மத்தியத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சராசரி கணவன் - மனைவி பற்றிய கதை. கணவன் மென்மையான உணர்வுகளற்ற ரொம்பவும் சாதாரணமான ஒரு மனிதன். மனைவியை சிறு-சிறு விஷயங்களுக்காக துன்புறுத்துபவன். தேக ஆரோக்கியமில்லாதவன், பொறுமையற்றவன்; ஏழை. ஒரு பூஜைக்காக ஒரு மகான் தங்கியிருக்கும் ஒரு வீட்டிற்கு இவர்கள் செல்லும் தினத்திலிருந்து கதை சொல்லப்படுகிறது. பூஜைக்குச் சென்ற இடத்தில் அவன் மனைவி குழந்தைக்கு பால் புகட்டும் புட்டியை கொண்டு செல்கிறாள். அவளால் மகானை சந்திக்க முடிவதில்லை. அந்த மகான் இவளைப் பார்த்த சில நொடிகளில் இவளுக்குத் தன் துக்கத்தையெல்லாம் சொல்லிவிடவேண்டும் என்ற துடிப்பு ஏற்படுகிறது. ஆனால் எப்படியோ அவளால் எதுவும் சொல்ல முடியாமல் போகிறது. அவள் திரும்பி வீட்டுக்கு வருகிறாள். அவள் கணவன் அன்று வரவில்லை; பின் எப்போதுமே வரவில்லை. இது 'விமோசனம் ' கதையின் சாராம்சம்.

இந்தக் கதை கணவன்-மனைவி என்ற பேதத்திற்கு அப்பாற்பட்டு மனித இயல்பின் தன்மைகளை பற்றியதாக இருந்தாலும், பிரதானமாக ஒரு இந்தியத் தன்மை மிகுந்த கதை. இக்கதையில் தோன்றும் முரண், இரு மனிதர்களுக்கிடையேயும் தோன்றக்கூடிய ஒன்றுதான்; இருந்தாலும் ஒரு சராசரி இந்திய தம்பதியினர்க்கிடையே வைத்து இந்த முரண் இயங்கும் போது இந்தக்கதை பல பரிமாணங்கள் பெற்று கூர்மையடைந்து விடுகிறது.

பொதுவாகக் கணவன்-மனைவி என்றில்லாமல் இரு தனி நபர்களுக்கிடையேயான உறவுகூட அவர்களது தனித்தனியான மனவார்ப்புகளின் சமநிலையையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்த மனவார்ப்பின் மூலக்கூறுகளை ஒரு மனிதனுக்கு அவன் சார்ந்திருக்கும் சமூகம்; நடை முறையிலிருக்கும் மதிப்பீடுகள், கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் இவற்றின் வாயிலாக வழங்குகிறது. ஒருவன் தான் வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தின் நடைமுறையிலுள்ள கலாச்சார மற்றும் மதிப்பீடுகளைக் கொண்டு தன் மனவார்ப்பின் தன்மையை அமைத்துக் கொள்கிறான் என்றாலும், கூடவே தன் அறிவு, அனுபவம் இவற்றிற்கு ஏற்ப சமூகம் அவனிடம் வலியுறுத்தும் மதிப்பீடுகளில் சிலவற்றை அங்கீகரித்து ஏற்கவும், சிலவற்றை நிராகரித்தும் விடுகிறான். இச்செயல்முறையின் மூலம் அவன் தனக்குள், தனக்கே உரிய ஒரு இசைவையும் சமநிலையையும் அடைகிறான். இதுவே அவன் தன் சமூகத்துடனும் சகமனிதனுடனும் உறவு கொள்ள அவனுக்கு உறுதுணையாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மனவார்ப்பு, அச்சமூகத்தின் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்பவே ஒரு சமநிலையை அடைகிறது. காலமாறுதலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின், ஒரு குறிப்பிட்ட தனி மனிதனின் மனவார்ப்பின் சமநிலை அறவே சமன் இழந்தும் தோன்றக்கூடும்.
ஒரு சராசரி இந்தியக்கணவன்-மனைவிக்கிடையேயான உறவு, முக்கியமாக அவர்களுக்கிடையேயான அன்யோன்யமான கணங்களின் தொகுப்பிலிருந்தே உருக்கொள்கிறது. இந்த அன்யோன்யமான கணங்களின் தொகுப்பானது எத்தனையோ சிறுசிறு உணர்வுகளையும் நிகழ்வுகளையும் உள்ளடக்கியது. அழகு, இருவரது உடலமைப்பின் பரஸ்பர அங்கீகரிப்பு, உடலுறவு, உடலுறவுக்கொள்ளும் பாங்கு, மற்றும் மனநிலை, பேச்சு, சிரிப்பு, வியாதிகள், சாப்பாடு, சாப்பாட்டின் ருசிகள், பொருளாதார நிலை, சமய நம்பிக்கை ஆகியவை. ஒரு கணவனும் மனைவியும் இந்த அன்யோன்யமான கணங்களினூடேதான் ஒருவருக்குள் மற்றவர் பிரவேசிக்கவேண்டியுள்ளது. ஆனால் இந்த பிரவேசமானது ஒரு குறிப்பிட்ட எல்லைவரையே சாத்தியமாகிறது. ஒருவர் மற்றவரது மதிப்பீடுகள், லட்சியங்கள், கற்பிதங்கள் சார்ந்த ஆதாரமான மனவார்ப்பை என்னதான் அன்யோன்யமாக அவர்கள் இருந்தாலும் நெருங்கவே, பாதிக்கவோ முடிவதில்லை. இவர்களுக்கிடையே எத்தனை அன்யோன்யமான உணர்வுகளும் நிகழ்வுகளும் இருந்தாலும்கூட இது சாத்தியமாவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்களது ஆதார மனவார்ப்பின் சமநிலை பராமரிக்கப்படுவதால்தான் மேற்குறித்த அன்யோன்யமான கணங்களே சாத்தியமாகின்றன. தம்பதியினருள் ஒருவரது ஆதாரமான மனவார்ப்பின் சமநிலை குலைந்து போனாலும்கூட அவர்களுக்கிடையேயான அன்யோன்யம் ஒரு நொடியில் மறைந்துவிடக்கூடும்.
அசோகமித்திரனின் 'விமோசனத்தில் ' நிகழ்வது இதுதான். இக்கதையில் வரும் மனைவி, கணவன் தன்னை துன்புறுத்தும் ஒரு கட்டத்தில் அவனை வழக்கத்துக்கு மாறாக எதிர்க்கிறாள். இப்படி எதிர்ப்பதன் மூலம் அவள் தன் கணவனின் மனவார்ப்பின் சமநிலையை குலைத்துவிடுகிறாள். இது நடந்த உடனேயே, அவர்களுக்கிடையேயான அன்யோன்யம் சுத்தமாய் மறைந்து விடுகிறது. கூடவே, மனைவியும் தன் கணவனை எதிர்த்ததன் மூலம் தானும் தன் மனவார்ப்பின் சமநிலையை இழந்துவிட்டதாக உணர்கிறாள். எத்தனையோ அன்யோன்யமான உணர்வுகளும் நிகழ்வுகளும் இந்த தம்பதியினர்க்கு இடையேயும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தும்கூட இவர்களது வாழ்க்கை ஒரு இசைவை திரும்பப்பெறுவதேயில்லை. கணவன் தன் மனைவியை விட்டு நிரந்தரமாக பிரிந்துவிடுகிறான்.

'விமோசனம் ' கதையில் வரும் மேற்குறித்த நிகழ்ச்சியில் உள்ள மனோதத்துவப் பரிமாணங்களை தவிர அதற்கிருக்கும் சமூகப் பொருண்மையும் மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இது ஒரு தனிப்பெண்ணின் எதிர்ப்பாக இல்லாமல், நம் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட கால வரையிலான மொத்தப் பெண்மையின் எதிர்ப்பாகவும் இது சொல்லப்படலாம். மேலும் நம் காலத்துப் பெண்மைக்கு சாத்தியப்பட்ட எதிர்ப்பு இவ்வளவுதான் என்பதையும் இக்கதை வரையிறுத்துச் சொல்கிறது. இதன் விளக்கமாகவே இந்தப் பெண் மீண்டும் தன் கணவனுடன் தனக்கிருந்த உறவை மீண்டும் நிலைப்படுத்திக் கொள்ள தன் கணவனின் காலில் விழுந்து மன்றாடுகிறாள். இச்செய்கையிலுள்ள மனோதத்துவ யதார்த்தத்தைப் போன்றே ஒரு சமூக நிலையின் பிரதிபலிப்பும் உள்ளது. இவள், தன் கணவனோடு தனக்கு ஏற்பட்ட பிணக்கு தீராத ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் அந்த மகானைத் தேடி செல்கிறாள். இக்கதையில் வரும் மகான் ரொம்பவும் இயல்பான ஒரு பாத்திரமாக படைக்கப்பட்டு இருந்தாலும், இப்பெண் அவரை மீண்டும் சந்திக்கச் செல்லும்போது அவர் யதார்த்த உலகிற்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின், ஒரு உணர்வின் குறியீடாக மாறிவிடுகிறார். இந்தப் பெண்ணும் அத்தகைய ஒரு சக்திக்காகவே, தர்க்க அடிப்படையில் அது விவேகமற்றதான ஒரு செயலாகப்பட்டாலும் ஏங்கி நிற்கிறாள். நாம் நினைப்பது போலவே அவளுக்கு அவள் எதிர்பார்த்த 'விமோசனம் ' கிடைப்பதில்லை.
இதில் வரும் கணவன் தன் மனைவியின் செயலுக்குக் காட்டும் எதிர்வினை ஒரு சமூக உண்மையின் பிரதிபலிப்பாக மட்டும் காணப்பட வேண்டிய ஒன்றல்ல. இக்கதையின் நீட்சிக்கான ஆதாரக்கூறுகள் இந்தக்கதையின் சமூக மற்றும் நடைமுறை மதிப்பீடுகளின் மீதான விமர்சனத்தையும் தாண்டி இக்கதையின் மனோதத்துவப் பரிமாணங்களிலேயே உள்ளன என்று நான் சொல்லுவேன்.

உருவ ரீதியாகவும் இக்கதையில் பல சிறப்புகள் உள்ளன. இக்கதையின் சக்தி முழுவதும் இதில் வரும் மனைவி தன் கணவனை எதிர்க்கும் கட்டத்தில் 'உம் ' என்று சொல்லும் ஒலிக்குறிப்பில் தான் மையம் கொண்டிருக்கிறது. இம்மையத்தில் இருந்து ஒரு ரொம்பவும் சாதாரணமான ஒலிக்குறிப்பு வாயிலாக வெளிப்படும் சக்தி, கதையின் ஒவ்வொரு சொல்லையும் உயிர்ந்தெழச் செய்கிறது. அதைத் தாண்டியும் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. அசோகமித்திரன் இக்கதை நெடுகிலும் நாம் எளிதில் அலட்சியப்படுத்திவிடக் கூடிய சிறு சிறு நடைமுறைத் தகவல்களை எவ்வித ஆயாசமும் இன்றி கூறிக்கொண்டே செல்கிறார். இந்தக் கதையில் வரும் கணவன்- மனைவி பாத்திரங்கள் தங்கள் மனவார்ப்பின் சமநிலையை ஒரு கட்டத்தில் இழந்து விடும்போது மேற்குறித்த தகவல்களும், அவை கூறப்பட்டிருக்கும் விதத்தில் காணப்படும் துல்லியமும், அவை கூறப்பட்ட விதமும் திடாரென்று ஒரு விஷேசத்துடிப்புடன் இயங்குவதை பார்க்கமுடியும்.

இன்னொரு முக்கியமான அம்சம். பொதுவாக பெரும்பாலான கதைகளில் வருவதுபோல ஒரு முரண், அதன் இயக்கம், அதற்கொரு தீர்வு என்றில்லாமல் இக்கதையில் அதன் முரணை ஆரம்பத்திலேயே கூறி, அதன் இயக்கத்தை நாம் பொருட்படுத்திவிட முடியாத ஒரு தொணியில் விளக்கி, தீர்வு என்று ஏதும் ஆவேசமாக கூறாமல் கதையம்சத்தின் சுவாரஸ்யத்திலிருந்து விடுவித்து வாழ்க்கையின் பிரத்யட்சங்களை நோக்கி நம்மை அழைத்துவருகிறார் அசோகமித்திரன். கணவன் மனைவி உறவு பற்றி பல நிலைகளிலிருந்தும் நாம் படித்து உணரக்கூடிய கதை 'விமோசனம் '.

நன்றி - திண்ணை 

அசோகமித்திரனின் 'நம்பிக்கை ' என்ற கதை - நகுலன்


இலக்கியத்தைப் பற்றி என் அணுகல்முறை பற்றி ஓரிரு தகவல்கள். நான் வேறு இடங்களில் சொல்லியிருப்பது போல எந்த கலைப்படைப்பிற்கும் விளைநிலம் அனுபவமே. அதன் தளங்களும் நுணுக்கங்களும் ஆழங்களும் விரிந்துகொண்டே செல்பவை. இதை அறிய ஒரு சிருஷ்டிபரமான உள்ளத்தை நாடுகிறோம். இதனால்தான் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என்ற ஒரு பார்வை ஏற்பட்டிருக்க வேண்டும். பல கலைஞர்கள். பல பார்வைகள்.

சிறுகதை என்ற வடிவத்தைப் பற்றி நான் அறிந்த வரை அதில் ஆரம்பமும் முடிவும் சிறப்பாக அமைந்திருக்கவேண்டும். ஒரு மையம் இருக்கவேண்டும். மிகவும் இறுக்கமான ஒரு கட்டுக்கோப்பு உடையதாக இருக்கவேண்டும். அதனால்தான் அதில் 'ஒரு சிறு ' என்பது 'ஒரு பெரு ' என்று அர்த்தப்படுகிறது. இங்கு கூறப்பட்ட எல்லா விதிகளையும் தாங்காமலேயே ஒரு சிறுகதை எழுதப்பட்டிருக்கலாம்; எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சிறுகதையில் நடை முக்கியம். அதுவும் கட்டுக்க்கோப்பின் ஒரு அம்சமாக இருக்கிறது.

அசோகமித்திரனின் 'நம்பிக்கை ' என்ற சிறுகதையைப் பார்ப்போம்(வாழ்விலே ஒரு முறை தொகுப்பு). இரு பாத்திரங்கள். ஒரு தையல்காரனும் அவனிடம் ஒரு சட்டையை தைக்கக் கொடுக்கவருபவரும் (இவர்தான் கதையைச் சொல்கிறார்).பிறகு அவர் மகன். (இவன் இருப்பவன். இறந்து போனவன் இவனுக்கு மூத்தவன்) ஒரு சைதன்ய பிரபு என்று கூறப்படும் சித்த புருஷர் படமாக தொங்குகிறார். கதையில் குறிப்பிடப்படும் சம்பவமும் முக்கியமானது. அதைச் சொல்பவர் அந்த தையல்காரர். அவருக்கு சித்தபுருஷர் மீது அவ்வளவு சிறந்த அபிப்பிராயம் இல்லை என்று குறிப்பிடுகிறார். ஏன் சில ஆண்டுகளுக்கு முன் அவர் மகன் கடும் நோயினால் சாகக்கிடக்கும் தருணத்தில் அவன் பிழைப்பானா என்று அவரைக் கேட்கப்போனபோது அந்த சித்த புருஷர் ஒன்றும் சொல்லாமல் அவருக்கு ஒரு லட்சுமி விக்கிரகத்தை கொடுக்கிறார். பையன் சாகிறான். அந்த தையல்காரர் பிறகு ஒரு மந்திரவாதியிடம் செல்கிறார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. ஆனாலும் அவர் அந்த சித்தபுருஷர் படத்தை வழிபடுகிறார். ஏன் ? இந்தச் சிறுகதையின் கதைத்தளம் இப்படிச் செல்கிறது.

இந்தக் கதையில் சில உத்திகள் கையாளப்படுகின்றன. நடை மிகவும் எளியது. அதே சமயம் மிக நுட்பமானதும் கூடு. முதலில் கதை ஆசிரியரால் சொல்லப்படவில்லை. அந்த தையல்காரர் பேச்சில்தான் நிகழ்கிறது. இங்கு மூன்று அல்லது நான்கு பாத்திரங்கள். அந்தச் சித்தபுருஷர் தரும் லட்சுமி விக்கிரகம். அது ஒரு உள் வியாபகமான படிமமா ? இல்லை ஒரு தகவல் மட்டும் தானா ? தையல்காரர் வாழ்க்கையில் வெற்றிக்குக் காரணம் அவருடைய நாணயமும் தொழில்திறனும்தான், எனவே அவர் தன் மகன் மரணப்படுக்கையில் இருக்கும்போது நான்கு பெக் மது அருந்தி ஸ்கூட்டரில் வெகு வேகமாக ஒரு வித விபத்துமின்றி போகிறார். இந்த நம்பிக்கை பிராந்தியின் விளைவா தற்செயலா அல்லது அந்த சைதன்ய பிரபுவின் அருளா ? அந்தக் கதை சொல்லி அந்தப் படத்தை ஐந்து முறை பார்க்கிறார் ஏன் ? நம்பிக்கையா நம்பிக்கையின்மையா ? 'நம்பிக்கை ' என்பது தலைப்பு. நம்பிக்கை! யார்மீது ? இதற்கு துல்லியமான விடை என்ன ?

ஐராவதம், மா அரங்கநாதன் கதை பற்றிக் கூறும்போது அதில் ஒரு புதிர்த்தன்மை இருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். இக்கதையிலும் அதே போல ஒரு புதிர் உள்ளது. நம்பிக்கையின் விளைநிலம் என்ன ? மனிதன், கடவுள் அல்லது ? இந்த மாதிரி சொல்லாமலேயே சொல்வதில்தான் ஒரு சிறுகதையின் கலை ஒருமை உள்ளது. வாழ்க்கை என்ற புதிரை கலைத்து ஒவ்வொரு வாசகனும் தன் மனவார்ப்புக்கு ஏற்பப் பார்க்கையில் கதையின் தளம் வெவ்வேறு திசையில் நகர்கிறது. இவ்வாறு நமது மரபு சார்ந்த அணுகல்களைக் கலைத்து ஒவ்வொரு வாசகனும் தன் இயல்புக்கேற்ப வாசிக்கும்படி கதை செல்கிறது. அவருடைய இத்தன்மை மூலமே அசோகமித்திரன் சிறந்த கலைஞராக நமக்கு பிடிபடுகிறார். ஒரு சில தகவல்கள் உதாரணமாக. மனம் அதிக அளவு அவதிப்படும்போது உறக்கம் வருகிறது என்ற ஒரு கட்டம். கா. நா. சு. வின் ஒரு கதையிலும் இதற்கிணையான ஒரு கட்டம் உண்டு.

எந்த ஒரு கதை தன் தளங்களைத் தாங்கி அதையும் மீறிச் செல்கிறதோ அப்போதுதான் அது கலையாக மாறுகிறது. இக்கதை எனக்கு 'செகாவ் ' எழுதிய 'தி டார்லிங் ' என்ற கதை ஞாபகம் வருகிறது. இன்றைய மொழியியல் விமரிசன ரீதிகள் கலையை ஒரு பெயர்ச்சொல்லாக பார்க்காமல் வினைச்சொல்லாகவே பார்க்கின்றன. இந்த அம்சத்தையும் இக்கதையின் வாசிப்பைப்பற்றி பேசும்போது குறிப்பிடலாம்.

கனவு இதழ் 21 1993

***

நன்றி - திண்ணை

கண்கள் - அசோகமித்திரன்

கண்களை மறைத்துக்கொள்வது நல்லதா? கண்களை மறைத்துக்கொள்பவர்களைத் தயக்கத்தோடுதான் அணுக முடிந்தது. கொளுத்தும் வெயிலும் அவன் கறுப்புக் கண்ணாடி போட்டது கிடையாது. பல வருடங்கள் முன்பு 'புதையல்' என்ற படம் வந்தது. அப்போதெல்லாம் படம் பார்க்க வேண்டுமென்றால் சினிமாக் கொட்டகையில்தான் பார்க்க வேண்டும். அவன் போனான். ஊரெல்லாம் பரவியிருந்த ஜுரம் அவனுக்கும் வந்தது. கண் சிவந்து வீங்கிப்போயிற்று. அப்போதும் அவன் கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொள்ளவில்லை.

ஆனால் சிலரைப் பார்க்காதது போலத்தான் ஒதுங்கிவிட வேண்டியிருக்கிறது. ஒரு சிலரை நேருக்குநேர் பார்த்துவிட்டால் உடனே தான் அவர்களுக்குக் கடமைப்பட்டவன் போன்ற உணர்வு வந்துவிடுகிறது. அது அந்த மனிதனுக்கும் தெரிந்துவிடுகிறது. பிச்சைக்காரர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கு இது ஒரு காரணமோ?
ஆனால் பல பிச்சைக்காரர்கள் வேறு வழியில்லாதபடிதான் பிச்சை எடுக்கிறார்கள். அவனறிந்து வருடக் கணக்கில் ஓர் அம்மாள் ஒரு சினிமாக் கொட்டகை முன்னால் உட்கார்ந்திருந்தாள். கண்ணில் சதை படர்ந்து அநேகமாக அவளைக் குருடியாக்கியிருக்கும். வயது ஐம்பதிலிருந்து எழுபதுவரை கூறலாம். ஒரு நாள் இரவு பதினொரு மணிக்கு அவன் அந்த வழியாகப் போக வேண்டியிருந்தது. அந்த அம்மாள் நடைபாதையிலேயே படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். அங்குதான் எவ்வளவு பூரான், பெருச்சாளி, கரப்பான் பூச்சி, கொசு, சுண்டெலி! பத்து நிமிடம் தொடர்ந்து தூங்க முடியாது. இரவுக்கேயுரிய நகர நாற்றம். கோடைக் காலத்தில் தார்ச் சாலையிலிருந்து கிளம்பும் வெப்பம். சிறு தூறல் போட்டால்கூட ஒதுங்க இடம் தேட வேண்டும். கடைகளுக்கு முன்னால் வழக்கமாகத் தூங்குகிறவர்கள் இருப்பார்கள். புது ஆளுக்கு இடம் கிடைக்காது.

அவனுக்கு அந்த அம்மாவுக்குப் பிச்சை போடுவது கூச்சத்தைத் தந்தது. அவள் கை ஏந்தியதில்லை. ஆனால் ஏகப்பட்ட நசுங்கல்கள் கொண்ட ஒரு சிறிய அலுமினியத் தட்டு அவளருகில் இருக்கும். அவனுக்குத் தட்டில் போடுவது மரியாதைக் குறைவாகத் தோன்றியது. அவள் கையில் கொடுப்பதானால் அவள் கண்களைப் பார்க்க வேண்டும்.

பிச்சைக்காரர்களிலேயே பலர் என்ன மொழிக்காரர்கள் என்று சொல்லிவிட முடியாது. குடுகுடுப்பைக்காரர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது ஏதோ சங்கேத மொழி போல இருக்கிறது. அவர்கள் காசு வாங்கிக்கொண்டாலும் ஏதாவது பழந்துணி கொடுத்தால்தான் அந்த இடத்தைவிட்டு விலகுவார்கள். அவனுக்குப் பழக்கமாகிப்போய்விட்ட ஒரு குடுகுடுப்பைக்காரன் பழைய பிளேடுகளைக் கேட்பான். அது இறக்குமதியே இல்லாத காலம். அந்த பிளேடுகள் புதிதாக இருக்கும்போதே சரியாகச் சவரம் செய்யாது. பழைய பிளேடை முகச் சவரத்திற்கு என்று வாங்கிப்போனால் அந்த மனிதர் எவ்வளவு அவதிப்படுவார்?

அந்தக் குடுகுடுப்பைக்காரர் தினமும் வருவதில்லை. மாதக் கணக்கில் வராத அந்த மனிதர் நினைவுகூட மறைந்திருக்கும். திடீரென்று குரல் கேட்கும். அவனுக்குப் பொதுவான வாழ்த்துகள் தவிர வேறு எதையும் அந்தக் குடுகுடுப்பைக்காரர் கூறியதில்லை. குரல் கேட்டவுடன் அவன் பழைய பிளேடுகளைத் தேடி எடுப்பான். அவர்கள் சந்திப்பு ஒரு விநாடிகூட நீடிக்காது.

பெரிய தலைப்பாகையும் கறுப்புக் கோட்டும் வண்ண வேட்டியும் கைமணிக்கட்டிலிருந்து நீண்டு தொங்கும் கைக்குட்டையும் முகத்தில் பெரிய மீசையும் அந்தக் குடுகுடுப்பைக்காரரை மிக முக்கிய மனிதனாகத்தான் கருதும்படிச் செய்ய வேண்டும். ஆனால் யாரும் சட்டைசெய்யமாட்டார்கள். எவ்வளவு விசேஷமாக வருங்காலம் பற்றிக் குறி கூறி வாழ்த்தினாலும் லட்சியம் செய்யமாட்டார்கள். அந்தத் தெருவில் அந்தக் குடுகுடுப்பைக்காரருக்குக் கிடைக்கக்கூடியது பழைய பிளேடுதான்.

வயிற்றுக்கு ஏதும் கிடைக்காதபோது முகத்தை மழித்துக்கொள்ள என்ன தேவை இருக்கிறது? ஒருமுறை அந்தக் குடுகுடுப்பைக்காரர் பத்து நாள் மீசை தாடியோடு வந்தார். அந்த மனிதர் கிழவராகிக்கொண்டிருப்பதை முகத்தின் மீது வளர்ந்துகொண்டிருக்கும் தாடி மீசை காட்டியது. இப்போது குடுகுடுப்பாண்டிகளைக் காண்பது அரிதாகிவிட்டது.

கண்கள். . . கண்கள். . . கண்கள் வயதை மட்டும் காட்டவில்லை. ஒரு மனிதர் வாழ்ந்த வாழ்க்கை, வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை எல்லாவற்றையும் காட்டிவிடுகின்றன. அந்த மனிதனின் மனத்தையே காட்டிவிடுகின்றன. கண்களைப் பார்த்தால்தான் இதெல்லாம் தெரியும். கண்களையே பார்க்காமல் இருந்தால் இழப்புத்தான். இழப்பென்று தெரிந்தும் சிலரைப் பார்க்க வேண்டாமே என்றுதான் தோன்றுகிறது. அந்தப் பெண்ணின் கண்களைத் தவிர்க்க முடியவில்லை.

அவன் சாலையைக் கடந்தாக வேண்டும். அது மும்முரமான மரண பயமூட்டும் நாற்சந்தி. நாற்திசைப் போக்குவரத்தை முறைப்படுத்தப் பச்சை, சிவப்பு விளக்குகளும் அந்த விளக்குகள் ஒழுங்கான கவனம் பெறுகிறதா என்று கண்காணிக்க நான்கு காவல்துறைக்காரர்களும் இருந்தார்கள். விளக்கு, காவல் எல்லாம் வண்டிகளுக்குத்தான். காலால் நடக்க வேண்டியவர்கள் எதிர்சாரிப் பச்சை விளக்கைக் கண்டு சாலையைக் கடக்க வேண்டும். ஆனால் அப்போது இடப்புறம் திரும்பும் வண்டிகள் வரும். அவற்றுக்கு இடம்விட்டுக் காத்திருந்தால் மீண்டும் எதிரில் சிவப்பு விளக்கு.

ஆனால் இவ்வளவு அசாத்தியமான சூழ்நிலையிலும் சில பாதசாரிகள் சாலையின் ஒரு பக்கத்திலிருந்து எதிர்சாரிக்குப் போய்க்கொண்டுதான் இருந்தார்கள். அவர்களுக்குத்தான் எவ்வளவு அற்புதமான கணக்கறிவு? மயிரிழையில்தான் வண்டிகள் இவர்களைக் கடந்தன. ஆனால் இவர்களால் இவர்களுக்கோ வண்டிக்காரர்களுக்கோ எந்தப் பதற்றமும் இல்லை. இன்றைய போக்குவரத்து நெருக்கடிகளுக்கு இவர்களிடம் தீர்வு இருந்தது. எந்தச் சாலையும் எந்த நேரத்திலும் இவர்களைச் செயலிழக்கச் செய்யாது.

அவனாகச் சாலையைக் கடக்க முயற்சி செய்வதைவிடுத்துப் பாதசாரிகளில் சாமர்த்தியசாலியாகத் தோன்றிய ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் பக்கத்தில் போய் நின்றான். அவர் ஓரடி வைத்தாலும் அவனும் ஓரடி வைத்தான். ஆனால் அவருடைய லாகவமும் முறைதப்பாத் தன்மையும் அவனிடத்தில் இல்லை. சாலையில் கால்வாசி தாண்டுவதற்குள் நான்கு இரு சக்கர வண்டிக்காரர்கள் அவனை முறைத்துப் போனார்கள். ஒருவர் 'பொறம்போக்கு!' என்று கத்திவிட்டுப் போனார்.

நடுச் சாலையில் ஒரு சிறுமேடை. சாலைக் கடப்பு நிபுணர்கள் அதன்மீது நின்று அடுத்த தாவலுக்குக் காத்திருந்தார்கள். அப்போது எங்கிருந்தோ திடீரென்று அவன்முன் ஒரு பெண் தோன்றினாள். 'சார், சார், பத்து ரூபாதான் சார். ஒண்ணு வாங்கிக்கங்க சார்,' என்றாள். அவள் கையில் ஒரு சிறு கட்டு.

ஒரு காலத்தில் தொண்டையில் மருந்து பூச அல்லது உடலில் கிளம்பும் சொறி சிரங்குக்கு மருந்து பூச ஓர் ஈர்க்குச்சி நுனியில் பஞ்சைச் சுற்றி அதை பிரஷ் மாதிரிப் பயன்படுத்துவார்கள். ஒரு மருந்துக் கம்பெனி அந்த பிரஷ்ஷைச் சிறிதாக, நேர்த்தியாகச் செய்து விற்க ஆரம்பித்தது. பெயர் 'பட்'. அதாவது மொட்டு. அத்தகைய மொட்டுகளின் கட்டைத்தான் அந்தப் பெண் கையில் வைத்திருந்தாள். 'பட்'களைக் கொண்டுதான் காதைக் குடைபவர்கள் சுகானுபவத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்.

சாலையில் ஒரு பாதியில் வண்டிகள் அணிவகுத்துப் பச்சை விளக்குக் காத்திருந்தன. மறுபாதியில் வண்டிகள் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தன. இந்தப் பாதியிலும் பச்சை விளக்கு வந்தவுடன் அதே சீறலோடு வண்டிகள் எதிர்திசையில் பாயும். அப்போது அந்த மறுபாதியைப் பாதசாரிகள் திருடிவிட்டு ஓடுவதுபோலக் கடக்க வேண்டும். அந்த விநாடிப்போதில் ஒரு பெண் 'பட்ஸ்' விற்கிறாள்!

'எனக்குத் தேவையில்லேம்மா,' என்றான்.

அவன் பதில் தந்ததே அவளுக்கு நம்பிக்கையூட்டியது. 'சார், சார், பத்து ரூபாதான் சார். இன்னிக்கு இன்னும் ஒரு கட்டுக்கூட விக்கலை சார்.'

அவன் அங்குமிங்கும் பார்த்தான். எந்த நேரமும் அவனுக்கு வழிகாட்டியாக நின்றவர் முன்னே பாய்வார். அந்தப் பாய்ச்சலுக்கு அவன் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். 'சார், சார். ஒண்ணேயொண்ணு வாங்கிக்க சார்.'

அவன் அவள் கண்களைப் பார்த்தான். முகம், கழுத்து, உடல் எல்லாமே இயல்பாக வளராமல் போஷாக்கின்மையால் சிறுத்து இருந்தன. அந்தப் பெண்ணுக்குப் பதினைந்து பதினாறு வயதுகூட இருக்கலாம். பத்து வயதுக்குள்ள வளர்ச்சிகூட இல்லை. ஆனால் அவளை எவ்வளவு பேர் எப்படியெப்படி யெல்லாம் இம்சைப்படுத்தியிருக்கிறார்களோ?

அவள் பிச்சை எடுக்கவில்லை. முதல் போட்டுப் பொருள் வாங்கி விற்கிறாள்! எந்த நேரமும் விரைவாகப் பாயும் வண்டிகளின் அபாயம் நிறைந்த இடத்தில், அபாயம் நிறைந்த நேரத்தில் அவளுடைய இயக்கம். ஒரு 'பட்ஸ்' கட்டில் என்ன லாபம் பெற முடியும்! அதிகம் போனால் இரண்டு ரூபாய். அதற்காக அவள் உயிரையே விடத் தயாராக இருக்கிறாள். உயிர் போய் விட்டால்கூடத் தேவலை. ஆனால் கை, கால் ஏதாவது போய்விட்டால் வாழ்நாள் முழுதும் சித்திரவதை. இந்த 'பட்ஸ்'கூட விற்க முடியாது.

'அம்மா, எனக்கு பட்ஸ் வேண்டாம்' அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் முன்னே பாயவேண்டிய தருணம் வந்தது. அவன் கண்களைப் பார்த்தான். அவளும் கெஞ்சுகிறபடி அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

'இந்தா, பத்து ரூபா. வெச்சுக்க. எனக்கு பட்ஸ் வேண்டாம். நான் போறேன்.' அவன் பாய்ந்து சென்று சாலை மறுபுறம் சென்றுவிட்டான். அவன் சாலையின் அந்தப் பாதியை முழுதும் கடப்பதற்குள் அங்கும் வண்டிகள் பாயத் தொடங்கின. அவனுடைய சட்டையை யாரோ பிடித்திழுத்தார்கள். அவன் திடுக்கிட்டுத் திரும்பினான். அந்த 'பட்ஸ்' பெண்.

'அம்மா, எனக்கு 'பட்ஸ்' வேண்டாம். நீ பத்து ரூபாய் எனக்குத் திருப்பித் தர வேண்டாம்.' இதைச் சொல்லும்போது அவன் உடல் நடுங்கிற்று. சீறிப் பாய்ந்துகொண்டிருக்கும் வண்டிகளின் நடுவே இந்தப் பெண் அவனுக்கு 'பட்ஸ்' கட்டு தர வந்திருக்கிறாள்! ஐயோ, இதென்ன விபரீதம்!

அந்தப் பெண் அவன் கையில் வைத்திருந்த பையினுள் கையை விட்டாள். ஒரு மஞ்சள் துணி வந்தது. 'இதை வைச்சுக்க, சார். கார் எல்லாம் ரொம்ப நன்னாத் துடைக்கும்.'

'அம்மா, என்னிடம் கார் கிடையாது. இப்போ சைக்கிள்கூடக் கிடையாது.'
'உன் மூக்குக் கண்ணாடியைத் துடைச்சுக்க சார்.'
அந்தப் பெண் ஒரு பொருட்டே இல்லாது மீண்டும் சாலை நடுவில் இருந்த மேடைக்குப் போனாள். அங்கு பச்சை விளக்குக்காகக் காத்திருந்த ஒரு மோட்டார் வண்டிக்காரரிடம் 'பட்ஸ்' விற்க முயற்சி செய்துகொண்டிருந்தாள்.

அவன் அந்த மஞ்சள் துணியை எப்படிப் பயன்படுத்துவது என்று யோசித்தான். மோட்டார் கண்களும் இரு சக்கர வண்டிகளும் நான்கு திசைகளிலும் அந்த நாற்சந்தியைக் கடந்து சென்றன. அவை விரையும்போது மட்டுமல்ல; நிற்கும்போதும் சீறிக்கொண்டிருந்தன.

நன்றி - காலச்சுவடு 2005