30/01/2011

பழமொழிகள்: உருவாக்கமும் இன்றைய போக்கும் - சி. இளங்கோ

ஒவ்வொரு சமூகமும் தனக்கான பண்டங்களை உற்பத்திச் செய்வது மட்டுமல்லாமல் கலைகளையும் உற்பத்தி செய்கிறது. பண்ட உற்பத்தி அச்சமூகத்தின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. வாழ்க்கையோ கலைகளினால் உள்வாங்கப்படுகிறது. இவ்வடிப்படையில் ஒவ்வொரு இடம் சார்ந்து உற்பத்தி மாறுபடும் பொழுது வாழ்நிலை மாற்றத்திற்கேற்ப கலைகளும் மாறுபடுகின்றன. கலைகளில் மொழி உள்ளது. பண்பாடு உள்ளது. உத்தி உள்ளது. அழகியல் உள்ளது. இவற்றோடு கூடுதலாக முந்தைய சமூகம் பற்றிய பதிவும் உள்ளது. இவ்வம்சங்களைக் கொண்ட கலைகளுக்கு அடித்தளமாய் அமைவது நாட்டார் கலைகளே. நாட்டார் கலைகளை இரு பிரிவாகப் பிரிக்கலாம். 1. வாய்மொழி மரபு சார்ந்த வழக்காறுகள். 2. நிகழ்த்துக் கலைகள். மரபு வழியாகவோ மரபுவழியைப் பின்பற்றிப் புதிதாகப் படைக்கப்பட்டோ மக்களிடம் இயல்பாய் வழக்கில் உள்ளவையும் அல்லது ஒரு குறிப்பிட்ட களத்தில் சூழலில் பயன்படுத்தப்படுபவையும் வழக்காறுகள் எனப்படும். இவை பாடலாகவோ, விடுகதைகளாகவோ, பழமொழியாகவோ, கதைப் பாடல்களாகவோ, அமையலாம். வாய்மொழியாக வழங்கி வந்த பழமொழிகள் எல்லாம் ஒரு காலகட்டத்தில் தொகுக்கப்பட்டது. அப்படித் தொகுக்கும் பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறைமைகளில் பழமொழிகளைத் தொகுத்தனர். இதற்கு பல காரணங்கள் உண்டு. நாம் இங்கு பழமொழித் தொகுப்புகள் எப்படிப்பட்ட சூழலில் தொகுக்கப்படுகின்றன? அத்தொகுப்பின் தேவை என்ன? இன்று பழமொழித் தொகுப்புகளின் நிலை என்ன? எதிர்காலத்தில் எவ்வாறு பழமொழி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.

பழமொழித் தொகுப்புகள் என்று கூறும் பொழுது அதனைப் பின்வரும் வகையில் பிரித்துக் கொள்ளலாம். 1. ஐரோப்பியருக்கு முற்பட்ட தொகுப்புகள், 2. ஐரோப்பிய காலத் தொகுப்புகள், 3. ஐரோப்பியர் காலத்துக்குப் பிற்பட்ட தொகுப்புகள். இங்கு நாம் ஐரோப்பியரை மையமாக வைத்து பிரித்தமைக்குக் காரணம் ஐரோப்பியர் காலத்தில்தான் திட்டமிட்ட பழமொழித் தொகுப்புகள் வெளிவருகின்றன. ஐரோப்பியர்கள் பழமொழிகளை மக்கள் வழக்கில் வழங்கும் முறையிலேயே பதிவு செய்கின்றனர். இவர்கள் தொகுப்பில் ஒரு சீரிய அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. சேகரித்தல், ஒழுங்குபடுத்தல், ஆவணப்படுத்தல் என்ற முறையில் இவர்களின் தொகுப்புகள் அமைகின்றன.

ஐரோப்பியர் காலத்துக்கு முற்பட்டதாக நமக்கு கிடைக்கும் முதல் பழமொழித் தொகுப்பு நீதி நூல் காலகட்டத்தைச் சேர்ந்த பழமொழி நானூறு ஆகும். அதற்கு அடுத்து நமக்கு மிகவும் பிந்தையக் காலத் தொகுப்பாக தண்டலையார் சதகம் கிடைக்கிறது. இந்த இரண்டு நூல்களும் யாப்பு வடிவத்திற்கு ஏற்ப பழமொழிகளை மாற்றியமைத்தபடி பதிவு செய்கின்றன. இவற்றில் இடம்பெறும் பழமொழிகள் மக்கள் வழக்காக இல்லாமல் இலக்கிய வழக்காக மாற்றப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் அகரவரிசைப்படுத்தல் என்ற முறை இல்லை. எந்த வகையான ஆய்வு அணுகுமுறையும் இத்தொகுப்புகளில் இல்லை என்பதை நாம் குறையாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அன்றைய காலத்தில் தொகுப்பு முறை என்பது இன்று போல் ஆய்வு அடிப்படையாகவோ அல்லது கோட்பாட்டின் வழியோ வளர்ச்சியடையவில்லை.

ஆனால் ஐரோப்பியர் காலத்தில் நிலைமை அப்படியே மாறுகிறது. அவர்கள் பழமொழிகளை ஊர் ஊராகச் சென்று திரட்டினர். மக்கள் வழக்கில் உள்ள மொழியிலேயே அவற்றைப் பதிவு செய்து பின்னர் புரியாத சொற்களுக்குச் சொற்பொருள் விளக்கமும் அளிக்கின்றனர். எண்கொடுத்து அகரவரிசைப்படுத்தும் முறையும் கடைபிடித்தனர். இவ்வாறு ஓர் அய்வு நோக்கில் திட்டமிட்டத் தொகுப்பாக ஐரோப்பியர்கள் தொகுப்புகள் அமைகின்றன.

1842ல் முதல் பழமொழித் தொகுப்பை பெர்சிவெல் பாதிரியார் வெளியிடுகிறார். அவர் தமிழ்ச் சமூகத்தில் பழமொழிக்கு இருந்த இடத்தைப் பற்றி குறிப்பிடுகையில், தமிழ்மொழியில் பழமொழிகள் ஏராளமாக உள... ஓரிரு பழமொழிகளைப் பேச்சில் எதிர்கொள்ளாது ஒரு தமிழனுடன் ஒருவன் பேசிவிட முடியாது. சிறப்பாகத் தமிழ்ப் பெண்டிரைப் பொறுத்த வரை இதுதான் நிலைமை. எதனையும் ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும், வேண்டுகோளாக இருந்தாலும், உண்மையாக இருந்தாலும், முன்னுதாரணமாக இருந்தாலும், அல்லது வெறுமனே இல்லை என்று மறுப்பதற்கும் உண்டு என்று ஒத்துக் கொள்வதற்கும் எப்போதும் ஒரு பழமொழி அவர்வசம் இருக்கும் என்று தன் நூலில் பதிவு செய்கிறார்.

ஐரோப்பியர்களை அடுத்து நம்மவர்களும் பழமொழிகளைத் தொகுக்கும் வேலைகளில் ஈடுபட்டனர். 1642 முதல் 1900 வரையில் நம் தமிழ் மரபில் வந்தவர்களில் பழமொழித் தொகுப்புகள் அனைத்தும் ஐரோப்பியர்கள் தொகுத்தளித்த முறையிலேயே அமைந்துள்ளன. பழமொழிகளைத் தொகுக்க வேண்டியத் தோவை திடீரென்று ஏன் ஏற்பட்டது என்று பார்த்தால் அது நமக்கு பல புதிய சுவையானத் தகவல்களைத் தருகிறது. நீதி நூல் காலகட்டத்தில் தொகுக்கப்பட்ட பழமொழி நானூறு என்ற நாவலின் நோக்கம் நீதியைப் புகட்டுவது என்பது மட்டுமே. ஏனெனில் அக்காலகட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் நிலை அவ்வாறு இருந்தது. இதனால் தான் நீதி நூல்களே தோன்றியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த அடிப்படையில் ஒரு நீதி வாக்கியமாகவே அக்காலகட்டத்தில் பழமொழி நானூறு தொகுக்கப்பட்டது. இதேபோல் சிற்றிலக்கிய காலகட்டத்தில் உருவான இலக்கியங்கள் ஒரு செய்தியை மட்டும் எடுத்துக் கொண்டு தனக்குண்டான யாப்பமைதியில் அமைவனவாக வருகின்றன. இதனடிப்படையில் பள்ளு, குறவஞ்சி, உலா, என பலவகைமை இலக்கியங்கள் உருப்பெற்றன. இந்த அடிப்படையில்தான் தண்டலையார் சதகம் தோன்றியது. பழமொ‘ நானூற்றுக்கும் தண்டலையார் சதகத்ப தோற்றத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பது எளிதில் புலனாகும்.

அடுத்து வரும் ஐரோப்பியர்காலத் தொகுப்புகளைப் பார்த்தால் அவை தோன்றிய பின்புலம் முற்றிலும் வேறாக உள்ளது. மதம் பரப்ப வந்த ஐரோப்பியர்கள் தங்கள் மதக் கருத்துக்களை அவ்வட்டார மக்கள் மொழியிலேயே சொல்ல நினைத்தார்கள். அதற்கு அம்மக்களின் வழக்காறுகள் துணைபுரியும் என்ற அடிப்படையில் வழக்காறுகளுக்கு முதன்மை கொடுத்து தொகுத்தல் வேலையில் ஈடுபட்டனர். இதனடிப்படையில் தான் பெர்சிவெல் பாதிரியார், ஜான் லாசரஸ், ஹெர்மன் ஜென்சன் போன்ற ஐரோப்பியப் பாதிரியார்கள் பழமொழிகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொதுவாகவே கிறித்துவர்கள் தங்கள் மதத்தைப் பரப்புவதற்கு கதைகள், பாடல்கள் முதலான வடிவங்களைப் பயன்படுத்துவர். இவ்வடிவங்களை மேலும் உயிரோட்டமாக அமைப்பதில் பழமொழியின் இடம் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தது. இதற்காகவே கிறித்துவ பாதிரியார்கள் பழமொழிகளைத் தொகுக்க முற்பட்டனர்.

பெர்சிவெல் பாதிரியார் தன்னுடைய பழமொழித் தொகுப்பு பற்றி குறிப்பிடுகையில் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுடன் எந்த வகையிலாவது தொடர்புடையவர்களுக்கு (ஐரோப்பியர்களுக்கு) இத்தொகுப்பு மிகவும் பயன்படும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிடுகிறார். ஐரோப்பிய பாதிரியார்கள் தொகுத்தளித்தப் பழமொழி நூல்களில் ஒவ்வொரு பழமொழிக்கும் ஆங்கிலத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பது

அத்தொகுப்பு யாருக்காகச் செய்யப்பட்டது என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

அதற்கு அடுத்து வரும் நம்மவர்களின் தொகுப்புப் பின்புலம் முற்றிலும் மாறுபட்டது. ஆரம்பத்தில் நம்மவர்களும் ஐரோப்பியர்களுக்குப் பழமொழிகளைத் தொகுத்து தமிழ் ஆங்கிலம் கலந்து வெளியிட்டுள்ளனர். உதாரணமாக 1888ல் த.கருப்பண்ணப் பிள்ளை என்பவர் வெளியிட்ட பழமொழித் திரட்டு என்ற நூலில் இந்நூல் ஐரோப்பியர்களுக்குப் பெரிதும் பயன்படும்படி தொகுக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்.

இப்படியான சில தொகுப்புகள் ஆரம்ப காலத்தில் வந்தாலும் பின்னாளில் நம்மவர்கள் பழமொழிகளைத் தொகுத்து வெளியிடுவது என்பதை பதிப்பகம் சார்ந்த ஒரு வணிகமாக செய்ய ஆரம்பித்தனர். இப்படியாக பழமொழிகளைத் தொகுக்கும் முறையானது வேறு தளத்திற்குச் சென்றது. பழமொழிகளை மாணவர்களுக்கு தொகுப்பது, மேடைப் பேச்சாளர்களுக்குப் பயன்படுத்தும்படி, தொகுப்பது, கதை கட்டுரை எழுதுபவர்களுக்குத் தொகுப்பது, பொது வாசகனுக்குத் தொகுப்பது என்ற முறையில் தொகுப்புகள் பதிப்பகம் சார்ந்த தொழில் முறையில் இன்று வெளிவருகின்றன. இன்று குறிப்பிடத்தக்க தொகுப்பாக உள்ள நூல் கி.வா.ஜகந்நாதனின் தமிழ்ப் பழமொழிகள் ஆகும். இப்படியாகப் பழமொழித் தொகுப்பு வரலாறு ஒரு பரந்த தளத்தைக் கொண்டதாக அமைகிறது. இதன் விளைவாக பல சிக்கல்களும் ஏற்பட்டன.

பழமொழிக்கு தனியாக ஆசிரியர் என்பவர் இல்லை. தொகுப்பாளர்களே ஆசிரியர் என்பதால் ஒரு தொகுப்பில் ஏற்படும் சிக்கல்களுக்கு அவ்வாசிரியரே பொறுப்பாசிரியர். பழமொழித் தொகுப்பில் ஏற்படும் குறைகள் பெர்சிவெல் காலம் முதல் இன்று வரை தொடர்ந்தபடியேயுள்ளன. பெர்சிவெல் தொகுப்பில் மரபுத் தொடர், திருக்குறள் அடி, செய்திகள், உவமைகள் இப்படியானவைகளையெல்லாம் பழமொழிகளாகக் கருதி தொகுத்துள்ளார். இந்தக் குறைபாடு ஒவ்வொரு தொகுப்பிலும் தொடர்கிறது. இன்று சில தொகுப்புகளில் பழமொழிகளுக்கு விளக்கம் கொடுத்தல் என்ற பெயரில் தவறாக விவரம் செய்யப்பட்டு வெளிவருகின்றன. தி.எஸ்.கேசவ சர்மா என்ற ஜோதிடர் செய்த பழமொழி நூலில் ஒவ்வொரு பழமொழிக்கும் ஜோதிட கருத்துக்களைத் திணித்து விளக்கம் தருகிறார். இதேபேல் கே.ஜி.எப். பழனிச்சாமி என்பவர் பழமொழிகளைக் கொண்டு அதன் பொருள் சிதையும்படி நகைச்சுவை அமைக்கிறார். உதாரணமாக,

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு அவர் அமைத்த ஒரு நகைச்சுவையைப் பார்ப்போம்.

அவன்: உனக்கு படை நோய் வந்திருக்கு அதுக்கு வருத்தப்படறியா?

இவன்: ஏன் வருத்தப்படணும்? என் தம்பிதான் தோல் டாக்டராச்சே.

இவ்வாறு பழமொழியின் உண்மைக் கருத்தைச் சிதைக்கும் தன்மையில் இன்று பல நூல்கள் வருகின்றன. இதுவரை வெளிவந்தப் பழமொழித் தொகுப்புகளில் குறைகளாகக் கருதப்படுபவை.

- எந்த மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டது என்று கூறப்படாமை.

- உள்ளதை உள்ளபடியே பதிவு செய்யாமல் திருத்திப் பதிவு செய்வது.

- பழமொழிகளைப் பொருள் அடிப்படையில் அகரவரிசைப்படுத்தாமல் அமைப்பது

- புரியாத பழமொழிகளுக்கு விளக்கம் அளிக்காமல் தொகுத்துத் தருவது

- பழமொழிகளை விவரணப்படுத்துதல் என்ற பெயரில் தவறான கருத்துக்களைக் கூறுவது.

இவைகள் எல்லாம் பழமொழிகளைத் தொகுப்பவர்கள் செய்யும் குறைபாடுகளாக உள்ளன.

நாம் இன்று பழமொழித் தொடர்பான ஆய்வில் மிகப் பின்தங்கியுள்ளோம். இன்றுவரை தொகுக்கும் பழமொழிகளைத் தொகுக்கும் பணியே முடிந்தபாடில்லை. ஊர் ஊராகச் சென்று பழமொழிகளைச் சேகரிக்கும் முறை இன்று நம்மிடம் குறைந்து விட்டது. வட்டாரம் சார்ந்த பழமொழித் தொகுப்புகளின் வரவு என்பதே அரிதாகிவிட்டது. பொருள் வகைப்பாகுபாடு செய்யப்பட்ட தொகுப்புகள் மிகக் குறைவாகவே வெளிவருகிறது. இவையெல்லாம் நாம் பழமொழித் தொடர்பான ஆய்வை முன்னெடுப்பதில் உள்ள குறைகளாக அமைகின்றன.

பழமொழிகள் எவ்வாறு ஒவ்வொரு மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அதில் உள்ள அம்மக்களின் வாழ்க்கைப் பதிவு என்ன? இப்படியான ஆய்வுகள் எல்லாம் நாம் பதுமொழிகளைக் கொண்டு செய்யவில்லை. இலங்கையில் வழங்கப்படும் ஒரு பழமொழி மாமியார் குற்றம் மறைப்பு மருமகள் குற்றம் திறப்பு என்று உள்ளது. ஆனால் இதே பழமொழி நம் தமிழ்ச் சூழலில் மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்று வழங்கப்படுகிறது. மேற்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் ஒரு பழமொழியின் ஒரு வடிவம் எவ்வாறு ஒவ்வொரு இடம் சார்ந்து மாறுபடுகிறது என்றும் நமக்கும் அவர்களுக்கும் எவ்வகையில் வாழ்வியல் ஒற்றுமை உள்ளது என்பது போன்ற ஆய்வுகளை மேற்கொண்டால் அது சிறந்த சமூகவியல் ஆய்வாக அமையும். பழமொழிகளைக் கொண்டு அதன் அமைப்பியல் பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் பழமொழியும் உளவியலும் எவ்வகையில் தொடர்புடையது என்பது பற்றிய ஆய்வுகளைச் செய்யலாம். ஆனால் அவற்றில் நாம் இன்று ஒரு மைல் கல்லைக்கூட கடக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்.

நன்றி: நாட்டுப்புறவியல் ஆய்வுகள்

 

கருத்துகள் இல்லை: