எஸ்.பொன்னுத்துரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ்.பொன்னுத்துரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆண்மை 13 - எஸ்.பொன்னுத்துரை


ஈச்சேரில் விழுந்த சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது.

வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத தவம் எல்லாம் கிடந்து, கண்ட கண்ட தெய்வங்களையெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டது வீண் போகவில்லை. சோட்டைத் தீர்க்க ஆறாம் காலாகப் பொடியன் பிறந்தான். சந்தான விருத்தியில் அவனே மங்களமாக அமைந்தான்.

பயணக் களைப்பைப் பாராட்டாமல் சரஸ்வதியும் புத்திரிகளும் வீட்டைத் துப்பரவு செய்யும் உழவாரத் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சந்திரசேகரத்தை சயனநங்கை முற்றாகச் சரித்துவிடவுமில்லை. இமைகளைப் பிளந்து காங்கை ஏறுவதான கூச்சத்தில், அவருடைய கண்களின் இமைக் கதவுகள் சற்றே அகலும். இமைகளின் ஈயக் குண்டுகளைச் சுமக்க இயலாது என்கிற வாக்கில் மீண்டும் மூடிக் கொள்ளும். இமைகள் இலேசாகத் தோன்றுகின்றன. முற்றத்தில் மாமரங்கள் செழுங்கிளைகள் பரப்பியிருக்கின்றன. அவை வெக்கையை உறிஞ்சுவதினாலேதான் இத்தகைய இதம் விடிந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிகிறது. மாமரங்களுக்கப்பால் “கேற் தெரிகிறது. அதிலே கறள் மண்டிக் கிடக்கிறது.

கேற்றிலே நிலை குத்திய விழிகளைப் பிரித்தெடுத்து, இடப்பக்கமாகவே மேய விடுகிறார். மதிலில் பாசி சடைத்து நுதம்பி வழிகின்றது. சுவரின் வெடிப்பிலே ஆலங்கன்று ஒன்று வேர் விட்டு, கொழுத்து வளர்கின்றது. “உதை உப்பிடியே வளரவிட்டால் சுவருக்கு மோசம் தரும் ஐயரின் வளவைச் சுற்று மதில் வளவு என்றுதான் சொல்வார்கள். அந்த எல்லையைப் பற்றியும் அறிக்கையைப் பற்றியும் கவலையில்லை. வலப்பக்கமும் கொல்லையும் வேலியும். வலப்புற வேலியிலே ஊரும் அவருடைய பார்வை தரிக்கின்றது. அந்த வேலி கறையான் தின்று இறந்து கிடக்கின்றது. கோழி ஒன்றும் அதன் குஞ்சுகளும் ஒரே சுரத் தொனியைச் சாதகஞ் செய்து கொண்டு, வேலியிலுள்ள கறையான்களை மேய்கின்றன. … பூரணத்திற்கு வேலியைப் பற்றி என்ன கவலை? சோட்டைக்குத்தானும் அவளுக்கு ஒரு பெட்டைக்குஞ்சு பிறக்கவில்லை. சீமாட்டிக்கு எல்லாம் கடுவன்கள்.

வேலியையும் தாண்டி சேகரத்தாரின் மனம் அலை மோதுகிறது. முப்புறமும் எரிக்கமுனையும் முக்கண்ணனாகச் சாம்பசிவத்தார் காட்சியளிக்கிறார். சொற்கள் அனற் குழம்பை அள்ளிச் சொரிகின்றன.

உந்த வேலியைப் பிரிச்செறிஞ்சு போட்டு மதிள்தான் கட்ட வேணும். உவளவை கோயில் கிணத்திலை போய்த் தண்ணி அள்ளட்டுமன் ம் பக்கத்திலை பாவங்கள் – ஏழை பாளையள் – வந்து தண்ணி அள்ளட்டும், போகட்டும் வரட்டும் என்று ஒரு பொட்டு விட்டால், தட்டுவாணியள் மாப்பிள்ளையல்லோ கொள்ளப் பாக்கிறாளவை…”

பொட்டு மேவப்பட்டு, பனையுயரத்தை எட்ட முனைந்த புதுவேலி சாம்பசிவத்தாரின் வைராக்கியத்தைப் பறை கொட்டியது. பூரணத்தைப் பார்க்க முடியாது. தூண்டிற் புழுவின் ஆக்கினையைத் தமதாக்கிச் சந்திரசேகரம் சாம்பினான்.

அழகு என்ற சொல்லின் அர்த்தப் பொலிவு முழுவதையும் தனதாக்கி எழில் பிழிந்தவள் பூரணம். இடையை இறுக்கிச் சுருக்கும் பாவாடையோடும், குரும்பை மார்பை அமுக்கி விறைத்த சட்டையோடும், சருவக்குடம் சுமந்து, அவள் தன் வீட்டிற்கும் அயல் வீட்டுக் கிணற்றுக்கும் நடைபயில அந்த நடைபயிலும் நர்த்தனைக் கால்களிலே தன் உள்ளத்தை வெள்ளிப் பாதசரமாகத் தொங்க விட்டு

விழிமொழிக் கொஞ்சல் முற்ற முற்ற, கிணற்றடி கமுக மரவட்டில் காதற்கடிதங்கள் கனிந்து தொங்கத் தொடங்கின. கமுக மரம் சமத்தான தபாற்காரன்தான். ஆனால் காற்றும் காகமும் செய்த திருக்கூத்தால் பூரணத்தின் கடிதமொன்று சாம்பசிவத்தின் கைகளிலே கிட்டியது. உறவு பிளவுற்றது. வேலி பனையுயரத்தை எட்ட முனைகிறது.

வேரோடி விளாத்தி முளைத்தாலும் தாய்வழி தப்பாது என்று சொல்வார்கள். தாய்வழியில், பூரணம் சந்திரசேகரத்தின் மனைவியாக வாழத்தக்க உறவு முறை. ஆசையின் தொங்கு தாவல்கள், பூரணத்தை அடைவதற்குத் தாயின் ஆதரவைத் திரட்டும் நள்ளல். இரவுச் சாப்பாட்டின் போது இதைப் பற்றி சேகரம் மெதுவாகப் பிரஸ்தாபிக்கிறான். சித்திரைப் புழுக்கத்திற்காக விறாந்தையில் விசிறியுடன் இருந்த சாம்பசிவத்தாரின் செவிகளிலே அந்த உரையாடலின் சில நறுக்குகள் விழுந்து விடுகின்றன. காலம் அப்பிய சாம்பற் புழுதியை உதிர்த்துக் கொண்டு, கோபம் அம்மணமான அக்கினி உடம்பைக் காட்டலாயிற்று.

உங்கை என்ன காத்தையைக் கதையள்? இப்பவே தாய்க்கும் மேனுக்கும் சொல்லிப்போட்டன். அந்த எடுப்பை மறந்து போடுங்கோ. நான் மசிவனென்டு கனவிலும் நிலையாதையுங்கோ உதுக்குக் கன்னிக் கால் நடுகிறதிலும் பார்க்க நான் பாடையிலைப் போக ஓமெண்டுவன்.

அதிலே தொனித்த உறுதி சேகரத்தின் தாய்க்குத் தெரியும். மகனுடைய ஆசையின் பக்கம் தன்னால் சாய முடியாது என்ற நிதர்சனத்தின் உறைப்பு.

உங்களுக்குத்தான் ஆண்டவன் கண்டறியாத தொண்டையைப் படைச்சிருக்கிறான். இப்ப என்ன நடந்து போச்சு எண்டு துள்ளுறியள்? இவன் வாயுழையைப் புசத்துறான் எண்டு கேட்டுக் கொண்டிருந்தால், நான் என்ன சுகத்தைக் கண்டன்? மத்தளம் போல இரண்டு பக்கமும் அடிபடுறன்…” என்று சலித்து, மூக்குச் சிந்தி, முன்றானைக்கும் வேலையைக் கொடுத்தாள் தாய்.

தொடர்ந்து புகுந்த மௌனம் நீண்டது.

டேய் சந்திரன்! ஏண்டா, இப்படி எங்களைக் கொல்லுறாய்? உன் விருப்பப்பட்டி ஆட, எனக்கும் உன் கோத்தைக்கும் முதலிலை ஏதேன் நஞ்சைத்தாவன்? கண்டறியாத பலகாரத்தைக் கண்டவனைப் போல, இடியப்பக் காரியின்ரை வாடிப்போன நோடாலத்தை நினைச்சு இந்தப் பேயன் உருகுகிறான்…” என்று விவகாரத்திற்குச் சாம்பசிவத்தார் புதிய வேகம் கொடுத்தார்.

அடுக்களையிலிருந்து எவ்வித சளசண்டியும் எழும்பவில்லை. இளகிய இரும்பும், கருமத்தில் மனம் குத்திய கொல்லனும்! குரலின் சுருதியைத் தாழ்த்தி, அதிலே பாசத்தைக் குழைத்து, “தம்பி, நீ ஒருத்தன் நல்லா வாழ வேண்டுமெண்டுதானே இவ்வளவு பாடுபட்டம்? உனக்கு ஒரு கெடுதல் வந்து அண்ட விட்டிடுவமே? கலியாணம் எண்டால் சின்னச் சோறு கறி ஆக்கிற அலுவலிலை. அதைப் பெரியவங்களின்ரை பொறுப்பிலை விட்டிடு.. சோதினை பாஸ் பண்ணினாப் போலை போதுமே? நல்ல உத்தியோகம் ஒண்டிலை உன்னைக் கொழுவிவிட வேணும் எண்டு நான் ஓடித் திரியிறன். நீ என்னடா எண்டா குறுக்கால தெறிக்கப் பார்க்கிறாய் இனிமேல், ஒண்டு சொல்லிப் போட்டன். அந்தப் பலகாரக்காரியளின்ரை கதை இந்த வீட்டிலை எடுக்கப்படாது…” எனப் பேசி முடித்தார்.

பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்ததுடன் சாம்பசிவத்தார் நின்று விடவில்லை. ஓடி அலைந்து பிற்கதவுகளில் நுழைந்து பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து இழுக்க வேண்டிய கயிறுகளை இழுத்து மகன் சந்திரசேகரத்தை நல்லதொரு உத்தியோகத்திலே மாட்டிக் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். அதற்குப் பின்னர்தான் சாம்பசிவத்தார் நிம்மதியாகத் தூங்கினார் என்று கூடச் சொல்லலாம்.

தூங்குவதான பாவனையில் பழைய சம்பவங்களை அசை போட்டுக் கொண்டு கிடக்கிறார் சந்திரசேகர்.

சரசக்கா! எப்பிடிப் பாடுகள், உடம்பு கொஞ்சம் இளைச்சுக் கிடக்குது – இது பூரணத்தின் குரல்.

அவளின்ரை குரல் அப்பிடித்தான் கிடக்குது? ஒரு உடைவோ ஒரு கரகரப்போ?

பக்கத்து வீட்டாரைப் பற்றிய நினைவின்றி இயந்திர வாழ்க்கை உருளும் கொழும்பில் வாழ்ந்த பிள்ளைகளுக்கு அயல் வீட்டுப் பிரிவு புதுமைச் சுவையை ஊட்டுகிறது.

வாருங்கோ பூரணமக்கா! பழக்கமில்லாமல் பூட்டிக் கிடந்த வீடு. உதைத் துடைச்சுத் துப்பரவாக்கிறதுக் கிடையிலை இடுப்பு முறிஞ்சு போடுமெணை. உதென்ன சருவச் சட்டீக்கை?

இதெணை கொஞ்சம் இராசவள்ளிக் கிழங்கு. புள்ளையளுக்குப் பிரியமா இருக்குமெண்டு கிண்டினனான். இதுதானே மூத்த பொடிச்சி? உங்கைப் பாருங்கோவன் நல்ல வடிவா வளந்திருக்கிறான். எக்கணம் என் கண்ணும் பட்டுப்போகும் எடுங்கோ புள்ளை. ஐயா நித்திரையே? அவருக்கும் கொஞ்சம் கொண்டு போய்க்குடு தங்கச்சி…”

சந்திரசேகரத்தார் தான் நித்திரையில் ஆழ்ந்து விட்டதாக நடிக்கிறார். “ஐயா, நித்திரையெண்டால் எழுப்பக் கூடாது என்ற ஞாயிற்றுக்கிழமை – பிற்காலத்தில் போயா தின – ‘மெட்னித் தூக்கங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பொதுவிதி அவரைக் காப்பாற்றுகிறது.

பழைய பூரணமே? பெருவிரல்களால் பத்து இடங்களில் குழிதோண்டி, இரண்டு வார்த்தைகள் பேசத் திக்குவாளே, அந்த மங்குளிப் பெண்ணா இவள்? இப்பொழுது கதை கண்டவுடன் சொர்க்கம்

சந்திரசேகரத்தாரின் மனம் நினைவோடையைக் கிழித்துச் செல்கின்றது.

உத்தியோகமான புதிதிதில் கொழும்பிலே போர்டிங் சீவியம். அலாம் மணி – பிளேன் டீ – பேப்பர் – முகச்சவரம் – தந்த சுத்தி – குளிப்பு முதலியன் – பாண் – விறுக்கு நடை – பஸ் – ஓட்டம் – கந்தோர் – அலுவல்கள் – டீயும் முசுப்பாத்தியும் – அலுவல்கள் – சோறு என்ற நினைப்பில் கல்லைக் கொறிக்கும் லன்ச் என்ற வித்தை – வம்பு மடம் – அலுவல் – டீ – நடை – பஸ் – மெது நடை – அரட்டை – சாப்பாடு – இங்கிரமெண்டைக் காப்பாற்றப் படிப்பு – லைட் அவுட் – தூக்கம்!

இராணுவ ஒழுங்கிலே நேரத்தின் ஆட்சிக்குள் உடலை வசக்கி எடுக்கும் இயந்திர இயக்கம். பின்னேர டீயுடன் ஒரு வடை – கடுதாசி விளையாட்டு – வசுக்கோப்புப் படம் என்ற விதிவிலக்குகளுக்கு மேற்படி நேரசூசியில் மிகமிக ஒறுப்பாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மற்றும் பிரக்ஞை கூட ஸ்மரித்த இயக்கம். பக்கத்து வீட்டுப் பூரணத்தின் முகம் தலை நீட்டுவதுண்டு. நேரத்தின் இராக்கதம் அதனைப் பிடித்து விழுங்கும்.

சாம்பசிவத்தார் அனுபவசாலி, மகனை “தனிக்க விடாது அடிக்கடி கொழும்புக்கு இஷ்டமான சோட்டைத் தீன்களுடன் வந்தார். எத்தனையோ குழையடி கோசுகளுக்குப் பிறகு, சரஸ்வதியை அவனுடைய வாழ்க்கைத் துணைவியாக்கி விட்டார். சரஸ்வதி ஆதனபாதங்களுடன் சீமாட்டியாக வந்து சேர்ந்தார். “அப்பன் கீறிய கோட்டைத் தாண்டாத சற்புத்திரனாக நற்பெயரெடுத்து சந்திரசேகரம் இல்லற வாழ்க்கையில் இறங்கினான். மூன்று ஆண்டுகளாக மலடியோ என்று பூச்சாண்டி காட்டிய சரஸ்வதி, தொட்ட சொச்சம் விட்ட மிச்சம் ஐந்து பெண்களையும் ஒரு கடுவனையும் அடுக்கடுக்காகப் பெற்று விட்டாள். அத்துடன் கணவருக்கு “ஆர் விகுதியையும் சேர்த்து சந்திரசேகரத்தாராக மகிமைப்படுத்தி விட்டார். அவள் தாயில்லாதவள். நல்லதுக்கும் கெட்டதுக்கும் மாமியார் வீடுதான். மூன்றாம் பிள்ளையின் பிரசவ வீட்டில் சாம்பசிவத்தார் கண்களை மூடினார். “பேத்தி பிறந்த ஜாதக பலன் என்று அந்த நிகழ்ச்சிக்கு விவரணம் கூறிய ஊர்ச்சனம், “நெய்ப்பந்தம் பிடிப்பதற்கு ஒரு பேரன் இல்லையே என்று ஒறுவாயையும் சுட்டிக்காட்டியது.

சாம்பசிவத்தாரின் மனைவி வலுத்த சீவன். ஆறாம் பிள்ளைப் பேறுக்காக பழக்க தோசத்திலேதான் வீட்டுக்கு சரஸ்வதியைக் கூட்டி வந்தார். அவளுடைய தாயாருக்கு இயலாத நிலை. பொடியன் பிறந்தான். அவனைத் தடுக்கிலே கண்டு களித்த நிலையிலே பெத்தாச்சிக் கிழவி மோசம் போனாள். ஆண்டு திவசத்திற்குப் பிறகு இந்த வீட்டை அவர் சரியாகப் பராமரிக்கவில்லை. பொடியனுக்கு இப்பொழுது வயது நாலு. “ஊமை என்ற பட்டத்தைச் சுமக்கிறான். டாக்டர்கள் அவன் பெரிய “பேச்சாளனாக விளங்குவான் என்று அபிப்பிராயப்படுகிறார்கள். அவைன் பற்றி வளர்ந்து வரும் விசாரமும் ஒரேயடியாக வீட்டோடு வந்து குடியேறுவதற்குக் காரணமாக அமைந்தது.

மூத்தவன் இந்த கோர்சுதான் யூனிவேஸிடி என்றன்ஸ் எடுத்தவன். கூப்பிட்டிருக்கிறாங்களாலம். எடுபடுவன் எண்டுதானெணை சொல்லுறான்.. பூரணம் இன்னும் போகவில்லை. எல்லோரும் பேச்சிலே குந்திவிட்டார்கள்.

என்னை எடுத்தவர்? என்ஜினியரிங்கோ? சரஸ்வதி மூத்த பெண் திலகம் கேட்கிறாள். அவள் யாருடனும் சட்டென்று பழக்கம் பிடித்துக் கொள்ளுவாள்.

இல்லை, புள்ளை டாக்குத்தர் படிப்புக்கும் போக வேணும் எண்டு இஞ்சினை சொல்லித் திரிஞ்சான்…” பூரணத்தின் குரலிலேய எவ்விதப் பெருமையும் மண்டவில்லை. புதிதாகச் சேர்ந்துள்ள பணத்தின் செருக்கு துளி கூட இல்லை.

சந்திரசேகரத்தார் மறுபக்கம் திரும்பிப் படுப்பதான அபிநயத்துடன் புரளுகின்றார். மனம் பூரணத்தைப் பற்றிய நினைவுகளிலே மொய்த்துச் சுவிக்கின்றது.

கடையப்பக்காரியள் என்று சாம்பசிவத்தார் சிந்திய சுடுசொற்கள் பூரணத்தின் தாயாரை வெகுவாகத் துன்புறுத்தியது. அன்று தொடக்கம் அவள் நாயாக அலைந்து, தன் மகளுக்குக் குடும்ப வாழ்க்கை ஒன்று குதரிச் செய்து விட்டாள். சின்ன வயது தொடக்கம் எல்வெட்டித் துறையாருடைய கடையிலே வேலை செய்த அநாதைப் பையன் சோமசுந்தரத்தைக் கைப்பிடித்த ராசி, அள்ளிக் கொடுத்தது. திருச்சி பீடிக் கொம்பனிக்கு ஏஜன்சி எடுத்து ஆரம்பமானது அவனுடைய தனி வியாபாரம். இன்று இங்கு ஒரு கடை, குருநாகலில் இரண்டு கடைகள், கொழும்பில் பீடிபக்டரி, கிளிநொச்சியில் வெள்ளாண்மைப் பூமி, ஐந்து லொறிகள் என்று செல்வம் பொங்கி வழிகின்றது. “புளியுருண்டை வியாபாரமும் உண்டு என்று பேசிக் கொள்கிறார்கள். காகம் குந்தியே மாடு சாகப் போகுது? சென்ற ஆண்டு அவருக்கே ஜே.பி. பட்டமும் கிடைத்திருக்கிறது!

ஓமெணை, அவர் யாவார விஷயமாத்தான் கொழும்புக்குப் போயிருக்கிறார். என்னதான் அள்ளிக் குவிச்சாலும் வீட்டுச் சோறுக்கும் தண்ணிக்கும் பொசிப்பில்லை. அந்தரிச்சை சீவியமெணை..

பூரணம் உண்மையிலை சீதேவிதான். இல்லாட்டில் என்னைக் கட்டிக் கொண்டுதானே கஷ்டப்பட்டிருப்பாள்? அவளுக்கு நாலும் கடுவன்கள். ஆசைக்குக் கூட ஒரு பெட்டையில்லை. அவளுக்கு எல்லாம் பெண்களாகப் பிறந்திருந்தாலும் கவலைய்யில்லை. தெறிச்சிப் பார்த்து நல்ல மாப்பிள்ளை எடுக்கிறதுக்கு வேண்டிய காசு இருக்கு. எனக்கு எல்லாம் பொடியன்களாகப் பிறந்தாலும் என்ன புண்ணியம்? சீனியரோடை நில், என்னைப் போலக் கிளாக்கராகு என்றுதானே சொல்லியிருப்பன்? இந்த வீடும் வளவும்! காடலைந்த முயலாட்டம் இந்த வளையை நாடி வநிதருக்கிறேன். சரஸ்வதி கொண்டு வந்ததுகள் சில ஈட்டிலை கிடக்கு. அதுகளை மீட்டாலும் கோமணத் துண்டளவிலை ஒரு வளவும், பேரளவுக்கு ஒரு வீடும் கட்டிக் குடுக்கத்தான் தேறும்

பத்து வருஷ சேர்விஸோட ஸ்பெஷல் கிரேடிற்குப் போகேக்கிள்ளை எல்லாத்தையும் வெட்டிப் புளக்கலாம் எண்டுதான் நினைச்சன். நான் கிளறிக்கல் சேர்விஸிலை சேர்ந்து கொட்டப்பெட்டிச் சம்பளத்தோடை சமாளித்தது போலேதான் நடக்குது. சரசுவுக்கு என்ன தெரியும்? பிள்ளையளுக்கு என்ன விளங்கப் போகுது? பாவம், அதுகளும் ஏதோ அந்தஸ்தைப் பற்றிப் பெரிசா நினைச்சுக் கொண்டிருக்குதுகள்…”

காதலின் மெல்லிய உணர்ச்சிகள் என்ற பழைய நினைவுகளை அசைபோட்ட சந்திரசேகரத்தார் புத்திபூர்வமான லோகாயுத விசாரணையில் இறங்கி மனத்தைப் புண்ணாக்கி அப்படியே தூங்கி விட்டார்.

விழித்த பொழுது, வள்ளிசாக ஒரு மணி நேரமாவது தாம் தூங்கி விட்டதை அவர் உணர்ந்தார். கை கால்களை அலம்பிக் கொண்டு தேநீர் குடிக்க வந்தமர்ந்தார். சரஸ்வதி ராசவெள்ளிக்கிழங்கைக் கொடுத்தாள். “யார் தந்தது? என்று கேட்காமலேயே சாப்பிடத் தொடங்கினார்.

பூரணத்தின் சுபாவத்தைப் போலவே கிழங்கும் இனிக்கிறது

கேட்டியளேய்யா இண்டைக்கும் நாளைக்கும் உலை வைக்கக் கூடாதாம். நாளையண்டைக்குத்தான் நல்ல நாளாம்…”

கொழும்பிலை இருந்த உமக்குமெணை உந்தப் பஞ்சாங்களங்களைப் பாக்க நல்லாத் தெரியுது போல…”

பூரணக்காதான் சொன்னா. இண்டைக்கும் நாளைக்கும் தானே சமைச்சு அனுப்பப் போறது எண்டும் சொன்னாவு. நான் வேண்டாமெண்டு சொல்லவும் அவ கேக்கிறாவு இல்லை…”

ஓமணை உனக்கும் இஞ்சை துடைச்சுக் கழுவத்தானே ரெண்டு நாளும் சரியாப் போகும்

பூரணமக்கா தங்கமான மனுஷி.. பொடியளும் அப்பிடித்தான்

நான் கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளுறத்துக்குள்ளை நீர் ஊருலகமெல்லாம் அறிஞ்சிட்டீர் என்று சிரித்தபடி தேநீரைக் குடித்து முடித்தார்.

நான் ஒருக்கா வேலி அடைக்கிற நாகப்பனைப் பார்த்திட்டு வாறன்

பூரணம் முற்றத்தில் நின்று சிரிக்கிறாள். அவரும் பதிலுக்குச் சிரித்தார்.

மனசார இவள் ஒரு மனுஷியுந்தான், ஒரு வடிவுந்தான்

நாகப்பனும் சின்னவனும் வேலியடைக்கிறார்கள். கொல்லை வேலி சின்னன். விடியற்புறம் வந்தவர்கள் அதனை அடைத்து முடித்த பிறகுதான் சாப்பாட்டைப் பார்த்தார்கள்.

வெயில் ஏறத் தொடங்கியது. பூரணத்தின் வளவுப் பக்கத்து வேலி பிரிக்கப்பட்டது. அடைப்பு வேலை ஆரம்பமாகியது. சந்திரசேகரத்தார் கூட மாட நின்று வேலை செய்கிறார். “கட்டுக்கோத்துக் கொடுக்கக் கூட ஓர் ஆண் பிள்ளை இல்லையே.

சோட்டைக்குப் பிறந்த பொடியன் பூரணத்தின் இடுப்பிலே குந்தியிருக்கிறான்.

நடுவாலை ஒரு பொட்டு வைச்சு அடையுங்கோ. புள்ளை குட்டியள் போய் வரட்டும் என்று பூரணம் சொல்லுகிறாள்.

அந்தப் பொட்டினை அடைத்து தன் மகனின் வாழ்வைக் காப்பாற்றுவதாக சாம்பசிவத்தார் நினைத்தார்.

பொட்டுகள் உறவுக்கான வாசல்கள். உறவுகளே அன்று பூரணத்தின் அழகிலே அவர் மனம் அலைந்தது. இன்று – அவளுடைய ஆளுமையிலே ஒரு கனவும் சுகமும் இருப்பதை உணர்கிறார். அந்தச் சுகத்தில் நெஞ்சிலை தைத்துச் சீழ் வைத்து விட்ட சிறாம்பை சந்திரசேகரத்தார் மெதுவாக இழுக்கிறார்.

இருபது வருடங்களுக்குப் பின்னர் “பொட்டு ஒன்று விடப்பட்டு வேலி அடைக்கப்படுகின்றது.

நன்றி - பண்புடன் குழுமம்

அணி - எஸ்.பொன்னுத்துரை


ஏன் வாசலிலேயே நின்று விட்டீர்கள்? உள்ளுக்கு வாருங்கோ ஐயா. இன்றைக்கு நான் மட்டுந்தான் வேலை செய்யிறன். தம்பிக்கு 'சேவ்'. கையோடு முடிந்துவிடும். இளமட்டங்கள் சில, எங்களுடைய 'ஸ்டை' யிலைப் பார்த்துத்தான் உள்ளே வாருங்கள். 'ஜங்கி ஸ்ட'லில் என்று சொல்லி, நாக்கு வழிப்பதைப் போல அந்தரப்பட்டு, ஒரு படத்தையும் அதில் நடிக்கும் நடிகனின் பெயரையும் சொல்லி, அப்படியே வெட்டிவிடும்படி சில விறுதாக்கள் கேட்கும். அதை ஏன் ஐயா கேட்கிறீர்கள்? மயிரைக் கவனமாகச் சீவி விடவில்லை என்பதைக் காட்டிக்கொள்ள, ஒரு மணி நேரம் அவர்கள் கண்ணாடிக்கு முன்னால் சீப்புடன் படும் பாட்டைச் சொல்ல முடியாது. பார்த்தீர்களா? மரியாதை தெரியாமல் நிற்க வைத்தே பேசிக் கொண்டிருக்கிறன். குடையை அந்த மூலையிலை வையுங்கோ. ஓமோம். அந்தப் 'புட்டு' வத்திலை வசதியாக இருக்கலாம். அது நேற்றையப் பேப்பர். இன்றைய்குப் பேப்பர்காரப் பொடியன் இன்னும் வரவில்லை. புழுக்கமாகத்தான் இருக்கிறது. விசிறியைப் போட்டு விடுகின்றன். நீங்கள் இந்த ஊருக்குப் புதிதாக்கும். நான் ஆக்களைப் பாத்துச் சொல்லுறநிலை கெட்டிக்காரன். பார்த்தீர்களா, சரியாகச் சொல்லி விட்டேன். வேலை மாற்றமாகி வந்திருக்கிறீர்களாக்கும். இல்லையா? மட்டக் களப்பிலிருந்து நல்லூர்க் கந்தசுவாமிக்கோயில் பார்க்க வந்திருக்கிறீர்களா? இன்றைக்குக் கார்த்திகைத் திருவிழாவாக்கும். ஓம், தம்பி மறந்து போனன். தம்பிக்கு சேவ் மட்டுந்தானே? இருபத்தைந்து சதம். சரி, போயிட்டு வாரு ம....ஐயா, இந்தப் புட்டுவத்திலை வந்து இருங்கோ. இது நாலுபேர் வேலை செய்யிற பெரியகடை தான். எலெக்ஷனுக்கு நாலு நாட்கள் தான் இருக்கின்றன. அது வரைக்கும் நான்தான் கடையைத் தனியாப் பார்க்கவேணும். நான் ஒரு வாய் வெற்றிலை போடுகிறன் ஐயா. அப்பொழுதுதான் கை சுறுசுறுப்பாக வேலை செய்யும். 

ஏன் சுவர்களைப் அப்படிப் பார்க்கிறீர்கள்? இவை சலூனில் மாட்டத்தக்க படங்களல்ல என்று நினைத்துத் தானே? சினிமா நடிகைகளின் படங்களையும், சீனாக்காரிகளின் கொங்கொங் படங்களையுந்தான் சுவர்களிலை மாட்டலாமென்று பெரும்பாலான சலூன்காரர்கள் நினைக்கிறார்கள். ஒரு காலத்திலை அப்படிப்பட்ட படங்கள்தான் இங்கும் இருந்தன. இவையெல்லாம் விக்டர் செய்த மாற்றங்கள். லிங்கன், காந்தி, பாரதி, லெனின், மாஸேதுங், ஜ“வானந்தன்,... அந்தப் பெயர் தான் மனநிலை நிற்கமாட்டுது. லீயூ-சாவூ-ஸ’ என்று சொன்னீர்களா? ஓம். அதைப்போல தான் ஒரு பெயர். இந்த வரிசையிலை நடுவிலை இருக்கும் படம். அதற்குப் பக்கத்திலிருக்கும் படம் முருகேச வாத்தியாருடையது... சே, இந்த நானா வரவர வலு மோசம். வெற்றிலைக்கு நொங்குப்பாக்கு வைக்கலிலை. 

நான் 'ஷ“ட்' எடுக்க உள்ளை சென்ற பொழுது ஏதோ கேட்டீர்களே? நன்றாகப் பின்னுக்கு நகர்ந்து உட்காருங்கோ. ஏன் இந்தப்படங்களைச் சிவப்பு 'லைட்'டுகள் அலங்கரிக்கின்றன என்றா? அதுவும் விக்டரின் ஏற்பாடுதான். இந்தப் படங்களுக்கு நீல 'பல்பு' அழகாக இருக்குமென்று பலர் சொல்லியிருக்கிறார்கள். விக்டர் அடிக்கடி சொல்லுவான். தொழிலாளர் அணியைச் சேர்ந்தவர்களுடைய இரத்தம் சிவப்பாம். ஏன் சிரிக்கிறீர்கள்? விக்டரின் கதையைக் கேட்டீர்களென்றால் சிரிக்க மாட்டீர்கள். கொஞ்சம் இந்தப் பக்கமாகத் தலையைக் குனியுங்கோ.... கதையைச் சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுது வேலையும் முடிந்துவிடும்; நேரம் போறதும் தெரியாது. 'இவனிடம் தலையைக் கொடுத்து விட்டோம்; சொல்லுவதை எல்லாம் சொல்லட்டும்' என்று சிலர் நினைப்பினம். நீங்கள் அப்படி இல்லையா? சந்தோஷம். 

என்னுடைய அண்ணன் டொமினிக் தான் இந்த சலூனைத் திறந்தவர். முப்பது வருஷம் இருக்கும். அப்பொழுது இது தார்றோட்டுமில்லை; கஸ்தூரியார் வீதியுமில்லை. மக்கிபோட்ட றோட்; செம்மாதெரு என்று சொல்லுவார்கள். வின்ஸர் தியேட்டருக்குத் தகரக் கொட்டகை என்றுதான் பெயர். வண்ணாங்குளத்தடி பாபர் சலூன் என்றால் எல்லாருக்கும் தெரியும். நல்ல உழைப்பு. அந்த அண்ணனுடைய மகன்தான் விக்டர். அவனை நன்றாகப் படிப்பித்து உத்தியோக காரனாக்கவேண்டும் என்று அண்ணனுக்கு நல்ல ஆசை, மட்டக்களப்புப் பகுதியிலை சாதி வித்தியாசங்கள் எப்படி என்று தெரியாது. அங்கு அவ்வளவாகச் சாதி பார்ப்பதில்லை என்று சொன்னீர்களா? ஆனால், இங்கு இப்பொழுதுகூடச் சாதி வித்தியாசம் பாராட்டுகிறார்கள். முந்திய காலத்திலை சொல்லத் தேவையில்லை. தேத்தண்ணிக்கடைகளிலை எங்களுக்கெல்லாம் கறல்பேணி, அல்லது சோடாப் போத்தில் தனியாக இருக்கும். நீங்களும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? விக்டிரைச் சம்பத்திரிசியார் கல்லூரியிரை அண்ணர் சேர்த்தார். 'ஏன் உனக்குப் படிப்பு? சவரக்கத்தியை எடுத்துக்கொண்டு சிரைக்கப்போவன்' என்று தன்னை பொடியன்கள் 'பகிடி' பண்ணுகிறார்கள் என்ற எத்தனையோ நாட்கள் விக்டர் அழுதிருக்கிறான். யாழ்ப்யாணத்திலை சாதி வித்தியாசம் வலுபொல்லாது. தலையைக் கொஞ்சம் இந்தப் பக்கமாக... இன்னும் கொஞ்சம்...சரி. நான் எல்லாரிடமும் இப்படிக் கதைப்பதில்லை. விக்டருக்குப் படிப்பு நல்லா வந்தது. ஆனாலும், ஏழாம் வகுப்புடன் அவனுடைய படிப்புத் தடைப்பட்டுப் போச்சுது. என் தம்பிக்காரனொருவன் அகப்பட்ட பணம் முழுவதையும் சுருட்டிக் கொண்டு, யாரோ ஒரு கரையூர் வேசையையும. 'தூக்'கிக்கொண்டு நீர்கொழும்புக்கு ஓடிவிட்டான். அத்துடன் கடையும் சீரழிந்தது. இந்த நேரத்திலை விக்டரும் எங்களுடைய தொழிலுக்கு வந்துவிட்டான். நான் சிகரெட் புகைப்பதில்லை. வெற்றிலைதான் போடுவன். நெருப்புப் பெட்டிதேவையோ? நீங்கள் புகையுங்கோ. எல்லாம் பழக்கந்தானே? ஓமோம். எனக்கும் இப்படித்தான். நெடுநேரம் இல்லாவிட்டால் வாய் புளித்துவிடும். நெருப்புக் குச்சைக் கீழை போடுங்கோ. நான் கூட்டித் தள்ளுவன். தலையை இன்னும் கொஞ்சம் குளியுங்கோ.... எங்கை விட்டனான்? ஆ...விக்டர் சலூனுக்கே வந்துவிட்டான். இங்கை பேப்பர் ஒழுங்காக எடுப்பது வழக்கம். வாடிக்கைக்காரருக்குத் தேவை. சும்மா எவ்வளவு நேரந்தான் படத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது? பின்பு, அவை கடுதாசித் துண்டுகளாகவும் உதவும், விக்டர் பேப்பர்களை ஒழுங்காக வாசிப்பான். ஆனாலும் முருகேச வாத்தியாருடைய சிநேகிதந்தான் அவனுக்கு அரசியல் விஷயங்களிலை ஆசையைக் கொடுத்தது.

ஐயா, இந்தச் சுருள் மயிருக்குக் கொஞ்சம் 'சோட்' டாக வெட்டினால் நல்லது. அப்படியே செய்யட்டுமா?.... ஓம். விக்டரின் படத்திற்குப் பக்கத்திலை இருப்பதுதான் முருகேசு வாத்தியாரின் படம். அவர் பெரும் படிப்புப் படித்த மனுஷன். ஒருநாள் அந்தப் புட்டுவத்திலிருந்து சொன்னார். அவர் எப்பொழுதும் அந்தப் புட்டுவத்திலைதான் உட்காருவார். 'விக்டர்! மனிதன் தானும்-மனைவியும்-தட்டானும் என்று வாழக்கூடாது. மனிதன் உலக சமுதாயத்தின் ஓர் அங்கம். உலகத்திலுள்ள தொழிலாளர்கள் எல்லாரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள். அந்த அணியின் பெருமையை நிலை நாட்டும் வர்க்கப் போராட்டத்தில் அவன் ஓர் அங்கமாக மாறவேண்டும்.' அவர் வடிவாகப் பேசுவார். எனக்கு அதிகம் விளங்காது. விக்டருக்கு எல்லாம் விளங்கும்.

இப்பதான் பேப்பர்காரன் வருகிறான். ஏன் தம்பி? இன்றைக்கு றெயின் பிந்திட்டுதோ? கையிலை வேலை. அந்த மேசையிலை வையுங்கோ.... விக்டர் நிறையப் புத்தகங்களும் வாசிப்பான். முருகேசுவாத்தியார் பெரிய பெரிய புத்தகங்களை வாசிக்கக் கொடுப்பார். 'வேலையை ஒழுங்காகக் கவனிப்பதில்லை' என்று நானே எத்தனையோ தடவை அவனை ஏசியிருக்கிறன். 'முருகேசுவாத்தியார் கொம்யூனிஸ்டு. அவருடன் சேர்ந்து கொம்யூனிஸ்டாகக் கூடாது' என்று ஓகஸ்டீன் சுவாமியார் கூடப் புத்திமதி சொல்லியிருக்கிறார். ஓ, நீங்கள் சொல்லுறது சரிதான். நாங்கள் பழங்காலத்து ஆக்கள். இப்பொழுது சரிதான். நாங்கள் பழங்காலத்து ஆக்கள். இப்பொழுது லெனின் படமிருக்கிற இடத்திலை முந்தி தாடிக்கார ஜோர்ஜ் மன்னரின் பெரிய மடமொன்று இருந்தது. நல்ல வடிவான படம். ஒரு நாள் அந்தப் படத்தைக் கழற்றிப் போட்டு இந்தப்படத்தை மாட்டினான். அன்றைக்கு இங்கை பெரிய போரல்லே நடந்தது. தகப்பனுக்கு விசர் வந்தது போலைதான். விக்டருக்கும் தகப்பனுக்குமிடையிலை நல்ல வாக்குவாதம். ஒரு மாதமாக விக்டர் கடைப்பக்கமு ம வரவில்லை விட்டிட்டம். தலையைக் கொஞ்சம் இந்தப் பக்கமாகச் சரியுங்கோ; இன்னும் கொஞ்சம்... ஆ...

இன்னொரு நாள் நடந்த சம்பவத்தையும் கேளுங்கோ. அன்று 'குறப்' வெட்ட முருகேசு வாத்தியார் வந்திருந்தார். அதே சமயம் சாளையாவும் வந்தார். நாகையாவை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? சாதி வேறுபாடுகள் நல்லாப் பாக்கிற மனுஷன். கோயில்கள் சிறுபான்மைத் தமிழருக்குத் திறந்து விடப்பட்ட அக்கிரமத்தைப் பார்க்காது சிவபத மடைந்து விட்டார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை. அவர் முருகேசு வாத்தியாரைக் கண்டதும், நாகத்தை மிதித்தவரைப்போல பதறி, 'இந்த நளம்-பள்ளுகளுக்கு முடிவெட்டும் இவங்களிடம் நான் ஒருநாளும் வெட்டமாட்டன்' என்று முழு நீளத்திலை'பானா சானா' வரிகளிலை 'தேவாரம்' பாடினார். ஓம். 'றிங் கத்திரிக்கை' தான். அடர்த்தியான மயிரைக் கோதி எடுத்தால் வடிவாக இருக்கும். பார்த்தீர்களா, ஐயா. நாங்கள் வெட்டுவதோ அழுக்கு மயிர். பேண்புழுக்கும் இந்த மயிரிலைகூட சாதிவேறுபாடு இருக்கிறதாம்.

நாகையா 'சண்டித்தனம்' செய்கையிலை சலூனில் முருகேசு வாத்தியார் மட்டுந்தானிருந்தார். அவர் நாகையாவிலும் 'மாத்து'க்கூடிய வெள்ளாளன். அவர் வட்டுக்கோட்டைப் பகுதி. நாங்கள் விஷயத்தை அறியாது விழித்தம். வாதிதியாரின் கண்கள் கோவத்திலை சிவந்தன. மலைத்து நின்ற விக்டரைப் பார்த்து அவர் சொன்னார். 'நான் ஒரு சீவல்தொழிலாளியின் கல்யாண வீட்டில் பந்தியிலிருந்து சாப்பிட்டதற்குத்தான் இந்தக் குதிப்பு. பூனை பூனைதான்; நாய் நாய்தான்; மனிதன் மனிதன்தான் வர்க்க ஒற்றுமையைச் சாதியின் பெயராலே சிதைத்து விடலாம் என்று இந்தப் பிற்போக்குவாதிகள் மனப்பால் குடிக்கிறார்கள். உலகெங்கும் தொழிலாளி வர்க்கம், செங்கொடியின்கீழ் அணிதிரண்டு வருவதை அறியாது இந்தக் கிணற்றுத் தவளைகள் சத்தம் போடுகின்றன. இரத்தம் சிவப்பு. அது பச்சையோ, நீலமோ மூவர்ணமோ அல்ல. இரத்தம் செங்கொடியின் நிறமேதான். உலகில் இரண்டே இரண்டு சாதிகள்தான். உலகில் இரத்தம் செங்கொடியின் நிறமேதான். உலகில் இரண்டே இரண்டு சாதிகத்‘ன் இருக்கின்றன. மனித இரத்தத்தைக் குடித்துக் கொழிக்கும் சுரண்டல் வார்க்கம் ஒரு சாதி-ஒரு அணி. உழைத்துத் தொழிலின் கௌரவத்தை நிலைநாட்டும் பாட்டாளி விவசாயிகள் மற்றைய சாதி-மற்றைய அணி. விக்டர்! நீ-தான்-அந்தச் சீவல் தொழிலாளி எல்லோரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள். மார்க்ஸ்-ஏங்கல்ஸ்லெனின்-ஸ்டாலின் - மாஹேதுங் வழிவழி வந்த செங்கொடி நம்மை வழிநடத்தும்.' கோபம் வந்தால், அவர் மேடையிலை பேசுவதைப் போலைதான் பேசுவார். கன்னத்திலை அதிக மயிர் குடைந்தெடுக்க வேண்டாமென்று சொன்னீர்களா? கதை கதையாக இருந்தாலும் வேலையும் வேலைதான். சிலிம்பிக் கிடக்கும் மயிர்களைத்தான் லேசாக வெட்டி விடுகிறன். ஐயா கன்னத்திலை 'மெஷ’ன்' போடவிடுவதில்லை என்பது பார்த்தவுடனையே தெரிகின்றது, வாருங்கோதம்பி, வாருங்கோ. ஐயாவுக்கு 'குறப்' மட்டுந்தான். முடியப்போகிறது. அந்தப் புட்டுவத்திலை இருங்கோ இன்றைய பேப்பர்தாள் பார்த்துக் கொண்டிருங்கோ. 

ஐயா, கேட்கிறீர்களா? பல ஆண்டுகளுக்கு முன்னர் அதே புட்டுவத்திலை-இப்ப தம்பி உட்கார்ந்திருக்கிற அதே புட்டுவத்திலை - அமர்ந்து சொன்னார். அப்பொழுதுதான் யாழ்ப்பாணத்துக்கு இந்த முனிசிப்பசல்பை கிடைத்தது. புதிய வட்டாரங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. அவர்-அவர்தான் முருகேசு வாத்தியார்-சொன்னார். 'விக்டர்! தன்னலமற்றவர்கள், தியாகம் என்ற அக்கினிக் குண்டத்தில் புடம் போட்டெடுக்கப்பட்ட நாணயஸ்தர்கள். மக்கள் தலைவர்களாக வேண்டும். படிப்பை முன் வைத்துத் தலைவர்களை உருவாக்கி எமாந்தது போதும். உன்னதமான உத்தமத் தலைவர்கள் தொழிலாளர் மத்தியிலேதான் தோன்றுகிறார்கள். அப்படியொரு தலைவன் நீ. இந்த எலக்ஷனில் நீ பதினாலாம் வட்டாரத்திற்கு போட்டியிட வேண்டும். வெற்றி-தோல்வியல்ல முக்கியம். இலட்சியம் என்பது நீண்ட பிரயாணம். தனி ஒருவன் முன்னேறுவான்; மரிப்பான். அவன் விட்ட இடத்தில்இன்னொருவனோ, சிலரோ அணி முன்னேறி வெற்றித் துவஜத்தை அடையும். நீ போட்டியிடுவது ஒரு சலூன் தொழிலாளியும் தேர்தலுக்குநிற்கலாம் என்ற சகஜநிலையை உருவாக்கும். நான் நன்றாகப் பேசுகிறன் என்று சொல்லுகிறீர்களா? ஒரு முறை கேட்டால் எனக்குப் பாடம் வந்துவீடும். அந்தக் காலத்திலை கிடாய் விழுந்தானிலை கூத்துகளும் ஆடி இருக்கிறன். நீங்கள் விக்டர் பேசுவதைக் கேட்டிருக்க வேணும். புயலடிப்பது போலை தான் இருக்கும். அவன் கொழும்பு, காலி எல்லா இடத்திலும் பேசியிருக்கிறான். சுருட்டை மயிர் படியிறது குறைவு. தலைக்குக் கொஞ்சம் தண்­ர் போடட்டுமே?

விக்டர், நாங்கள் யார் சொன்னதையும் கேட்காமல் எலெக்ஷனுக்கு நின்றான். இந்த ஊரே தடம் புரண்டது. 'காலம் கலிகாலம். அம்பட்டனும் தேர்தலு ககு நிற்கிறான். எல்லாம் இரண்டு காசு துள்ளுவதினாலை வந்த வினை' என்று சாதித்தடிப்புக் கொண்ட வாடிக்கைக்காரர் இந்தச் சலூனுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்கள். 'இதை உலகம் ஏற்குமா? அவர்களைப் பகைத்து நாம் தொழில் நடதத முடியுமா?' என்று எதிர்த்துப் போட்டியிட்ட அபேட்சகர் கொடுத்த சாராயம் வேலை செய்ய, எங்கட சாதிக்காரரே விக்டரை எதிர்த்தனர். அதற்கு விக்டர் என்ன சொன்னான் தெரியுமே? 'நாம் முடி வெட்டுவது அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், அவர்களும் நமது தொழிலைக் கற்றுக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கின்றேன்' என்றான். அவன் பகிடியும் விடுவான். 

ஓமோம், பிடரிக்கு மட்டுந்தான் மெஷ’ன் போடுறன். தலையை நன்றாகக் குனியுங்கோ.... நெடுகிலும் நல்லெண்ணெய் வைத்து வந்தால் சொடுகு பிடிக்கும். ஏன்? ஆமணக்கெண்ணெய் தலைக்கு நல்ல குளிராக இருக்குமே. கதையைக் கேட்கிறீர்களா? அந்தத் தடவை விக்டருக்குக் கட்டுக்காசு கூடக் கிடைக்கவில்லை. 'அம்பட்டனுக்கு நல்ல பாடம்' என்று எல்லோருக்கும் நல்ல சந்தோஷம். முருகேசு வாத்தியார் மட்டும், 'செடியை நாட்டிவிட்டோம்; இனி, அதனை வளர்ப்போம்' என்று விக்டரை மேலும் ஊக்கப்படுத்தினார்.

அடுத்த தடவை தேர்தல் வந்தது. விக்டர் மசியல் கள்ளன்; சரியான பிடிவாதக்காரன். அவன் மீண்டும் போட்யிட்டான். முதல் தேர்தலிலை இருத் சலசலப்பு இல்லை. தேர்தலைப் பற்றி வாடிக்கைக்காரர் சலூனிலேகூடப் பேசுவார்கள். அம்முறை கட்டுக்காசு கிடைத்தது. அப்பொழுது முருகேசு வாத்தியார் பூரிப்புடன் சொன்னார். 'நமது அணியின் ஆதரவு நன்றாக வளருகின்றது.' மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் மூன்றாம் எலெக்ஷன் நடந்தது, சரியான போட்டி, ஒருவரும் நம்பவில்லை. விக்டர் இரண்டு வாக்குகளால் வெற்றி பெற்றான். 

மன்னிக்கவேண்டும் ஐயா. இது கண்­ர். அது நினைத்துப் பார்க்க முடியாத சங்கதி. இப்பவும் நெஞ்சு வெடிக்கிறது போலை இருக்குது. ஊர்வலம் புறப்படும் பொழுது, யாரோ வில்லூண்டித் துப்பாக்கிச் சூட்டைப் பற்றியும் சொன்னான். அவன் சரியான கரிநாக்குக்காரன்தான். வெற்றி ஊர்வலத்திலை வந்து கொண்டிருந்த விக்டர் துப்பாக்கிக் குண்டிற்குப் பலியான செய்தியை நீங்கள்? ஓமோம். அதே விக்டரின் கதையைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறன். நாலு பேர் எதிரிகள். இரண்டுபேர் எங்களுடைய சாதிக்காரர்தான். உடன் பிறந்து கொல்லும் வியாதி. ஓம், ஐயா. விக்டருக்குப் பெண்சாதி இருக்கிறாள். கிளிக்குஞ்சு மாதிரி. பாவம், சின்ன வயது. இரண்டு பிள்ளைகள். கொஞ்சம் கஷ்டப்படத்தான் போகுதுகள். நாங்கள் அதுகளை அலைய விட்டிடுவமே?

சாவதற்கு முன்னர்கூட விக்டரின் ஓர்மம் தளரவில்லை. அவன் பேசிய ஒவ்வொரு சொல்லும் எனக்கு ஞாபகம் இருக்கிறது 'வெற்றித் துவஜத்தை அடைவதற்கு முன்னர் பலர் பலியாகலாம். நான் முதலில் பலியாவதைவிடச் சிந்த பேறில்லை, இதோ இரத்தம் அது செங்கொடியின் நிறமேதான். இந்த இரத்தத்தின் மீது ஆணையாகச் சொல்லுகிறேன். நமது அணியிலே ஒரு விக்டர் மறையலாம், ஆனால் அந்த இடத்திற்கு ஆயிரம் விக்டர்கள் தோன்றுவிட்டார்கள்.' 

மன்னிக்க வேண்டும் ஐயா, மன்னிக்க வேண்டும். கன்னத்து மயிரை ஒதுக்கும் பொழுது, விக்டரின் நினைவில் கை நடுங்கி விட்டது. 'பரவாயில்லை' என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், மன்னிக்க வேண்டும் மயிரை நன்றாகத் துடைத்து விட்டிருக்கிறன் குளிக்கத்தானே போகிறீர்கள்?...நல்லது.

'குறப்' மட்டுந்தானே? எழுபத்தைந்து சதம். தம்பி, இந்தப் புட்டுவத்தில் வந்து இங்கோ...இரண்டு ரூபாய்த் தாளா? சில்லறை இருக்கிறது. இந்தாருங்கோ ஒரு ரூபா இருபத்தைந்து சதம். ஓமோம். வெளியே, எதிர்ப் பக்கச் சுவரைப் பாருங்கோ. 'விக்டரின் பணியைத் தொடர டேவிட்டைத் தேர்ந்தெடுங்கள்' என்ற நோட்டீஸை. டேவிட் விக்டரின் மருமகன்...சரி வாருங்கள் ஐயா. 

தம்பி சுதுமலையல்லே? அங்க படிப்பித்துக் கொண்டிருந்த டீச்சர் பொடிச்சியைக் கிளப்பிக் கொண்டுபோனவன் எந்தப் பகதியாம்?.... மானிப்பாயோ? இவன் கந்தர்மடமல்லோ?... என்ன வேண்டும் ஐயா? குடையை மறந்து போய் விட்டீர்களா? அந்த மூலையிலைதான் வைத்தீர்கள். ஓம் அதோ இருக்கிறது. சரி, போயிட்டு வாருங்கோ ஐயா. 

*

நன்றி - நூலகம்