‏إظهار الرسائل ذات التسميات மொழிப் பயிற்சி. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات மொழிப் பயிற்சி. إظهار كافة الرسائل

"கள்' மயக்கம் தெளியுமா? - ப.குருநாதன்

நல்ல செய்திகளைவிட, கெட்ட செய்திகள் அதிவேகமாகப் பரவுகிறது. "வாழ்த்துக்கள்' என்பதை "வாழ்த்துகள்' என்று எழுதி, ஓரெழுத்தைக் கொலை செய்வது அதி வேகமாகப் பரவி வருகிறது. அது இலக்கணத்தை மீறிய செயலாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

வாழ்த்துக்கள் - இது கள்ளைக் குறிக்கிறது என்கிறார்கள். ஆம். இது கள்ளையும் குறிக்கிறது; ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்த்துக்கள் என்ற பன்மையையும் குறிக்கிறது. வாழ்த்துக்கள் - என்றொரு கள் இருக்கிறதா? இல்லையே. அதனால், இல்லாத கள்ளை விட்டுவிட்டு இருக்கிற பன்மையை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆண்கள், பெண்கள் என்று எழுதுகிறோம். அதற்காகக் கள்ளிலே இரண்டு வகை உண்டு; ஒன்று ஆண்; மற்றொன்று பெண் என்று சொல்லலாமா?

உண்மையில் பூக்கள், பழங்கள் என்பவை கள்ளையும் குறிக்கின்றன; பன்மையையும் குறிக்கின்றன. இடத்திற்கேற்ப பொருள் கொள்ளவில்லையா? அதைப்போல, "வாழ்த்துக்கள்' என்பதையும் எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே? வன்றொடர்க் குற்றுகரப் புணர்ச்சியில் மட்டும் கள் மயக்கம் ஏன்? எழுத்துக்கள் எனும் சொல் இலக்கண விதிகளிலேயே இடம்பெற்றுள்ளது. எழுத்துகள் என்றொரு வகையான கள் இல்லவே இல்லை.

தமிழில் பல பொருள் ஒரு சொல்லுக்கு உண்டு. இதற்குப் பஞ்சமே இல்லை. இடத்திற்கேற்பப் பொருள்கொள்ள வேண்டியதுதான்.
 ""நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்'' - இதில் எங்கே இருக்கிறது மதுவாகிய கள்? ""நல்வாழ்த்துக்கள்ளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்'' என்றால்தான் தவறு. ஏனென்றால், "நல்வாழ்த்துக்கள்' என்றொரு வகையான கள் கிடையாது.

உண்மையில், வாழ்த்துகள் என்பதுதான் கள்ளைக் குறிக்கிறது. ஆம். வாழ்த்திய கள், வாழ்த்துகின்ற கள், வாழ்த்தப் போகும் கள் - என வாழ்த்துகள் என்பது கள்ளை மட்டுமே குறிக்கிறது. இதில் பன்மை இல்லை.

"வாழ்த்துக்கள்' என்பதில் இரு பொருளிருந்தாலும், வாழ்த்துக்கள் என்றொரு கள் இல்லாததால், பல வாழ்த்துக்கள் என்ற பொருளையே தரும். இதைப் போன்றே எல்லா குற்றுகரச் சொற்களுக்கும் பொருந்தும்.

இன்னும் சிலர், "ஆள்கள்', "நாள்கள்' என்று எழுதுகிறார்கள். அதே கள் மயக்கம் இங்கும் வருகிறது. ஆட்கள் - என்றொரு வகையான கள் இல்லவே இல்லை. எனவே, ஆட்கள் என்பது பல ஆட்கள் என்ற பன்மையை மட்டுமே குறிக்கும். மாறாக, ஆள்கள் என்பதுதான் ஆண்ட கள், ஆளுகின்ற கள், ஆளப்போகும் கள் - எனக் கள்ளை மட்டுமே குறிக்கும். எனவே, ஆட்களைக் குறிப்பதற்கு "ஆள்கள்' என்பது தவறாகும். கள் ஆட்சி செய்யுமிடத்தில் வேண்டுமானால், ஆள்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.

நாட்கள் என்பது கள்ளையும் குறிக்கிறது; பன்மையையும் குறிக்கிறது. இடத்திற்கேற்பப் பொருள் கொள்ளலே நன்று. "நான்கு நாட்களாகப் படித்தேன்' - இது பன்மையைக் காட்டும். நான்கு நாட்கள்ளைக் குடித்தேன் - இது மதுவைக் குறிக்கும்.

"கண்' எனப்படும் வேற்றுமை உருபுக்கும், "கண்' எனப்படும் உடல் உறுப்புக்கும் வேறுபாடு தெளிவாகத் தெரியும்பொழுது, "கள்' எனப்படும் பன்மை விகுதிக்கும், "கள்' எனப்படும் மதுவுக்கும் வேறுபாடு தெரியவில்லை என்பது விந்தையிலும் விந்தை!

நன்றி - தமிழ்மணி

மொழிப் பயிற்சி – 78 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்று தேராடல், பழமுதிர் சோலை என்னும் ஆறு தலங்கள் பற்றிய வருணனைகள் அடக்கம். இந்த ஆறும் படைவீடுகள் அல்ல. "ஆறுபடை வீடு, ஆறுபடைவீடு' என்று பேசுவதெல்லாம் பொருளறியாது மக்கள் வழக்கில் வந்து கலந்தனவே.


படைவீடு என்றால் பாசறை. மன்னர்கள் பகை நாட்டின் மீது படை எடுத்துச் செல்லுங்கால் இடையில் இளைப்பாற அமைக்கப்படுவதே படை வீடு அல்லது பாசறை. இப்போதைய வழக்குத் தமிழில் "முகாம்' என்றும் சொல்லலாம். அந்த வகையில், முருகப் பெருமான் சூரனை அழித்திடப் போருக்குப் புறப்பட்டபோது, திருச்செந்தூரில் படை வீடு அமைத்ததாகக் கந்தபுராணம் சொல்லுகிறது. மற்ற தலங்களுக்கும் படை வீட்டுக்கும் தொடர்பு இல்லை.

ஆற்றுப்படை என்னும் சொல்லின் பொருளறியாது, படை என்பதைப் படை வீடாக்கி ஆற்றுதலை "ஆறு' என எண்ணாக்கி ஆறுபடை வீடுகள் என்று சொல்லி வருகிறோம். குன்றுதோராடல் என்று அவற்றுள் ஒன்று. எல்லாக் குன்றுகளிலும் (மலைகளிலும்) முருகன் எழுந்தருள் ஆடல் புரிவதே அதன் பொருள். திருத்தணிகை என்பது நாமாகக் கற்பிதம் செய்து கொள்ளுவதேயாம். அவ்வாறே திருவேரகம், சாமிமலையைக் குறிப்பதாகச் சொல்லுவதும் நம் விருப்பினால் ஆனதேயாம்.
 சாமி மலைக் கோவில் கட்டுமலை. அஃதாவது இயற்கையாய் அமைந்த மலையன்று. மனிதர்கள் கற்களை அடுக்கிக் கட்டிய மலை. பல்லவர் காலத்திலிருந்தே (நான்காம் நூற்றாண்டின் பின்) கற்கோவில்கள் தமிழகத்தில் எழுப்பப்பட்டன. சங்க நூல்களில் மிகவும் பழமை வாய்ந்தது திருமுருகாற்றுப்படை என்பதை அதன் நடை கொண்டறியலாம். ஆதலின் அப்போது (முதல் நூற்றாண்டில்) கட்டுமலை இருந்திருக்குமா என்பது ஐயமே.

ஆறுபடை வீடு என்னும் "வழக்கு' திருமுருகாற்றுப்படையைக் கொண்டே சொல்லப்பட்டு வருகிறது. ஆற்றுப் படைக்கும் ஆறுபடை வீட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை.

 மற்றொரு செய்தி - கமுக்கமாகச் (இரகசியமாக) செயற்பட்டு வஞ்சகம் செய்வதை ஐந்தாம்படை வேலை செய்துவிட்டான் என்று சொல்லி வருகிறோம். எப்படி வந்தது இது? மன்னர்களின் படை நான்கு. அவை: தேர்ப்படை, யானைப்படை, குதிரைப் படை, காலாட்படை. (இந்நாளில் வான்படை, கடற்படை, தரைப்படை என மூன்றே) மேற்சொன்ன நான்கு படைகளும் நேரடியாக எதிர்ப்பட்டுத் தாக்கும். இப்படி நேர்முகமாகத் தாக்காமல் மறைமுகமாக வேலை செய்பவர்கள் (அரசியலில்) ஐந்தாம் படை என இழிவாகக் கருதப்படுகிறார்கள்.

நூத்தி முப்பத்து மூனு

நூற்று முப்பத்து மூன்று என்று சரியாகச் சொல்ல வேண்டியதை இப்படி "நூத்தி முப்பத்தி மூனு' என்று பேசுகிறோம். நூற்று - முப்பத்து - மூன்று என இலக்கணமாகச் சொல்லாது போயினும் நூத்தி முப்பத்து என்று "' வை "' ஆக்காமல் முப்பத்து மூணு என்றாவது சொல்லலாமே.

உள்ளம் தோய்ந்த உவகையுடன் நன்றி

இந்தத் தொடரை இன்னும் பல கிழமைகள் (வாரங்கள்) தொடர்ந்து எழுதிடலாம். ஆயினும் எதற்குமோர் எல்லை வேண்டுமன்றோ? கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கில், "ஊடகங்களில் தமிழ்ச் சிதைவுகள்' என்னும் தலைப்பில் ஆற்றிய உரையைக் கேட்டுவந்த நம் தினமணி ஆசிரியர், அரங்கில் உரைத்த கருத்துகளை விரிவாகத் தினமணியில் தொடர்ந்து எழுதுமாறு வேண்டினார்கள்.

"கரும்புத் தின்னக் கூலியா?' நமக்குப் பெருமகிழ்ச்சியளித்தது இவ்வாய்ப்பு.
"அறிவோம் அருந்தமிழ்' என்று வினா - விடை வடிவில் இலக்கியத் திங்கள் ஏடு ஒன்றிலும் தொடர் (2006) எழுதியுள்ளோம். பொதிகைத் தொலைக்காட்சியில் "தவறின்றித் தமிழ் பேசுவோம்' என்னும் தலைப்பில் (புதன்தோறும்) உரையாற்றினோம்.

ஆதலின் நமக்கு மிக உவப்பான ஒன்றை - காலமெல்லாம் பரப்புரை செய்கின்ற கருத்தை எழுதிடப் பணித்த ஆசிரியர்க்கு மனம் தோய்ந்த மகிழ்ச்சியான நன்றியுரைக்கிறோம். இத்தொடர் தொடங்கிய போதிருந்தே பல்வேறு ஊர்களிலிருந்தும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டிய அறிஞர்கள், தமிழன்பர்கள், ஐயம் வினவித் தெளிவு பெற்றவர் அனைவர்க்கும் நன்றி.

(நிறைவு பெற்றது)

நன்றிதினமணி கதிர்



மொழிப் பயிற்சி – 77 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

மயலும் மையலும்!

துட்டம் (துஷ்டம்) – தீக்குணம். நட்டார் – உறவினர் என்று தொகையகராதியில் காணப்படுகின்றன. தொகுத்தபோது ஏற்பட்ட பிழையாக இருக்கலாம். நட்சத்திரம் – அசுவினி, பரணி தொடங்கி இருபத்தேழும் எழுதப்பட்டுள்ளன. தொகையகராதி என்பதால் இப்படிக் குறிப்பிட்டார் எனக் கொள்ளலாம். நட்சத்திரம் – விண்மீன் என்று இப்போது தமிழில் சொல்வோம் நாம்.
தமிழ், வடமொழி என்ற வேறுபாடின்றி இரண்டு நூற்றாண்டின் முன்னிருந்த நிலையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் இப்போதும் தமிழார்வலர்களும், ஏன் அறிஞர்களும் கூடப் படித்தறிய வேண்டிய நூல் என்பதும், இத்தகைய ஓர் அரிய செயலை ஓர் ஐரோப்பியர் செய்தார், நாம் யாரும் இத்தகு செயலாற்றவில்லை என்பதும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
இந்த நேரத்தில் மற்றொருவர் பற்றியும் அவரின் சீரிய கருத்தொன்று பற்றியும் அறிய வேண்டும். தமிழில் உரைநடையில் முதல் இலக்கண நூல் செய்தவர் ஜி.யு.போப் ஆவார். இவரே திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கில மொழியில் பெயர்த்தவரும் ஆவார். திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்தவருள் முதன்மையானவர். திருவாசகம் படித்து மனம் உருகி, உருகி நெகிழ்ந்தவர். தம் கல்லறையில் “ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என்று எழுதச் சொன்னவர்.

மொழிப் பயிற்சி – 76 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

ஆனந்தனா? ஆநந்தனா?

“விஷய சூசிகை’ யும் சதுரகராதியும்
பொருளடக்கம், உள்ளடக்கம், உள்ளுறை, உள்ளேயிருப்பவை எனப் பலவாறாக இன்று நாம் புத்தகங்களில் குறிப்பிடுகிறோமே, அதுதான் விஷய சூசிகை. விஷயம் – பொருள்; சூசிகை – குறிப்பு. (பொருள் குறிப்பு – பொருளடக்கம்). சூசகமாக என்னும் சொல் இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாகச் சொல்லுதல் என்பதே இதன் பொருள்.

மொழிப் பயிற்சி – 75 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

இயல்பாகப் பேசுவதே இலக்கணம்

மகிழ்ச்சி - மகிழ்வு, தளர்ச்சி - தளர்வு, அயர்ச்சி - அயர்வு. இச்சொற்களைப் போலவே முயற்சி - முயல்வு எனக் கொண்டால், "எல்லா முயல்வுகளும்' என்னும் எழுத்தில் பிழையில்லை என அறியலாம். முயற்சிகள் என்று மட்டுமே எழுதியும் பேசியும் கேட்டும் பழக்கப்பட்ட நமக்கு முயல்வுகள் புதிதாகத் தோன்றுவது இயல்பே.

அடடா! என்னே தமிழ்!

விடம் (விஷம்) என்பதும், நச்சு என்பதும் ஒன்றே. குழந்தையாய் இருந்த கண்ணனைக் கொல்ல பூதகி எனும் அரக்கி முலைப்பால் கொடுத்தாள், கண்ணனோ அவள் உயிரையே உறிஞ்சி எடுத்துவிட்டான். இந்நிகழ்வை ஆழ்வார்ப் பாசுரம் "பேய்ச்சி விட நச்சு முலை' எனும் தொடரால் குறிக்கிறது. விடமுலை எனினும் நச்சு முலை எனினும் ஒன்றே! பின் ஏன் இரண்டு சொற்களும் வந்தன? விட என்பதற்கு விடம் எனக் கொள்ளாது பேய்ச்சி (உயிரை)விட - நச்சு முலை - என்று பொருள் காண வேண்டும்.

"குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்' என்று தொடங்கும் பாடலை நாமறிவோம்.

"வண்டார் இருங்குஞ்சி மாலை தன் வார் குழல் மேல்

கொண்டாள் தழீஇக் கொழுநன்பால்'

என்பது சிலப்பதிகாரம். குஞ்சி (குடுமி) ஆடவர்க்குரியது. குழல் (கூந்தல்) மகளிர்க்குரியது.

சிலம்பு விற்க மதுரைக்குப் புறப்பட்ட கோவலனைக் கண்ணகி தழுவினாள். கோவலன் தன் குடுமியில் (குஞ்சி) சூட்டியிருந்த மாலையினை எடுத்துக் கண்ணகியின் கூந்தலில் (குழல்) சூட்டிப் பிரியா விடைபெற்றான். மிக விளக்கமாக எழுத வேண்டிய இடம் இது. இலக்கியக் கட்டுரை ஆகிவிடும் ஆதலின், வேண்டிய செய்தியை மட்டும் காண்போம்.

குழந்தைக் கண்ணனைப் பாடும் ஆழ்வார், "மை வண்ண நறுங் குஞ்சி குழல் பின் தாழ' என்று பாடியுள்ளார். இங்கே குஞ்சி, குழல் இரண்டு சொற்களும் ஏன் வந்தன? எப்படி இது பொருத்தமாகும்? இரண்டு சொற்களும் ஒன்றையே குறிப்பதாயினும் சிறிய பொருள் வேறுபாடுண்டு.

குஞ்சி - முன் குடுமி, குழல் - பின் தொங்கும் கூந்தல்.

குழந்தைக் கண்ணனுக்கு முன் குடுமியும் உண்டு. பின்னால் தொங்கும் கூந்தலும் உண்டு என்று பொருள் தரும் வண்ணம் மேற்கண்ட பாடல் வரி சிறப்படைகிறது.

முன்னாளில் ஆண்களும் குடுமி வைத்திருந்தனர் என்பதைச் "சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்னும் பழமொழி கொண்டு அறியலாம்.

தமிழின் சீர்மை அறிந்து மகிழ்ந்தீர்களா? நம் பழந்தமிழ்ச் சொற்கள் பல வடமொழியில் இணைந்துள்ளன. (வடசொல் தமிழில் கலந்தது போலவே) மதங்கம் என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே மிருதங்கம். அவ்வாறே மெது, மென்மை மெத்து மெத்தென்று என்பன எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள். தமிழின் மெது என்பதே "மிருது' எனத் திரிந்தது. மனம் என்னும் தூய தமிழ்ச் சொல்லிலிருந்தே மனஸ், மனசு, மனது என்பன தோன்றின. துறக்கம் என்னும் தூய தமிழ்ச்சொல்லே சொர்க்கம் என்றாயிற்று என மொழி நூல் அறிஞர் உரைப்பர்.

புனைப் பெயரா? புனை பெயரா?

ஒருவர் தம் இயற்பெயரில் அல்லாமல் தாமாகப் புனைந்து கொண்ட பெயரால் எழுதி வருகிறார். அப்பெயரில் அவர் நேற்றும் (முன்பும்) எழுதினார். இன்றும் (இப்போதும்) எழுதுகிறார். நாளையும் (பின்னரும்) எழுதுவார். புனைபெயர் எனில் புனைந்த பெயர், புனைகின்ற பெயர், புனையும் பெயர் என முக்காலமும் கொள்ளத்தக்கதாகும். காலம் கரந்த (மறைந்துள்ள) பெயரெச்சம், அஃதாவது மூன்று காலங்களுக்கும் பொருந்தக்கூடிய பெயர் எஞ்சிய வினை. வினைத் தொகை எனப்படும். புனை பெயரை வினைத் தொகையாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல் பொருத்தமுடையது.

புனைப் பெயர் எனில், புனைந்தது ஆகிய பெயர் எனக் கொண்டு, புனைந்தது என்னும் வினையைப் புனைதல் என்னும் தொழில் பெயர் ஆக்கினால், புனைதல் ஆகிய பெயர் எனக் கொள்ளலாம். ஆகிய எனும் பண்பு உருபு பெற்று வருவதால், புனைதல் ஆகிய பெயர் எனக் கொள்ளலாம். புனைதல், பெயர் இரண்டும் ஒன்றையே குறிக்கின்றன என வலிந்து கொண்டு இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகக் கொள்ளலாம். ஆனால் இவ்விளக்கத்தைவிட முன்னர்ச் சொன்னதே மிகப் பொருந்தி வருவதால் புனை பெயர் என்பதே சரியானது; இப்படித்தான் அறிஞர் பலர் எழுதியுள்ளனர் என்பதும் நோக்கத்தக்கது.

என்ன? தமிழில் ஒற்றிலக்கணம் (வல்லினம் மிகுதல்) மிகவும் இடர் செய்கிறேதோ? அப்படியொன்றுமில்லை. இயல்பாகப் பேசுவதே இலக்கணம் ஆக்கப்பட்டுள்ளது. புனை பெயர் என்று சொல்லிப் பாருங்கள். புனைப் பெயர் என்றும் சொல்லிப் பாருங்கள். எது இயல்பாய் உள்ளது? புனை பெயரன்றோ? வரச் சொன்னார், அந்தப் பையன் இயல்பாகும். இதனை வர சொன்னார், அந்த பையன் எனில் விட்டிசைப்பதை உணரலாம்.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

மொழிப் பயிற்சி – 74 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

லகரமெல்லாம் ளகரமாகவே உச்சரித்துப் பேசுகிறார்கள்!

இவர்களுமா இப்படி?

யாரவர்கள்? எப்படி நடந்து கொண்டார்கள்? அப்படியென்ன தவறு செய்தார்கள்? என்று ஆராய வேண்டாம். நன்கு கற்ற புலமை மிக்குடையவர்களும் உச்சரிப்பில் தவறும்போது நம் மனம் வாடுகிறது; வருந்துகிறது. நூல் (புத்தகம்) என்பதை ஒரு சிறந்த பேச்சாளர் பலவிடங்களில் நூள், நூள் என்றே உச்சரித்தார். "அவன் ஏன் தோல்வியைத் தளுவினான் தெரியுமா?' என்று அவர் வினா விடுத்த போது, நாம் தலைகுனிந்து அமர்ந்திருந்தோம். "அவன் ஏன் தோல்வியைத் தழுவினான்?' என்பதுதான் அவரின் வினா.

சென்னையில் மிகப் பெரிய அரங்கம். கற்றுத் தேர்ந்த அவையினர். பேச்சாளரோ நுண்மாண் நுழைபுலம் மிக்கவர், நாவன்மையும், சிந்தனைத் திறமும் படைத்த பேரறிஞர். ஆயினும் அவர்தம் உரையில், "உணர்வு சார்ந்து நாம் பேசினாள் (ல்) ', "இன்னும் சொல்லப் போனாள் (ல்)', "அவர் ஏன் பாடவில்லை என்று கேட்டாள் (ல்)',

"இந்தப் பஞ்ச பூதக் களப்பு (கலப்பு)'. இப்படியே லகரமெல்லாம் ளகரமாகவே உச்சரித்துப் பேசும்போது நாம் மனம் வெறுத்தே போனோம். எழுந்து கத்துவது நாகரிகமல்லவே! ஆதலின் வாளாவிருந்தோம்! தம் பேச்சைத் தாமே ஒலிநாடாவில் - குறுவட்டில் பதிவு செய்து கேட்டுப் பார்த்தால், தவறு புரியாமல் போகாது. சற்றே முயன்றால் சரியாக உச்சரித்துப் பேசக் கூடுமே.

வாட்டமில்லா வண்டமிழ் என்றும் ஈரத் தமிழ் என்றும் போற்றப்படும் நந்தமிழ் இப்படிச் சிதைக்கப்படலாகுமோ? இயல்பாக எளிமையாக வர வேண்டிய ஒலிப்பு - உச்சரிப்பு, அறிஞர் சிலரிடையே ஏன் இப்படி இடர்ப்படுகிறதோ?

""தமிழ் மொழியின் இலக்கண நெறிகள் தத்துவ உண்மைகள் நிறைந்தவை. தமிழிலக்கியங்கள் ஒழுக்கத்தையும், அறநெறியையும் ஊட்டுவதற்கென்றே உருவானவை; உருவாக்கப்பட்டவை'' என்று போற்றியுள்ளார் மேலை நாட்டுத் தமிழறிஞர் ஜி.யு.போப். தமிழர்கள் இந்த வரிகளை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

திரைகடலா? திரைக்கடலா?

இந்த ஐயத்தை நம்மிடம் எழுப்பியவர் நண்பரும் கவிஞரும் ஆகிய ஒரு புள்ளி. நாம் சொன்னோம்,

"திரைகடலோடியும் திரவியம் தேடு'' என்று ஒüவையார் பாடியுள்ளார்.

"நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று

நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை' என்று பாரதியார் பாடியுள்ளார். எது சரி? இரண்டும் சரியானவைதாம். எப்படி? சற்றே இலக்கணக் கடலுள் புகுந்து முத்தெடுத்தல் முயற்சியில் ஈடுபடுவோமா?

கடலின் அலையைத் திரை என்போம். (திரை - திரைச்சீலை, தோலில் தோன்றும் சுருக்கம் என்றும் பொருள் தரும்)

கடலின் அலை என்றாவது ஓய்ந்ததுண்டா? "அலைகள் ஓய்வதில்லை' என்று நாமறிவோம். "அலை' என்பதைப் பெயராக்காமல், அலை என வினையாக்கிப் பார்த்தால், அலைந்த கடல், அலைகின்ற கடல், அலையும் கடல் எனப் பொருள் தரும் வகையில் அலைகடல் என்போம். இவ்வாறே அலைக்குப் பதில் திரை எனும் சொல்லைப் போட்டால் திரை கடல் என்றுதானே ஆகும்?

ஆதலின் "திரைகடலோடியும் திரவியம் தேடு' என்னும் ஒüவை வாக்கின் அருமையை உணர முடிகிறது. அடுத்தது, திரை வேறு, கடல் வேறா? இரண்டும் ஒன்றே; வட்டக் கல் என்பதுபோல. ஆதலின் திரைக்கடல் எனின் இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகக் கொள்ளலாம். அன்றியும் திரையை உடைய கடல் என்று விரித்தால் இரண்டாம் வேற்றுமை உருபும் (ஐ) பயனும் (உடைய) உடன் தொக்க தொகையாகவும் கொள்ளலாம். ஈண்டும் ஒற்றுமிகும்.

நீலத்திரைக் கடல் என்று மகாகவி பாடியதும், "திரை கடல் ஓடி' என்று தமிழ்ப் பாட்டி பாடியதும் இலக்கணத்தோடு இயைந்து இனிமை பயக்கின்றன.

ஆகவே இரண்டும் சரியே. இந்த விளக்கம் போதுமா? இன்னும் வேறு வேண்டுமா?

முயல்வுகள் என்பது சரியா?

முனைவர் பட்டம் பெற்ற ஒருவரின் நல்ல நூலில் இந்தச் சொல் காணப்படுகிறது. பார்த்த - படித்தவுடனே நம் மனத்தில் இது பிழை என்ற எண்ணம் உண்டாதல் இயற்கை. முயற்சிகள் என்றுதான் நாம் எழுதி வருகிறோம். இது புதிதாக இருக்கிறதே!

முயற்சி ஒரு தொழில் பெயர். பயிற்சி, தளர்ச்சி, வளர்ச்சி என்பன காண்க. மகிழ்ச்சி என்பதும் இதுபோன்ற ஒரு சொல்லே. இதன் பொருள் என்ன? மகிழ்வடைதல் என்பதுதானே? மகிழ்வடைதலில் உள்ள முதற்சொல் மகிழ்வு. அடைதல் வந்து சேர்ந்து மகிழ்வடைதல் என்றாகிறது. மகிழ்ச்சியடைதல் என்பதும், மகிழ்வடைதல் என்பதும் ஒரே பொருளைத்தான் தருகின்றன.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

மொழிப் பயிற்சி – 73 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

முருங்கை நமதே; தொடர் வண்டியும் சரியே!

அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் வந்துற்றது. வசந்தம் என்பது இளவேனிற் பருவத்துக்கு (காலத்துக்கு) உரிய பெயர். வசந்த காலத்தில் புதிய தளிர்கள், மலர்கள் செழித்து வளரும், தென்றல் காற்று வீசும், இனிமை மிகும். "அவர்கள் வாழ்க்கையில் செழிப்பும் மகிழ்ச்சியும் வந்து சேர்ந்தன' என்று சொல்லாமல் வசந்தம் வந்தது என்று சொன்னதால் - வசந்தம் எனும் காலத்தில் விளையும் வளத்துக்கு ஆகி வந்தது. இது காலவாகு பெயர்.

"மூவரும் தலா (தலைக்கு) ஐந்நூறு பரிசு பெற்றனர்' தலைக்கு மட்டும் பரிசு தர இயலுமா? தலை என்பது மனிதனின் (எவ்வுயிர்க்கும்) ஓருறுப்பு. இந்த உறுப்பின் (சினையின்) பெயர். இவ்வுறுப்பை உடைய முழுமனிதனுக்கும் (பொருளுக்கும்) ஆகி வந்ததால் இது சினையாகு பெயர்.

"மனத்தினில் கறுப்பு வைத்து' - சூரிய நிறத்தை உள்ளத்திலே வைத்துக் கொண்டு, இங்கே கறுப்பு எனும் பண்புப் பெயர் வஞ்சக நினைவுக்குப் பெயராகி வந்தது. இது குணவாகு பெயர்.

"எல்லாரும் பொங்கல் உண்டனர்' - பொங்கல் எனில் பொங்குதல். உலை பொங்கிற்றா? என வினவுவோம். பால் பொங்கியதா? என்போம். பொங்கல் - பொங்குதல் - இது ஒரு தொழில் (வேலை) பொங்குதலாகிய தொழில் ஆகிய உணவைப் பொங்கல் என்பது தொழிலாகு பெயர்.

பள்ளிப் பிள்ளைகளுக்காக மட்டும் இலக்கணம் எழுதப்படவில்லை. தமிழ் பேசுபவர், எழுதுபவர் எல்லாரும் அறிந்திருத்தல் நல்லது. இதனை ஓரளவு விளங்கிக் கொண்டாலும் அதனால் பயனுண்டு. தமிழின் அழகை, நுட்பத்தை உணர்ந்து மகிழ்க.

 குணில் தெரியுமா?

அணில் தெரியும்; குணிலா என்ன அது?

"உருள்கின்ற மணிவட்டைக் குணில் கொண்டு துரந்தது போல்' என்பது சிலப்பதிகாரத் தொடர். உருள்கின்ற சக்கரத்தை ஒரு குச்சி கொண்டு சுற்றினால் மேலும் விரைந்து உருளும் அல்லவா? அதுதான் இது.

கண்ணகிக்குச் சிலை வடிப்பதற்கு இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி வர வேண்டும் என்று நினைத்திருந்த சேரன் செங்குட்டுவனின் எண்ணத்தை உருள்கின்ற சக்கரம் என உருவகப்படுத்தியுள்ளார். வடபுல மன்னர் கனக விசயர் தமிழரசரின் வீரத்தை இகழ்ந்து பேசினர் என்னும் செய்தியைக் கேட்டது, உருள்கின்ற சக்கரத்தை ஒரு கோல் (குச்சி) கொண்டு சுழற்றியது போல் அவனது நினைவை இன்னும் வேகப்படுத்தியது. எதற்கு இந்தக் கதை?

குச்சி, கம்பு எனும் சொற்கள் நாமறிந்தவை. குணில் பழந்தமிழ்ச் சொல். சென்னையிலே கம்பு என்பதைக் கொம்பு என்று சொல்கிறார்கள். மரத்திலே கிளை, கொம்பு என்பவை உண்டு. மரக்கொம்பை உடைத்துத்தான் குச்சியாகப் பயன்படுத்துகிறோம். ஒட்டடைக் குச்சி; குச்சி பெரிதாக இருப்பின் கம்பு, ஒட்டடைக் கம்பு எனும் சொல்லும் உண்டு. கம்பு சுழற்றுதல் - சிலம்ப விளையாட்டு எனப்பட்டது. மரத்திலுள்ள கொம்பு வளைந்தும் நெளிந்தும் இருக்கலாம். ஆனால் கம்பு நேராக - ஒரே அளவினதாக இருத்தல் வேண்டும்.

பல் விளக்கும் குச்சி - வேப்பங்குச்சி இப்போது பார்க்க முடியாததாகிவிட்டது. தடித்துக் கனமாக நேராக இருப்பது கம்பு. (கம்பு என ஒரு தானியம் உண்டு; இது வேறு) சிறிதும், பெரிதுமாக வளைந்தும் நெளிந்தும் இருப்பது கொம்பு என்று கொள்ளுவோமா? கொடி படரக் கொழு கொம்பு வேண்டும் என்று படிக்கிறோம். அவன் என்ன பெரிய கொம்பனா? என்பதும் அவனுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? என்று கேட்பதும் மாட்டிற்குரிய கொம்பைக் குறித்து வந்தவையாகும். அவன் பெரிய முரடனா? எனும் பொருளில் வந்த சொல் வழக்கு அவை.

 முருங்கை நமதே; தொடர் வண்டியும் சரியே!

"முருங்கா' எனும் சிங்களச் சொல்லிலிருந்து "முருங்கைக்காய்' வந்ததாக ஆய்வறிஞர் வேலுப்பிள்ளையவர்கள், தமிழ் வரலாற்றிலக்கணம் எனும் நூலில் குறிப்பிட்ட செய்தி பற்றி எழுதியிருந்தோம். தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் முருங்கைக்காய் தமிழிலிருந்து சிங்களம் போயிருக்கலாம்; அது தமிழ்ச் சொல்லே என்பதற்குச் சங்க இலக்கியச் சான்றுகள் பலகாட்டித் தெளிவுற எழுதியிருந்தார்கள். உரமும், ஊட்டமும் தரும் முருங்கை நம்மதே என்பதில் மிக்க மகிழ்ச்சி.

இரண்டு பேருந்துகள் இணைத்து இயக்குவதை, இணைப்புப் பேருந்து எனலாம் என்ற அன்பர் கருத்து ஏற்புடையதே. மேலொன்று, கீழொன்று என இரண்டடுக்குப் பேருந்தும் ஓடுகிறதன்றோ? அதற்கு இரட்டைப் பேருந்து என்று சொல்லலாம். ஆதலின் இருப்புப் பாதையில் ஓடும், தொடர்ந்து பல பெட்டிகள் கொண்ட வண்டியைத் தொடர் வண்டி என்றே சொல்லிடுவோம். ஆய்வும் அதன் விளைவான தெளிவும் அனைவர்க்கும் கிட்டியமை நன்று.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

மொழிப் பயிற்சி – 71 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

சதய நட்சத்திரம் ஓர் ஆண்டில் பன்னிரண்டு. ஒரோ வழி பதின்மூன்று வருமே. இருபத்தேழு நட்சத்திரங்கள் (விண்மீன்கள்) சுழற்சிமுறையில் வருவதால் மாதா மாதம் சதயம் வருகிறதே!

என்ன சொல்ல வேண்டும்? ஆண்டுதோறும் "ஐப்பசி - சதய நட்சத்திரத்தன்று' என்று மாதத்தின் பெயரையும் சேர்த்துச் சொல்லியிருக்க வேண்டும். ஐப்பசித் திங்கள் சதய விண்மீன் நிலவும் நாளில் இராசராசச் சோழன் பிறந்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பத்தாம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து ஆட்சி செய்த மாமன்னன் இராசராசன்.

ஒரு கட்டுரையில் படித்தோம்: ""தீக்குச்சி எரிந்து கையைச் சுட்டு - கொப்புளம் வருமளவும் தன்னை மறந்திருக்கிறது தானே எழுத்தாளன்?'' இத்தொடரில் பிழையுள்ளதா? ஆம், உள்ளது.

மறந்திருப்பவன்தானே எழுத்தாளன் என்று இருந்தால் பிழையற்று அமையும். இத்தொடரைச் சிலர் வலிந்து பேசி சரிதானே என்பர். எப்படி? தன்னை மறந்திருக்கிறது எழுத்தாளன் தன்மை- அதை உடையவன் எழுத்தாளன் என்பதை அப்படி அழகுற எழுதியிருக்கிறார் என்பார்கள். இந்த முட்டுக்கால்கள் எல்லாம் நில்லா. பிழையைப் பிழை என ஏற்பதே அழகு.

எழுத்துக்களா? எழுத்துகளா?

கள் எனும் பன்மை விகுதி சேரும்போது புணர்ச்சி விதி பொருந்தாது என்று முன்னரே நாம் எழுதியிருந்தோம். அதனால் நாள்கள், வாழ்த்துகள் என இயல்பாக எழுதுதல் நன்று எனக் குறிப்பிட்டோம். ஆயினும் வாழ்த்துகள் என வல்லொற்று மிகுந்து ஒலிப்பினும் பிழையில்லை என்பதையும் குறிப்பிட்டோம். ஆனால் "இனிப்புக்கள் வேண்டா' (பொருள் திரிபு ஏற்படும் என்பதால்) என எழுதினோம்.

வாழ்த்துகள், எழுத்துகள் என எழுதுதல் பிழை என்று கருதுவார் உளர். அவர்களுக்காக ஒரு விளக்கம். திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதன்மையாக உடையது போல' என்று உரை எழுதுமிடத்து எழுத்துக்கள் என்றாண்டிருப்பது காண்க. அன்றியும் நன்னூல் விருத்தியுரைக்கு குறிப்புரை எழுதிய பெரும்புலவர் ச.தண்டபாணி தேசிகரும் எழுத்துக்கள் என்றே எழுதியுள்ளார். தொல்காப்பியத்துக்கு சுருக்கமான உரை எழுதியுள்ள மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களும் எழுத்துக்கள் என அவ்வுரையில் எழுதியுள்ளார். இவ்வாறு எழுத்துக்கள் என்று வல்லொற்று மிகுவதற்கு முன்னோர் சான்று உண்டு.

எழுத்துக்கள் என்பது சரியென்றால் வாழ்த்துக்கள் என்று எழுதுவதும் சரிதானே? எழுத்து, வாழ்த்து இரண்டும் வன் தொடர்க் குற்றுகரங்கள். அதனால் அன்பர்களே, "எமதுள்ளம் நிறைந்த நல்வாழ்த்துகள்' எனவும், நல்வாழ்த்துக்கள் எனவும் இருவகையானும் சொல்லலாம், எழுதலாம்.

உரையாசிரியர்களைச் சான்று காட்டியுள்ளீர்களே, மூல ஆசிரியர்கள் எப்படி எழுதியுள்ளார்கள்? எனும் ஐயம் எழும். "எழுத்தென படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப' (தொல்) கள் விகுதியே பயன்படுத்தாமல் அக்காலத்து எழுதினர். அகர முதல் எழுத்தெல்லாம் (திருக்குறள்), "உயிரும் உடம்புமாம் முப்பது முதலே' (நன்) இப்படியே மூலநூலார் யாரும் "கள்' விகுதிக்கு இடம் தரவில்லை.

"லளவேற் றுமையில் றடவும்' என்னும் நன்னூல் சூத்திரம் வழியாக லகரம், ளகரம் எனும் இரண்டு ஈறும் வல்லினம் வந்தால் வேற்றுமையில் முறையே றகரம், டகரம் என மாறுபடும் என்றறிவோம். அதனால்தான் நாள் + கள் = நாட்கள் என்று சொல்லும் வழக்கம் தோன்றியது. ஆயினும் இலக்கியச் சான்றுகள் "நாள்கள் செலத் தரியாது' என்பதுபோல் இயல்பாகவே உள்ளது. ளகரம், டகரம் ஆகவில்லை. காரணம் நாம் முன்னர் குறிப்பிட்டதேயாகும்; கள் விகுதி என்பது தனிச்சொல் அன்று.

மேற்கண்ட சூத்திரத்திற்கு உரை கண்டவர்களும் காட்டியுள்ள எடுத்துக் காட்டுகள்: கல் +குறிது = கற்குறிது

முள் + குறிது = முற்குறிது (குறிது - குறுகியது)

புல் + தரை = புற்றரை, முள் + செடி = முட்செடி என்பவற்றையும் நாம் காட்டலாம். (புல், தரை, முள், செடி - எல்லாம் தனித் தனிச் சொற்கள்)

கள் விகுதி சேரும்போதும் இடம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. பற்கள், சொற்கள் எனச் சொல்லுகிறோம். (பல்+கள், சொல்+கள்). புட்கள் (புள்+கள்) பறந்தன. (புள் - பறவை) பசும் புற்கள் முளைத்தன (புல்+கள்). ஆகவே கள் ஈறு சேரும்போது திரிதல் (மாறுபடுதல்) காண்கிறோம். ஏனிந்த முரண்பாடு?

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்