‏إظهار الرسائل ذات التسميات தேவிபாரதி. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات தேவிபாரதி. إظهار كافة الرسائل

பிறகொரு இரவு - தேவிபாரதி

யாரோ தன் அறையின் கதவைத் தள்ளித் திறப்பதை அவற்றின் மெல்லிய கிரீச்சிடலைக் கொண்டு அறிந்துகொண்டார் காந்தி. பிறகு மிகக் கவனமாக அடியெடுத்துவைத்து நெருங்கிவரும் பாதங்களின் அதிர்வுகள். கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்குவதைப் போலப் பாவனை செய்தார்.

தனிக்லால்தான் அது. பிர்லா மந்திரில் வாழும் ஜீவன்களிலேயே அதிக எச்சரிக்கை உணர்வுகொண்ட கிழவர்; காந்தியின் முதன்மைச் செயலாளர். செயலாளர் என்பதைவிடச் சீடன் எனச் சொல்லிக்கொள்வதில் அதிகப் பெருமை கொள்பவர். அவருக்குப் பணிவிடை செய்வதையே தேச சேவையாக நம்பிக்கொண்டிருப்பவர். மகாத்மாவின் அறைக்கு நேரெதிரே உள்ள அறையில் இருந்தபடி விடிய விடியத் தூங்காமல் அவரை ஓயாமல் கண்காணித்துக்கொண்டிருப்பதுதான் அவருடைய பணி. ஒரு இரவில் குறைந்தபட்சம் மூன்றுமுறையாவது காந்தியின் அறைக்குள் வந்து அவர் நன்றாக இருக்கிறாரா என நிச்சயப்படுத்திக்கொள்வார் தனிக்லால். அவரிடமிருந்து வெளிப்படும் ஒரு சிறு முனகல்கூட காந்தியைப் பெரும் பதற்றத்திற்குள்ளாக்கிவிடும். ஒருமுறை விளையாட்டாக அவரிடம் சொன்னார் காந்தி "இந்தக் கண்காணிப்பும் உறக்கமின்மையும் எதற்காக தனிக்லால்ஜி? நெருங்கிவரும் என் மரணத்தை நேரடியாகப் பார்க்கும் ஆசையோ?"

பாதி விளையாட்டாகவும் பாதி உண்மையாகவும். பதறிவிட்டார் தனிக்லால்.

"தங்களுக்கு மரணமென்பதில்லை பாபுஜி. இந்தத் தேசத்தின் எதிர்காலம் கருணை மிகுந்த தங்கள் கரங்களில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது."

பெருமூச்செறிந்தார் காந்தி.

"நான் ஒன்றும் அவ்வளவு சீக்கிரம் செத்துப்போய்விடமாட்டேன் தனிக்லால்ஜி. என் கடமைகள் இன்னும் முடியவில்லை. என் போராட்டங்களும் மிக நீண்டவை. தேவைப்படும்வரை வாழும்படி சபிக்கப்பட்டிருப்பவன் நான். ஒருவேளை கடவுள் என்னை முன்கூட்டியே அழைத்துக்கொள்ளத் தீர்மானிப்பாரெனில் யாராலும் அந்தத் தருணத்தை முன்னுணர முடியாது. உங்களாலும்கூட. இருமலும் முனகலும் என் மரணத்தின் சமிக்ஞைகளாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை. என் மரணம் சப்தங்களற்றதாகவே இருக்கும்! அநேகமாக ஒரு வசந்தகாலத்தின் அதிகாலைப் பொழுதில். அப்பொழுது எல்லாத் தாவரங்களும் பூக்கத் தொடங்கியிருக்கும். தில்லியின் மையத்தில் ஆயிரம் வருடங்களாக இருந்துவரும் மிக உயர்ந்த தேவதாரு மரத்தின் உச்சியில் வசிக்கும் சிறு பறவை முதலாவதாக விழித்துக்கொண்டு என் மரணத்தை உலகுக்கு அறிவிக்கும். தனிக்லால்ஜி, அப்பொழுது நீங்கள் உட்பட எல்லோரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பீர்கள்! கவலைகளை விட்டுவிட்டுச் சற்றுத் தூங்குங்கள்."

ஆனால், தனிக்லாலால் ஒருபோதும் தூங்க முடிந்ததில்லை. அதிகாலையில் எழும்பொழுது அவர் தன் கட்டில் விளிம்பில் தலையைச் சாய்த்தவாறு உறங்கிக்கொண்டிருப்பதைக் காண்பார் காந்தி. அவர் விழித்துவிடக் கூடாதே என்பதற்காகத் துளியும் சப்தம் எழுப்பாமல் குளியலறைக்குள் போவார். அன்றைய கடிதங்களை எழுதி முடிக்கும்வரை ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பார் தனிக்லால். ஆனால் உள்ளுணர்வின் தூண்டுதலாலோ என்னவோ காந்தி நடைப்பயிற்சிக்காகக் கிளம்புவதற்குச் சற்று முன்பாக விழித்துக்கொண்டுவிடுவார். பிரார்த்தனைகளின்போதும் காந்தி தன் அறையில் விவாதங்களில் ஈடுபட்டிருக்கும் தருணங்களிலும் தனிக்லாலுக்குக் கண்கள் சொருகும். அதைக் காணும் மகாத்மாவின் மனம் எல்லையற்ற கருணையாலும் இரக்கத்தாலும் ததும்பும்.

ஆனால் ஓயாத இந்தக் கண்காணிப்புகள் தரும் பதற்றத்தையும் எரிச்சலையும் கட்டுப்படுத்திக்கொள்ளும் தன் ஆற்றல் குறைந்து வருகிறதோ எனச் சந்தேகித்தார் காந்தி. மனத்தைப் புண்படுத்தும்படியான சொற்களை உச்சரித்துவிடாதிருப்பதற்குப் பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பது குறித்த கவலைகளோடு அவரது பின்னிரவு நேரங்கள் உறக்கமின்றிக் கழிந்துகொண்டிருந்தன. எல்லாவற்றையும்விடத் தனிக்லால் தன் அறைக்குள் பிரவேசிக்கும் தருணங்களில் அவரது கேள்விகளின் குடைச்சல்களிலிருந்து தப்புவதற்காகத் தூங்குவதைப் போல் பாவனைசெய்ய நேர்வது குறித்தே அதிகம் வருந்தினார் காந்தி. தனிக்லாலைக் காணும்பொழுது அவரது கண்கள் வெறுப்பை உமிழ்ந்தன. இதைக் குறித்து ஆழ்ந்து பரிசீலிக்கவும் செய்தார். இந்த வெறுப்பு தனிக்லாலின் மீதானது மட்டுமன்று. நேருவின் மீதானது; பட்டேலின் மீதானது; மனப்பிறழ்வுகளுக்குள்ளானவர்களைப் போல் கலவரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எல்லோரது மீதானதுமாகும். உண்மையில் இது சுய வெறுப்பின் அடையாளமும் கூடத்தான்.

தனிக்லாலின் காலடியோசை தன்னை நெருங்கியதும் விழித்துக்கொண்டார் காந்தி.

"நீங்கள் இன்னும் தூங்கவில்லையா தனிக்லால்ஜி? நள்ளிரவு நேரத்தில் எதற்காக இப்படி நடமாடிக்கொண்டிருக்கிறீர்கள்? என் பொருட்டு நீங்கள் இப்படி உங்களைத் துன்புறுத்திக் கொள்ளாதீர்கள் எனப் பலமுறை கேட்டுக்கொண்டிருக்கிறேன். எல்லோரும் என்னைக் குற்ற உணர்வுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்! தீராத துயரத்தில் மூழ்கியிருக்கும் நம் மக்களுக்கு எதாவது செய்வதே நம் இப்போதைய பணி. எனக்குப் பணிவிடைசெய்வதைக் காட்டிலும் அது எவ்வளவோ மேலானது தனிக்லால்ஜி"

"என்னை மன்னியுங்கள் பாபுஜி! பனி மிக அதிகமாக இருந்ததால் இங்கு வந்தேன். நீங்கள் இந்தக் கதரைப் போர்த்திக்கொள்ளலாம் அல்லவா?" எனக் கையோடு கொண்டுவந்திருந்த ஒரு கனத்த போர்வையை அவருக்குப் போர்த்திவிட்டார்.

போர்வையை விலக்கிவிட்டு எழுந்து உட்கார்ந்தார் காந்தி.

"தூக்கமே வரவில்லை. எல்லோரும் வீணாக என்னைத் தடுத்துவைத்திருக்கிறீர்கள். இன்று முழுவதும் பயனுள்ள ஒரு காரியத்தையும் செய்யவில்லை. சந்திப்புகள், உரையாடல்கள், பேட்டிகள் எனச் சலித்துப்போய்விட்டது. தொண்டர்களுடன் இணைந்து முகாம்களில் வசிக்கும் எளிய மனிதர்களுக்காகப் போர்வைகளைச் சேகரிக்கப் போயிருக்கலாம். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என எல்லோரும் சொல்ல முடியாத துயரில் மூழ்கிக் கிடக்கும்பொழுது நான் இங்கே ஒரு பாதுஷாவைப் போல் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.''

"தொண்டர்கள் தம் கடமைகளை ஒழுங்காகச் செய்துகொண்டிருக்கிறார்கள் பாபுஜி, நீங்கள் வருந்த வேண்டாம். அகதிகளுக்கு இன்று மட்டும் நூற்றுக்கணக்கான போர்வைகளும் கம்பளிகளும் விநியோகிக்கப்பட்டன."

"ஒரு நல்ல தகவலைச் சொன்னதற்காக உங்களுக்கு நன்றி. எல்லோருக்கும் அவை சமமாக வழங்கப்பட்டிருக்கின்றன அல்லவா?"

"ஆமாம், பாபுஜி எல்லா முகாம்களுக்கும் சமமாகவே வழங்கப்பட்டன"

காந்தி புன்னகைத்தார். "மக்கள் மனமுவந்து உதவுகிறார்கள் அல்லவா? கேட்பதற்கே நிறைவாக இருக்கிறது. கடவுள் கருணை மிகுந்தவர் என நான் எப்பொழுதுமே சொல்லி வந்திருக்கிறேன்.'' ஓயாது அலைக்கழிக்கும் கலவரங்களால் வெதும்பிக்கிடந்த அவர் மனத்தில் நம்பிக்கையின் ஒளிபடரத் தொடங்கியது. அண்மையில் தான் மேற்கொண்ட உண்ணா நோன்பு வீணாகிவிடவில்லை. சோர்விலிருந்தும் உறக்கமின்மையின் களைப்பிலிருந்தும் விடுபட்டவராக எழுந்தார், "தனிக்லால்ஜி, கொஞ்சம் வெந்நீர் குடிக்கிறீர்களா? நாம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கலாமே" என்றவாறு சமையலறையை நோக்கி நடந்தார் மகாத்மா. தனிக்லால் பதற்றத்துடன் பின்தொடர்ந்துபோய் அவருக்கு உதவ முற்பட்டார், "சரி, எல்லாவற்றையும் எனக்குச் சொல்லுங்கள். அவற்றைக் கேட்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன்."

தனிக்லாலை உற்சாகம் தொற்றிக்கொண்டது. அன்றைய நிகழ்வுகளில் மகாத்மாவுக்குச் சந்தோஷமளிக்கக்கூடியது எனத் தான் கருதிய ஒவ்வொன்றையும் மிக விரிவாக எடுத்துரைக்க முற்பட்டார். துர்க்மான் கேட்டிலும் சாந்தினிச் சௌக்கிலும் இருந்த முகாம்களில் இருந்த அகதிகள் தொண்டர்களைக் கண்டதும் எவ்வளவு உற்சாகமடைந்தார்கள் என்பதை விவரித்தார்.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அங்குப் போயிருந்த மகாத்மா அவர்களுடைய வாழ்வின் இழிநிலையை நேரில் பார்த்திருந்தார். துர்க்மான் கேட்டில் ஏராளமான சிறுமிகள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். அவரைச் சந்தித்த பன்னிரண்டே வயதான ஒரு இஸ்லாமியச் சிறுமியை அவரால் மறக்கவே முடியவில்லை. கண் முன்னால் தன் பெற்றோர் வெட்டிச் சாய்க்கப்பட்ட கதையை அவள் மகாத்மாவுக்குச் சொல்லியிருந்தாள். கலவரக்காரர்கள் நள்ளிரவில் அவர்களது குடியிருப்புகளைச் சூழ்ந்துகொண்டார்களாம். சத்யாக்கிரஹியான அவளுடைய தந்தை குடியிருப்புவாசிகளைக் காப்பாற்றுவதற்காக அவர்களது பாதங்களில் விழுந்து தம் மக்கள்மீது கருணை காட்டுமாறு கெஞ்சினாராம். ஆயுதமேந்திய அக்கொடியவர்களுக்கு முன்னால் தன் இரு கைகளையும் கூப்பிநின்ற தந்தையின் முகத்தைத் தன்னால் மறக்கவே முடியவில்லை என்றாள் அந்தச் சிறுமி. பிறகு அவர்கள் கும்பிட்டு நின்ற அவருடைய கைகளை ஒன்றன்பின் ஒன்றாக வெட்டினார்கள்.

தாய் அவளை எப்படியாவது காப்பாற்றிவிட முயன்றாள். அவசர அவசரமாக அவளுடைய நெற்றியில் குங்குமத்஬த் தீற்றினாள். 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கமிடும்படி யோசனை சொன்னாளாம். அப்படிச் செய்தால் கலவரக்காரர்கள் அவளை விட்டுவிடுவார்கள், அதன் பிறகு தப்பித்து எங்காவது போய்ப் பிழைத்துக்கொள் என்றாள் தாய். ஆனால் அவள் மறுத்துவிட்டாள். மாறாக 'அல்லாஹு அக்பர்' என்பதே அவர்களிடம் அவள் சொன்னது,

"அவர்கள் உன்னை விட்டுவிட்டார்களா?"

"அவர்களுக்கு என் உடல் தேவையாக இருந்தது. என்னை இழுத்துக்கொண்டு போனார்கள். ஒன்பது நாள்கள்வரை தம் வாகனத்திலேயே அடைத்துவைத்து என் உடலைச் சூறையாடினார்கள். நான் இறந்துவிட்டதாக நினைத்துத் தெருவோரம் வீசிவிட்டுப்போய்விட்டனர். பிறகு நானாக இந்த முகாமுக்கு வந்தேன். அப்பொழுது எனக்கு எந்த அடையாளமும் இருக்கவில்லை. என்னைப் போன்ற பல சிறுமிகளை நான் சந்தித்தேன். எல்லோரும் ஒரே மாதிரிதான் தென்பட்டோ ம். குருதி கசியும் ஒரேவிதமான மனங்கள். என் பெயர்கூட எனக்கு மறந்துபோயிருந்தது."

"அந்தக் குழந்தையைச் சந்தித்தீர்களா? தனிக்லால்ஜி" எனக் கேட்டதும் அவர் தடுமாறினார். ஞாபகங்களை மீட்டுக் கொள்வதற்கு முயன்றதைப் பார்த்ததும் எங்கே அவர் பொய் சொல்லிவிடுவாரோ என்னும் பதற்றம் ஏற்பட்டது காந்திக்கு. "சரி, நீங்கள் போய்ப் படுத்துக்கொள்ளுங்கள், எனக்கு மிகக் களைப்பாக இருக்கிறது'' என அவசர அவசரமாக விடைகொடுத்துவிட்டுப் படுக்கையில் சாய்ந்தார். கிளம்புவதற்குத் தயாரான தனிக்லாலின் முகத்தில் சிரிப்புப் பொங்கிக்கொண்டு வந்தது, 'எதை நினைத்துக்கொண்டீர்கள் தனிக்லால்ஜி?"

"மன்னித்துக்கொள்ளுங்கள் பாபுஜி, என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அடக் கடவுளே... எப்பபடிப்பட்ட ஆள் இந்தப் பகவதிசரண். வியந்துபோய்விட்டேன். அப்படியே அச்சு அசலாக அல்லவா இருந்தான். இப்படியும் நடக்குமா என்ன? நல்ல ஆள் இந்தப் பகவதிசரண்." என வயிறு குலுங்கச் சிரித்தார்.

மவுனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் காந்தி. பிறகு இருண்டு அடங்கியது தனிக்லாலின் முகம். சிரசைக் கவிழ்த்து முழங்கால்களுக்குள் புதைத்துக்கொண்டு ஒரு கதைபோல எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினார்அவர்.

"அவரை உங்களுக்குத் தெரியுமல்லவா? அந்த இளம் வங்காளி உங்கள் சீடர். உங்களைப் பார்ப்பதற்காகவே தில்லிக்கு வந்தவர். கல்கத்தாவில் அவர் புரிந்த சேவைகளைப் பலரும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார்கள். இளைஞர். அநேகமாகத் தன் முப்பதுகளின் இறுதியில் இருக்கக்கூடும். நாள்தோறும் மொட்டையடித்துக்கொள்கிறார் என நினைக்கிறேன். ஆனால் அந்த மீசையும் புருவங்களும் ..." சொல்லச் சொல்லச் சிரிப்புப் பொங்கியது தனிக்லாலுக்கு.

"கேளுங்கள் பாபுஜி. நேற்று நாங்கள் மிகவும் சோர்ந்து போயிருந்தோம். யாருமே எங்களுக்கு உதவ முன்வரவில்லை. மிகவும் வசதிபடைத்த குஜராத்திகளும்கூட. மாளிகைகளின் வாசல்களில் நாங்கள் இசைத்த பாடல்கள் யாருடைய இதயத்தையும் தொடவில்லை. பிற்பகல்வரை சில கந்தல்களை மட்டுமே திரட்ட முடிந்திருந்தது. நாங்கள் மிகச் சோர்ந்துபோனோம். கலவரத்தால் பாதிப்புக்குள்ளாகி முகாம்களில் அவதிப்படும் எளியவர்களுக்குக் கருணை காட்டுமாறு மன்றாடி நின்றோம். யாருமே இரக்கம் காட்டவில்லை, பாபுஜி. பரம ஏழையாகத் தென்பட்ட ஒரு முதியவன் தன் மேலாடையைத் தந்தான். நாங்கள் கேட்காத போதிலும் வலிய முன்வந்து அவன் அந்த உதவியைச் செய்தான். அது ஒரு மகத்தான தருணம். அந்தத் தருணத்தில்தான் நாங்கள் எங்கள் நம்பிக்கையை மீட்டெடுத்துக்கொண்டோ ம் பாபுஜி."

"ஆமாம், மகத்தான தருணம்தான் அது. அந்தக் கந்தல்தான் நாம் வெற்றிபெற்றிருக்கிறோம் என்பதற்கான அடையாளம். இல்லையா தனிக்லால்ஜி?" என உவகையோடு குறுக்கிட்டார் மகாத்மா. அதைப் பொருட்படுத்தும் மனநிலை தனிக்லாலுக்கு இல்லை. தன் கதையின் பரபரப்பான ஒரு கட்டத்தை நெருங்கும் பதற்றம் அவர் முகத்தில் தென்பட்டது.

"பிறகு அவர் சிலுவைக் குறியிட்டுக்கொண்டதை நாங்கள் பார்த்தோம். எல்லோரும் ஒருமித்த குரலில் சொன்ன நன்றியைப் பொருட்படுத்தாமல் இயேசுவைக் குறித்த தோத்திரம் ஒன்றை முணுமுணுத்துக்கொண்டே அவன் சென்றுவிட்டான். நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். பனிக்கால வெயில் எங்கள் முகங்களை எரித்தது. முந்தையதைவிடவும் கொடுமையாக இருந்தது அந்தப் பயணம். யாருமே எங்களைப் பொருட்படுத்தவில்லை. பிறகு நடந்தவைதான் நம்பவே முடியாதவையாக இருந்தன, பாபுஜி. கேளுங்கள் இதை! அப்பொழுது நாங்கள் தில்லியின் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் ஒரு பகுதியில் சென்று கொண்டிருந்தோம். வேடிக்கை பார்ப்பதற்காகப் பலர் எங்களைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தனர். ரகுபதி ராகவ ராஜாராம் என்னும் பிரார்த்தனை கீதத்தை இசைத்தபடி நாங்கள் போய்க்கொண்டிருந்தோம். அப்பொழுது எங்களுக்குப் பின்னால் கேட்ட 'மகாத்மா காந்திக்கு ஜே!' என்னும் பெருத்த ஆரவாரத்தைக் கேட்டு ஆச்சரியமுற்றவர்களாக நாங்கள் திரும்பிப் பார்த்தோம். கடவுளே, இன்னும்கூட அந்தக் காட்சியை எங்களால் நம்ப முடியவில்லை. கிறித்துவைப் போல எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார் அவர்! மகாத்மா! எங்களில் யாருக்குமே அவரை அடையாளம் காண முடியவில்லை. அச்சு அசல் உங்களைப் போலவே தென்பட்டார். தீராத ஆச்சரியத்துடன் 'பாபுஜி' என எல்லோரும் அவரை வணங்கினோம். மிகக் கருணையுடன் எங்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறே குழுமியிருந்த மக்களுக்குத் தன் வந்தனத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்தார். மக்கள் அவரை வேட்கையுடன் நெருங்கினார்கள். அவர் போர்த்தியிருந்த தூய வெண்ணிறக் கதராடையையும் அவரது மெலிந்த கரங்களையும் தீண்டிப்பார்த்துத் தாளாத சந்தோஷமுற்றதை நான் பார்த்தேன். பிறகு எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக அவருடைய பாதங்களைத் தொட்டு வணங்க முற்பட்டார்கள். வீடுகளினுள்ளிருந்தும் சந்துகளிலிருந்தும் ஓடோ டியும் வந்து அவரைச் சூழ்ந்துகொண்டார்கள்.''

குழப்பத்தோடும் வியப்போடும் தனிக்லால் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார் காந்தி. குறுக்கிட்டு ஏதோ கேட்கவும்கூட முயன்றார். ஆனால் கட்டுக்கடங்காத ஆர்வத்துடன் விவரித்துக் கொண்டிருந்த தனிக்லாலின் கவனத்தை அவரால் தன் பக்கம் ஈர்க்க முடியவில்லை.

"பிறகு அவர் கூட்டத்தினரிடையே உரையாற்றத் தொடங்கினார். உங்களுடையதைப் போன்றே மிகச் சன்னமான, உறுதியான அந்தக் குரல், கொடுமைகளுக்குள்ளாகித் துரத்தப்பட்டு அடைக்கலம் புகுந்திருப்பவர்களுக்கு உதவுமாறு எல்லோரையும் வற்புறுத்தியது. வாழ்வின் அறம் குறித்து நீங்கள் சொல்லியிருந்த அதே வாக்கியங்களை உங்களுடைய குரலிலேயே திருப்பிச் சொன்னார் அந்த மனிதர்! நாம் ஆற்ற வேண்டிய கடமைகள், நம் பொறுப்புகள், பதற்றமான தருணங்களில் வெளிப்பட வேண்டிய விவேகம், நெருக்கடியான தருணங்களில் மேற்கொள்ள வேண்டிய பொறுமை, நம் ஒவ்வொருவருக்குள்ளும் செயல்படவேண்டிய குற்ற உணர்வு என உங்களின் உன்னதமான எல்லா வாக்கியங் களையும் அப்படியே திருப்பிச் சொன்னார் அவர்! தொனி மாறாமல் அச்சு அசல் அப்படியே...! கீதோபதேசம் எனவோ கிறித்துவின் மலைப் பிரசங்கம் எனவோ நான் அதைக் கற்பனை செய்துகொண்டேன். நம்பவே முடியாமல் எல்லா வற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார்கள் மக்கள். எல்லோரும் மந்திரத்திற்குக் கட்டுண்டதுபோல் தம்மிடம் உள்ளவற்றிலேயே சிறந்தவையெனக் கருதத்தக்க போர்வைகளையும் கம்பளிகளையும் கொண்டுவந்து அவரது பாதங்களுக்குக் கீழே குவிக்கத் தொடங்கினர். அவரோ மாறாத புன்னகையுடன் அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார்!"

மிகச் சோர்ந்துபோயிருந்தார் தனிக்லால். எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிடும் வேகம் அவரைப் பேசவைத்துக்கொண்டிருந்தது.

"அதற்கு மேல் எனக்குப் பொறுமை இருக்கவில்லை. முண்டியடித்துக்கொண்டிருந்த கூட்டத்தினரை விலக்கி மிகச் சிரமப்பட்டு நான் அவரை நெருங்கினேன். சொன்னால் நம்பமாட்டீர்கள் பாபுஜி! நான் அவரை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டேன். அவருக்கு மிக அருகில் நெருங்கி நின்றுகொண்டு 'நீங்கள் பகவதிசரண் அல்லவா?' என அவரது செவிகளுக்குள் கிசுகிசுத்தேன். பதில் சொல்லாமல் மிகச்சாந்தமாகப் புன்னகைத்தார் அவர். பாபுஜி, அச்சு அசல் தங்களுடையதே போன்ற புன்னகை அது!"

mmm

பேரமைதியுடன் விளங்கிற்று மாளிகை. நேரம் நள்ளிரவைக் கடந்துவிட்டிருந்தது. பனியின் கடுமையும் தீவிரமடைந்திருந்தது.

மிகக் களைப்பாக இருந்தார் காந்தி; படுத்துக்கொள்ள விரும்பினார். சற்று நேரமாவது உறங்க வேண்டும். இன்னும் நடக்கலாமா எனவும் நினைத்தார். எண்ணற்ற விஷயங்களைக் குறித்து யோசிக்க வேண்டியிருந்தது. முடிவேயில்லாமல் நடைபெற்றிருந்த அன்றைய விவாதங்கள் அவரைச் சோர்வடையச் செய்திருந்தன. எல்லாமே கைமீறிப் போய்க்கொண்டிருப்பதாகத் தோன்றியது காந்திக்கு. சிறிதளவு நம்பிக்கையும் மீந்திருந்தது. எல்லாவற்றுக்கும் எதாவதொரு தீர்வு இருக்கக்கூடும். அன்றைய முற்பகலில் பட்டேலுடன் விவாதித்துக்கொண்டிருந்தபொழுது அவரால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. "நீங்கள் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் சர்தார்?" என இருக்கையிலிருந்து எழுந்து நின்றுவிட்டார் மகாத்மா. அந்தச் சமயத்தில் தன் உடல் எப்படி நடுங்கியது என்பதையும் முகம் எப்படி வியர்த்துக்கொட்டியது என்பதையும் அருவருப்புடன் நினைவுகூர்ந்தார்.

பயந்துபோய்விட்டார் அந்த இரும்பு மனிதர். விளக்க மளிப்பதற்கும் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதற்கும் முற்பட்டார்.

"பாபுஜி, நாம் இவற்றைப் பற்றி மறுபடியும்கூட விவாதிக்க முடியும் என நம்புகிறேன். தங்களிடமிருந்து மறைப்பதற்கு உண்மையிலேயே எங்களிடம் எதுவுமில்லை" என்றார் பட்டேல். அவர் குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது. எழுந்து நின்று தன் கைக்கடிகாரத்தை அப்பொழுதுதான் அதை முதல்முறையாகப் பார்ப்பவரைப் போலத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருந்தார். பார்த்தபடியே பேசவும் தொடங்கியிருந்தார். அவருடைய செயலாளர், தான் கையோடு கொண்டு வந்திருந்த ஆதாரங்களைக் கோப்புகளிலிருந்து பிரித்தெடுத்து உடனுக்குடன் அமைச்சரிடம் தந்துகொண்டிருந்தார். அவசரத்தின் காரணமாக ஓரிரு தாள்களைப் பிய்த்தெடுக்கவும் நேரிட்டது. செயலாளரின் அந்தச் செய்கை காந்தியின் மனத்தில் பெரும் துக்கத்தை மூளச்செய்தது. ஒரு குழந்தையின் கரத்தை அதன் உடலிலிருந்து பிய்த்தெடுப்பதைப் போன்ற ஒரு கற்பனையை அது அவருக்குத் தூண்டியது. அதைப் பற்றிப் பட்டேலிடம் சொல்லவும் செய்தார். அதைத் தொடராமலிருக்கும்படியும் கேட்டுக்கொண்டார், "தாள்களை மென்மையாகக் கையாள்வதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளனவே?" என மகாத்மா கூறியதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் பட்டேல்.

செயலாளரிடமிருந்து அந்தக் கோப்புகளை வாங்கி மிக மென்மையாகத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார் பட்டேல். ஆனால் விளக்கமளிக்கத் தொடங்கிய பொழுது அவரால் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. சில நிமிடங்களில் செயலாளரைவிடவும் அதிக வேகத்துடன் தாள்களைப் பிய்த்தெடுக்கத் தொடங்கி யிருந்தார் அந்த இரும்பு மனிதர்.

"நேரமாகிக்கொண்டிருக்கிறதே...!" எனத் தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோல முணுமுணுத்தபடி அவற்றை மகாத்மாவின் முகத்துக்கெதிராக விரித்துப் பிடித்து முக்கிய மான வரிகளின் மீது தன் சதைப்பற்று மிகுந்த ஆட்காட்டி விரலை ஓடவிட்டும் சில சொற்றொடர்களை உரத்த குரலில் வாசித்துக் காண்பித்தும் தன் கூற்றுகளுக்கு வலுவூட்ட முயன்று கொண்டிருந்தார் பட்டேல்.

பணிவையும் நிதானத்தையும் கடைபிடிப்பதற்கு ஓயாமல் முயற்சித்தார். எனினும் அவ்வப்பொழுது அவர் குரல் உயர்ந்தது. ஒவ்வொரு முறையும் காந்தியிடம் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதைத் தவிர அவரால் வேறெதுவும் செய்யமுடியவில்லை.

சற்று நேரத்திற்குள் மேலும் சில செயலாளர்களும் பல உதவியாளர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். ஒவ்வொருவரும் தம்முடன் எண்ணற்ற கோப்புகளைக் கொண்டுவந்திருந்ததைப் பார்த்தார் மகாத்மா. நம்பவே முடியாத ஒழுங்கோடும் கட்டுப்பாட்டோ டும் காட்சியளித்த அவர்கள் யாரும் யாருட னும் ஒருவார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை; யாரும் யாரையும் பார்த்துக்கொள்ளவுமில்லை. எனினும் அவர் களிடம் மிகத் துல்லியமான ஒருங்கிணைப்பு நிலவியதைக் கவனித்தார் காந்தி. புதிதாகச் சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டின் பணியாளர்களிடம் காணப்படும் பதற்றங்களும் தயக்கங்களும் துளிகூட அவர்கள் யாரிடமும் தென்படவில்லை. அவர்களில் பெரும்பாலோர் தோற்றத்திலும் வயதிலும் பட்டேலை மிகவும் ஒத்திருந்தனர். அவரைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே ஆங்கிலப் பாணியிலான கோட்டுகளும் கழுத்துப்பட்டி களும் அணிந்திருந்தனர், "கதராடைகளையே உடுத்துமாறு நம் அரசு ஊழியர்களிடம் நீங்கள் கேட்டுக்கொள்ள வில்லையா?" எனக் கேட்டதற்கு ஒரு பெண்ணைப் போல வெட்கப்பட்டுக்கொண்டார் பட்டேல்.

பிறகு தன் விளக்கங்களைத் தொடர்ந்தார்.

கடைசியில், "நீங்களே இவற்றுக்கொரு தீர்வு சொல்லுங்கள் பாபுஜி. நடைமுறையில் செயல்படுத்தத்தக்க ஒரு தீர்வினைச் சொல்லுங்கள். உடனடியாகச் செயலில் இறங்குவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்" என்று கிட்டத்தட்ட மன்றாடினார் பட்டேல், "எங்களுக்கு வேறு வழியே இல்லை பாபுஜி! இவை தவிர்க்க முடியாதவை. வேண்டுமானால் என் பொறுப்புகளை வேறொருவருக்குக் கொடுக்கலாம். ஆனால், அந்த வேறொருவருக்கும் இவை தவிர்க்க முடியாதவையாகவே இருக்கும்".

"தவிர்க்க முடியாதவை, வேறு வழியற்றவை . . . நல்ல சொற்றொடர்கள்!" எனத் தன் அறையின் இருளுக்குள் தனித்துவிடப்பட்டிருந்த காந்தி முணுமுணுத்துக்கொண்டார். முந்தைய இரவு, விடைபெறும்பொழுது தனிக்லாலும் அதே சொற்றொடர்களைத்தான் சொல்லிவிட்டுப் போயிருந்தார். அந்தச் சொற்றொடர்களும் அந்த 'வேடிக்கை'யான கதையை அவர் விவரித்த விதமும் அவரது நினைவுக்குவந்தன. தனிக்லாலின் குரலும் முகபாவங்களும் முடிவாக அவரிடமிருந்து பீறிட்டுவந்த சிரிப்பும் குலுங்கும் வயிறும் அப்படியே அவர் மனக்கண் முன் தோன்றின. 'மகாத்மா' பகவதிசரணின் அத்தோற்றமும்கூட அவரது கற்பனையில் தோன்றிற்று.

அச்சு அசல் தன்னைப் போலவே தோற்றமளிக்கிற இளம் வங்காளி. எவ்வளவு நுட்பமாகப் பகவதிசரணைப் பற்றி வர்ணித்தார் தனிக்லால்! அவர் வர்ணித்த விதத்தில் இதுவரை பார்த்தறியாத அந்த மனிதரை மகாத்மாவால் துல்லியமாகக் கற்பனை செய்ய முடிந்திருந்தது. அவரது மென்மையான குரலையும் கனிவான புன்னகையையும் சாந்தமான பார்வையையும் தவிர அந்த இளைஞனின் வயிற்றில் தென்படும் சுருக்கங்களையுங்கூடத் தன் கற்பனையில் கண்டார் காந்தி.

இதோ மக்கள் பகவதிசரணைச் சூழ்ந்துகொள்கிறார்கள்; வாழ்த்துகிறார்கள்; முழக்கங்கள் எழுப்புகிறார்கள், "மகாத்மா காந்திக்கு ஜே! மகாத்மா காந்திக்கு ஜே!" மகாத்மா பகவதிசரண் அவர்களுக்கு ஆசி வழங்குகிறார். கூட்டம் பரவசமடைகிறது. ஆர்ப்பரிக்கிறது, கத்துகிறது, கண்ணீர் பெருக்குகிறது. மகாத்மா அவர்களிடையே உரையாற்றுகிறார், அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார், கட்டளையிடுகிறார். பலரும் அவரை நோக்கி ஓடுகிறார்கள், தொட்டுப் பார்க்கிறார்கள். ஒரு மனிதன் அவருடைய மேலாடையைப் பறித்துக்கொண்டு ஓடுகிறான். அவர் அவனை அழைத்து அவனுக்குத் தன் உள்ளாடையையும் வழங்குகிறார். இப்பொழுது அவர் அனைவரின் முன்பாகவும் முழுநிர்வாணமாக நிற்கிறார், "ஆண்டவரே, அழகிய இத்தோட்டத்தினுள் என்னை ஏன் நிர்வாணமாக அலையவிட்டிருக்கிறீர்?" அவர் வெட்கமடைகிறார். அவர்களிடமிருந்து தப்ப முற்பட்டு ஓடுகிறார். எல்லோரும் அவரைத் துரத்துகிறார்கள். ஒருவன் அவருடைய மீசை ரோமங்களைப் பிய்த்தெடுத்துப் பத்திரப்படுத்திக்கொள்கிறான். மற்றொருவன் அவரது விரல் நகங்களைப் பெயர்த்துக்கொண்டு ஓடுகிறான். இன்னொருவனோ மகாத்மாவின் பற்களைப் பிடுங்க யத்தனிக்கிறான்.

மகாத்மாவுக்கு வலி பொறுக்க முடியவில்லை. அவர் 'அய்யோ' என ஓலமிடுகிறார். அபயக்குரல் எழுப்புகிறார். தொலைவில் நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு போலீஸ்காரன் வெகு நிதானமாக அவரை நோக்கி நடந்துவருகிறான். "எதற்காக இப்படிக் கத்துகிறாய்?" எனக் கேட்டுக்கொண்டே அவரது இடது கன்னத்தில் ஓங்கி அறைகிறான். மகாத்மா அவனுக்குத் தன் வலது கன்னத்தைக் காட்டுகிறார். அவன் அவருடைய வலது கன்னத்திலும்கூட அறைகிறான். அவர் தன் இரு கன்னங்களையும் மாறிமாறி அவனுக்குக் காண்பிக்கிறார். அவனும் சளைக்காமல் அடிக்கிறான். குருதி தெறிக்கிறது. அவருடைய பொக்கை வாயில் எஞ்சியிருந்த சில பற்களும் விழுந்துவிடுகின்றன, விழிக்கோளங்களிரண்டும் தெறித்து விழுகின்றன. அவற்றைச் சேகரிப்பதற்காக முண்டியடிக்கிறது மக்கள் கூட்டம். அவருக்குப் பார்வை இருண்டது. எங்கும் ஒரே இருள்; காரிருள், "நான் மகாத்மா காந்தி அல்ல. சரண், பகவதிசரண் என்னும் வங்காளி!" அனிச்சையாகக் கண்களைத் தடவிப் பார்த்துக்கொண்டார் மகாத்மா.

அவருக்கு மூச்சிரைத்தது. மிகக் களைத்துப்போனவராகப் படுக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார்.

பிறகு கண்களைத் திறந்து பார்த்தபொழுது அறை பிரகாசமாக இருந்தது. சீரற்ற ஒளிக்கற்றைகள் தன் அறையினுள் அலைந்துகொண்டிருப்பதைப் பார்த்தார் காந்தி. விடிந்துவிட்டதோ? வெகு காலத்திய வழக்கத்திற்கு மாறாக இன்று நெடுநேரம் தூங்கிவிட்டோ மோ? அப்படியானால் மரணம் நெருங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இனி முதுமையை ஒப்புக்கொண்டுவிட வேண்டியதுதான். எழுபத்தெட்டு வயது ஆகிவிட்டதல்லவா! புன்னகைத்துக்கொண்டார் மகாத்மா.

தனிக்லாலை எங்கே? மனுவையும் காணவில்லையே? அந்தச் சிறுமி அவருக்கு முன்பாகவே எழுந்துவிடக் கூடியவளாயிற்றே?

படுக்கையைச் சுருட்டி வைத்துவிட்டுக் காலைக் கடன்களைத் தொடங்குவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த தருணத்தில் எங்கோ பதற்றம்கொண்ட குரல்கள் ஒலிப்பதைக் கேட்டார் காந்தி. என்னவாக இருக்கும் என யோசித்தபடியே ஜன்னலொன்றின் தாளை நீக்கிப் பார்த்தவர் அதிர்ச்சியால் உறைந்துவிட்டார். நெடிதுயர்ந்த அம்மாளிகைக்கு வெளியே, சிறிது தூரத்திற்கப்பால் பற்றியெரிந்துகொண்டிருந்தது தில்லி.

நாலாப்புறங்களிலும் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர் மக்கள். மிகக் கொடிய ஆயுதங்களுடன் தென்பட்ட பத்துப் பதினைந்து பேர் கொண்ட ஒரு கும்பல் தீராத கொலைவெறியோடு அவர்களை விரட்டிச் சென்றுகொண்டிருந்ததைப் பார்த்தார் காந்தி. தாள முடியாத வேதனையுடன் கண்களை இறுக மூடிக்கொண்டார். எல்லா நம்பிக்கைகளையும் இழந்தவராக அங்கிருந்த ஒரு மர நாற்காலியில் சரிந்து விழுந்தார்.

எங்கே தவறு நிகழ்ந்தது?

யார் பொறுப்பாளி? இந்துக்களா? இஸ்லாமியர்களா? யாருக்கு யார் எதிரி? யாருக்கு யார் பலியாகப் போகிறார்கள்? யார் மிஞ்சுவார்கள்? எந்தக் கணக்கைச் சரி செய்வதற்காக இந்த வெறித்தனம்? ஆயிரமாண்டுகளின் வரலாறுதான் தவறிழைத்ததா? அதைத் தாண்டி வெகுதூரம் வந்தாகிவிட்டதே! ஆயுதமெடுக்காமல் தம் ஆன்ம பலத்தால் சுதந்திரத்தை வென்றெடுத்தவர்கள் என உலகம் நம்மைக் கொண்டாடிக்கொண்டிருக்கிற தருணத்தில் மூண்டெழுந்துள்ள இவ்வன்முறைகளுக்கு யார் பொறுப்பு? நானேதானா? ஒரு தத்துவவாதியாக நான் உண்மையைப் புறக்கணித்துவிட்டேனோ? அவரவர் வழியில் விட்டிருந்தால் தீர்வு எட்டப்பட்டிருக்குமோ? கொலைகள் அமைதியைக் கொண்டு வந்திருக்குமா? ஒருவகையில் அது சாத்தியமாகியிருந்திருக்கும்தான். மற்றவர்களை முற்றாக அழித்தொழித்துவிட்டால் அமைதிக்கென்ன குறைச்சல்? பிறகு உள்ளுறையும் ரத்தவெறியைச் சொந்தச் சகோதரன் மீதே அல்லவா பிரயோகிக்க வேண்டியிருக்கும்? வன்முறை மனித இயல்போ? இயற்கை நியதிக்கெதிரானதோ சத்யாக்கிரஹம்? எந்தத் தத்துவத்தை நம்பி இம்மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டோ மோ அந்தத் தத்துவமே பிழையானதோ? இன்றளவும் அறத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் எவ்வளவு வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன! அவற்றின் மீது தீர்ப்பளிக்கும் அருகதை எனக்கோ என்னையொத்த மற்ற சத்யாக்கிரஹிகளுக்கோ உள்ளதா? அப்படியானால் நம் அரசாங்கம் தன் சொந்த மக்களின் மீது பிரயோகிக்கிற வன்முறைகளைக் குறித்தும் நான் பேசியாக வேண்டுமே? கலவரங்களை ஒடுக்குவது என்னும் பெயரால், அமைதியை நிலைநாட்டுவது என்னும் பெயரால், சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்வது என்னும் பெயரால் மேற்கொள்ளப் பட்டுவரும் சட்டபூர்வமான வன்முறைகளைக் குறித்து அமைதியாய் இருப்பவன் தன்னை ஒரு சத்யாக்கிரஹி என அழைத்துக்கொள்வதற்கு எவ்விதத்திலும் தகுதியற்றவன்.

கடவுளே, ஒரு சத்யாக்கிரஹியாக நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?

"தனிக்லால்ஜி, எங்கே போய்விட்டீர்கள்? மனுவையும் எழுப்புங்கள். பதற்றம் நிறைந்த இத்தருணத்தில் உங்களில் யாரையும் காண முடியவில்லையே?" எனக் கூவிக்கொண்டே எழுந்து கதவைத் திறக்க முற்பட்டார் காந்தி. அவரால் அதைத் திறக்க முடியவில்லை. யாரோ அவரது அறையை வெளிப்புறமாகத் தாளிட்டிருந்தார்கள்.

"எங்கே போய்விட்டீர்கள் தனிக்லால்ஜி...? யார் இதைச் செய்தது?"

அறையின் வலப்புற ஜன்னலைத் திறந்து அதன் வழியாக மாளிகையின் பிரதான நுழைவாயிலைப் பார்த்தவருக்குக் குருதி உறைந்துவிட்டது. அதன் மிகப்பெரிய இரும்புக் கதவின் மறுபுறத்தில் எண்ணற்ற மனிதர்கள் குழுமியிருந்தனர். தாக்குதலுக்குள்ளாகிக் குற்றுயிராய்த் தப்பிவந்த நூற்றுக் கணக்கான ஏழைகள்.

"பாபுஜி... பாபுஜி..."

"எங்களைக் காப்பாற்றுங்கள் பாபுஜி..."

"அய்யோ..."

"பாபுஜி இங்கிருக்கும்பொழுது நாம் எதற்காகக் கலங்க வேண்டும்? காவலர்களே தயவுசெய்து பாபுஜியை அழையுங்கள்."

"மூடனே, கதவைத் திற... பிறகு பாபு உங்களை மன்னிக்கவேமாட்டார்"

மீண்டும் கதவை நோக்கி ஓடினார் காந்தி.

"தனிக்லால்... யாரங்கே? இந்தக் கதவை எதற்காகப் பூட்டினீர்கள்? தயவுசெய்து இதைத் திறந்துவிடுங்கள். அவர்கள் அனைவரையும் உள்ளே அழையுங்கள்...! என்மீது தீராத பழியைச் சுமத்திவிடாதீர்கள்...! தனிக்லால், யாரங்கே?"

மீண்டும் திறந்திருந்த ஜன்னலை நோக்கி ஓடினார்.

வாயிலருகே விறைப்பாக நின்றுகொண்டிருந்த காவலர்கள் இருவரும் அபயம் கோரி வாயிலில் திரண்டிருந்தவர்களைப் பார்த்து அலட்சியமாக எதையோ சொல்வதையும் கைவிடப்பட்ட அந்த மக்கள் பெருங்குரலெடுத்துக் கதறுவதையும் அங்கிருந்தபடியே பார்த்தார் காந்தி.

தீவட்டிகளோடும் கொடிய ஆயுதங்களோடும் துரத்திவந்திருந்த கலவரக்காரர்கள் நிராயுதபாணிகளான அந்த அப்பாவிகளை இரக்கமே இல்லாமல் வெட்டிக் கொன்றதையும் ரத்தவெள்ளத்தினூடாகவும் சிதறிக் கிடந்த உடல்களினூடாகவும் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதையும் ஜன்னல் கம்பிகளைப் பற்றி, அவற்றின் மீது தன் முகத்தைத் தாங்கிக்கொண்டு ஒரு சடலமாக நின்று பார்த்துக்கொண்டிருப்பதற்கு மட்டுமே அவரால் முடிந்திருந்தது.

"பாபுஜி, பாபுஜி, எங்களை ஏன் கைவிட்டீர்கள், பாபுஜி?"

கடைசியில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மாளிகையினுள்ளிருந்து தாளாத துயரத்துடன் அங்கு வந்து சேர்ந்தார் மகாத்மா பகவதி சரண்! அம்மாளிகையின் நெடிய கதவுகள் இப்பொழுது அவருக்காக அகலத் திறந்து வைக்கப்பட்டன. காவலர்கள் சூழ மிக மெதுவாக நடந்து சிதறிக் கிடந்த உடல்களை அடைந்தார் மகாத்மா. குற்றுயிராய்க் கிடந்த இரண்டு மூன்று மனித உடல்கள் அவரைக் கண்டு எழ முற்பட்டதையும் அவர் அவர்களுக்குக் கருணை மிகுந்த தன் வாக்கியங்களால் ஆறுதலளிக்க முயன்றதையும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன.

அவருக்குப் பிரக்ஞை தப்பிக்கொண்டிருந்தது.

mmm

மிகக் குறைந்த பக்கங்களையே உடைய மரணத்தின் கடைசி அத்தியாயம் தன் முன் விரித்துவைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார் காந்தி. வாசித்து முடிக்கும்பொழுது மரணம் தேடி வந்துவிடும். தேடி வருமா? தேடியடைய வேண்டுமா? வாழ்வு பற்றிய கற்பனைகள் முற்றுப்பெறும் பொழுது மரணத்தைத் தேடத் தொடங்குகிறான் மனிதன். வாழ்வின் மூலம் உணர்த்த முடியாததை மரணத்தின் மூலம் உணர்த்துவதற்கு ஆசைப்படுகிறான்; தன் மரணத்தைத் தானே தேர்வுசெய்கிறான் என நினைத்தார் காந்தி.

வாழ்தலை ஒரு கடமையாகவே கருதியிருந்தார் அவர். முழு ஆயுட்காலத்தையும் வாழ்ந்து தீர்க்க வேண்டும். அதாவது 125 வருடங்கள்.

எப்போதுமே அவருக்கு அது வெறும் ஆசையாக மட்டும் இருந்ததில்லை. அதற்கேற்றாற் போலவே தன் வாழ்வியல் நடைமுறைகளையும் அமைத்துக்கொண்டிருந்தார். ஆன்மாவைப் போலவே உடல்மீதும் தீராத நம்பிக்கை கொண்டவராக இருந்தார் மகாத்மா. மரணத்தைக் கண்டு ஒரு போதும் அவர் அஞ்சியதில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பாகப் பிரார்த்தனைக் கூடத்திற்கருகே குண்டு வெடிக்கும் ஓசை கேட்டபொழுது மனு பதறிப்போனாள். மிகப் பயந்து போயிருந்த அக்குழந்தைக்கு அப்பொழுது அவர் ஆறுதல் சொன்னார். அது அருகில் உள்ள ராணுவ முகாமில் பயிற்சியின்போது வெடிக்கப்பட்ட குண்டின் ஓசையாயிருக்கலாம் எனச் சொல்லித்தான் அவளைத் தேற்ற வேண்டியிருந்தது. ஆனால், அது தன்னைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்தான் என்பதில் அவருக்குச் சந்தேகமே இருக்கவில்லை. கொலையாளிகள் தனக்கு மிக அருகில் இருக்கிறார்கள்.

காலடிச்சுவடுகளைப் பற்றிப் பின்தொடர்ந்துகொண்டிருக்கிறது மரணம். அதனிடம் தன்னை ஒப்புவிக்க அவர் தயாராகவே இருந்தார். மரணம் அவருக்கு அனுப்பிக்கொண்டிருந்த ரகசியமான செய்திகளை அவர் புன்னகையுடன் எதிர்கொண்டார். அதைக் கேலிசெய்தார்; சவால் விடுத்தார். இம்முதிய வயதில் அவர் மேற்கொள்ளும் உண்ணா நோன்புகள்கூட மரணத்திற்கெதிரான அவரது அறை கூவல்கள்தாம். எங்கே செத்துப்போய்விடுவாரோ என ஒவ்வொருவரும் பதற்றமடைகிறார்கள். மருத்துவர்கள் அவரைப் பரிசோதிக்கிறார்கள். சிறிதளவு பழச்சாறை அருந்துவதற்கு அவர் என்ன நிபந்தனை விதித்தாலும் ஏற்றுக்கொள்கிறார்கள்; அமைதி ஊர்வலங்களை நடத்துகிறார்கள்; கைகுலுக்கிக்கொள்கிறார்கள்; கட்டித் தழுவிக்கொள்கிறார்கள்; பிரார்த்திக்கிறார்கள். பிறகு எல்லோரும் ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட்டு அவரிடம் கொடுத்துவிட்டுக் கொஞ்சம் பழச்சாறைக் கொடுத்து அதைக் குடிக்குமாறு வற்புறுத்துகிறார்கள். அவரும் மனநிறைவோடு அதைக் குடித்து மரணத்தோடு சமரசம்செய்துகொள்கிறார். பிறகு மகாத்மா கனவுகளில் மூழ்கிப்போகிறார். ராமராஜ்யம் குறித்த கனவிலும் 125 வருடங்கள் உயிர் வாழ்வது குறித்த கனவிலும்.

முந்தையவை ஒவ்வொன்றும் மாற்றமின்றித் தொடர்கின்றன. வழக்கம்போலவே அவர் அதிகாலை 3 மணிக்கு எழுந்துவிடுகிறார், காலைக் கடன்களை முடிக்கிறார், கடிதங்கள் எழுதுகிறார், ஹரிஜனுக்காகவும் வேறுசில பத்திரிகைகளுக்காகவும் கட்டுரைகள் எழுதுகிறார், நடைப்பயிற்சி செய்கிறார், ஆட்டுப்பாலும் வேர்க்கடலையும் சாப்பிடுகிறார், தன்னைத் தேடி வருபவர்கள் அனைவரையும் சந்திக்கிறார், சிலரை வாழ்த்துகிறார், சிலரைப் பாராட்டுகிறார், சிலரைக் கண்டிக்கிறார், சிலருக்கு அறிவுரை சொல்கிறார், எல்லோருக்கும் ஆசி வழங்குகிறார். வழக்கம்போலவே அமைச்சர்கள் அவரைச் சந்திக்கிறார்கள், ஆலோசனை கேட்கிறார்கள், தம்பட்டமடித்துக்கொள்கிறார்கள். பிரதமர் நேரு அவரைச் சந்திக்கிறார், சர்தார் பட்டேல் சந்திக்கிறார். இருவரும் தோளோடு தோள் சேர்ந்து நிற்பதைப் பார்த்துப் பூரித்துப்போய்விடுகிறார் மகாத்மா. மாலைப் பிரார்த்தனைக் கூட்டங்களில் அனைவரும் கலந்துகொள்கிறார்கள். குரானிலிருந்தும் பைபிளிலிருந்தும் கீதையிலிருந்தும் வசனங்கள் படிக்கப்படுகின்றன, கேட்கப்படுகின்றன. பிறகு அவை ஒருமித்த குரலில் பாடப்படுகின்றன.

ரகுபதி ராகவ ராஜாராம்

பதீதப் பாவன சீதாராம்

ஈஸ்வர அல்லா தேரே நாம்

சப்கோ சன்மதி தே பகவான்...

மரணத்தின் பல்வேறு பாவனைகள், வெவ்வேறு ஒப்பனைகள்.

பிறகு எங்கிருந்தாவது யார் மூலமாகவாவது கலவரம் பற்றிய ஒரு செய்தி வருகிறது. எரிக்கப்படும் மனித உடல்களிலிருந்து மேலெழும் கரும்புகை தன் அறையின் ஜன்னல்கள்மீது படர்வதை அவர் பார்க்கிறார். வெடியோசைகளையும் கூக்குரல்களையும் அவர் கேட்கிறார். பிறகு தான் வைத்துள்ள குரங்கு பொம்மைகளைப் போலவே மவுனமாகிறார், ஊமையாகிறார், கண்களை மூடிக்கொள்கிறார், செவிகளையும் பொத்திக்கொள்கிறார். ஆனால், செவிகளைத் துளைத்துக்கொண்டு செய்திகள் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியதிகாரம் பெற்ற சத்யாக் கிரஹிகள் லஞ்ச ஊழல்களில் ஈடுபடுவதைப் பற்றிய செய்திகளை, நேருவுக்கும் பட்டேலுக்குமிடையேயான பூசல்கள் அதிகரித்துவருவதைப் பற்றிய செய்திகளைச் செவிகளைப் பொத்திக்கொண்ட நிலையிலும் அவர் கேட்கத்தான் செய்கிறார். 'ஒன்று நான் அல்லது அவர்...'அறைகூவல்கள், மிரட்டல்கள், புகார்கள், எச்சரிக்கைகள், சவால்கள்...!

சத்யாக்கிரஹிகள் தாம் செய்த தியாகங்களுக்குக் கூலிகேட்கிறார்கள்.

எல்லாவற்றையும்விடத் தில்லியினதும் சுயராஜ்யத்தினதும் எதிர்காலம் குறித்தே அதிகம் கவலைப்பட்டார் காந்தி. தன் அறையிலுள்ள குரங்கு பொம்மைகள் தன்னையே கேலி செய்வதாகப்பட்டது அவருக்கு. ஆக, விதவிதமான ஒப்பனைகளைப் போட்டுப் பார்த்துச் சலித்துப்போன மரணம் இப்பொழுது 'அச்சு அசல்' அவராகவே வந்து நிற்கிறது,

'மகாத்மா பகவதிசரணுக்கு ஜே! மகாத்மா பகவதிசரணுக்கு ஜே!'

'இது ஒரு மலிவான தந்திரம்' என வாய்விட்டுச் சொன்னார் மகாத்மா.

மலிவானது, கோழைத்தனமானது. இது அவரது சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கும் ஒரு சவாலும்கூட. அவரது வாழ்வை, மரணம் தன்னுடைய செய்தியாக மாற்ற முயல்கிறது! இந்தச் சவாலை எதிர்கொள்வதில்தான் வாழ்வின் உள்ளுறையான அர்த்தம் பொதிந்திருக்கிறது. வாழ்வைப் போன்றதே மரணமும். அதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை விட்டுக்கொடுப்பதைப் போல வாழ்வை அவமதிக்கும் வேறொரு காரியம் இருக்கவே முடியாது என நினைத்தார் மகாத்மா.

மரணத்தைப் பற்றி அதுவரை எவ்வளவோ கற்பனைகளில் மூழ்கியிருந்திருக்கிறார் மகாத்மா. அது கவித்துவமும் துணிவும் நிரம்பிய ஒரு நிகழ்வாயிருக்க வேண்டும். தான் மேற்கொண்டு வரும் நெடிய உண்ணா நோன்புகளிலொன்று தன் வாழ்வை முடித்து வைக்க வேண்டுமென்பதுதான் மரணம் பற்றிய அவரது நெடுங்காலக் கற்பனையாய் இருந்தது. ஒரு சத்யாக் கிரஹிக்கு அதைவிட மேலான ஒரு வாய்ப்பு இருக்க முடியாது என நினைத்தார் காந்தி? தான் கொல்லப்படலாம் என நினைத்தார். பிரார்த்தனை மண்டபத்திற்கருகே கேட்ட குண்டுவெடிப்புச் சப்தத்தை அவர் பொருட்படுத்தவேயில்லை. அந்தத் தருணத்தில் கொல்லப்பட்டிருந்தால் அது மிக உன்னதமான மரணமாகவே இருந்திருக்கும் என நினைத்தார் மகாத்மா. அவர்களுக்கு முன்னால் வெற்றுடம்புடன் நிற்பதற்கு அவர் இன்னும்கூடத் தயாராகவே இருந்தார். மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் துணிவே ஒரு சத்யாக்கிரஹி கொண்டிருக்க வேண்டிய தகுதிகளில் முக்கியமானது. மகான்கள் மரணத்தைப் புன்னகையுடன் எதிர்கொள்கிறார்கள். மரணம் அவர்களிடம் தோற்றுப்போகிறது. பிறகு அவர்கள் உயிர்தெழுகிறார்கள். சாகாவரம் பெற்றவர்களாகிறார்கள்.

இயேசு கிறிஸ்துவைப் போல, அவரது குரு டால்ஸ்டாயைப் போல. அவர்களது வாழ்வே அவருக்கு ஆதாரம். அவர்களது வாழ்வும் அவர்களது மரணமும்.

இருவருமே மரணத்தை விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள். தமக்கான கொலையாளிகளைத் தம் வாழ்விலிருந்து உருவாக்கியவர்கள். இயேசு மரணத்தைத் தோளில் சுமந்துகொண்டு கல்வாரி மலைக்கு மேற்கொண்ட பயணத்திற்கு இணையானதே யாஸ்னயா போல்யானாவிலிருந்து அஸ்டபோவாவை நோக்கி டால்ஸ்டாய் மேற்கொண்ட பயணமும். அந்தப் பயணத்தைப் பற்றிப் படித்த முதல் தருணங்களை நினைவுகூர்ந்தார் காந்தி. பெருமூச்சுகளோடும் துக்கத்தோடும்தான் அப்பொழுது அவரால் அந்தப் பக்கங்களைக் கடந்து செல்ல முடிந்திருந்தது.

பிறகு அவை அவருக்கு வேறுவிதமாய்த் தென்பட்டன. திரும்பத் திரும்ப அவற்றைப் படித்தார். அதைவிடச் சிறப்பான முறையில் டால்ஸ்டாயால் தன் மரணத்தைத் தேர்ந்தெடுத்திருக்க முடியாது எனத் தோன்றியது அவருக்கு. உலகின் மற்ற எல்லா மரணங்களையும்விடக் கவித்துவமானது அது. அவர் தன் மாளிகையிலிருந்து வெளியேறிய பனிப்பொழிவு மிகுந்த அந்த அதிகாலையை மகாத்மாவால் ஒருபோதும் மறக்க முடிந்ததில்லை.

அதிகாலையில் துயிலெழும் ஒவ்வொரு தருணத்திலும் டால்ஸ்டாயின் நினைவுவரும் மகாத்மாவுக்கு. அநேகமாக அந்த நேரத்தில்தான் யாஸ்னயா போல்யானாவின் புகழ்பெற்ற அந்த மாளிகையிலிருந்து வெளியேறினார் டால்ஸ்டாய். பிர்லா மாளிகைக்கு அழைத்துவரப்பட்ட பிறகு காந்தியின் மனத்தில் அந்தச் சித்திரம் முன்பிருந்ததைவிட அழுத்தமான கோடுகளுடன் உயிர்த்தெழுந்தது. யாஸ்னயா போல்யானாவின் அந்த மாளிகையைப் போன்றதுதான் பிர்லா மாளிகையும். டால்ஸ்டாயைப் போலவே அவரும் இந்த மாளிகையில் ஒரு கைதியின் நிலையில்தான் இருத்திவைக்கப்பட்டிருந்தார். டால்ஸ்டாயைப் போலவே அவருக்கும் வெளியேறிவிட வேண்டுமென்ற வேட்கை இருந்தது.

வெளியேறிவிட வேண்டும். முன்பு தான் வசித்துவந்த துப்புரவாளர் குடியிருப்புக்கோ ஆசிரமத்திற்கோ சென்றுவிட வேண்டும். ஆனால், எல்லோரும் தன்னைப் பின்தொடர்ந்து வந்துவிடுவார்கள். கைதியைப் போலவோ கடவுளைப் போலவோ அடைத்துவைத்து வாயிலில் ஆயதமேந்திய காவலர்களை விறைப்பாக நிற்கவைத்துவிடுவார்கள். பிறகு பழைய கதைதான். கடிதங்கள், சந்திப்புகள், ஆசிகள், அறிவுரைகள். மாலையானால் பிரார்த்தனைக் கூட்டம். நல்ல ஏற்பாடுதான்!

கடவுள்! கைதியாக்கப்பட்ட கடவுள்! வெளியேறுவதனால் டால்ஸ்டாயை அப்படியே பின்பற்ற வேண்டும். தனக்கான ரயில் நிலையத்தை, புராதனச் சிறப்புடைய இம்மாநகருக்கு வெளியே தன் அஸ்டபோவாவைக் கண்டுபிடிக்க வேண்டும்!

சந்தேகமே இல்லை, வரலாறு தன்னையே பிரதியெடுத்துக்கொள்கிறது! வரிக்குவரி அப்படியே, ஒரு எழுத்தையும் விட்டுவிடாமல்!

mmm

1910ஆம் வருடம் அக்டோ பர் மாதம் அதிகாலை 5 மணிக்குத் தன் 83ஆம் வயதில் தான் பிறந்ததிலிருந்து வாழ்ந்துவந்த தன் மாளிகையிலிருந்து வெளியேறினார் டால்ஸ்டாய். அப்போது பனிப்புயல் வீசிக்கொண்டிருந்தது. உறவுகளைத் துறந்து தன் நீண்டநாள் பணியாளரான மக்கோவ்ஸ்க்கியின் துணையோடு துலா குபேர்னியாவின் இருப்புப் பாதைகளில் அலைந்து திரிந்துவிட்டு நவம்பர் 3ஆம் தேதி வோலாவோவிலிருந்து ரஸ்டோ வ்-ஆன்-டாணை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் வண்டியின் மிக மோசமான நிலையிலிருந்த ஒரு இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்துகொண்டிருந்தபொழுது கண்டுபிடிக்கப்பட்டு, பாதியிலேயே அஸ்டபோவா என்னும் மிகச்சிறிய ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டார்.

நிமோனியாவின் தாக்குதலுக்குள்ளாகி அவதியுற்றுக்கொண்டிருந்த டால்ஸ்டாயை ஸ்டேஷன் மாஸ்டரின் உதவியோடும் அவரைத் தேடிக்கொண்டு வந்திருந்த மகள் வார்வாரா மிகெய்லேனாவின் உதவியோடும் கீழே இறக்கினான் மக்கோவ்ஸ்க்கி. ஸ்டேஷன் மாஸ்டரின் அறையில் மூன்று நாள்கள்வரை அவரைத் தங்கவைத்திருந்தார்கள். முழு உலகின் கவனமும் அப்போது அந்த மிகச் சிறிய ரயில்வே ஸ்டேஷனின் மீது கவிந்தது. உலகின் மகத்தான மனிதனொருவனின் மரணத்தை முன்னறிவிப்புச் செய்வதற்காக அய்ரோப்பா முழுவதிலுமிருந்து அஸ்டபோவாவுக்கு வந்திருந்த செய்தியாளர்கள் அங்கு மூன்று நாட்கள்வரை காத்திருந்தார்கள். அவர்களுடைய ஆசிரியர்கள் தம் அலுவலகங்களில் அவருக்கான இரங்கல் கட்டுரைகளைத் தயாரித்து வைத்திருந்தார்கள். தந்தி நிலையங்கள் இடையறாது இயங்கிக்கொண்டிருந்தன. நவம்பர் 7ஆம் தேதி அதிகாலை 6 மணி 5 நிமிடத்திற்கு "என்னைத் தனியே விட்டுவிடுங்கள். யாருமே என்னைப் பொருட்படுத்தாத ஒரு இடத்தை நோக்கி நான் போகிறேன்...!" என்னும் வாக்கியங்களோடு மகத்தான அந்த மனிதரின் இறுதி மூச்சு அடங்கியது.

காந்தி பிர்லா மாளிகையைவிட்டு வெளியேறியபொழுது அதிகாலை 3 மணி 45 நிமிடம். தன் குருவைப் போலல்லாமல் அவர் தன்னந்தனியே புறப்பட்டார். தனிக்லாலையும் அழைத்துச்செல்வது எனத் தீர்மானித்திருந்தவர் பிறகு தன் முடிவை மாற்றிக்கொண்டார். அன்றிரவு பதினொரு மணிக்கு மேல் காந்தியால் அவரைக் காண முடியவில்லை. தன் அழைப்புகளுக்குப் பதிலில்லாமல் போகவே தனிக்லாலைத் தேடிக் கொண்டு அவரது அறைக்குப் போனார் காந்தி. அப்பொழுது மனுவுங்கூட அங்கிருக்கவில்லை. முந்தைய நாளிரவு சுசீலா அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார்.

காலையில் அங்கிருந்து திரும்பியவுடன் தன்னைக் காணாமல் குழந்தை தவித்துப்போய் விடுவாளோ என நினைத்தார்.

மற்றவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மாளிகை பேரமைதிகொண்டதாயிருந்தது. கீதையின் ஒரு பிரதியை மட்டும் கையில் எடுத்துக்கொண்டார் காந்தி. வாயிலில் காவலர்கள் யாரும் தென்படக் காணோம். கதவும் திறந்திருந்ததால் அவரால் மிகச் சுலபமாக வெளியேற முடிந்தது. அவர் வழக்கமாக உடுத்தும் அரையாடையோடும் ஊன்றுகோலுடனும் விசாலமான தெருவில் இறங்கிக் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவோமோ எனப் பதற்றத்துடன் விரைந்து நடந்தார். ஆள் நடமாட்டமே இல்லாத தெருக்கள் அவருக்கு மிக உதவியாயிருந்தன. மரங்களிலிருந்து பனித்துளிகள் இடையறாது சொட்டிக்கொண்டிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்ட விளக்குக் கம்பங்களிலிருந்து கசிந்துகொண்டிருந்த ஒளியைப் போர்த்தி மூடியிருந்தது பனிப்படலம். எலும்பைத் துளைக்கும் குளிர். கம்பளியொன்றை எடுத்து வந்திருக்கலாம் எனத் தோன்றியது அவருக்கு.

யாஸ்னயா போல்யானாவில் பனி இன்னும் அடர்த்தியாக இருந்திருக்கும்.

புறப்படும் தருணத்தில் எந்தத் திட்டத்தையும் வகுத்துக்கொள்ளவில்லை. அருகிலுள்ள ரயில் நிலையம் ஒன்றை அடைந்து பிறகு அங்கிருந்து தன் பயணத்தைத் தொடங்கலாம் என நினைத்திருந்தார். அவருக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரமே அவகாசம். அதற்குள் 'கிளி கூட்டைவிட்டுப் பறந்துவிட்ட' செய்தியைக் கண்டுபிடித்துவிடுவார்கள். டால்ஸ்டாய் சோபியா அந்திரேயவ்னாவுக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டுப் புறப்பட்டதுபோலத் தானும் தன் வெளியேற்றத்துக்கான காரணங்களை விளக்கி யாருக்காவது ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வந்திருக்கலாம் எனத் தோன்றியது மகாத்மாவுக்கு.

அப்படிச் செய்யாததற்குக் காரணம் வெறுப்போ?

வெறுப்பல்ல, அன்பே இவ்வெளியேற்றத்திற்கும் ஆதாரமாய் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இவ்வெளியேற்றம் பொருளுடையதாக இருக்கும் என நினைத்தார் காந்தி. வெறுப்பின் விளைவானது இவ்வெளியேற்றம் எனில் தான் உண்மையான சத்தியாக்கிரஹி அல்ல. முழுமைபெறாத ஒரு ஆன்மா என்றே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ள வேண்டும் என நினைத்தார் காந்தி.

சாலையின் இருபுறங்களிலுமுள்ள நடைபாதைகளில் எண்ணற்ற மனிதர்கள் உடுத்துக்கொள்வதற்கேகூடப் போதிய ஆடைகள் இல்லாதவர்களாய் நடுங்கவைக்கும் இக்குளிருக்குள் முடங்கிக் கிடப்பதைப் பார்த்தார் காந்தி. தன் வெளியேற்றம் பரிதாபமான இந்த மக்களின் நிலையில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டுவருமா என யோசித்தார். அவருக்குக் குழப்பமாக இருந்தது. பகவதிசரண் செய்தது சரியோ? அவர் திரட்டிக்கொண்டு வந்த போர்வைகளும் கம்பளிகளும் இப்பரிதாபகரமான மனிதர்களில் சிலரது துன்பத்தைப் போக்கியிருக்கும் என்றால் அவரது செயலை எப்படி விமர்சிக்க முடியும்? அவர் பொய்சொல்லியிருக்கிறார் என்பதையும் தன்னைப்போல் வேடமிட்டுக்கொண்டு எல்லோரையும் ஏமாற்றியிருக்கிறார் என்பதையும் அவற்றின் நல்விளைவுகளைக்கொண்டு மறுமதிப்பீடுசெய்ய முடியுமா எனத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார் மகாத்மா. அவரிடம் அதற்கு உடனடியான பதில் இல்லை. ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய கேள்வி இது என நினைத்தபடி வேகமாக நடந்தார்.

தில்லியின் புகழ்பெற்ற அந்த நாற்சந்தியில் தன் ஊன்றுகோலுடன் அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பனிமூட்டத்தை விலக்கி அருகில் வந்து நின்றது ஒரு மோட்டார் கார். நீண்ட கம்பளிக் கோட்டு அணிந்திருந்த ஒரு போலீஸ் அதிகாரியும் சீருடைக்கு மேல் இரண்டு மூன்று ஸ்வெட்டர்களைப் போட்டுக்கொண்டிருந்த அந்த மோட்டார் காரின் ஓட்டுநரும் அதிலிருந்து இறங்கினர்.

'பெரியவரே யார் நீங்கள்? இந்த நேரத்தில் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?' என அதிகார தோரணையுடன் காந்தியை விசாரித்தார் போலீஸ் அதிகாரி.

'நானா? காந்தி, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி'

"காலையிலேயே தொடங்கிவிட்டது பாருங்கள்!" எனச் சிரிக்கத் தொடங்கினார், அந்த ஓட்டுநர்,

"இந்தக் கதையெல்லாம் வேண்டாம் அப்பனே...! வயதான காலத்தில் எதற்காக இங்கே சுற்றிக்கொண்டிருக்கிறீர்? விறைத்துப்போய்விடுவீர்...! பேசாமல் வீட்டைப் பார்த்துப் போய்ச் சேரும். உம்மைப் போன்றவர்களால் நாங்கள் படும் அவஸ்த்தை இருக்கிறதே...! இப்படியெல்லாம் வேடம்போட்டுக்கொண்டு திரிந்தால் அவர்களிடமிருந்து தப்பித்துவிடலாம் என நினைக்கிறீரா? சுட்டுவிடுவார்களய்யா, அவர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன!"

இவ்வளவு அறியாமையோடு இருக்கிறாரே என நினைத்துக்கொண்டார் காந்தி. இந்திய அரசின் அதிகாரம்பெற்ற அதன் ஓர் பிரதிநிதி என்னும் முறையில் அவர் கேட்கும் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டியது ஒரு குடிமகனான தன் கடமை என நினைத்தார் காந்தி.

"மரணத்தைக் கண்டு நான் அஞ்சவில்லை அய்யா! அப்படியொரு மரணம் வாய்க்குமானால் நான் மகிழ்சியடைவேன். மரணத்தைத் தேடியே இப்பொழுது நான் போய்க்கொண்டிருக்கிறேன். அரைமணிநேரத்திற்கு முன்புதான் பிர்லா மாளிகையிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறி வந்தேன். மனத்தில் எந்தத் திட்டமும் இல்லை. மீரட்டுக்குப் போகலாம் என்பது என் எண்ணம். பக்கத்தில் ஏதாவது ரயில் நிலையம் இருக்குமானால்..."

"இது ஒரேயடியாக முற்றிப்போய்விட்ட கேஸ் போலிருக்கிறது!" எனச் சிரிக்கத் தொடங்கினார் அந்த போலீஸ்காரர், "திருத்த முடியாத அளவுக்கு முற்றிப்போய்விட்ட கேஸ்."

கடுங்கோபம் கொண்டவரானார் உயரதிகாரி.

"கிழவரே, சும்மா உளறிக்கொண்டிருக்காமல் பேசாமல் வீடு போய்ச்சேர்வதற்கான வழியைப் பாரும்! இல்லை செத்தொழிவதுதான் விருப்பமென்றால் மீரட்டுக்கோ வேறு எங்காவது போயோ செத்தொழி...! அதோ பார் அந்த விளக்குக் கம்பத்திலிருந்து வலது புறம் திரும்பி இடதுபுறம் செல்லும் குறுகிய சந்தின் வழியாகச் சென்றாயானால் ஒரு சிறிய ரயில்வே ஸ்டேஷனை அடையலாம். ரயில் எப்பொழுது வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. நீர் சொன்னதுபோல் மரணத்தைத் தேடிப் போவதாக இருந்தால் அங்கு சென்று காத்திரும். ரயில் வந்தால் உமக்கு அதிர்ஷ்டம் தான்! சும்மா இங்கே நடமாடிக்கொண்டிருக்காதீரும். இது நாட்டின் மிக முக்கியமான மனிதர்கள் வசிக்கும் பகுதி. யார் எந்த நேரத்தில் வருவார்கள் எனச் சொல்ல முடியாது. மகாத்மாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நாங்கள் படாதபாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். இதில் உங்களைப் போன்ற ஆசாமிகளையும் சமாளித்தாக வேண்டியிருக்கிறது."

"எனக்காகத் தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யவேண்டாம் என நேருவிடமும் பட்டேலிடமும் பலமுறை சொல்லிவிட்டேன், அவர்கள் கேட்பதாயில்லை!" எனக் காந்தி வருத்தத்துடன் அளித்த பதிலைக் கேட்டதும் போலீஸ் அதிகாரிக்குக் கண்கள் சிவந்துவிட்டன. தன் உயரதிகாரி கோபம்கொள்வதைப் பார்த்த ஓட்டுநர் உடனே செயலில் இறங்கினார், "கிழவா, இப்போது நீ இடத்தைக் காலிசெய்யப் போகிறாயா இல்லையா?" என லத்தியைச் சுழற்றிக் காந்தியை அங்கிருந்து விரட்ட முற்பட்டார்.

துளியும் அச்சமில்லாமல் ஒரு கைத்த புன்னகையுடன் அதைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பைத்தியகாரக் கிழவனை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் அவ்விருவரும் திணறினர்.

mmm

காலையில் தகவல் கிடைத்ததும் தேடத் தொடங்கிவிடுவார்கள். தனிக்லால்தான் அதை உலகுக்கு முன்னறிவிப்பவராய் இருப்பார் என நினைத்தார் மகாத்மா. பிறகு விசாரணைகள் தொடங்கும். எல்லோரும் கேள்விகளால் குடைந்தெடுக்கப்படுவார்கள். தென்படும் எல்லா வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்படும். மீரட்டை எளிதாக யூகித்துவிடுவார்கள். வழியிலேயே இறங்கிக்கொண்டுவிட வேண்டும். தில்லிக்கும் மீரட்டுக்குமிடையே ஏதாவதொரு இடத்தில் கடவுள் தனக்கான அஸ்டபோவாவைக் குறித்துவைத்திருப்பார் என நம்பினார் காந்தி.

குறுகலான பல சந்துகளைக் கடந்து ரயில் நிலையத்தை அடைந்தபொழுது குளிர் தீவிரமடைந்திருந்தது. புகை மண்டிய பிளாட்பாரத்தில் கந்தல் கூளங்களால் போர்த்தி மூடப்பட்ட உடல்களுடன் நூற்றுக்கணக்கான பயணிகள், மூட்டை முடிச்சுகளைச் சுமந்தபடி அலைந்து திரிந்தனர். மூன்றாம் வகுப்புப் பயணிகளாக இருக்க வேண்டும். தூக்கக் கலக்கம் நிரம்பிய முகங்களிலிருந்தும் துர்நாற்றம் வீசும் உடல்களிலிருந்தும் அவர்கள் பல நாள்களாகப் பசியோடும் தாகத்தோடும் அங்கு காத்திருக்கக்கூடுமென நினைத்தார் காந்தி. இந்தி, உருது, வங்கம், குஜராத்தி எனப் பல்வேறு மொழிகளையும் சேர்ந்த சொற்கூட்டங்கள் அந்த ரயில் நிலையத்தின் கரிப்புகை மண்டிய சுவர்களில் மோதி எதிரொலித்துக்கொண்டிருந்தன. அங்குள்ள கிராதிகளில் சாம்பல் வண்ணமுடைய நூற்றுக்கணக்கான புறாக்கள் தென்பட்டன. ஒப்பனையிடப்பட்டவை போல அனைத்துக்கும் ஒரே தோற்றம்.

யாருமே அவரைப் பொருட்படுத்தவில்லை. படிக்கட்டுகளில் ஏறி நடந்தபொழுது ஒரு சிறுமி ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தாள்; யாருடனோ பேசிக்கொண்டிருந்த தன் தாயை அழைத்து அவரைச் சுட்டிக்காட்டி ஏதோ சொன்னாள். அவள் அவரை நிமர்ந்து பார்த்துவிட்டு வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவர்களுடன் பேச வேண்டும் என்னும் விருப்பம் உண்டானது காந்திக்கு.

முதலில் பயணச் சீட்டு வாங்கிக்கொள்ள வேண்டும்.

மீரட்டுக்குச் செல்வதற்கு இப்பொழுது ஏதாவது வண்டி இருக்கிறதா எனக் கேட்டதற்கு மாடத்துக்குள்ளிருந்து அவரைக் கேலியாகப் பார்த்தார் பயணச் சீட்டு வழங்குபவர், "இப்பொழுது எந்த வண்டியுமே புறப்படப்போவதில்லை" என்று உதட்டைப் பிதுக்கினார், "எந்த வண்டியுமே வந்து சேராததுதான் காரணம். மூன்று நாள்களாக இதுதான் நிலைமை. நீங்களே பார்க்கிறீர்களல்லவா? இவர்கள் எல்லோரும் பல்வேறு வண்டிகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எங்கள் வசமிருக்கும் பயணச் சீட்டுகளை ஓய்வேயில்லாமல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம், மக்களும் சலிப்பேயில்லாமல் காத்துக்கொண்டிருக்கிறார்கள். வண்டி வரவேண்டியது மட்டும்தான் பாக்கி. ஆமாம், நீங்கள் எங்கே போக வேண்டும்? மீரட்டுக்கா? ஆமதாபாத்துக்கா? மீரட் என்றுதானே சொன்னீர்கள்?"

"உண்மையில் என்னிடம் எந்தத் திட்டமும் இல்லை. முதலில் எந்த வண்டி வருகிறதோ அதில் ஏறிக்கொள்ளலாமென நினைக்கிறேன்"

"அது தெரிந்த கதைதான்! உங்கள் ஆட்கள் எல்லோருமே அப்படித்தானே? எந்த வண்டி முதலில் வருகிறதோ அதில் தொற்றிக்கொள்கிறார்கள். ஆனால் ஒருவருமே பயணச் சீட்டு எடுப்பதில்லை. பரிசோதகர்களும்கூட அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதில்லை. எல்லாம் கொஞ்ச நாள்களுக்குத்தான். சர்தாரின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அது நடக்கட்டும் என்பதற்காகக் காத்திருக்கிறார்கள். அவர் முகத்துக்காகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அது நடக்கட்டும், பிறகுதான் இருக்கிறது வேடிக்கை!"

"அய்யா, என்னை மன்னியுங்கள். நீங்கள் சொல்வது எதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சற்று விளக்கமாகச் சொல்ல முடியுமானால்..."

பயணச் சீட்டு வழங்குபவர் உரக்கச் சிரித்தார்,

"அய்யோ என்னை விட்டுவிடுங்கள் பாபுஜி! எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இதோ ஒரு வண்டி வந்துகொண்டிருக்கிறது. அமிர்தசரஸ்வரை செல்லக்கூடியது. ஆடி அசைந்து போகும். வழியில்தானே ஜாலியன் வாலாபாக் இருக்கிறது? நீங்கள் போயிருக்கிறீர்களா? உங்களுக்கெல்லாம் புண்ணிய பூமி ஆயிற்றே? பயணச் சீட்டுக்கூட வேண்டாம். உங்கள் ஆட்கள் யாருமே வாங்குவதில்லையே? எல்லாம் கொஞ்ச நாட்கள்தான். அது நடக்கும்வரை..."

எல்லோரும் இவ்வளவு இயல்பாக இருக்கிறார்களே என ஆச்சரியப்பட்டார் காந்தி.

"அமிர்தசரஸுக்கு ஒரு பயணச் சீட்டுக்கொடுங்கள்." என்று ரூபாய்த்தாள் ஒன்றை நீட்டினார்,

'ஜாலியன் வாலாபாக்குக்கா?'

"ஆமாம்...! அங்குதான். பார்த்து எவ்வளவோ நாள்களாகிவிட்டனவே!" என்று பயணச் சீட்டு வழங்குபவரைப் பார்த்துக் கனிவாகப் புன்னகைத்துக்கொண்டே சொன்னார் காந்தி. அப்போது மகாத்மாவின் கண்களை நேராகச் சந்திக்க நேர்ந்த அவருக்கு மனம் பதறிவிட்டது.

mmm

அமிர்தசரஸுக்குப் போகும் ரயிலின் நெரிசல் மிகுந்த பெட்டியொன்றினுள் அடித்துப் பிடித்து ஏறிக்கொண்டிருந்த ஐந்தாறு காந்திகளைக் கண்டதும் தீராத வியப்புடன் அவர்களை நோக்கி ஓட்டமும் நடையுமாய் விரைந்தார் மகாத்மா. கூட்டம் மிக அதிகமாக இருந்தது. காத்திருந்த அனைவரும் ஒரே சமயத்தில் பெட்டிக்குள் ஏற முயன்றனர். ஒவ்வொருவரும் மற்றவர்களை இழுத்துக் கீழே தள்ளிவிட்டுத் தாம் நுழைய முற்பட்டனர். சிலர் தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். வசைகளாலும் கூக்குரல்களாலும் நிரம்பித் தளும்பிக்கொண்டிருந்தது அந்த ரயில் நிலையம்.

கதவருகிலேயே தயங்கி நின்றுகொண்டிருந்தார் காந்தி. ஆனால் கூட்டம் பெருகிக்கொண்டே இருந்தது. தன்னால் ஏற முடியாமல் போய்விடுமோ என நினைத்தார். நல்ல வேளையாக அங்கு வந்துசேர்ந்த பயணிகள் கூட்டம் அவரைத் தள்ளிக்கொண்டுபோய்ப் பெட்டிக்குள் விட்டது. பெட்டியினுள் அதன் கொள்ளளவைக் காட்டிலும் நான்கைந்து மடங்கு கூடுதலான பயணிகள் அடைந்து கிடந்தனர்.

எந்த முயற்சியும் செய்யாமலேயே எல்லோரும் ஏதோ ஒரு இடத்திற்கு நகர்த்திச் செல்லப்பட்டிருந்தனர். சோர்ந்துவிட்டார் காந்தி. முழங்கால்களில் தாள முடியாத வலி. பிறகு ரயில் நகரத் தொடங்கியது. "அய்யா காந்தியாரே, இப்படி வாரும்! இங்கே உமக்குக் கொஞ்சம் இடமிருக்கிறது! உண்மையிலேயே வயதானவராகத்தான் தென்படுகிறார். அவருக்குக் கொஞ்சம் இடம்கொடு. பாவம், என்ன இருந்தாலும் நம்முடைய ஆள்!"

பக்கவாட்டு இருக்கையொன்றில் இடம்பிடித்திருந்த காந்திகள் அவரை அழைத்துத் தம்மருகே உட்காரவைத்துக்கொண்டனர்.

"வெகுதொலைவிலிருந்து வருகிறார் போலிருக்கிறது! உமது திருநாமம் எதுவோ?"

தன்னைப் போலவே தோற்றமளித்த அவர்கள் ஒவ்வொருவரையும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே அதற்குப் பதிலளித்தார் மகாத்மா.

"காந்தி, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி..."

எல்லோரும் பெருங்குரலெடுத்துச் சிரித்தனர்.

"அதுதான் தெரிந்த கதை ஆயிற்றே! நான் உமது உண்மையான பெயரைக் கேட்டேன். அதாவது பெற்றவர்கள் உமக்குச் சூட்டிய பெயர் "

"பெற்றவர்கள் எனக்கு அந்தப் பெயரைத்தான் வைத்தனர்"

"சொந்த ஊருங்கூட போர்பந்தர்தானோ?"

"ஆமாம் நான் அங்குதானே பிறந்தேன்? இப்பொழுது சில மாதங்களாக பிர்லா மாளிகையில் வசிக்கும்படி ஆயிற்று. இன்று அதிகாலையில் அங்கிருந்து வெளியேறிவிட்டேன். வெளியேறும்பொழுது திட்டமெதுவுமில்லை என்றாலும் இப்பொழுது அமிர்தசரஸுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். ஜாலியன் வாலாபாக் போக வேண்டும்"

"மறை கழண்ட ஆள் போலிருக்கிறது"

"நீ தெரிந்துவைத்திருப்பது அவ்வளவுதான். கிழவர் விவரமான ஆள்! இப்பொழுது அந்த மாதிரி இடங்களுக்கு மவுசு கூடியிருக்கிறது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இப்படியொரு வேடம் புனைந்துகொண்டு அங்கே போய்ச் சும்மா சுற்றிக்கொண்டிருந்தால் போதும்! ஒரே மாதத்திற்குள் போதுமான அளவுக்குக் காசு பார்த்துவிடலாம்"

அருவருப்புத் தாளாமல் கண்களை மூடிக்கொண்டார் மகாத்மா. ஆக இப்படி முடிந்திருக்கிறது. பகவதிசரண் தனி மனிதரல்ல. அதிகாலையில் அவர் சந்தித்த காவல்துறை அதிகாரிகளும் பயணச்சீட்டு வழங்குபவரும் ரயில் நிலையத்தில் தென்பட்ட பரிதாபத்திற்குரிய மக்களும் இவர்களைப் போன்ற எண்ணற்ற காந்திகளைப் பார்த்திருக்கக் கூடுமென நினைத்தார் மகாத்மா.

"ஆனால் காந்தியாரே, எங்களையும் உம்மைப்போல் பிச்சையெடுப்பதற்காக இந்த ஒப்பனையைச் செய்துகொண்டுள்ளதாக நினைத்துவிடாதீர்" என மகாத்மாவை எச்சரிக்கும் தொனியில் சொன்னார் நடுத்தர வயதுடைய ஒரு காந்தி.

"இதோ இருக்கிறாரே, இவர் ஒரு குஜராத்தி. பெரும் நிலச்சுவான்தார், பல வருடங்களாகக் காங்கிரசில் இருந்தவர். ஒருதரம் சிறைக்குக்கூடப் போயிருக்கிறார். சுயராஜ்யம் கிடைத்த பிறகுதான் இந்த ஒப்பனையைப் போட்டுக்கொண்டார். இவர் இன்னும் அசல் காந்தியைப் பார்த்ததில்லை. ஆனால் பேச்சு, நடைத் தோரணை எல்லாம் அசல் காந்தியினுடையதைவிட எடுப்பாகவே இருக்கும்!"

"பிச்சையெடுக்கும் நோக்கம் இல்லையென்றால் எதற்காக இந்த ஒப்பனை? எனக்குப் புரியவே இல்லை" என்றார் மகாத்மா. அவருக்குக் குரல் நடுங்கிற்று.

"நல்ல கேள்வி கேட்டீர், தேர்தலில் நிற்க முடிவுசெய்திருக்கிறார் நம்முடைய ஆள். வெற்றிபெறுவதற்கு இதைவிடச் சுலபமான வழி இல்லை அய்யா! ரோமங்களை மழித்துத் தலையை மொட்டையாக்கிக்கொள்ளுங்கள், தோளிலும் இடுப்பிலும் கதரைச் சுற்றிக்கொள்ளுங்கள். கீதையின் புத்தம்புதிய பிரதியொன்றைக் கையில் பிடித்துக்கொள்ளுங்கள். பிறகு தெருவில் இறங்கி நடந்து செல்லுங்கள். அவரைப் போலவே வேகமாக நடக்க வேண்டும்..."

கேட்கக் கேட்க ஆச்சரியமாக இருந்தது மகாத்மாவுக்கு. அந்த மனிதர் பெருமிதத்தில் திளைத்துக்கொண்டிருந்தார். நடுத்தர வயதைத் தாண்டாத அவர் வயதான தோற்றத்தை வரவழைத்துக்கொள்வதற்காக மிகவும் சிரமப்பட்டிருக்க வேண்டும். கொஞ்சம் தொப்பை இருந்ததால் அதை மறைப்பதற்காக எப்போதும் வயிறை எக்கி வைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்குப் பற்கள் இல்லை. மகாத்மாவைப்போல் தோற்றமளிப்பதற்காக அவற்றைப் பிடுங்கி எடுத்துவிட்டிருப்பார் போலிருக்கிறது.

"இதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட முடியுமா என்ன?" என வியப்பு மேலிட்டவராய் அவரைக் கேட்டார் மகாத்மா.

"இது சும்மா கவனத்தை ஈர்ப்பதற்கு. எதிரிகளை வழிக்குக் கொண்டுவர வேறு வழிகளைத்தான் கையாள வேண்டும்"

"அஹிம்சை முறையில்தான் இல்லையா?" எனப் பேராசை மிகுந்த கண்களால் அவரைப் பார்த்துக் கேட்டார் மகாத்மா.

"அஹிம்சை வழியா? நல்ல கதை!" எனச் சொல்லிக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிறகு ஒரு ரகசியம்போலத் தணிந்த குரலில் சொன்னார்,

"இன்னும் சில நாள்கள்தான்! அது மட்டும் நடந்து முடியட்டும், பிறகு நான் மகாராணா பிரதாப்சிங் போலாகிவிடுவேன். அவர்கள் எல்லோரையும் இமய மலைக்கப்பால் துரத்தியடிப்பார்கள் என் ஆட்கள்! ஆனால், காந்தியாரே... நீர் போய்ப் பிச்சையெடும்! உமது பிழைப்பைப் பாரும்! இந்தக் கதையையெல்லாம் எதற்காகக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்?"

தன் அஸ்டபோவா குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார் மகாத்மா.

தென்பட்ட எல்லா இடங்களிலும் அலுக்காமல் நின்று புறப்பட்டது ரயில். பகல் முழுக்கப் பயணம் செய்தும் அந்த வண்டியால் தன் தூரத்தில் பாதியைக்கூடக் கடந்திருக்க முடியவில்லை. காலையில் அவர் வண்டியில் ஏறும்போதிருந்த நெரிசல் முற்றாகக் குறைந்திருந்தது. காந்திகள் தில்லியைத் தாண்டி நான்கைந்து நிறுத்தங்கள் கடந்து சென்றதும் விடை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் ஒவ்வொரு நிறுத்தத்திலும் சில புதிய காந்திகள் ஏறினர். கண்ணாடி, கதர், கையில் கீதையின் ஒரு பிரதி. உண்மையிலேயே இந்த ஒப்பனை மிகச் சுலபமானதுதான் என நினைத்தார் மகாத்மா. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக இந்த ஒப்பனையைப் போட்டுக்கொள்கிறார்கள். பல சாதாரண மனிதர்களும்கூடத் தன்னைப் போல் ஒப்பனை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தார் மகாத்மா. கலவரக்காரர்களிடமிருந்தும் போலீசாரிடமிருந்தும் தப்புவதற்கு இந்த வேடம் உதவுகிறது எனத் தெரிவித்தான் பழ வியாபாரியான ஒரு இளைஞன்.

"வேடம்தான் எனத் தெரிந்தாலுங்கூட ஒன்றும் பிரச்சினையில்லை. இவ்வேடத்திலிருக்கும் ஒருவரைக் கொல்வது பாவம் என நினைக்கிறார்கள். இந்த வேடத்தைப் போடாமலிருந்திருந்தால் சென்ற மாதம் எங்கள் குடியிருப்புப் பகுதி தீக்கிரையாக்கப்பட்டபொழுது என் குடும்பத்தின் பெற்றோருடன் நானும் கொல்லப்பட்டிருப்பேன்" என்றான். "பழ வியாபாரத்திற்கும்கூட இந்த வேடம் பயன்படுகிறது. சாதாரண வியாபாரியிடமிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை வாங்குவதைவிட மகாத்மாவிடமிருந்து வாங்குவது விஷேஷமானதல்லவா?" என்று சொல்லிச் சிரித்தான் அவன்.

அவனிடமிருந்து ஓரிரு வாழைப் பழங்களை வாங்கிச் சாப்பிட்டுவிட்டுக் காலியாகக் கிடந்த ஒரு இருக்கையில் கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டார் காந்தி. உடல் சுடுவது போலிருந்தது. நிமோனியாவின் அறிகுறியோ? அஸ்டபோவா நெருங்கிக்கொண்டிருக்க வேண்டும்!

mmm

பிற்பகல் இரண்டு மணிக்குப் பனிப்பொழிவு தொடங்கியது. குளிரிலிருந்து தப்புவதற்காக மகாத்மாவின் எதிரில் உட்கார்ந்திருந்த காந்திகளில் ஒருவர் புகைபிடிக்கத் தொடங்கினார். மற்றொருவர், வேடத்தைத் தற்காலிகமாகத் துறந்துவிட்டு நீண்ட கம்பளிக் கோட்டு ஒன்றை அணிந்துகொண்டார்.

ரயில் பானிபட்டை அடுத்துள்ள ஒரு மிகச் சிறிய ஸ்டேஷனை அடைந்து நின்றபொழுது இருள் சூழத் தொடங்கியிருந்தது. துப்பாக்கி ஏந்திய, சுமார் இருபது போலீஸ்காரர்கள் தான் பயணம் செய்துகொண்டிருந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியினுள் தாவி ஏறியதைப் பார்த்தார் காந்தி. பிடிபட்டுவிட்டோ ம் எனத் தோன்றியது அவருக்கு. காலையில் தகவல் கிடைக்கப்பெற்றதுமே நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பார்கள்.

ஒவ்வொரு பயணியையும் துப்பாக்கி முனையில் நிறுத்திவைத்துக் கேள்விகளால் துளைத்தெடுத்துக்கொண்டிருந்தனர் போலீசார்.

எந்த வற்புறுத்தலுக்கும் பணிந்துவிடக்கூடாது எனத் தீர்மானித்தார் காந்தி. நேருவோ பட்டேலோ நேரில் வந்து அழைத்தாலும்கூடத் தன் முடிவை மாற்றிக்கொள்ளக் கூடாது. யாராவது வந்திருக்கிறார்களா எனப் பிளாட்பாரத்தைப் பார்த்தார். ஆள் நடமாட்டமே அற்றுக் கிட்டத்தட்டக் காலியாக இருந்தது. நைந்துபோய்விட்ட சீருடையுடன் தென்பட்டார் ஸ்டேஷன் மாஸ்டர். கொடிகளைச் சுருட்டிக் கக்கத்தில் இடுக்கியவாறே ஒவ்வொரு பெட்டியையும் ஆராய்ந்துகொண்டிருந்தார்.

"உமது பெயரென்ன?" எனக் கடுப்புடன் தன்னைப் பார்த்துக் கேட்ட காவல் துறை அதிகாரியை எங்கோ பார்த்திருப்பதாகத் தோன்றியது மகாத்மாவுக்கு,

"காந்தி, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி"

"எந்த ஊரிலிருந்து வருகிறீர்?"

"தில்லியிலிருந்து..."

"எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்?"

"அமிர்தசரசுக்கு, ஜாலியன் வாலாபாக்போகத் திட்டம்"

"அங்கே எதற்காகப் போகிறீர்?"

"பார்த்து நீண்ட காலமாகிவிட்டதே, அதனால்தான்"

"எங்கே உமது உடமைகளைக் காட்டும்"

"நான் எதையும் என்னுடன் எடுத்துவரவில்லையே! கொஞ்சம் பணம் இருக்கிறது. வேட்டியில் முடிந்துவைத்திருக்கிறேன். எனக்கு ராட்டை ஈட்டித் தந்த தொகை. தவிர கீதையின் ஒரு பழைய பிரதியும் உள்ளது. "

காவல் துறை அதிகாரி வேட்டி முடிச்சைப் பிரித்துக் காட்டச்சொல்லிப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்.

மிக ஏமாற்றமாக இருந்தது மகாத்மாவுக்கு. பெட்டியில் பத்துப் பன்னிரெண்டு பயணிகளே இருந்தனர். குப்பைக்கூளங்களால் முற்றாக உருக்குலைந்து போயிருந்தது அந்தப் பெட்டி. இருக்கைகளுக்குக் கீழே பலவிதமான பழத்தோல்களும் உணவுப்பண்டங்களின் எச்சங்களும் நிரம்பிக் கிடந்தன. பெட்டியைச் சுத்தமாக வைத்திருப்பது நம் எல்லோருக்குமான கடமை என அவர் சொன்னபோது பயணிகள் சிரித்தனர். பிற்பகலில் காந்தி தனி ஆளாக அதைச் சுத்தம்செய்யத் தொடங்கினார். குப்பையைப் பெருக்கி வெளியே கொட்டிவிட்டுத் திரும்பியவரின் முன்பாகச் சில்லறைக் காசுகளை வீசியெறிந்தனர். மிக அமைதியாக அவற்றைச் சேகரித்துத் தன் வேட்டி முடிச்சில் வைத்துக் கொண்டார். காந்திகளும்கூட இப்பொழுது அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருந்தனர். ஒப்பனைகள் கலைந்திருந்தன. இளம் காந்திகளின் சவரம் செய்யப்பட்ட முகங்களில் கரிய ரோமங்கள் அரும்பத் தொடங்கியிருந்தன. வழக்கமான அவரது பிரார்த்தனை நேரம் கடந்துசென்றுகொண்டிருந்தது. வண்டி புறப்படுவதற்கு நெடுநேரமாகலாம் எனச் சொல்லிவிட்டுப் போனான் ஒரு கடலை வியாபாரி.

அஸ்டபோவாவை வந்தடைந்துவிட்டோ மோ?

சற்று நடக்கலாம் எனக் கீழே இறங்கிப் பிளாட்பாரத்தில் தனியாக நடந்தார்.

கூடடையும் தருணத்திற்குரிய ராகங்களை இசைத்துக்கொண்டிருந்தன பறவைகள். படபடக்கும் சிறகுகளுடன் கூடடையத் தவித்துக்கொண்டிருந்த அச்சிறு பறவைகள் அவரைக் கண்டதும் பதற்றமடைந்தன. அவற்றின் தனிமையைக் குலைத்துவிடக் கூடாது எனக் கருதியவராக அங்கிருந்து விலகி நடந்தார். யாருமே தன்னைப் பொருட்படுத்தாத இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டோ ம் எனத் தோன்றியது அவருக்கு. முன்னெப்போதும் அனுபவித்திராத சுதந்திரம் இது! மங்கலான வெளிச்சத்தைக் கசிய விட்டுக்கொண்டிருந்த விளக்குக் கம்பத்திற்குக்கீழ் பறவைகளின் எச்சங்களால் நிரம்பிக் கிடந்த ஒரு சிமெண்ட் பெஞ்சின் மீது அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடத் தொடங்கினார் காந்தி.

னீனீனீ

"எதற்காக இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள் பெரியவரே? நீங்கள் பயணியோ?" எனக் கேட்டபடி தன்னெதிரே வந்து நின்ற ஸ்டேஷன் மாஸ்டரைக் கண்டு எழ முற்பட்டார் மகாத்மா.

"ஆமாம், அமிர்தசரஸ் போக வேண்டும். வண்டி புறப்படுவதற்குத் தாமதமாகுமெனக் கேள்விப்பட்டதால் பிரார்த்தனை செய்வதற்காக வந்தேன். எப்பொழுது புறப்படும் என ஏதாவது தகவல் கிடைத்திருக்கிறதா அய்யா?"

"இல்லையே, எனக்குத் தெரியாது! வேறு யாருக்குமேகூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தண்டவாளங்களைப் பெயர்த்துப் போட்டிருக்கிறார்களாம். செய்தி வந்திருக்கிறது" எனச் சொல்லிவிட்டு அவரை வினோதமாகப் பார்த்தார், "நீங்கள் அமிர்தசரஸுக்கா போக வேண்டும்? பயணச் சீட்டு வைத்திருக்கிறீர்களா?" புன்னகையைத் தன் இயல்பாகக்கொண்ட அவர், மிகச் சிரமப்பட்டுக் கண்டிப்பாக இருப்பது போன்ற பாவனைகளை உருவாக்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது காந்திக்கு.

"இதோ" என வேட்டி முடிச்சை அவிழ்த்துப் பயணச் சீட்டை எடுத்து அவரிடம் கொடுத்தார் மகாத்மா. பெற்றுக்கொண்டு ஓரிரு அடிகள் தள்ளி நின்று அதைப் பரிசோதித்தார் ஸ்டேஷன் மாஸ்டர். அவரைப் பின்தொடர்ந்து வந்து அருகில் நின்ற மகாத்மாவைக் கண்டதும் அவர் கலவரமுற்றார்.

"அய்யா தங்கள் பெயர் என்ன? தயவுசெய்து சொல்லுங்கள்"

எப்போதும்போல் உண்மையையே பேசினார் அவர்.

"மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி"

அவரைக் கூர்ந்து பார்த்த ஸ்டேஷன் மாஸ்டரின் முகத்தில் பதற்றம்.

"பாபுஜி... என்னை மன்னியுங்கள் இதோ வந்துவிட்டேன். பரிசீலிக்க வேண்டும்" எனப் பயணச் சீட்டுடன் அங்கிருந்து வேகமாக நகர்ந்தார் ஸ்டேஷன் மாஸ்டர்.

அநேகமாக உரிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோ ம் போலிருக்கிறது என நினைத்தார் மகாத்மா. திடீரென அவரது உடல் நடுங்கத் தொடங்கியது. முன்னெப்போதும் உணர்ந்திராத களைப்பு. மூட்டுகளில் தாள முடியாத வலி. உரிய இடமும் உரிய நேரமும் இதுதான் போலிருக்கிறது என நினைத்துக்கொண்டார் மகாத்மா.

கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் தளர்ந்து உட்கார்ந்தார். இன்னுமா பரிசீலித்துத் தீரவில்லை? கொஞ்சம் கண்ணயர்ந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது அவருக்கு. மேலாடையை உதறிப் போர்த்துக்கொண்டு கால்களைக் குறுக்கிப் படுத்தார். எதிரே சடலம்போல அசைவற்றுக் கிடந்தது அவரை இங்கேகொண்டுவந்து சேர்த்திருந்த ரயில் வண்டி. நெடிதுயர்ந்த தேவதாரு மரங்களால் சூழப்பட்ட அந்த மிகச் சிறிய ரயில் நிலையம் வனம்போல் காட்சியளித்தது. சற்றுத் தள்ளியிருந்த ஸ்டேஷன் மாஸ்டரின் பழுப்புநிறச் சுவர்களாலான மிகச் சிறிய அறையையும் விளக்குக் கம்பத்தையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வனம்தான். பறவைகள் ஓயாது கூவிக் கொண்டிருந்தன.

விளக்குக் கம்பத்தின் உச்சியில் தன் கரிய சிறகுகளை விரித்து உட்கார்ந்திருந்த ஒரு பெரிய பறவை அவரைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. தன் மரணத்தை இவ்வுலகிற்குச் சொல்லவிருக்கும் பறவையாயிருக்கும் இது என நினைத்தார் காந்தி!

தனிக்லால்தான் முதலில் வந்து சேர்பவராய் இருப்பார். மனுவையுங்கூடத் தன்னுடன் அழைத்து வரக்கூடும். தன் கடைசி வாக்கியத்தை அவளிடத்திலேயே விட்டுச் செல்ல வேண்டும் எனத் தீர்மானித்துக்கொண்டார் மகாத்மா.

தன் இறுதி வாக்கியத்தைப் பற்றிய யோசனைகளில் மூழ்கத் தொடங்கினார் அவர். கவித்துவமானதாகவும் தன் வாழ்வின் செய்தியாகவும் இருக்க வேண்டும் அது. வாழ்வின் செய்தியையும் மரணத்தின் செய்தியையும் ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடுவதற்கு முடிந்தால்!

நேருவும் படேலுங்கூடத் தன் இறுதிக் கணங்களில் பக்கத்தில் இருப்பார்கள் என நினைத்தார். அவர்களிடமும்கூட ஏதாவது சொல்லலாம்தான். வாழும்பொழுது சொல்லும் வாக்கியங்களுக்கு இருக்கும் மதிப்பைவிட மரணத்தின் பொழுது சொல்லும் வாக்கியங்களுக்கு அதிக மதிப்பு உண்டு.

இந்தத் தருணத்தில் பா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? அவரது வாக்கியங்களின் அர்த்தத்தைக் கஸ்தூர் பா ஒருபோதும் முழுமையான அளவில் புரிந்துகொண்டதில்லை. ஆனால் அவரது மௌனத்தை பா அளவுக்குப் புரிந்துகொண்டவருங்கூட யாரும் இல்லை. அவர் மௌன விரதம் மேற்கொள்ளும் திங்கட்கிழமைகளே பாவுக்கு மிகப் பிடித்தவை. மகாத்மாவை விட்டு ஒரு கணமும் பிரியாமல் பக்கத்திலேயே இருந்துகொண்டிருப்பதற்கான வாய்ப்புகளை அவருக்கு அளித்தவை அவை. அவர் பக்கத்தில் இருந்திருந்தால் கடைசி வாக்கியமாகக்கூட எதையும் சொல்ல வேண்டியிருக்காது என நினைத்தார் மகாத்மா. அவரளவில் ஈடுசெய்யவே முடியாத இழப்பு அது! கண்கள் தளும்பின அவருக்கு.

"பாபுஜி... தயவுசெய்து எழுந்திருங்கள், தங்கள் வண்டி புறப்பட்டுக்கொண்டிருக்கிறது. பாபுஜி... பாபுஜி...! கடவுளே இப்பொழுது நான் என்ன செய்வேன்? உதவிக்குக்கூட இங்கே யாருமில்லையே! பாபுஜி... பாபுஜி... அடக் கடவுளே...!"

ஸ்டேஷன் மாஸ்டரின் பதற்றமான குரலையும் ரயில் என்ஜினின் நீண்ட விசில் சப்தங்களையும் கேட்டார் மகாத்மா. அவரால் கண்களைத் திறக்க முடியவில்லை. பிரக்ஞை நூலிழையில் தவித்துக்கொண்டிருந்தது. யாருடைய வண்டி? எங்கிருந்து புறப்படுகிறது? எங்கு நோக்கி? இந்தக் குரல் யாருடையது? இந்தச் சப்தங்கள் எங்கிருந்து வருகின்றன? கஸ்தூருடையதா? தேவதாரு மரத்தின் உச்சியில் வசிக்கும் அச்சிறு பறவையினுடையதா? இல்லை, விளக்குக் கம்பத்தின் மேல் வந்தமர்ந்ததே கரிய சிறகுகளையுடைய ஒரு பறவை, அது எழுப்பும் சப்தங்களோ இவை?

கண்களைத் திறக்க முயன்றார் மகாத்மா. எந்த வாக்கியத்தையும் சொல்லாமல் விடைபெற்றுக்கொண்டுவிட முடியாதே!

கம்பளியொன்றைக் கொண்டுவந்து போர்த்திவிட்டு விட்டுப் புறப்பட்டுக் காத்திருக்கும் அமிர்தசரஸ் ரயிலுக்கு விடைகொடுப்பதற்காகப் பச்சை விளக்கைத் தூண்டியெடுத்துக்கொண்டு ஓடினார் ஸ்டேஷன் மாஸ்டர். பிறகு அவருக்காகக் கொஞ்சம் வெந்நீர் தயாரித்துக்கொண்டு திரும்பி வந்து பார்த்தபொழுது எழுந்து உட்கார்ந்திருந்தார் மகாத்மா. அவரைக் கண்டதும் தன் பொக்கைவாய் திறந்து சிரித்தார்.

"உங்களுடைய வண்டி புறப்பட்டுப் போய்விட்டதே பாபுஜி...! அமிர்தசரஸுக்கான அடுத்த வண்டிக்காக நீங்கள் இன்னும் பதினெட்டு மணிநேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்"

மகாத்மா பெருமூச்செறிந்தார். வெந்நீர் தந்த தெம்பில் இப்பொழுது அவரால் நன்றாக எழுந்து உட்கார முடிந்திருந்தது.

"நன்றி உங்களுக்கு. கடவுளின் சித்தம் இதுதான் போலிருக்கிறது. அவர் என் அஸ்டபோவாவை எங்கு தயாரித்து வைத்திருக்கிறாரோ அந்த இடத்தைத் தாண்டிச் சென்றுவிட முடியாதல்லவா?"

ஸ்டேஷன் மாஸ்டருக்கு முகம் வெளிறிவிட்டது.

"பாபுஜி, தயவுசெய்து என்னை மன்னியுங்கள். தீராத பழிக்கு ஆளாகிவிடாமலிருப்பதற்கு எனக்கு உதவுங்கள். இங்கே யாருமே இல்லை! உங்களுடைய கடைசி வாக்கியத்தைக்கூட நீங்கள் என்னிடம்தான் சொல்ல வேண்டியிருக்கும் பாபூ . அதைத் தாங்கிக்கொள்வதற்கான வலிமை எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. என்னை மன்னியுங்கள்! தில்லி ரயில் இன்னும் ஒரு மணிநேரத்திற்குள் வந்துவிடும். தயவுசெய்து தில்லிக்குத் திரும்பிச் சென்றுவிடுங்கள். அங்கேதான் எல்லாம் நடக்க வேண்டும்."

அதற்கும் சிரித்தார் மகாத்மா.

"எல்லாம் முடிவாகிவிட்டதே! ஆனால் தயவுசெய்து எனக்கு ஒரு விஷயத்தைச் சொல்லுங்கள். எடுத்த எடுப்பிலேயே என்னை அடையாளம் கண்டுகொண்டுவிட்டீர்களே, அது எப்படி? நீங்கள் ஏராளமான பாபுஜிக்களைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா?"

ஸ்டேஷன் மாஸ்டர் சிரித்தார்,

"அது மிகச் சுலபமான காரியம் பாபு. அந்த ஏராளமான பாபுஜிக்களில் ஒருவர்கூடப் பயணச் சீட்டு எடுத்ததில்லை. கேட்டால் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தேனே, அது போதாதா என மல்லுக்கட்டுவார்கள். தவிர ..."

குறுக்கிட்டார் மகாத்மா.

"தவிர, எல்லாவற்றையும் நீங்கள் எதிர் பார்த்துக்கொண்டிருந்தீர்கள், இல்லையா? உங்களுக்கு என் பயணமும் அதன் நோக்கமும் முன்னரே தெரிந்திருக்கிறது"

அவர் பதற்றமடைந்தார்.

"ஆனால் பாபுஜி. தயுவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்! இவ்விதமாய் முடிந்துவிடக் கூடாது அது. இது உங்கள் செய்தியாய் ஒருபோதும் இருக்கக் கூடாது"

சுட்டுவிரலை உயர்த்தி அவரைப் பேசாமலிருக்கச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தார் மகாத்மா.

"இல்லை. என் அன்புக்குரிய சகோதரரே, என்னால் பின்வாங்க முடியாது. நான் தேர்ந்தெடுத்துவிட்டேன். இவ்வெளியேற்றத்திற்கும் நான் இங்கு வந்து சேர்ந்ததற்குமான நியாயங்களை இவ்வுலகம் நிச்சயமாகப் புரிந்துகொள்ளும் என நான் உறுதியாக நம்புகிறேன் சகோதரரே! ஆனால் இங்கே டாக்டர்கள் யாருமில்லையா? நிமோனியா முழு வீச்சில் என்னைத் தாக்கத் தொடங்கிவிட்டது!" என மறுபடியும் படுத்துக்கொண்டார்.

"இல்லை பாபுஜி, நிமோனியா என்றால் என்னவென்றே இங்குள்ள யாருக்கும் தெரியாது. தயவுசெய்து என் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாம் அங்குதான் நடக்க வேண்டும்" எனச் சொல்லிக்கொண்டே தன் கைக் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டார், "கடவுளே, இன்னும் பத்தே நிமிடங்கள்தான் எஞ்சியிருக்கின்றன, அதற்குள் என்னால் என்ன செய்ய முடியும்?" எனத் தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோல் முணுமுணுத்துவிட்டு "இது குறித்து வேறு யாரையும்விட நீங்கள்தான் தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும் பாபுஜி. மரணத்திற்கான விருப்பத்தோடு அல்ல, வாழ்வதற்கான ஆசையுடனேயே நீங்கள் வெளியேறியிருக்க வேண்டும். கவனத்தை ஈர்க்கவும் பணியவைக்கவும் நிகழ்ந்ததே இவ்வெளியேற்றம். நீங்கள் இதற்கு முன்பு மேற்கொண்ட உண்ணாவிரதங்களைப் போல்."

இதற்குத் தன்னிடம் பதில் இல்லை என்பதுபோல் மௌனமாக இருந்தார் காந்தி,

"ஆனால் இப்பொழுது அவர்கள் அனைவருமே இதை வேறுவிதமாகத்தான் எதிர்கொள்வார்கள் பாபூ. அவர்கள் தீர்மானித்துவிட்டார்கள்! நேற்றோ அதற்கு முன்தினமோ அவர்கள் தோற்றுப்போயிருக்கலாம். ஆனால் அவர்கள் உங்களுக்கெதிரான யுத்தத்தைத் தொடங்கிவிட்டார்கள். இன்று அல்லது நாளை. நாளை அல்லது நாளை மறுநாள்... வெறும் நாள் கணக்குதான்."

"நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் எங்கே தவறு நிகழ்ந்தது? அதைத்தான் கடந்த மூன்று நாள்களாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்! நான் எல்லோரையும் சகோதரர்களாகவே கருதினேன். வரலாற்றுரீதியில் எனக்கு எதிரிகளாக நேர்ந்துவிட்ட வெள்ளையர்களையும்கூட நான் நேசித்தேன். அதையே நம் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் முற்பட்டேன். சத்தியத்தின் செய்தியையும் அஹிம்சையின் செய்தியையும் சொல்வதற்கு முயன்றேன்... ஒருவகையில்"

தயங்கினார் மகாத்மா.

"ஒருவகையில் கிறித்துவின் செய்தியைச் சொன்னீர்கள்! அதனால்தான் பிரிட்டிஷ் அரசால் உங்களைக் கொல்ல முடியவில்லை. கிறித்தவராக அல்ல, கிறித்துவாகவே நீங்கள் அவர்களுக்குத் தென்பட்டீர்கள் பாபுஜி..."

"ஆம், நான் ஒரு உண்மையான கிறித்தவன். கிறித்தவர்களைக் காட்டிலும் உண்மையான கிறித்தவன்"

புன்னகைத்தார் மகாத்மா. அவருடன் பேசுவது தன் மனசாட்சியிடம் பேசுவதைப் போல் இருந்தது காந்திக்கு. மனசாட்சி, வெகுதொலைவில் பெயர் தெரியாத ஒரு கிராமத்தின் ஸ்டேஷன் மாஸ்டராக இருப்பதுதான் வேடிக்கை.

"அதனால்தான் தம் ஆயுதங்களை உங்கள் காலடியில் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள் நம் காலனியாட்சியாளர்கள்! அவர்களால் கிறித்துவை, தம் கடவுளை எதிர்க்க முடியவில்லை"

"நான் இந்து, மெய்யான இந்து... ராமனே என் கடவுள்! கீதையே என் தத்துவம்"

"அப்படி நீங்கள் ஏமாற்றியிருக்கிறீர்கள் என யாராவது உங்களைக் குற்றம் சுமத்தினால் உங்கள் பதில் என்ன மகாத்மா?"

மௌனமாக இருந்தார் காந்தி.

"சொல்லுங்கள் பாபூ... உங்களுடைய தத்துவங்களை எதிலிருந்து வடிவமைத்துக்கொண்டீர்கள்? நம் மண்ணின் எந்தக் கடவுளிடமிருந்து அஹிம்சையைக் கற்றுக்கொண்டீர்கள்? நம் கடவுளர்களில் ஆயுதமெடுக்காதவர் என யார் இருக்கிறார்கள்? யார் தன் எதிரிகளை மன்னித்திருக்கிறார்கள்? யார் தன் மேலாடையைக் கேட்பவர்களுக்கு உள்ளாடையைக் கொடுத்திருக்கிறார்கள்? தன் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டியவர் யார்? அல்லது நீங்கள் வலியுறுத்திய எளிமையையாவது எந்தக் கடவுளாவது பின்பற்றியிருக்கிறதா? சொல்லுங்கள் பாபுஜி..."

நெடிய பெருமூச்சொன்று மகாத்மாவிடமிருந்து வெளிப்பட்டது.

"ஒரு சத்யாகிரஹியாக நான் என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து எனக்குச் சொல்லுங்கள் சகோதரரே" என்றார் காந்தி. அவரது கண்களில் நீர் துளிர்த்திருந்தது.

"தயவுசெய்து திரும்பிச் செல்லுங்கள் பாபூ..." மன்றாடினார் அவர்.

"இல்லை, மரணத்திற்கொப்பானது அது" எனத் தன் குரு டால்ஸ்டாயின் வாக்கியத்தை அவர் திருப்பிச் சொன்னார்.

மனசாட்சிக்குக் கோபம் வந்துவிட்டது.

"நீங்கள் உங்களுடைய சொந்த வாக்கியத்தைப் பேசுங்கள் பாபூ...! எங்களை உங்கள் சொந்த வழியில் எதிர்கொள்ளுங்கள். நாங்கள் உங்களைக் கொலைசெய்வதற்காகக் காத்திருக்கிறோம். ஒருவரையொருவர் பழி தீர்ப்பதற்கான யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறோம். வரலாற்றோடு எங்களுக்குக் கணக்குத் தீர்த்துக்கொள்ள வேண்டும். தில்லியின் தெருக்களில் இன்னும் உலராமலிருக்கிறது ஆயிரமாண்டுகளின் குருதி. எங்களுக்கு உங்கள் தத்துவங்களின் மேன்மையைக் கற்றுக்கொடுங்கள் அல்லது எங்களுடைய துப்பாக்கிகளிலிருந்து வெளிவரும் தோட்டாக்களைப் பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்..."

மூச்சு வாங்கியது அந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு.

"விரும்பியது போன்ற ஒரு கவித்துவமான மரணத்தைப் பெயர் தெரியாத இந்தக் கிராமத்தின் ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் அடைவீர்கள். உங்கள் வழியைப் பின்பற்றும் நாங்கள் ஒன்று உங்கள் மரணத்திற்குப் பிறகு உங்களுக்குத் துரோகம் செய்வோம் அல்லது கொல்லப்படுவோம். உங்களைப் போல் வேடமிட்டுக்கொண்டு உங்கள் தத்துவத்தை அழிப்போம். பகவதிசரண்களால் நிரம்பி வழியப்போகிறது இந்தப் புண்ணிய பூமி. நீங்கள் கடவுளாக்கப்படுவீர்கள்! எதையும் மாற்றச் சக்தியற்ற வெறுங்கடவுள். பிறகு அக்கடவுளின் பெயரால் கணக்குத் தீர்க்கும் யுத்தம் தொடங்கும். அது வெகுகாலம் நீடிக்கும் பாபுஜி"

பிறகு இருவரும் மௌனமாயினர்.

விளக்குக் கம்பத்தின் உச்சியிலிருந்து அவரைக் கண்காணித்துக்கொண்டிருந்த கரிய சிறகுகள் கொண்ட அப்பெரிய பறவை பிலாக்கணமெழுப்பியபடி அங்கிருந்து பறந்தது. நெடுந்தொலைவுவரை கேட்டுக்கொண்டிருந்தது அதன் பிலாக்கணம்.

"தீர்க்கதரிசனமென்றோ மூடநம்பிக்கையென்றோ எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள்... ஆனால் இவை நடக்கும் பாபூ..."

ஆழ்ந்த யோசனையில் மூழ்கினார் காந்தி. கண்களை மூடிக்கொண்டார்.

"இல்லை, என்னால் தோல்வியை ஏற்க முடியாது. என் எதிர்ப்பாளர்களுக்கு அஹிம்சையின் கவித்துவத்தை உணரவைப்பேன் நான்!"

"பாபூ... நீங்கள் உங்களுடைய முழு வாழ்க்கையையும் வாழ்ந்து தீர்க்க வேண்டும்"

"அதாவது 125 வருடங்கள்..."

"பாபூ... தில்லி ரயில் வந்து சேர்ந்துவிட்டது!"

மகாத்மா எழுந்தார்.

தில்லிக்குச் செல்லும் ரயிலின் நெரிசல் மிகுந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியொன்றில் அதில் பயணம்செய்த எண்ணற்ற காந்திகளுடன் தானுமொருவராக உட்கார்ந்துகொண்டார் மகாத்மா. ஒரு குவளை ஆட்டுப் பாலுடனும் கொஞ்சம் வேர்க்கடலையுடனும் மூச்சிறைக்க ஓடிவந்தார் ஸ்டேஷன் மாஸ்டர்.

"நீங்கள் நலமாக இருக்க வேண்டும் பாபுஜி...! தங்கள் மரணம் எங்கள் வாழ்வின் செய்தியாக இருக்க வேண்டும்" எனத் தீராமல் பெருகிய கண்களைத் துடைத்தபடி மகாத்மாவிடம் சொன்னார் அவர்.

mmm

இரண்டு நாள்களுக்குப் பிறகு 1948ஆம் வருடம் ஜனவரி 30ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மிகத் தாமதமாகத் தில்லியை வந்தடைந்தது காந்தி பயணம்செய்த ரயில் வண்டி. அங்கிருந்து கால்நடையாக பிர்லா மாளிகையை அடைந்தபொழுது நேரம் 4 மணி 50 நிமிடம்.

பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டதே எனப் பின்புற வாயிலின் வழியே அவசர அவசரமாக பிர்லா மாளிகைக்குள் நுழைந்தார் மகாத்மா. அதன் மிகப் பெரிய தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் ரோஜாச் செடிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மகாத்மா பகவதிசரண், காந்தி வந்ததைக் கவனித்தாரா எனத் தெரியவில்லை. அறைக்குத் திரும்பி, குளியலறையினுள் நுழைந்து முகம் கழுவிக்கொண்டிருந்தபொழுது வெளியிலிருந்து தனிக்லால் தன்னை அழைப்பது கேட்டது காந்திக்கு.

"பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது பாபுஜி, அவர் வந்துவிட்டார்!"

உரத்த குரலில் அவருக்குப் பதிலளித்தார், மகாத்மா.

"இதோ வந்துவிட்டேன் தனிக்லால்ஜி. அவரைக் காத்திருக்கச் சொல்லுங்கள்"

நன்றி - காலச்சுவடு

சிகரெட் துண்டுகளும் உள்ளாடைகளும் – தேவிபாரதி

கடும் குளிராயிருந்த டிசம்பர் மாதத்தின் ஒரு சாயங்கால நேரத்தில் அவன் வந்து நின்றான். வெகு தொலைவிலிருந்து தூக்கத்தையும் ஓய்வையும் இழந்து, குறைந்தபட்சம் இரண்டு இரவுகள் தொடர்ந்து பயணம் செய்து வந்திருப்பவனாகத் தோற்றமளித்தான். அவனது அழுக்கேறிய உடைகளிலிருந்தும் களைத்துப்போன உடலிலிருந்தும் மட்கிய வியர்வை நெடி வீசிக்கொண்டிருந்தது. மங்கிக்கொண்டிருந்த சாயங்கால வெளிச்சத்தில், கதவுச் சட்டத்திற்கு வெளியே நீள் சதுரமாகத் தென்பட்ட வெளியில், பிரமை அல்லது கற்பனை எனச் சொல்லும்படியான தெளிவற்ற தோற்றத்தில் அவனது நெடிய உருவம் அசைவற்றதாக நின்றுகொண்டிருந்தது.

நான் அவனிடம் ஏதாவது பேச விரும்பினேன்; அவனது வருகையால் ஏற்பட்ட பதற்றத்தின் விளைவாகக்கூட இருக்கலாம். ஆனால் அவன் என்னை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. கதவைத் திறந்து வரவேற்கும் முறையில் எதையோ முனகிக்கொண்டிருந்த என்னைக் கிட்டத்தட்ட அப்புறப்படுத்தும் முறையில் தன் நீண்ட உறுதியான இடது கரத்தால் விலக்கிவிட்டு, 'சாரு... சாரு...' என மிக அந்தரங்கமான தொனியில் அழைத்துக்கொண்டே நேராக உள்ளறையை நோக்கி நடந்தான். தனது வலக்கை விரலிடுக்கில் புகைந்துகொண்டிருந்த, மிகமிக மட்டரகமான புகையிலையினால் தயாரிக்கப்பட்ட சிகரெட் துண்டை, இன்னும் பாதியளவுக்கு மேல் எஞ்சியிருந்த நிலையில், துப்புரவாகப் பெருக்கப்பட்டிருந்த எங்கள் வீட்டின் நடுக்கூடத்தில் சுண்டியெறிந்துவிட்டுப் போனான். அவனுடைய அந்தச் செய்கை மிக மிக மோசமான ஒரு வன்முறையாகவும் எங்கள்மீது அவன் கொண்டிருக்கிற வரம்பற்ற அதிகாரத்தின் குறியீடாகவும் தென்பட்டது. நான் உடனடியாக எனது ஆட்சேபணையை வெளிப்படுத்தவும் எதிர்த்துக் கூச்சலிடவும் அந்தக் கணமே அவனை அங்கிருந்து வெளியேற்றிவிடுவதற்கும்கூட விரும்பினேன். ஆனால் அதன் பின்விளைவுகள் பற்றிய கவன உணர்வுடன் எங்கள் மூவருக்குமிடையே நிலவிவரும் மிகப் புதிரானதும் அசௌகரியமானதுமான உறவும், நாங்கள் ஒவ்வொருவரும் மற்ற இருவருடனும் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்துகொண்டிருக்கிற ஒப்பந்தங்களும் எச்சரிக்கைப் புள்ளிகளாகப் பிரக்ஞையில் தோன்றி என்னைச் செயலற்றவனாக்கியிருந்தன.

எனக்குப் பக்கத்தில் கிடந்த, இணைப்புகள் தேய்ந்துபோன என் மூதாதையர்களுக்குரிய பழைய மர நாற்காலியில் வீசியெறியப்பட்டதுபோல உட்கார்ந்துகொண்டேன். அறையின் விசாலத்துக்குப் பொருத்தமற்ற பலவீனமான மெழுகுச் சுடரின் ஒளி, கூடத்தின் விரிந்த பரப்பெங்கும் நிழல்களை அலையவிட்டுக்கொண்டிருந்தது.

கதவைத் திறந்து மூடியிருந்ததால் உள்ளே நுழைந்திருந்த காற்று, மெழுகுச் சுடரை லேசாக நடுங்கச்செய்து அந்த நிழல்களுக்கு உயிருள்ளவை போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தமையால் என் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. இரண்டு சிறிய அறைகளையும் ஒரு கூடத்தையும் கொண்ட இந்த வீட்டில் எனது எந்தவொரு இயக்கமும் தன்னிச்சையானதாக இருக்க முடியாது எனச் சோர்வுடன் ஒப்புக்கொண்டேன்.

மின்சாரம் எப்பொழுது மீள வரும் என்பதைப் பற்றிய நிச்சயமின்மை எனது சோர்வை மேலும் தீவிரப்படுத்தியது. சோர்விலிருந்து விடுபடுவதற்கான பலவந்தமான முயற்சியாக, ஏற்கனவே பலமுறை முயன்று பிறகு கைவிடப்பட்டுவிட்டவையான எங்களுடைய கடந்தகால வாழ்வையும் அதன் எல்லா நிகழ்வுகளையும், அவை எங்களுடைய வாழ்வில் இதுவரை ஏற்படுத்தியுள்ளவையும் இனி ஏற்படுத்தவுள்ளவையுமான பாதிப்புகளைப் பற்றிய எனது யோசனைகளைத் தொடர முற்பட்டேன். யோசிப்பதற்கான தொடக்கக்஢கட்ட முயற்சியாக வெறுமனே கண்களை மூடிக்கொண்டேன். இமைகளின் இருண்ட உட்சுவர்களில் விழிக்கோளங்களை உரசி உருட்டியபடியே, இந்த மர நாற்காலியில் ஒரு நோயாளியைப் போல மிகவும் அசௌகரியமான நிலையில் சரிந்து உட்கார்ந்திருந்தேன். வறையறுக்க முடியாத குழப்பமான கடந்த காலத்திற்கும் தீர்மானிக்க முடியாத எதிர்காலத்திற்குமிடையே நசுக்கப்பட்டு மூச்சுத் திணறிக் கிடக்கும் எங்களுடைய நிகழ்காலத்தின் இயக்கமற்ற தருணங்களில் இதுவுமொன்று. இயக்கமின்மையின் மூலம் சோர்வா? அச்சமா?

இரண்டும்தான் தாஸ், ஒன்றுக்கு மற்றொன்று மூலம். சோர்வுக்கு அச்சமும், அச்சத்துக்குச் சோர்வும். நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு இரண்டே இரண்டு வழிகள் தாம் உள்ளன. ஒன்று, நெருக்கடிகளின் மூல வேர்களைத் தேடி அவற்றை அழிப்பது, அல்லது அவற்றைப் பற்றிச் சிந்திககாமல் இருப்பது. முதலாவது வழி உனக்குச் சாத்தியமில்லை. தாஸ், நீயும் மூலத்தின் ஒரு பகுதியாயிருக்கிறாய். ஆனால் சிந்திப்பதை நிறுத்துவதற்கு ஓர் அருமையான வழியுண்டு. சிந்தனையின் கண்ணிகளைத் துண்டிக்கும் ஆற்றல் பெற்றது ஆல்கஹால்...! ஆனால் எனக்கென்னவோ குடித்தால்தான் மூளையே வேலை செய்யத் தொடங்குகிறது. தாஸ், மனித மூளை மற்றுமொரு புதிர்...

வேண்டாம். அமைதியின்மையை உருவாக்கும் அமைதியற்றவனின் குரல். அமைதியைப் பதற்றம் என நிறுவும் நுட்பமான மூளையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் விஷப் பரீட்சைகள் இனி வேண்டாம். பதற்றத்தை உள்ளீடாகக் கொண்டதெனினும் சோர்வுற்ற மனம் அமைதியையே விரும்புகிறது. உள்ளீட்டை மறுத்துத் தோற்றத்தின் மேல் நம்பிக்கை வைப்பது மட்டும் கைகூடிவிட்டால்...?

ஆனால் கடவுளே, சாரு எங்கே? 'சாரு, சாரு' என அழைத்தபடி அவன் எங்களுடைய படுக்கையறையினுள் நுழைந்திருக்கிறானே! கலைந்த ஆடைகளுடன் அவள் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தால்? அலுவலகத்திலிருந்து திரும்பியவுடன் இப்படித் தூங்குகிற அவளுடைய வழக்கத்தை என்னால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடிந்ததில்லை. அவளுடைய கண்கள் தூக்கத்திலும் எச்சரிக்கையாயிருப்பவை போன்ற பாவனையுடன் பாதி திறந்திருக்கும். அசைவற்று நின்றுகொண்டிருக்கும் அவளுடைய விழிக்கோளங்கள் பிரேதத்தை நினைவூட்டுபவை. பாதி திறந்த அந்தக் கண்களைப் பொருட்படுத்தாவிடில், ஒழுங்கு குலைந்த ஆடைகளினூடாகத் தென்படும் அவளுடைய வெற்றுடல் பாலுறவுக்கான வெளிப்படையான அழைப்பாகத் தோற்றமளிக்கும். ஒரே சமயத்தில் காமத்தையும் அருவருப்பையும் மூளச் செய்யும் அவளுடைய தோற்றத்தை எதிர்கொள்ளத் திராணியற்றவனாக அவ்வறையை விட்டுவெளியேறி, கூடத்தில் கிடக்கும் இப்புராதனமான மர நாற்காலியில் உடகார்ந்துகொண்டு தீராத பதற்றத்துடன் படுக்கையறையினுள்ளிருந்து வரும் அவளுடைய இயக்கங்களின் ஒழுங்கற்ற சப்தங்களைக் கூர்மையாகக் கவனித்துக்கொண்டிருப்பேன். சில தருணங்களில் வசைகளையும் மறுப்பையும் பொருட்படுத்தாமல் அவளைப் புணர்ந்ததற்குக்கூட அவளுடைய ஒழுங்கு குலைந்த அந்தத் தோற்றம்தான் காரணம்.

பிறகு அவள் தனது மரத்துப்போன உடலைச் சுமந்தபடி எழுந்து வந்து, ஒரு வார்த்தையும் பேசாமல் தேநீர் தயாரித்துக் கொடுத்துவிட்டுக் குளியலறைக்குள் நுழைந்துவிடுவாள். அவளிடமிருந்து சாதகமான சமிக்ஞை வரும்வரை நான் எங்களுடைய படுக்கையறையினுள் நுழைய மாட்டேன். இது எங்களுக்கிடையே நிலவிவரும் மிக ரகசியமானதொரு ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தைப் பொருட்படுத்தாமல், அதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அது என்னைக் கட்டுப்படுத்தவும் செய்யாது என்று திட்டவட்டமாக அறிவிப்பது போல, துப்புரவாகப் பெருக்கப்பட்டிருந்த கூடத்தின் மையப் பகுதியில் பாதி கருகிய சிகரெட் துண்டைச் சுண்டியெறிந்துவிட்டு எங்களுடைய படுக்கையறையினுள் நுழைந்திருக்கிறான் அவன். போகும்பொழுது, 'சாரு, சாரு' எனக் கூப்பிட்டுக்கொண்டு போனது தனது நாகரிக மேன்மையைப் பறைசாற்றிக்கொள்வதற்கான தம்பட்டம். ஒருவேளை உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து குளியலறைக்குப் போயிருப்பாளோ? தனது வழக்கத்தை அனுசரித்துத் தேநீர் தயாரித்துக் கொடுத்துவிட்டுக்கூடப் போயிருக்கலாம்தான். பதற்றம் காரணமாக நிகழ்வுகளைத் தொடர்ச்சியாகவும் துல்லியமாகவும் பதிவாக்கிக்கொள்வதிலிருந்து பிறழ்ந்துபோயிருக்குமோ எனது மூளை? நாற்காலியிலிருந்து கைக்கெட்டும் தொலைவிலிருந்தது ஒரு தேநீர்க் கோப்பை. சற்று ஆசுவாசம் கொண்டவனாக அதைக் கை நீட்டி எடுத்தேன். கோப்பையின் குளிர்ந்த அடிப்பாகத்தில் சிறிதளவு எஞ்சியிருந்தது தேநீர். சட்டென எனது மூளை நரம்புகளில் பரவியது சுய அருவருப்பின் கொடிய வேதனை.

உனது சந்தேகம் உன்னைக் கொன்றுகொண்டிருக்கிறது தாஸ். அது ஒரு நோய். குணப்படுத்தப்பட முடியாத, இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படாத பெரு வியாதி. அது உன்னை அணுஅணுவாகத் தின்றுகொண்டிருக்கிறது. உனக்காக அனுதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

சாரு இன்னும் குளியலறையினுள்தான் இருக்கிறாளா என்பதை யூகிக்க முடியவில்லை. ஒருவேளை இப்பொழுது அவள் உடை மாற்றிக்கொண்டிருக்கலாம். அவனது தற்போதைய வருகை பற்றிய எதிர்பார்ப்பு என்னைப் போலவே அவளுக்கும்கூட இருந்திருக்க வாய்ப்பில்லையாதலால் திடீரென ஓர் அந்நியன் தனது படுக்கையறைக்குள் பிரவேசிப்பது அவளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். அதிர்ச்சிக்கும் அவன் யாரென அறிந்துகொண்டதற்குப் பின்பு உருவாகும் ஆசுவாசத்திற்கும் இடைப்பட்ட தருணத்தில் தன்னிச்சையானதொரு செயலாகக் கூச்சலிடவும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால் மயானம் போல அமைதியாக இருந்தது படுக்கைறை. அறையின் வாயிலில் தொங்கும் திரைச்சீலை சற்று முன்பு, அவன் நுழைந்த தருணத்தில் உருவான படபடப்பிலிருந்து விடுபட்டு அசைவற்றிருந்தது. ஒருவேளை அவன் இப்பொழுது, இந்தத் தருணத்தில், இங்கு வந்திருக்கவே இல்லையோ? எல்லாம் பதற்றமுற்ற, நோயுற்ற மனதின் கற்பனையோ? முன்னர் எப்போதோ நிகழ்ந்தவைகளின் குழம்பிய நினைவோ? பீதியில் எனக்கு மேனி நடுங்கத் தொடங்கியது; குப்பென வியர்த்தது. ஆனால், அதோ நடுக்கூடத்தில் இப்பொழுதும் புகைந்தபடி உருண்டு கிடக்கிறது பாதி கருகிய நிலையிலான ஒரு சிகரெட் துண்டு. எனது மன ஆரோக்கியத்திற்கான சாட்சியம். ஓசைப்படாமல் எழுந்து சென்று அதை, அதன் நுனியில் கனன்றுகொண்டிருந்த சிறு பொறியைத் தேய்த்து அணைத்து எடுத்துக்கொண்டேன். சாரு அவனது வருகை குறித்துச் சந்தோஷப்படமாட்டாளெனக் கற்பனை செய்துகொள்வதற்கு முயன்றேன். குறிப்பாக எங்கள் இருவருக்குமிடையேயான உறவில் ஓரளவுக்குச் சுமுகத் தன்மை படரத் தொடங்கியிருக்கும் ஒரு தருணத்தில். இந்தச் சுமுகத் தன்மையை அவள் வெறுக்கவில்லை என நம்புவதற்கான தடயங்கள் எங்களுடைய அன்றாட வாழ்வில் கூடிக்கொண்டிருந்தன. தற்போதைய அவனது வருகை இச்சுமுகத் தன்மையைக் குலைத்துவிடக்கூடும். அவனிடம் அதற்கான முனைப்பு இல்லாதபொழுதும்கூட. அவன் எங்கள்மீது கொண்டிருக்கும் அதிகாரத்தைப் பிரயோகிக்கவில்லையென்றாலும் இப்பொழுது நாங்கள் எங்களுடைய கசப்பான இறந்த காலத்தை நோக்கித் திரும்புதல் தவிர்க்க முடியாதது. இறந்த காலத்திற்குரியதென நாங்கள் நம்பிவரும் நெருக்கடிகள் முற்றாக இறந்துவிடவில்லையென்பதும், அவை எங்களுடைய படுக்கைக்குக் கீழே மூர்ச்சையுற்றுக் கிடக்கின்றன என்பதும் எங்களிருவருக்குமே தெளிவாகத் தெரிந்திருக்கிற உண்மை.

மூர்ச்சையுற்றுக் கிடக்கும் இறந்த காலத்தின் செயலற்ற உடல்களின் மீது நாங்கள் நிர்வாணமாகப் படுத்துக்கொண்டிருக்கிறோம். ஒருவர்மீது மற்றொருவர் தீராத அன்பும் காதலும் நம்பிக்கையும் கொண்டிருப்பதாகக் கிசுகிசுப்பான குரல்களில் ஒருவரிடம் ஒருவர் சொல்லிக் கொள்கிறோம். அவற்றை நிரூபித்துக் காட்டுவதற்கு முற்பட்டவர்களைப் போல ஒருவரையொருவர் தழுவிக் கொள்கிறோம்; முத்தமிடுகிறோம்; புணர்கிறோம். புணர்ச்சிக்கும் புணர்ச்சிக்குப் பிந்தைய உறக்கத்திற்கும் இடைப்பட்ட தருணங்களில், புணர்ச்சியின் பரிசாக எங்களுக்குக் கிடைக்கவிருக்கிற குழந்தையைப் பற்றிய ஆசைகளைப் பகிர்ந்துகொள்கிறோம். உறங்கும்பொழுதோ எங்களுடைய கனவுகளில் இறந்த சிசுக்களைக் காண்கிறோம். பிறகு பீதியுற்றவர்களாய் விழித்துக்கொள்கிறோம். பீதியூட்டும் அந்தக் கனவுகளையும்கூடப் பகிர்ந்துகொள்கிறோம். பிறகு மறுபடியும் நாங்கள் புணரத் தொடங்குகிறோம். தீராத புணர்ச்சியின் விளைவாக எங்களுடைய கர்ப்பம் கரைந்து வழியும் வாசனையை உணர்கிறோம். இது எங்களைக் கலவரப்படுத்துவதற்குப் பதிலாக சந்தோஷத்தையே தருகிறது. இந்தச் சந்தோஷம் குறித்த சுய அருவருப்பிலிருந்தும் குற்ற உணர்விலிருந்தும் எங்களை மீட்டுக்கொள்வதற்காக மீண்டும் கனவு காண்கிறோம்; பீதியடைகிறோம்; புணர்கிறோம். இவற்றைச் சகித்துக்கொள்ள முடியாமல் எங்களுடைய இறந்த காலம் விழித்துக்கொள்கிறது. கூச்சலிடவும் முற்படுகிறது. அது போன்ற தருணங்களில் எங்களுடைய புணர்ச்சி ஓசை மிகுந்ததாக இருக்கும். இறந்த காலத்தின் கூச்சலைக் காட்டிலும் ஓசை மிகுந்ததாக...

படுக்கையறையிலிருந்து ஏதோ சப்தம் வந்தது. மிகமெல்லிய சப்தம்; ஒரு கணம்கூட நீடிக்கவில்லை. இன்னதெனத் துல்லியமாகப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. ஒரு முனகல்; சிசு அல்லது பெண்ணிற்குரியதாக இருக்கலாம். கருப்பையிலிருந்து வெளியே இழுக்கப்படும் தருணத்தில் தொண்டைக் குழியிலிருந்து வெளிப்படும் சிசுவின் முதல் சப்தம். வெளியே இழுத்துப் போடப்பட்ட பிறகு அது உரத்த அழுகையாக வெடிக்கிறது. புணர்ச்சியின் தொடக்கக் கணங்களில் விரகம் தரும் வேதனையில் பெண்களின் தொண்டைக் குழியிலிருந்தும் இதே போன்ற முனகல்கள் பீறிடுகின்றன. குறிப்பாகக் கள்ளத்தனமான புணர்ச்சிகளின்போது. எனக்கேற்பட்டது அதிர்ச்சியா பயமா என்பது விளங்கவில்லை. ஆனால் எனது மூதாதையர்களுக்குரிய மர நாற்காலியிலிருந்து இழுத்து வீசப்பட்டதுபோல அவசரமாக எழுந்தேன். மிகப் பதற்றம் கொண்டவனாக எங்களுடைய படுக்கையறையை நோக்கிச் சில அடிகள் துள்ளிச் சென்றிருந்தேன். ஆனால் கடவுளே, என்ன காரியம் செய்யத் துணிந்திருக்கிறேன். எனது செயல் எவ்வளவு அபத்தமானது, அநாகரீகமானது, குரூரமானது?

நீ ஒரு சந்தேகப் பேர்வழி தாஸ். நீ கொண்டிருப்பது காதல் அல்ல, பொஸஸிவ்னெஸ். நீ எனது சுய அடையாளங்களை மறுக்கிறாய்; எனது ஆளுமையைக் கொச்சையாகப் புரிந்துகொண்டிருக்கிறாய்; என்னை வேவு பார்க்கிறாய். வெட்கமாக இல்லை உனக்கு? என்னுடைய அலுவலகத்திற்கு வெளியே உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் மணிக்கணக்காக உட்கார்ந்துகொண்டிருக்கிறாய். பொய் சொல்லாதே. எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. நான் அலுவலகத்திற்குப் போய்த் திரும்பும் எல்லாப் பாதைகளிலும் என்னைக் கண்காணிப்பதற்காக உன்னுடைய ஒற்றர்கள் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவேளை எனது அலுவலகச் சகாக்கள் சிலரை நீ சிநேகம் பிடித்துக் கொண்டிருக்கக்கூடும். உனக்காக வேவு பார்க்கச் சொல்லி அவர்களைக் கேட்டுக்கொண்டிருப்பாய். பழிவாங்கப்பட்ட, துரோகமிழைக்கப்பட்ட கணவன் என்னும் சித்திரத்தை உருவாக்க முயற்சிக்கிறாய். எனது அலுவலக சகா ஒருவனிடம் கண்ணீர் விட்டு அழுதாயாமே? ஆபாசமாக இருக்கிறது தாஸ். உனது இவ்வகைப்பட்ட மிரட்டலுக்கும் வன்முறைக்கும் நான் பணிவேன் என நினைக்காதே. ஒன்றைத் திட்டவட்டமாகப் புரிந்துகொள். திருமணத்திற்கு வெளியே பாலுறவு கொள்வதற்கு விருப்பம் கொண்டுவிட்ட ஒரு பெண்ணால் எல்லா விதமான கண்காணிப்புகளையும் மீறித் தனது இச்சையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

தாஸ்... தாஸ்... தாஸ்...

உனக்கு அவளைப் புரிந்துகொள்ள முடியாமலிருப்பது பரிதாபம் தாஸ். நீ அவளைக் காதலித்திருக்கிறாய்; அவளைப் புணர்ந்திருக்கிறாய்; அவளோடு ஒரே கூரையின் கீழ் வசித்துக்கொண்டிருக்கிறாய். தாஸ், நம்பிக்கையே மனித வாழ்வின் ஆதாரம். நீ உனது மனைவியை நம்புவதற்குப் பிறருடைய அபிப்ராயங்களைச் சார்ந்திருக்கிறாய். உனக்கு ஒருபோதும் நிம்மதி கிடைக்கப்போவதில்லை. தாஸ், எந்தச் சூழ்நிலையிலும் மனைவியின் மேல் சந்தேகம் கொள்ளாத ஒருவனால் மட்டுமே லட்சியக் கணவனாக விளங்க முடியும். நீ ஒரு ஐடியல் ஹஸ்பெண்ட், இல்லையா தாஸ்?

லட்சியக் கணவன், லட்சியக் கணவன், லட்சியக் கணவன்...

... ஆகவே தாஸ், இப்பொழுது உனக்குக் கேட்டதாகச் சொல்கிறாயே ஒரு சப்தம், முனகல் - அதைப் பொருட்படுத்தாதே. உனது படுக்கையறைக்குள் நானும் உனது மனைவியும் கள்ளப் புணர்ச்சியில் ஈடுபட்டிருப்போமெனவும், திடீரென உள்ளே நுழைந்து கையும் களவுமாகப் பிடித்துவிடலாமெனவும் அபத்தமாகக் கற்பனை செய்து கொள்ளாதே. உனக்குக் கேட்டது முத்தத்தின் சப்தமல்ல, புணர்ச்சியின் சப்தமுமல்ல. சிசுவின் முனகல். ஹ ஹா ஹா... நல்ல கற்பனை. தாஸ், சிசு புணர்ச்சியின்பத்திற்குத் தடை. மலட்டுத்தனத்தைப் பேரதிருஷ்டம் எனக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது உனது காமம். சொல்லப்போனால் உனக்கு எந்தச் சப்தமும் கேட்கவில்லை. உட்புறமாகத் தாளிடப்பட்டிருக்கிறது உனது வீடு. இங்கே உன்னையும் உனது மனைவியையும் தவிர வேறு யாருமில்லை. உனது மனைவி குளித்துக்கொண்டிருக்கிறாள். எல்லாவற்றையும் நம்பு. நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம். டிசம்பர் மாதத்தின் முன்னிரவுக் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாமல் நீ உனது மூதாதையர்களுக்குரிய மர நாற்காலியில் முடங்கிக் கிடக்கிறாய். நீ ஒரு சோம்பேறி. சோம்பேறித்தனம் பெரிய குற்றமல்ல. நீ சோம்பலை விரும்புகிறாய்; ரசிக்கிறாய். விரும்பு. ரசித்தபடியே கண்களை மூடிக்கொண்டு தூங்கு. நீ ஒரு லட்சியக் கணவன். புணர்ச்சியை முடித்துக்கொண்டு வந்து உன்னைத் துயிலெலுப்பிவிடுவாள் உனது இல்லத்தரசி. மறுபடியும் உனக்கு ஒரு கோப்பைத் தேநீர் கிடைக்கலாம். அற்புதமானது இது. ஆனால் ஸாரி, ஸாரி மை டியர் பிரண்ட். குளியலை முடித்துக்கொண்டு வந்து என்பதற்குப் பதிலாகப் புணர்ச்சியை முடித்துக்கொண்டு வந்து எனத் தவறுதலாகச் சொல்லிவிட்டேன். மன்னித்துக்கொள் எனது லட்சியக் கணவனே...!

மனைவியின் லட்சியம், லட்சியக் கணவன்...!

கடவுளே, இங்கே கொடிய துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. கருப்பையின் வாயிலில் பெருகும் நிணத்தின் நெடி. தாஸ் நீ அதை அனுபவித்திருக்கிறாயா? அது உனது நினைவுகளைக் குழப்பிவிட்டுவிடும். பீதியையும் அதீதக் கற்பனையையும் தூண்டிவிடக்கூடியது பிறவியின் நெடி. பிரசவத்தின்போது கணவன் அருகிலிருப்பது ஆரோக்கியமானது எனச் சொல்கிறது நவீன மருத்துவம். தாஸ், அது கொடிய வேதனையாயிருக்கும். அவளது அடிவயிற்றிலிருந்து தன்னிச்சையான கேவல்கள் எழும். அவற்றைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் பொருட்டு அவள் தனது உதடுகளைக் கடித்துக்கொள்வாள். தாங்க முடியாத விரகத்தின் விளைவாக இதேபோல உதடுகளைக் கடித்துக்கொள்ளும் பெண்களைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கக்கூடும் தாஸ். கடிபட்ட உதடுகளிலிருந்து பெருகி வழியும் குருதி. அதைப் பார்த்திருக்கிறாயா நீ? குறைந்த பட்சம் அதை உன்னால் கற்பனையாவது செய்ய முடிந்திருக்கிறதா? முழு உடலும் துடித்துப் புரளும்; கரங்கள் படுக்கையைப் பிறாண்டும். மிக வன்மம் கொண்டவளாகக் கால்களால் காற்றை உதைப்பாள். அந்தத் தருணத்தில் அவளுக்குத் தன்னுடைய கணவனையோ கள்ளக் காதலனையோ தழுவிக்கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமானால்? அது ஒரு வன்மமான புணர்ச்சியை நினைவூட்டக்கூடியது. வெளிப்படும் சப்தங்களில்கூட பெரிய வேறுபாடுகள் இருக்காது. புணர்ச்சிக்கும் ஜனனத்திற்குமிடையே அவ்வளவு பிணைப்பு இருக்கிறது.

புணர்ச்சிக்கும் புகைபிடித்தலுக்கும்கூடப் பிணைப்பு இருக்கிறது தாஸ்...!

ஹி ஈஸ் மை ஐடியல் ஹஸ்பெண்ட்... ஹி ஹி.

கண்களை இறுக மூடிக்கொண்டேன். எவ்வளவோ நாட்களுக்கப்புறம் புகைபிடிக்க வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று எனக்கு. ஆனால் என்னிடம் சிகரெட் இல்லை. எனது உள்ளங்கையிலிருக்கும் ஒரு துண்டு சிகரெட்டைத் தவிர. ஒரு முனை கருகியதும் மறுமுனை எச்சில்படுத்தப்பட்டதுமான அந்தத் துண்டுதான் எனது சந்தேகத்திற்கான ஒரே ஆதாரம்; மன ஆரோக்கியத்திற்கான தடயம். புகைபிடிக்க வேண்டுமென்ற ஒரு தற்காலிக இச்சைக்கு அதைப் பலியிட முடியாது. தவிர சுண்டியெறியப்பட்ட சிகரெட் துண்டுகள் ஆரோக்கியத்திற்கு ஏற்றவையல்ல. தெருப் பொறுக்கிகளே சுண்டியெறியப்பட்ட சிகரெட் துண்டுகளைப் புகைக்கிறார்கள். விளைவோ கேன்சரும் சயரோகமும்.

புகைபிடிப்பதனால் என்ன நன்மை எனக் கேட்டால், புகைபிடிப்பவர்கள் யாருக்கும் பதில் சொல்லத்தெரியாது தாஸ். ஆனால் அழகான பெண்கள் புகைபிடிக்காத ஆண்களின் உதடுகளையே முத்தமிடுவதற்கு விரும்புவார்கள். ஓரங்களில் கருத்த தடயங்களைக் கொண்டுள்ள, நிகோடின் நாற்றம் வீசும் ஆணின் உதடுகளை முத்தமிடுவதற்கு எந்தப் பெண்ணுமே விரும்புவதில்லை. ஆனால் கிட்டத்தட்ட எல்லா ஆண்களுக்குமே முத்தங்கள் கிடைக்கின்றன; பெரும்பாலானவர்கள் புகை பிடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். புகைபிடித்தலுக்கும் புணர்தலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அது ஒரு பயலாஜிக்கல் நீட். நன்மை, தீமை, ஒழுக்கம், ஒழுக்கக்கேடு போன்ற அளவுகோல்களால் அதைத் தவிர்த்துவிட முடியாது. தீமைகள் குறித்த எச்சரிக்கைகள் எத்தனை இருக்கின்றன. அவற்றைப் பொருட்படுத்தியிருக்கிறதா உலகம்? புணர்தலாலும் தீமைகள் உண்டென்கிறது உலகம். புணர்தலை எப்படி விலக்க முடியாதோ அப்படிப் புகைபிடித்தலையும் விலக்க முடியாது. பேரின்பத்திற்குப் பெண், சிற்றின்பத்திற்கு சிகரெட். புகைபிடிக்காதவன் லட்சியக் கணவனென்றால் புணராதவனை என்ன சொல்லி அழைப்பது? லட்சியக் கணவனும் லட்சிய மனைவியும் இணையும்பொழுது லட்சியக் குடும்பம் உருவாகிறதாமே? குடும்பத்தின் லட்சியம் என்னவாம்?

புணர்தலோ? வேசிகளிடத்திலும் கிடைக்குமே புணர்ச்சியின்பம்?

அது பாவம். மகா பாவம். ஒழுக்கக் கேடானது. ஒழுக்கக் கேட்டிலிருந்து பெறப்படும் இன்பம் எதிர் காலத்தின் கொடிய துயரங்களுக்கான விதையாயிருக்கும். பால்வினை நோய்கள், குஷ்டம், இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படாத எய்ட்ஸ். சிகரெட் பிடித்தால் சயரோகம், வேசியைப் புணர்ந்தால் எய்ட்ஸ். சிகரெட் ஸ்மோக்கிங் ஈஸ் இன்ஜுரியஸ் டு ஹெல்த். எய்ட்ஸைத் தடுக்க ஆணுறை, சயரோகத்தைத் தடுக்க சிகரெட்டுக்கு ஃபில்டர். ஹ ஹ ஹா...

இல்லறத்தின் லட்சியம் புணர்தலன்று. குழந்தை பெறுதலே புணர்ச்சியின் நோக்கம். வம்ச விருத்தி, மானுடக் கடமை, பிரம்ம காரியம். ஒரு லட்சியக் காதலன் மனைவியின் மிது காமுற மாட்டான், அது காதலாகும். தாஸ், லவ் ஈஸ் அ டிவைன் ஃபோர்ஸ், லஸ்ட் ஈஸ் அன் ஈவில் ஃபோர்ஸ். தாஸ், உங்களுக்குத் தெரியுமா? கடவுள் காதலைப் படைத்தார், சாத்தான் காமத்தைப் படைத்தான். விலக்கப்பட்ட கனியைப் புசித்ததனால் வந்த வினை. மனித இருதயம் கடவுளின் சுவாசத்தால் நிரம்பியிருக்கிறது. வயிறோ சாத்தானின் விலக்கப்பட்ட கனியினால் நிரம்பியிருக்கிறது. அதனால்தான் நம்மால் கடவுளையும் நிராகரிக்க முடியவில்லை, சாத்தானையும் விலக்க முடியவில்லை. கடவுள் ஆதாமையும் ஏவாளையும் மட்டும்தான் படைத்தார். காயீனும் ஆபெலும் பாவத்தின் சம்பளங்களாக்கும் தாஸ். பாவத்தின் சம்பளம் மரணம். காயீன் ஆபெலைக் கொன்றான், பிறகு தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன காதலும் காமமும், புணர்ச்சியும் ஜனனமும், பாவமும் மரணமும். சந்தேகம்கூடக் கொடிய பாவம்தான் தாஸ். நீங்கள் கடவுளைச் சரணடையுங்கள். உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும். ஆமென்.

ஆமென்... ஆமென்...

நீயும் பாவம் செய்தவளாயிருக்கிறய் சாரு. விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசிக்கும்டி தூண்டுகிறாள் லட்சிய மனைவி.

உனக்குத் தாழ்வு மனப்பான்மை தாஸ்.

உனது முத்தங்களுக்காக நான் சிகரெட்டுகளை விலையாகத் தந்திருக்கிறேன். ஆனால் நீ என்னை நம்பவில்லை. நிகோடினின் போதை உனது முத்தங்களின் மயக்கத்திற்கு இணையாகாது என்பதை உனக்குப் புரிந்துகொள்ள முடியவில்லை. உனக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகைபிடித்துவிட்டுச் சூயிங்கம் மென்ற உதடுகளுடன் வீடு திரும்புகிறேனெனச் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறாய். காதலின் அடையாளமான முத்தமும்கூடக் கடவுளின் பரிசுதான் சாரு. அதை நீ கொச்சைப்படுத்தினாய். என்னை வேவு பார்ப்பதற்கு முத்தங்களைப் பயன்படுத்தினாய். புகைபிடித்தல் எனது சுதந்திரம் என என்னைப் பொருட்படுத்தாமலிருக்க உனக்கு ஏன் முடியவில்லை சாரு?

தாஸ், நிகோடினின் துர்நாற்றம் முத்தத்தின் போதைக்குத் தடை. உதடுகளைக் களங்கப்படுத்துகிறது சிகரெட்.

ஆனால் களங்கத்தின் காரணி சிகரெட் மட்டுமில்லை. எச்சில்படுத்தப்பட்ட உதடுகள் தரும் முத்தம் காமத்தைத் தூண்டும், காதலை அல்ல.

இட் ஈஸ் நத்திங் பட் பொஸஸிவ்னெஸ்.

பொஸஸிவ்னெஸாமே பொஸஸிவ்னெஸ். உனது முத்தங்கள் எனக்கு மட்டுமானவையாக இருக்க வேண்டும் சாரு. உனது முத்தங்களும் உனது காதலும் உனது காமமும் உனது முழு ஆகிருதியும். இதை உனக்குப் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால் உனக்குக் காதலின் உக்கிரத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை யென்றுதான் அர்த்தம்.

உனக்கு மனித உறவுகளின் தாத்பரியம் புரியவில்லை தாஸ். ஆண் பெண் உறவை செக்ஸுக்கு அப்பால் உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது உனது மன ஊனத்தின் விளைவு. நோயுற்ற மனதின் திரிதலான வெளிப்பாடு.

நீ அவன்மீது கொண்டிருப்பது காமம் அல்ல, இல்லையா சாரு?

காதலும் காமமும் வெவ்வேறானவை தாஸ்.

நீ அவன்மீது கொண்டிருப்பது காதலா காமமா?

காதலையும் உனக்குப் புரிந்துகொள்ள முடியவில்லை, காமத்தையும் உனக்குப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களைப் புணர்வது வேசைத்தனம். வேசைத்தனம் கொடிய பாவம் சாரு. மிகக்கொடிய பாவம்.

ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைப் புணர்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறார்களே ஆண்கள்? அதை என்ன பெயரிட்டு அழைப்பது தாஸ்? யூ ஆர் அ க்ரூயல் மேல் ஷாவனிஸ்ட்...

பிறகு எனக்குப் பேச ஒன்றுமில்லாமல் போயிற்று. சந்தேகம் உனது பிறவிக்குணம் என எனது கண்களை நேராகப் பார்த்துச் சொல்லிவிட்டுப் படுக்கையறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்திக்கொண்டாள் சாரு. சுழலும் மின்விசிறியிலிருந்து பரவியிருந்த வெப்பக்காற்று எங்களது படுக்கையறைக் கதவின் மீது தொங்கும் திரைச்சீலையை உலுக்கிக் கலவரப்படுத்தியிருந்தது. அறைந்து சாத்தப்பட்ட கதவின் பளபளப்பான வெளிப்பரப்பின் மீது படபடக்கும் திரைச்சீலையின் துல்லியமான சப்தம். உள்ளிருந்து கேட்டது ஒரு உரத்த தேம்பல். பிடுங்கியெடுக்கப்பட்ட சிசுவின் முதல் அழுகை. இப்பொழுது நிகழ்ந்ததுபோலவே அப்பொழுதும் எனது மூதாதையர்களுக்குரிய இந்த மர நாற்காலியில் தூக்கி வீசப்பட்டதுபோல உட்கார்ந்துகொண்டேன். சில கணங்கள் மட்டும் நீடித்துப் பின்பு அடங்கிவிட்டது அவளுடைய தேம்பல். அழுததற்காக வெட்கமடைந்திருப்பாள். அல்லது அந்த அழுகையேகூட ஒரு பழி வாங்கும் நடவடிக்கையாயிருக்கும்.

அது வெப்பம் மிகுந்த ஒரு கோடைக்காலத்தின் பின்னிரவு. நிலவத் தொடங்கியிருந்த குரூரமான அமைதி மயானத்தில் இருப்பதான கற்பனையைத் தோற்றுவித்திருந்தது. பளபளப்பான தரையும் சித்திரச் சட்டங்கள் மாட்டப்பட்ட சுவர்களும் கதவுகளும் கூடத்திலிருந்த மேசையும் தொலைக்காட்சிப் பெட்டியும் அலமாரியும் அந்தக் கற்பனைக்குப் பொருந்திப்போகாததாலோ என்னவோ ஏதோவொரு மருத்துவமனையில் மார்ச் சுவரிக்கு வெளியே எனக்குரிய சவத்தைப் பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருப்பது போன்ற பிரமை தோன்றிற்று. இயற்கை மரணமா, கொலையா, தற்கொலையா என்பதைத் தீர்மானிப்பதற்காகப் போஸ்ட்மார்ட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள். காமமும் காதலும் பொதிந்த உடலின் மீது கத்திகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

கல்யாணத் தேதியிலிருந்து ஏழாண்டுகளுக்குள் நடக்கிற எந்தப் பெண்ணின் மரணமும் சந்தேகத்திற்குரியதாகும் தாஸ். கொலையோ தற்கொலையோ, அதற்குக் கணவனே பொறுப்பாளி. பிறகு கைது நடவடிக்கைகள். போஸ்ட்மார்ட்டம் முடிந்ததும் கைகளைக் கழுவிக்கொண்டுவந்து யூனிபார்மை மாற்றிக்கொண்டுவிடுவார்கள் மருத்துவர்கள். வெள்ளைக் கோட்டுக்குப் பதிலாகக் காக்கிச் சட்டை; ஸ்டெதாஸ்கோப்புக்குப் பதிலாகக் கைவிலங்கு; அனுதாபத்திற்குப் பதிலாக விசாரணை. பிறகு தீர்ப்புகள், தண்டனைகள்... லட்சியக் கணவனாமே லட்சியக் கணவன்... ஹெஹ்ஹே...

இதேபோல் அப்போதும் புகைபிடிக்க வேண்டுமென்ற விருப்பம் தீவிரமாக மூண்டது எனக்கு. புகைபிடிப்பதை அடியோடு விட்டொழித்திருந்ததால் அப்போதும் என்னிடம் சிகரெட் இருந்திக்கவில்லை. இப்பொழுதாவது எனது உள்ளங்கைக்குள் இருக்கிறது பாதி கருகியதொரு சிகரெட் துண்டு. அப்போது, அந்த நள்ளிரவில் இது என் கைகளுக்குக் கிடைத்திருக்குமானால் தடயமென்றோ சாட்சியமென்றோ பார்க்காமல் கொளுத்திக்கொண்டிருந்திருப்பேன். வேகமாகச் சுழன்றுகொண்டிருந்த மின் விசிறியையோ பிரகாசமான குழல் விளக்கையோ அணைக்காமல் நான் வீட்டை விட்டு வெளியில் வந்தேன். அப்பொழுது நேரம் என்னவாக இருந்ததென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்துகொள்ளும் விருப்பமும் எனக்கு இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தன்னிச்சையாக நடந்த எனது கால்கள் தெரு முனையிலிருந்த பூட்டப்பட்டிருந்த பலசரக்குக் கடையின் முன்பாக வந்து நின்றன. சிகரெட் வாங்க வேண்டுமென்பதற்காகவே நான் அங்கு வந்து நின்றிருக்கக்கூடுமென யூகித்தேன். பூட்டப்பட்டிருந்த பலசரக்குக் கடை என்னைப் பதற்றத்திற்குள்ளாக்கியிருந்தது. அந்தத் தருணத்தில்தான் எனக்கு அதற்குமுன் நான் ஒருபோதும் சென்றிராத பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டுமென்ற விருப்பமுண்டாயிற்று. பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் ஒருபோதும் பூட்டப்படுவதில்லை. அங்கே நிச்சயமாக சிகரெட்டுகள் கிடைக்கும். எங்கள் குடியிருப்பிலிருந்து பேருந்து நிலையம் எவ்வளவு தூரத்திலிருக்கிறது என்பது திட்டவட்டமாக எனக்குத் தெரியாது. செல்லும் பாதை பற்றிய விவரங்கள் என்னிடம் அறவே இல்லை. வேகமாக அதே சமயம் திட்டமிடப்படாமல் வளர்ந்துவரும் எங்களுடைய நகரின் பல பாதைகள் மிகவும் குறுகலானவை; நீளம் குறைந்தவை. வெளியேறும் வழியற்ற பல குறுக்குச் சந்துகளையும் சீரமைக்கப்படாத பள்ளங்களையும் கட்டாந்தரைகளையும் கடந்துதான் எங்கள் குடியிருப்பை அடைந்துகொண்டிருந்தோம். பயணங்களுக்குப் பெரும்பாலும் ஆட்டோ ரிக்ஷாக்களையே நம்பியிருக்கிற எனக்கு, அந்த நள்ளிரவு நேரத்தில் சிகரெட் வாங்குவதற்காகப் பேருந்து நிலையத்திற்குப் போவதென்பது ஒரு திட்டவட்டமான சாகசச் செயலாகத் தோன்றியது.

சாகசச் செயலல்ல, பழிவாங்கும் நடவடிக்கை.

பழிக்குக் கருவி சிகரெட்... உனக்கு செக்ஸ் என்றால் எனக்கு சிகரெட். செக்ஸுக்கு இணையாகுமோ சிகரெட்?

எனது பழிக்கு ஒத்துழைப்பதுபோலத் திடீரென இருள் சூழ்ந்தது. பவர் கட்... மின்வாரியத்தின் செயலின்மைக்கு ஒரு மானசீகமான நன்றி. நகரின் கடைக்கோடியில் தன்னந்தனியாய்ப் பதுங்கியிருக்கும் எங்கள் குடியிருப்பும் இரண்டு சிறிய அறைகளையும் அவற்றைவிடச் சற்றே அகன்ற ஒரு கூடத்தையும் கொண்டுள்ள எங்களுடைய வீடும் இன்னேரம் இருளின் பிடிக்குள் வந்திருக்கும். சாரு, உனக்கு இருளில் தனித்திருக்க முடியாது. கூடத்திலுள்ள ஸ்விட்ச் பாக்ஸின் மேலிருக்கிறது ஒரு மெழுகுவர்த்தியும் தீப்பட்டியும். பேட்டரி பழுதுபட்ட எமர்ஜென்சி லாம்ப் இன்னும் சரிசெய்யப்படவில்லை. இருளைத் தடவிக் கூடத்திற்கு வந்து மெழுகுவர்த்தியையும் தீப்பெட்டியையும் எடுப்பதற்கு உன்னால் முடியாது. என் தேவதையே, வெளிச்சம்தான் உனது பலம்; இருள் அல்ல.

அது ஒரு சைக்கலாஜிக்கல் ப்ராப்ளம் தாஸ். இருள் சூழ்ந்த மறு கணத்தில் அந்தக் கற்பனை தோன்றிவிடுகிறது. இருளின் எல்லைகளற்ற வெளி நம்பவே முடியாதபடி அசையத் தொடங்குகிறது. பிறகு இருளின் பேருரு அணுக்களாகப் பிரிந்து, ஒவ்வோர் அணுவும் ஒரு புழுவாகிறது. என் கனவின் வெளியெங்கும் புழுக்கள். பிறகு அவை ஒன்றையொன்று தழுவி ஒளியின் பெருந் தூண்களாக எழும்பி நிற்கின்றன. கண்களைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் மூழ்கத் தொடங்குகிறது எனதுடல். தாஸ், சொன்னால் நம்ப மாட்டாய். தொலைந்துபோன இருள் எனக்குள் தவிப்பை மூளச்செய்கிறது. ஒளியின் ஆழம்காண முடியாத பள்ளத்தாக்குக்குள் இருளைத்தேடத் தொடங்குகிறேன் நான். பிறகு அந்தப் பள்ளத்தாக்கின் ஆழத்திலிருந்து எழுந்து வருவான் இருளின் வடிவம் கொண்ட ஓர் ஆண்மகன். நெடுநெடுவென்று நம்பவே முடியாத ஆகிருதி. அவனது புஜங்களிலும் தோள்களிலும் மார்பிலும் கை, கால்களிலும் கற்றை கற்றையாய் ரோமம். சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது தாஸ், அவன் முழு நிர்வாணமாயிருப்பான். அச்சத்தாலா வெட்கத்தாலா என எனக்குச் சொல்லத் தெரியவில்லை, நான் கண்களை மூடிக்கொள்வேன். ஆனால் மனமல்லவா பார்த்துக்கொண்டிருப்பது? அவனோ இமைக்காத விழிகளால் வெறித்துப் பார்த்தபடி என்னை நோக்கி வருவான். தனது வலிய கரங்களால் என்னைப் புரட்டிப்போடுவான். அவனது தீண்டல் என்னை மூர்ச்சையுறச் செய்வதுபோலிருக்கும் தாஸ். விழிகள் செருகும் எனக்கு. பிறகு அவன் தனது தடித்த உதடுகளால் என்னை முத்தமிடத் தொடங்குவான். முத்தமிட்டவாறே எனது ஆடைகளை ஒவ்வொன்றாகக் களையத் தொடங்குவான். தாஸ், அதிர்ச்சியடையாதே, அவனது செய்கைகளைத் தடுப்பதற்கு ஏதும் செய்யாதவளாயிருப்பேன் எனவும் நினைக்காதே. அவற்றைத் துல்லியமாக விவரிக்க முடியவில்லை, அவ்வளவுதான். எனது முயற்சிகளை அவன் வெகு சுலபமாக முறியடித்து விடுவான். எனது ஆடைகளைக் கிழித்தெறிவான்; நிர்வாணப்படுத்தி ஒரு மிருகம்போல என்னைப் புணரத் தொடங்குவான். எதிர்ப்பைத் தெரிவிக்கவோ போரிடவோ அந்தத் தருணத்தில் எனது உடல் ஒத்துழைக்காது. தாஸ், நான் முற்றாக என்னை இழந்திருப்பேன். தாள முடியாத வேதனை மூளும். எனது குறியிலிருந்து ரத்தமும் நிணமும் பெருகும். கடவுளே, அதை யாராலும் ஒருபோதும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. தாஸ், தயவுசெய்து இரவுகளில் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விடாதே. என்னைப் பழி தீர்த்துக்கொள்வதற்கு ஒருபோதும் இரவு நேரங்களைத் தேர்ந்தெடுக்காதே.

... கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை தாஸ். உங்களுடைய படுக்கையறையில் ஒரு எமர்ஜென்ஸி லாம்ப் வைத்துக்கொள்ளுங்கள். ஸ்விட்ச் பாக்ஸின் மேல் ஒரு தீப்பெட்டியும் மெழுகுவர்த்தியும் எப்பொழுதும் இருக்கட்டும். முடிந்தவரை இரவு நேரங்களில் உங்களுடைய மனைவியைத் தனியே விட்டுவிட்டு எங்கேயும் போய்விடாதிருக்க முயலுங்கள். சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் இந்த காப்சூல்களைத் தலா ஒன்று வீதம் எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள். காலப்போக்கில் சரியாகிவிடும். ஆல் த பெஸ்ட். ஹி... ஹி... ஹி...

தாங்க் யூ, தாங்க் யூ வெரி மச்... ஹி... ஹி...

ஒரு ரகசியமான ஆலோசனை தாஸ். நீங்கள் இதைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. மனநல மருத்துவம் இதைவிட மோசமானவையெனக் கருதத்தக்கப் பல ஆலோசனைகளை அனுமதித்திருக்கிறது. ஒரு முறை, புரிந்துகொள்கிறீர்களல்லவா? ஒரே ஒரு முறை உங்கள் மனைவியை முழு இருளில் தவிக்கவிடுங்கள். அருகில், மிக அருகில் நீங்கள் ஒளிந்துகொள்ள வேண்டும். நீங்கள் ஒளிந்துகொண்டிருப்பது உங்கள் மனைவிக்குத் தெரியவே கூடாது. கவனம். அப்பொழுது அந்தக் கற்பனை தோன்றிய சிறிது நேரத்திற்குள்ளாகவே அச்சத்தால் நடுங்கத் தொடங்கிவிடுவார் உங்கள் மனைவி. அதாவது அவர் நம்மிடம் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்கும்பட்சத்தில். ஹி ஹி... கோபித்துக்கொள்ளாதீர்கள். சில வகையான மன நோய்களின் தாக்குதலுக்குள்ளானவர்கள் இப்படியெல்லாம் கற்பனை செய்துகொள்வது வழக்கம்தான். அப்படியிருக்கும் பட்சத்தில்கூட இந்த வகையான தெரபி அதைக் குணப்படுத்திவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். இருளில் நீங்கள் ஒரு மிருகம்போலப் பதுங்கிப் பதுங்கி அருகில் செல்லுங்கள். அதாவது அவர் தனது கற்பனையில் நிகழ்வதாகச் சொல்கிறாரே, அதேபோல. ஒரு முக்கியமான விஷயம் தாஸ், அந்தத் தருணத்தில் நீங்கள் முழு நிர்வாணமாக இருக்க வேண்டும். ஹி... ஹி... முன்பே சொன்னேனே, இது ஒரு தெரபியென்று. அச்சத்தின் விளைவாக உங்கள் மனைவி கூச்சலிடத் தொடங்குவார். ஒருவேளை அவர் கூச்சலிடலாம். தன்னைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டு உங்களைத் தாக்கவும்கூட முற்படலாம். திடுக்கிடாதீர்கள், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. நீங்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. ஒரு முறைகூட உங்கள் மனைவி அந்த இருள் மனிதனைத் தாக்குவதற்கு முற்பட்டதாகக் கூறவில்லை. பொதுவாக அதற்கு மேல் அவர் எதையும் சொல்வதில்லை. பல முறை வற்புறுத்திக் கேட்டும்கூட மறுத்துவிட்டார். அது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கொடிய வேதனையை அளிக்கும் ஒரு அனுபவமாக, அல்லது வெட்கப்படும்படியான கற்பனையாக இருக்கலாம். ஹி... ஹி... நாங்கள் முன்பே சொன்னதுபோல மனநோயில் பல வகைகள் இருக்கின்றன. நாங்கள் சொல்ல விரும்புவது இதுதான், தயவுசெய்து பின்வாங்கிவிடாதீர்கள். உங்கள் செயலில் ஒரு தீவிரம் இருக்க வேண்டும். வன்முறையின் சாயல் தென்பட வேண்டும். கவனம், நீங்கள் உங்களை எங்களில் ஒருவராகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்பட்டுவிடக் கூடாது. நீங்கள் உங்களுடைய சொந்த மனைவியை பலாத்காரம் செய்கிறீர்கள். வேடிக்கையாக இல்லை? ஹ... ஹ... ஹா. ஆல் த பெஸ்ட்..

சட்டென யார்மீதோ மோதிக்கொண்டேன். எனது மண்டையும் மற்றொரு மண்டையும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. சுதாரித்துக்கொள்ள முடியாமல் அப்படியே சரிந்து நடு ரோட்டில் மண்டியிட்டேன். என் கண்களுக்கெதிரே தென்பட்டது இருளின் வடிவம்கொண்ட ஓர் ஆணின் உருவம். நெடுநெடுவென நம்பவே முடியாத ஆகிருதி. பற்றிய கைகளில் சொரசொரக்கும் அடர்ந்த ரோமம். குப்பென்று உடல் முழுவதும் வியர்த்துவிட்டது எனக்கு.

ஸாரி சார்... வெரி ஸாரி.

மிஸ்டர், இருளிலும் பார்த்து நடக்கத் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் இருளில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மறுபடியும் ஒரு முறை வருத்தம் தெரிவித்துவிட்டுக் கைகளைப் பிடுங்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தான் அவன். பயந்திருப்பான். கோழை. ஆகிருதிக்குச் சம்மந்தமில்லாத கோழைத்தனம். அவனுடைய படுக்கையறையினுள்ளும் இருக்கக்கூடும் ஒரு எமர்ஜென்ஸி லாம்ப். தாஸ், இருளில் நடக்கும்பொழுது யாராவது நம் மீது வந்து மோதுவதைத் தவிர்ப்பதற்கு ஒரு அற்புதமான வழியுண்டாக்கும். அந்தத் தருணங்களில் நம்முடைய உதடுகளுக்கிடையில் சிகரெட் புகைந்துகொண்டிருக்குமானால்? ஹெட் லைட் மாதிரி ஒரு சிவப்பு நிற எச்சரிக்கைப் புள்ளி. ஹ... ஹ... ஹா...

உனது குழம்பிய கனவுகளில் உழலும் பிம்பங்களை என்மீது திணிக்க முயலாதே. ஈருடல், ஓருயிர் என்பன போன்ற ரொமாண்டிசிசங்களுக்கு என் மனதில் துளியும் இடமில்லை தாஸ். நாம் வெவ்வேறானவர்கள். வெவ்வேறு உடல்களையும் வெவ்வேறு மனங்களையும் கொண்டவர்கள். நமது விருப்பங்கள் வெவ்வேறு. கனவுகள் வெவ்வேறு. நமது தேவைகள், வெறுப்புகள், பயங்கள்...

வெவ்வேறு... வெவ்வேறு...

திரும்பும்பொழுது எனது உதடுகளுக்கிடையிலும் ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஒரு எச்சரிக்கைப் புள்ளி. எதிர்த்து வரும் எவரும் என்மீது மோதிக் கீழே தள்ளிவிட முடியாது. அது எனக்கொரு பாதுகாப்புக் கவசம். ஒரு தற்காலிக டேஞ்சர் லைட்... ஆனால் அது உனக்கொரு டேஞ்சராக்கும் சாரு. உன்னை எச்சரிப்பதற்கான சிவப்புப் புள்ளி. லட்சியக் கணவனாமே? ஏமாளித் தனத்தின் மற்றொரு பெயர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்.

முற்றிலும் எதிர்பாராதவிதமாக மழை பிடித்துக்கொண்டது. நாடகத்தில் தனக்குமொரு பங்குண்டு எனச் சொல்கிறது மழை. எனது விரலிடுக்குகளில் சிகரெட் புகைந்துகொண்டிருப்பதான கற்பனையில், மழை அதை அணைத்துவிடக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் விரல்களைக் குவித்து முதுகுக்குப் பின்னால் மறைப்பாகப் பிடித்துக்கொண்டேன். வெறும் தூறல் அல்ல, பெருமழை என்பதற்கான எச்சரிக்கைபோலப் பளீரென மின்னிற்று வானம். கூடவே பெருத்த இடியோசை. நல்லவேளையாக நான் அப்பொழுது நகரின் பிரதான சாலையொன்றில் நடந்துகொண்டிருந்தேன். சற்றுத் தொலைவில் தென்பட்டது தனது தலையில் சிறிய கூரையையும் சிறிதளவு பெட்ரோமாக்ஸ் விளக்கொளியையும் கொண்ட ஒரு பெட்டிக்கடை. அதன் முன்னால் ஆட்கள் குழுமியிருப்பது தெரிந்தது. புகலிடம் தேடுவதற்காகச் சாலையின் இருண்ட பகுதிகளிலிருந்து ஒரு சிலர் அந்தக் கூரையை நோக்கி ஓடி வருவதை நான் பார்த்தேன். நள்ளிரவில் கொட்டும் மழையில் சாலையிருளுக்குள் அலைபவன் நான் மட்டுமல்ல. எனக்கு முன்னால் எண்ணற்றோர் கடந்து போயிருக்கிறார்கள்; பலர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்தத் தனிமை ஒரு கற்பனை. மழை கற்பனைகளை அழிக்கிறது; பின்னிரவு நேரங்களில் தனிமையில் அலைந்து திரியும் மனிதர்களை அடையாளம் காட்டுகிறது. ஆனால் மற்ற பலரைப் போல நான் அரக்கப்பறக்க ஓடவில்லை. இந்த மழையை ரசிக்கிறவனைப் போன்ற பாவனையுடன் மெதுவாக நடந்தேன். ஓடுவது எனது மனதின் பதற்றத்தை அம்பலமாக்கிவிடக்கூடும் என நான் பயந்திருக்கலாம். மழையை எதிர்த்து நடப்பது ஒரு சாகசம் தாஸ். பெரு நெருப்பை ஒத்தது பெருமழை. கடவுளர்கள் உலகை அழிப்பதற்கு மழையையே ஆயுதமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆசிர்வதிக்கப்பட்ட உயிர்களுக்கு மாத்திரமே அடைக் கலம் கிடைக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் இல்லை. எல்லோரும் நோவா அல்ல. நோவாவுக்குப் பிறகு மனிதன் மழையைக் கண்டு அஞ்சத் தொடங்கிவிட்டான். மழை நம்மைப் பதற்றம் கொள்ளச்செய்கிறது, பயமுறுத்துகிறது, புகலிடம் தேடி ஓடச்செய்கிறது.

சுமார் பத்து சதுர அடிக்கும் குறைவான பரப்புக்கொண்ட அந்தச் சிறிய இடத்தில் குறைந்தபட்சம் இரண்டு டஜன் மனிதர்களாவது முண்டிக்கொண்டிருந்திருப்பார்கள். மழைச் சாரல் பாதியளவுக்கு மேல் அவர்களை நனைத்திருந்தது. எல்லோருமே ஓணான்களைப் போலக் கூரையடைப்புக்குக் கீழே கழுத்தை நீட்டி, மழையிலிருந்து தத்தம் சிரசுகளைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதான கற்பனையில் மூழ்கியிருந்தனர் எனத் தோன்றியது. எண்ணற்ற ஆண்களின் அந்தக் கூட்டத்தினிடையே, கிட்டத்தட்ட ஆணைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு பெண்ணும் முண்டிக்கொண்டிருந்தாள். எதனாலோ அவள் எனது கவனத்தை ஈர்ப்பவளாயிருந்தாள். ஒளியும் நிழல்களும் மாறிமாறி அவள் மேல் விழுந்துகொண்டிருந்தன. எனது பார்வையைச் சந்திக்க நேரும் ஒவ்வொரு தருணத்திலும் அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பு என்னை நோக்கியதா அல்லது கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டிருக்கும் வேறு யாரையாவது நோக்கியதா என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. அதை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு அவளைத் தெளிவாகப் பார்க்க முற்பட்டேன். ஆனால் நம்ப முடியாத அளவுக்கு நெரிசல் அதிகமாக இருந்ததாலும், மேலும் அதிகமான நிழல்கள் அவள்மீது கவிந்து, துல்லியமாகப் பார்க்க முடியாதவாறு அவளது உருவத்தைக் குழப்பியிருந்ததாலும் அவளது முகத்தில் தென்பட்டது சிரிப்பா அழுகையா என்கிற சந்தேகமும் தோன்றியது எனக்கு. நிழல்களின் அடர்த்தி கூடக்கூட அதற்கு நேர் விகிதத்தில் சோபையும் அழகும் கூடியதாகத் தோற்றமளிக்கத் தொடங்கியது அவளுடைய முகம்.

அந்தத் தருணத்தில், பைத்தியக்காரனைப் போலத் தென்பட்ட ஒருவன் கூரையடைப்புக்குள்ளிருந்து திடீரென வெளியே வந்து நடனமாடத் தொடங்கினான். எல்லோரது கவனமும் உடனடியாக அவன் மேல் குவிந்தது. ஆனால் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் ஆணைப் போல் தோற்றமளித்த அந்தப் பெண் கூரையடைப்புக்குள்ளிருந்து வெளியில் வந்து தானும் நடனமாடத் தொடங்கினாள். அவளைத் தொடர்ந்து மற்ற மனிதர்கள் எலலோரும் கூரையை விட்டு வெளியில் வந்து மழையில் சொட்டச்சொட்ட நனைந்தபடியும் சேற்றில் விழுந்து புரண்டபடியும் கூத்தாடத் தொடங்கினார்கள். உண்மையில் அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை என்னால் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. புகைபிடிக்க வேண்டுமென்ற விருப்பம் மீண்டும் தீவிரமாக என்னைப் பற்றிக் கொண்டது. மிகச் சிரமப்பட்டு என்னை விடுவித்துக்கொண்டு பெட்டிக் கடைக்காரரிடம் போய் ஒரு பாக்கெட் சிகரெட் வேண்டுமெனச் சொல்லிவிட்டு பர்சை எடுப்பதற்காக எனது சட்டைப் பாக்கெட்டைத் தேட முற்பட்டபொழுதுதான் எனது சட்டை பல துண்டுகளாகக் கிழிக்கப்பட்டிருப்பதை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. பர்ஸைக் காணவில்லை. மழையில் கூத்தாடிக்கொண்டிருக்கும் மனிதர்களில் யாராவது ஒருவன்தான் எனது பர்ஸைத் திருடியிருக்க வேண்டுமெனவும் அவர்களை விசாரிக்கும்படியும் யோசனை சொன்னான் அந்தப் பெட்டிக் கடைக்காரன். அவனது யோசனையை ஏற்றுக்கொண்டுவிட்ட பாவனையுடன் நான் அவர்களது ஆட்டத்தைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன்.

மழையின் தாளகதிக்கேற்றவாறு பிசிறில்லாமல் ஆடிக்கொண்டிருந்தது கூட்டம். ஒவ்வொரு குதிகாலிலும் நம்பவே முடியாத அளவுக்கு வேகமான சுழற்சி. எல்லா உடல்களும் ஒன்றோடொன்று பிரிக்கவியலாதவாறு ஒட்டிக்கொண்டுவிட்டதாகத் தோன்றியது. சீரற்ற, ஏற்றத்தாழ்வான வளர்ச்சியைக் கொண்ட பல கால்களும் உயர்ந்து தணியும் எண்ணற்ற கரங்களும் ஒரே உடலின் பல்வேறு பகுதிகளாகத் தோற்றமளித்தன. பிறகு மிகக் களைத்துப்போனவனைப் போல தென்பட்ட ஒருவன் அவர்களிலிருந்து தனியே பிரிந்துவந்து ஒரு தரம் சுழன்றாடிவிட்டு கழைக்கூத்தாடியைப் போல குட்டிக்கரணம் அடிக்கத் தொடங்கினான். யாரோ பலமாகக் கை தட்டினார்கள். மற்றொருவனோ இடையறாது விசிலடித்தான். குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருந்தவன் உற்சாக மிகுதியால் புதிதாக எதையோ செய்ய முற்பட்டு அப்படியே தலைகுப்புறச் சரிந்துவிட்டான். தொலைவிலெங்கோ நாய்களின் ஊளைச் சப்தம் கேட்டது. தொடர்ந்து சைரன்கள் அலறின. இதைக் கண்டு பீதியுற்றவர்களைப் போலப் பலரும் கூட்டத்திலிருந்து பிய்த்துக்கொண்டு தலை தெறிக்கும் வேகத்தில் ஓடி மறைந்தார்கள்.

கொட்டும் மழை; எதையும் பொருட்படுத்தாது சுழன்றாடிக்கொண்டிருக்கும் அம்மனுஷி. பெட்டிக் கடைக்காரனையும் என்னையும் தவிர அங்கு வேறு யாரும் தென்படவில்லை. நாய்களின் குரைப்புச் சப்தமும் சைரன்களின் ஒலியும் இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தன. முற்றாக நனைந்திருந்தபடியால் கிட்டத்தட்ட நிர்வாணமாகத் தோற்றமளித்தாள் அவள். போதை யூட்டும் கவர்ச்சி. குலுங்கிச் சுழலும் அவளுடைய அவயவங்கள், எனது காமத்தை அதன் உச்ச அளவை நோக்கிச் செலுத்திக்கொண்டிருந்தன. மிக விரைவில் நான் எனது சுய கட்டுப்பாட்டை இழந்துவிடப் போகிறேன் என நினைத்துக்கொண்டேன். நடன பாவனை மாறாமல் தன்னுடன் நடனமாட வருமாறு என்னைப் பார்த்துச் சைகை செய்தாள் அவள். அது புணர்ச்சிக்கானதொரு அழைப்பைப் போலத் தோற்றமளித்ததால் பெட்டிக்காரனின் இருப்பு காரணமாகத் தயங்கி நின்றுகொண்டிருந்தேன் நான். என்னை அவளோடு சேர்ந்து நடனமாடுமாறு பணித்தான் பெட்டிக் கடைக்காரன். ஒரு மிரட்டலின் தொனியைப் பெற்றிருந்த அவனது கட்டளையை ஏற்று நான் அவளுடன் சேர்ந்து நடனமாடுவதற்கான எனது சம்மதத்தைத் தெரிவித்தேன். அதைக் கேட்டு உரக்கச் சிரித்தான் அவன். நான் சிரித்துக்கொண்டே அவளை நோக்கி ஓடினேன்.

கொட்டும் மழை. நனைந்த ஆடைகளுடன் நடனமாடிக்கொண்டிருப்பவளான அவளும் கிழிந்த ஆடைகளுடன் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருக்கும் நானும். பெருகும் மழை வெள்ளத்தினுள் சுழலும் பாதங்களின் லயம் குன்றாத தாளம். எனது முழு உடலும் அதன் அணு ஒவ்வொன்றும் கொந்தளித்துக்கொண்டிருந்தது. இருள் முற்றாகக் கவிந்திருந்தபோதிலும் குறி தப்பாமல் பாய்ந்து ஒரு மிருகம்போல அவளை எனது கைப்பிடிக்குள் கொண்டுவந்திருந்தேன். வெற்று முனகலொன்று அவளிடமிருந்து வெளிப்பட்டது. பெண் அல்லது சிசு. புணர்ச்சியின் அடையாளம் அல்லது பிறவியின் தடயம்.

தாங்க முடியாத அதிர்ச்சிக்குள்ளானேன் நான்.

யாருடைய கட்டளைக்கோ கீழ்ப்படிந்ததைப் போல திடீரெனச் சுத்தமாக நின்றுவிட்டது மழை. செயலற்று நின்றேன் நான். எனது செயலின்மையைச் சாதகமாக்கிக்கொண்டு எனது பிடியிலிருந்து தப்பிப்போயிருந்தாள் அவள். இருளின் எல்லைகளற்ற வெளி. எல்லாச் சப்தங்களையும் விழுங்கிவிட்டு இருளுக்குள் பதுங்கியிருந்தது நிசப்தம். கைக்கெட்டும் தூரத்திற்குள்ளேயே அவள் பதுங்கியிருப்பாளென யூகித்தேன். ஆனால் அவளது பதுங்கலுக்கான காரணத்தை என்னால் யூகிக்க முடியவில்லை. விளையாட்டு அல்லது தந்திரம். தாக்குதலுக்கான அல்லது தப்பித்தலுக்கான தருணத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கக்கூடும். சுவாசமோ அசைவோ அற்றவளாக அந்தத் தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பாள் போலிருக்கிறது. ஆனால் தேங்கியிருக்கும் மழை வெள்ளம் அவளது எந்தவொரு சிறு அசைவையும் சப்தமெழுப்பிக் காட்டிக்கொடுத்துவிடுமென்பது நிச்சயம். சவாலான தருணம் அது. எனது செவிகளும் கண்களும் கூர்ந்தன. இருளின் அடர்ந்த பரப்பை வெறித்துக்கொண்டு வெகுநேரம்வரை அசைவற்றவனாய்க் கிடந்தேன். வெகுநேரத்திற்குப் பின்பு அசையத் தொடங்கியது இருள். மறுகணம் நிகழத் தொடங்கியது இருளின் பெருவெடிப்பு. என்னைச் சுற்றிலும் இருளுக்குரிய கருமை நிறத்தில் நெளிந்துகொண்டிருந்தன புழுக்கள். புழுக்களா அல்லது பெருவெள்ளமா? பெருவெள்ளம் எழுப்பும் பேரோசையே அது. எனது செவிப்பறைகள் அதிர்ந்தன. கேட்கும் திறனிழந்து செவிடனானேன் நான். செவிடன், அந்தகன். கைக்கெட்டும் தொலைவில் விரகத்தின் தணியாத விம்மல்களுடன் காத்திருக்கிறது அவ்வேதனையைத் தீர்க்கும் பெண்ணுடல்.

பெருவெள்ளத்துக்குள்ளிருந்து துள்ளியெழுந்து, இருளின் வடிவெடுத்து வந்து நின்றாள் அவள். தன் நனைந்த ஆடைகளைக் கழற்றியெறிந்தாள். என்னை நோக்கிக் குரூரமாய்ப் புன்னகைத்தபடி கனவில் வருவது போல நகர்ந்து வந்துகொண்டிருந்தாள். அச்சத்தாலோ வெட்கத்தாலோ கண்களை மூடிக்கொள்ள முயன்றேன். அவளோ இமைக்காத விழிகளுடன் என்னை நோக்கி வந்தாள். சேற்றுக்குள் உருண்டு கிடந்த என் தேகத்தைப் புரட்டினாள். நிக்கோடினின் கருத்த தடயங்களையுடைய எனது தடித்த உதடுகளை ஒரு இரையாகப் பற்றியிழுத்துக் கவ்வினாள். சாரு, நான் அவளைத் தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யாதவனாயிருந்திருப்பேன் என்று நினைத்துக்கொள்ளாதே. அவளிடமிருந்து என்னைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக அவளை இறுகத் தழுவி மூச்சுத் திணறச்செய்ய முற்பட்டிருந்தேன். ஆனால் தழுவிய கணத்தில் பெருகிற்று அவளது ஆகிருதி. தன் வலிய கரங்களால் அவளும் என்னைத் தழுவினாள். கடவுளே, மூச்சுத் திணறிற்றெனக்கு. தழுவியவளின் மேனியில் ரோமத்தின் அடர்த்தி; முத்தமிட்ட உதடுகளில் நிகோடினின் துர்நாற்றம். எனது மறுப்பு போராட்டமாயிற்று. நான் தப்ப முற்பட்டேன்; உதறி விடுவித்துக்கொள்ள முயன்றேன். அபயம் கோரிக் கூச்சலிடவும் விரும்பினேன்.

சாரு, நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்க விரும்பினேன். சேறு படிந்த உடலுடனும் கிழிந்த உடைகளுடனும் தளர்ந்த குறியுடனும் வீடு திரும்பியிருந்த நான் உனக்கு முன்னால் ஒரு குற்றவாளியாக நிற்பதற்கு விரும்பியிருந்தேன். என் உள்ளத்தில் உன்மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் நான் செலுத்தியிருந்த வன்முறைகளையும் உனக்கும் எனக்கும் இடையேயான உறவின் சிதைவுக்குக் காரணமான எனது மனதின் கோணல்களையும் ஒப்புக் கொண்டுவிட வேண்டுமென்ற வேட்கை நிரம்பியிருந்தது. இன்னமும் திறந்து கிடந்த கதவுக்குள் பதற்றம் நிரம்பியவனாய் உள்ளே நுழைந்திருந்த அந்தக் கணத்தில் கனவு அல்லது பிரமை எனத் தோன்றும்படியாக நமது படுக்கையறையினுள்ளிருந்து ஓடி வந்துகொண்டிருந்த அவனது ரோமம் மிகுந்த உடலை நான் பார்க்க நேராமலிருந்தால்? என்னைக் கண்டு அப்படி இகழ்ச்சியாகச் சிரிப்பதை மட்டுமாவது அவனால் கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்திருந்தால்?

எதிர்பார்ப்புகளும் நடப்புகளும் வெவ்வேறானவைகளாக்கும், தாஸ். இரண்டும் இரண்டு வெவ்வேறு விதிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.

பிரமை அல்லது கனவு...

சாரு, என்னிடம் அப்போது ஒரு தடயமும் இல்லை. இப்போது கிடைத்திருக்கிறதே பாதி கருகியதொரு சிகரெட் துண்டு, அதுவோ அதையொத்த வேறு தடயங்களோ அப்போது எனக்குக் கிடைத்திருக்கவில்லை. நடைமுறை விதிகளை அனுசரித்து அப்போது அவனைத் தடுத்து நிறுத்தியிருப்பதற்கோ, அவன்மீது வன்முறையைப் பிரயோகித்து அவனிடம் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டிருப்பதற்கோ எனக்கு போதிய வலிமை இருந்திருக்கவில்லை. எனது இருப்பைச் சற்றும் பொருட்படுத்தாமல் இகழ்ந்து சிரித்துவிட்டு வெளியேறிப் போய்க்கொண்டிருந்த அவனது ரோமம் மண்டிய உடலைச் செயலற்றவனாக நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

கனவு அல்லது பிரமை... கற்பனை அல்லது பொய். இவ்வகைப்பட்டவையாக்கும் தாஸ், உனது குற்றச்சாட்டுகள். நீ பேச வேண்டியது ஒரு மனநோய் மருத்துவரிடமேயல்லாது மனைவியிடமல்ல. பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவற்றை ஒப்புக்கொள்ளுமாறு மன்றாடுகிறாய். நான் அவற்றைப் பொருட்படுத்தாத போதிலும், மன்னித்துவிட்டதாகப் பிதற்றுகிறாய். கோபமல்ல, உன் மேல் இரக்கமே ஏற்படுகிறது எனக்கு. ஏதாவதொரு சர்ச்சுக்குப் போ. அல்லது ஒரு மட்டரகமான மதுவிடுதிக்கு. முற்றிய மனநோயாளிகளுக்கான புகலிடங்கள் அவைகள்தாம்.

தேவாலயம் அல்லது மதுவிடுதி; பாதிரி அல்லது குடிகாரன்.

தாஸ், தேவைகளே நடைமுறைகளைத் தீர்மானிக்கின்றன. நடைமுறைவாதிகள் ஒருபோதும் கனவுகளையும் லட்சியங்களையும் பொருட்படுத்துவதில்லை. நடை முறைவாதிகளின் வெற்றிக்குப் பின்னாலுள்ள ரகசியம் இதுதான். தாஸ் இதுவரை எந்த லட்சியவாதி வெற்றி பெற்றிருக்கிறான் சொல்? அல்லது எந்த லட்சியம் வெற்றி பெற்றிருக்கிறது? வெற்றி பெற்றிருப்பதான மயக்கங்களே தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நமக்குக் கனவுகளும் லட்சியங்களும் தேவைப்படுகின்றன. இல்லாவிட்டால் குற்ற உணர்வுகளிலிருந்தும் தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் நம்மால் விடுபடவே முடியாமல் போயிருந்திருக்கும் தாஸ். அதனால்தான் நாம் லட்சியவாதிகளையும் கவிஞர்களையும் ஆன்மீகவாதிகளையும் கொண்டாடுகிறோம். அவர்கள் நம்மீது தம்முடைய கனவுகளைத் திணிக்கிறார்கள். அவர்களது மொழி நமக்கு போதை. ஆனால் தாஸ், நாம் சூட்டும் புகழ் மாலைகள் அவர்களுக்கு போதை. போதைக் கெதிராக போதை. கனவுக்கெதிராகக் கனவு. இது ஒரு வகையான தந்திரம், ஏமாற்று. இதைப் புரிந்து கொள்ளும்போது அவர்கள் இவ்வுலகைத் துறக்கிறார்கள். மற்றொரு லட்சியவாதி உருவாகிறான். அவர்கள் தங்கள் மூதாதையர்களை நிராகரிக்கிறார்கள். தங்களது புதிய கனவுகளையும் லட்சியங்களையும் நம்மீது திணிக்கிறார்கள். நமக்கும் கிடைக்கிறது தடையற்ற போதை. அதிலிருந்து நம்மால் ஒருபோதும் விடுபடமுடிவதில்லை.

தாஸ், நாம் பதற்றமடைகிறோம். உள்ளீடற்ற கோபங்களுக்கு இரையாகிளீ காரணமற்ற வன்முறைகளில் ஈடுபடுகிறோம். அடிப்படைகளற்ற வெற்றிகளும் நம்ப முடியாத தோல்விகளும் நமக்களிக்கப்பட்ட வாழ்வின் வெற்றுத்தாள்களை நிரப்புகின்றன. எந்தக் கவிஞனும் லட்சியவாதியும் இந்த வெற்றுத்தாள்களைப் பொருட்படுத்துவதில்லை. அவன் இவற்றை இகழ்ந்து சிரிக்கிறான், கிழித்தெறிகிறான். கிழித்தெறிந்தவற்றைப் பொறுக்கியெடுத்து புதிதாக ஒன்றைச் சமைக்கிறான் மற்றொருவன். நான்லீனியர் கொலாஜ், சர்ரியலிசம், எக்ஸிஸ்டென் ஷியலிசம்... கலைக்கெதிராகக் கலை, தத்துவத்திற்கெதிராகத் தத்துவம் தாஸ். இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. ஒருவரையொருவர் பழிவாங்கிக்கொள்கிறோம். நம்மைக் கவிஞர்களும் கவிஞர்களை நாமும்; சாத்தியமற்ற கனவுகளுக்கும் தவிர்க்கமுடியாத நடைமுறைகளுக்குமிடையே சிக்கி வதைபட்டுக்கொண்டிருக்கிறோம். புகை பிடிக்கிறோம், குடிக்கிறோம், முறை தவறிய கள்ளப் புணர்ச்சிகளில் ஈடுபடுகிறோம், பிறகு பிரார்த்தனை செய்கிறோம், கவிதைகளைப் படிக்கிறோம், தத்துவங்களை மேற்கோள் காட்டுகிறோம். முரண்பாடுகளைக் கற்பனையாகச் சமன்செய்யும் முயற்சிகளே இவை. ஒன்று, கவிஞர்களையும் லட்சியவாதிகளையும் முற்றாக இவ்வுலகிலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும். அல்லது இவ்வுலகை அவர்களுடையதாக்கிவிட வேண்டும். ஆனால் கனவு தாஸ், வெறும் கனவு. வழக்கத்தைவிட அதிகமாகக் குடித்துவிட்டேனென்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் சோடா ஊற்று, இட் ஈஸ் த ஹாட்டஸ்ட் பிராண்ட் ஆப் த விஸ்கிஸ்.

அப்படியானால் வாழ்க்கைக்கெதிராக, வாழ்க்கையோ?

தாஸ், நடைமுறைவாதி எப்போதும் விழித்திருக்க வேண்டியவன். விழித்திருப்பவன் கனவு காண முற்படுவது ஆபத்தானது. வெற்றிகரமான நடைமுறையாளனுக்கும் லட்சியக் கணவனுக்குமிடையே நீ போராடிக் கொண்டிருக்கிறாய். நீ உனது மனைவியைச் சந்தேகப்படுகிறாய்; கண்காணிக்கிறாய். இவையெல்லாம் கணவனாயிருக்கிற ஒவ்வொருவருக்கும் சமூகம் வழங்கியுள்ள உரிமை. யாரும் இதற்காக வெட்கப்படுவதுமில்லை. ஆனால் நீயோ குற்ற உணர்வுக்குள்ளாகி வதைபட்டுக்கொண்டிருக்கிறாய். தாஸ், ஒன்று, உனக்கு அவனது நாசியைப் பெயர்க்க முடிந்திருக்க வேண்டும். அல்லது அவனோடு கைகுலுக்கிக்கொள்ள முடிந்திருக்க வேண்டும். ஆனால் நீ வெறுமனே கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாய்; ஒப்புதல் வாக்குமூலங்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறாய்; நள்ளிரவு நேரங்களில் பூட்டிய அறைக்குள் உனது மனைவியின் முன்னால் வெறும் உள்ளாடைகளுடன் உட்கார்ந்து மன்னிப்புக் கோரி முழந்தாளிட்டுக்கொண்டிருக்கிறாயாமே? உனது தேவையென்ன தாஸ்? காதல்? காமம்? கனவை ஒரு தோளிலும் நடைமுறையை ஒரு தோளிலும் சுமந்து கொண்டிருக்கிறாய் நண்பா. ஒரு தோளில் கடவுளை, மற்றொரு தோளில் சாத்தானை. ஒன்றின் எடையை மற்றொன்று மிஞ்சிவிடாதபடி பார்த்துக்கொள்ளும் சமார்த்தியமும் உனக்கில்லை. பாலன்ஸை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள் உனது கடவுளும் சாத்தானும். நீயோ தனிமைப்பட்டுப் போயிருக்கிறாய்.

தனிமைப்படுத்தப்படுதல் ஒரு குரூரமான தண்டனை.

உன்னைப் பீடித்திருப்பது எய்ட்ஸ் தாஸ். இதற்கு மருந்தே இல்லை. வருங்கால மருத்துவ உலகம் எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிடலாம், ஆனால் சந்தேகத்திற்கு மருந்தே இல்லை. அது ஆட்கொல்லி நோய். ஆட்கொல்லி நோயாளிகளை யாரும் தீண்டுவதில்லை. அவர்களுக்குத் தனி அறை, தனிச் சாப்பாடு, தண்ணீர் செம்பும் படுக்கையும் அவர்களுக்குத் தனித் தனியானவை.

ஆனால் தாஸ், தனிமையை விரும்பாதவனை, அதை ஏற்றுக்கொள்ள மறுப்பவனை, ஒருபோதும் இந்த உலகம் தனிமைப்படுத்துவதில்லை. நீ புகைபிடிக்கிறாயா? மது அருந்துகிறாயா? வீடு திரும்பும்போது துர்நாற்றத்தை மறைக்க மறக்காமல் சூயிங்கம் போட்டுக்கொள்ள வேண்டும். முறையற்ற கள்ளப் புணர்ச்சிகளில் ஈடுபடுகிறாயா? ஆணுறை போட்டுக்கொள்ள மறந்துவிடாதே. சட்டபூர்வமான எச்சரிக்கைகள் இவை. சட்டப்படி நடப்பவனுக்குத் தனிமையின் குரூரமான தண்டனைகளில்லை. உனது மனைவியின் படுக்கையறைக்குள்ளும் கிடக்கலாம், உனக்கு சம்பந்தமில்லாத பிராண்டுகளின் கருகிய சிகரெட் துண்டுகளும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளும். அவற்றைப் பொருட்படுத்தாதே. கோபத்தைத் தாளிடப்பட்ட அறைக்குள்ளும் அன்பைப் பொது இடங்களிலும் வெளிப்படுத்தத் தெரிந்துகொள். உனது தோல்விகளையும் ஏமாற்றங்களையும் ரகசியமாகப் பராமரிக்கக் கற்றுக்கொள். இவைகளும் சட்டப்பூர்வமானவைகள்தாம் தாஸ். எல்லோராலும் உருவாக்கப்பட்டு ஒவ்வொருவராலும் பின்பற்றப்பட்டு வருகிற சட்டங்கள். இவற்றை நிராகரிக்கும்போதும் நீ தனிமைப்படுத்தப்படுகிறாய். ஆட்கொல்லி நோயாளிகளோடு சேர்க்கப்பட்டுத் தீண்டப்படாதவனாகிறாய். பிறகு உனக்காக ஒதுக்கப்படும் தனி அறைக்குள் புகுந்து காற்றுப் புக முடியாதவாறு கதவைத் தாளிட்டுக் கொண்டுவிட வேண்டியதுதான்.

மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே கதவைப் போல முக்கியமானது வேறொன்று இருக்க முடியாது தாஸ். பொறியியலாளர்களே அவற்றின் பிரும்மாக்கள் தாஸ். திட்டவட்டமான பயன்பாட்டு நோக்கங்களுக்காகவே அவர்கள் கதவுகளை உருவாக்கினார்கள். புறவுலகின் அபாயங்களிலிருந்து தற்காத்துக்கொள்வது முக்கிய நோக்கம். திருடர்களாலும் மிருகங்களாலும் கள்ளப் புணர்ச்சி செய்பவர்களாலும் நமது உடைமைகள் சேதப்படுத்தப்படலாம். அதனால்தான் ஒவ்வொரு கதவும் பூட்டப்படுகிறது. பூட்டப்பட்ட ஒவ்வொரு கதவின் முன்பாகவும் தொங்குகிறது 'திருடர்கள் ஜாக்கிரதை' என்னும் எச்சரிக்கைப் பலகை. கதவுகளைப் பூட்டுவதற்கும் திறப்பதற்கும்கூடப் பல ஆலோசனைகள் உண்டு தாஸ். பூட்டிய பிறகு பூட்டை இழுத்துப் பார்த்துக்கொள்ளத் தவறக் கூடாது. பூட்டுக்களிலும் உண்டு போலிகள். தட்டுவது யார் என்பதைப் பற்றிய நிச்சயமில்லாமல் கதவைத் திறப்பது ஆபத்தானது தாஸ். அறிமுகமானவர்களானாலும் வரையறைகள் உண்டு; யார் யாரை எந்தெந்த நேரத்தில் எவ்வளவு தூரம்வரை உள்ளே வர அனுமதிக்கலாம் என்பவைகூட முன்பே திட்டமிடப்பட்டிருப்பவை தாஸ். பொறியியலாளர்களின் அபாரமான மூளைக்கு நமது வீடுகளே சான்றுகள். வரவேற்பறைகள், கூடங்கள், சமையலறைகள், புழக்கடைகள் மற்றும் படுக்கையறைகள். ஒவ்வொன்றின் வாயிலிலும் கதவுகள். கதவுக்குள் கதவுகள். கதவுகளில்லாமல் குடும்பங்களில்லை. படுக்கையறைகளை வடிவமைக்க வெறும் பொறியியல் அறிவு மட்டும் போதாது தாஸ், தேர்ந்த கலாஞானம் அவசியம். காமத்தைத் தூண்டும் கலை நுட்பத்தை அறிந்தவனே படுக்கையறைகளை வடிவமைக்கிறான். புணர்தலின் நுட்பங்களை அறிந்த நம் சிற்பிகள் காமத்தைக் கற்களில் செதுக்கினார்கள்; தச்சர்கள் கட்டில்களில் செதுக்கினார்கள்; கவிகளோ காற்றில் மகரந்தத் துகள்களைப் மிதக்கவிட்டார்கள். ஆனாலும் தாஸ், பூட்டிய அறைகளே புணர்தலுக் கேற்றவை. கதவைத் தட்டுபவர்களுக்கும்கூட. காலம் பற்றிய விழிப்பு அவசியம். தட்டும் நேரம் புணர்தலின் காலமாகவும் இருக்கலாம். அப்பொழுது ஓசைப்படுத்தாமல் வெளியேறிச் சென்றுவிட வேண்டும். புணர்பவர் கள்ளக் காதலர் என்றால் கதவைத் தள்ளிக்கொண்டு முன்னறிவிப்பின்றிப் பிரவேசிக்கும் உரிமை யாருக்கும் உண்டு தாஸ்.

தாஸ், நீயோ கதவுகளைப் பூட்டிக்கொள்ள மறந்துவிடுகிறாய். அல்லது திறந்துவைத்துவிட்டு உள்ளே பிரவேசிப்பவர்களைப் பற்றிய பிரக்ஞையற்றவனாயிருக்கிறாய். பூட்டிய அறைகள் பற்றிய எச்சரிக்கையுணர்வோ உனக்கு முற்றாக இல்லை. செயலில் இறங்கத் தெரியாமல் வெறுமனே பிதற்றிக்கொண்டிருக்கிறாய். தாஸ், கதவை விரியத் திறந்துகொண்டு உள்ளே போ, உனக்குக் கிடைக்கும் நிர்வாணத்தின் ஒரு தரிசனம்.

வெறும் ஒற்றை முனகலல்ல; சற்றே உரத்த தொனிகொண்ட சப்தம். விரகத்தின் கரை மீறிய வேதனையின் விளிம்பில் வெடித்துச் சிதறும் விம்மல்கள். உச்சத்தை எட்டியதன் அடையாளம். இல்லாவிட்டால் யோனியின் குறுகலான சுவர்களுக்கிடையே நசுங்கும் சிசுவின் முதல் சப்தங்கள்... வேண்டாம், ஆபத்தோடு விளையாடும் இந்த அபத்தம். பூட்டிய அறைக்குள்ளிருந்தல்ல, என்னிடமிருந்தே வருகின்றன இந்தச் சப்தங்கள். வெறும் விக்கல்கள்? உடலின் தாகத்தை உணர்த்தும் ஒரு சமிக்ஞை? இல்லை, மரணத்தின் முன்னறிவிப்பே இச்சப்தங்கள். புணர்ச்சியின் தடயமோ பிறப்பின் அடையாளமோ அல்ல. தனது மூதாதையர்களுக்குரிய இணைப்புகள் தேய்ந்துபோன மர நாற்காலியில், சுவாசத்தின் அறுந்த இழைகளோடு போராடிக்கொண்டிருக்கும் ஒரு உயிர் மரணத்திற்கெதிராக எழுப்பும் கண்டனமாகவும் இந்தச் சப்தங்களை எடுத்துக்கொள்ளலாம்.

வாழ்க்கைக்கெதிராக வாழ்க்கையென்றால் மரணத்துக்கெதிராக மரணம்தான், தாஸ்.

தற்கொலைகள் கடவுளின் சித்தத்திற்குட்பட்டவையல்ல. மரணத்தைக் கடவுளின் கைகளில் ஒப்படைக்க விரும்பாத சுயமரியாதையுடைய மனிதனின் தேர்வு. தற்கொலைகள் கடவுளின் இருத்தலுக்கெதிரான சவால். கடவுளைக் கொலை செய்ய மனிதன் மேற்கொண்டுவரும் இடையறாத முயற்சி. இதுவரையிலுமான எல்லா மரணங்களுமே தற்கொலைகள்தான் தாஸ், தெரியுமா உனக்கு?

ஹெஹெஹே...

கவிஞர்கள் தத்துவவாதிகளாகும்பொழுது உண்மை பேசத் தொடங்கிவிடுகிறார்கள். உண்மையை ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் பாதி உண்மை. முழுமையான உண்மை மிகக் குரூரமானதாக்கும் தாஸ். கவிதை அவர்களது ஆன்மாவில் பாய்ச்சிய அன்பின் விந்துத்துளிகள் செய்த கைங்கரியம். அல்லா விட்டால் தத்துவ தரிசனம் ஈவிரக்கமற்றதாயிருந்திருக்கும்; இதுவரையிலுமான எல்லா மரணங்களுமே தற் கொலைகள் என்பதற்குப் பதில் கொலைகள் என நிறுவுவதற்குத் தமது வாழ்நாட்களைச் செலவிட்டுக் கொண்டிருந்திருப்பார்கள் நம் கவிஞர்கள். மேற்குலகின் எண்ணற்ற தத்துவவாதிகளின் வரிசையில் நமது கவிஞர்களுக்கும் ஓரிடம் அளிக்கப்பட்டிருந்திருக்கும். அன்பு உண்மையை நிராகரிக்கிறது தாஸ். கடவுளை உன்னதத்தின் ஒரு வடிவமாகப் பார்க்கும் பேதமைகூட அன்பின் விளைவுதான். ஒரு கற்பிதத்துக்குக் கடவுளைப் பணியச் செய்து தனக்குப் பாதுகாப்புத் தேடிக்கொள்ள விழையும் வீண் முயற்சி. கடவுள் மனிதன் மேல் கொண்டிருப்பது அன்பல்ல, பழி; ஆதிப் பகைமையின் தீராத விளைவு. படைப்புச் செயலைத் தன்னிடமிருந்து பறித்துக்கொண்டுவிட்ட மனிதனை அன்பின் வடிவமான நமது கடவுளர்களால் ஒருபோதும் மன்னிக்க முடிந்ததில்லை. அதனால்தான் படைப்புச் செயலுக்கு ஆதாரமான புணர்ச்சியைப் பாவ காரியமாகச் சித்தரிக்கின்றன கடவுளர் தத்துவங்கள். பாவத்தின் சம்பளம் மரணம்; படைப்புச் செயலைத் தன் பொறுப்பில் வைத்துக்கொள்ள மனிதன் தரும் விலை. மனிதனால் படைப்புச் செயலை, அதற்கு ஆதாரமான புணர்ச்சியை ஒருபோதும் கைவிட முடிந்ததில்லை. ஆனால் கடவுளின் பழிக்குப் புணர்ச்சி ஒரு கருவி. புணர்ச்சியை முன்வைத்து நாம் ஒருவரையொருவர் சந்தேகிக்கிறோம்; ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொள்கிறோம்; ஒருவருக்கொருவர் போட்டியாளர்களாகிறோம்; மற்ற மனிதன் நரகமாகிறான்; ஒருவரை மற்றொருவர் அழிக்க முயல்கிறோம்.

படைப்புச் செயலை மட்டுமல்ல கடவுளின் காரியமான அழிவையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டான் மனிதன். விளைவோ பேரழிவு. கொலைபுரிதல் மனிதனுக்கு ஆறாவது அறிவாயிற்று தாஸ். நமது கடவுளர்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். அந்தச் சிரிப்புச் சப்தம் நமக்குக் கேட்பதில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் அன்பு மற்றுமொரு ஆயுதமாகிறது. நாம் நிராகரிக்கப் படுகிறறோம்; அவமானப்படுத்தப்படுகிறோம்; வலி தாளாமல் தற்கொலையை நாடுகிறோம். கொலையும் தற்கொலையும் மரணத்தின் இரு பக்கங்கங்கள் தாஸ்.

ஹெஹ்ஹே...

உட்புறமாகத் தாளிடப்பட்ட அறைக்குள் நிர்வாணமாக உறங்கிக்கொண்டிருக்கிறது எனது நரகம். எனது கடவுளோ கைகொட்டிச் சிரித்துக்கொண்டிருக்கிறான். என் முன்பாக வைக்கப்பட்டிருக்கின்றன மரணத்தின் இரு வழிகள். கொலை அல்லது தற்கொலை. நாணயத்தின் இருவேறு பக்கங்கள். முழுமை பெறாத தத்துவ தரிசனம் முன்வைக்கும் அரைகுறை உண்மை, அல்லது நடைமுறை சார்ந்த ஒரு தீர்க்கமான முடிவு. தனது மூதாதையர்களுக்குரிய மர நாற்காலியில் சுவாசத்தின் கடைசித் துளிகளை மிதக்க விட்டுவிட்டுப் பாதி திறந்த விழிகளுடன் பிரேதமாய் உறைந்து கிடக்கும் ஒரு இரங்கத்தக்க மனிதன் அல்லது தனது படுக்கையறையினுள் மனைவியையும் அவளது கள்ளக் காதலனையும் கொலை செய்துவிட்டு ரத்தம் தோய்ந்த கரங்களை உயர்த்திச் சரணடையக் காத்திருக்கிற ஒரு சுயமரியாதையுள்ள கணவன். சந்தேகப் பேர்வழி, குரூரமான மன நோயாளி.

எனது மர நாற்காலியின் தேய்ந்துபோன இணைப்புகளிலிருந்து சப்தமெதுவும் எழுந்துவிடாதபடி மிகக் கவனமாக எழுந்து நின்றேன். திடீரென ஓங்கியெழுந்து பின்பு தணிந்தது மெழுகுச் சுடர். தனது பதுங்கு குழியிலிருந்து வெளிப்பட்டு முழுக் கூடத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டது இருள். கணத்துக்கும் குறைவான நேரம் எனது விழித்திரையில் நீடித்திருந்த வெளிச்சத்தின் கடைசிக் கீற்று பிறகு ஒரு கரப்பானைப் போலத் தப்பியோடித் தானும் இருளுக்குள் பதுங்கிக்கொண்டது. இருளின் பெருவெளிக்குள் அந்தகனைப் போல மெழுகுவர்த்தி இருந்த இடம் நோக்கி நகர்ந்தேன். எனது கைப்பிடிக்குள்ளிருந்து தன்னிச்சையாக நழுவி இருளுக்குள் சிதறியது பாதி கருகிய சிகரெட் துண்டு, எனது சந்தேகத்திற்கான ஒற்றை ஆதாரம்; மன ஆரோக்கியத்தின் தடயம். பதற்றம் கொண்டு கைகளை வீசினேன். இன்னதென யூகிக்கவியலாத ஒரு கனமான பொருளின் மீது மோதிற்று என் மண்டை. உலோகம் அல்லது கண்ணாடியாலான ஒரு பொருள் பேரோசையுடன் கீழே விழுந்து நொறுங்கியது. சரிந்து பிரார்த்தனை செய்பவனைப் போலத் தரையில் மண்டியிட்டேன். எனது பிரக்ஞையின் இணைப்புக் கண்ணிகள் தளரத் தொடங்கின. கண்கள் செருகத் தொடங்கின. செயலின்மையின் மீள முடியாத சதுப்புக் குழிக்குள் மூழ்கத் தொடங்கியது எனது மூளை.

தூங்குவதற்கு முயல்கிறேனா என்ன?

சாரு, உறங்குவதுபோலப் பாசாங்கு செய்துகொண்டிருக்கிறாய் நீ. உனது நாசித் துவாரங்களிலிருந்து பெருகும் சப்தங்கள் பொய்யானவை. பாதி திறந்த உனது விழிகள் நமது படுக்கையறைக் கதவின் பளபளப்பான உட்பரப்பை எச்சரிக்கையுடன் கவனித்துக்கொண்டிருக்கின்றன. எனது மூதாதையர்களுடைய இம்மரநாற்காலியிலிருந்து எழும் சப்தங்களைத் துல்லியமாகக் கண்காணித்துக்கொண்டிருக்கிறது உனது மூளை. இங்கே கூடத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக யூகித்திருப்பாய். தாக்குதலுக்கானவையும் தற்காத்துக் கொள்வதற்கானவையுமான ஆயுதங்களை எப்போதும் பராமரித்துவருபவள் நீ. உறக்கமல்ல, பதுங்கல் உன்னுடையது. தாக்குதலுக்கும் தப்பியோடுவதற்குமான பதுங்கல். தப்பியோடுவதற்கும் பாய்ச்சலின் நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும் சாரு.

நான் உன்னிடம் எதுவும் கேட்கப்போவதில்லை. என்னை ஏமாற்றிவிட்டுத் தப்பியோடுவது சுலபமானது. ஒற்றை ஆதாரமாய் என்னிடம் எஞ்சியிருந்த பாதி கருகிய சிகரெட் துண்டு, இப்போது இருளின் மூடிய உள்ளங்கைகளுக்குள். போகும்போது அதைத் தனது கைப்பிடிக்குள் கொண்டுபோய்விடுவான் இருளின் வடிவம் கொண்டவன். நீ எனது கேள்விகளைப் பொருட்படுத்தப்போவதில்லை. சாரு, கனவை ஒரு தோளிலும் நடைமுறையை ஒரு தோளிலும் சுமந்துகொண்டிருப்பவள் நீ. ஒரு தோளில் கடவுளை, மற்றொரு தோளில் சாத்தானை. ஒன்றின் எடையை மற்றொன்று மிஞ்சிவிட முடியாதபடி பார்த்துக்கொள்ளும் சாமர்த்தியம் உனக்கிருக்கிறது. நீ ஒரு போதும் பாலன்ஸை இழப்பதில்லை. உனது கடவுளுக்கும் சாத்தானுக்கும் தடுமாற்றத்தின் துன்பங்களில்லை. ஒருவரின் இருப்பை மற்றவர் அறிந்துகொள்வதற்கான விருப்பம்கூட இல்லாமல் அவரவருக்கும் உரிய இடத்தை அவரவரும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கிடையேயான உரையாடல்கள் இனி ஒருபோதும் தொடர முடியாது சாரு. எனக்கும் பிடிபடும் வாழ்வின் சூட்சுமம். கடவுளையும் சாத்தானையும் சமரசப்படுத்தும் வித்தை எனக்கும் கைகூடிவிட்டால், அவரவருக்குமுரிய இடங்களை அவரவருக்கும் பகிர்ந் தளித்துவிட முடியுமானால்?

துரோகத்திற்கெதிராகத் துரோகமாக்கும்? முத்தமிட மறுக்கும் உதடுகளைப் பழிவாங்க நிகோடினின் துர்நாற்றம், இல்லையா... தாஸ்? ஹ... ஹ... ஹாணண. உனக்குப் புகை பிடிக்காமலும் இருக்க முடியாது, சந்தேகப்படாமலும் இருக்க முடியாது. ஆனால் இரண்டையும் விட்டொழித்துவிடுவதாகச் சத்தியம் செய்து தந்திருக்கிறாய். லட்சியக் கணவன் என்ற பெருமையைச் சுமக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறாய்.

தாஸ் சார், கங்கிராஸ்ட்ஸ். புகைபிடிப்பதை விட்டுவிட்டீர்களாமே? இல்லத்தரசியின் நிபந்தனையா? இல்லை, சுய முடிவா? முத்தங்களுக்காக ஆண்கள் எவ்வளவு சத்தியமும் செய்வார்கள். ஹ... ஹ... ஹாணண. எனது கணவரும்கூட இப்படித்தான் சத்தியம் செய்து கொடுத்தார். எனக்குச் சந்தேகம்தான். தொடர்ந்த கண்காணிப்பில் ஒரு நாள் கையும் களவுமாகப் பிடித்துவிட்டேன். பாத்ரூமில் பாதி கருகியதொரு சிகரெட் துண்டு. அவரது திருட்டுத்தனத்திற்கான ஆதாரம். சார், நீங்கள் சாருவை ஏமாற்றாமலிருந்தால் சரிதான். நிஜமானதொரு ஐடியல் ஹஸ்பெண்ட் இல்லையா...? ஆல் த பெஸ்ட்...

ஹிஹிஹி.

சந்தேகத்திற்கெதிராகச் சந்தேகமோ?

சந்தேகமே அறிதலின் ஆரம்பம். புலனாய்வாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் அதுவே பற்றுக்கோடு. தீராத சந்தேகங்களே மகத்தான கண்டுபிடிப்புகளுக்குப் பாதையமைக்கின்றன. சந்தேகத்தை அடிப்படையாகக்கொண்ட இடையறாத கண்காணிப்புகளின் மூலமாகவே லட்சியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இல்லாவிட்டால் லட்சியவாதிகள், கொண்ட லட்சியங்களிலிருந்து பிறழ்ந்து போய்விடுவார்கள். சிதைந்த நுரையீரல்களும் நிகோடினின் துர்நாற்றம் படிந்த உதடுகளும் லட்சியக் கணவர்களுக்குரிய அடையாளங்களில்லை என்பதை லட்சியக் கணவர்கள் ஒருபோதும் உணர்ந்துகொள்வதில்லை. இனி ஒருபோதும் புகைபிடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துகொடுப்பார்கள். ஆனால் ரகசியமாகப் புகைபிடித்துவிட்டு, சூயிங்கம் மென்ற வாயுடன் வீடு திரும்புவார்கள். அவர்களால் முத்தங்களையும் இழக்க முடியாது, சிகரெட்டுகளையும் இழக்க முடியாது.

ஆனால் முத்தங்களுக்காகப் பொய் சொல்லும் இயல்புடையவர்களாக்கும் லட்சியக் கணவர்கள். அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்களது நுரையீரல்களையும் உதடுகளையும் பாதுகாப்பது லட்சிய மனைவிகளுக்குரிய கடமை. புகைபிடிக்கும் லட்சியக் கணவர்களைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்கு முத்தங்களே பொறி. இதற்கு மிகுந்த சாமர்த்தியமும் நடிப்புத் திறனும் வேண்டும். வீடு திரும்பியதும், குளியலறைக்குப் போய் முகம் கைகால்கள் கழுவுகிற சாக்கில் தனது உதடுகளில் படிந்திருக்கும் நிகோடினின் துர்நாற்றத்தை அகற்றிவிட்டு வருவதற்கான சிறு வாய்ப்பையும் லட்சியக் கணவர்களுக்கு அளித்துவிடக் கூடாது. வீட்டுக்குள் நுழையும்போதே லட்சிய மனைவி தனது உதடுகளில் புன்னகையும் விழிகளில் காதலும் பெருகி வழியுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சந்தேகத்திற்கு இடமளிக்காமல் நெருங்கி சட்டைப் பித்தான்களைக் கழற்றவும் காதல் ரசம் சொட்டச் சொட்டப் பேசவும் மிக லாவகமாகத் தனது அணைப்பிற்குள் கொண்டுவரவும் சுவாசத்தை நுகரவும் தெரிந்திருக்க வேண்டும். நுகர்வின் மூலம் வித்தியாசமான வாடை எதையும் உணர முடியாத பட்சத்தில் அதீதமான காதலுணர்வுக்கு இரையாவதுபோலவும் உணர்ச்சிகள் குமிழியிடுவது போன்ற பாவனையிலும் முற்றிலும் கட்டுப்பாடற்ற விதத்தில் அன்பைப் பறிமாறிக்கொள்ள முனையும் தோற்றத்திலும் நிகோடினின் நாற்றம் படிந்த உதடுகளை அழுத்தமாக முத்தமிடுவதற்கு ஒரு லட்சிய மனைவிக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

ஹெஹ்ஹே...

அதிக அன்பு வேசிகளுக்குரியது தாஸ். அதிக அன்பும் அதிகக் கோபமும் உணர்வுகளின் அதீதமான வெளிப்பாடுகளும் வேசிகளுக்குரியவை. வேசிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்குமிடையேயான உறவும் கணவனுக்கும் மனைவிக்குமிடையேயான உறவும் வெவ் வேறானவையல்ல தாஸ். குடும்ப அமைப்பும் விபச்சார விடுதிகளும்கூட வெவ்வேறானவையல்ல. இரண்டுமே செக்ஸுவல் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளச் சமூகம் அனுமதித்திருக்கிற ஏற்பாடுகள். வெளிப்படையாகத் தெரியவந்திருக்கிற சில வேறுபாடுகள், அந்தந்த அமைப்புகளின் நிர்வாகம் சார்ந்தவையே அல்லாமல் சாராம்சம் சார்ந்தவைகளல்ல.

ரணப்படுத்தப்பட்டதொரு மனதில் கூக்குரல். ஆரோக்கியமானவையென்ற மயக்கத்திலிருக்கும் மூடிய மனங்களுக்கு எரிச்சல். எரிச்சலல்ல, வலி; தாங்க முடியாத வேதனை. ரணப்படுத்தப்பட்ட மனம் எல்லா மனங்களையும் ரணப்படுத்தித் தனது ரணத்தின் இருப்புக்கு அர்த்தம் தேடிக்கொள்கிறது.

எதிர்ப்பின் சிறு பொறியொன்று எனக்குள் எழுந்து சாம்பலாய் உதிர்ந்தது; கிறீச்சிட்டு நின்றது நானும் நண்பனும் பயணம் செய்துகொண்டிருந்த ஆட்டோ . வன்மம் கொண்டவனாக எங்களை நோக்கித் திரும்பியிருந்தான் நடுத்தர வயதைக் கடந்தவனான டிரைவர். அவனது பருத்த தேகத்தையும் துருத்திய பல்வரிசையையும் முகத்துக்கு வெளியே நீண்ட தாடைகளையும் ரோமங்களற்ற முன் கையையும் கொண்டு, அவன் தனது மனைவியின் அதீதமான காமத்துக்கு ஈடுகொடுக்க முடியாதவன், அது சம்பந்தமான தாழ்வு மனப்பான்மைக்கும் குற்ற உணர்வுக்கும் உள்ளாகி வதைப்பட்டுக்கொண்டிருப்பவன் என யூகிப்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன என்று அவன் போன பிறகு சொன்னான் எனது நண்பன். அவன் இதைச் சொல்லி முடித்ததும் தாங்க முடியாத சுய அருவருப்புக்காளானேன் நான். அவனை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு ஓடிவிட வேண்டுமென்ற எண்ணமும் தோன்றிற்று.

ஆனால் நண்பன் உரத்த தொனியில் சிரித்துக்கொண்டிருந்தான். எங்களை இறங்கிக்கொள்ளுமாறு மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொண்டிருந்தான் ஆட்டோ டிரைவர். ஒரு நேரடியான வன்முறைக்கான தயார்நிலையாகவும் அவனது பணிவு எங்களுக்குத் தென்பட்டது. நாங்கள் இறங்க வேண்டிய இடம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட முயன்றபோது அது தனக்குத் தெரியுமென்றான். தொடர்ந்து ஒரே ஆட்டோ வில் பயணம் செய்வது இரு தரப்பினருக்குமே ஆரோக்கியமானதாக இருக்காது எனத் தான் கருதுவதாகவும் சொன்னான். வெகு சிரமப்பட்டுத் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது. அதுவரையிலுமான பயணத்திற்கு நாங்கள் கணக்கிட்டுக்கொடுத்த சொற்பத் தொகையை வேண்டாவெறுப்பாக வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு தலைதெறிக்கும் வேகத்தில் தனது வாகனத்தைச் செலுத்தி மறைந்தான்.

வேறொரு ஆட்டோ வை அமர்த்திக்கொள்ளும் எனது யோசனையைப் புறக்கணித்துவிட்டு நடக்கத் தொடங்கினான் நண்பன். மனிதாபிமானமற்றவன், குறைந்தபட்ச நாகரிகத்தையும்கூடப் பின்பற்றத் தெரியாதவன் என அந்த ஆட்டோ டிரைவரின் மீது வசைமாறிப் பொழிந்தபடி நானும் அவனுடன் நடக்கத் தொடங்கினேன். எனது வசைச் சொற்களில் எதிர்மறையாகப் பயன்படுத்தப்பட்ட அந்த இரண்டு வார்த்தைகளையும் தான் வெறுப்பதாகவும் இனி ஒருபோதும் அவற்றைத் தன் முன்னால் உச்சரிக்கத் துணிய வேண்டாமெனவும் மிகக் கடுமையான குரலில் எச்சரித்துவிட்டு நடையின் வேகத்தைத் துரிதப்படுத்தினான் நண்பன். நான் அந்த இடத்திலேயே அசைவற்று நின்று சில வினாடிகள்வரை அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவனது கால்கள் பின்னின, ஆனால் நடையின் வேகம் தணியவில்லை. ஒருவித எச்சரிக்கையுணர்வுடன் நடையின் வேகத்தைக் கூட்டியவன் பிறகு ஓடத் தொடங்கினான். தனித்து விடப்பட்டதனால் உருவான அச்சத்தின் விளைவாகவோ என்னவோ, நானும் அவனைப் பின்பற்றி ஓடத் தொடங்கினேன். பிடித்துவிடுவேன் என நம்பிய தருணத்தில் அவன் நின்றுவிட்டான். மூச்சிரைக்கத் துரத்திக்கொண்டு வரும் என்னைத் திரும்பிப் பார்த்து உரக்கச் சிரித்தான். இருமவும் செய்தான். தொடர்ந்து சில கணங்கள் இருமித் தீர்த்து, களைப்புற்றவனைப் போல நடு ரோட்டில் கால்களை நீட்டி மல்லார்ந்து படுத்துக்கொண்டான். நானும் அவனருகே சென்று உட்கார்ந்துகொண்டேன்.

சட்டையைக் கழற்றி வீசிவிட்டு விரலிடுக்கில் புகைந்துகொண்டிருந்த சிகரெட்டை நுனிவரை உறிஞ்சிவிட்டு எஞ்சியிருந்த அடிநுனியைக் காற்றில் செங்குத்தாகச் சுண்டிவிட்டான். சில அடிகள் மேல் நோக்கிப் பாய்ந்த சிகரெட் துண்டு அதே செங்குத்துக் கோணத்தில் அவனது மார்பைக் குறிவைத்து இறங்கியது. அதன் நுனியில் கனன்ற நெருப்பைக் கண்டு பதறி அவனை அப்புறப்படுத்த முனைவதற்குள் மிக லாவகமாகப் புரண்டு அதிலிருந்து தப்பித்துக்கொண்டான். விழுந்து நொறுங்கிய சிகரெட் துண்டிலிருந்து சிதறிய நெருப்புத் துணுக்குகள் தார்ச் சாலையின் மேலாகச் சிறிது தூரம்வரை பறந்து சென்று மறைந்துபோயின. மீண்டும் சிரிப்புப் பீறிட்டது அவனுக்கு. ஆனால் ஓயாமல் பெருகிய இருமல் அவனது சிரிப்பைத் தடை செய்தது.

அவனுடனான உறவு குறித்து முதல் முறையாக எனக்கு அச்சம் மூண்டது. வெகுநேரம்வரை எதுவும் பேசாமல் உட்கார்ந்துகொண்டிருந்தேன். தனது வலது கைச் சுட்டுவிரலை உயர்த்தி நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான் அவன்.

தாஸ், ஏதாவதொரு ஆட்டோ வைப் பிடித்துப் பேசாமல் வீடுபோய்ச் சேர். சுய பாதுகாப்புக்கு ஆபத்து நேரும்பொழுது வார்த்தைகளின் தளுக்கு விளையாட்டை யாராலும் ரசித்துக்கொண்டிருக்க முடியாது. எல்லா விளையாட்டுகளுமே ஏதாவதொரு தருணத்தில் ஆபத்தானவையாகிவிடுகின்றன.

உரக்கச் சிரித்து எழுந்து கைகளை உதறிக்கொண்டு ஓட்டமெடுத்தான். சில அடிகளைக் கடந்தபின் சரிந்து தலைகுப்புற விழுந்தான்.

எனது உடல் முழுவதிலுமிருந்து துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. அவனுடைய இரு கடைவாய்களிலிருந்தும் வழிந்திருந்த இறந்த செல்களையுடைய குருதியும் நொதித்துப்போன ஆல்கஹாலும் புளித்த உமிழ்நீரும் எனது மார்புப் பள்ளத்தினூடாகக் கீழிறங்கி வயிற்றில் தேங்கியது. சாலையை ஒட்டியிருந்த குண்டும் குழியுமான பிளாட்பாரத்தில் அவனைக் கிடத்திவிட்டு ஏதாவதொரு ஆட்டோ அல்லது காரைப் பிடிக்கும் எண்ணத்துடன் சாலையின் இரு முனைகளையும் கவனித்துக்கொண்டிருந்தேன். போக்குவரத்து நெரிசலற்ற நெடுஞ்சாலையில் கண்மூடித்தனமான வேகத்தில் எதிரெதிராக விரைந்துகொண்டிருந்த வாகனங்களில் எதுவும் என்னைப் பொருட்படுத்தவில்லை.

ஆனால் இதை நீ மனிதாபிமானம் எனச் சொல்லிக்கொள்ள விரும்புகிறாயாக்கும்?

இது ஒரு வகையான ஒப்பந்தம் தாஸ், சுய பாதுகாப்பை முன்னிட்டு ஒருவர் மற்றவரோடு செய்துகொள்ளும் ஒப்பந்தம். இப்பொழுது நீ எனக்குச் செய்துகொண்டிருப்பவைகளை நாளையேகூட நான் உனக்குத் திருப்பிச் செய்ய நேரலாம். ஏதாவது காரணத்தைச் சொல்லி நான் மறுக்க நேர்ந்தால் மனிதாபிமானமற்றவனென்றோ நன்றி கெட்டவனென்றோ உனது மொழிக் கிடங்கின் தரத்திற்கேற்றவாறு எதையாவது சொல்லி என்னைக் குற்றம்சாட்டுவாய். என்னை நிரூபித்துக்கொள்ளும் பொருட்டு நானும்கூட உனக்கு உதவும் ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். பரஸ்பர நலன்களைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டே நாம் இதைப்போன்ற வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்துகொண்டிருக்கிறோம். சுயநலத்துடன் தொடர்புபடுத்தாமல் மனிதாபிமானத்தை, சுயபாதுகாப்புடன் தொடர்புபடுத்தாமல் நாகரீகத்தை நம்மால் விளக்கிவிட முடியும் என உன்னால் நம்ப முடிகிறதா? தாஸ், சுயநலமும் சுயபாதுகாப்பும் இயற்கையான உயிரியல் செயல்பாடுகள். மிருகங்களுக்கும்கூட இதே உணர்வுகள் உண்டு. மனிதனே மேம்பட்ட மிருகம்தான், இல்லையா தாஸ்? வேறுபாடுகளைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் மனிதன் உணர்வு பூர்வமானவன் எனச் சொல்லலாம். உணர்வுபூர்வமானவன், தந்திரமானவன், பிறப்பும் இறப்பும் மனிதனுக்கும் மிருகத்துக்கும் பொது. பிறப்பும் இறப்பும் புணர்ச்சியும். ஆனால் மிருகங்கள் வம்ச விருத்தியை முன்னிட்டே புணர்கின்றன. புணர்ச்சிக்காகவே புணர்ச்சி என்பது மனிதனுக்கு மட்டும்தான் தாஸ். மிருகங்கள் குடிப்பதில்லை, புகைபிடிப்பதில்லை, நிகோடினின் துர்நாற்றத்தை மறைக்க சூயிங்கம் மென்ற வாயுடன் எந்த மிருகமும் தனது வீட்டுக்குத் திரும்புவதில்லை. திருட்டுத்தனத்தைக் கண்டுபிடிக்கத் தனது இணையை முத்தமிட வேண்டிய நிர்பந்தம் எந்த மிருகத்திற்கும் இல்லை தாஸ்.

நீ என்னை மிருகம் எனக் குற்றம்சாட்டினாய். மிருகம், காமுகன், மன நோயாளி...

ஏற்கனவே நான் உனது அணைப்புக்குள் வந்திருந்தேன். சாரு, உனது விழிகளில் காதலும் காமமும் பெருகி வழியுமாறு பார்த்துக்கொள்வதில் வெற்றிபெற்றிருந்தாய். எனது சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாகக் கழற்றிக்கொண்டே காதல் ரசம் சொட்டச்சொட்டப் பேசிக் கொண்டிருந்தாய். எனது சுவாசத்திலிருந்தும் உதடுகளிலிருந்தும் நிகோடினின் துர்நாற்றத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாமல் போனபோது மிக லாகவமாக உன்னை விடுவித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினாய். உனது கருவிழிகளுக்குள் ஏமாற்றத்தின் கொடிய மிருகங்கள் நடமாடுவதை நான் கவனித்தேன். வசீகரமான உனது முகப் பரப்பெங்கும் வன்மத்தின் மிக ரகசியமான துடிப்புகள். ஆனால் ஒரு கணம் ஏமாந்துவிட்டாய். அதீதமான காமத்துக்கும் குமிழியிடும் உணர்ச்சிகளுக்கும் இரையாகிக்கொண்டிருக்கிறேனென்று நினைத்தாய். லாவகமாக என்னிடமிருந்து விடுவித்துக்கொள்ளும் உனது முயற்சியைத் தொடர்ந்தாய். செல்லமாக முனகுவது போன்ற பாவனையில் எனது செவிகளில் எதையோ கிசுகிசுக்கவும்கூடச் செய்தாய் இல்லையா சாரு? ஆனால் உனது உதடுகளைக் கவ்விக்கொண்ட அந்தக் கணத்திலேயே உனக்கு எனது வன்மம் புரிந்துபோயிருக்க வேண்டும். நீ பதற்றமடையத் தொடங்கினாய். பதற்றத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் விடுவித்துக்கொள்ளும் உனது முயற்சியைத் தீவிரப்படுத்தினாய். ஆனால் எனது பிடி இறுகியிருந்தது. உனது முயற்சியில் உன்னால் கொஞ்சம் கூட வெற்றிபெற முடியவில்லை.

நான் சிரிக்கத் தொடங்கியதும் உனக்கு எல்லாம் தெளிவாக விளங்கிவிட்டது சாரு. கை கால்களை உதறத் தொடங்கினாய். நான் உனது உள்ளாடைகளைக் கிழித்தெறிய முற்பட்டதும் நீ என்னை உனது கூரிய நகங்களால் பிறாண்டினாய். எனது தோள்பட்டையைக் கடித்துக் காயப்படுத்தவும் உனக்கு முடிந்திருந்தது. பதிலுக்கு நானும் உனது உதடுகளைக் கடித்தேன். அதீதக் காமம் கொண்டவனைப் போல எனது நகங்களால் உனது மென்மையான மார்பகங்களைப் பற்றிப் பிசைந்தேன், கடித்தேன், அவற்றின் காம்புகளிலிருந்து குருதி கசியத் தொடங்கியிருந்தது. வலி தாளாமல் நீ கூச்சலிடத் தொடங்கினாய், கதறினாய், என்மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக விம்மல்களூடே எச்சரித்தாய். பிறகும் வெகுநேரம்வரை உன்னால் உடைகளைத் திரும்ப அணிந்துகொள்ள முடியவில்லை. இதே மர நாற்காலியில், வெறும் உள்ளாடைகளுடன் உட்கார்ந்தபடி நான் நிதானமாகப் புகைபிடித்துக்கொண்டிருந்தேன். சாரு, எனது நுரையீரல்களிலிருந்து வெளிவந்த நிகோடினின் துர்நாற்றம் மிகுந்த சிகரெட் புகை உன்னை முற்றுகையிட்டு விளையாடிக்கொண்டிருந்ததை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

பின்னர் ஒப்புதல் வாக்குமூலங்களும் மன்னிப்புக் கோரல்களும்.

சாரு அந்தத் தருணத்தில் நாமிருவரும் அதீதமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாகவும் முற்றிலும் சுய கட்டுப்பாடற்ற முறையில் நடந்துகொண்டுவிட்டதாகவும் நமக்கு நாமே பரஸ்பரம் சமாதானம் சொல்லிக்கொண்டோ ம். அப்படியொரு பொய்யான சமாதானம் நமக்கிடையே ஏற்படாதிருந்திருந்தால், அந்த நிகழ்வை ஈவிரக்கமற்ற முறையில் நமக்குப் பரிசீலிக்கச் சாத்தியப்பட்டிருந்தால்?

ஒரு சைக்காலஜிஸ்ட்டால்கூட உன்னை மன்னிக்க முடியாமல் போய்விடலாம் தாஸ். குணப்படுத்தலுக்கு அப்பாற்பட்ட மன நோயாளி என்று வெகு சுலபமாக முடிவுசெய்துவிடுவான். உனது கூக்குரல்களைக் காதில் போட்டுக்கொள்ளாமல் பூட்டிய வீட்டுக்குள் உன்னை அடைத்துப் போடுமாறு யோசனை சொல்லிவிடுவான். சைன்டிஸ்ட்டுகளுக்கும் டாக்டர்களுக்கும் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை ஒப்புக்கொள்ள முடியாது தாஸ்.

ஆனால் கவிஞர்களுக்கு?

கவிஞர்களை உலகம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கவிஞர்களையும் மன நோயாளிகளையும் வெவ்வேறானவர்களாகக் கருதுவதுமில்லை. மன நோயாளிகளைப் போலவே கவிஞர்களும் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறவர்கள்தான் தாஸ்.

காதல் எப்பொழுது முடிவடைகிறதோ அப்பொழுது வெறுப்பு மூளத் தொடங்குகிறது.

காதல் நாணயத்தின் மற்றொரு பக்கமே வெறுப்பு.

காதலின் துன்பத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல் என்பத்து மூன்று வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, ரயில்வே ஸ்டேஷனின் குளிர் மிருந்த ஓய்வறையில் மரணத்தைத் தழுவிய உலகின் மகத்தான மனிதனின் ஒப்புதல் வாக்குமூலங்களாக்கும் இவை. வலிப்பு நோயாளியான மற்றொரு மகத்தான மனிதனோ காதலை யுத்தத்துக்கு ஒப்பிட்டான். யுத்தம் தாஸ். இதில் சமரசங்களக்குத் துளியும் இடமில்லை. தீர்மானகரமான வெற்றி அல்லது நிச்சயமான தோல்வி, இரண்டில் ஒன்றை எட்டும்வரை அதன் தீவிரம் குறையப் போவதில்லை.

ஹ... ஹ... ஹாணண...

தீர்மானிக்கும் தருணம் இது. வெற்றி அல்லது தோல்வி இரண்டில் ஒன்றை நிச்சயித்தாக வேண்டும். இந்தத் தருணத்தை நான் ஒருபோதும் கோட்டைவிடப் போவதில்லை சாரு. இரண்டிலொன்று, எங்களிருவரில் யாராவது ஒருவன், தீர்மானிக்கும் வாய்ப்பு எனது கைகளுக்கு வந்திருக்கிறது. ஊசலாட்டங்களுக்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. மூடிய கதவை உதைத்துத் திறந்து உங்களிருவருக்கும் உங்களது சொந்த உடல்களின் நிர்வாணத்தைக் காட்டப்போகிறேன். என்ன வேண்டுமானாலும் நடந்துகொள்ளட்டும். கொலை அல்லது தற்கொலை, எந்தக் கவிஞனும் தத்துவவாதியும் என்னை இதிலிருந்து பின்வாங்கச் செய்ய முடியாது. எனது கவிஞனும் தத்துவவாதியும் மிதமிஞ்சிய ஆல்கஹாலுக்கு இரையாகிவிட்டார்கள். அவர்களது மூளையின் செல்களும் இரைப்பையும் குடல்களும் கெட்டுப்போய்விட்டன. அனாதைப் பிணமாய் கார்ப்பரேஷன்காரர்கள் அவனைக் கொண்டுபோய் கடலில் வீசிவிட்டு வந்துவிட்டார்கள். ஆல்கஹாலின் அரிப்புக்குள்ளான அவனது உள்ளுறுப்புகள் இப்போது கண்ணாடிக் குடுவைகளில் பாதுகாக்கப்படுகின்றன. மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஒரு ஸ்டடி மெட்டீரியலாகும் கவிஞனின் உடல். ஆல்கஹாலின் தீமையை உணர்த்த செல்லரித்த பகுதிகளை நுண்ணோக்கி மூலம் போட்டோ எடுத்துத் தெரு முனைகளில் மாட்டி வைப்பார்கள். ஆல்கஹாலின் தீமையையும் கவிதையின் தீமையையும்.

தாஸ், நண்பர் என்று சொல்கிறீர்கள். ஆனால் அவரது உடலைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். இதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. தவிர இது ஒரு சட்டப் பிரச்சினை. எங்களது மருத்துவமனையில் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்வதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. நாங்கள் அரசாங்கத்தின் உதவியை நாட வேண்டியிருக்கும். இந்தப் படிவங்களில் நீங்கள் சில கையெழுத்துக்களைப் போட வேண்டியிருக்கும். இதில் தயங்குவதற்கு ஒன்றுமில்லை, சில சடங்குகளை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது, அவ்வளவுதான். ஆனால் நல்ல வேளையாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உங்களுக்கு எதிராக எதுவுமில்லை. அந்த நடுநிசியில் நீங்கள் அவரது உடலுடன் வந்து நின்றபோது உங்களைப் பார்க்க எப்படியிருந்தது தெரியுமா? நிச்சயமாக அது ஒரு கொலையாகவே இருக்க வேண்டுமென்று நினைத்தோம். உங்களது நண்பர் தனது குடல் பாகங்களை அவ்வளவு மோசமாக அழுகிப்போவதற்கு அனுமதிக்காமலிருந்தால்? மித மிஞ்சிய போதையில் அவரது மூளையின் ரத்தக் குழாய்களில் வெடிப்பு ஏற்படாமலிருந்திருந்தால்?

அனுதாபத்துக்குப் பதிலாக விசாரணை, ஸ்டெதாஸ் கோப்புக்குப் பதிலாகக் கைவிலங்கு. எனி ஹவ் யூ ஆர் சேவ்டு... தப்பினீர்கள் தாஸ். ஆல் த பெஸ்ட்.

மூடிய கதவுகளுக்குள் பின்னிக் கிடக்கும் இரு நிர்வாண உடல்கள் பற்றிய கற்பனை தரும் குரூரமான சந்தோஷத்தில் கண்களை மூடிக்கொண்டிருந்தேன் நான். ஸ்விட்ச் பாக்ஸுக்கு மேலே இருக்கின்றன தீப்பெட்டியும் மெழுகுவர்த்தியும்; படுக்கையறைக்குள்ளிருக்கிறது எமர்ஜென்ஸி லாம்ப். இருளில் தட்டுத்தடுமாறி எழுந்து எனது தலைக்கு நேர்மேலாக இருந்த ஸ்விட்ச் பாக்ஸிலிருந்த மெழுகுவர்த்தியை எடுத்துக் கொளுத்திக் கையில் பிடித்துக்கொண்டேன். சற்று நேரத்திற்கு முன்னால் கீழே விழுந்து நொறுங்கியிருந்தது கண்ணாடிக் குடுவை. உடைந்த கண்ணாடிச் சில்லுகள் ஒரு அரண் போலக் கூடம் முழுக்க இறைந்து கிடந்தன. அவற்றைப் பொருட்படுத்தாமல் தாண்டிக்கொண்டு நடக்க முற்பட்டபோது எனது உள்ளங்காலைக் குத்திக் கிழித்தது கூர்மையான கண்ணாடித் துண்டொன்று. எனது தொண்டைக் குழியிலிருந்து தன்னிச்சையாகப் பீறிட்டெழுந்தது ஒரு உரத்த சப்தம்.

பெண் அல்லது சிசு; வேதனை அல்லது விரகம்; புணர்ச்சியின் அடையாளம் அல்லது பிறவியின் தடயம். அபத்தமான இந்த விளையாட்டுக்களை இத்தோடு நிறுத்திக்கொள்ளலாமே, தருக்கங்களின் கோரைப் பற்களுக்கிடையே சிக்கிக்கொள்ள வேண்டாம். நடைமுறையின் கைப்பிடியிலிருக்கும் ஊன்றுகோலின் ஒரு நுனி போதும் எனக்கு. உடைந்த கண்ணாடிச் சில்லுகளின் கூரிய சிதறல்களுக்கிடையே எரியும் மெழுகுவர்த்தியுடன் நின்றுகொண்டு, மூளையில் செல்லரித்த பாகங்களிலிருந்து வழியும் உபயோகமற்ற எண்ணங்களை முற்றாகத் துடைத் தெறிந்துவிட்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கதவைத் தள்ளித் திறந்தால்?

தாஸ், கதவைத் திற, உனக்குத் தென்படும் நிர்வாணம்.

சட்டென்று எனது கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்து அணைந்தது மெழுகுவர்த்தி. அதே கணத்தில் பளீரெனப் பற்றிக்கொண்டது குழல் விளக்கின் பிரகாசம். குதிகாலின் வலியைப் பொருட்படுத்தாமல் ஒரே வீச்சில் பாய்ந்து கதவைத் தள்ளினேன்.

கடவுளே...

கட்டிலின் மீது ஆழந்த உறக்கத்தில் கிடந்தது. ஒரு பச்சிளம் குழந்தை, பிறந்து சில கணங்களே ஆன சிசு. அதன் மேனியிலிருந்து வீசிக்கொண்டிருந்த உதிரத்தின் வாடை அந்த அறை முழுக்கப் பரவிக்கிடந்தது. இன்னும் அறுத்து வீசப்பட்டிருக்காத தொப்புள்கொடி துவண்ட ஆண் குறியைப்போல அதன் வயிற்றின்மேல் கிடந்தது. மிருதுவான சருமத்தில் அங்கங்கே விரல்கள் பதிந்ததன் கன்றிய அடையாளங்கள். ஜனனத்திற்கு உதவிய மருத்துவரின் விரல் அடையாளங்களாயிருக்கலாம். எங்கே சாரு?

கட்டிலுக்குக் கீழே சில உள்ளாடைகளும் கருகிய சிகரெட் துண்டுகளும் இறைந்து கிடந்தன.

நன்றி - காலச்சுவடு