‏إظهار الرسائل ذات التسميات பிறதுறைத் தமிழியல். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات பிறதுறைத் தமிழியல். إظهار كافة الرسائل

இளங்கோவின் அறம் - முனைவர் ஆ. செல்லப்பா

மனித இனத்திற்கு உரிய தலைசிறந்த பண்புகளில் அறம் முக்கியமாக இடம் வகிக்கின்றது. அறம் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் ஒவ்வொருவராலும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. அறம் செய்வதில் எல்லை கிடையாது. அறம் செய்யும் போது முழு மனதுடனும், உடலாலும் மனத்தூய்மையுடனும் செய்ய வேண்டும். எந்தெந்த வகையில் எல்லாம் பிறர்க்கு அறம் செய்ய முடியுமோ அந்த வகையில் அறம் செய்ய வேண்டும். தமிழ்க்காப்பியங்கள் பொதுவாக அறம் செய்வதன் இன்றியமையாமையை வலியுறுத்துகின்றன. தமிழ் முதல் காப்பியமான சிலம்பில் இளங்கோ தமது அறச் சிந்தனைகளை வலியுறுத்துகின்றார்.

அறம் - விளக்கம்:-

அறம் என்னும் சொல் கையறம், தர்மம், நீர்மை, பெரியோருடைய இயல்பு என்னும் பொருள்களில் வழங்குகின்றது. அறக்கடவுளாகப் புத்தர் (அறம் பகர்ந்தோன்) விளங்குகிறார். அறு + அம் எனப் பகுத்து அறு என்பதற்கு வரையறைகள் அல்லது அறுதி என்ற பொருள்பட வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய கொள்கைகள் என்று விளக்கம் கூறுவர். அறம் என்ற சொல்லுக்குத் தீமை நீக்கம் என்றும் பொருள் கொள்ளலாம். வள்ளுவரின் கூற்றுப்படி, அறம் என்பது மனம் மாசின்றி அன்பின் அடிப்படையில் பகுத்துண்டு, தத்தமக்குரிய வாழ்வியல் கடமைகளை ஆற்றி உண்மை பேசி அருள் உள்ளத்தோடு ஒழுகுவதே ஆகும். மக்கள் இனத்தின் பழக்க வழக்கங்களையும், நடத்தைகளையும் பண்புகளையும் பொருளாகக் கொண்டு உருவாகிய அறவியல் கலையை மெய்ப்பொருள் ஆய்வுடன் (philosophical enquiry) தொடர்பு கொண்டு முதன் முதலில் ஆராய்ந்தவர் அறிஞர் அரிஸ்டாட்டில் ஆவார். உலகச்சிந்தனை வரலாற்றில் கி.மு. 700-500 வரையிலான காலப்பகுதி முக்கியத்துவம் பெற்றது. உலகின் கீழ்த் திசைகளிலும், மேற்பகுதியிலும் சிறந்த சிந்தனையாளர்கள் தோன்றினர். கி.மு. 580-500-இல் வாழ்ந்த பிதாகோரஸ் (Pythogoras) என்னும் அறிஞர் இத்தாலியில் குரோடோனா (Crotona) எனும் நகரில் அறவியல் சமயச் சங்கத்தினை நிறுவினார். இவர் தமது சீடர்களுக்கு பிரம்மச்சரியம், இன்பம் விழையாமை, மிதமான உணவு, துறவு, தியானம், பக்தி, சமூக அறங்கள், இந்தியாவிலிருந்து பரவியதாகக் கருதப்படும் உயிர்களின் மறுபிறவிக் கொள்கை, நல்வினை, தீவினைகளுக்கு ஈடாகச் சுவர்க்கம், நரகம் புகுதல் என்பனவற்றைப் போதித்து வந்தார். கி.மு. 488-400 கால கட்டத்தில் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் என்பவர் அறிவும் அறமும் ஒன்று என்ற கொள்கையைப் போதித்தார். நல்லன அறிதலே அறிவு. அறிந்து செயல்படுதலே அறம், அதனால் அறிவும் அறமும் ஒன்றே என்பது அவர்க் கருத்து, பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற மேதைகள் அறனெனப்படுவது மகிழ்வுதான் (Virtue is happiness) எனும் கொள்கையினை நிலை நிறுத்தினர். இந்நிலை தமிழகத்திலும் அறிஞர்களிடமும் இருந்ததை அறிய முடிகின்றது.

இளங்கோவின் புதிய அறம்:-

தமிழகத்தில் 1950களிலும் 60களிலும் தமிழ் மக்களிடையே தமிழ் உணர்வு மேலோங்கி இருந்ததைத் தமிழ் இலக்கியங்களின் வாயிலாக அறியலாம். சிலப்பதிகாரத்தில் தமிழ் மன்னர்கள் இகழ்ந்த கனகன், விசயன் என்ற வடநாட்டு மன்னர்களை வெற்றிக் கொண்டான் சேரன், செங்குட்டுவன். இமயத்தில் கல் எடுத்து அவர்களின் தலையில் ஏற்றிக் கண்ணகிக்குச் சிலை அமைத்தான். இதன் மூலம் தமிழகத்தில் ஆரியத்திற்கு எதிரான உணர்வுச் சூழல் இருந்ததைக் காண முடிகின்றது. அதன் காரணமாகவே சிலப்பதிகாரத்திற்குத் தமிழ்நாட்டில் செல்வாக்கு இருந்ததையும் அறிய முடிகின்றது. மூன்று தமிழ் மன்னர்களுக்கிடையே இருக்க வேண்டிய ஒற்றுமையை இளங்கோ தமது காப்பியத்தில் கூறியிருப்பது அறவழிப்பட்டதே ஆகும்.

தமிழ்ப்பெண் கண்ணகியின் கற்பு மேன்மையைக் காப்பியத்தில் முழுமையாகக் கூறியுள்ளார். அநீதி செய்த மன்னனுக்கு எதிராகச் செயல்பட்ட கண்ணகியின் ஆவேசம் காப்பியத்தின் முக்கிய அறமாக வலியுறுத்தப்படுகின்றது. தமிழகத்தில் சமணம், சைவம், ஆகிய சமயங்களை வேற்றுமை கருதாமல் இளங்கோ தமது காப்பியத்தில் கூறியுள்ளார். பழந்தமிழகத்தில் எண்ணற்ற கலைகள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன. மாதவி கணிகைக் குலத்தில் பிறந்தவள் என்றாலும் அவள் கற்புள்ளவளாகவும், கலைத்திறம் மிக்கவளகாவும் காப்பியத்தில் காட்டப்பட்டிருப்பது இளங்கோவின் புதிய அறமாகும். தமிழகத்தின் இயற்கை வளங்களும், இயற்கை வழிபாடுகளும் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன. அதோடு தமிழ் இசைப்பாடல்களும் அவற்றின் நுட்பங்களும் விரிவாக ஆசிரியரால் எடுத்தாளப்பட்டுள்ளன. அதே சமயத்தில் தமிழ் மக்களின் குறைகளையும் ஆசிரியர் விட்டுவைக்கவில்லை. அரசனின் ஆட்சிமுறை ஒழுங்காக இல்லாத நிலையையும் இளங்கோ கூறியுள்ளார்.

முடிவுரை:-

அறம் என்பதன் விளக்கமும் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அறம் பற்றி மேலைநாட்டறிஞர்களின் கருத்துக்களும், அறம் மேலை நாடுகளில் எவ்வாறு பரப்பப்பட்டுள்ளது என்பதும் ஆராயப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் தமிழ் மக்களிடையே தமிழ் உணர்வு செல்வாக்குடன் விளங்கியது. தமிழ்ப்பெண்ணுக்கு ஆதரவாக ஆரிய அரசர்களை வெற்றி பெற்ற திறத்தை ஆசிரியர் இளங்கோ தமது அறக்கொள்கையாகக் கொண்டுள்ளார். தமிழ்ப்பெண் கண்ணகியை உயர்வாகச் சித்தரிப்பது இளங்கோவின் புதிய அறமாகும். மன்னனுக்கு எதிராக ஒரு பெண் செயல்பட்டு நீதிக்காக உயர்த்தப்பட்ட நிலையை ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். தமிழகத்தில் இயற்கை வழிபாடு மேலோங்கி இருந்ததையும் மக்கள் அவற்றின்பால் அதிக ஈடுபாடு கொண்டு விளங்கியதையும் அறியமுடிகின்றது. மக்கள் கலைகளில் ஆர்வம் கொண்டிருந்த செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

நன்றி: பிறதுறைத் தமிழியல்

 

மணிமேகலையில் நிலையாமை - மு. கமலா

மணிமேகலைக் காப்பியம் புத்தமதக் கொள்கைகளைப் பரப்ப எழுந்த நூல். இந்நூலில் நிலையாமைக் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. அவற்றைச் சாத்தனார் பாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்தும் திறனை விளக்குவது இக்கட்டுரை:

நிலையாமை - விளக்கம்:

தொலகாப்பியர் காஞ்சி என்பதற்கு நிலையாமை என்று கூறுவதை,

''பாங்கருஞ் சிறப்பின் பல்லாற்றானும்

நில்லா உலகம் புல்லிய நெறித்தே (தொல்.புறத் 23)

என்ற நூற்பாவின் மூலம் உணரலாம்.

அறம், பொருள், இன்பம் ஆகிய பொருட்பகுதியானும் அவற்றுள் பகுதியாகிய உயிரும், யாக்கையும், செல்வமும், இளமையும் முதலியவற்றானும் நிலைப்பேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியை உடையது காஞ்சி என்று விளக்கம் தருகிறார் நச்சினார்க்கினியர்..

மதுரைக்காஞ்சி நிலையாமையை உணர்த்தும் திணைப்பெயராக வந்துள்ளது என்று தெளிவுறுத்துகிறார். நாச்சினார்க்கினியர்

வள்ளுவப் பெருந்தகை நிலையாமை என்னும் ஓர் அதிகாரமே படைத்திருக்கின்றார். அவ்வதிகாரத்தில்,

''நில்லாத வற்றை நிலையின் என்றுணரும்

புல்லறி வாண்மை கடை'' (குறள் 331)

என்று வாழ்க்கையில் இழிந்தநிலை சுட்டப்படுகின்றது.

மணிமேகலையில் நிலையாமைக் கருத்துக்கள்:

நிலையாமை ஒன்றே நிலையான உண்மை என்று கௌதம புத்தர் கூறுகிறார். ''தோற்றம் உண்டேல் மரணம் உண்டு'' என்கிறார் சுந்தரர். இக்கருத்துக்களுக்கெல்லாம் அரண் செய்யும் வகையில் மணிமேகலையில் சாத்தனார் நிலையாமை கருத்துக்களைப் பாத்திரங்கள் வழி விளக்குகின்றார்.

உதயகுமரன், மணிமேகலையின் திறம் குறித்து சுதமதியிடம் வினவுகின்றான். அப்போது அவள் யாக்கையின் நிலையாமையைக் கூறுகின்றாள்,

''யாக்கை நிலையாமை

உதயகுமரனிடம் சுதமதி,

வினையின் வந்தது வினைக்குவிளை வாயது

புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது

மூத்துவிளி வுடையது தீப்பிணி இருக்கை

பற்றின் பற்றிடங் குற்றங் கொள்கலம்

புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை

அவலக் கவலை கையா றழுங்கல்

தவலா உள்ளந் தன்பா லுடையது

மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து'' (மணி 4 113-130)

என்று கூறுகின்றாள்.

நாகர்களின் தலைவனுக்கு சாதுவன் கூறும் அறுவுரைகளிலும் நிலையாமைக் கருத்துக்கள் இடம்பெறுகின்றன. அவன் பின்வருமாறு,

''பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்

உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்

நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும்

அல்லது செய்வோர் அருநரகு அடைதலும்'' (மணி 16 86-89)

என்பன. இதே கருத்து திருக்குறளிலும் இடம்பெறுகிறது. அவை

''உறங்குவது போலுந் சாக்காடுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு'' (குறள் - 339)

என்ற குறள் சுட்டுகின்றது. எனவே இவ்வுலக வாழ்க்கை நிலையில்லாதது. அதனால் அறம் செய்ய வேண்டும் என்பது அறிஞர்களின் தெளிந்த கருத்தாகும்.

இளமை, யாக்கை, செல்வநிலையாமை:

விசாகை தன மாமன்மகள் தருமதத்தனுக்குக் கூறும் அறிவுரையில்,

''இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா

வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்

மிக்க அறமே விழுத்துணை யாவது''

என உணர்த்துகின்றாள். இதன் வழியாகத் தாமை செய்ய வலியுறுத்துவதையும் அறியலாம். உலகில் வாழும் மக்கள் அனைவரும் பட்டினியால் வருந்திச் சாகாமல் உணவளிக்க வேண்டும். இவ்வாறு உணவளிப்பவர்கள் தாம் உயிர் கொடுத்தவர் என்பதை,

''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'' (மணி 11 95-96)

எனும் இவ்வரிகள் கூறுகின்றன.

இளமை, யாக்கை நிலையாமை:

உதயகுமரன், மணிமேகலையிடம் இடங்கழிகாமம் அடங்காதவன் என்பதால், அவளிடம் தவம் மேற்கொண்டது எதற்கு என்று காரணம் வினவுகின்றான். அதற்கு அவள் பதிலிறுக்கும்போது,

''பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டிரங்கலும்

இறத்தலுமுடைய திடும்பைக் கொள்கலம்

மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து

மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்'' (மணி 18 136-139)

என்று கூறுகின்றாள். இறப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது எனப் பட்டினத்தார்.

''முடிசூடும் நாடாளும் மன்னரும் அவர் அடிதழிஇ வாழ்வாரும்

இறுதியில் வேறுபாடின்றி இறந்து பிடிசாம்பலாய்ப்போவது உறுதி'' (திருத்தில்லை. பா.எ.7)

என மொழிகின்றார்.

மனிதன், இளமை நிலைபேறுடையது என்று எண்ணுகின்றான். அவன் அறச்செயல்களைப் புரிவதற்கே இளமை என்று உணரவேண்டும். எனவே, மணிமேகலை, உதயகுரனிடம் ஒரு நரை மூதாட்டியைக் காட்டி, இளமையின் நிலையாமையை, என இருபத்தெட்டு அடிகளில் விளக்குகின்றான்.

''தணணநல் வண்ணந்திரிந்து வேறாகி

வெண்மணலாகி கூந்தல் காணாய்

பிறைநுதல் வண்ணங் காணாயோ நீ

நரைமையிற் றிரை தோற்றகையின் நாயது

விறல் விற் புருவம் இவையுங் காணாய்''

இறப்பது உறுதி:

இவ்வுலகில் பிறந்தவர்கள் எல்லோரும் இறப்பது உறுதி என்பதை,

''தவத்துறை மாக்கள், மிகப்பெருஞ்செல்வர்

ஈற்று இளம் பெண்டிர், ஆற்றாப் பாலகர்

முதியோர் என்னான் இளையோர் என்னான்''

இவர்கள் அனைவரையும், காலம் முடிவுற்றபின் கொடுந்தொழிலையுடைய எமன் கொன்று குவிக்கின்றான். இவ்வாறு எமனால் உயிர் குடிக்கப்பட்ட உடம்புகளை,

''அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்

கழிபெரும் செல்வக் கள் ஆட்டு அயர்ந்து

மிக்க நல்லறம் விரும்பாது வாழும்

மக்களின் சிறந்த மடவார் உண்டோ'' (மணி 6 97-107)

என வரும் அடிகள் எல்லோரும் இறப்பது உறுதி இறப்பைத் தடுக்க யாராலும் இயலாது என்ற உண்மையை உணர்த்துகின்றன.

துணையாவது அறம்:

காலம் கடத்தாமல் நல்லறங்களைச் செய்ய வேண்டும். ஏனெனில் உலக வாழ்வு நிலையற்றது. அதனால் அவரவர் முடிந்தவரையில் நல்லறம் செய்ய வேண்டும். அது சிறந்த துணையாகும் என்று சாதுவன், விசாகை, மணிமேகலை, சுதமதி கூற்றுக்கள் வழியாக ஆசிரியர் சுட்டுகின்றார்.

மணிமேகலைக் காப்பியம் காட்டும் அறநெறி:

புத்தமதக் கொள்கைகளிலே நால்வகை வாய்மையும், ஐவகைச் சீலமும் முதன்மையானவை. இவற்றை இக்காப்பியம்

''பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்

பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்

பற்றின் வருவது முன்னது பின்னது

அற்றோர் உறுவது அறிக''.

என்று சுட்டுகின்றது.

''கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்

உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை''

என ஐவகைச் சீலத்தையும் கூறுகின்றது. நான்கு வகை வாய்மைகளும், ஐந்து வகைச் சீலங்களும் எல்லா மதத்தவரும் ஏற்கும் அறமாகும். நல்வினைகளைப் பின்பற்றவும், தீவினைகளை விட்டொழிக்கவும் வலியுறுத்துகின்றது புத்தம்.

முடிவு:

மேற்சொல்லப்பட்ட நிலையாமைக் கருத்தின்வழி, உலகில் வாழும்வரை நல்லவைகளைக் கடைபிடித்து, அல்லவைகளை நீக்கி, அறநெறிகளைப் பின்பற்றினால் நல் உலகு அடைவது உறுதி, என்பதை மணிமேகலை வற்புறுத்துகிறது.

நன்றி: பிறதுறைத் தமிழியல்

 

சிலம்பில் சமய அறங்கள் - கோ. விஜெயம்

சிலப்பதிகாரத்தை சமுதாய நோக்கில் பார்க்கும் பொழுது சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஒன்றுபடுத்திக் கூறும் தேசியக் காப்பியமாகத் திகழ்கிறது. மேலும் சிலம்பு அனைத்துச் சமயங்களையும் தொட்டுச் செல்கிறது. ஆனால் மணிமேகலை பௌத்த சமயத்தை மட்டுமே வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது.

சமயம் என்பது மனிதனால் அரிதாக உணரக்கூடியதாகும். ஆனால் எளிதாகப் புலப்படக்கூடியது இதைத் தான்

''இயற்கைக்கு அப்பாற்பட்டு விளங்கும் ஒரு பேருண்மையை

நம்புவதுதான் சமயம் ஆகும்'' என்கிறது வாழ்வியற் களஞ்சியம்.

சிலப்பதிகார ஆசிரியர் சமயச் சார்புடையவர் என்றும் சமயச் சார்பு அற்றவர் என்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களாலும் பல்வேறு கருத்துக்களாலும் விமர்சிக்கப்படுகிறார். காப்பியத்தின் கதைப்போக்கு சமயச் சார்பைச் சார்ந்து நிற்காவிட்டாலும், அவரால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்துதான் நிற்கின்றனர். ஏனென்றால் அன்புக்கு அடுத்தபடியாக மனிதனை அமைதிப்படுத்தி அவனது உணர்வுகளைப் பண்படுத்தும் சிறந்த கருவியாகச் சமயம் பயன்படுகிறது.

இவ்வாறு மனிதனின் நாகரீகமான வளர்ச்சியில் பங்கெடுத்து அவனுடைய வாழ்க்கைப் போரில் இரண்டறக் கலந்து அவனுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைகின்ற சமயங்களைத் தொடாத இலக்கியவாதிகளே இல்லை எனக் கூறலாம்.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் தம்மைச் சார்பற்றவராகவே காட்சி செல்கிறார். அதே வேளையில் சமயச் சார்பு என்ற போர்வையில் அறிவுக்குப் பொருந்தாத செயல்களையும் கண்டிக்கிறார். தமது காப்பியத்தின் முடிவான கூற்றில் அடிகள் சமயச் சார்பாக கூறிய அறக்கருத்துக்கள்,

1. தெய்வம் தெளிமின்

2. தவநெறி மேற்கொள்ளுங்கள் ஆகிய இரண்டும் ஆகும்.

தெய்வம் தெளிமின்

''இறைவனை அடிப்படையாகக் கொண்டது சமயம். மனிதனை அடிப்படையாகக் —‘கண்டது அறம். இருப்பினும் இறைவனை அறிவியலில் ஒரு முற்கோளாகக் கொள்வது பயனுடையது என்று கூறலாம்'' என வாழ்வியற் களஞ்சியம் கூறுகிறது.

''சிலம்பில், சைவம், வைணவம், சமணம், புத்தம் என்ற அனைத்து மதங்களும் சொல்லப்பட்டாலும் புத்தமும், சமணமும் கடவுள் கொள்கையிலிருந்து சைவத்திற்கும், வைணவத்திற்கும் மாறாக இருக்கின்றன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.

சிலம்பில் குணவாயிற்கோட்டம் என்பதற்கு அருகன்கோயில் என்று அடியார்க்கு மதக்கொள்கைகள் சிலப்பதிகாரத்தில் எடுத்துக் கூறியிருத்தலாலும் இளங்கோவடிகளின் சமயம் சமணசமயம் என ஐயுற இடம் உண்டு''

என்று உ.வே.சாமிநாதையர் அவர்கள் கூறுவதாக டி.மகாலெட்சுமி தனது சிலப்பதிகார ஆய்வுகள் ஓர் ஒப்பாய்வு என்னும் நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் ''செங்குட்டுவன் சைவன்'' என்பதை இளங்கோவடிகளே கூறியுள்ளமையைச் சுட்டிச் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகளும் சைவரே என்று தோன்றுகிறது என்பார் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை.

இவ்வாறு இளங்கோவடிகளின் சமயத்தைப் பல்வேறு ஊகித்தறியப் பல்வேறு சான்றுகள் சிலம்பில் இருந்தாலும், சமயம் சார்பாக அவர் சொல்லிச் சென்ற அறக்கருத்துக்கள் கூர்ந்து நோக்கத்தக்கன.

''தெய்வம் தெளிமின்'' என்ற கருத்தின் மூலம் தெய்வம் இருக்கிறதா? எவ்வாறு இருக்கிறது? உலகத்தை இந்த உயிர்களை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற நோக்குடன் தெளிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருப்பாரோ எனத் தோன்றுகிறது.

சிலப்பதிகாரம் சமண சமயக்காப்பியம் எனக் கூறும் ஆராய்ச்சியாளர்கள் அதிகம். கவுந்தியடிகள் மூலம்,

''காமுறு தெய்வம் கண்டடிபணிய

நீ போ யாங்களும் நீள் நெறிப்படர்குதும்'' என்னும் வரிமூலம் வைணவக்கடவுளை வசைபாடுவதாக எடுத்துக்கொண்டால் தெய்வத்தைத் தெளிந்து கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறாரே தவிர தெய்வம் உண்டெனத் தெளிவு கொள்ளுங்கள் எனப் பொருள் கொள்வது தவறாகப்படுகிறது.

ஒரு மனிதனுடைய வாழ்வியற் போராட்டங்கள் அவன் முற்பிறவியில் செய்த கருமப் பயனைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. எனவே தான் தன்னை விட்டுப்பிரிந்து சென்ற கோவலனை மீட்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் கண்ணகி அமைதியாகவே இருந்துவிடுகிறாள். இங்குத் தம் தோழியின் துயர் தாங்காமல்

''சோமகுண்டம், சூரிய குண்டம், துறைமூழ்கிக்

காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு

தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்''

என்று கூறித் தேவந்தி கண்ணகிக்கு ஆறுதல் கூறிச் சோமகுண்ட, சூரிய குண்டங்களில் நீராடிக் காமவேள் கோட்டம் தொழ அழைக்கிறாள்.

ஆனால் கண்ணகி, ''பீடன்று'' என்று கூறி மறுத்து விடுகிறாள். அதன்பின் சோமகுண்டம், சூரிய குண்டங்களில் நீராடாமலேயே காமவேள் கோட்டம் தொழாமலேயே, கோவலன் திரும்பியும் வருகிறான். இதன்மூலம் ஒரு மனிதனுடைய ஒவ்வொரு செயலும் முற்பிறவியிலேயே முடிவு செய்யப்பட்ட அவனது கருமச் செயலாலேயே நடக்கின்றது என்ற சமண சமயத்துக் கருத்தை இங்கு வற்புறுத்திக் கூறுகிறார்.

சமண சமயம், கடவுள் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத சமயம். கடவுளின் பெயரால் நிகழ்த்தப்படுகின்ற உயிர்க் கொலைகளையும் புறப்பாலாகிய வேற்றுமைகளையும் அடிப்படையாகக் கொண்டு சமணமும், புத்தமும் கடவுள் கொள்கையை கடுமையாக எதிர்க்கின்றன.

இவ்வாறு சமண சமயக் கருத்துக்களையும், சைவ சமயக் கருத்துக்களையும் மாறி மாறி மிகுதியாகச் சொல்லிச் செல்வதால்

''இளங்கோவடிகள் சைவராகப்

பிறந்து சமணராக மாறியிருக்கலாம்''

என்று மு.சண்முகன் அவர்கள் கூறுவதாகச் சிலப்பதிகார ஆய்வுகள் ஓர் ஒப்பாய்வு என்னும் நூலில் டி.மகாலெட்சுமி குறிப்பிடுகிறார்.

சமண சமயக் கருத்துக்களைப் பரப்பக் கவுந்தியடிகளைப் படைத்ததைப் போல வைணவ சமயத்தின் சிறப்புக்களைச் சொல்வதற்கென்று மாங்கட்டு மறையோனையும் இடைக்குலப் பெண்களையும் காப்பியத்துள் கொண்டு வருகிறார்.

முல்லை நிலத் தெய்வமாக மட்டுமே தமிழர்க்கு அறிமுகமாயிருந்த திருமால் சிலம்பில் ஒரு மதத் தெய்வமாகவே காட்டப்படுகிறார்.

கோவலன், கண்ணகி இருவரும் மதுரை நோக்கிச் செல்லும் பொழுது நீர் அருந்தச் சென்ற கோவலனிடம் அக்கானகத்தில் உலவும் வானசாரிணி தெய்வம் வயந்தமாலையின் வடிவிலே தோன்றி, கோவலன் மாதவிமேல் உள்ள அன்பினால் இசைவான் என எண்ணி வயந்தமாலையின் உருவில் கோவலனை மயக்கும் பொருட்டு உருமாறித் தோற்றம் கண்டது. கோவலன் அவ்வனசாரிணியைச் செயலிழக்க வைக்கிறான்.

மாங்காட்டு மறையோன் திருமாலின் பெருமைகளைச் சிறப்பாகப் பேசுகிறான். சமண சமயச் சிறப்புக்களை எடுத்துக் கூற கவுந்தியைப் போன்றும், மாடலனைப் போன்றும், இங்கு மாங்காட்டு மறையோன் போன்ற மூன்று வழிகளைப் பற்றி எடுத்துரைக்கிறான்.

மேலும் அவ்வழிப் பயணத்தில் இருக்கின்ற புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் மூன்று தடாகத்தின் சிறப்புக்களையும் அதனால் கிடைக்கும் அருளையும் சைவ சமயத்து அறக்கருத்தாக அவன் மூலம் எடுத்துக் கூறுகிறான்.

இதே போன்று வேட்டுவ வரியில் தெய்வ மேறப் பெற்ற பெண்ணொருத்தி கொற்றவைக் கோலத்துடன்,

''இவளோ, கொங்கச் செல்வி, குடமலையாட்டி

தென்றமிழ்ப்பாவை செய்தவக்கொழுந்து

ஒருமா மணிஆய், உலகிற்கு ஓங்கிய

திருமாமணி''

என்று கூறிக் கண்ணகியைத் தெய்வ நிலைக்கு உயர்த்துகிறாள்.

மற்றொரு நிகழ்ச்சியாக மதுரை மாநகரில் அழற்படுகாதையில் கண்ணகிக்கு முன்னால் மதுராபதித் தெய்வம் தோன்றி நான் மதுரையின் காவல் தெய்வம் என்று கூறிக் கண்ணகிக்கு முன்னால் வந்து நின்று மதுரையைப் பற்றிய செய்தியையும் பாண்டிய மன்னர்களின் பெருமையையும் எடுத்துக் கூறி கண்ணகி கோவலனுடைய முன்பிறப்புச் செய்தியையும் விளக்குகிறது. மேலும் கண்ணகியின் சினத்தைத் தணித்து மதுரையை எரிக்கும் அனலை அணைக்கக் கேட்கிறது. இங்கு மதுராபதித் தெய்வம் மதுரையின் காவல் தெய்வம், கண்ணகியைக் கேட்காமல் நெருப்பை அணைத்திருக்க முடியும்.

ஆய்ச்சியர் குரவையில் திருமாலைப்பற்றிய சிறப்புக்கள் மிகுதியாக இடம் பெறுகின்றன. திருமால் உலகளந்த வரலாறு, கடல் கடைந்த வரலாறு, பிறப்பு வளர்ப்பு வரலாறு, கம்சனை வென்ற நிலை, சேர அரசனை அழித்த வரலாறு, அர்ச்சுனனுக்கு உதவ கதிர் மறைத்த வரலாறு, பஞ்சபாண்டவர்க்குத் தூது சென்ற வரலாறு போன்ற பல்வேறு வரலாறுகள் காட்டப்படுகின்றன.

முருகன் சூரனாகிய மாமரம் பிளந்தமை, அவுணரை அழித்தமை, சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்டிரிடம் பால் பெற்று உண்டமை போன்ற முருகனைப் பற்றிய பல்வேறு செய்திகள் குன்றக் குரவையிலும், காட்சிக் காதையிலும் அதிகமாக இடம் பெறுகின்றன.

சிலம்பில் செஞ்சடைக்கடவுளான சிவபெருமானும் செஞ்சடை வானவன், பிறவாயாக்கைப் பெரியோன், நிலவுக்கதிர் முடித்த நீலிருஞ்சென்னி, உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் என்றெல்லாம் குறிக்கப்பட்டு அவன் ஆடுகின்ற கொடுகொட்டி, பாண்டரங்கள் ஆகிய கூத்து வகைகளும், மதியினைப் சூடியமை நஞ்சுண்டகண்டம் கருத்தமை, சூலாயிரம் ஏந்தியமை போன்ற தோற்றப் பொலிவுகளும் சிவபெருமானைப் பற்றிய குறிப்புகளாகச் சிலம்பில் காணப்படுகின்றன.

இயற்கை வழிபாடு, பத்தினி வழிபாடு, திருமால் வழிபாடு, முருக வழிபாடு, இந்திர வழிபாடு, சிவபெருமான் வழிபாடு, அருகன் வழிபாடு, புத்த தேவன் வழிபாடு, கொற்றவை வழிபாடு, எனப் பல்வேறு சமயக்கடவுள்களையும் குறிப்பிடுகின்றது.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் எந்தச் சமயத்தையும் சார்ந்து நிற்கவில்லை என்றாலும் எல்லாச் சமயத்தையும் கூறித்தாம் வற்புறுத்த நினைக்கின்ற அனைத்து அறக் கருத்துக்களையும் அச்சமயங்களின் போக்கிலேயே நின்று மக்களுக்கு விளக்கிக் கூறுகிறார். ஏனென்றால் மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு சமயங்களுக்கு மிகுதியாகவே இருக்கிறது.

எனவே தான் அடிகள் மக்களுக்குத் தாம் கூறவந்த அறக்கருத்துக்களைச் சமயக் கருத்துக்களின் மீது ஏற்றிச் சொல்கிறார்.

தவநெறிமேற்கொள்ளுங்கள்:

சிலப்பதிகாரத்தில் அணைத்துப் பாத்திரங்களுமே தவப்பெரியோர்களால் தான் வழி நடத்திச் செல்லப்படுகின்றன. புகார் நகரை விடுத்து இழந்த பொருளை மீட்கும் நோக்கோடு மதுரை நோக்கிச் செல்லும் கோவலனும், கண்ணகியும் கவுந்தியடிகள் என்னும் சமண சமயத்துத் தவப் பெரியோர்களால்தான் வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள்.

வைணவக் கருத்துக்களை மிகுதியாகப் பேசுகின்ற தவப் பெரியோனாகிய மாங்காட்டு மறையோன் இடம் பெறுகிறான். வஞ்சிக்காண்டம் முழுவதிலும் சேரன் செங்குட்டுவனும், மதுரைக்காண்டம் முழுவதிலும் மாடல மறையோனும் மிகச் சிறந்த சைவ பக்தர்களாக வருகின்றனர்.

சிலப்பதிகாரத்தில் சைவ சமயத்தைப் பற்றிப் பேச ஒரு மாலமறையோன் வைணவ சமயத்தைப் பற்றிப் பேச ஒரு மாங்காட்டு மறையோன். வைணவ சமயத்தைப் பற்றிப் பேச ஒரு கவுந்தியடிகள், பத்தினிவழிபாடு பற்றிப் பேச ஒரு சேரன் செங்குட்டுவன் எனச் சமயக் கோட்பாடுகளை விளக்கிக் கூறும் சார்பாளர்கள் காப்பியம் முழுவதும் பரவிக் கிடக்கின்றனர். பல்வேறு சமயக் கருத்துக்களையும் அங்கீகரித்து நிற்கும் சமயப் பெருந்தன்மையைச் சிலப்பதிகாரம் முன் நிறுத்தியிருக்கிறது எனலாம்.

நன்றி: பிறதுறைத் தமிழியல்

 

பழமொழிகளும் மொழிபெயர்ப்பு சிக்கல்களும் - கு. சிதம்பரம், ரம்யாராஜு

தாய்மொழியாக பேசப்படுகின்ற மக்களின் பண்பாட்டையும் அடையாளத்தையும் தன்னகத்தே கொண்டது மொழி. ஒவ்வொரு மொழியின் பின்னனியில் உள்ள மக்களின் பண்பாடுகள் ஒரே மாதிரி அமைவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஒரே மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் என்றால் ஓரளவு பண்பாட்டு ஒற்றுமை இருக்க வாய்ப்புகள் உண்டு. வெவ்வேறு மொழிக் குடும்பங்களின் பின்னனியில் உள்ள பண்பாடுகள் என்றால் அவைகளுக்கிடையே உள்ள பண்பாட்டு வேறுபாடுகளின் இடைவெளிகள் கூடும். இதனால் ஒரு சமூகத்தில் நிலவி வரும் ஒரு சில பண்பாடுகள் மற்றொரு மொழி சமூகத்தில் இல்லாமல் இருக்கலாம். இத்தகைய மாறுபட்டப் பண்பாட்டுப் பின்புலத்தில் இருந்து வரும் இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் நிறைந்ததாகவும், ஒற்றுமைகள் இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் குறைவாகவும் இருக்கும். மேலும், ஒவ்வொரு மொழியிலும் பண்பாட்டு தொடர்களாக பழமொழிகளும் (Proverbs), மரபுத்தொடர்களும் (Idioms and phrases) உள்ளன. இத்தகைய பண்பாட்டு தொடர்கள் மொழி பெயர்க்கப்படும்போது எதிர்கொள்கின்ற சிக்கல்களையும், முடிந்தவரை அதற்கான தீர்வுகளையும் விளக்க இக்கட்டுரை முனைகிறது.

பழமொழி:

பழமொழி என்பது மக்களின் அனுபவமொழி, இது மக்களின் அனுபவத்தின் அடிப்படையில் சூழலுக்கேற்ப பயன்படுத்தக்கூடிய ஒன்று. மூதுரை, முதுமொழி என வேறு பல பெயர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மொழிக்குள்ளே அனுபவ மொழியாக இருப்பது இதன் சிறப்பாகும். டச்சு நாட்டு பழமொழி ஒன்று ''அனுபவம் பெற்ற குழந்தைகளே பழமொழிகள்'' (Proverbs are the daughters of daily experience) என்று கூறுகிறது. ''மக்கள் நீண்ட காலமாக வழங்கி வருவதும், பேச்சில் ஆதாரமாகவோ உதாரணமாகவோ காட்டப்படுவதுமான கருத்துத்தொடர்'' என்று கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வரையறுக்கின்றது. உலகோர் பெற்றுவரும் அனுபவ உண்மைகளே முதுமொழிகளாகின்றன.

இதனை சங்க காலப் புலவராகிய சொல்லூர் கோசிகன் கண்ணனார் (அகம் 66-இல்)

பல்லோர் கூறிய பழமொழியெல்லாம்

வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி'' (அகம் 66) என்று கூறுகிறார்.

பழமொழியும் பயன்பாட்டு சூழலும்:

பழமொழி என்பது பயன்படுத்தக்கூடிய சமூகத்தின் கருத்துக்களையும் பண்பாட்டு கூறுகளையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. எனவே சூழலுக்கேற்றார்போல பயன்படுத்தப்படும்போது மட்டுமே தெளிவான பொருள்தரும் சூழலுக்கேற்ப பயன்படுத்தாவிட்டால் பொருள் தராது. ''காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்'' Make hay while sun shines

என்ற இந்த பழமொழியை ஒருவர் பெற்ற அனுபவத்தின் மூலமாக சூழலுக்கேற்ப சமூகத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய பழமொழி ஒரு காரியத்தை செய்கின்ற போது அதற்கேற்ற தருணத்தில் செய்யப்பட வேண்டும். அதற்கேற்ற சூழலிலும் தருணத்திலும் செய்யாவிட்டால் அதனால் பயன் ஏதும் இராது. அக்காரியம் கெட்டுவிடும் என்பதை உணர்த்துகிறது. எனவே இதை அதற்கேற்ற சூழலில் பயன்படுத்த வேண்டும் மேலும் நேரடியாக ஒருவர் கதிர் அடித்தலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது காற்றடிக்கும் போதே நெல்மணிகளை தூற்றிக் கொள்ளலாம் என்று சொன்னால், அது நேரடி வாக்கியமாகும். இத்தகைய பயன்பாட்டுச் சூழலில் பழமொழியாகாது.

பழமொழிகளை இனம் கண்டறிதல்:

பழமொழிகளை இனம் கண்டறிவதில் பெரும்பாலும் சிக்கல்கள் நிலவி வருகின்றன. பழமொழிகளையும், பொன்மொழிகளையும் ஒன்றென நினைக்கும் போக்கு பெரும்பாலான மொழிபெயர்பாளர்களிடமும், பழமொழிகள் தொகுப்பாளர்களிடமும் நிலவி வருகின்றன. இதற்கான முக்கியகாரணம் வேற்றுமைகளையும் ஒற்றுமைகளையும் பிரித்தரிய முடியாததே ஆகும். மேலும் பழமொழிகளை எப்படி எந்த கூறுகளின் அடிப்படையில் இனங்காண்பது என்ற தெளிவான வரையறைகள் இல்லாததே இதற்கு காரணம்.

பழமொழிகளைக் கீழ்க்கண்ட பண்புகளின் அடிப்படையில் இனங்காணலாம் என்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் பழமொழிகளையும், மரபுத்தொடர்களையும் மொழிபெயர்த்தல் எனும் செயலரங்கில் (Workshop) மொழியியல் அறிஞர்கள் முனைவர் வே.தயாளன் மற்றும் எல்.இராமமூர்த்தி ஆகியோர் வலியுறுத்தினர்.

1. பழமொழிகளில் நேரடிப்பொருண்மை Denotative meaning) ஒன்றாகவும், சமூகப் பொருண்மை (Social meaning) வேறாகவும் அமையப் பெற்றிருக்கும்.

2. சூழலுக்கேற்ப (Context) பயன்படுத்தினால் மட்டுமே தெளிவான பொருண்மையை பெற முடியும், சூழலுக்கேற்றவாறு பயன்படுத்தாத போது பொருள் விளக்கம் பெற இயலாது.

3. பழமொழிகள் பண்பாட்டுக் கூறுகளையும் சமூகக் கருத்துக்களையும் தன்னுள்ளே கொண்டவையாகவும், பொதுப்படையானதாகவும் இருக்கும்.

4. பழமொழிகளின் புதைஅமைப்பு (Deep structure) ஒன்றாகவும் புற அமைப்பு (Surface structure) ஒன்றாகவும் இருக்கும்.

பழமொழியும் மொழிபெயர்பும்:

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் சொல்லப்படும் செய்திகளை மற்றொரு மொழிக்கு மாற்றியமைக்கும் அல்லது மொழியில் எடுத்துச் செல்லும் முறையாகும். பொதுவாக சொன்னால் மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் உள்ள கருத்துக்களை மற்றொரு மொழியில் மாற்றும்பொழுது மூலமொழியில் காணப்படும் பொருள், சுவை, தன்மை போன்றவை சிறிதும் மாறாமலும், பெயர்க்கப்படும் மொழியின் அமைப்பு மற்றும் தன்மைக்கேற்பவும் அமைக்கப்படும் முறையாகும். (சி. சிவசண்முகம் மற்றும் வே.தயாளன், 1989).

மொழி தன்னுள்ளில் கொண்டுள்ள அனைத்து வகையான கருத்துகளையும் செய்திகளையும் மொழிப்பெயர்க்க ஒரே மாதிரியான மொழி பெயர்ப்பு முறையை கையாண்டால் மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையுமா? எனவே, அறிவியல் கருத்துகளை மொழி பெயர்க்கப்படும்போது அதற்கேற்ற முறையையும், இலக்கியங்களை மொழிபெயர்க்கப்படும்போது அதற்கேற்ற முறையையும் கையாள வேண்டும். அதேபோல பழமொழிகளை மொழிப்பெயர்க்கப்படும்போது அது தன்னகத்தே கொண்டுள்ள பண்பாட்டுக் கூறுகளையும், சமூக கருத்துக்களையும் ஒரு சேர மொழிபெயர்த்தலே சிறப்பானதாகும்.

1. நாய்விற்ற காசு குலைக்குமோ? 2. கிழவன் கொடுத்த காசுக்கு நரையுண்டா? 3. பூ விற்ற காசு மணக்குமா? 4. கருவாடு விற்ற காசு நாறுமா? 5. கம்பளி விற்ற காசுக்கு மயிர் முளைக்குமா? 6. வேப்பெண்ணை விற்ற காசு கசக்குமா? 7. கரி விற்ற காசு கருப்பா இருக்குமா?

இந்த பழமொழிகள் அத்தனையும் ஒரே பொருண்மை (Meaning) உடையதாக உள்ளது. ஆனால் பயன்படுத்தப்படும் சூழல் மட்டுமே மாற்றம் பெறக்கூடியதாக உள்ளது. (மொழியியல் அறிஞர் செ. சண்முகம் நிகழ்த்திய உரையில் இருந்து) எனவே இந்த பழமொழிகள் அனைத்திலும் வெளிப்படுத்தக்கூடிய சமூகப் பொருண்மை (Social meaning) இவ்வாறு அமைகிறது. அதாவது, ஈட்டக்கூடிய பணம் அது ஈட்டும் வழிகளுக்கேற்ப மாற்றமடையாது என்பதைக் காட்டுகிறது. ஒரே பொருண்மை உடைய பழமொழிகளை மொழிபெயர்ப்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மொழி பெயர்த்துள்ளனர். மேலும் கொங்கு நாட்டு பழமொழிகள் என்ற நூலில் இரண்டு விதமான மொழி பெயர்ப்புகளை மேலே கொடுக்கப்பட்டுள்ள 1,7 என்ற இரண்டிற்கும் இரண்டு விதமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

* Value of money will not change by the manner in which it was obtained

* Monetary qualities will not change with sale product

இப்படி ஒரு சமூக பொருண்மை உள்ள பழமொழிகளை வெவ்வேறு விதமாக மொழி பெயர்க்கப்படும்போது, அது வேறு கலாச்சார பின்னனியில் உள்ள மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தத் தவறிவிடும். எனவே ஒரே பொருண்மையுள்ள பழமொழிகளை ஒரே தலைப்பின் கீழ் கொண்டு வந்து அதை மொழிபெயர்ப்பது கற்றுக் கொள்வோர்களுக்கும், பயன்படுத்துவோர்களுக்கும் தெளிவை ஏற்படுத்தும்.

பழமொழியும் பின்புலமும்:

ஒவ்வொரு பழமொழியும் சமூகம் சார்ந்த பின்புலத்தைக் கொண்டதாக உள்ளது. எனவே ஒரு பழமொழியை மொழிபெயர்க்கப்படும்போது அதற்கான சமூகப் பின்புல கதைகளையும் கண்டறிவது சிறப்பானதாக அமையும் ''நாயானாலும் தாய் தாய்தான்'' என்ற இந்த பழமொழியின் பின்புலம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.

கதைபின்புலம்:

ஒரு ஊர்ல ஒரு நாய் இருந்ததாம். அந்த நாய்க்கு ரொம்ப அழகான ரெண்டு பெண் குழந்தைகள் பிறந்ததாம். அந்த ரெண்டு பெண் குழந்தைகளையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்த்ததாம். பிறகு அதோட ரெண்டு பெண்களையும் நல்ல வசதி வாய்ப்பு படைத்த வரன்களைத் தேடி மணமுடித்ததாம். திருமணம் முடித்து ஒரு வருடம் கழித்து சின்னமக வீட்டுக்கு போனதாம். வீட்டுக்கு போன உடனே ஏண்டி நாயை வீட்டுக்கு உள்ளே வாரன்னு சொல்லி அடிச்சதாம். அடியை வாங்கிட்டு ரத்தம் சொட்ட சொட்ட அதோட பெரிய பொண்ணு வீட்டுக்கு போனதும், உடனே அம்மா என்னம்மா ஆச்சி என்று அழுது கொண்டே உள்ளார கூட்டிட்டு போய் மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்தாலாம். மாத்திரையெல்லாம் ஒன்னும் வேணாம் நான் இன்னும் இரண்டு மூணு நாள்ல செத்து போயிடுவேன், என் தலமேல உன் தங்கச்சி பலமா அடிச்சிட்டா நானு செத்துட்டா என்னை ஒரு சாக்குபயில போட்டுக் கட்டி நடுவீட்டுக்கு நேர்ல உள்ள துளத்துல கட்டிரு. கட்டிட்டு மூணுமாசம் கழிச்சி மறுபடியும் தொறந்து பாருன்னு சொல்லிட்டு செத்துப்போச்சாம்...... அப்புறம் ........

மூணுமாசம் கழிச்சி, தங்கச்சி அம்மா மூணுமாசமா காணமேன்னு தேடிட்டு அக்கா வீட்டுக்கு வந்து அக்காள கேட்டாளா. கேட்டதும் ஓ.....ன்னு அழுதுட்டே அம்மாவே இப்படி அடிச்சே கொண்ணுட்டேடி, என்னாத்தா நாயா இருந்தாலும் அவ தாய் இல்லியாடின்னு சொல்லி நடந்ததெல்லாம் சொல்லி சாக்கே பிரிச்சு காட்டினாளா, சாக்கு நெரையா தங்க காசு இருந்ததா. அப்பத்தா, சின்னபுள்ள ''நாயா இருந்தாலும் தாய் தாய்தான்ணு'' தாயின் பெருமையை உணர்ந்து ரெண்டுபேரும் சேர்ந்து அழுதாங்களா அப்புறம் அந்த தங்ககாசை எல்லாம் ஆளுக்கு பாதியா எடுத்துக் கொண்டார்கள்.

தீர்வுகள்:

பழமொழிகள், இனம் கண்டறிந்து அவைகள் சமூக கருத்தோடு பண்பாட்டுப் பின்புலத்தையும் கொண்டுள்ளதா அல்லது சமூக கருத்துகளை மட்டும் கொண்டுள்ளதா என்பதை மொழிப்பெயர்க்கப்படும் முன் கண்டறியப்பட வேண்டும். மொழிபெயர்ப்பு மொழியில் இணையான பழமொழி உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும். இணையான ஒத்த பண்பாட்டுப் பின்புலம் உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும். இணையான பழமொழிகள் இருக்கும் தருவாயில் மூலமொழியில் உள்ள பழமொழிகளை பெருமொழியில் அப்படியே பொருத்தி விட வேண்டும். மொழி பெயர்க்கப்படும்போது, பழமொழிகள் கொண்டுள்ள பண்பாட்டு கூறுகளையும், கருத்தையும் மாறாமல் பெறுமொழிக்குக் கொண்டு செல்ல வேண்டும். எத்தகைய சூழலில் பழமொழிகள் பயன்படுத்தப்படுகினறன என்பதையும் கண்டறிந்து மொழி பெயர்த்தலே சிறப்பானதாக அமையும்.

மேற்கூறிய தீர்வுகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு இன்னும் சில கூறுகளையும், பண்புகளையும் கண்டறிந்து காலத்திற்கும், நடைமுறைக்கும் ஏற்றாற்போல பழமொழிகளை மொழிபெயர்த்து தமிழ்மொழி தன்னகத்தே கொண்டுள்ள தமிழ் மக்களின் பண்பாட்டை மேன்மேலும் பரவலாக்கம் செய்வது சிறப்பாகும்.

நன்றி: பிறதுறைத் தமிழியல்.

 

கண்ணகி - க. இரவி

''கண்ணால் நகை செய்வாள்'' என்று

காட்டுவதற்காகத்தான் -

கண்ணகி என்று பெயரிட்டார்களாம்

கண்ணகி என்று பெயரிட்டதால் தானா

அந்தக் கண்கள் -

அழுது கொண்டே இருந்தன''?

கண்ணகி தன் கணவனுடன் இருந்த நாட்கள் மிகக் குறைவு, அவனைப் பிரிந்து இருந்த நாட்களே அதிகம், அதனால்தான் அவள் அழுது கொண்டே இருந்தாள். தான் அழுவதைக் தன் கணவனுக்குக் கூடக் காட்டாத என்று மறைத்து அழுது கொண்டான். தன்னை அமைதிப்படுத்திக் கொண்டாள், கண்ணகி என்ற பெயரிட்டதனால், அவன்,

''கைநீட்டி முதலில் கழற்றிக் கொண்டது

கண்ணகி மங்கையின் கண்நகையை அல்லவா!''

கோவலன் கண்ணகியை விட்டுப்பிரிந்து செல்லும் போது கண்ணகியின் கண்ணகையும் கழற்றிக் கொண்டு சென்றான். சென்றவன் திரும்பி வந்தான். ''இதுவரை நீ சோழ நாட்டில் இருந்து தனிமையை அனுபவித்தாய் மதுரை சென்று மாங்கலியத்தை இழந்து ஆற்றாத் துன்பம் அனுபவிப்பாய் என்றல்லவா'' ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டிற்று.

தனிமனை (யாள்) வாழ்க்கை : திருமணம் முடிந்த அன்று கோவலன் கண்ணகியை வருணிக்கின்றான்.

''மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!

காசுஅறு விரையே! கரும்பே தேனே''

என்று வருணித்துக் சில ஆண்டுகள் மட்டும் உடனிருந்த அவன் மாதவியைக் கண்டு அவளுடன் சென்றுவிட்டான். மேடையில் நடனமாடிய கால்களுடன் சென்று அவன் கண்ணகியின் கால்களை இல்லத்திற்குள்ளே உலா வர விட்டு விட்டான். திருமணம் முடிந்து தனி வாழ்க்கை மரபுப்படி வைத்தார்கள். தனி வாழ்க்கை என்று இருவரையும் தனித்தனியே வாழ வைத்து விட்டனர். கோவலன் ஒரு பக்கமும், கண்ணகி ஒரு பக்கமும் பெரியவர்கள் வைத்தது தனிமனை வாழ்க்கை, ஆனால் இங்கு நடந்தது தனி மனையாள் வாழ்க்கை.

கோவலன், கண்ணகியை விட்டு நடனம் ஆடிய மாதவியுடன் சென்று விட்டான். கோவலன் சென்றது அவள் கலையை ரசித்தே என்றாலும் பின்பு அவளுக்கே குழந்தை பெறும் பாக்கியத்தைத் தருகிறான். இதில் மாதவி மீது எந்தக் குற்றமும் இல்லை. கோவலன் கலையின் மீது கொண்ட அளவுக்கு அதிகமான பற்றே காரணம். பிரிந்து சென்றவன் அவளையும் தவிக்கவிட்டு அவளுடன் கருத்து மாற்றம் கொண்டு வந்தான். வந்தவன் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் வந்தானோ என்று எண்ணிக் கால் நகையை கழற்றிக் கொடுக்கிறாள் கண்ணகி. அப்போது இதை விற்று வாழ வழி தேட வேண்டும் என்று, அதுவும் மதுரையில் ஊழ்வினை இங்குதான் தூண்டுகிறது. மாதவியுடன் கொண்ட கூட்டுறவு உடைகிறது பார்த்தால் பிறர் பழிப்பாரே என்று எண்ணி இரவோடு இரவாக மதுரைக்குப் புறப்படுகிறான்.

கோவலன் வீட்டிற்குத் திரும்பி வருகிறான் - திருந்தி வருகிறான், இங்கே கண்ணகியின் பெண்மை, கோவலன் மீது கொண்ட காதல் கணவனை மதிக்கும் பண்பு காட்டப்படுகின்றது. கணவன் என்னுடன் மதுரை புறப்படு என்று சொன்னவுடன் மறுப்பு ஏதும் கூறாமல் உடனே எழுந்து புறப்பட்டாள். கண்ணகி காட்டு வழிப் பாதையாக ஊர் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக மதுரை நோக்கிப் புறப்படுகின்றாள். இடையில் கவுந்தியடிகளைச் சந்திக்கின்றனர். அவரும் மதுரைக்குச் செல்வதாகச் சொன்னதும் கண்ணகிக்குத் துணை என்று எண்ணிக் கோவலன் மகிழ்கிறான். மதுரை வந்து சேர்ந்ததும் மாதரியிடத்தில் அடைக்கலமாகின்றனர். அங்கே கோவலனும் கண்ணகியும் இருக்கின்றனர்.

''இதுவரை உன்னைத் தனியாகத் தவிக்க விட்டுச் சென்று விட்டேன்'' என்று கோவலன் பேசுகிறான். தன் தவற்றை எண்ணி வருந்துகிறான். அப்போது கண்ணகி, ''கணவன் இல்லாமையால் அறவோர்க்கு அளித்தலும் அந்தனர் ஓம்பலம் விருந்தினர் உபசரித்தலும் இல்லாமல் இருந்தேன்'' என்கிறாள். மனம் விட்டு பேசுகின்றனர். கண்ணகி மூலம் இடித்துரைப்பதன் வாயிலாக இளங்கோவடிகள் கோவலன் மீது கொண்ட கோபத்தை இங்குதான் காட்டுகிறார். இறுதியில் கண்ணகியின் காற்சிலம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு செல்கிறான். கோவலன் முதலில் கழற்றியது கண் நகை, இறுதியில் கழற்றியது கால் நகையை, கண் முதலாகக் கதையை ஆரம்பித்த கோவலன் நிகழ்வைக் கண்ணகியின் காற்சிலம்பால் முடிக்கிறார் இளங்கோவடிகள்.

கோவலன் நகையை வாங்கிக் கொண்டு சென்றான். அங்கே பொற்கொல்லன் ''தான் செய்த தவற்றை யார் தலையில் கட்டுவது'' என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறான். இவன் ஊழ்வினை உந்துதலால் அவனிடம் சென்று சேர்கிறான். பொற்கொல்லன் அரசவை சென்று திரும்புகிறான். கோவலனைத் கொல்வதற்கு ஆட்களோடு வந்த வீரர்களில் ஒருவன், ''பார்த்தால் பழிபாவம் அறியாத இவனா களவு செய்தான்'' என்று கேட்க, கீழ்மகன் ஒருவன் கோவலனைக் கொன்று விடுகிறான். யானையையே அடக்கிய ஒருவன், ஒரு கீழ்மகனால் கொலை செய்யப்படுகிறான்.

கணவன் வருகைக்குக் காத்திருந்த கண்ணகி பல ஆண்டுகள் கழித்துப் பெற்ற இன்பமும் பலனின்றிப் பரிதவித்து நிற்கிறாள். கோவலன் கள்வன் என்ற கொலையுண்டான் என்று கேட்டதும் கலங்குகினாள். தன் கணவன் கள்வன் அல்ல என்பதை நிரூபிக்க அரண்மனை நோக்கி நடக்கிறாள். தன் எஞ்சிய மற்றொரு சிலம்பைக் கையில் கொண்டு தெய்வமே பயம் கொள்ளுமாறு வீதியில் நடக்கிறாள். இதுவரை தன் கணவன், மாமன், மாமியார், கவுந்தி, மாதவி ஆகிய யாருடனும் அதிகம் பேசாத கண்ணகி இங்கு அதிகம் பேசுகிறாள். வாயிற் காப்பானை நோக்கி,

''வாயிலோயே வாயிலோயே

அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து

இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!''

என்று பேசுகிறாள். மேலும் கணவனை இழந்தாள் கடையகத்தாள், என்று அறிவிக்கும்படி கூறுகிறாள். அமைதியின் வடிவமாக இருந்த கண்ணகியின் கோபத்தை வாயிற் காப்பாளன் விளக்குகிறான்.

''வெற்றிவேல் தடக்கை கொற்றவை அல்லள்

கானகம் உகந்தகாளி, தாருகன்

பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்

பொற்றொழிற் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்

கணவனை இழந்தாள் கடையகத்தாளே''

என்று அரசனிடம் கூறுகிறான்.

கண்ணகி தன் கணவனுடன் வேற்றூர்க்குச் சென்றதாகவும் அங்கு கணவனுக்கு நீங்க முடியாத துன்பம் உண்டானதாகவும் அவ்வூர் அரசனிடம் தான் சென்று வழக்குரைத்தாகவும் கனவு கண்டாள். கோவலன் காவல் வேந்தனின் பெருநகரிலே ஒரு கீழ்மகனால் மனம் நாறும் ஐங்கூந்தலை உடையவனாக இவள் நடுநடுங்கித் துயர் எய்தவும் யான் உடுத்த ஆடையும் பிறரால் கொள்ளப்பட்டு விட எருமைக் கடாவின் மீது ஊர்ந்து செல்லவும் கனவு கண்டான். பாண்டிமாதேவி, செங்கோலும், வெண்குடையும் செறிந்த நிலத்தின்கண் மடங்கிக் கீழே சரிந்தன. நம் கோமானது கொற்றவாயிலின் கண்ணே மணியானது நடுங்க எம் உள்ளமும் அதனால் நடுங்கியது. இரவிலே வானம் வில்லிடும். பகற்காலத்தே விண்மீண்கள் எரிந்து கீழே விழும் போன்ற தீய நிமித்தங்களைக் கனவிடைக் கண்டதாகச் சொன்னாள். கண்ட கனவை யாரிடமாவது சொல்லிவிட்டால் அது பலிக்காது. ஆனால் மூவர் கனவு கண்டு அதனை மூவருமே அடுத்தவரிடம் சொல்லியும் கனவு பலித்து விட்டது ஊழ்வினையால்.

கண்ணகிக்கு ஏற்பட்ட அவலத்திற்கு காரணம் யார்? இராமயணத்தில் சீதையின் செயலால் அவளுக்குத் துன்பம் ஏற்பட்டது. ஆனால் எந்தப் பாவமும் அறியாத கண்ணகி இங்கே துன்பப்படுகிறாள். ஏனோ அவளும், அவளை அறியாமல் ஒரு காரணமாகி நின்று விட்டதால், முதலில் பெற்றோர்கள் தவறு செய்தது. சிறுவயதில் திருமணம் முடித்துத் தனிவாழ்க்கை வைத்த பெற்றோர்கள் மற்றொரு காரணம், கோவலன் கலையின் மீது கொண்ட பற்றும் ஒரு காரணம், பின்பு பொற்கொல்லன், அடுத்தது பாண்டிமாதேவி, இவள் கோபமாகச் சென்றதால் பாண்டியன் அவளைச் சமாதனாப்படுத்த விரும்பிப் பின்செல்ல, வாய் தவறி வார்த்தையை மாற்றிச் சொன்னான். இறுதியில் கண்ணகியும் ஒரு காரணமே, கணவன் கொலையுண்டான் என்ற செய்தியைக் கேட்ட கண்ணகி கொண்ட கோபத்தைத் தன்னைப் பிரிந்து சென்ற போது சிறிதளவேனும் காட்டி இருந்தால் அவனை மாதவி பக்கம் இருந்து திருப்பி இருக்கலாம். மேலும் திருத்தியிருக்கலாம்.

கண்ணகிக்கு நேர்ந்த துன்பத்திற்குக் காரணம் கண்ணகியே தான். அரசனிடம் இந்த அளவிற்குப் பேசும் அவள் முன்பே மாதவி உறவில் கணவனிடம் பேசியிருக்கலாம். மேலும் விலையுயர்ந்த மாணிக்கப் பரல்களைக் கால்களில் அணிந்ததால் என்னவோ அவளுக்கு வாழ்க்கை நிலைக்கவில்லை. மாணிக்கப்பரல் அணிந்த கண்ணகியை விட்டுவிட்டு, நாட்டியம் ஆடும் மாதவியினைத் தேடிச்சென்றான் கோவலன்.

கண்ணகி என்ற பெயரிட்டிருந்தும் அந்தக் கண்கள் அழுது கொண்டே இருந்தன. கோவலன் செய்த முன் வினைக்கேற்பக் கொலை செய்யப்படுகிறான். ஆனால் இங்கே அழுவது கண்ணகி, கண்ணகியைப் பற்றி இளங்கோ சொல்லும்போது ''வண்ணச் சீறடி மன்மகள் அறிந்திலன்'' என்பார். கோவலன் தன் தவற்றை எண்ணி வருந்துகிறான். தன் கணவன் தன்னைப் பிரிந்து சென்ற போதும் மாமன் மாமியருக்குத் தன் துயரத்தைத் தெரிவிக்காத பண்பு கண்ணகியிடத்து மேலோங்கி நிற்கிறது. கணவன் புது வாழ்வு தருவான் என்று நினைத்த போது வாழ்வே பறிபோகிறது. இதுவரை அமைதியாகக் காட்டப்பட்டக் கண்ணகி பொங்கி எழுகிறாள்.

''தீப்பொறியாக அல்ல

எரிமலையாக

மதுரையை அழிக்கும்

புது அலையாக''

மதுரையை அழித்தும் மனம் அமைதி கொள்ளாத கண்ணகி நடந்து கொண்டே இருக்கிறாள். மலை உச்சிக்கு அங்கே தன் கணவன் வரவுக்குக் காத்திருக்கிறாள். கணவன் வருகிறான் வானுலகிற்குக் கூட்டிச் செல்ல இங்கேயும் வந்தான். மதுரைக்குக் கூட்டிச் செல்ல இவள் இழந்தது மாங்கல்யத்தை, வானுலகத்தின் என்ன நிகழுமோ? இனியும் கண்ணகி இழப்பதற்கு ஒன்றும் இல்லை.

நன்றி: பிறதுறைத் தமிழியல்

 

ஆழ்வார்களில் அறிவியல் - பா. பொன்னி

ஆன்மீகமும் அறிவியலும் கண்ணுக்குப் புலனாகாத ஓர் இழையால் நெருங்கிப் பிணைக்கப்பட்டிருப்பதை அவற்றை ஆழ்ந்து படிப்போர் உணரலாம். ஆன்மீகத்திலிருந்து கிளைக்கும் அறிவியல் மீண்டும் ஆன்மீகத்திலேயே நிறைவு பெறுவதைக் காணமுடிகின்றது. வானியல், உடலியல் தொடர்பான செய்திகள் ஆழ்வார்களின் அருளிச் செயலில் காணலாகும் தன்மையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அணுக்கொள்கை:

அணுவினை ஆக்கவோ, அழிக்கவோ இயலாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகையாக மாற்ற இயலும் என்று அறிவியலார் கூறுவர். ஆழ்வார்களும் இறைவனை அத்தகைய அணுவிற்கு இணையாகக் கூறுகின்றனர். திருமால் உலகப் பொருட்கள் அனைத்திற்கும் வித்தாக அமைபவன். அவனில் இருந்து தான் உலகப் பொருட்கள் தோன்றுகின்றன. ஆயினும் இறைவனை தன்தன்மை நீங்காமல் நிலை பெற்று விளங்குகின்றான் என்பதனை நம்மாழ்வாரின் ''தானோர் உருவே தனிவித்தாய்'' (திருவாய்மொழி, 1.5.4) என்ற பாசுர அடிகள் விளக்குகின்றன.

வானியல்:

ஆகாயத்தை நோக்கினால் நட்சத்திரங்கள் எல்லாம் நாலா பக்கங்களிலும் ஒரு நியதி இல்லாமல் சிதறிக் கிடப்பது போல் தோற்றமளிக்கிறது. ஆனால் விஞ்ஞானிகளின் மிகச் சமீப காலக் கண்டுபிடிப்பு அவை எல்லாமே ஓர் ஒழுங்கான முறையில், நூலில் கோர்க்கப்பட்ட மணிகள் போல சரஞ்சரமாகத் தான் இருக்கின்றனவாம். இதனை ''Unified String Theroy'' மகா இழைத் தத்துவம் என்கிறார்கள். இஃது இன்னும் முழுமையாக விளங்கிக் கொள்ளப்படவில்லை. இவை போன்றே வானில் உள்ள கோள்கள் அனைத்தும் ஒரு சீரான பாதையை அமைத்துக் கொண்டு சுற்றி வருகின்றன. இதனை,

''மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்

பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும்

மின்னிற் பொலிந்ததோர் கார்முகில் போலக் கழுத்தினில் காறையொடும்

தன்னிற் பொலிந்த இருடீகேசன் தளர்நடை நடவானோ (பெரியாழ்வார் திருமொழி. 1.8.3)

என்கிறார் பெரியாழ்வார். இப்பாடலில் பெரியாழ்வார் மின்னல், சந்திரன் அதைச்சுற்றியுள்ள கோள் மண்டலம் இவை முறையே கண்ணன் அணிந்துள்ள பொற்பின்னல், அதைச் சேர்ந்த அரசிலைப்பணி என்னும் ஆபரணம் இவ்விரண்டையும் சூழ்ந்து விளங்கும் பொன்னாடை ஆகியவற்றை ஒத்திருக்கும் என்கிறார். இஃது ஒரு குறிப்பிட்ட வரைமுறையில் வானில் கோள்கள் அமைந்திருக்கும் தன்மையைச் சுட்டுகிறது எனலாம்.

மழைக்காட்சி:

மழை உருவாகும் தன்மையை ஆண்டாள் கீழ்வரும் அழகிய பாடலாக வடித்துக் காட்டியுள்ளார்.

''ஆழி மழைக் கண்ணா ஒன்று நீகைகரவேல்

ஆழியுள் புக்கு, முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைய பத்மநாபன் கையில்

ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்

வாழ உலகினில் செய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்'' (திருப்பாவை - 4)

வருண தேவனை, கடல் ஆழத்தில் சென்று நீரை முகந்து வானவெளியில் பரவி திருமாலின் கருநிற மேனியைப் போல விளங்கி, அவன் வலக்கரத்தில் திகழும் சக்கராயுதத்தைப் போல ஒளியுடனும் இடக்கையிலுள்ள வலம்புரிச் சங்கின் நாதத்தை ஒத்த முழக்கத்துடனும் அவன் கையிலுள்ள சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து பாயும் அம்பு மழை போல் தாமதமின்றி மழை கொட்டும்படி வேண்டுகிறார். இதனை ஒத்த கருத்தைப் பெரியாழ்வாரிடம் காணமுடிகிறது.

''கடல்வாய்ச் சென்று மேகம் கவிந்திறங்கிக்

கதுவாய்ப் படநீர் முகந்தேறி எங்கும்

குடவாய்ப் படநின்று மழை பொழியும் கோவர்த்தன

மென்னும் கொற்றக் குடையே'' (பெரியாழ்வார் திருமொழி 3.5.4)

என்பது அப்பாசுரம்.

உடலியல்:

நம்முடைய உடலானது ஐம்பூதங்களால் ஆனது எனும் கருத்தினை

''மண்ணாய் நீர் எரிகால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம்

புண்ணாராக்கை'' (பெரிய திருமொழி, 1.9.6)

என்ற பாசுர அடிகள் விளக்குகின்றன. நம்முடைய உடலாகிய சுவருக்கு எலும்புகளே தூணாக விளங்குகின்றன எனவும் நமது உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன என்பதனையும்

''ஊனிடைச் சுவர்வைத் துஎன்பு தூண்நாட்டி

உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்'' (பெரிய திருமொழி, 1.6.9)

என்ற அடிகளில் திருமங்கையாழ்வார் சுட்டுகிறார்.

பஞ்ச பூதங்களின் குணங்கள்:

பஞ்ச பூதங்கள் என்று கூறப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஒவ்வொன்றிற்கும் உள்ளதான தனிப்பட்ட குணங்களைத் திருமழிசையாழ்வார் கீழ்வரும் பாசுரத்தில் விளக்கிக் காட்டுகிறார்.

''பூநிலாய வைந்துமாய்ப் புனல்கண் நின்ற நான்குமாய்த்

தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்த கால் இரண்டுமாய்

மீநிலாய தொன்று மாகி வேறுவேறு தன்மையாய்

நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே?'' (திருச்சந்த விருத்தம் -1)

பூமிக்கு உள்ள குணங்கள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து. நீரில் உள்ள குணங்கள் சுவை, ஒளி, ஊறு, ஓசை எனும் நான்கு. நெருப்பில் உள்ள குணங்கள் ஓசை, ஊறு, ஒளி எனும் மூன்று. காற்றில் உள்ள குணங்கள் ஓசை, ஊறு எனும் இரண்டு. ஆகாயத்தில் உள்ள குணங்கள் ஓசை எனும் ஒன்று என்பதனையே இப்பாசுரம் விளக்கிக் காட்டுகிறது.

ஆதிமூலம்:

உலகப் பொருட்கள் அனைத்தையும் தோற்றுவிக்கும் முன்னர் திருமால் தான் ஒருவனாகவே நின்று உலகைத் தோற்றுவித்தான் என்பதனை ஆழ்வார்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்டிபன் ஹாக்கிங்கின் ஒரு கட்டுரையில் (The origin of the Universe). Although Science may solve the problem of how the universe began, it cannot answer the question why does the universe bother to exist என்கிறார். அதற்கு ஆதிகாரணனாக ஒரு கடவுள் தேவைப்படுகிறார் என்பதை அறிவியலாளர்கள் தயக்கத்துடன் ஒப்புக் கொள்கிறார்கள். எதுவுமே இல்லாத காலம் கூடத் துலங்காத அந்த முதற்கணத்திற்கு முற்பட்ட நிலையைப் பற்றி இயற்பியல் (Singularily) என்கிறது. இதனையே நம்மாழ்வாரும்

''என்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று

நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்'' (திருவாய்மொழி 4.10.1)

என்று குறிப்பிடுகிறார்.

உலக ஒடுக்கம்:

உலகம் விரிவடைந்து கொண்டே போகிறது என்றாலும் அதே சமயம் கருத்துளைகள் என்று குறிப்பிடும் சில இடங்களில் எல்லாம் சுருங்கிக் கொண்டே இருக்கிறது. அதன் எல்லைக்குள் எது அகப்பட்டாலும் உறிஞ்சப்பட்டு விடும். ஒளி கூட தப்ப முடியாது என்று சொல்கிறார்கள். மிகப் பெரிய விண்மீன்கள் பல திடீரென்று சுருங்கியதால் தான் கருந்துளைகள் உண்டாகி இருக்கின்றன. பிரபஞ்சத்திலேயே செறிவு மிக்கவை இவைதான். அவை விரிவடைந்து கொண்டே போகின்றன. கருந்துளைக்குள் என்ன இருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவை அக்கம் பக்கத்திலுள்ள விண்மீன்களை அடிக்கடி விழுங்கிக் கொண்டே இருக்கின்றன. பிரபஞ்சத்தில் 10 ஆயிரத்தில் ஒரு பகுதியை ஏற்கனவே விழுங்கிவிட்டன. இப்பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருள்களும் கூட ஒரு நாள் விழுங்கப்பட்டு விடலாம். இதனைத் திருமால் உலகை உண்டு உமிழ்ந்ததாகக் கூறும் கருத்துடன் ஒப்பிடலாம்.

''உய்ய உலகு படைத் துண்ட மணிவயிறா'' (பெரியாழ்வார் திருமொழி. 1.6.1)

''உண்டிட்டி உலகினை ஏழும் ஒரால் இலையில் துயில் கொண்டாய்'' (பெரியாழ்வார் திருமொழி. 2.7.9)

தசாவதாரக் கொள்கை:

உலகில் தோன்றிய முதல் உயிர் நீரிலேயே தோன்றியிருக்க வேண்டும் என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. பரிணாமக் கொள்கையின் அடிப்படையிலேயே அவை வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் அவர்கள் கருத்து. திருமாலின் அவதாரம் பற்றிய கொள்கைகளும் அவற்றிற்கு ஏற்றாற் போன்றே அமைந்துள்ளன. திருமாலின் அவதாரங்கள் மொத்தம் 21 என்று குறிப்பிடுவர். ஓம் பகவதே நம :/ புருஷாய நம :/ குமாராய நம :/ வராஹாய / நாராதாய / நர நாராயணாய / கபிலாய / தத்தாத்ரேயாய / யக்ஞாய / ரிஷ’பாய / பருதவே / மத்ஸ்யாய / கமடாய / தன்வந்தரயே / மோஹ’ன்யை / நருஸ’ஹ்மாய / வாமனாய / பரசுராமாய / வ்யாஸாய / ரகுராமாய / பலராமாய / க்ருஷ்ணாய / புத்தாய / ஓம் கல்கயே நம :/ என்று பாகவதம் குறிப்பிடும். ஆயினும் குறிப்பிட்ட மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி ஆகிய பத்து அவதாரங்களை மட்டும் தசாவதாரம் என்று குறிப்பிடும் வழக்கம் காணப்படுகின்றது. இது பரிணாம வளர்ச்சியைக் சுட்டுகிறது எனலாம்.

முதலில் தோன்றிய உயிர் நீரிலேயே தோன்றியிருக்க வேண்டும் என்பதனைக் காட்டுவது மச்ச அவதாரம். அதற்கடுத்து உயிர்கள் நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை படைத்ததாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அமைவது கூர்ம அவதாரம். பாலூட்டி நிலையில் உயிர்கள் காலெடுத்து வைப்பதைக் குறிப்பது வராக அவதாரம். விலங்கு இனத்திலிருந்து மனித உயிர்கள் தோற்றம் பெற்றமையைக் குறிப்பிடுவது வாமன அவதாரம். உலோகங்கள் கண்டறிந்து வேட்டையாடும் நிலையைக் குறிப்பது கையில் கோடாரி ஏந்திய பரசுராம அவதாரம். மனிதன் நாகரீகத்தில் மனதளவில் பக்குவமடைந்தமையைக் காட்டுவது ராம அவதாரம்,. வேளாண் நாகரீகம் உருவாகியமையை பலராம, கிருஷ்ண அவதாரங்கள் காட்டும். பூமியில் அதர்மம் தலைதூக்கும் நிலையில் கொடியவர்களை அழிக்க மீண்டும் பகவான் அவதாரம் எடுப்பர் என்பதனைக் கரத்தில் வாளுடன் தோன்றும் கல்கி அவதாரம் குறிப்பிடும்.

இத்தகைய அவதாரச் சிறப்பு குறித்து அருளிச் செயல் முழுமையிலும் காணமுடிகின்றது.

இவை தவிர திருமாலின் திரு உருவத்திற்கும் அறிவியல் ரீதியான பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆன்மீகம் உள்ளத்தைப் பண்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அறிவு ரீதியான செய்திகள் பலவும் கொண்டு விளங்குகிறது. அவற்றை ஆழ்ந்து படிப்பதன் வாயிலாகவே நாம் அவற்றை உணர முடியும்.

நன்றி: பிறதுறைத் தமிழியல்.

 

வீரமாமுனிவரின் எழுத்து வரிவடிவச் சீர்திருத்தம் - பா. வளன் அரசு

பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்துக்குத் திருமறைத் தொண்டராக வருகை தந்த வீராமுனிவர் 1711 முதல் 1747 வரை முப்பத்தாறு ஆண்டுகள் ஒப்பற்ற தமிழ்த் தொண்டராகவும் திகழ்ந்தார். தைரியநாதர், மலர்களின் தந்தை, வீரமாமுனிவர், திருமதுரைச் செந்தமிழ்த் தேசிகர், வீரஆரியன், இசுமத்து சந்நியாசி ஆகிய ஆறு பெயர்களால் அழைக்கப்பெற்ற இத்துறவி அயல்நாட்டுத் துறவியர், தமிழகத் துறவியர் போன்ற வாழவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பு என்னும் தச்சுத் தொழிலாளியின் அறுபதாண்டு வாழ்வியலைத் தேம்பாவணி என்னும் கலைக் காப்பியமாக வழங்கியுள்ளார். போர்ச்சுக்கல் நாட்டு பொம்பேரு மலையில் வேதத்துக்காக உயிர் துறந்த கித்தேரியாளின் பத்தாண்டு வாழ்வியலை நாட்டுப்புற பனுவலாக நல்கியுள்ளார். அன்னை மரியாளின் புகழ்பரப்பும் காவியமாகத் திருக்காவலுர் கலம்பகத்தை அருளியுள்ளார். வேதியர் ஒழுக்கம் என்னும் ஏடு தமிழ் உரைநடை பயிலும் மாணவர்க்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. வேதவிளக்கம் தமிழில் பொருள் அட்டவனை தந்த முதல் நூலாகும். வாமன் சரித்திரம் செந்தமிழ் நடைக்கும் பரமார்த்தகுருவின் கதை கொடுந்தமிழ் நடைக்கும் சான்று கூறும் வகையில் தமிழ் - இலத்தீன் அகராதியின் பின்னிணைப்பாக அமைந்துள்ளன. எட்டுப் பாநடை இலக்கணப் புத்தகங்களும் மூன்று மருத்துவச் சுவடிகளும் இரண்டு மடல்களும் திருக்குறள் இலத்தீன் மொழிபெயர்ப்பும் வீரமாமுனிவரின் வித்தகப் பணிகளுக்கு மணிமகுடங்கள் ஆகும்.

வீரமாமுனிவர் இயற்றிய நான்கு இலக்கண ஏடுகளுள் ஒன்றான தொன்னூல் விளக்கம் ஐந்திலக்கணமும் கூறும் வீறுநடை நூலாகும். எழுத்தினை நாற்பது நூற்பாக்களாலும், சொல்லினை நூற்றிரண்டு நூற்பாக்களாலும், பொருளினை ஐம்பத்தெட்டு நூற்பாக்களாலும், யாப்பினை நூறுநூறு பாக்களாலும், அணியினை எழுபது நூற்பாக்களாலும் எடுத்துரைக்கும் வீரமாமுனிவரின் இலக்கணத் தெளிவு வியந்து பாராட்டத்தக்கது. புலமைத் தமிழைச் செந்தமிழ் எனவும் பேச்சுத் தமிழைக் கொடுந்தமிழ் எனவும் வரையறை செய்துள்ளார். 1728 ஜனவரி 29ம் நாளன்று கொடுந்தமிழை எழுத்து, பெயர், வினை, சொல், எண் என்னும் ஐந்து இயல்களாகவும் இருநூறு செய்திக் கூறுகளாகவும் ஈந்துள்ளார். 1730ம் ஆண்டு செப்டம்பர் பதின்மூன்றாம் நாளன்று எழுதி முடித்த செந்தமிழ் இலக்கணம் நூற்றிருபது செய்திக் கூறுகளை விரித்துரைக்கிறது. அயல்நாட்டால் தமிழில் பாப்புனைவதற்கு வாய்ப்பாகத் திறவுகோல் என்னும் பெயரால் யாப்பு நூலை இலத்தீன் மொழியில் தந்துள்ளார்.

முந்நூற்று எழுபது நூற்பாக்களில் ஐந்திலக்கணமும் மொழியும் தொன்னூல் விளக்கத்தில் தொல்காப்பியரையும் நன்னூலாரையும் ஏற்றிப் போற்றி, ''நீட்டல் கழித்தல் குறில் மெய்க்கிருபுள்ளி'' என்று எடுத்தியம்பி உரையும் வரைந்துள்ளார். கொடுந்தமிழ் இலக்கண நூலுள், தாம் புதிதாகக் கண்டுபிடித்து விண்டுரைக்கும் எழுத்து வரிவடிவச் சீர்திருத்தம் பற்றிக் கூறியுள்ளார். ''எகர ஓகரக் குறில் நெடில்களை வேறுபடுத்திக்காட்டப் புதிய முறையைக் கண்டுபிடித்திருக்கிறேன்'' என்பதைப் பணிவாகப் கூறிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். குறில், நெடில் வடிவக் கொம்புக் குறியீடுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். பலர் அவற்றை ஏற்றுப் பின்பற்றுவதாகவும் பெருமிதத்தோடு குறித்துள்ளார். (விதி.3) மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டில் குறில் நெடில் வேறுபாடுகள் காணப்படுவதை ஐராவதம் மகாதேவன் போன்றோர் எடுத்துக்காட்டியுள்ளனர். ''தினமணி'' இதழில் வந்த கட்டுரைக்கு விளக்கம் வழங்கும் வகையில் முனைவர் வி.மி. ஞானப்பிரகாசம் அடிகளார் ''நம் வாழ்வு'' இதழில் விரித்துரைத்துள்ளார். வீரமாமுனிவர் காலத்திலேயே 1738 ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் ''கொடுந்தமிழ் இலக்கணம்'' என்னும் பேச்சுத்தமிழ்நூல் அச்சேறிப் பலருக்கும் பயன்தந்தது. இரேனியுசு என்னும் செருமானிய அறிஞர் தமிழ் இலக்கணம் தரவும், சார்ச்சு யுக்ளோ போப்பையர் தமிழ் இலக்கணம் எழுதவும் கொடுந்தமிழ் இலக்கணமே முன்னோடி நூலாகும்.

ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டாம் சங்கத்தில் எழுந்ததாகக் கருதப்படும் தொல்காப்பியம் ஓராயிரத்து அறுநூற்றுப் பத்து நூற்பாக்களில் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூவிலக்கணமும் கூறுகிறது. எழுத்து என்றாலே ஒலியன் என்ற விளக்கம் வழங்குகிறது. அகரம் முதல் னகரம் முடிய முப்பது எழுத்துகள் முதல் எழுத்துகள் எனவும் குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் ஆகிய முன்றும் சார்பெழுத்துக்கள் எனவும் எடுத்தோதியுள்ளது. வரிவடிவம் பற்றிப் பேசும்போது ''மெய்யெழுத்து எல்லாம் புள்ளியோடு நிலையல் எனவும் எகர ஓகரத்து இயற்கையும் அற்றே'' எனவும் கூறுகிறது. பதினெட்டு மெய் எழுத்துகளுடன் இரண்டு உயிர் எழுத்துகளும் புள்ளி பெற்று வரும் என்று தெரிவித்துள்ளது. எகர ஒகரங்களின் மீது புள்ளியிட்டு எழுதினால் குறிலாகவும், புள்ளியிடாது எழுதினால் நெடிலாகவும் கருதியுள்ளனர். எரி நெருப்புக்கு ஏரிக்கும் வேறுபாடு புள்ளி உண்மையாலும் இன்மையாலும் உணரப்பட்டன. ஒதிய மரத்துக்கும் ஓதியாகிய கூந்தலுக்கும் ஒகர எழுத்தின் மீது புள்ளி பெறுவதும் புள்ளி பெறாததும் கொண்டு கண்டுணர்ந்தனர். வீரமாமுனிவர் எளிதாகவும், தெளிவாகவும் எல்லோரும் ஏற்றுப் போற்றும் வகையில் எகர ஒகரங்களைப் புள்ளியிடாது எழுதிக் குறிலாகவும் ஏகார ஓகாரங்களைக் கீழே கோடும் கழித்தும் நெடிலாகவும் பயன்படுத்த வழிகாட்டினார். மேலும் ஒற்றைக் கொம்பு இரட்டைக் கெம்பு வரிவடிவங்களை உயிர்மெய் எழுத்துக்களும் பயன்படுத்தச் செய்தார் ''மெய்'' என்றும் ''மேய்'' என்றும் குறில் நெடில் வேறுபாடு அறிந்து எல்லோரும் எழுதத் தொடங்கினர். அச்சுத்துறையின் வரவாலும் அறிவியல் உறவாலும் எழுத்து வரிவடிச் சீர்திருத்தம் மிக விரைவாகப் பரவியது வீரமாமுனிவர் உருவாக்கிய குறில் நெடில் சீர்திருத்த வடிவங்கள் பெயர், பொருள், தொடை, தொகை, என்னும் நால்வகைக் கூறுகள் கொண்ட வீரமாமுனிவரின் சதுரகராதியிலும் இடம் பெற்றன என்று அந்நூலின் முன்னுரையில் வீரமாமுனிவர் விளம்பியுள்ளார்.

''வடிவக் குழப்பம் வளரா திருக்க

அடிகள் திருத்தம் அறிந்தோர் - படிக்க

எளிதாக உள்ளதனை எண்ணியே உள்ளம்

களித்திடக் கைகூப்பு வார்''

என்று வீரமாமுனிவ மாலைகள் என்னும் நூலாசிரியர் நவில்கிறார். (ப.64)

எழுத்து வரிவடிச் சீர்திருத்தம் தெளிவுக்கு மாறாகப் புதிராகப் போய்விடக்கூடாது. இகரத்தின் குறில் நெடில் வேறுபாடு இ, ஈ என்று முறையே முடிவில் சுழியின்றியும் சுழிகொண்டும் அமைந்திருந்தன. கி, கீ என்று உயிர்மெய் எழுத்து வரிவடிவங்கள் போன்று இயல்பாக இருந்தன. ஆனால் ''இகாரம்'' எப்படியோ ''ஈகாரம்'' என்று மாறியது புரியாத புதிராக அமைந்துள்ளது, பகரத்தைத் தலைமாற்றிக் போட்டு இருபுள்ளிகள் உள்ளேயும் வெளியேயும் இடம் பெற்றுள்ளன.

ஈரோட்டுப் பெரியார் இராமசாமி அவர்களின் நூற்றாண்டினையொட்டித் தமிழக அரசின் பதின்மூன்று வரிவடிவச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. ஆகாரத்தில் மூன்றும், ஒகரத்தில் மூன்றும், ஓகாரத்தில் மூன்றும், ஐகாரத்தில் நான்குமாக அவை விளங்குகின்றன. கை எழுதுவது போன்றே ணை, லை, ளை னை ஆகிய உயிர்மெய் எழுத்துக்களை எளிதாகவும் தெளிவாகவும் எழுதி வருகின்றோம். அரசின் சார்பில் கல்வி அமைச்சர் தந்த அறிவிப்பால் பாடப்புத்தகங்கள் முதல் நூலகப் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் புதிய வரிவடிவ மாற்றத்துடன் அமைவது இன்றியமையாதது என்று அரசகட்டளை ஆயிற்று தமிழகப் புலவர் குழுத் தலைவர் மூதறிஞர் வ.சு.ப. மாணிக்கம் மேலும் புதிய வரிவடிவ மாற்றங்கள் எதுவும் கொண்டு வந்தால் குழப்பங்கள் கூடும் என்று தெளிவுறுத்தியுள்ளார்.

தமிழறிஞர் கூற்றுக்கு மாறாக, அறிவியல் மற்றும் பொறியியல் பெருமக்கள் உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கையைப் பன்னிரண்டிலிருந்து பத்தாகக் குறைக்கவும் தமிழ் மொழியைச் சிதைக்கவும் தொடர்ந்து முயன்று வருகின்றார். ஐகார ஓளகாரங்களை விடுத்து, அகரத்தோடு யகர வகர ஒற்றுகளை இணைத்துப் போலிகளைப் பயன்படுத்தத் தூண்டி வருகின்றனர். தலை என்றும் விலை என்றும் எழுதுவதை தலய், விலய், என்றெல்லாம் எழுதவியலாது. கணிப்பொறியைச் சுட்டிக்காட்டியும் வேறு பலவாறும் தொலைநோக்குப் பார்வையின்றி எழுத முனைவது வருந்தத்தக்க செயலாகும்.

இத்தாலிய நாட்டிலிருந்து தமிழகத்துக்க வந்து முப்பது அகவைக்குப் பிறகு தமிழைக் கற்றுத் தெளிந்து திருக்குறள் முதலாய இலக்கியங்களையும் தமிழ் மொழியையும் உலகறியச் செய்து தேமதூரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று தூண்டிய வீரமாமுனிவர் என்றுமுள தென் தமிழை இயம்பு இசையாம் புகழ் கொண்டவராகத் திகழ்கிறார்.

நன்றி: பிறதுறைத் தமிழியல்.

 

தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள் - மு. பாலமுருகன்

இலக்கியம் காலத்திற்கு ஏற்பத் தன் பாடுபொருளையும், பரிணாமத்தையும் விரிவுபடுத்திக் கொண்டு வருகிறது. நாம் வாழும் உலகம் அறிவியல் உலகமாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய இலக்கியமும் அறிவியலைப் படைப்பிலக்கியத்தில் பயன்படுத்தி வருகிறது. நம் முன்னோர்கள் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்தே அறிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். மழையின் வருகையைப் பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும், விலங்கினங்களின் தன்மைகள் பற்றியும், அணுக்கள் பற்றியும் தம்முடைய படைப்புகளில் பழந்தமிழர் வெளியிட்டுள்ளனர். கடல் நீரானது ஆவியாகி மேலெழுந்து பின் குளிர்ந்த காற்றால் மீண்டும் மழையாக வருகின்றது. இதனைக் கதைவடிவில் முல்லைப் பாட்டில் சொல்லியுள்ளனர். திருமால் வாமன வடிவம் எடுத்து உலகளந்தது போன்ற கரிய மேகம் கடல் நீரை முகந்து கொண்டு மேலெழுந்து மழை பெய்கிறது. இதனை,

''நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

நீர் செல நிமிர்ந்த மால் போல''

என்று முல்லைப்பாட்டில் நப்பூதனார் அவர்கள் மழை தோன்றுவதற்கான அறிவியற் காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள இலண்டன் மாநகரில் 1925 ஆம் ஆண்டு இந்திய அலுவலகக் கட்டடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் திரு.ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்கள் தாவரங்களுக்கும் உயிருண்டு என நிரூபித்தார். இவர் தாவரப் பேரறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. தாவரத்திற்கும் உயிர் உண்டு என்பதோடு மட்டுமல்லாது அவையும் தம் உடன் பிறந்தவையாகக் கருதி தமிழ் மக்கள் வாழ்ந்தமையை நற்றிணைப் பாடல் தெளிவுபடுத்துகிறது. தன் காதலன் அருகில் வந்து பேசுவதற்கு நாணி விலகிச் செல்கிறாள் தலைவி. காதலனுக்கு ஏதும் புரியாது காரணத்தைக் கேட்கிறான். தன் தமக்கை உடன் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறாள். சுற்றிப் பார்த்த தலைவனுக்கு அங்கு யாரும் காணாது கண்டு வியக்கிறான். தலைவியே காரணத்தைச் சொல்லுகிறாள். தன் அன்னை சிறுவயதில் புன்னை விதையை விதைத்ததாகவும் அதனைத் தமக்கையாகக் கொள்ளவும் என்று கூறியதைச் சுட்டிக்காட்டி அருகிருக்கும் புன்னை மரத்தைக் காட்டினாள். இதனை,

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம நாணுதும் நும்மொடு நகையே

என்று நற்றிணையில் பாடப்பட்டுள்ளது. இந்த உலகம் சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய ஒரு பகுதியே என்பர். பல காலமாய்ச் சுழன்று கொண்டிருக்கிறது. வெப்பம் ஆறிய மேற்பரப்பின் மீதே மக்கள் வாழ்கின்றனர். பூமியின் மையப்பகுதியின் வெப்பம் ஆறாமல் இன்னும் இருக்கின்றது என்பர். இந்தப் பூமி தீ, காற்று, மண், நீர், வான் ஆகியவற்றால் ஆனதே ஆகும். இதன் தன்மை பட்டினப் பாலையிலும் சொல்லப்பட்டுள்ளது. மனித உயிர்களும் பிற உயிர்களும் வாழ்வதற்கு முதல் ஆதாரமாக விளங்குவது நீராகும். நீர் இல்லையெனில் வாழ்வது சாத்தியமாகாது. 70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் 46 கிலோ கிராம் நீர் இருக்க வேண்டும் என்பர். நீர் அத்தகைய இன்றியமையாதது ஆகும். ஆகவே,

''நீரின்றமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுகு

எனும் குறட்பா அறிவியற் கருத்தோடு கலந்து வருகிறது. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணியில் விண்ணில் பறக்கும் மயிற்பொறி ஒன்றைச் சச்சந்தன் வடிவமைத்தான். அதனை இயக்கும் முறையைத் தன் மனைவி விசையைக்கு கற்றுத் தருகிறான். இம்மயிற் பொறியில் தப்பித்துச் செல்லும் விசையைக்கு இயக்கத் தெரியாததால் மயானத்தில் இக்கருவி இறங்கி விடுகிறது. இராம காதையில் இடம்பெறும் புஷ்பக விமானம் விரைவாகவும், அதிக நபர்களைச் சுமந்தும் நீண்ட தூரம் செல்லும் தன்மை உடையதாகும். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பான ஆகாய விமானம் போன்று இலக்கியத்திலும் சுட்டப்பட்டுள்ளவை குறிப்பிடத்தக்கதாகும். இந்நூற்றாண்டை ஆளும் சக்தி மிகுந்த ஆற்றல் பிரிவாக அணுவியல் திகழ்கிறது. அறிவியல் கண்டுபிடிக்கும் முன்பும் பின்பும் தமிழ் இலக்கியத்தில் அணுவைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்புகட்டி குறுகத் தறித்த குறள் என்பது ஒளவை வாக்கு.

1803-ஆம் ஆண்டுதான் ஜான் டால்டன் என்பவர் அணுக்கொள்கையை வெளியிட்டார். தாம்சன், அர்னால்டு, ரூதர் போர்டு, ஜேம்ஸ் சாட்விக் என்பவர்கள் அணுவின் மையத்தில் உள்ள நியூக்ளியஸைச் சுற்றி எதிர் மின்துகள்கள் சூழல்கின்றன என கண்டறிந்தார். அணுவைப்பற்றி பல இலக்கியங்களில் பாடப்பெற்றுள்ளன.

சாணிலும் உளன் ஓர் தண்மை

அணுவினைச் சதகூறு இட்ட

கோணிலும் உளன் - கம்பன்

அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்கள் எல்லாம்

அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்

அண்டங்களுள்ளும் புறம் புங்கரியாயினானும்

அண்டங்கள் ஈன்றாள் துணை என்பர் அறிந்த நல்லோர் - பரஞ்சோதி

இடையின்றி அணுக்கள் எல்லாம் சுழலும் என

இயல் நூலார் இசைத்தல் கேட்டோம் - பாரதி

இவ்வாறு அணுவின் தன்மைகளை அன்னைத் தமிழ் குறிப்பிட்டுள்ளது. பாரத தேசம் எனும் பாடலில் பாரதியின் பொறியியல் அறிவு புலனாகிறது. சிங்களத் தீவிற்குப்பாலம் அமைத்தல், வங்கத்தில் வரும் நீர்ப்பெருக்கை மைய நாடுகளுக்கு பயன்படும் வகையில் நதிநீர் இணைப்பை பற்றிப் பேசினான். 1974-76ல் மைய அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த கே.என்.இராவ் கங்கை காவிரி திட்டத்தை வெளிப்படுத்தினார்.

அணுவின் அளவைச் சொல்லாத காலத்தின் போது தமிழன் நீட்டல் அளவை வாய்ப்பாடு சொல்லி வைத்துள்ளான்.

8 அணு - 1 தேர்த்துகள் 12 பெருவிரல் - 1 சாண்

8 தேர்த்துகள் - 1 பஞ்சிழை 2 சாண் - 1 முழம்

8 பஞ்சிழை - 1 மயிர் 4 முழம் - 1 கோல்

8 மயிர் - 1 கடுகு 500 கோல் - 1 கூப்பிடு

8 கடுகு - 1 நுண்மணல் 4 கூப்பிடு - 1 காதம்

8 நுண்மணல் - 1 நெல்

8 நெல் 1 பெருவிரல் கம்பன் காட்டும் எண்ணளவை இன்றைய கணிதவியலறிஞர்கள் இதனை அளவிட்டுரைக்க முடியாது என்கின்றனர். தமிழ் மொழி எண்களையும் வடமொழி எண்களையும் பிங்கலந்தை எனும் நிகண்டு நூல் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

ஏகம் எண்மடங்கு கொண்டது கோடி

கோடி எண் மடங்கு கொண்டது சங்கம்

சங்கம் எண் மடங்கு கொண்டது விந்தம்

விந்தம் எண் மடங்கு கொண்டது குமுதம்

குமுதம் எண் மடங்கு கொண்டது பதுமம்

பதுமம் எண் மடங்கு கொண்டது நாடு

நாடு எண் மடங்கு கொண்டது சமுத்திரம்

சமுத்திரம் எண் மடங்கு கொண்டது வெள்ளம்.

அறிவியலின் தாக்கம் தொடர்ந்து வரும் இலக்கிய பரிணாமத்தினூடே கலந்து வந்தன. புதினம், சிறுகதை, புதுக்கவிதை ஆகியவற்றிலும் இடம் பெற்றன. ஆங்கில அறிவும் அறிவியல் சிந்தனையும் கொண்ட படைப்பிலக்கிய வாதிகள் தம் படைப்புகளில் அறிவியற் சிந்தனைகளைக் கொண்டு வருகின்றனர். சுஜாதா, மாலன், சுப்ரபாலன், ஸ்ரீதர், சிவசங்கர் ஆகியோரும் சிறுவர் அறிவியல் இலக்கியத்தில் கல்கி, கோபாலகிருஷ்ணன், ரேவதி, மலையமான், ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்களாவர். புதுக்கவிதையில் அறிவியலின் அகல நீளங்களைக் கவிஞர்கள் அலசிப் பார்த்திருக்கின்றனர். கவிஞர் சேஷாலம் தம்முடைய கவிதையில் கணித அளவு கோலைப் பயன்படுத்தி

நீங்கள் அங்குலம்

நான் சென்டி மீட்டர்

சாதியிலும் அந்தஸ்திலும் - என்று பாடுகின்றார்.

பூமிக்கு வெளியே நிற்க இடம் தந்தால் இந்த உலகை நெம்பிக் காட்டுவேன் என்று கூறிய ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை நினைவுபடுத்தும் வண்ணம்

இந்த

பூமி உருண்டையை

புரட்டி விடக்கூடிய

நெம்புகோல் கவிதையை

உங்களில்

யார் போடப் போகிறீர்கள்

என்று கண்­ர்ப் பூக்களில் மு.மேத்தா. கேட்கிறார். காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று எதிர்க்கும் எனும் தத்துவத்தை எஸ். சிவராஜ் தம்முடைய கவிதையில்

நாம் ஒத்தவர்கள்தானே

பின்பு ஏன்

விலகுகின்றாய்

விலகி ஓடுகின்றாய்

ஓ...... ஒத்த துருவங்கள்

விலக்கிக்கொள்ளும் அல்லவா? - என்று குறிப்பிடுகின்றார்.

புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், பிறவியல் கூறப்பட்டு எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்று மாணிக்கவாசகப் பெருந்தகை கூறியது டார்வின் பரிணாமக் கோட்பாட்டின் கூறே ஆகும்.

அமிபா செல்லிலிருந்து

குரங்காய்

பரிணாமம் எய்தி

என்று மனித அவதாரம்

எடுத்ததாய்

அப்ரூவர் ஆன

டார்வின் சாட்சியம்

எனும் சாகுல் அமீது என்பவரின் கவி வரிகள் பரிணாமக் கோட்பாட்டைப் பேசுகிறது. விலங்கிலிருந்து மனித நிலை எய்தியவன் மீண்டும் விலங்காய் மாறி அழியும் நிலையை வைரமுத்து சிகரங்களை நோக்கி எனும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார். மஞ்சள் மழைச் சூத்திரம் என்கிற உயிர்க்கொல்லி நுண்ணுயிரிகளின் மூலம் உலகை அழிக்கத் துடிக்கும் விஞ்ஞானி இறுதியில் அழிந்து போவதைக் காட்டியுள்ளார். இக்கால கட்டத்தில் சோதனைக் குழாயின் மூலம் பிள்ளைப்பேறு பெறுகின்றனர். அத்தன்மையுடைய குழந்தைகள் அன்னையின் கருவறை மணத்தைப் பெற்று உறங்க விழைவதை

அவளின் கருவறை மணத்தை

அள்ளி அள்ளி என்

வீடெங்கும் தெளித்து

சுருண்டு படுத்துத் தூங்கிப் போகவேண்டும்

என்று தன்னுடைய கருவறை வாசனையில் கனிமொழி கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். அன்னையின் அன்பைப் பெற இயலாமல் யாவரும் சோதனைக் குழந்தையாகவே வளர்ந்து விடுவோமோ என ஆதங்கப்படுவதை,

மானுடம் இயந்திரத் தயாரிப்பில்

உயிர்க்கருக்கள் அச்சாய்ப் போகுமா - எனும் வரிகள் காட்டுகின்றன.

புதுக்கவிதையில் சிறு சிறு அங்கமாக இருந்த அறிவியல் தண்­ர் தேசத்தில் வாமனன் போன்று விஸ்வரூபம் எடுத்துவிட்டது. கடலைப் பற்றியும், அதை மையமாக வைத்தும் உரைநடைப் படைப்புகள் ஆங்கிலத்தில் பல இருக்கின்றன. ஆனால் அழகு தமிழில் வைரமுத்து அவர்களே அறிவியல் படையலைத் தமிழன்னைக்கு முதலில் பரிமாறுகிறான். காதலின் அளவைச் சொல்லுமிடத்து நீரினும் ஆரளவின்றே என்று குறுந்தொகை குறிப்பிட்டதோடு நின்றுவிட்டது. கவிஞரோ கடலின் ஆழத்தை அளக்க ஆரம்பித்துவிட்டார். நான்கு மீனவர்களோடு ஒரு காதலன் காதலி கடலுக்குச் செல்கின்றனர். கடலின் உண்மைகளைக் கலைநயமுடன் வெளிப்படுத்துகின்றான் காதலன். கடலைப்பற்றி எழும் காதலி ரோஜாவின் சந்தேகங்களைப் போக்கும் விதமாய் அறிவியற் கருத்துக்களை அடுக்குகின்றான்.

வாழும் உயிர்களை வடிவமைத்தது தண்­ர்

70 சதவீதம் தண்­ர் யானை

65 சதவீதம் தண்­ர் மனிதன்

என் அமுதமே! உன் உடம்பில்

ஓடுவது 7.2லிட்டர் உப்புத்தண்­ர் -

எனும் வரிகள் நீரின் அளவைச் சொல்லுகின்றன. கடலின் ஆழத்தை நாம் அறியும் வண்ணம் உயரத்தில் காட்டுமிடத்து

கடல் நீர் இடம் மாறி நிலப்பரப்பில் நின்றால்

எல்லா இடங்களிலும் மூன்று கிலோமீட்டர்

உயரம் தண்­ர் நிற்கும் - என்று குறிப்பிடுகிறார்.

இது போன்ற எண்ணற்ற அறிவியற் செய்திகள் இடம்பெறச் செய்துள்ளார். இக்காலம் அறிவியல் எனும் பாற்கடலை அப்படியே அள்ளிக் குடித்திட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தமிழ் இலக்கியம், இவ்வளர்ச்சி மேலும் வளரும். வளர வேண்டும்.

நன்றி: பிறதுறைத் தமிழியல்

 

தற்காலத் தமிழில் பிறமொழி ஆளுமையும் இலக்கண மீறல்களும் - சு. அழகேசன்

தற்காலத்தமிழில் ஆங்கிலம், வடமொழி போன்ற பிறமொழிகளின் கலப்பால் ஏற்படுகின்ற இலக்கண விளைவுகளையும் மரபு சார்ந்த இலக்கண விதிகளின் மீறல்களையும் ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

எழுத்திலக்கணம்:

வடமொழி, ஆங்கிலம் போன்ற மொழிகள் தற்காலத் தமிழில் கலப்பதல், இதுவரை தமிழில் வழங்கப்படுகிற எழுத்துக்களின் வருகை முறைகள் குறித்த மரபுகள் மீறப்படுகின்றன.

மொழி முதல் எழுத்துக்கள்:

மொழிக்கு முதலில் ட்,ர்,ல் மற்றும் ஆய்தம் போன்ற எழுத்துக்கள் வராததாகக் கருதப்பட்டன, ஆயின் தற்காலத் தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்து வழங்கப்படுவதால் இவ்விதி மீறப்பட்டு இவ்வெழுத்துக்கள் மொழிக்கு முதலில் வரத்தொடங்கின. இவ்வகையில் கீழ்க்கண்ட சொற்கள் தமிழில் காணப்படுகின்றன.

டவல், டல், டர்னா, டப்பா, டானிக், டாக்டர், டாங்கி, டிரக்கர், டிக்கட், டிப்ளமோ, டிரிப்யூனல், டீசிங், டீசல், டெலிகிராம், டெண்டர், டெலிபோன், டைரி, லக்ஸ், லட்சம், லஞ்சம், லட்டு, லட்சார்ச்சனை, லாரி, லாட்டரி, லாபம், லீலை, லீவ், லேட், லேடி, லுங்கி, லூட்டி, லுக், ரசிகர்கள் ரம்ஸான், ரப்பர், ரத்து, ரயில், ரயில்வே, ரகசியம், ராணுவம், ராஜினாமா, ரிசர்வ், போலிஸ், ரேட், ரைட், ரைஸ், ரோந்து,

ஃபோர்டு, ஃபாத்திமா, ஃபேன், ஃபார்மஸ’, ஃபிட்டர், ஃபுட், புரொடெக்ட்ஸ், ஃபைன், ஆய்தம் முதலில் வரும் சொற்கள் அருகியே காணப்படுகின்றன. மேலும் வடமொழி எழுத்துக்களான ஜ, ஸ், ஷ,, போன்ற எழுத்துக்கள் மொழிக்கு முதலில் வருதலும் காணப்படுகிறது. கீழ்க்கண்ட சொற்கள் இவ்வகையில் காணப்படுகின்றன.

ஜட்ஜ், ஜம்பம், ஜனவரி, ஜமீன், ஜவுளி, ஜனநாயகம், ஜான், ஜாடி, ஜோர், ஜோடி, ஸ்டேசன், ஸ்டுடியோ, ஸ்டோர், ஸ்ட்ராங், ஸ்டார், ஸரசுவதி, ஷங்கர், ஷர்பத், ஷன்முகம், ஷாப், ஹரிசன், ஹால், ஹாஸ்பிடல், ஹாய், ஹ’ந்து, ஹ’ந்தி,

மொழியிறுதி எழுத்துக்கள்:

தமிழ் மரபில் வல்லின மெய்யெழுத்துக்கள் மொழிக்கு இறுதியில் வருதல் இல்லை, ஆயின் இம்மரபு மீறப்பட்டு வல்லின மெய்யெழுத்துக்கள் மொழிக்கு இறுதியில் வரத்தொடங்கின. கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுக்கள் இவ்வகையில் அமைகின்றன.

கிளார்க், ப்ளாஸ்க், பிரேக், பாங்க், ஸ்டிரைக், பெஞ்ச், வாட்ச், சுவிட்ச், பிஸ்கட், கோர்ட், யூனிட், சீக்ரெட், டிக்கெட், சர்டிபிகேட், சீட், ஏஜெண்ட், பட்ஜெட், கிரிக்கெட், செமபைட், பார்லிமெண்ட், ஜாக்பாட், யூனிட், ராக்கெட், பந்த், பரத், சர்பத், டைப், கிளப், பல்ப், ஷாப், டைப்,

மேலும் வடமொழி எழுத்துக்களான ஸ்,ஜ்,ஷ் போன்றனவும் சொற்களின் இறுதியில் காணப்படுகின்றன.

போலீஸ், எக்ஸ்பிரஸ், கிளாஸ், ஏஜென்ஸ“ஸ். இன்ஸ்சூரண்ஸ், ஆபிஸ், பஸ், க்ளுகோஸ், ஸ்டோர்ஸ், ஜட்ஜ், பேட்ஜ், பஜாஜ், புஷ், ஜ்ஷ் போன்ற எழுத்துக்களின் வருகை அருகியே காணப்படுகின்றது.

மொழி முதல் மெய்மயக்கம்:

தமிழ்மரபுக்கு மீறிய மொழிமுதல் மெய்ம்மயக்கம், பிற மொழிச்சொற்களின் வருகையால் தமிழில் இன்று காணப்படுகிறது. கீழ்க்கண்ட சொற்கள் இவ்வகையில் காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டு: பேங்க, பார்லிமென்ட், கோர்ட், சர்ட், சார்க், பெல்ட்,

சொல்லிலக்கணம்:

பிறமொழிச் சொற்களுடன் தமிழின் பன்மை விகுதிகளும் வேற்றுமை உருபுகளும் இணைதல் இல்லை, ஆயின், இம்மரபு, தற்பொழுது, மீறப்பட்டு பன்மை விகுதிகளும், வேற்றுமை உருபுகளும் பிறமொழிச் சொற்களுடன் இணைதலைக் காணலாம்.

பன்மை விகுதிகள் இணைதல்:

''கள், அர், ஆர், அர்கள், போன்ற விகுதிகள் இவ்வகையில் இணைகின்றன. கள் விகுதியின் ஆட்சி அதிகமாகக் காணப்படுகிறது.

எடுத்துக்காட்டு: பஸ்கள், ஃபேன்கள், ரன்கள், பாக்கெட்டுகள், விக்கெட்கள், ரசிகர்கள், ரயில்கள், என்ஜின்கள், ஏஜெண்டுகள், ஓட்டுக்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், டிராக்டர்கள், வேஸ்டிகள், சர்ட்டுகள், வருசங்கள், போலீசார், புரோகிதர்கள், என்ஜ“னியர்கள்.

புதிய பன்மையாக்கம்:

ஆங்கிலப் பன்மை விகுதியைத் தமிழ்ச்சொற்களுடன் இணைத்துப் புதிய பன்மைச் சொல்லை உருவாக்கும் போக்கும் இதழியல் வழக்கமாக இன்று வழங்கப்படுகிறது.

எடுத்துக்காட்டு:

குட்டீஸ் (தினமலர் 29.2.2004), வாண்டூஸ் கார்னர் (தினமலர் 29.2.2004) கலக்கல்ஸ் (தினத்தந்தி 1.3.2004)

வேற்றுமை உருபுகள் இணைதல்:

பிற மொழிச் சொற்களுடன் தமிழ் வேற்றுமை உருபுகள் இணைதல் தமிழ் மொழி மரபில் காணப்படாத ஒன்று ஆயின் தற்போது இம்மரபு மீறப்பட்டு வேற்றுமை உருபுகள் பிறமொழிச் சொற்களுடன் சேர்தல் பெருவழக்கமாக அமைகின்றது. இவ்வகையில் பல வேற்றுமை உருபுகள் இணைகின்றன.

காரைத் தானே ஓட்டிச் சென்றான்

பவுடரைப் பூசினாள் ஈவ் டீசிங்கைத் தடுக்க முயற்சி

பென்சிலினை உபயோகித்தனர்

பஸ்ஸைப் பிடித்தான், பவர்ஸை காட்டினான்

பஸ்சால் ஒரு பயனும் இல்லை,

பஸ்சில் தவறி விழுந்த பெண் சாவு

ரோட்டில் நடந்து சென்றான்

இண்டர்நெட்டில் ரிசல்ட் பார்க்கலாம்,

பென்சனுக்கு பதில் புதிய திட்டம்

டிரைவருக்குக் காயம்.

கண்டெக்டரது தலையில் அடி

இவ் அமைப்பில் ''ஐ'' வேற்றுமை உருபின் வழக்கே அதிகமாகக் காணப்படுகிறது.

புணர்ச்சி இலக்கணம்:

பிறமொழிச் சொற்கள் தமிழில் கலப்பதால் புணர்ச்சி இலக்கணமும் தமிழ் இலக்கணம் போன்றே செயல்படத் தொடங்கின.

ஒற்றுக்கள் வருதல்:

பென்ஷனுக்குப் பதிலாக ஒரே தவனை (தினமலர், 3.3.2004)

குட்டிஸ்க்கு பாத் டாப் குளியல் உண்டா? (தினமலர், 29.2.2004)

ப்ரேக்கைப் போட்டான்

பஸ்ஸைக் கடத்திச் சென்றான்.

இயல்பான புணர்ச்சிவிதி போல அமைதல்:

தமிழ் மொழியில் காணப்படுகிற குற்றியலுகரப் புணர்ச்சி போன்று (ஆடு+ஐ ஆட்டை, காடு + ஐ காட்டை) ஆங்கிலச் சொல் கலப்பிலும் புணர்ச்சி அமைகின்றது.

எடுத்துக்காட்டாக ரோடு + ஐ ரோட்டை என இயல்பாக வழங்கப்படுதலைக் காண முடிகின்றது.

அவன் ரோட்டைக் கடந்து சென்றான்.

எனவே பிறமொழிச் சொற்கள் தமிழ்மொழியில் கலப்பதால் தமிழ் மொழியின் இயல்பான இலக்கண விதிகள் மீறப்படுதலோடு புதிய சொல் வழக்குகள் காணப்படுதலையும் அறிய முடிகிறது. மேலும் இதுபோன்ற இலக்கண மாற்றங்களை இன்று இயல்பாகவே மொழியும் மக்களும் ஏற்றுக் கொள்ளும் நிலையையும் உணர முடிகின்றது.

நன்றி: பிறதுறைத் தமிழியல்

 

தமிழ்மொழி வரலாற்றில் அண்ணா ஒரு திருப்புமுனை - அ.சீ. மகாலெட்சுமி

தமிழ்மொழி வரலாற்றில் எண்ணற்ற மேதைகள், மொழி எழுச்சியை வளர்த்து புரட்சி ஏற்படுத்தியுள்ளனர். மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோர் வரிசையில் அறிஞர் அண்ணாவும், தமிழ் மொழி வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அரசியல், வரலாறு சமூகம் போன்றவைகளில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்திய அண்ணாவை மக்கள் உணர்ந்தாலும், தமிழ் மொழித்துறையில் அவர்நிகழ்த்தியுள்ள சாதனைகளையும், மாற்றங்களையும் போதிய அளவு மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆகவே தமிழ்மொழி வரலாற்றில் அறிஞர் அண்ணா எவ்வாறு திருப்புமுனையாக விளங்குகிறார் என்பதை இக்கட்டுரை ஆய்வு நோக்கில் எடுத்துரைக்கிறது.

தமிழின் நிலை: சோழர் காலத்தில் தமிழன் நிலை சிறந்து விளங்கியது. சோழ அரசர்களால் தமிழ் மொழி உயர்ந்திருந்தது என்பதை,

''பிற்காலச் சோழரின் காலத்தில் தமிழ் இலக்கியம் புகழேணியின்

உச்சியை அடைந்தது. அவர்கள் தமிழ்மொழியை ஆதரித்ததால்

அவர்கள் அவைக் களத்தில் தமிழணங்கு குறுநகை செய்து

பொலிவுடன் வீற்றிருந்தாள்''

என்று கே.கே. பிள்ளை குறிப்பிடுகின்றார். இவ்வாறு சிறந்தோங்கிய தமிழ், வடமொழியோடு சேரத்தொடங்கிப் பின்னாளில் மணிப்பிரவாள நடையினை வடமொழி கற்ற அறிஞர்கள் தமிழில் புகுத்தினர். தமிழிலும் வடமொழிச் சொற்கள் கலக்கும் முயற்சியினைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிஞர்கள் செய்யத் துவங்கியிருக்கிறார்கள். இதனை, ''முத்தும் பவளமும் கலந்த மாலை போல் தனி அழகு ஏற்படுகிறது என்று சொல்லி வடமொழி படித்த அறிஞர்கள் அந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். மணிப்பிரவாள நடை என்று அதற்குப் பெயர் தந்து பரப்ப முயன்றார்கள்''. என்று மு.வ. அவர்கள் குறிப்பிடுகிறார். எனவே தமிழ் மொழியோடு வடமொழி கலந்திருந்ததை உணரலாம். அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழ்நாடு அயலவரின் கைகளில் இருந்ததால் தமிழ்மொழி தாழ்நிலை அடைந்தது. ''அயலவரின் ஆட்சிக்கு அடிமையான தமிழ்நாட்டில் தமிழ்மொழி தாழ்நிலையை அடைந்தது. ஆட்சியாளர்களின் ஆதரவின்மையால் தமிழ்மொழி வளர்ச்சி தடைப்பட்டதுடன் தன்நிலை திரிந்து கேடும் அடைந்தது.'' என மது.ச. விமலானந்தம் கூறுவார். தமிழக வரலாற்றில் தமிழன் நிலையினை இதைப்போன்ற பல நூல்களில் அண்ணா கற்றுணர்ந்தார் எனலாம்.

தமிழ் பற்றிய விழிப்புணர்ச்சி: ''கால்டுவெல்லின் திருநெல்வேலி மாவட்ட வரலாறு(1881) அ.சு. கனகசபைப் பிள்ளையின் 1800 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்(1904) கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் சோழர்(1924) பாண்டியர் அரசு(1929) போன்ற பல நூல்கள் தமிழரின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துக்காட்டின. இவற்றால் தமிழரிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது.'' கால்டுவெல் தமிழ்மொழியின் தன்மையைத் தமிழர்களுக்கு உணர்த்தியதால் தமிழர்கள் விழிப்புணர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து தந்தைப்பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தமிழரிடையே மேலும் விழிப்புணர்வு பெறக் காரணமாக அமைந்தது. கால்டுவெல், தந்தைப்பெரியார் போன்றவர்கள் அண்ணாவிற்குத் தமிழ் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினர்.

முத்தமிழை வளர்த்த அண்ணா: பெரியாரின் நட்பு அண்ணாவின் மொழி ஆற்றலுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. பேச்சால் இயற்றமிழை வளர்த்தார். முதலமைச்சராகப் பதவி ஏற்கும் பொழுது தமிழ்மொழியிலேயே பதவி ஏற்பு உறுதிமொழியினை மேற்கொண்டார். தமிழ் இசை தெலுங்கு, சமஸ்கிருத மொழியால் வீழ்ச்சி பெற்றிருந்தது. இதையறிந்த அண்ணா தமிழ்மொழி எல்லா இடங்களிலும் பிறமொழிப்பாடலால் நிரம்பியிருக்கிறது என்பதனைக் குறித்து ''தமிழரின் இசைப்பற்று தியாகய்யர் காலத்துப் பலப்பல நூ‘ற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தது. கடலைக் கண்டால் ஒரு பாடல், கரியைக் கண்டால் ஒரு பாடல், தளிரைக் கண்டால் ஒரு பாடல் எனத் தமிழர் தமது உணர்ச்சியை இசை வடிவில் எத்தனையோ சிறப்புடன் வெளிப்படுத்தி வாழ்ந்தனர். இசைச் செல்வத்தை இவ்வளவு பெற்று முன்னம் வாழ்ந்த தமிழர் இன்று கேட்பது தமிழ் இசையை அல்ல. தமிழ் நாட்டில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாக இருக்க வேண்டும்.'' என்று அண்ணா தமிழ் இசைக்குரிய தன்மையை விளக்கி இசைத்தமிழை வளர்க்கப் பாடுபட்டார். முத்தமிழில் ஒன்றான நாடகத்துறையிலும் ஓர் இரவு, வேலைக்காரி, ரங்கூன் இராதா, போன்ற நாடகங்களை எழுதித் தமிழ்மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தார்.

தமிழ்மொழியில் இறைவழிபாடு: கோவிலில் சமஸ்கிருத மொழியில் சொல்லப்படுகின்ற முறையை மாற்றித் தமிழில் தெய்வ வழிபாட்டை நடத்த வேண்டும் என்று முயன்று வெற்றி கண்டார். இதனை, ''நாம் இந்த அர்ச்சனை முறை மாறுவதைக் கொண்டு மாபெரும் புரட்சி வெற்றிகரமாக நடந்தேறிவிட்டது என்று கருதிப் பொன்னார் மேனியனைப் போற்றுதும் என்று கூறித் திருப்திப்பட்டுவிடவில்லை. இது துவக்கம் இதைத்தொடர்ந்து செய்யப்பட வேண்டியவை பலப்பல உள'' எனத் தமிழ்நாடு நாளிதழில் குறிப்பிடுகின்றார். இறைவழிப்பாட்டிலும், தமிழ் அமையச் செய்து தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்திருக்கிறார்.

இந்தி மொழி எதிர்ப்பு: தமிழ் எழுத்துக்களில் பிறமொழி கலந்தால் தமிழினம் அழிந்துவிடும் என்ற நோக்கோடும், ஒரு வட்டார மொழியை ஆட்சி மொழியாக்குவது இந்திய ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்ற நோக்கோடும் இந்தி எதிர்ப்பினை வளர்த்தார். இந்தியா பரந்த நிலப்பரப்பு இதில் ஒரு மொழி ஆட்சி என்பது இயலா ஒன்று என்று கருதியே, ''இந்தியா ஒரு நாடல்ல, ஒரு உபகண்டம். பல இனமதத்தோர் வாழும் ஒரு பரந்த நிலப்பரப்பு. இங்கே ஒரு ஆட்சி நிலவ முடியாது. அது போலவே ஒரே மொழி அரசாங்க மொழியாவதும்.'' என்று அண்ணா குறிப்பிடுகிறார் என்பதைத் தமிழ்ப்பித்தன் விளக்குகின்றார். தமிழ்மொழி மட்டும் அரசு மொழியாக தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தளபதியாகவே விளங்கினார். தமிழர்களைப் பேச்சாலும், எழுத்தாலும் இந்தி எதிர்ப்பு உயர்வினைத் தூண்டி, பல இடங்களிலும் இந்த எதிர்ப்புக்காக கூட்டம் கூட்டி உரையாற்றினார்.

தமிழ்மொழியை ஆட்சிமொழி ஆக்குதல்: தமிழ் ஆட்சிமொழியாக, எல்லாத்துறையிலும் தமிழே சிறந்து விளங்கவேண்டும் என்பதில் தனியாக ஆர்வம் காட்டினார். அதனுடைய விளைவாக, ''தாய்மொழி தமிழ் உலகமொழி ஆகிய இருமொழித் தீர்மானத்தைச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றல் செய்தார்'' பல சோதனைகளைக் கடந்து தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்கினார்.

ஆய்வு முடிவுகள்: தமிழ்மொழியின் இயல், இசை, நாடகம். என்ற முத்தமிழையும் வளர்த்தார். தமிழில் பிறமொழிக் கலப்பை வெறுத்தார். ஏனெனில் தமிழுடன் பிறமொழி கலந்தால் தமிழும் தமிழினமும் அழியும் என நம்பினார். ஆகையால் தமிழோடு கலந்து கொண்டிருக்கிற வடமொழியை எதிர்த்தார். அரசின் மும்மொழிக் கொள்கையும் எதிர்த்துப் போராடினார். தமிழே ஆட்சிமொழியாக வேண்டும் என்று வரும்பினார். அதுபோலவே தமிழை ஆட்சி மொழியாகவும் ஆக்கிக் காட்டினார்.

அரசியல், வரலாறு, சமுதாயம் என பலவற்றில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்திய அண்ணா, தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தார்.

நன்றி: பிறதுறைத் தமிழியல்

 

கம்பன் காப்பியக் கட்டமைப்பு - நா. மணிமேகலை

முன்னுரை: தமிழிலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத் தான் காப்பியகாலம் தொடங்குகிறது. இக்காப்பிய வளர்ச்சிக்கு வித்திட்டவர் இளங்கோவடிகள். காப்பியம் என்ற சொல் காவ்யம் என்ற வடசொல்லின் திரிபு என்கிறார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை. காவியம் என்ற வடசொல்லின் பொருள் ''பாட்டு'' அல்லது செய்யுள் என்பதாகும். ஒவ்வொரு இலக்கியத்திற்கும் ஒரு கட்டமைப்பு உண்டு. கவிஞன் ஒலிகள், சொற்கள், தொடர்கள் முதலியவற்றைப் பயன்படுத்திக் கவிதை புனைகின்றான். எனினும் இவற்றிற்கு அப்பால் இவை அனைத்தையும் ஒன்றாக இணைக்கின்ற ஒருமைப்பாடு ஒன்றுள்ளது. அவ்வொருமைப்பாடு தான் அக்கவிதைக்கு ஓர் உள்ளுறைப் பொருளைத் தருகின்றது. காப்பிய இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் அதன் பல்வேறு கூறுகளையும் ஒருங்கிணைக்கும் ஒருமைப்பண்பு ஒன்றுள்ளது. அதனையே கட்டமைப்பு என்று கருதலாம். அக்கட்டமைப்பு கம்பராமாயணத்தில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கட்டமைப்பு பற்றிய கொள்கைகள்: காப்பியக் கட்டமைப்பு குறித்து அரிஸ்டாட்டில் முதல், இடை, கடை என்றும் முத்திறம் பெற்று முழுமையாக அமைதல் வேண்டும் என்று கூறுகின்றார். மேலும் அவர் பல்வேறு உறுப்புகளைக் கொண்டிருப்பினும் உறுப்புகள் எல்லாம் ஒருங்கிணைந்து உயிர்ப் பொருளின் இயல்பைப் புலப்படுத்துவதைப் போன்று நாடகம், காப்பியம் முதலியன அமைதல் வேண்டும் என்றும் கூறுகின்றார். ஒரு தலைவனைக் குறித்து வருவன அனைத்தும் ஒருமை உணர்ச்சியைத் தோற்றுவிக்க முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்ச்சிகள் மட்டும் கட்டமைப்புக்குத் துணை செய்யும் என்று அரிஸ்டாட்டில் விளக்குகின்றார். தமிழ்க் காப்பிய மரபுகளில் கட்டமப்பு குறித்து விளக்கமாக கொள்கை ஒன்றும் இல்லை. ஒரு தலைவனைப் பற்றிய வரலாறு காப்பியமாகப் பாடப்படும் மரபு தமிழில் உள்ளது என்று உ.வே.சா. அவர்கள் குறிப்பிடுகின்றார். தன்னிகரில்லாதத் தலைவனுடைய வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை இல்லறம், அரசியல் பற்றிய செய்திகளைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது.

பாடுபொருள்: காப்பியம் முழுவதையும் ஒருங்கிணைக்கின்ற பாவிகத்தை உள்ளுறைப் பொருள் என்று குறிப்படுகின்றோம். காப்பிய நிகழ்ச்சிகள் முழுவதிலும் உட்பொருளாக நின்று அனைத்தையும் இணைப்பது உள்ளுறைப் பொருள் என்னும் கருத்தில் இங்கு ஆளப்படுகின்றது. பாவிகம் என்பது காப்பியப் பண்பு என்கிறது தண்டியலங்காரம். இது கூறுகின்ற பாவிகம் காப்பியக் கட்டமைப்பைக் குறிக்கும் என்பார் எஸ்.இராமகிருஷ்ணன். காப்பியத்தில் இடம் பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஊடுருவி நிற்கும் ஒருமைப்பாடு உணர்ச்சியைத் தான் பாவிகம் என்று குறிப்பிட்டுள்ளார் என்று கருதலாம். கதையின் நடுநாயகமான பொருள் பாடுபொருள் எனப்படுகிறது. கதை நிகழ்ச்சிகள் அனைத்தும் எதனை மையமாகக் கொண்டு பின்னப்படுகின்றனவோ, அது இங்கே பாடு பொருள் எனக் குறிக்கப்படுகின்றது. பாடு பொருளும் பாவிகமும் தொடர்புடையன. பாடு பொருள் வெளிப்படையான கதையின் மையப் பகுதியைக் குறிப்பது. பாவிகம் அல்லது உள்ளுறை அக்கதையின் குறியீட்டுப் பொருளைக் குறிப்பது ஆகும். கம்பராமாயணக் கதையை எடுத்துக் கொண்டால் இராவண வதம் அதன் பாடுபொருள். காப்பிய நிகழ்ச்சிகள் அமைத்தும் இத்தலைமை பொருளை மையமாகக் கொண்டு பின்னப்படுகின்றன. இராவணவதத்தின் உள்ளுறைப் பொருள் அறத்தின் வெற்றியாகும். இராவணன் அறத்திற்கு எதிராக நிற்கின்றான். அவனுடைய வீழ்ச்சி அறத்தின் வெற்றியாகின்றது. இதனை வேறொரு வகையில் சொல்வதாக இருந்தால் சீதையின் கற்புத் திறத்திற்குக் கிடைத்த வெற்றி எனலாம். கற்பின் வெற்றி, அறத்தின் வெற்றி. எனவே அது பாவிகப் பொருளாகின்றது. எனவே எடுத்த எடுப்பிலேயே

''ஆசலம்புரி ஐம்பொறி வாளியும்

காசு அலம்பு முலையவர் கண்எனும்

பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்

கோச வம்புனை ஆற்றுஅணி கூறுவோம்''

என்று சீதையின் கற்புத் திறத்தைப் பாராட்டுகின்றார் கம்பர்.

கட்டமைப்புத் திறன்: காப்பிய நிகழ்ச்சிகள் அனைத்தும் மையக் கதையோடு ஒருங்கு இணைக்கப்படுகின்ற திறத்தைக் கட்டமைப்புத் திறன் என்று வ.வெ.சு குறிப்பிடுகின்றார். பாடுபொருளின் முதன்மையை வலியுறுத்தும் வகையில், முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாம் காப்பியப் பாடுபொருளுக்கு உறுதுணையாகின்றன. இராவணன் வீழ்ச்சி கம்பராமாயணத்தின் பாடுபொருளாதலால் காப்பிய நிகழ்ச்சகள் அதனை நோக்கி உருவாவதைக் கம்பர் ஆங்காங்கு குறிப்பிட்டுச் செல்லுகின்றார். கம்பராமாயணத்தின் பாடுபொருள் இராவணன் வீழ்ச்சி இராவணனை அழிப்பதற்காகப் பரம்பொருளான திருமால் அயோத்தியில் தசரதன் மகனாக அவதரிக்கின்றான். மனிதனாக நடிக்கின்றான். இதனைக் கம்பர் காப்பியம் முழுவதிலும் மறவாது நினைவுறுத்திக் கொண்டு செல்லுவார். எல்லா நிகழ்ச்சிகளிலும் இப்பாடு பொருள் ஊடுருவி நிற்பதைக் காட்டுவார். பாலகாண்டத்தில், முனிவனின் வேள்வியைச் சிதைக்க முனைந்த தாடகையை இராமன் கொல்லுகின்றான். இராமன் ஏவிய பகழி அவள் மார்பில் ஊடுருவிச் செல்ல, அவள் தரையில் வீழ்கின்றாள். அவளுடைய வீழ்ச்சி இராவணன் வீழ்ச்சிக்கு முன்னறிவிப்பாக இருப்பதாகக் கம்பர் பாடுகின்றார். இராவணன் இறுதியை முன்னரே அறிவிப்பது அவனுடைய வெற்றிக் கொடி அறுந்து வீழ்ந்ததைப் போன்று தாடகை வீழ்ந்தாள் எனக் கம்பன் உவமிக்கும் பொழுது காப்பியப் பாடு பொருள் நினைவூட்டப்படுகின்றது.

இராமன் கைகேயின் சூழ்வினையால் முடிதுறந்து காடேகுகின்றான். காட்டிலே இருந்த தன் மனைவியை எடுத்துச் சென்ற இராவணனைக் கொன்று தன் மனைவியைச் சிறை மீட்கின்றான். எனவே இவ்விரண்டும் தொடர்பில்லாத தனிக் கதைகள் என்றும், இவ்விரண்டையும் ஒன்றாக இணைத்து, ஒருவனைத் தலைவனாக்கி வால்மீகர் அதனை ஒரு காப்பியமாக்கினார் என்று ஜெர்மானிய திறனாய்வாளர் கூறுகின்றார். மேற்போக்காகக் காண்போமாயின், தயரன் அரண்மனைச் சூழ்ச்சிக்கும் இராவணன் அழிவிற்கும் தொடர்பு எதுவும் இல்லை - ஆழ்ந்து சிந்தித்தால் இக்கருத்து உண்மையன்று என்பது புலப்படும். தயரதன் எவ்வளவோ மன்றாடியும் கைகேயின் மனம் மாறவில்லை. தேவர்களின் சூழ்ச்சியால் கைகேயின் மனமாற்றம் நிகழ்கின்றது. இராவணன் வீழ்ச்சிக்குரிய வித்து அயோத்தியா காண்டத்தில் விதைக்கப்படுகின்றது. காப்பியப் பாடுபொருளான இராவணன் வீழ்ச்சிக்கு இடையூறு செய்வது போலமைகின்றது பரதன் செயல். இராமனைத் திரும்பவும் அயோத்தி நகருக்கு அழைத்துச் செல்லப் பரதன் முயல்கிறான். இராமனுக்கும் பரதனுக்கும் நடக்கும் அன்புப் போட்டியில் இராமன் உரையிழந்து நிற்கிறான். இவ்வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல், செவ்வழித்து அன்று நம் செயல் என்று தேவர்கள் சிந்தையழிந்து கூறுகின்றனர். தேவர் கட்டளையை மறுக்காது குறித்த காலம் முழுவதும் அரசாள வேண்டும் என்று இராமன் பரதனை வேண்ட, அவன் திருவடி நிலைகளைப் பெற்றுக் கொண்டு திரும்புகின்றான். இராவண வதமே காப்பியப் பாடுபொருள் என்னும் கட்டுக்கோப்புத் திறனை உணர்ந்த கம்பர் கதையில் எழும் சிக்கலைத் தேவர் குறுக்கீட்டால் நீக்கி, இராமனைப் பஞ்சவடிக்குக் கொண்டு செல்கிறார். காப்பியத்தின் முழுப் பொருளில் கவனம் செலுத்துகின்ற கம்பர் இராவணன் தலையறுப்புண்டு தரையில் சாயப் போவதிற்குக் கடைக்கால் இட்ட நிகழ்ச்சியாகச் சூர்ப்பனகையின் மானபங்கத்தைச் சித்தரிக்கின்றார்.

இறுதியில் இராமன் கணைகளால் இராவணன் வீழ்கின்றான். முக்கோடி வானாளும் முயன்றுடைய பொருந்தவமும் உடைய வீரன் மண்ணிலே வீழ்ந்து கிடக்கின்றான். அப்பொழுது அவன் மனைவி மண்டோதரி அவன் மேல் விழுந்து அழுது புலம்பும் பொழுது, கதை முழுவதையும் ஒன்றாக இணைத்து அவள் வாயிலாகப் பேச வைக்கின்றார் கம்பர்.

''காந்தையருக்கு அணி அனைய சானகியார்

பேரழகும், அவர்தம் கற்பும்,

ஏந்துபுயத்து இராவணனனார் காதலும், அச்

சூர்ப்பனகை இழந்த மூக்கும்

வேந்தர்பிரான், தயரதனார் பணிதன்னால்

வெங்கானில் விரதம் பூண்டு

போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார்

பெருந்தவமாய்ப் போயிற்று அம்மா''

கைகேயின் சூழ்ச்சியால் இராமன் காடுபுக்கதும், சூர்ப்பனகையின் தோற்றமும், இராவணன் சீதை மேற்கொண்ட காதலும், இராவணன் அழிவுக்கும், அரக்கர்களின் அழிவிற்கும் காரணமாகித் தேவர்களின் வாழ்வுக்குத் துணையாகின்றன என்று புலம்புகின்றாள் மண்டோதரி. காப்பியத்தின் பாடுபொருளான இராவணன் வீழ்ச்சி கம்பரின் புலமைத் திறத்தால் முன்னும் பின்னும் செவ்விதாக இணைக்கப்பட்டு முழுமை அடைகின்றது. கம்பருடைய கட்டுக்கோப்புத் திறத்தை வியந்து பாராட்டும் வ.வே.சு அச்சம்பவங்கள் அனைத்தும் பளிங்குக் கற்கள் போல நின்று இராவண வதமாகிய மண்டபத்தைக் கட்டவே கருவியாக நிற்கின்றன என்பது கவியின் அபிப்ராயம் எனக் குறிப்பிடுகின்றார்.

முழுமைக் காட்சி: அரிஸ்டாட்டிலின் கருத்துப்படி கதையமைப்பு முதலும், இடையும், கடையும் அழகுற அமையப் பெற்று உறுப்புக்கள் ஒன்றோடென்று ஒன்றி இயங்கும் ஓர் உயிர்பொருளை ஒத்திருக்கின்றது கம்பராமாயணக் கதையமைப்பு. இராமாயணக் கதையின் முதற்பகுதியாக விளங்குவது மந்தரை சூழ்ச்சியாகும். அதற்குமுன் நிகழும் நிகழ்ச்சிகள் அம்முதல் பகுதிக்குத் துணையாகின்றன. இராமன் அரசு துறந்து காடுபுகுதலும், முனிவர்களைச் சந்தித்தலும் இம்முதற் பகுதியின் விளைவுகளாகும். இடைப்பகுதி, சூர்ப்பனகை சூழ்ச்சியில் தொடங்குகின்றது. கரதூடணர் வதையும், இராமன் சுக்கீரிவன் நட்பும் இவ்விடைப் பகுதியின் விளைவுகளாகின்றன. இலங்கைப் படையெடுப்பின் மூலமாக இராவணன் கொல்லப்படும் நிகழ்ச்சி கதையின் இறுதிப் பகுதியாகும். பரம்பொருள் இராமனாக அவதரித்ததன் நோக்கம் இங்கு நிறைவேறுகின்றது. அரக்கர்களின் அழிவு, நல்லவர்களின் வாழ்வாக அறத்தின் வெற்றியாக அமைகின்றது. இவ்வாறு முதல், இடை, கடை என்னும் முப்பகுதிகளும் ஒன்றோடொன்று இணைந்து முழுக்கல்லில் செதுக்கிய சிற்பத்தைப் போன்று முழுமைக்காட்சி அளிக்கின்றது.

காப்பியத்தின் தொடர்பழகு: காப்பியத்தில் முன்னும் பின்னும் நிகழ்கின்ற செயல்கள், பேசும் பேச்சுக்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு, ஒன்றின் விளக்கமாகவோ, வளர்ச்சியாகவோ நினைவூட்டலாகவோ அமைந்து காப்பியத்தின் ஒருமைப்பாட்டு நயத்தை உயர்த்துகின்றன. ''இராமாயணத்தை முழுமையாக, ஒவ்வொரு பாடலையும் முழுமையின் பாகமாக, ஒவ்வொரு சொல்லையும் பாகத்துட் பாகமாக உறவு முறையோடு காண வேண்டும்'' இதுவே காப்பியத் தொடர்பழகு என்று வ.சு.ப.மாணிக்கம் கூறுகிறார். தொடர்பழகினால் காப்பியம் ஒருமைக் கோலம் பெறுகின்றது. விசுவாமித்ர முனிவனின் பின்னே தயரதன் இராமனை அனுப்பியதை உவமிக்கப் புகுந்த கம்பர் ''மன்னன் இன்னுயிர் வழிக்கொண்டாலென'' என்று உயிர் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உவமையைக் கூறினார். இராமன் தாடகையை அழித்து முனிவன் வேள்வியைக் காத்து, வில்லையிறுத்துச் சானகியைக் கரம்பற்றவிருக்கும் வேளையில், மிதிலைக்கு வந்த தயரதன் இராமனைச் சந்திப்பதை உவமிக்கின்ற புலவர் முன்னர்க் கூறிய உவமையை மறவாது,

''தேவரும் தொழுகழல் சிறுவன் முன்பிரிவது ஓர்

ஆவிவந் தென்னவந்து, அரசன் மாடு அணுகினான்''

என்று அமைப்பார். முன்னர்க் கூறிய உவமைக்குப் பொருத்தமாக நூற்றுக்கணக்கான பாடல்களுக்குப் பின்னர் ''பிரிந்த உயிர் உடலைமேவியதென்று'' உரைத்து உவமையை முழுமையாக்கும் தொடர்பழகு சிறப்புடையதாகும்.

காண்டங்களின் அமைப்பு: காப்பியப் பெரும்பிரிவுகளாகச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் பெயர்களைத் தண்டியலங்காரம் கூறுகின்றது. கம்பருடைய காப்பியம் வால்மிகி காப்பியத்தைப் போலன்றி ஆறு காண்டங்களுடன் நிறைவு பெறுகின்றது. கம்பராமாயணத்தின் பெரும்பிரிவுகளான காண்டப் பெயர்கள் வால்மீகத்தை ஒட்டியே பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம் சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனப் பெயர் பெறுகின்றன. இராமனுடைய இளமைப் பருவ நிகழ்ச்சிகளை விளக்குவது பால காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் தவிர ஏனைய அயோத்தியா, ஆரணிய, கிட்கிந்தா காண்டங்கள் அவ்வவ்விடங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் தலைமை கருதிப் பெயர் பெறுகின்றன. யுத்த காண்டம் இராம இராவணப் போரைக் குறிக்கின்றது. சுந்தரகாண்டம் இலங்கையில் நிகழினும் அப்பெயர் பெறவில்லை. இராமன் நேரடியாகப் பங்கேற்காத காண்டம் இக்காண்டம். காப்பியத் தலைவன், தலைவியரின் ஞான சௌந்தரியத்தை, அழகைப் புலப்படுத்துவதால் சுந்தரகாண்டம் என்னும் பெயர் பெற்றது என்பர். யுத்த காண்டம் என்னும் பெயர் தமிழ் இலக்கண மரபுக்குப் பொருந்தவில்லை என்று கூறி, அது இலங்கை காண்டம் என்று பெயரிடப்பட்டிருக்க வேண்டும் என்று முருகப்பா என்பவர் கூறுவார். எனவே கம்பர் முதல் நூலை பின்பற்றியிருப்பது தெளிவாகின்றது.

நன்றி: பிறதுறைத் தமிழியல்.

 

தமிழில் தொல்பொருள் ஆய்வு - க. பீரிதா

ஆய்வு வரலாற்றின் நிலைகள்:

1910 க்கு முன்பு வரை ஐரோப்பியர்கள் பழம் பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினர். எனவே ஆரம்பத்தில் இந்த ஆய்வு, பொழுது போக்காகவே அமைந்தது. தங்களுடைய மதத்தை பரப்புவதற்காக இங்கு வந்த ஐரோப்பிய பாதிரிமார்கள் இந்தியர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினர். இந்திய ஆராய்ச்சியாளர்கள் 1940 - 45 கால கட்டங்களில் நம் நாட்டின் தொல் பொருட்களை அறிய முற்பட்டனர். பின்பு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வட்டார அளவில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 1956 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு அமைந்தது. ஐரோப்பியர்களின் பொழுது போக்கு அம்சமாகத் தொடங்கி அப்பாதிரிமார்களின் ஆராய்ச்சி வளர்ச்சியாகி இந்திய அறிஞர்களின் கவனத்தை கவர்ந்து பின்பு வட்டார அளவில் மேன்மையடைந்தது.

பண்டைக்கால மக்கள் விட்டுச்சென்ற சான்றுகளின் அடிப்படையில் அவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றியும் அம்மக்களது நாகரிகத்தைப் பற்றியும் எடுத்தியம்புவது தொல்லியலாகும். ஐரோப்பியர்கள் பழம் பொருள்களைப் பொழுது போக்கிற்காக சேகரித்தனர். இதன் நீட்சியாகவே ''மியூஸ’யம்'' என்னும் அருங்காட்சியகம் பின்பு ஏற்பட்டது. ஆங்காங்கே இருக்கக் கூடிய மக்களின் வாழ்வியலையும், பழங்குடி மக்களைப் பற்றிய செய்திகளையும் விரிவாக எழுதி வைத்தனர். இவ்வாறு சேகரித்த குறிப்புகளை எல்லாம் ஒரு தொகுப்பாக வைத்தனர். இவ்வாறு முதன் முதலில் தொகுத்தவர் மெகன்ஸ’ ஆவார். இதுவே பின்னாளில் தொல்பொருள் ஆய்வாக உருவெடுத்தது. அதன் வழி பழங்கால மக்கள் பயன்படுத்திய நாணயங்கள், எழுத்துக்கள் பானைஓடுகள், பாறைகள், உருவங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள் ஆகியன கிடைத்தன.

1910 லிருந்து 1940 வரை:

ஐரோப்பியர்களிடையே கடந்த நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியர்களைப் பற்றிய ஆராய்ச்சி எழுந்தது. இந்தக் காலகட்டங்களில் ஐரோப்பியர் ஏற்படுத்திய கல்வித் துறையின் விளைவாக பல்கலைக் கழகங்களில் வரலாற்றுத் துறை தோன்றி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. இந்த ஆராய்ச்சிகளின் உச்சகட்ட வளர்ச்சியாக 1920 ஹ“ராஸ் பாதிரியார் ஹரப்பா - மொகஞ்சதாரோ தொல்பொருள் ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியே இந்திய தொல்பொருள் ஆய்வின் தொடக்கமாக அமைந்தது. இதனை தொடர்ந்து இந்திய வரலாற்றை எழுத தொல்பொருள் ஆய்வு சிறந்த வழிகாட்டியாய் அமைந்தது. இதனால் பிரிட்டிஷ்க்காரர்கள் இந்தியாவில் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தைத் தொடங்கி வைத்தனர். இந்நிறுவத்திலிருந்து பல தொகுப்புகள் அச்சாக வெளிவரத் தொடங்கின. இதன் விளைவாக, பிரிட்டானிகா - இண்டிகா என்ற கல்வெட்டுத் தொகுப்பு வெளிவந்தது.

இந்திய அறிஞர்களின் தொல்பொருள் ஆய்வு:

1940 க்குப் பின் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலகட்டத்தில் ஐரோப்பியர்களால் இந்த ஆய்வு நிறுத்தப்பட்டது என்றே சொல்லலாம். 1920 களில் நடந்த அளவு 1940 களில் இந்த ஆராய்ச்சி சிறப்படையவில்லை. இந்தியர்களே தொல்பொருள் ஆய்வில் கவனம் செலுத்தத் தொடங்கினர். இந்திய அரசாங்கத்தால் 1861 ல் தொல்லியல் ஆய்வு நிறுவனம் நிறுவப்பட்டது. இந்திய மொழிகளில் வந்த இதழ்களில் கல்வெட்டு தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை இந்திய கல்வெட்டு அறிஞர்கள் எழுதலாயினர். இந்தியத் துனைக்கண்டத்தில் தொல்லியலின் முக்கியத்துவம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தான் உணரப்பட்டது. வில்லியம் ஜோன்ஸ் என்பவர் 1784 இல் ஆசியக்கழகம் என்ற அமைப்பின் வாயிலாக இந்திய இலக்கியங்கள், கோயில்கள், கலைகள் ஆகியவற்றின் பெருமைகளை ஆய்வு செய்து வெளிப்படுத்தினார். இந்திய வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு காலத்தில் தொல்லியலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 1946 இல் வீலர் என்பவர் ''பண்டைய இந்தியா'' என்னும் மலரை வெளியிட்டார். மேலும் ''இந்தியத் தொல்லியல் - ஓர் மதிப்பீடு'' என்னும் இதழ் 1953 ஆம் ஆண்டிலிருந்து வெளியானது.

இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்றுப் புகழ் பெற்றது. ஆதலின் புதைப்பொருள் ஆராய்ச்சிக்கு ஏற்றது. எனவே இந்தியப் புதைபொருள் ஆராய்ச்சிக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. அக்கழகத்தில் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்தவர் அலெக்சாண்டர் கன்னிங் ஹாம் ஆவார். அவரது பேருழைப்பின் பயனாக நாலந்தா, தட்சசீலம், பாடலிபுத்திரம், கோசாம்பி முதலிய பழைய நகரங்களைப் பற்றிய விவரங்களை அறிய முடிந்தது. தென்னிந்தியாவின் அமராவதி என்னும் இடத்தில் வியக்கத்தக்க சிற்பங்களும், கல்வெட்டுகளும், கட்டிடச் சிதைவுகளும் கிடைத்தன. இந்தியத் தொல்பொருள் ஆய்வு வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வாக அமைந்தது சிந்து வெளி மற்றும் ஹரப்பா - மொகஞ்சதாரோ புதைபொருள் ஆராய்ச்சியாகும்.

சிந்து சமவெளி ஆராய்ச்சி:

இவ்விடம் புதைபொருள் ஆராய்ச்சிக்கு வளமான இடமாக இருக்கின்றது. இங்கு சான்ஹ’தேரோ, அலிமுராத், பாண்டிவாஹ’ முதலிய இடங்கள் உள்ளன. இது பற்றி எழுந்துள்ள ஆராய்ச்சி நூல்கள் பலவாகும். சிதைந்த கட்டிடம், மட்பாண்டம், நுண்ணிய துளையுடைய மிகச் சிறியமணிகள், வழவழப்பான களிமண் பொம்மை, பலவகை கற்களாலான விளையாட்டுப் பொருள், சித்திர எழுத்து, ராஜ முத்திரை ஆகியன கண்டறியப்பட்டன.

மொகஞ்சதாரோ ஆராய்ச்சி:

1922 இல் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நகரத்தில் கிடைத்துள்ள பொருள்கள் கணக்கில. அதனைப் பற்றி ஆராய்ச்சி கூறுகையில், இப்பொருள்களைப் பயன்படுத்திய மக்கள் ஏறத்தாழ கி.மு.3000 ஆண்டுகட்கு முற்பட்டவர்கள் என்றும் இவர்கள் நிலம் கடந்தும், கடல் கடந்தும் வாணிகம் செய்து பொருளீட்டியவர்கள் என்கிறது. மேலும் இவர்கள் பல தெய்வ வழிபாடு, உயர்ந்த ஆடை, அணிகலன், கைத்தொழில், இசை, ஓவியம், நடனம், மருத்துவம் ஆகியவற்றை அறிந்து வைத்திருந்தனர். இவர்கள் இந்தியாவிற் குடிபுகுந்த ஆரியர்க்கு முற்பட்ட மக்கள் என்பதில் ஐயமில்லை. ஆயின் திராவிடரா? பிறரா? என்பது இன்றுள்ள ஆராய்ச்சி கொண்டு திட்டமாகக் கூறுவதற்கில்லை.

இந்திய வரலாற்றில் புதுமை:

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய வரலாற்றுப் பாடநூல்களில் ஆரியர்க்கு முன் அநாகரிக மக்கள் வாழ்ந்தனர் என்ற வாக்கியம் சிறப்பிடம் பெற்றிருந்தது. ஆனால் இன்றைய நூல்களில் சிந்து சமவெளி நாகரிகம் ஒரு பாடமாக இடம் பெற்றுப் பழைய எண்ணத்தை மாற்றி விட்டது. இதனால் புதைபொருள் ஆராய்ச்சியின் சிறப்பினை நன்குணரலாம் அஃது ஒரு நாட்டு வரலாற்றில் மாறுதல்களை உண்டாக்கிக் கொண்டே செல்வது.

1956 லிருந்து ......1956 இல் மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்ட பிறகு நேரு கூறியவாறு தொல் பொருள் சேகரிப்பு எல்லா மாநிலங்களிலும் ஏற்படுத்தப்பட்டது அதன்படி தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சிகளில் முக்கியமானவை இரண்டு. அவை,

1. அரிக்கமேடு ஆராய்ச்சி

2. மணச்ச நல்லூர் ஆராய்ச்சி

மேலும் பூம்புகார் அகழ்வாராய்ச்சி, கங்கை கொண்ட சோழபுரம், உரையூர் ஆகிய இடங்களிலும் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்வழி கல்வெட்டுகள், எழுத்துக்கள், பாறைகள், நடுகற்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.

கல்வெட்டாய்வு:

1837 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜேம்ஸ் பிரின்சப் கல்வெட்டுக்களையெல்லாம் திரட்டிப் படித்து இந்தியாவின் வரலாற்றைத் தெளிவாக்கினார். பின் ஆசியாவின் ஆராய்ச்சிகள், ஆசியக் குழுவின் இதழ், இந்தியாவின் பழைமை போன்ற நூல்கள் கல்வெட்டுக்களைப் பற்றி வெளிவந்தன. தமிழ்நாட்டில் செந்தமிழ், தமிழ்ப்பொழில் போன்ற இதழ்களில் தமிழ் அறிஞர்கள் மு.இராகவையங்கார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், சதாசிவ பண்டாரத்தார், மயிலை சீனி. வேங்கடசாமி, சுந்தரேச வாண்டையார் போன்றறோரும் கல்வெட்டுக்கள் பற்றிய கட்டுரைகளை எழுதினர். தென்னிந்தியக் கல்வெட்டு தொகுதிகள் இதுவரை 25 வெளிவந்துள்ளன. தமிழகத்தில் சீவெல், மெகன்ஸ’ போன்றோர் ''தென்னிந்திய வரலாற்றுக் கல்வெட்டுக்கள் 18'' என்னும் தொகுதியை வெளியிட்டனர். ஐராவதம் மகாதேவன் ''ஹரப்பா எழுத்துக்களின் தொகுதி 26'' என்ற நூலை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு இராமநாதபுரம் மாவட்டம் பூலாங்குறிச்சியில் பெரிய கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளது. அக்கல்வெட்டு 1600 (அ) 1700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 1861 இல் கல்வெட்டாய்வு தொடங்கப் பெற்று இதுவரையில் சுமார் 75,000 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செப்பேடுகள் :

சென்னையில் இருந்த தமிழ் வரலாற்றுக்கழகம் பல்லவர் செப்பேடுகள் முப்பது, பாண்டியர்கள் செப்பேடுகள் பத்து ஆகிய இரு தொகுதியை வெளியிட தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை விழைந்துள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்துத் தொல்லியல் துறை தென்னிந்திய பழைமை எழுத்தியல் 25 என்ற நூலையும், மெக்கன்ஸ’யன் கையெழுத்துப் பிரதிகளில் ஒன்றையும் நூலாகவும் வெளியிட்டது.

நடுகற்கள் :

இறந்த சிறந்த மறவர்க்கு, இருக்கும் மறவர் கல் நாட்டி வழிபட்டனர். கல்லில் மறவர் தம் பெயரையும் பெருமையையும் பொறித்தனர். சில இடங்களில் உருவத்தையும் வரைந்தனர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நூல்கள் கல்நடும் முறையை விரிவாகப் பேசுகின்றன. கி.பி.3 ஆம் நூற்றாண்டினின்று அண்மைக்காலம் வரை தொடர்ச்சியாக நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. பண்டு வீர மறவர்க்கு மட்டுமே நடுகல் எடுக்கப்பட்டது என்பதை ''வீரன்'' என்ற சிறு தெய்வப்பெயர் நினைவூட்டும்.

புதை பொருள் ஆராய்ச்சி :

பண்டை மக்கள் வாழ்ந்த பலதிறப்பட்ட இடங்களை அறிந்து அகழ்ந்ததுப் பார்த்து அவ்விடங்களில் காணப்படும் பொருள்களை ஆராய்ந்து அவற்றைப் பற்றித் தோன்றும் செய்திகளையும் அவற்றைப் பயன்படுத்திய மக்களைப் பற்றிய விவரங்களையும் அறியும் முயற்சியே புதைபொருள் ஆராய்ச்சி என்பது. பல்லாரி ஜில்லாவில் பெருங்கற்கள் அடுக்கிக் கட்டப்பட்ட பல வகைச் சமாதிகள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அனந்தப்பூர் ஜில்லாவில் கற்கால மக்கள் புறக்கணித்த கல் உளிகள், எந்திரங்கள், கத்திகள் முதலியன புதைபொருள் ஆராய்ச்சியில் சிக்கின. செங்கற்பட்டு ஜில்லாவில் (பல்லாவரம்) சவக்குழிகள், மண்பெட்டிகள், தாழிகள், எலும்புகள் முதலியன கிடைத்தன. திருநெல்வேலியிலுள்ள ஆதிச்ச நல்லூரில் பல ஏக்கர் பரப்பிள்ள இடங்களில் ஏராளமான தாழிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. சேலம் ஜில்லாவில் (பல்லடம் தாலுக்கா) பல மண்மேடுகளும், கறுப்பு நிற மட்பாண்டங்கள், கோப்பைகள், ஆடு மாடு நிற்பது போன்ற கோலங்கள் ஆகியன கிடைத்தன.

அரிக்கமேடு அகழ்வாய்வு :

இவ்வூர் புதுச்சேரியை அடுத்துள்ள அரியாங்குப்பத்திற்குப் பக்கத்தில் செங்சியாற்றங்கரையில் இருக்கிறது. புதைப்பொருள் ஆராய்ச்சியில் பெயர் பெற்ற ''துப்ரேய்ல்'' என்ற அறிஞரும் அவரது நண்பருமே அரிக்கமேட்டை கண்டுபிடித்தனர். அம்மேட்டின் உயரம் ஆற்று நீர்மட்டத்திலிருந்து 20 முதல் 30 அடி வரை இருக்கலாம். இங்கு மணிகள், சங்குகள் கற்கள், எலும்புத் துண்டங்கள், சிறப்பான உரோம சக்கரவர்த்தி அகஸ்டஸ் உருவம் பொறிக்கப்பட்ட கர்னீலியன் மணி ஆகியன கிடைத்தன. இவருக்கடுத்து சென்னைப் பொருட்காட்சி நிலையத்தலைவர் டாக்டர். ஐயப்பன், துப்ரேய்லின் உதவி பெற்று புதை பொருள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அப்போது 2மற்றும் 3 ஆம் நூற்றாண்டில் சாதவாகர்கள் வெளியிட்ட நாணயங்களும், கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட நாணயம் ஒன்றும் கிடைத்தது. டெர்ரகோட்டாவினால் செய்யப்பட்ட பதுமைகள் அரிக்கமேட்டில் இருந்த ஓவியத்திறனை காட்டின. அவ்வேலைப்பாடு தென்னிந்தியாவிற்கு புதிது. இங்குள்ள பெருங்கொண்டை இடப்பட்ட பதுமையும், மகாபுருஷர் முகங்கொண்ட பதுமையும் இந்தியாவில் ஓவியமும், சிற்பமும் செழித்திருந்த முதல் மூன்று நூற்றாண்டுகளைக் காட்டும். அரிக்க மேட்டின் மணிகளை சோதித்த எம். கார்ட்டனென அதன் காலம் ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதுகிறார். அரிக்க மேட்டின் பொருளுக்கும் அமராவதியிற் கிடைத்த பொருளுக்கும் உள்ள ஒருமைப்பாட்டை உணர்கையில் இதன் காலம் முதல் மூன்று நூற்றாண்டுகள் என்கிறார் டாக்டர். இராச மாணிக்கனார்.

அகழ்வாய்வு :

இந்தியா 1950 ஆம் ஆண்டு குடியரசு நாடாக ஆன பிறகு எல்லா மாநிலங்களிலும் தனித் தொல்லியல் துறைகள் ஏற்படுத்தப்பட்டன. இவை மாநில அளவில் கலைச் செல்வங்களைக் காப்பதிலும், கள ஆய்விலும் கவனம் செலுத்தின. தமிழக பல்கலைக் கழகங்கள் சிலவற்றில் தொல்லியல் துறைகள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு அகழ்வாய்வினில் போதிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு மத்திய தொல்லியல் துறைகள் உதவின. தமிழர்கள் தமிழ்நாட்டினரே என்பதற்கான அகழ்வாய்வு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில் இடைக்கற்காலப் பொருள்கள் வடமதுரை, அத்திரம்பாக்கம், காஞ்சிபுர வட்டம், மதுரை திருமங்கல வட்டம் ஆகிய இடங்களில் கிடைத்தன. புதிய கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சேலம், வட ஆற்காடு செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கிடைத்துள்ளன. சேலம் மாவட்டத்திலுள்ள பையம்பள்ளி என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்ட புதுக்கற்காலக் கருவிகள் வரலாற்று முதன்மை வாய்ந்தவை. புகழ் பெற்ற ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வு புதுக்கற்காலத்தைச் சேர்ந்ததே, இங்குக் கிடைத்த வேல்கள், கோழி உருவங்கள் ஆகியன தமிழருக்கு நெருக்கமான முருக வழிபாட்டோடு தொடர்புடையவை. தமிழகத்திற்கே உரியவையான நெல், கொள், சோளம், கேழ்வரகு முதலான தானியங்கள் மக்கிய நிலையில் இங்குக் கிடைத்துள்ளன. இங்கே கிடைத்த சில வெண்கலப் பாத்திரங்கள் மீது அப்பியபடி பருத்தித் துணி எச்சங்கள் காணப்பட்டன. எனவே ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு தமிழ் மொழியைக் குறிக்கும் நேர் முகக் குறியீடு எதனையும் பெறாவிடினும் தமிழர் தம் பழக்க வழக்கத்தைக் குறிக்கும் சான்றுகளைத் தருகிறது.

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு:

புதுக்கோட்டைப் பகுதி புதைபொருள் ஆராயச்சிக்கு ஏற்ற இடம் ஆகும். இங்கு ஆராய்ச்சி மேற்கொண்ட போது இறந்தவன் உடல் உட்கார்ந்த நிலையில் தாழியில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தாழியைப் புதைத்த குழி மணல் இடப்பட்டு பாறையால் முடப்பட்டு இருந்தது இந்த இடங்கள் நிலத்தை விட சிறிது உயர்ந்துள்ளன. தாழிகள் பல வடிவின. பல அளவின. இவ்விடங்களை முற்றும் அகழ்ந்து ஆராய்ச்சி செய்யும் போது கற்கால, இரும்புக்கால மக்களைப் பற்றிய செய்திகளை அறியலாம். இவ்வாறே கர்நாடகத்திலிருந்து ''எபிகிராபிகா கர்நாடிகா - 9'' என்ற தொகுதியும், கேரளத்திலிருந்து ''திருவிதாங்கூர்'' தொல்லியல் வெளியீடுகள்'' என்பதும் ஆந்திராவிலிருந்து ''திருமலைதிருப்பதி தேவஸ்தானக் கல்வெட்டுக்கள் 13 '' என்ற தொகுதியும் தொல்பொருள் ஆய்வு வெளியீடுகளாக வெளிவந்துள்ளன.

இறுதியாக:

1941 ஆம் ஆண்டிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சி மிக மெதுவாக நடைபெற்று வந்தாலும் அதனால் அறியப்பட்டுள்ள உண்மைகள் பலவாகும். 20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வழி வந்து இந்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வு சமூக வரலாறு, பண்பாட்டுவரலாறு, பரிணாமம், கட்டிடக்கலை போன்ற பிற துறைகளுடன் தொடர்பு கொண்டு இருந்தது. அதிலும் குறிப்பாக மானிடவியல் ஆய்வுடன் நெருக்கமுடையதாய் அமைந்தது, இத்தகைய ஆய்வை இந்திய அரசாங்கம் சீரிய முறையில் கவனித்தால் பல வரலாற்று உண்மைகள் புலப்படுவது உறுதி.

நன்றி: பிறதுறைத் தமிழியல்.