இலக்கியப் பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியப் பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ் இலக்கியத்தில் பேய்! - சி.இராஜாராம்

இந்த உலகை இயக்கி, நம்மை வாழவைக்கும் இயற்கைக்குப் பெண்ணின் பெயர்களை வைத்து அழகு பார்த்த மனிதன் (ஆண்), உயிரை எடுப்பதாக நம்பப்பட்ட பேயை, பெண்ணின் வடிவமாகவே பார்க்கிறான். பெண்ணின் மீது ஆண் செலுத்திய ஆதிக்க மனோபாவமும், வன்முறை வெறியாட்டமும் அவள் இறந்தவுடன் பழியெடுக்கக்கூடும் என்ற பய உணர்வுமே அவள் பேயாய் வருவதாக நம்பினான்.

கடைச்சங்க காலத்தில் பேயனார், பேய்மகள் இளவெயினி, பேயாழ்வார், பூதத்தாழ்வார் எனப் புலவர்களுக்கும் அருளாளர்களுக்கும் பெயர்கள் வழங்கி வந்துள்ளன.

"பேய்' என்னும் சொல் அச்சுறுத்துவது, அஞ்சுவது என்னும் பொருள்படும். அலகை, அள்ளை, இருள், கடி, கருப்பு, காற்று, குணங்கு, கூளி, மண்ணை, மயல் (மருள்) என்பன பேயின் பொதுப் பெயர்கள். பேய்களுள் நல்லனவும் உண்டு; தீயனவும் உண்டு. குறளி (கருங்குட்டி), பேய், கழுது, பூதம், முனி(சடைமுனி) அரமகள், அணங்கு எனப் பேய் இனம் பலதிறந்ததாகச் சொல்லப்படும். குறளியைக் குட்டிச்சாத்தான் என்பர். 

பேய்களில் காட்டேறி, தூர்த்தேறி முதலிய பலவகைகள் இருப்பதாகக் கூறுவர். பூதங்கள் குறும்பூதம், பெரும்பூதம் என இரு வகை உண்டு. சூர், சூர்மகளிர், சூர்அர மகளிர், வரை அரமகளிர், வான் அரமகளிர் முதலிய பெயர்களில் குறிப்பிடப்பட்டவை எல்லாம் அணங்கும் சக்திகளாகும். இவற்றின் பெயரால் சூள் (சத்தியம், ஆணை) உரைத்த வழக்கமும் அன்று இருந்துள்ளது. சூள் பொய்த்தால் சூள் உரைத்தவரையும் தவறு செய்வோரையும் அந்தத் தெய்வம் தண்டிக்கும் என்ற அச்சம் இருந்தது. இதுவே பின்னர் "பூதம்' என்று அழைக்கப்பட்டது. ""குண்டைக் குறப்பூதம்'' என்கிறது தேவாரம் ( 944:1).

அக்காலத்தில் போரில் புண்பட்ட மறவரைப் பேய்கள் அண்டாதவாறு, பெண்களும், உறவினரும் வேப்பந் தழையை வீட்டில் செருகியும், மையிட்டும், வெண் விறுகடுகு தூவியும், நறும்புகை காட்டியும், காஞ்சிப்பண் பாடியும் காத்தனர் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது.

சதுப்பு நிலங்களில் அழுகிய பொருள்களிலிருந்து கிளம்பும் ஆவியும் (Gas), இரவில் ஒளிவிட்டு எரிவதுண்டு. அதைக் கண்டு "கொள்ளிவாய்ப் பேய்' என்பது மக்களின் அறியாமையே ஆகும்.
நீர் நிலைகளெல்லாம் வற்றி, வறண்டு பெரும்பாலும் மக்கள் வழக்கற்ற பாலை நிலம், போர்க்களங்களும் ஆறலைப்பால் விழுந்த பிணங்களும் நிறைந்த பாழுங்காடாதலால், பிணந்தின்னும் பேய்களுக்குத் தலைவியாகிய காளியே அவற்றுக்குத் தெய்வமானாள். இதைச் சிலப்பதிகார வேட்டுவ வரியாலும், காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது என்னும் கலிங்கத்துப்பரணிப் பகுதிகளாலும் அறியலாம்.

""ஈமவிளக்கின் பேஎய் மகளிரொரு
அஞ்சு வந்தன்று அம்மஞ்சுபடு முது காடு''
(புறநா. 356)

என்று பிணம் எரியும் சுடுகாட்டிலும் பேய்ப் பெண்டிர் இருந்ததாக நம்பினார்கள்.
 ""பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்'' என்றார் பாரதியார் (பாஞ்சாலி சபதம்). இக் கூற்றிலிருந்து பேய்க்கும் பிணத்துக்கும் ஒரு தொடர்பு கூறப்படுகிறது. ""பெருமிழலைக் குரும்பர்க்கும் பேயர்க்கு மடியேன்'' என்று காரைக்கால் அம்மையாரைப் போற்றுகிறது திருத்தொண்டத் தொகை.

""வயங்குபன் மீனினும் வாழியர் புலவென
உருக்கெழு பேய்மக ளயர்''
(புறநா.371:25-26)

என்று புறநானூற்றுப் புலவர் கல்லாடனார், "அரசன் பல்லாண்டு வாழ்வானாக' என்று அச்சம் பொருந்திய பேய்மகள் பாடிக் குரவைக் கூத்தாடுவதைக் கூறியுள்ளார். இத்தகைய செய்திகள் சங்க இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகின்றன. மேலும், "காடுபடர்ந்து கள்ளி மிகுந்து பகற்காலத்திலும் கூகைகள் கூவும் சுடுகாட்டிலே பிணஞ்சுடு தீ கொழுந்து விட்டெரியும். அங்கு அகன்ற வாயையுடைய பேய் மகளிர் காண்போர்க்கு அச்சம் உண்டாகும் முறையில் இயங்குவர்' என்றும் பாடியுள்ளார் (புறநா.356:1-4) கதையங்கண்ணனார் என்னும் புலவர்.

""பேஎய் மகளிர் பிணந்தழூஉப் பற்றி
விளரூன் றின்ற வெம்புலான் மெய்யர்''
(புறநா.359:1-8)

என்று சுடுகாட்டில் நிகழ்வதைச் சித்திரமாகத் தீட்டிக்காட்டுகிறார் காவிட்டனார்.
போரிலே வீழ்ந்த நல்ல தந்தங்களை உடைய யானை பிணங்களின் குருதியைக் குடித்து, சிதறிக் கிடந்த குறை தலைப்பிணம் எழுந்து தன்னோடு ஆடும்படி பேய்மகள் துணங்கைக் கூத்தாடுவாள் என்று பாடியுள்ளார் (மதுரைக்காஞ்சி.24-28) மாங்குடி மருதனார்.

பெரியபுராணத்தில் காரைக்காலம்மையார் பெற்ற பேய் வடிவத்துக்கு விளக்கம் கூறும் உரைக்காரர் சி.கே.சுப்பிரமணிய முதலியார், ""காரைக்காலம்மையார் பாசமாம் பற்றறுத்துச் சிவனருளால் பெற்ற உடம்பு இயலும் இசையும் பாடுதற்குரிய, வாக்கு முதலிய புறக்கரணங்களையும், மனம் முதலிய உட்கரணங்களையும் உடைய திருவடிவம்'' என்கிறார்(காரைக்காலம்மையார் புராணமும் அவரது அருநூல்களும் பக்.52). ஆனால், சாதாரணமான பேய்களோவெனின், வடிவற்ற வாயு உடம்பு அல்லது சூக்கும உடம்பு உடையன என்பது கருத்தாகும்.

பேய் மகள் கொண்டிருந்த தோற்றத்தையும், அவளது கொடிய செயலையும் கண்டு அக்கால மக்கள் அஞ்சினர் என்பதும், சில நம்பிக்கைகள் கொண்டிருந்தனர் என்பதும் சங்கப் பாடல்களினின்றும் நன்கு புலனாகிறது.


நன்றி - தமிழ்மணி 30 06 2013

காளமேகம் தந்த இரண்டு சொற்கள் - திருவாரூர் இரெ சண்முகவடிவேல்

முந்நூறு ஆண்டுகளுக்குமுன் சிற்றுண்டிச்சாலைகளோ விடுதிகளோ இல்லை. வழிப்போக்கர்கள் யார் வீட்டிலாவது விருந்தினர்களாகத்தான் தங்கிப் பயணத்தைத் தொடரவேண்டும். அவ்வாறு வந்து தங்குவோர்களே விருந்தினர் என்று அழைக்கப்பட்டனர்.

ஆங்காங்கே சத்திரங்கள் இருக்கும். அவற்றிலும் தங்கிப்போவதுண்டு. தமிழ்நாட்டில் சத்திரங்கள் அறச்சாலைகளாகவே விளங்கின. அறச்செல்வர்கள் அதற்காகத் தங்கள் பொருட்செலவில் சத்திரங்களைக் கட்டிவைத்து அவற்றில் உணவும் உறையுளும் இலவசமாகத் தந்தனர்.

தமிழ் வளர்த்த நம் புலவர்கள் பயணம் செய்யும்போது இவ்வாறான சத்திரங்களில் தங்கிச்செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்தந்த ஊர்களில் தங்கும்போது அந்தந்த ஊர் பற்றிய பாடலை இயற்றுவார்கள். அந்தப் பாடல்களைக் கரித்துண்டினால் சுவரில் எழுதிவைத்துப் போவார்கள்.

அந்தப் பாடலை அவ்வூர் மக்கள் எடுத்துத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத்தருவார்கள். அப்பாடல்கள் நாளடைவில் மக்கள் மனதில் பதியும். இவ்வாறாகவே அவை தனிப்பாடல்களாகத் திரட்டப்படும்.

திருவாரூரில் இரட்டைப் புலவர்கள் ஒருநாள் திருவாரூரில் உள்ள சத்திரத்துக்கு இரட்டைப் புலவர்கள் வருகிறார்கள்.

இரட்டைப் புலவர்கள் குறித்து சிறிது சொல்லியாகவேண்டும். ஒருவருக்குக் கண்பார்வை கிடையாது. இன்னொருவரோ கால் இல்லாதவர். பார்வை இல்லாதவர் நடக்க இயலாதவரைத் தன் தோள்களில் சுமந்துபோவார். பார்க்க இயலாதவரின் பார்வையாக நடக்க இயலாதவர் இருப்பார். நடக்க இயலாதவருக்காகப் பார்வை இல்லாதவர் நடப்பார். இருவரும் தமிழறிந்த பெருமக்கள். ஒரு பாடலில் பாதியை ஒருவர் பாடித் தொடங்க, மீதியை மற்றவர் பாடி முடிப்பார்.

கிருஷ்ணன், பஞ்சுபோலவும் விசுவநாதன், இராமமூர்த்திபோலவும் சங்கர், ஜெய்கிஷன்போலவும் வாழ்ந்தார்கள் என்று சொன்னால் இப்போது உள்ளவர்களுக்குத் தெரியும்.

இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பது ஆச்சரியம் என்றால், தமிழ்ப் புலவர்களாக இருந்தும் ஒற்றுமை பேணியது அதிகப்படியான ஆச்சரியம்.

ஊர்தோறும் சென்று ஆங்காங்கே பாடல்களைப் பாடுவது அவர்களின் வாடிக்கை. திருவாரூர் வந்த அவர்கள் சத்திரத்தில் தங்கினார்கள்; உணவு உண்டார்கள்; ஓய்வு கொண்டார்கள்; கோவில் சென்று வழிபட்டார்கள்; திரும்பி வந்தார்கள்.

திருவாரூர்ப் பெருமானின் நினைவு நெஞ்சில் நிழலாடியபடியே இருந்தது. கவிஞனின் மனதில் ஆழப்பதியும் நிகழ்வுகள் கவிதையாகத்தானே வெளிப்படும்!

இரட்டையரில் ஒருவர் தொடங்கினார்.

திருவாரூர்த் தியாகேசன் யார்? சிவபெருமானல்லவா? அதனால் சிவன் திரிபுரம் எரித்த நிகழ்ச்சியை எண்ணினார். சிவன் முப்புரங்களை எவ்வாறு எரித்தார்? மேருமலையை வில்லாக வளைத்தார். வில்லுக்கு நாண் வேண்டுமே! வாசுகி என்ற பாம்பையே நாணாக்கினார். அம்பு? திருமாலையே அம்பாக்கிக்கொண்டார்.

மேருமலை வில்லில் வாசுகி நாணை இழுத்துக் கட்டி பெருமாள் பாணத்தை விட்டு எரித்தார் என்பதே செய்தி. இதைக் கவிதையாக்க நினைத்தார்கள்.

கவிதை என்றால் அதில் ஓர் அழகு வேண்டாமா? அழகைத்தான் இலக்கணமாக அணி என்று வரையறுத்தார்கள். எந்த அணியில் எழுதுவது? சரி, வஞ்சப் புகழ்ச்சியணியிலேயே எழுதுவோம் என்று முடிவெடுத்தார்கள்.

அது என்ன வஞ்சப் புகழ்ச்சி? வேறொன்றும் இல்லை. நாம் கிண்டலாகப் பேசுவதுதான்.

வகுப்புகளில் ஆசிரியர்கள் சொல்வோம். ""தம்பிதான் வகுப்பிலேயே முதல்! இல்லே தம்பி?'' என்று மாணவனை அரவணைத்தபடி கூறுவோம்.

செய்தி என்ன தெரியுமா? அவன்தான் கடைசி. நூற்றுக்கு மூன்று மதிப்பெண் வாங்கிக் கடைசியிலும் கடைசியாக இருக்கிறான் அவன்! 

புகழ்வதுபோலத் தோன்றும்; ஆனால் பழிப்பதாக இருக்கும். பழிப்பதுபோலத் தோன்றும்; ஆனால் புகழ்வதாக இருக்கும். 

இதைத்தான் வஞ்சப் புகழ்ச்சியணி என்று இலக்கணம் கூறும்.

இரட்டையர் வஞ்சப் புகழ்ச்சியாக திருவாரூர் ஈசனைப் பாடுவதென்று முடிவெடுத்தனர் என்பதால், அந்தத் திரிபுரம் எரித்த நிகழ்ச்சியை இகழ்வதுபோலப் பாடிப் புகழத்தொடங்கினர்.

திரிபுரம் எரித்த வில் எது? மேருமலை. மலை என்பது கல். கல் வளையுமா? வில் வளைய வளையத்தானே அம்பு விரைந்து பாயும். இதுவோ கல்லால் ஆகிய வில். அது எப்படி வளையும்? மூங்கிலில்தான் வில்லைத் தயாரிப்பார்கள். அது நன்றாக வளையக் கூடியது. ஆனால், இந்தக் கல் வில் எப்படி வளையும்? எப்படி அம்பை வேகமாகச் செலுத்தும்? சண்டை போடப்போன சிவபெருமானுக்கு இந்தச் சாதாரணமான உண்மைகூடப் புரியவில்லையே! இது பெருமானைப் பழிப்பதாகும். ஆனால் இதையே புகழ்மொழியாகவும் கொள்ள இடமுண்டு. வளையாத மலையை வைத்தே திரிபுரம் எரித்தாரென்றால்,  சிவபெருமான் நினைத்தால் எதையும் செய்யமுடியும் என்று விளங்குகிறது. 

சரி, மலைதான் வில்லாயிற்றே, வில்லை இழுத்துக்கட்டும் நாணாவது  சரியான நாணாக இருந்ததா? இல்லையே! நாண் எது? வாசுகி என்ற பாம்பு. ஒரு பாம்பைக் கயிறாகக் கட்டினால் அதில் அம்பை வைத்து எய்ய முடியுமா? கையை வைத்தால் கடிக்குமே! கையை வைத்தால் கடிக்கும் பாம்பே நாணென்றால்,  அதை வைத்துப் போர் செய்பவன், போரைத் தொடங்கும்போதே பரமபதம் போய் விடுவானே!

"பாம்பை- அதுவும் நஞ்சிருக்கும் பாம்பை-  விஷப்பாம்பை நாணாக எந்தப் போராளியாவது கட்டுவானா? அதைப் போய்க் கட்டினானே சிவபெருமான்!' என்பது இகழ்ச்சியாக எண்ணுவது.

நஞ்சிருக்கும் பாம்பைக் கட்டிப் போர் செய்த சிவபெருமானின் போராற்றலை என்னவென்று சொல்வது! இது புகழ்ச்சியாக அமைவது.  இதைத்தான் இரட்டையரில் ஒருவர் பாடினார்.

நாணென்றால் நஞ்சிருக்கும்; நற்சாபம் கற்சாபம்; 

பாணந்தான் என்று தொடங்கினார். அவ்வளவுதான் மேலே போக இயலவில்லை.

வஞ்சப் புகழ்ச்சியாக நாணைப் பாடியாயிற்று. சாபத்தை- அதாவது வில்லையும் - பாடியாயிற்று. இனி, பாடவேண்டியது பாணம் மட்டுந்தான். பாணமாக- அம்பாக- இருந்தவர் திருமால். இப்போது முன் இரண்டையும்- வில்லையும் கயிற்றையும் இகழ்வதுபோல் புகழ்ந்த மாதிரியே பாணத்தையும் இகழ்வது போன்றுப் புகழவேண்டும். பாணந்தான் என்று தொடங்கியவரால் மேலும் தொடர இயலவில்லை. பாணந்தான், பாணந்தான் என்று மூன்று நான்கு முறை சொல்லிப் பார்த்தார். மேலே கற்பனை போக மறுத்தது.

இரண்டாமவர் தன் வேலையைப் பார்த்தார். பாடல் அவரால் முடிக்கப்பட்டது. எப்படி?

நாணென்றால் நஞ்சிருக்கும்; நற்சாபம் கற்சாபம்; 

பாணந்தான் --- --- --- தாணுவே

சீர் ஆரூர் மேவும் சிவனேநீ எப்படியோ

நேரார் புரமெரித்த நேர்.

அப்படியே சுவரில் கரியால் எழுதிவைத்தார்கள். பாடல் இரண்டு சீர்கள்- இருசொற்கள்- இல்லாததால் மூளியாக இருந்தது.

இரட்டையர் அதுகுறித்துக் கவலைப்படவில்லை. தங்களின் இயலாமையைக் காட்டியே எழுதிவைத்தனர். 

மறுநாள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். 

பாடல் இருசீர்கள் இல்லாமல் குறைபாட்டுடன் சுவரில் எழுதப்பட்டிருந்தது. எல்லாரும் அதைப் பார்த்தனர். இரட்டைப் புலவர்களுக்குக் கூட கற்பனைப் பஞ்சமா?  என்று ஆளாளுக்குப் பேசியவாறே சென்றனர். 

இப்படியே ஒரு திங்கள் கழிந்தது.

அந்தச் சத்திரத்திற்கு காளமேகப் புலவர் வந்தார். வந்தார்; உண்டார்; நடந்துவந்த களைப்பு அகலப்படுத்து உறங்கினார்.

உறங்கி எழுந்தவர் கண்களில் சுவரில் எழுதப்பட்டிருந்த மூளியான வெண்பா பட்டது.

யாராவது அழித்திருப்பார்களோ என்று முதலில் சந்தேகப்பட்டார். பிறகு நடந்ததை அறிந்துகொண்டார். "இரட்டைப் புலவர்கள் சிறப்பாகப் பாடல் இயற்றுவார்களே' என்றார். 

"ஏதோ அந்த நேரத்தில் அவர்களுக்குத் தோன்றவில்லைபோலும்' என்று கூறியவாறு கையில் ஒரு கரித்துண்டை எடுத்தார். மூளியாய் இருந்த இடத்தை நிறைவு செய்தார்.

பாணந்தான் என்று தொடங்கி அத்துடன் நிறுத்தி இருந்தார்கள் இரட்டையர்கள். 

அதனை நிறைவு செய்தார் காளமேகம்.

""பாணந்தான் மண்தின்ற பாணமே'' என்று மூளியை நீக்கி முழுமை செய்தார். 

திருமால் கிருஷ்ணனாக அவதரித்தபோது மண்ணை அள்ளித்தின்றார். யசோதை தலையில் அடித்தாள். கண்ணன் வாயைத் திறந்தான். வாயில் அண்ட சராசரமும் தெரிந்தது. இது பாகவதக் கதை. காளமேகம் கூறுகிறார், சிவபெருமான் பாணமாக அம்பாக வைத்தது திருமாலை. அந்தத் திருமால் மண்ணைத் தின்றவர்.

ஒரு பாணம் என்பது குருதியையும் தசையையும் தின்னவேண்டும். மண்ணைத் தின்பது தோல்வியின் அடையாளம். "மீசையில் மண்படவில்லை' என்றும் "மண்ணைக் கவ்வினார்' என்றும் தோல்வியை இகழ்ந்து கூறுவோம்.

காளமேகம், மண்ணைத் தின்ற பாணத்தை வைத்திருந்த பெருமானை இகழ்வதுபோன்று சொல்லி, அந்த பாணத்தைக் கொண்டே திரிபுரத்தை எரித்ததைப் புகழ்ச்சியாக்கி, வஞ்சப் புகழ்ச்சி செய்கிறார். 

அரைகுறையாய் நின்ற பாடலை முழுமை செய்துவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார் காளமேகம்.

அடுத்த திங்களில், அந்தச் சத்திரத்துக்கு வந்தார்கள் இரட்டைப் புலவர்கள்.

தங்களின் பாடல் நிறைவடைந்திருப்பதைக் கண்டு நெகிழ்ந்தனர். "மண்தின்ற பாணமே' என்று அருமைசெய்தவர் யார்? என்று கேட்டறிந்தனர்.

காளமேகத்தினிடம் இரட்டையர்க்கு நன்றி பொங்கியது. தங்களுக்கு வாய்க்காத அந்தக் கற்பனை அவருக்கு வாய்த்ததை எண்ணி வியந்து போற்றினர். 

உடனே காளமேகத்திடம் சென்று நன்றி தெரிவிக்க அவர்களின் நன்றி நிறை நெஞ்சம் ஏங்கித்தவித்தது.

காளமேகம் குடந்தையில் இருப்பதறிந்து திருவாரூரிலிருந்து குடந்தைக்கு விரைந்தனர்.

குடந்தைக்குள் நுழைந்தவுடன் எதிர்ப்பட்ட ஒருவரை, "காளமேகம் வீடு எங்கே?' என்று கேட்டனர். 

"காளமேகம் இருந்த வீட்டையா கேட்கிறீர்கள்?' என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

"ஏன், என்னாயிற்று?' பதறினர் இரட்டையர்.

"காலையில்தான் இறந்தார்.' என்றார்.

"வீடு எங்கே?'

"மூன்றாம் தெருவில் கடைசி வீடு.'

வீட்டை அடைந்து பார்த்தபோது, அப்போது தான் உடலைச் சுடுகாட்டுக்குக் கொண்டுசென்றதற்கான அடையாளம்மட்டுமே தெரிந்தது.

சுடுகாட்டுக்கு ஓடினார்கள். அந்த உடலையாவது பார்த்துவிட வேண்டும் என்று துடித்தபடி சென்றனர். காளமேகத்தின் உடலைக் கூட சரியாகப் பார்க்கமுடியவில்லை இரட்டையர்களால்.

இவர்கள் போய்ப் பார்த்தபோது காளமேகத்தின் உடலுக்குத் தீ மூட்டிவிட்டார்கள்.

இரட்டையர்கள் பார்த்தபோது தீ வாயில் பற்றிக்கொண்டிருந்தது.

இரட்டையர் துயரின் எல்லைக்கே சென்றனர். நாமென்றால் துயரம் வந்தால் அழுதுதீர்ப்போம். இரட்டைப் புலவர்கள் கவிவல்லவர்கள் அல்லவா! தங்களின் இதயதாபத்தைக் கவிதையாக்கிக் காட்டினார்கள். அவர்கள் அப்போது பாடிய பாடல்,

""ஆசு கவியால் அகில உலகும்
வீசு புகழ்க்காள மேகமே- பூசுரா
விண்கொண்ட செந்தழலில் வேகுதே ஐயையோ!
மண்தின்ற பாணம்என்ற வாய்.''

இருசொற்களைத் தந்த அந்தக் கவிஞனுக்கு இரட்டையர் ஒரு வெண்பாவையே நன்றிக் காணிக்கையாக்கித் தந்து இலக்கிய உலகில் காளமேகத்துக்கும் தங்களுக்கும் அழியாத இடத்தை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்.

தமிழில் அந்த மூவரும் என்றும் இருப்பார்கள்.


நன்றி - இனிய உதயம்  01 8 2014

சுமிருதியும் திருக்குறளும் - ஆ.சிவசுப்பிரமணியன்

வேத சமயத்தின் புனித நூல் தொகுதிகளுள் ஒன்றாக சுமிருதி விளங்குகிறது. நான்கு வேதங்களும் எழுத்து வடிவம் பெறாது காதால் கேட்டு மனனம் செய்வதன் வாயிலாகவே பாதுகாக்கப்பட்டு வந்தன. இதனாலேயேஎழுதாக்கிளவிஎன்ற சொல்லால் வேதம் சங்க இலக் கியத்தில் குறிப்பிடப்பட்டது. வேதங்களைப் போன்றே சுமிருதிகளும் வாய்மொழியாக ஒரு குறிப்பிட்ட காலம் வரை வழங்கியுள்ளன. சுமிருதி என்பது குறித்துஅபிதான சிந்தாமணி’ (பக்கம் 702) பின்வருமாறு விளக்கம் தருகிறது.

இவை தர்மசாத்திரங்கள், நித்தியகருமங்கள், ஆசாரம், விவகாரம், பிராயசித்தம், இராசதர்மம், வருணாசிரமம், அக்நிகார்யம், விரதம் முதலிய பலவற்றைக் கூறும். இவைகள் பல இருடிகளால் (ரிஷிகளால்) கூறப்பட்டவை”.

சுமிருதிகளின் எண்ணிக்கை பதினெட்டாகும். இந்நூல்கள் யாவும் பார்ப்பனியத்தை உள்வாங்கி எழுதப் பட்டவை.

பார்ப்பனியம் சார்ந்த வேதங்களும் வேள்விகளும் சங்ககாலத் தமிழகத்தில் ஊடுருவியிருந்ததையும், வேத எதிர்ப்பாளர்களையும் சங்க நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. சங்ககாலத்தை அடுத்த பல்லவர் காலத்தில் வேதசமயத்தின் தாக்கம் அதிகரித்து சோழர் காலத்தில் அது உச்சகட்டத்தை அடைந்தது.

வள்ளுவர் காலத்திற்கு முன்னரும், அவர் வாழ்ந்த காலத்திலும், வாழ்ந்து மறைந்த பின்னரும், பார்ப்பனிய சமயமும், அதன் புனிதநூல்களும் தமிழ்நாட்டில் செல்வாக்குடன் விளங்கின. இப்பின்புலத்தில் வள்ளுவரின் திருக்குறளை ஆராய்வது அவசியமான ஒன்றாகிறது. இதன் முதற்படியாக சுமிருதிகளின் பொதுவான இயல்புகள் குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.

சுமிருதிகள் தோன்றிய சமூகம்:

சுமிருதிகளின் காலம் கி.மு நான்காம் நூற்றாண்டி லிருந்து ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலமாகும். இக்காலகட்டத்தில்தான் அடிப்படையான பொருளாதார மாறுதல்கள் இந்தியாவில் நிகழ்ந்துகொண்டிருந்தன. தனிச்சொத்துரிமை வளர்ந்து வலுவடையத் தொடங்கியது. நில உடைமை உறவுகள் முகிழ்ந்து அதன் அடிப்படையில் முரண்பட்ட வர்க்கங்களும் உருப்பெற்றன. நில உடைமை யாளர்கள், கால்நடை உரிமையாளர்கள், ஒரு பக்கமும், குத்தகை விவசாயிகள், உழவர்கள், கால்நடை மேய்ப் பவர்கள் மற்றொரு பக்கமும் சமூகத்தில் உருப்பெற்றனர். (பிரபாவதி சின்கா 1982 : 9)

சமத்துவம் வாய்ந்த இனக்குழு வாழ்க்கையழிந்து தனிமனிதர்களுக்கும் வர்க்கங்களுக்கும் இடையிலும் நில உரிமையாளர்களுக்கும் உழவர்களுக்கும் இடையிலும் முரண்பாடுகள் வளரத் தொடங்கின.

மற்றொரு பக்கம் அவைதிக சமயங்கள் அல்லது வேதமறுப்புச் சமயங்கள் என்றழைக்கப்பட்ட சமணம், பௌத்தம், ஆஜீவகம் ஆகியனவற்றின் மீதான தாக்குதலில் பார்ப்பனிய சமயம் வெற்றி பெற்றுத் தன்னை வலுவான சக்தியாக நிலைநிறுத்திக் கொண்டது.

திருக்குறள் தோன்றிய சமூகம் :

சுமிருதிகள் தோன்றிய சமூக அமைப்பை ஏறக்குறைய ஒத்ததாகவே திருக்குறள் தோன்றிய சமூக அமைப்பும் இருந்தது. சங்க காலத்தில் நிலவிய திணை வாழ்க்கை அழிந்து நிலவுடைமையின் வளர்ச்சி நிலையைத் தமிழ்ச் சமூகம் எட்டியிருந்தது. குறுநில மன்னர்களின் ஆட்சிக்கு மாறாக நிலவிய வேந்தர்கள் ஆட்சி முறை வலுவடைந்து, பேரரசன் ஆட்சி முறையாகியது. விளைநிலங்கள் கொடைப்பொருளாகவும் மாறின.

இத்தகைய ஒத்த சமூகச் சூழலில் உருவான சுமிருதியின், திருக்குறளும் ஒத்த கருத்துடையனவாய் விளங்கினவா அல்லது மாறுபட்டு விளங்கினவா என்பது ஆய்விற்குரிய ஒன்று. இதனடிப்படையில் சுமிருதி கூறும் கருத்துக்களையும் திருக்குறள் கூறும் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆராய இடமுள்ளது. இதன் முதற்படியாக ஆளுவோனைக்குறித்து சுமிருதியும் திருக்குறளும் கூறும் செய்திகளைக் காண்போம்.

சுமிருதியின் நோக்கில் மன்னன்:

அரசின் தோற்றம் குறித்துப் பல்வேறு கோட் பாடுகளை அரசியல் அறிஞர்கள் உருவாக்கியுள்ளதாகக் கூறும் பிரபாவதி சின்கா அவற்றுள் ஒன்றாகதெய்வீகக் கோட்பாடுஎன்பதைக் குறிப்பிடுகிறார். இக்கோட் பாட்டின்படி அரசு என்பது கடவுளால் படைக்கப் பட்டது. எனவே அது ஒரு தெய்வீகமான அமைப்பாகும். இக்கோட்பாட்டுடன் நெருக்கமானதாகதெய்வீக உரிமைஎன்ற கோட்பாடு அமைகிறது.

தெய்வீக உரிமைஎன்பதன் அடிப்படையில் மன்னனானவன் வரைமுறையற்ற உரிமைகளையுடையவன். அவனது அதிகாரங்களைக் கட்டுப்படுத்த எவருக்கும் உரிமையில்லை. அவனது கட்டளைக்குக் கீழ்ப்படி யாதவர்கள் மரணதண்டனைக்குரியவர்கள்.

குடிமக்கள், மன்னனிடம் தாழ்ந்து பணிந்து போவதை, தெய்வீகக் கோட்பாடும், தெய்வீகக் கடமையும் வலியுறுத்துகின்றன. இதற்குச் சான்றாகப் பின்வரும் செய்திகளைக் குறிப்பிடலாம். “சுக்கிர நீதிஎன்ற வட மொழி நூல், “எல்லாவுலகங்களும் அரசனின்றி அச்சத்தால் எப்பக்கங்களிலும் சிதறுண்டிருக்குங்கால் அவ் வெல்லாவற்றையும் காத்தற் பொருட்டுப் பிரம்ம தேவன், இந்திரன், வாயு, இயமன், சூரியன் அக்கினி, வருணன், சந்திரன், குபேரன் ஆகிய இவர்களுடைய அழிவில்லாத கூறுகளைக் கொண்டு அரசனைப் படைத்தான்.”

என்று மன்னனின் தெய்வீகக் கூறுகளைச் சுட்டுகிறது. பல்வேறு தெய்வங்களின் மனித வடிவமே மன்னன் என்பது நாரத ஸ்மிருதியின் கருத்தாகும்.

கணக்கற்ற அதிகாரங்களைக் கொண்டிருப்பதால் அக்கினி, இந்திரன், சோமன், யமன், குபேரன் ஆகிய தெய்வங்களின் ஆற்றல் மன்னனிடம் குடி கொண்டிருக் கின்றன என்பது அவரது கருத்தாகும். சில புராணங்களும் கூட இவற்றையொட்டியே சில கருத்துக்களைக் கூறு கின்றன. மனுதர்ம சாஸ்திரம் மன்னனைக் குறித்துப் பின்வரும் கருத்தை முன்மொழிகிறது.

வேதம் கட்டளையிட்டிருக்கின்றவாறு உபநயன முதலிய சமஸ்காரங்களைக் கொண்ட க்ஷத்திரி யனால் இவ்வுலகம் விதிப்படி காப்பாற்றத்தக்க தாகும். இந்திரன், வாயு, எமன், சூரியன், அக்கினி, வருணன், சந்திரன், அளகேசன் ஆகிய திசைக் காவலர் அனைவரின் தன்மைகள் ஓருருவாகத் தோன்றியவனே அரசன்.

திசைக்காவலரான தேவர்களின் வடிவினன் ஆதலால் மனிதர்களின் மிக்கொளியுடையவனாய் ஆண்டு கொள்ளும் ஆற்றல் மிக்கவனாய் அரசன் திகழ்கின்றான்.

ஏறிட்டுப் பார்க்கும் எவரையும், அவரது கண்ணையும் மனத்தையும் காந்தச்செய்வதால் யாரும் அரசனுக்கெதிரே நின்று பார்க்கக் கூடாதவராகின்றனர்.

தனது மகிமையினால் அவ்வப்போது தீயாகவும், காற்றாகவும், சூரியனாகவும், சந்திரனாகவும், யமனாகவும், குபேரனாகவும், வருணனாகவும், தேவேந்திரனாகவும் இருப்பான்.”

வள்ளுவர் எந்த ஒரு மன்னனின் அவையிலும் அரசவைக் கவிஞராக இருந்ததாகத் தெரியவில்லை. அவரை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழிக் கதைகள் அடித்தள மக்கள் பிரிவைச் சார்ந்தவராகவே அவரைச் சுட்டுகின்றன. இந்நிலையில் அரசனின் சிறப்பைக் கூறும்இறைமாட்சிஎன்ற அதிகாரத்தைத் தம் வாழ்க்கைக் கண்ணோட்டத்தின் அடிப்டையிலேயே உருவாக்கியுள்ளார் என்று கருதுவதில் தவறில்லை. இறைமாட்சி என்ற அதிகாரத் தலைப்பிற்குஇறைவனது உண்மை கூறுதல்என்று மணக்குடவரும், ‘இறைவனது தன்மை கூறுதல்என்று பரிப்பெருமாளும் பொருள் உரைத்துள்ளனர்.

மன்னனை இறைவனாகவே காணும் சுமிருதி கருத்தை வள்ளுவர் உள்வாங்கியுள்ளார் என்பதைஇறைஎன்ற சொல்லால் மன்னனைச் சுட்டுவதிலிருந்து உணரலாம். முதற்குறளில் மன்னனுக்கு இருக்க வேண்டிய படை, சூடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறு உறுப்புகளைக் குறிப்பிகிறார். அடுத்து மன்னனுக்கு இருக்க வேண்டிய அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் என்ற நான்குகுண நலன்களையும், தூங்காமை, கல்வி, துணி வுடைமை என்ற மூன்று குணநலன்களும் நீங்கப் பெறாத வனாய் இருக்க வேண்டும். அறவழிநிற்பவனாகவும், பொருளை ஈட்டி அதைப் பாதுகாத்துப் பகுத்தளிக்கும் ஆற்றல் உடையவனவாகவும் இருக்க வேண்டும் என்கிறார். இச்செய்திகளையடுத்து,

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

 மீக்கூறும் மன்னன் நிலம்” (386)

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

 கவிகைக்கீழ்த் தங்கும் உலகு” (389)

என்று கூறும் செய்திகள் மக்களின் கண்ணோட்டத்தி லிருந்து மன்னனைப் பார்த்ததால் உருவானவை என்று கூற முடியும். இதன்வழி சுமிருதிகளின் கண்ணோட்டத்தி லிருந்து அவர் மாறுபட்டு நிற்கிறார்.

மன்னனின் கடமை :

உலகின் பல்வேறு நாடுகளிலும்தெய்வீக அரசுஎன்ற கருத்தியல் மன்னராட்சிக் காலத்தில் நிலவியுள்ளது. ஆனால் இந்திய மன்னராட்சி முறையில் வழக்கமான மன்னர் கடமைகளுடன் வேறுபாடான ஒரு கடமையும் மன்னர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஆர்.எஸ்.சர்மா, பார்ப்பனிய ஆதாரங்களின் கூற்றுப்படி, சாதிகளை நிலை நாட்டுவதும் அரசனின் குறிப்பிடத்தக்க கடமைகளுள் ஒன்று.

நான்கு சாதியாரும் அவரவர்க்கு உள்ள கடமை களைச் செவ்வையாகச் செய்வதை மேற்பார்வை யிடுவதும் அதற்கு வழி வகுப்பதும் அரசனின் கடமை என்று பெரும்பாலும் எல்லா ஆதாரங் களும் சொல்லுகின்றன.”

என்கிறார். பிற நாடுகளின் மன்னர்கள் வர்க்க வேறு பாடுகளை நிலைநிறுத்தியும், தான் பின்பற்றும் சமயத்திற்கு ஆதரவளித்தும், சில நேரங்களில் மாற்றுச் சமயத்தினருக்குத் தொல்லை தந்தும் ஆட்சி புரிந்துள்ளனர். இந்திய மன்னர்கள் இக்கடமைகளுடன் வருணப் பாகுபாடுகளைப் பாதுகாக்கும் கடமையையும் மேற்கொண்டிருந்தனர்.

மன்னனின் வருணம் குறித்தும், வருணக்கலப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் அவனது கடமை குறித்தும் திருக்குறள் எதுவும் கூறவில்லை. சுமிருதிகளிலிருந்து திருக்குறள் மாறுபடும் முக்கிய பகுதி இதுவேயாகும்.

நாலாம் வருணத்தோன் அரசனாயிருக்கும் நாட்டில் அந்தணர் வாழக்கூடாது என்பது மனுவின் வழியாகும்” (4.61).

மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தாரால் நடை பெறுகின்றதோ அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப்போலக் கண் முன்னே துன்பமுறுகின்றதுஎன்று குறிப்பிடுகிறார்” (8.21)

நாலாம் வருணத்தாரும், நாத்திகருமே மிகுந்து இருபிறப்பாளர் இல்லாமல் போகின்ற நாடு வறுமை வயப்பட்டு விரைவில் அழிந்துபோகும் என்றும் எச்சரிக்கிறார்”. (8.22)

ஆனால் திருக்குறள் குறிப்பிடும் அரசனும் குடி மக்களும் தனித்தனியான வருண அடையாளங்கள் இன்றியே காட்சியளிக்கின்றனர்.

மன்னனது இன்றியமையாத ஆறு உறுப்புகளுள் ஒன்றாகபடைஎன்பதை வள்ளுவர் குறிப்பிடுகிறார். இப்படையினர் போரில் வெற்றிபெற்றால் உரிமையாக்கும் பொருட்களில் ஒன்றாகப் பெண்ணைக் குறிப்பிடுகிறார் மனு. (7:96)

ஆனால் வள்ளுவர்,

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

 இல்லாயின் வெல்லும் படை”. (769)

என்று படையின் பெருமையைக் குறிப்பிடும்படை மாட்சிஅதிகாரத்தில் குறிப்பிடுகிறார். இக்குறளில் இடம்பெறும்செல்லாத் துனிஎன்ற சொல்லுக்குசெல்லாத்துனியாவது மகளிரை வெளவல், இளிவர வாயின செய்தல் முதலியவற்றால் வருவதுஎன்று பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். பரிப்பொருள்செல்லாத்துனிஎன்பதற்குபோகாத் துன்பம் உறுதலும்என்று உரை எழுதிபோகாத் துன்பமாவது பெண்டிரைக் கைக் கொள்ளுதலும் இளிவரவு செய்தலும் போல்வனஎன்று விளக்கமளிக்கிறார்.

போரில் கைப்பற்ற வேண்டிய பொருட்களில் ஒன்றாகமகளிர்மனுசுமிருதியில் குறிப்பிடப்பட்ட திருக்குறள் அச்செயல் படையிடம் இருக்கக் கூடாது என வலியுறுத்துகிறது.

தனி உரிமை பெற்றோர் :

நான்கு வருணப் பாகுபாட்டை வலியுறுத்தும் சுமிருதிகள், அவற்றுள் தலையான வருணமாகவும், தனி யுரிமை உடைய வருணமாகவும் அந்தணரைக் குறிப்பிடு கின்றன. விதிக்கப்படும் தண்டனைகளில் பாகுபாடு காட்டுதல், கொடை வழங்கல் ஆகியன பார்ப்பனர்களை மையமாகக் கொண்டு மனுசுமிருதியில் கூறப்படுகின்றன. ஆனால் திருக்குறளில் இத்தகைய தனியுரிமை பெற்ற பிரிவினர் எவரும் இடம் பெறவில்லை. வேள்வி குறித்தும், அதை மேற்கொள்ளும் அந்தணர் குறித்தும் திருக்குறள் குறிப்பிடுகிறது. ஆனால் அதன் அடிப்படையில் தனி யுரிமை பெற்றவர்களாக எவரையும் குறிப்பிடவில்லை.

உழுதொழில் என்பது பார்ப்பனர் மேற்கொள்ளத் தகுதியற்ற ஒன்றாக மனுசுமிருதியில் குறிப்பிடப்படுகிறது.

ஆனால் உழு தொழிலின் மேன்மையை வலியுறுத்திஉழவுஎன்ற தலைப்பில் ஓர் அதிகாரமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.

சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம்’ (1031)

உழுவார் உலகத்தார்க் காணி’ (1032)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ (1033)

என்று உழு தொழிலையும் உழவரையும் போற்றுவதுடன் நில்லாது

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேமென் பார்க்கும் நிலை’ (1036)

என்று சற்று அழுத்தமாகவே உழவின் தேவையை வலியுறுத்துகிறார்.

தனியுரிமை பெற்ற வருணப் பிரிவினர் மேற் கொள்ளக் கூடாத தொழிலாக ஸ்மிருதிகள் குறிப்பிடும் உழுதொழிலையும் அதை மேற்கொள்வோரையும் சிறப்பிக்கும் இச்செயலின் மூலம் சுமிருதியின் சாதிய மேலாண்மைக் கருத்துடன் வள்ளுவர் முரண்படுகிறார்.

நாலாம் வருணத்தாருக்குப் பொருளியல் போன்ற இம்மைப் பயன்தரும் கல்விகள் கற்பித்தலாகாது (4.80) என்று மனு குறிப்பிட்ட, கல்வி என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகக் குறளில் கூறப்படுகிறது.

நான்கு வருணங்களும் தமக்கு விதிக்கப்பட்ட கடமை களை முறையாகச் செய்ய வேண்டும் என்பது சுமிருதிகள் சுட்டும் விதிமுறையாகும். ஆனால் வருணங்கள் குறித்தோ அவற்றிற்குரிய கடமைகள் குறித்தோ திருக்குறள் எதையும் குறிப்பிடவில்லை. மேலும் சலுகை பெற்ற வர்க்கத்தைச் சார்ந்த பார்ப்பனர்கள் தம் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக யாரிடமிருந்தெல்லாம் வற்புறுத்திப் பொருளைப் பெற வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றன. தம் நலனுக்காக அறமில்லாத முறையில் பணம் பெறுவதை வருணத்தின் அடிப்படையில் ஸ்மிருதிகள் வலியுறுத்து கின்றன. ஆனால் திருக்குறளோ,

ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை

என்கிறது.

குறளை மறந்த தமிழ் மன்னர்கள் :

பல வடமொழிச் சுமிருதிகளில் குறிப்பாக மனு சுமிருதியின் கருத்துக்களுடன் பலவாறு வள்ளுவர் மாறுபட்டு நிற்பதைச் சில எடுத்துக்காட்டுகள் வாயிலாகக் கண்டோம். இம்மாறுபாடே தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளில் திருக்குறள் புறக்கணிக்கப்படக் காரண மாயிற்று. அறம் என்பதே சுமிருதியைச் சார்ந்ததாக மாறியது. திருக்குறளின் அறத்துப்பாலுக்கு உரை எழுதும் போதுஅறமாவது மநுமுதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன வொழிதலுமாம்என்று பரிமேலழகர் விளக்கம் கூறும் நிலை தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது. தமிழ் மன்னர்களின் கல்வெட்டுக்களில் நாம் எந்த நெறியில் நின்று ஆட்சிபுரிகிறோம் என்பதைத் தொடக்கத்தில் குறிப்பிடுவார்கள். சான்றாகப் பின்வரும் தொடர்களைக் குறிப்பிடலாம்.

மனுவாறு விளங்க

மனுநெறி சிறக்க

மனுநெறி தழைக்க

இவ்வாறு குறிப்பிட்ட தமிழ் மன்னர்கள்குறள் வழி நின்று’, ‘வள்ளுவர் வழி நின்றுஎன்று குறிப்பிடவில்லை. இதற்குக் காரணம் குடிமக்களின் கண்ணோட்டத்திலேயே அரசு மற்றும் அரசன் குறித்த பார்வை திருக்குறளில் இடம்பெற்றுள்ளமைதான். இது மன்னர்களுக்கும் அவரைச் சார்ந்து நிற்போருக்கும் உகப்பாயில்லாமல் போனதில் வியப்பில்லை. மன்னனையும் அவனை அண்டி நிற்போரையும் அரவணைத்து அவர்தம் நலனைப் பேணும் தன்மையால் சுமிருதிகள் தமிழ் மன்னர்களால் ஏற்றுக் கொள்ளப்பட திருக்குறள் ஓரங்கட்டப்பட்டது.

இவ்வாறு மன்னர்களால் ஓரங்கட்டப்பட்டமையே திருக்குறளின் சிறப்பாகும். மற்றொரு பக்கம் மக்களிடையே அது பரவலாக வழங்கி வந்துள்ளது. இதன் அடிப் படையிலேயே திருக்குறளுக்கு தருமர் தொடங்கி திருமலையார் வரை பதின்மர் உரையெழுதியுள்ளனர். தன்காலத்திய மேட்டிமையோர் நெறியான சுமிருதி நெறியிலிருந்து விலகி நின்று அறம் கூறியமையே வள்ளுவரின் தனிச்சிறப்பாகும்.          

நன்றி - உங்கள் நூலகம்  ஆகஸ்ட்2010
நன்றி - கீற்று