வாஸந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாஸந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வராத பதில்! - வாஸந்தி

வாக்கியத்தை முடிப்பதற்கு முன் அப்பாவின் உயிர் போய்விட்டது. ‘ஓ’ என்கிற அட்சரத்துக்குக் குவிந்தாற் போல் உதடுகள் வட்டமாக நிற்க, கண்கள் அவரது சுபாவமான உத்வேகத்துடன் விரிந்திருக்க, நாடக ஒத்திகையில் இயக்குநர் ‘ACTION!’ என்ற அதட்டலுக்குப் பணிந்து உறைந்தது போல முகம் உறைந்தது.

முதலில், அது ஏதோ வேடிக்கை போல் இருந்தது அவளுக்கு. அது ஒரு அசம்பாவிதம் என்று நினைக்கக்கூடத் தோன்றவில்லை. அப்பா என்பவர் ஸ்திரமானவர்... அந்த ஊஞ்சலைப் போல! அவளது வாழ்வின் நிரந்தர அங்கம். அவளது கணக்கு வழக்குகள், எங்கேஜ்மென்ட்கள், புரொகிராம்கள், கால்ஷீட்டுகள் எல்லாவற்றுக்கும் பொறுப்பு. ஓய்வு என்ற பேச்சே இல்லை. டான்ஸ் க்ளாஸ் மாணவிகள் யார் யார் இன்னும் சம்பளம் கொடுக்க வில்லை, சமையல் ஸ்டோருக்கு வாங்கிய லிஸ்ட்டில் சமையல்காரி சரோஜா செய்யும் தில்லுமுல்லுகள் உள்பட எல்லாம் அவருக்குத்தான் தெரியும். அப்பா அவளுடைய அந்தரங்கச் செயலர்... ‘கேர் ஃப்ரீ ஸ்டாக் தீர்ந்து போச்சுப்பா’ என்று கூச்சமில்லாமல் சொல்லுமளவுக்கு.
விசித்திரமாக, அதைப் பற்றினஒரு பேச்சின்போதுதான் அவருடைய வாழ்வு முடிந்தது.

“இன்னும் கொஞ்ச வருஷம் போனா, அதுக்கெல்லாம் தேவையே இல்லாம போயிடும். அதுவரைக்கும் என்கூடவே இருக்கப்போறியா?”

அவளுக்குச் சுருக்கென்று வலித்தது. அதை மறைத்துக்கொண்டு அவள் சிரித்தாள்.

‘‘ஏன்... தப்பா?’’

அதற்குத்தான் அப்பா பதில் சொல்ல ஆரம்பித்தார். வார்த்தைகள் வெளியில் விழ அவள் காத்திருந்தாள், எதிர்பார்ப்புடன்! ஆனால், பதில் வரவில்லை.

‘‘என்னப்பா?’’ என்ற அவளது கேள்விக்கு அப்பாவின் முகபாவம் மாறுதல் காண்பிக்காமல், வாய் ‘ஓ’ வில் குவிந்து, கண்கள் உத்வேகத்துடன் விரிந்து நின்றன. கிட்டே நெருங்கித் தோள் தொட்டதும், சினிமாவில் வருவது போல் தலை சாய்ந்தது.

அப்பா என்ன சொல்ல நினைத் தார்? ‘நா எத்தனை நாள் உசிரோடு இருப்பேனோ தெரியாது’ என்றா? நிச்சயம் இருக்காது. அப்பாவுக்கே கடைசி விநாடியில் சொல்லாமல் கொள்ளாமல் மரணம் வந்து நின்றது வியப்பை அளித்திருக்கும். அல்லது, தான் சாகிறோம் என்று உணர்வு வருவதற்குமுன் உயிர் பிரிந்திருக்கும். உணர்வு வந்திருக்கும் பட்சத்தில் அவர் மனசு என்ன நினைத்திருக்கும்? பரிதவித்திருக்கும். ‘ஐயோ... இந்தப் பெண் இனிமே என்ன செய்யும்?’

அவளுக்குக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வந்தது. அப்பா மறைந்ததாலா அல்லது சுயபச்சா தாபத்தாலா என்று புரியவில்லை. இரண்டுக்குமாக இருந்தாலும் அது இயல்பானது என்று தோன்றிற்று. அவளது ஐந்து வயதில் அம்மா இறந்து போனதிலிருந்து அப்பா அவளுக்காகவே வாழ்ந்தது அவரது குற்றம்.

நாட்டியத் தாரகை, சினிமா ஸ்டார் என்று ஆளாக்கி, கனவுலகில் சஞ்சரிக்க வைத்து யதார்த்த உலகில் உதவாக்கரையாய், இப்போது நிர்க் கதியாய் ஆக்கியது அவரது குற்றம். நடுநடுவில் தூக்கத்தைக் கலைத்து, ‘என்ன செய்யப் போற நா இல்லாம?’ என்று கேட்க முனைந்தால், அது எமனுக்குக்கூடப் பொறுக்கவில்லை.

தொலைபேசி விடாமல் ஒலித்தது. விட்டத்தைப் பார்த்து சோபாவில் மல்லாந்து படுத்திருந்தவள், அடிக்கட் டும் கழுதை என்று பேசாமல் இருந்தாள். விடாமல் மூன்று முறை விட்டுவிட்டு அடித்து ஓய்ந்தது. அவள் வீட்டில் இருப்பது எந்த மடையனுக்கோ தெரிந்திருக்க வேண்டும். எதிர்த்தாற் போல் இருந்த எஸ்.டீ.டி பூத்திலிருந்து அவன் போன் செய்தால் ஆச்சர்யப் படுவதற்கில்லை. பழமோ, பூவோ, நாய்க்கு பிஸ்கட்டோ வாங்க வெளியில் செல்லும் சரோஜாவிடம் கேட்டு அறிபவர்கள் நிறைய. ‘‘மேடம் இருக் காங்களா?’’
கடந்த சில வருஷங்களில் கேள்வி உருமாறி வருகிறது. ‘‘பாப்பா இருக்குதா?’’ ‘‘அக்கா இருக்கா?’’ எல்லாம் போய், திடுதிப்பென இப்போது தான் மேடம் ஆகிவிட்டது போல் தோன்றுகிறது.

‘‘மேடம்னு கூப்பிடறதுதானே கௌரவம்? வயசுக்குத் தகுந்த மதிப்பு வேணாமா?’’ என்கிறாள் அசட்டு சரோஜா.

டெலிபோன் மீண்டும் ஒலித்தது. அலுப்புடன் எழுந்தாள்.

‘’ஹலோ!’’

‘‘மேடம் நளினாவா?’’

‘‘ஆமாம். சொல்லுங்க!’’

‘‘வணக்கம் மேடம்! நாங்க சோப் விளம்பர ஏஜென்ட். உங்களை வெச்சு விளம்பரப் படம் பண்ணணும்னு ஆசைப்படறோம்!’’

‘அப்பாவைக் கேளுங்க’ என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது.

‘‘என்ன சோப்பு?’’

லோரியேல் அழகு சாதனங்களும் ஐஸ்வர்யா ராயின் முகமும் மனதில் நிழலாடின.

‘‘பாத்திரம் கழுவற சோப்பு!’’

அவளுக்குச் சப்பென்று போயிற்று. லேசாக அவமானம் ஏற்பட்டது.

‘‘நல்ல பேமென்ட் கிடைக்கும் மேடம்!’’

‘‘சரி, நேர்ல வந்து பாருங்க!’’

ஒரு நாள் வேலை. எதிர்பார்த்ததைவிட அதிகக் காசு. சோப் நன்றாக விற்பதாகச் சொன்னார்கள்.

‘‘என்ன நளினா, பாத்திரம் தேய்க்கிற விளம்பரத்துக்கு இறங்கிட்டியா?’’ என்று பொறாமை பிடித்த ஒருத்தி கேட்டபோது உறுத்திற்று.

‘‘இதிலென்ன இருக்கு... பணம் கொடுக்கறாங்க, செய்யறேன்! மைசூர் சாண்டலுக்குதான் செய்யணுமா என்ன?’’ என்று சமாளிக்க நேர்ந்தபோது மெல்லிய அவமானம் ஏற்பட்டது.

ஒரு நகைக் கடைக்கு விளம்பரம் வேண்டும் என்று விளம்பர ஏஜென்ட்கள் வந்து நின்றபோது, சற்று சமாதானம் ஏற்பட்டது. கூடைகூடையாக நகைகள் அணிவித்துப் பதினாயிரம் போஸில் படம் எடுத்தார்கள்.இரவெல்லாம் நகை சுமந்த பாரத்தின் நினைவில் கழுத்து வலித்தது. புன்ன கைத்த வாய் வலித்தது.

நகரமெங்கும் ராணி போன்ற அவளது உருவம் வானை நோக்கி எழும்பி நின்ற கிறக்கத்தில், அவள் குளிர்ந்திருந்த வேளையில், நகைக் கடைக்காரர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.
‘‘நளினா பொருத்தமான மாடல்னு எப்படி முடிவுக்கு வந்தீங்க?’’

‘‘நடுத்தர வயசு மாடல் போட்டோம்னா, 40 வயசுக்கு மேல உள்ள பெண்களுக்கும் தாங்களும் இந்த மாதிரி நகை போடலாம்னு ஆசை வரும்.’’

அதைப் படித்துவிட்டு, அன்று முழுக்க அவள் அழுது தீர்த்தாள்.

கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது இன்னும் அழகாக, இளமை யாக இருப்பதுபோல்தான் இருந்தது. ஆனால், இப்போது நேற்றுப் பிறந்த தெல்லாம் நடிக்க வந்துவிட்டன. 18 வயசுக் கதாநாயகிகளுக்கு 18 வயசுப் பெண்கள்தான் தேவையாம். 35 வயசு உதைக்குதாம்! ஆனால், 50 வயது அம்மா வேஷத்துக்கு 35 பரவாயில் லையாம். இது என்ன நியாயம் என்று புரியவில்லை. சாகும் வரை அம்மா வேஷம் போடுவதில்லை என்று அவள் சங்கல்பம் எடுத்தாள். ‘என்னடி தப்பு?’ என்றாள் தோழி குமுதினி. ‘ஷபானா ஆஸ்மி செய்யலியா? ஹேமமாலினி செய்யலியா? ஷர்மிளா டாகூர் செய்யலியா?’ என்றாள். அவளைவிட வயதான வர்கள் அவர்கள் என்று குமுதினிக்குத் தெரியும். அதன்பிறகு குமுதினியுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டாள்.

நட்ட நடு ஹாலின் சுவரில் தங்க முலாம் போட்ட சட்டத்துக்குள்ளி ருந்து அப்பா அவளையே பார்த்துக் கொண்டு இருந்தார். அவளுக்கு அவருடைய கடைசி பார்வைதான் கண்ணுக்குள் நின்றது. ஆச்சர்யமும் விசனமும் நிறைந்த பார்வை அது. வாக்கியம் முடிவதற்குள் குரலை நெரிப்பது யார் என்ற ஆச்சர்யம். ‘ஐயோ! இனி இந்தப் பெண் என்ன செய்யும்’ என்ற விசனம்.

பணத்தட்டுப்பாட்டால் அவள் சாக மாட்டாள், நிச்சயம்! கல்லு போல நாலு வீடுகள் நகரத்தின் பிரதான சாலைகளில் இருந்தன. நாட்டியப் பள்ளியில் 50 மாணவிகள் இருந்தார்கள். பல் போகும்வரை கட்டையைத் தட்டிப் பதம் பாடி ஜதி சொல்ல அவளால் முடியும்.

பின் அப்பாவுக்கு என்ன கவலை? உண்மையில் அப்பா அந்த வாக்கியத்தை முடிக்க அத்தனைச் சிரமப் பட்டுப் பிராணனை விட்டிருக்க வேண்டியதில்லை. அவளுக்குள் ளேயே அந்தக் கவலை அடிக்கடி எட்டிப் பார்த்தது. திரைக் காதலனுடன் டூயட் பாடி, மரம் சுற்றி, மடியில் படுத்து, புதர்களின் பின்னால் முத்தம் கொடுத்த பாவனையில் கேமராவுக்கு முகம் காட்டி , நாணி முகம் புதைத்த தெல்லாம் நிஜத்தில் அனுபவிக்க வேண்டும் போல் சில இரவுப் போதில் நாடி நரம்பெல்லாம் ஏக்கம் கொள்கின்றன. காது மடல் சூடேறி மேனி சிலிர்க்கிறது.

பத்து வருஷம் முன்பு வரை, கண்டவன் கேட்டவன் எல்லாம் அவளைக் காதலிப்பதாகச் சொல்வான். அநேகமாக அவளுடன் நடித்த எல்லா கதாநாயகர்களுமே சொன்னார்கள். பெரும்பாலும் அவர்கள் எல்லோருமே, கிட்டே நெருங்கினதும் அசாத்திய சுயநலவாதி களாக இருந்தார்கள். அல்லது, ஏற்கெனவே திருமணமானவர்களாக இருந்தார்கள். சரி, தான் மட்டும் ஆயுசு முழுக்க இப்படித் தனிக்கட்டையாக நிற்கப் போறோமா? இந்த வாழ்க்கை எப்போ ‘அர்த்தம்’ பெறும்?
அவளுக்கு வயது இப்போது 38. இன்னும் சில வருஷங்களில் கேர் ஃப்ரீ தேவை இருக்காது. அது தெரிந் தால் ஒரு கழுதைகூட வந்து எட்டிப் பார்க்காது.

‘சரி, கல்யாணம் ஒரு பிரச்னையா’ என்று அவள் யோசித்தாள். ஆனால், யாருக்காவது கழுத்தை நீட்ட வேண்டி யது அவசியம் போல உலக அழகிகளும் பிரபஞ்ச அழகிகளும் திருமணம் செய்துகொள்ளும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதற்காக சிலர் மரத்தை வலம் வந்தார்கள். சாதுக் களைத் தரிசித்தார்கள். ஜோதிடர்களை ஆலோசனை கேட்டார்கள். யாகம் வளர்த்தார்கள்…

வாசல் மணி விடாமல் ஒலித்தது. எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். கதவுக்கப்பால் அவளது மாணவி 10 வயது ரூபா. அவளுடைய கையைப் பிடித்தபடி அவளின் அப்பா கிருஷ்ணன். 45 வயதிருக்கும். காதோரம் லேசான நரை. கம்பீர உருவம். ‘ஏன் இந்த மாதிரி ஆட்கள் எனக்குக் கிடைப்பதில்லை?’ என்று ஒரு கேள்வி அவள் உள்ளே ஓடியது. ரூபாவுக்கு அம்மா இல்லை என்பது நினைவுக்கு வந்தது.

“எனக்குக் கொஞ்சம் வெளியிலே போகணும். வீட்டிலே யாருமில்லே. நாலு மணிக்குதான் க்ளாஸ். இருந்தாலும் இவ தனியா இருக்க வேண்டாம்னு அழைச்சிட்டு வந்தேன். தொந்திரவில்லையே?” என்றார் கிருஷ்ணன்.

‘‘நோ... நோ! உள்ளே வாங்க!’’

‘‘இல்லே, நா கிளம்பறேன்’’என்றார். மீண்டும் அவள் அழைக்க, மறுக்க முடியாதவர் போல, சங்கோஜத்துடன் வந்தார். ஏ.ஸி. அறையிலும் வியர்த்தது அவருக்கு.

‘‘ரூபா பெரிய டான்ஸரா வரணும்னு ஆசை, உங்களை மாதிரி!’’ என்றார். அவள் சிரித்தாள். ‘‘என்னை விடப் பெரிய ஆளா வருவா!’’ என்றாள் ரூபாவை அணைத்து.

‘‘தனியாவா இருக்கீங்க?’’ என்றார் கிருஷ்ணன் சற்றுப் பொறுத்து. அவள் புன்னகைத்தாள்.

‘‘சிரமமா இல்லே?’’

‘’சிரமம்னா?’’

கிருஷ்ணன் தயக்கத்துடன் ஏதோ சொல்ல வாய்திறந்தார். அவள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்.

அவருடைய உதடுகள் ‘ஓ’ என்பது போல் குவிந்தன. கண்கள் ஆச்சர்யத்துடன் விரிந்து நிற்க, யாரோ யீக்ஷீமீமீக்ஷ்மீ என்றது போல முகம் உறைந்தது.

அவளது நரம்புகள் லேசாக அதிர்ந்தன. இது ஏற்கெனவே கண்ட காட்சி என்ற பதைப்புடன், ‘‘என்ன?’’ என்றாள்.

தன் அப்பா ஏதோ வேடிக்கை செய்கிறார் என்று ரூபா சிரித்தது.

நளினாவின் கை இன்னும் ரூபாவை அணைத்தபடி இருந்தது.

நன்றி - விகடன்


எப்படிப் பிறக்கிறது கதை? - வாஸந்தி

எழுத்தாளர்கள் எப்படிக் கதை எழுதுகிறார்கள் என்கிற கேள்வி கதை பிறந்த காலத்திலிருந்து கேட்கப்படுவது. வியாசர் உண்மையில் மகாபாரதத்தை எப்படி எழுதினாரோ என்னவோ, அதற்கும் விளக்கமாக ஒரு கதை உண்டு. வியாசர் இடைவெளியில் நிறுத்தாமல் கதை சொல்வதற்குத் தயாரென்றால் எழுத நான் தயார் என்று விநாயகர் வந்து அமர்ந்து தனது தந்தத்தை உடைத்து எழுதியதாகப் புராணம். தெய்வீக அருள் இருந்தால்தான் அத்தகைய ஒரு முயற்சி சாத்தியம் பெறும் என்று அர்த்தமாக இருக்கலாம்.

சாதத் ஹசன் மண்டோ பாகிஸ்தானின் பிரபல உருது சிறுகதை எழுத்தாளர் [1912-1955] அவரது எழுத்தின் வசீகரம் மங்காத ஒன்று. அவரைச் சந்திக்க வரும் நிருபர்களும் வாசகர்களும் அவரை விடாமல் கேட்பார்கள். ‘எப்படி எழுதுகிறீர்கள்?’

அவர் ஒருமுறை ஒரு சொற்பொழிவில் விளக்கினார்.

“என் அறையில் சோஃபாவில் அமர்ந்து ஒரு தாளையும் பேனாவையும் எடுத்து ‘பிஸ்மில்லாஹ்’ என்று சொல்லிவிட்டு எழுத ஆரம்பிப்பேன். என்னைச் சுற்றிலும் எனது மூன்று பெண்களும் ஏகமாய் சத்தம் போட்டுக்கொண்டிருப்பார்கள். எழுதும்போது இடையில் அவர்களுடன் பேசுவேன். அவர்களது சண்டைகளைத் தீர்த்துவைப்பேன். ஏதேனும் கொரிக்க எடுத்துவருவேன். நடுவில் யாரேனும் என்னைச் சந்திக்க வந்தால் அவரை உபசரிப்பேன். நான் எப்படித்தான் எழுதுகிறேன் என்கிற கேள்விக்கு பதில் சொல்லவேண்டுமென்றால், எனது எழுத்துப் பாணிக்கும் அன்றாட நடவடிக்கைகளுக்கும் அதாவது சாப்பிடுவது, குளிப்பது, சிகரெட் பிடிப்பது அல்லது சும்மா இருப்பது போன்ற விஷயங்களுக்கும் ஏதும் வித்தியாசமில்லை என்றுதான் சொல்வேன்.

நான் ஏன் எழுதுகிறேன்? ஏன் என்றால் அது ஒரு போதை எனக்கு, மதுவின் போதையைப் போல. எழுதவில்லை என்றால் நான் நிர்வாணமாக இருப்பதுபோல, நீராடாமல் இருப்பதுபோல, மது அருந்தாததுபோல உணர்கிறேன்.

ஆனால் ஒரு சிறுகதையையும் என் மூளை உற்பத்தி செய்யாது. கர்ப்பமாக முடியாத பெண்ணைப் போலக் களைத்துப் படுப்பேன். எழுந்து பறவைகளுக்குத் தீனி வைக்கிறேன். பெண்களை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டுகிறேன். இறைந்து கிடக்கும் காலணிகளை ஒழுங்காக அடுக்கிவைக்கிறேன். குப்பையை அள்ளிக் கொண்டுபோய் வைக்கிறேன். அந்தப் பாழாய்போன கதை என்னவோ பையிலிருந்து வெளியேறி என் மூளைக்குச் செல்ல மாட்டேன் என்கிறது.

நிஜத்தைச் சொல்ல வேண்டுமென்றால், இறைவன் முன்னிலையில் சொல்கிறேன், எப்படி எழுதுகிறேன் என்பது எனக்கு சத்தியமாகத் தெரியாது. எதுவும் எழுத வரவில்லை என்று மனைவியிடம் சொல்லும் போதெல்லாம், அவள், ‘யோசிக்காதே, சும்மா பேனாவையும் பேப்பரையும் எடுத்து எழுதி ஆரம்பி’ என்கிறாள்.

அவள் சொல்வதைக்கேட்டு நானும் பேனாவையும் தாளையும் எடுத்து காலி மண்டையுடன், கதை நிறைந்த சட்டைப் பையுடனும் எழுத அமர்வேன். திடீரென்று கதை ஒன்று தானாக வந்து நிற்கும். நான் ஒரு பிக்பாக்கெட் மட்டுமே. என்னுடைய பாக்கெட்டில் இருப்பதைத் திருடி உங்கள் முன் வைப்பவன். நீங்கள் உலகம் முழுவதும் பயணித்தாலும் என்னைப் போன்ற ஒரு முட்டாளைப் பார்க்க முடியாது.”

மண்டோ சர்ச்சைக்குரிய எழுத்தாளராக இருந்தார். போலித்தனமான மதக் கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் வெளிப்படையாகத் தாக்கினார். ஆபாச எழுத்து என்று பல வழக்குகளில் சிக்கினார். என் எழுத்து ஆபாசமில்லை, ஆபாசம் இருப்பது சமூகத்தில் என்பார். ஒரு முறை நீதிபதியிடம், ‘தனது உணர்வுகள் புண்படுத்தப்படும் போதுதான் எழுத்தாளன் தனது பேனாவை எடுக்கிறான்.’ என்றார்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் குடியேறிய மண்டோ பிரிவினை காலத்துக்கு முந்தைய பிந்தைய காலகட்டத்துத் துயரங்களைத் தனது கதைகளில் மிக நுணுக்கமாகப் பதிவுசெய்தவர். மிக மோசமான காலம் அது. அந்நாட்களில் காண நேர்ந்த தார்மீகச் சரிவு அவரை விரக்தி கொள்ளச் செய்தது. அதன் வெளிப்பாடு அவரது எழுத்தில் தெரிந்தது. பிரிவினையால் நேர்ந்த அபத்தங்களை அவை ஏற்படுத்திய மனப் பிறழ்வுகளை தோபா தேக் சிங் என்ற அவரது கதை அற்புதமாகப் படம் பிடிக்கிறது.

அவர் தனது கல்லறையில் கீழ்க்கண்ட வாசகங்கள் எழுதப்படவேண்டும் என்று அறிவித்திருந்தார்:

‘கருணை நிறைந்த இறைவன் நாமத்தில், சாதத் ஹசன் மண்டோ இங்கு படுத்திருக்கிறான். அவனுடன் புதைந்திருக்கின்றன சிறுகதை எழுத்துக் கலையின் எல்லா ரகசியங்களும் மர்மங்களும். பல டன் கணக்கு மண்ணுக்கு அடியில் படுத்திருக்கிறான், யார் சிறந்த கதாசிரியன், அவனா அல்லது இறைவனா என்கிற திகைப்பில்…’


அந்தப் போட்டியில் தான் தோற்றுபோனதாக அவர் உண்ர்ந்திருக்க வேண்டும்.

நன்றி - தி இந்து 30 08 2014

தேடல் - வாஸந்தி

கொல்லை முற்றத்துள் இறங்கிய படிக்கட்டில் அமர்ந்தபடி பார்த்தபோது அடர்ந்த வேப்பமரத்தின், மாமரத்தின் இலைகளின் ஊடே வானம் மிக மிக சமீபத்தில் தெரிந்தது. இளநீலத் துணி ஒன்று மரத்தைப் போர்த்தியிருந்த மாதிரி. சற்று எழுந்து கையை நீட்டினால் உள்ளங்கைக்குள் வசப்பட்டு விடும் போல. உட்கார்ந்த இடத்தை வெளிப்படுத்தாமல் பட்சிகள் குரல் எழுப்பின கூ…கூ… கீ…கீ… என்று சளசளத்தன. அவளுடன் அந்தரங்கம் பேச வந்தன. அவளுக்குத் தெரியும் மொட்டை மாடிப்படிகளில் ஏறிச் சென்று நின்றால் மரங்கள் தாழ்ந்து விடும். பட்சிகளை எத்தனை தேடினாலும் கண்ணில் படாமல் மாயமாய் இலைகளுக்குள் பதுங்கிக் கொண்டு கவி பேசும்.

குழந்தை சிணுங்கிற்று. ‘உஷ், நீ உன் குரலை எழுப்பாதே’ என்றாள் அவள் செல்லமாக. மார்போடு அணைத்து முழங்கால்களைச் சுற்றி கைகோர்த்து அமர்ந்தாள். பின்னால் அவனது காலடி சத்தம் கேட்கிறதோ என்ற சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தாள். கொல்லையிலிருந்து வாசல் வரை கப்சிப்பென்று இருந்தது. குழந்தை அழுதால் அவனுக்குப் பிடிக்காது. அது இருப்பதன் பிரக்ஞை கூட அவனுக்கு கிடையாது என்று அவளுக்குத் தெரியும். அதனால்தான் குரல் எழும்போது திடுக்கிடுவான். அவளுக்கு மட்டுமே அது சொந்தம் போல் இருந்தது, அவனுடைய உணர்வுகளுடனோ உடலுடனோ சம்பந்தமில்லாமல். அவளது எண்ணங்களில் ஜனித்து உணர்வுகளோடு கலந்து. அதற்குப் பெயர் கூடக் கிடையாது. சமயத்திற்குத் தகுந்தாற்போல் அவளது கற்பனையில் பெயர்கள் தோன்றும். ஒரு நாள் நிலா, இன்னொரு நாள் ரோஜா, அல்லி, மல்லி, ஒரு நாள் காளி என்று கூடத் தோன்றிற்று. ஏன் கூடாது? அவளை அவன் எத்தனை முறை பத்ரகாளி என்று கூப்பிடுகிறான்! பத்ரகாளி என்பதற்கு ஆண்பால் என்ன என்று அவள் யோசித்தாள். குழந்தை மீண்டும் சிணுங்கிற்று. ‘உஷ் உஷ்’ என்று சமாதானப்படுத்தினாள். ‘பாட்டுப் பாடவா?’ என்றாள் குனிந்து மென்மையாக. கண்களை மூடி மனசுக்குள் முனகிக் கொண்டாள். மனசு முழுவதும் பொலபொலவென்று மல்லிகை மொட்டுகள் அரும்பி மலர்ந்தன. குப்பென்று எழுந்த வாசனை நெஞ்சை அழுத்திற்று. அதை உள்ளுக்கிழுத்து கண்களைத் திறந்த போது மரக்கிளைகளுக்கப்பால் புதிது புதிதாக வர்ணஜாலங்கள் தெரிந்தன. பதுங்கியிருந்த பட்சிகள் எட்டிப் பார்த்தன. பஞ்சபூதங்களும் இசைந்து சரிகமபதிநிஸ என்று சுருதி கூட்டினாற்போல் மௌனக் குகையில் புதையுண்டிருந்த வார்த்தைகள் வெடித்துச் சிதறி வரிவரியாக நெளிந்து மனத்திரையில் விழுந்தன. பனி மழையில் நனைந்த குளிர்ச்சியில் உடல் தண்ணென்றிருந்தது.

குழந்தையின் சிணுங்கல் அடங்கிப் போயிற்று. பேச்சு மூச்சில்லாமல் இருந்தது. அவளுக்குத்தான் களைத்து விட்டது. சற்று முன் வெளிப்பட்ட வார்த்தைகள் என்ன என்று சுத்தமாக நினைவில்லாமல் போயிற்று. வெற்றிடமாகிப் போன மனத்துடன் அவள் அமர்ந்திருந்தாள். இப்படித்தான் ஆகிறது எப்பவும். அவளுக்கு அம்மாவைப் பெற்ற பாட்டியின் நினைவு வந்தது. எண்பது வயதுப் பாட்டியைப் பார்த்துக் கொள்ளும் பொறுமை யாருக்கும் இல்லை. பாட்டியும் சும்மா இருக்கமாட்டாள். இரவு நேரத்தில் வீட்டுக்குள்ளும் கொல்லையிலும் அலையோ அலை என்று அலைவாள். என்ன தேடுவாள் என்று தெரியாது. கண் எப்படித் தெரிகிறது என்று அதிசயமாக இருக்கும். சில சமயம் வெல்லக்கட்டி, குழந்தைகள் பதுக்கியிருக்கும் சாக்லேட் அல்லது மோர், பால் எது இருந்தாலும் அவளுக்கு வாயில் போட வேண்டும். போடும்போது பாத்திரம் உருளும். சட்டி உடையும். அல்லது அவளே விழுந்து அடிபட்டுக் கொள்வாள். மாமியும் மாமாவும் கத்தோ கத்து என்று கத்துவார்கள். திருட்டுக் கிழம் என்று சபிப்பார்கள். ‘கிருஷ்ணா ராமான்னு கிடக்க வேண்டிய வயசிலே இது என்ன தீனிச் சபலம்’ என்று கத்தியபடி மாமா ரத்தத்தைத் துடைத்து மருந்து போடுவார். பாட்டி எதுவுமே காதில் விழாத மாதிரி உட்கார்ந்திருப்பாள். ‘ஏந்திருடரே… ஏந்திருடரே’ என்ற கத்தல் யாருக்கோ, தனக்கில்லை என்பது போல கண்ணை மூடிக் கொள்வாள். அவளுக்குத் தான் செய்தது ஞாபகம் கூட இல்லை என்று தோன்றும்.

எல்லாமே பழக்கத்தால் வருவது என்று தோன்றிற்று. மௌனமும் மறதியும் கூட. பாடப் பழகுவது போல பேசாமல் இருப்பதையும் பழகிக் கொள்ளலாம். ஆசைகளை அழித்துக் கொள்ளலாம். ஆனால் அந்தப் பழக்கம் ஏற்பட வேண்டுமென்றால் சில கொலைகளைச் செய்ய வேண்டும். பல சமயங்கள் குழந்தை அழும்போது அவன் போடும் கூச்சலுக்காக, அதைத் தூக்கிக் கொண்டு அவள் ஆற்றங்கரையோரமோ அல்லது மாந்தோப்புக்கோ செல்வாள். மறந்து போய் அங்கே எங்கோ புதரில் அதை விட்டுவிட்டு வந்து விட்டதைப் போல கனவு வரும். எது நிஜம் எது கனவு என்று புரியாமல் நெஞ்சம் தடுமாறும். எத்தனை நாட்களுக்கு, அவனுக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாது என்று குழந்தையைச் சுமந்து கொண்டு இப்படித் திரியப் போகிறோம் என்று அவளுக்குத் திகைப்பாக இருந்தது. அவனது கட்டுப்பாடுகளையும் மீறி அது எப்படி ஜனித்தது என்று அவளுக்குத் தெரியாது. ஆனால் அது அவளுக்கு வேறு ஒரு பிரபஞ்சத்தைக் காட்டும் அற்புதம். அதனாலேயே அதை அவனிடமிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என்ற வெறி நாளுக்கு நாள் அதிகரித்தது. கிட்டத்தட்ட பாட்டியின் வெறியைப் போல, அவளது நேரத்தை, சிந்தனையை ஆட்கொண்டது. இதை எப்படி நிறைவேற்றுவது என்ற யோசனையில் நேரம் போவது தெரியாமல் அவள் உட்கார்ந்திருக்கிறாள்.

”என்ன எப்ப பார்த்தாலும் ஏதோ பெரிய யோசனையிலே உட்கார்ந்திருக்கே?” என்று அவன் நையாண்டி செய்வான். அல்லது தான் சொல்வதை அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்கிற எரிச்சலில் கேட்டிருக்கிறான்.

”ஒண்ணுமில்லே” என்பாள் அவள். அப்படி அவன் கேட்பதும், அப்படி அவள் பதில் சொல்வதும் பழக்கமாகிப் போயிருந்தது. அந்த ‘ஒண்ணுமில்லே’யில் பலவித பயங்கள் புதைந்திருந்தது அவனுக்குத் தெரியாது. அவளை ஆட்கொண்டு வரும் வெறியை அடக்கவே முடியாமல் போனால் என்ன செய்வது என்ற அவளது பீதியை அவனால் உணர முடியாது என்று தோன்றிற்று. மீராவுக்கும் ஆண்டாளுக்கும் கூட இப்படிப்பட்ட வெறி இருந்திருக்கும் என்று தோன்றிற்று. அவர்களைப் போல தன்னைக் கற்பித்துக் கொள்வது சுகமாக இருந்தது. துளசி மாலையை அணிந்து கண்ணாடி முன் அழகு பார்த்து, ‘உன்தன்னோடுற்றோமேயாவோம், உனக்கே நாம் ஆட்கொள்வோம்’ என்று விலகிப் போவது எத்தனை சௌகர்யம்! அழுகைச் சத்தம் கேட்கக்கூடாது, பாட்டுச் சத்தம் கேட்கக் கூடாது என்று கட்டளையிடாத ‘உத்தமன் பேர்பாடி’ தப்பித்துக் கொள்வது எத்தனை சுலபமான வடிகால்!

புருஷனும் வேணும், புள்ளையும் வேணும் என்றால் இப்படித்தான் பிசாசைப்போல் அலைய வேண்டும். புதருக்குள் மறைக்க வேண்டும். எங்கே மறைத்தோம் என்பது மறந்து போனால் கதை முடிந்து போகும். பிறகு ஆசையில்லை. வர்ணஜாலங்கள் இல்லை. மந்திரச் சொற்கள் இல்லை. தரிசனங்கள் இல்லை.

”ஜனனீ!”

அவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். திரும்பிப் பார்க்க யோசனையாக இருந்தது. அவனை எதிர்கொள்ளும்போது அவன் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில்களைத் தயார் செய்ய ஆயத்தமானாள். துளசி மாடத்தில் அம்மா நீர் வார்த்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. தயக்கமேற்பட்டது. அம்மா, நீதான் அவசரப்பட்டே, செத்துடுவேன்னு பயமுறுத்தினே. நா செத்தப்புறம் உன்னை யாரு பாத்துப்பான்னு தினமும் துளைச்சே.

“ஜனனீ!”

வரேன், வரேன். வராம எங்க போக முடியும். உங்களைத் தவிர எனக்கு வேற யார் இருக்கா? எனக்கு நீங்க தேவை. உங்க துணை தேவை. அம்மா உரமேத்தி வெச்ச பாடம் இது. பொட்டை நெட்டுரு போட்ட பாடம். எனக்கு மீறத் தெரியாது. வரேன்.

”ஜனனீ!”

அவள் மெள்ள, மிக மெள்ளத் திரும்பினாள். ”உன்னை எங்கெல்லாம் தேடறது? உள்ளே வா. சாப்பாட்டு நேரம்” என்று கடுகடுத்தாள் வார்டு ஆயா.

”இல்லே உள்ளே வரல்லே நா” என்றாள் அவள் பீதியுடன்.

”நல்ல வார்த்தையிலே சொன்னா நீ கேட்க மாட்டே” என்று ஆயா தோளைப் பிடித்து இழுத்தபோது அவள் ஆட்டுக் குட்டியைப் போல் பின் தொடர்ந்தாள். வராந்தாவிலும் கூடத்திலும் நின்றிருந்த பெண்களின் முகங்களைப் பார்க்க பயந்து தலைகுனிந்தபடி நடந்தாள்.

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும்.

”என்னது?” என்றாள ஆயா.

”ஒண்ணுமில்லே.”

யாரோ கடகடவென்று சிரித்தார்கள். பழைய கோவலன் கண்ணகி சினிமாவில் வரும் கண்ணாம்பா போல. டி.வி.யில் காட்டியபோது பார்த்திருக்கிறாள். ”எரியட்டும்! எரியட்டும்..!” பின்னால் அட்டை மாளிகைகள் எரிந்த மதுரை சாம்பலாகும் – தலைவிரி கோலமாக கண்ணாம்பா ஹஹ் ஹஹ்ஹா… சிரிப்பு தொத்திக் கொண்டது போலிருந்தது. சங்கிலித் தொடர் போல் வெளிப்பட்ட சிரிப்பு கூரையில் எதிரொலித்துக் கூடம் அதிர்ந்தது. அவளுக்குக் கண்களில் நீர் துளிர்த்தது. ஓட்டமும் நடையுமாக ஆயாவைப் பின் தொடர்ந்தாள்.

”உம் உம், வாங்க வாங்க.”

மேஜை மேல் வைத்திருந்த அண்டாக்களிலிருந்து பீங்கான் தட்டுக்களில் களிபோல் சோறும் தோல்போல் சப்பாத்தியும் பருப்புக் குழம்பும், பொரியலும் விழுந்தன. அவள் தட்டை எடுத்துக் கொண்டு மாமரத்தைப் பார்த்தபடி இருந்த படிக்கட்டுக்குச் சென்று அமர்ந்தாள். சாப்பிட ஆரம்பிக்கும் சமயத்தில் சாப்பாட்டறையில் தட்டுக்கள் கீழே விழும் சத்தம் கேட்டது. அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டதில் கையிலிருந்த தட்டிலிருந்து பொரியலும் சோறும் அவளது புடவையில் தெறித்தன. அவள் வார்டைச் சேர்ந்த அம்புஜமும் சாந்தாவும் ஒருவர் முடியை மற்றவர் பிடித்து இழுத்துச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

”ஏய் பேய்களா, நிறுத்துங்க உங்க சண்டையை” என்று ஆயா அலற, இரண்டு மூன்று நர்சுகள் வந்து பிடித்து விலக்கினார்கள். சாந்தா அம்புஜத்தைக் குரோதத்துடன் பார்த்தாள் – கொலைவெறி தெரிந்தது பார்வையில்.

”நம்ம தலையெழுத்து. இதுங்களோடு மாரடிக்க வேண்டியிருக்கு” என்று ஆயா தலையிலடித்துக் கொண்டாள். ”நானும் ஒருநாள் இங்கே பேஷண்டா வந்தாலும் வந்துருவேன்”.

ஜனனிக்கு உடம்பு லேசாக நடுங்கிற்று. தட்டைப் பிடித்திருந்த விரல்கள் நடுங்கின. தட்டைப் படிக்கட்டில் வைத்து இரண்டு கைவிரல்களையும் கோத்துக் கொண்டாள். மார்பு படபடத்தது. ரத்தம் சூடேறி மண்டைக்குப் போய்விட்டது போல் இருந்தது. புழுங்கி மூச்சிறைத்தது. மாமரத்து இலைகள் அசைக் காணோம். எல்லாம் ஸ்தம்பித்து உறைந்திருந்தன. பிரபஞ்சமே உறைந்திருந்தது. யாரோ “ஃப்ரீஸ்!” என்றாற்போல. அவள் முகத்தை முழங்கால்களில் கவிழ்த்துக் கொண்டாள். கூடத்து சத்தங்கள் ஓய்ந்து விட்டன. அவரவர்கள் மூலைக்கு மூலை உட்கார்ந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

”என்ன ஜனனிம்மா, சாப்பிடலியா?” அவள் சுவாரஸ்யமில்லாமல் நிமிர்ந்தாள். கக்கூஸ் கூட்டும் அஞ்சலை நின்றிருந்தாள் வெற்றிலை மென்றபடி. இவளுக்கு வெற்றிலை வேண்டும் எப்பவும். தற்காப்புக் கவசம் மாதிரி. அவன் விடாமல் சிகரெட் புகைக்கும்போது அவளுக்கு அப்படித்தான் தோன்றும். அது ஒரு கவசம். உணர்ச்சிகளை மறைக்க. இயலாமையை மறைக்க. அதிகாரத்தின் அடையாளம் கூட. ‘நீ புகைச்சுடுவியா என் எதிர தைரியமா?’ என்பது போல, பதிலுக்கு வெற்றிலையையாவது அஞ்சலைபோல மென்றிருக்கலாம் என்று இப்போது தோன்றிற்று.

”என்ன சாப்பிடலே?”

அவள் பொம்மை போல தட்டை எடுத்துச் சோற்றை அளைந்தாள்.

”அவருக்கு சாதம் இப்படி இருந்தா பிடிக்காது.”

”பின்னே எப்படியிருக்கணுமாம்?”

”மல்லிகைப் பூவா ஒண்ணு மேல ஒண்ணு ஒட்டாம.”

”இல்லேன்னா என்ன செய்வாரு?”

”இப்படி சாந்தா தட்டை விட்டெறியலே, அப்படி விட்டெறிவார்.”

அஞ்சலை சிரித்தாள்.

”பின்னே அவரில்லே இங்கே வந்து இருக்கணும்!”

”ஐயையோ, வேண்டாம் பாவம்!”

அஞ்சலை படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள், ”ஏனாம், வந்து இருந்து பார்க்கட்டுமே இங்கே எப்படியிருக்குன்னு.”

”அவரும் வந்துட்டா, நா வீட்டுக்கு எப்படிப் போறது?”

”சில சமயம் நல்லாத்தான் பேசறே” என்று அஞ்சலை இழுத்துப் பேசினாள். ”சொல்லு, புருஷன் மேல ரொம்பப் பிரியமா?”

ஜனனி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ‘உனக்கு மட்டும் சொல்றேன்’ என்கிற முகபாவத்துடன் ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

”என்..?” என்றாள் அஞ்சலை லேசாக.

ஜனனியின் கண்களில் ஒரு தீவிரம் தெரிந்தது.

”என் குழந்தையைக் கொன்னுட்டார்.”

”என்னது?” என்றாள் அஞ்சலை திடுக்கிட்டு. ”எப்படி, ஏன்?”

”எப்படித் தெரியுமா? இப்படி” என்று தட்டில் இருந்த சப்பாத்தியை இரண்டாகப் பிய்த்து எதிரும் புதிருமாகப் போட்டாள். ”மகாபாரதத்திலே ஜராசந்தனை பீமன் பிச்சுப் போடல்லே அது மாதிரி.”

அஞ்சலை ஒரு வெற்றிலைச் சுருளை வாயில் திணித்துக் கொண்டாள்.

”நா என்னைத்தைக் கண்டேன் அதெயெல்லாம் – எதுக்குக் கொல்லணும்?”

”பிடிக்கலே. அது அழுதா பிடிக்கலே. சிணுங்கினா பிடிக்கலே. நா வெச்ச பாசம் பிடிக்கவே. அதே கவனமா இருக்கேனாம். அவரைக் கவனிக்கக் கூட நேரமில்லாம.”

அஞ்சலை பேசாமல் அவளையே பார்த்தபடி சற்று நேரம் இருந்தாள்.

”சரி, நீ சாப்பிடு தாயீ, இன்னொரு நாளைக்குப் பேசுவம்.”

”நா சொன்னது நிஜம். பொய்யில்லே” என்றாள் அவள். ”அவர் அப்படிப் பண்ணுவார்னு எனக்குத் தெரியும். எத்தனையோ நாள் குழந்தையைப் புதர்லே கொண்டு போய் மறைச்சு வைப்பேன். அப்புறம் எங்கே வெச்சோம்னு மறந்து போய் புதர் புதராத் தேடுவேன்.”

”நீ சாப்பிடு தாயீ.”

”நா சொன்னது நிஜம்.”

”சரி சரி. நா நம்பறேன். நீ சாப்பிடு”.

அஞ்சலை செல்வதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு அவள் சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிடாவிட்டால் ஆயா திட்டுவாள். பிறகு மத்தியானம் தூங்காவிட்டால் திட்டுவாள். இந்தத் திட்டுக்கு உடம்பும் மனசும் பழகிவிட்டது. மௌனத்துக்குப் பழகினது போல. திட்டு கேட்க்காவிட்டால்தான் என்னவோ போல் இருந்தது. ‘எழுந்திரிங்க எழுந்திரிங்க’ என்று சத்தம் கேட்டதும்தான் உடல் எழுந்தது. ‘பல் விளக்குங்க’ என்றதும் பல் விளக்கிற்று. ‘குளியுங்க’, குளித்தது. ‘சாப்பிடுங்க’, சாப்பிட்டது. ‘தூங்குங்க’, தூக்கம்தான் கட்டளைக்கு அடிபணிய மறுத்தது. மூடிய கண்களுக்குள் பிசாசுகளை எழுப்பி விட்டது. அவை போட்ட ஆட்டத்திலும் செய்த துவம்சங்களிலும் ஏற்பட்ட வேதனையில் அவள் அலறுவாள். அழுவாள். ஏன் அழறே?

என் குழந்தை. என் குழந்தை.

என்ன உன் குழந்தைக்கு?

அதைக் காணோம்.

இப்ப தூங்கு, நாளைக்குத் தேடுவோம். ஊசி குத்துவார்கள்.

நாளைக்கும் அதற்கடுத்த நாளும் குழந்தையைப் பற்றியே மறந்து போகும். அதை நினைத்து இப்போது துக்கமேற்பட்டது; ஆதார உணர்வுகளையே இழந்து வருவது போலத் தோன்றிற்று. சருமம் கூட முன்பு போல மிருதுவாக இல்லை. புறங்கையும் புறங்காலும் கட்டட வேலை செய்பவள் போல் சொரசொரத்து பாளம் பாளமாகத் தெரிந்தது. கட்டடத்துக்குள் நடக்கும் போது கண்ணாடிக் கதவில் தெரியும் அவளது உருவம் பீதியை அளிக்கிறது. அன்று டாக்டரின் அறைக்குச் சென்ற போது கழிவறையில் இருந்த கண்ணாடியில் தெரிந்த பிரதி பிம்பத்தைப் பார்த்து அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. நானா? அது நிச்சயம் வேறு யாரோ. அல்லது அவளுள் ஏதோ ரசாயன மாற்றம் ஆகியிருக்க வேண்டும். பள்ளிக் கூடத்தில் ‘டாக்டர் ஜெக்கில் அண்டு மிஸ்டர் ஹைட்’ கதை படித்திருக்கிறாள். நல்லவனும் கெட்டவனும், அழகனும் குரூபியும் ஒரே ஆளிலிருந்து வெளிப்படும் பயங்கரம் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அவளது நிஜ வாழ்வில் அது உண்மையாகும் என்று அவளுக்குத் தெரியாது. கல்யாணமான பிறகு அவன் ஒரு சமயம் குழைவதும் ஒரு சமயம் அனலைக் கக்குவதும் அந்தக் கதையை ஞாபகப்படுத்தும். வெளி உலகத்திடம் அத்தனை இனிமையாக இருப்பவன் அவளிடம் மட்டும் ஏன் அப்படி இருக்கிறான் என்று குழப்பும். அவனுடைய குற்றச்சாட்டுகள் கூடக் குழப்பும். நீ அதிகப்பிரசங்கி. மேதாவிங்கிற நினைப்பு உனக்கு. உன் சமையல் நன்னால்லே. புருஷன்ங்கற மதிப்பு இல்லே. உன் கடமை என்னன்னு முதல்ல தெரிஞ்சுக்கோ. அதுக்கப்புறம்தான் மத்ததெல்லாம் – காரணம் புரியாமல் குற்ற உணர்வு ஏற்படும்.

சரி. சரி. சரி.

புத்தகம் இல்லை. ரேடியோ இல்லை. டி.வி. இல்லை. கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்தியாச்சு. சினேகிதாள் இல்லை. பல்லைக் கடித்துக் கொண்டுப் புழுங்கிச் செத்த அவதியில், மூடிய அறைக்குள் அது ஜனித்தது. ‘பரஸுரே’ என்று தான்ஸேன் பாடியபோது மழை பொழிந்தது போல, அதன் குரல் கேட்ட மாத்திரத்தில், அவளது குண்டலினி உசுப்பப்பட்டு உள்ளமெல்லாம் பிரகாசித்தது. ஒரு ஜ்வாலையில் வீற்றது போலாகியது.

ஒளிக்க முடியவில்லை. குரல் எழுப்பிற்று. நான்கு பேர் கவனத்தைக் கவரும்படி குரல் எழுப்பிற்று. அவனுக்குக் கோபம் வந்தது. அதையும் மீறி அது குரல் எழுப்பியதுதான் ஆச்சரியம். ஒருநாள் அவனது கோபம் கட்டுக்கடங்காமல் போயிற்று! குரலைக் காண்பிப்பியா? உனக்கு இத்தனை திமிரா? அவள் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்தாள். ஜராசந்தனுடன் போர் செய்யும் பீமன் போல் தெரிந்தான். அவன் அடிக்க அடிக்க அது செத்துச் செத்து திரும்பத் துளிர்த்தது. வானத்தை முட்டும் பீமனாய் அவன் நின்றான். சரக், சரக் – கிழியட்டும். ஜராசந்தன் மாதிரி – இரண்டாகத் தூக்கி வீசி எறிந்தான்.

அவள் விழி பிதுங்கிற்று. நாபியிலிருந்து ஒரு கேவல் எழுந்து தொண்டையை அடைத்தது. தேகம் முழுவதும் பற்றி எரிந்து பத்ரகாளியாக வீறு கொண்டு எழுந்தது. எல்லை மீறி ஆத்திரமும் கோபமும் எழ ரத்த நாளங்கள் எல்லாம் வெடித்து விடுவது போல முறுக்கிக் கொண்டன.

“என்ன பண்றேள்? எங் குழந்தை. எங் குழந்தை. சாகடிக்கிறேளா? எப்பேர்ப்பட்ட ராட்சசன் நீ. சண்டாளன். நீ மனுஷனா? மனுஷனா?

கையில் கிடைத்ததை வைத்து அவன் முதுகை முகத்தை மண்டையைப் பதம் பார்த்தது நினைவுக்கு வந்தது.

‘பத்ரகாளீ, பத்ரகாளி! ராட்சஸி.” திமுதிமுவென்று அக்கம்பக்கத்து ஜனங்கள் நுழைகிறார்கள். அந்தக் கொலைகாரனை எதுவும் சொல்லாமல் நிற்கிறார்கள்.

”பாருங்கோ பாருங்கோ.” அவன் முதுகை, கன்னத்தை, மண்டையைக் காட்டுகிறான். அவளது கைகளை யாரோ கட்டுகிறார்கள். அவன் முதுகை அணைத்துச் சமாதானப்படுத்துகிறார்கள். குழந்தை என்ன ஆயிற்று என்று யாருக்கும் கவலையில்லை.

அவள் உள்ளங்கையால் முகத்தை மூடிக் கொண்டாள். கண்களிலிருந்து சரம் சரமாய் நீர் வழிந்தது. முடியலே முடியலே. என்னாலே இங்கே இருக்க முடியலே. அழைச்சுண்டு போயிருங்கோ. நா பண்ணது தப்பு. இனிமே ஒழுங்கா இருக்கேன். அதற்கு மேல் தாங்க முடியாது போல அவள் விசித்து விசித்து அழுதாள். அவன் முகமே மறந்துவிடும் போல் இருந்தது. அஞ்சுகத்தையும் சாந்தாவையும் கோகிலாவையும் மற்றவர்களையும் பார்க்க வீட்டிலிருந்து வருகிறார்கள். அவளுக்குத்தான் யாருமில்லை. அவன் வந்து எத்தனையோ மாதங்கள் ஆகிவிட்டன.

”நா வீட்டுக்குப் போறேன் டாக்டர். எனக்கு ஒண்ணுமில்லே. நன்னா இருக்கேன். இப்ப என் வீட்டுக்காரரை வந்து கூட்டிப்போகச் சொல்லுங்கோ.”

”இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்மா.”

இன்னும் எத்தனை நாள்? எத்தனை நாள்? மூச்சு முட்டிற்று. நாள் முழுவதும் ஓலங்களும் சிரிப்புகளும் அழுகைகளும் சண்டைகளும். ”உனக்கு இன்னும் மனநிலை தெளியணும். மறுபடி வயலென்ட் ஆயிட்டீன்னா?”

மாட்டேன். மாட்டேன், என்னை நம்புங்கோ. அப்படியெல்லாம் நடந்துண்டதுக்கு வெட்கப்படறேன்.

”அவங்க பயப்படறாங்க. கூட்டிட்டுப் போக மாட்டேங்கறாங்க.”

‘ஓ’ என்று அலற வேண்டும் போல் இருந்தது. முன்பெல்லாம் குழந்தையை அவனிடமிருந்து எப்படிப் பாதுகாப்பது என்று தீவிரமாக யோசித்தது போல இப்போது இங்கிருந்து எப்படித் தப்பிப்பது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள். எப்படித் தப்பிப்பது? பெரிய பெரிய பூட்டிய இரும்புக் கேட்டுகள். காவல்காரர்கள். இரவில் தூக்கம் வராமல் திட்டங்கள் தீட்டினாள். காலையில் தலையை வலித்தது. சாப்பிடப் பிடிக்காமல் வாந்தி வந்தது.

கண்டவர்களிடமெல்லாம் புலம்பத் தோன்றிற்று.

”அஞ்சலை, நா வீட்டுக்குப் போகணும். இங்க இருக்க முடியலே என்னாலே.”

”மறுபடியும் அந்தப் புருஷன்கிட்டேயா?”

”பின்னே யார்கிட்ட? எத்தனை புருஷன் இருக்கான் எனக்கு.”

”புடிக்காத புருஷன் கிட்ட போயி என்ன செய்யப் போற தாயீ. அவன் மறுபடி இங்க அனுப்புவான்.”

”மாட்டார். நா ஒழுங்கா இருப்பேன். சொன்னபடி கேட்பேன். வாயைத் திறக்க மாட்டேன். அவருக்குப் புடிச்ச சமையலைச் சமைச்சுப் போடுவேன். மல்லிகைப் பூ மாதிரி இட்லி பண்ணத் தெரியும் எனக்கு.”

அஞ்சலை இடுப்பில் கையை வைத்துக் கொண்டாள் ராணி மங்கம்மா மாதிரி. பிறகு அக்கம்பக்கம் பார்த்து மெள்ளச் சொன்னாள். ”நீ வெளியிலே போறதுக்கு நா உதவி செய்யறேன். ஆனா மறுபடி அந்த ஆள்கிட்ட போய் சாவாத.”

”வேற எங்க போவட்டும்? பிறந்த வீட்டிலே யாரும் இல்லே. என் படிப்புக்கு யார் வேலை குடுப்பா?”

”மல்லிப்பூ மாதிரி இட்லி பண்ணுவே இல்லே?”

அவளுக்குத் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. வேண்டாம் வேண்டாம். அவர்கிட்டயே போயிடறேன். அடிச்சாலும், உதைச்சாலும் அவர் யாரு? எம் புருஷன்தானே? அவர் எதிர்பார்க்கிறபடி நா நடந்துக்கலேன்னா அவருக்குக் கோபம் வரத்தானே வரும்? போக்கெடமில்லாத எனக்குப் பவிசென்ன வேண்டிக்கிடக்கு? அவர் வந்தால் இதைத் தெரிவிக்கணும். இரவு முழுவதும் அவள் புலம்பினாள்.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்

உன் தன்னோடு உற்றோமே யாவோம்;

உனக்கே நாம் ஆட்செய்வோம்.

மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

சதா சர்வகாலமும் வாய் முணுமுணுத்தது – மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்…

அவன் டாக்டரின் பார்வையைத் தவிர்த்தபடி சங்கடத்துடன் அமர்ந்திருந்தான்.

”என்ன நீங்க, மாசத்துக்கு ஒரு தடவையாவது ஜனனியைப் பார்க்க வரவேண்டாமா?”

”எனக்கு டூர் போகற வேலை டாக்டர். ஒழுங்கா பணம் அனுப்பறேனே?”

”எங்களுக்கு அனுப்பறீங்க. அவ சமாதானத்துக்கு நீங்க வரணும்.”

”எனக்குச் சங்கடமாயிருக்கு. பழசெல்லாம் ஞாபகம் வருது. நானும் நிறைய கஷ்டப்பட்டுட்டேன் டாக்டர். எனக்கும் ஏமாற்றங்கள் இருக்கு.”

டாக்டர் அனுதாபத்துடன் அவனைப் பார்த்தாள்.

”குழந்தை செத்துடுச்சா?”

”குழந்தையா? இல்லையே?”

”ஜனனி அடிக்கடி சொல்லுவா. குழந்தை செத்திடுச்சின்னு.”

அவன் சிரித்தான்.

”குழந்தையே பிறக்கலே. குழந்தையில்லேன்னு எனக்கு ஏமாற்றம் கூட. அவ மூளைக் கலக்கத்திலே என்னவோ சொல்லுவா. குற்ற உணர்வோ என்னவோ.” டாக்கடர் ஏதோ சொல்ல நினைத்துப் பேசாமல் இருந்தாள்.

”இப்ப எப்படி இருக்கா?”

”நல்ல இம்ப்ரூவ்மென்ட் இருக்கு. வீட்டுக்குப் போகணும்ங்கறா.”

”வேண்டாம், வேண்டாம். குழந்தை, கோட்டான்னு சொல்றாங்கறீங்க. நல்லா குணமான பிறகு வரட்டும். ஒரு வருஷம் ஆனாலும் ஆகட்டும்.”

டாக்டருக்குச் சோர்வாக இருந்தது. எத்தனையோ பேரைப் பார்த்தாயிற்று. ஒரு வருஷம் என்கிற கணக்கைக் கேட்டாயிற்று. விவாகரத்துக்குச் சுலபம் என்ற மனக்கணக்கு.

”ஜனனியைப் பார்த்துட்டுப் போங்க.”

”சரி.”

அவன் சங்கடத்துடன் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவனது சங்கடத்துக்குக் காரணம் நான் என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. ”வாங்கோ” என்றாள் புன்னகையுடன். வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்பது போல.

”நா இப்போ நன்னா ஆயிட்டேன். பார்த்தா தெரியறதோல்லியோ.”

அவன், அவளுடைய காய்ந்த முகத்தை, குழி விழுந்த அருளற்ற கண்களை, பிசுக்குப் பிடித்த ஜடையை, கசங்கிய புடவையை லேசான அருவெறுப்புடன் பார்த்தான்.

”என்னை வீட்டுக்கு அழைச்சிண்டு போயிடுங்கோ. போறேளா?”

அவளுடைய கண்களில் தெரிந்த தீவிரம் அவனுக்குப் பீதி அளித்தது.

”இப்ப வேண்டாம். நன்னா தேவலையாகட்டும்.”

”எனக்கு நன்னா தேவலையாயிடுத்து.” அவள் சரேலென்று அவன் அருகில் சென்று அவனுடைய தோளைப் பற்றினாள்.

”நீங்க சொன்னபடியெல்லாம் கேக்கறேன்.” அவள் விசும்ப ஆரம்பித்தாள். ”சத்தியமா உங்க இஷ்டத்துக்கு விரோதமா நடக்க மாட்டேன். சத்தியமா கவிதை எழுதமாட்டேன். என்னை அழைச்சிண்டு போயிடுங்கோ ப்ளீஸ். எனக்கு வேற போக்கிடமில்லை.”

தோளைப் பிடித்து உலுக்கிய அந்த இரும்புக் கரங்களை அவன் திகைப்புடன் பார்த்தான். இவளுடன் எப்படி இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்தினோம் என்று வியப்பேற்பட்டது. வெடுக்கென்று அவள் கையை விலக்கினான். ”நா செத்துப் போயிட்டேன்னு நினைச்சுக்கோ. நா உன்னை டைவோர்ஸ் பண்ணிட்டேன்னு நினைச்சுக்கோ” என்றான் அடிக்குரலில்.

அவளுக்குச் சுறுசுறுவென்று கோபம் வந்தது.

”ஏன், ஏன்? நா ஏன் அப்படி நினைக்கணும்? நீங்க என்னை ஏமாத்தறேள். என்னை இங்கே உயிரோடு குழி வெட்டப் பார்க்கறேளா? அதுதான் ப்ளானா?”

”டாக்டர், டாக்டர்! ஷி இஸ் டர்னிங் வயலென்ட் – டாக்டர் ஹெல்ப்!”

அவனுடைய அலறலைக் கேட்டு நர்சுகள் ஓடிவந்து, அவளை விலக்கி உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். அவள் ‘வேண்டாம் வேண்டாம்’ என்று அழ அழ, ‘தூங்கு’ என்று ஊசி போட்டார்கள்.

அவள் கண் விழித்தபோது இன்னும் இருட்டாகவே இருந்தது. எங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை. வீட்டில் படுக்கையறையில் அவனருகில் படுத்திருப்பது போல ஒரு வினாடி தோன்றிற்று. எங்கோ அழுகுரல் கேட்டது. தொடர்ந்து சிரிப்பு. அவள் விடுக்கென்று எழுந்து சுற்று முற்றும் பார்த்தாள். மூலைக்கொருவராகப் போர்வை போர்த்திய உருவங்கள். விழிக்கும் நேரத்தில் பைசாசங்களாக உலவும் உடல்கள். ஆன்மாவைப் புதர்களில் தொலைத்துவிட்ட அப்பாவிகள். எல்லாரையும் கட்டித்தழுவிக் கண்ணீரால் கரைய வேண்டும் என்ற தாபம் அவளுள் எழுந்தது.

”நா விவாகரத்து செய்துட்டதா நினைச்சுக்கோ. நா செத்துட்டதா நினைச்சுக்கோ.”

அவளுக்குச் சிரிப்பு வந்தது. புருஷன் விஷத்தை அனுப்பிய போது மீரா சிரித்த ஞாபகம் வந்தது. மீராவைக் கண்ணன் காப்பாற்ற வந்தது போல இப்பொழுது யாரும் வரப் போவதில்லை. அவள் எழுந்தாள். ஆச்சரியமாக இருட்டில் கண் தெரிந்தது. பாட்டியின் ஞாபகம் வந்தது. பாட்டி இருட்டில் அறை அறையாக நகர்ந்தது போல அவள் சுலபமாக நடந்து வெளியே வந்தாள். பால் பாத்திரங்களைக் கொண்டு வரும் டெம்மோ வெளியே நின்றிருந்தது. டிரைவர் வாட்ச்மேனை சத்தம் போட்டு எழுப்பினாள். டெம்போ உள்ளே நுழைவதற்காக இரும்பு கேட் திறக்கப்பட்டது. தூங்கி வழியும் வாட்ச்மேன் கண்ணில் படாமல் அவள் புதுங்கிப் பதுங்கி வெளியேறினாள். மார்பு படபடத்தது. தார் ரோட்டில் வெறும் காலுடன் வேக வேகமாக நடப்பது நூதன அனுபவமாக இருந்தது. காற்றில் இருந்த மண்ணின் மணம் நாடி நரம்பையெல்லாம் உசுப்பி மீட்டி விட்டது. கீழ்வானத்தில் நெருப்புப் பொறி போல செவ்வொளி லேசாகப் படரத் துவங்கும் போது வானம் மிக அருகில் நெருங்கி விட்டது போலிருந்தது. பறவைகளும் வானமும் மிக அருகில் நெருங்கி விட்டது போலிருந்தது. பறவைகளும் வானமும், மரமும் காற்றும், நட்சத்திரமும் கவிதைக் குழந்தைகளும். அவளும் ஏதோ ஒரு விதியின் உந்துதலில் இசைவுடன் பயணிப்பது போலிருந்தது.

*


நன்றி - குங்குமம் தோழி

யக்ஷன் சொன்ன சேதி! - வாஸந்தி

எப்படி நழுவவிட்டோம் என்று அவளுக்குத் திகைப்பாக இருந்தது. எப்படியோ தன்னை மறந்து அசந்த தருணத்தில் அது நிகழ்ந்திருக்கக்கூடும் என்று சொல்வதிற்கில்லை. நிச்சயமாக மூளை வெகு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. ஒரு பதைப்பு இருந்ததென்னவோ உண்மை. ஆனாலும், சங்கிலிப் பின்னலாக அவள் என்ன செய்ய வேண்டும் என்று மூளை கட்டளை இட்டுக்கொண்டு இருந்தது. பாலை ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்து மக்கில் ஊற்றி, மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிஷம் சூடாக்கி, சர்க்கரை போட்டுக் கலக்கி, ‘இதோ, இதோ வரேன் என்றபடி விரைந்தபோது, இடையில் எந்த நொடித் துகளிலோ நழுவவிட்டு...

அவளது இயலாமையின் அடையாளமாக அந்த நழுவல் அவளை அச்சுறுத்திற்று. யோசிக்க யோசிக்க, ஒரு அமானுஷ்ய விரல் அவளைக் குற்றம் சாட்டிற்று. நூறாயிரம் கேள்விகள் ஆழ்மனதுக்குள் சுருண்டு சுருண்டு எழுந்து விடையைத் தேடி வெளிக் கிளம்பி, அவளை நிலைகுலையவைத்தன. வழியில் தென்பட்ட சால்ஜாப்புகளைப் பகுத்தறிவு ஒவ்வொன்றாக நிராகரித்தது. ரிஷி மூலத்தையும் நதி மூலத்தையும் தேடுவது, ரமணன் சொல்வதுபோலத் தவறில்லை. அதை ஆராய்வது ஒரு வித்தை. அதற்கு ஓர் அறிவியல் அணுகுமுறை தேவை. விநாடி பிசகாமல் பின்னோக்கிச் சென்று, நழுவிப்போன ஒவ்வொரு இழையையும் தேடிப் பிடித்துக் கோக்க வேண்டும். ஊடுபாவாகச் செல்லும் இழைகளையும் தான். அதற்கு நிறையப் பொறுமை வேண்டும். 

தருமபுத்திரனை யக்ஷன் கேள்வியால் துளைத்தது போல, நம்மை நாமே கேட்டுத் துளைத்துக் கொள்ளத் துணிச்சல் தேவை. ஏனென்றால், அவை தாட்சண்யம் அற்ற கேள்விகள் & சுய சார்பற்ற கேள்விகள். யக்ஷன் கேட்டது விடைக்காக அல்ல; விடையின் மூலம் ஞானத்தை ஏற்படுத்த! நழுவும் இழையைக் கண்டுபிடிக்க! பழைய காலத்து கறுப்பு வெள்ளை சினிமாக்களில் கதாநாயகன் அல்லது கதாநாயகியின் மனசாட்சி நிழல் பிம்பமாய் எதிரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகக் கேள்வி கேட்கும் காட்சிகள் நினைவுக்கு வந்தன. அதன் தாக்கத்தில் கதாநாயகன்/நாயகி தலையைப் பிடித்துக்கொண்டு அலறுவார்கள். முழிபிதுங்க விழிப்பார்கள். அல்லது கதறுவார்கள்.

ரமணனுக்கு இந்தஹிஸ்டரிக்ஸ் பிடிக்காது. சலனமில்லாமல் அசை போடும் பழக்கம் அவருக்கு. சாக்ரட்டீஸ் போல பின்னோக்கிக் கேள்வி கேட்கும் ரகம். பால் கொண்டுவரேன்னு போனியா? எத்தனை அடி எடுத்துவெச்சிருப்பே? ஃப்ரிஜ்ஜுக்கும் மைக்ரோ அவனுக்கும் எவ்வளவு தூரம்? அவனில் பாலை ஒரு நிமிஷம் வெச்சியா? பால் கொண்டு வரேன்னு சொல்ல வேண்டிய அவசியம் என்ன? சொல்றதுக்கு முந்தி என்ன நடந்தது? அதுக்கு முந்தி?

அசை போட வேண்டியதும், பின்னோக்கிச் செல்வதும் அவசியமாகப்பட்டது. சலனப்படாமல் அது சாத்தியமா என்று தெரியாது. ஆனால், விடை கிடைக்கும் வரை நாபியிலிருந்து சுருண்டு எழும் பூதம் அவளைச் சும்மா விடாது.

அவள் எழுந்து பால்கனிக்குச் சென்றாள். காய்ந்த பூந்தொட்டிகள் பரிதாபமாகக் காட்சி அளித்தன. செடிகள் சோர்ந்து மல்லாந்திருந்தன. அவள் இயந்திரகதியில் குளியலறைக்குச் சென்று, பால்கனிக்குச் செல்லக்கூடிய பைப்பைக் குழாயில் பொருத்தி, நீரைத் திறந்து பால்கனிக்கு வந்து ஒவ்வொரு செடியாக நீரை வார்த்தாள். நீரை நிறுத்தி பைப்பைச் சுற்றி வைத்துவிட்டு, மீண்டும் பால்கனிக்கு வந்தபோது மல்லாந்திருந்த சில செடிகள் நன்றியுடன் நிமிர்ந்திருந்தன. அவள் சற்று நேரம் அந்த அதிசயத்தைப் பார்த்தாள். அவள் இப்போது நீர் விட்டிருக்காவிட்டால் நிமிர வாய்ப்பில்லாமல் போயிருக்கும் என்று அவை சொன்னதாக அவளுக்கு நெகிழ்ச்சி ஏற்பட்டது.

எல்லாவற்றுக்கும் ரமணன் சொல்படி கால வரம்பு இருந்தது. புற உலகின் சூட்சுமத்துக்கோ வேறு எதற்கோ, அது கட்டுப்பட்டு இருந்தது. அதற்குப் பாத்திரமாவதற்கும் விதிக்கப்பட வேண்டியிருந்தது. இப்போது அவள் பால்கனிக்கு வராமல் இருந்திருந்தால், நீர் ஊற்றும் நினைவே வந்திராது. ஒவ்வொரு விநாடியும் முன்னும் பின்னும் உள்ள விநாடிகளுடன் பிணைக்கப்பட்டிருந்த பிரும்ம முடிச்சாகத் தோன்றிற்று.

கட்டடத்துக் குழந்தைகள் எதிர்த்தாற்போல் இருந்த மைதானத்தில் கால் பந்தாட்டம் ஆடிக்கொண்டு இருந்தார்கள். இது கால் பந்தாட்ட சீஸன். முந்தா நாள் வரையில் கிரிக்கெட் ஆடினார்கள். எதை ஆடினாலும் உலகக் கோப்பைக்கு ஆடுவதுபோல் ஆவேசத்துடன் ஆடுவார்கள். இவர்களுடன் ஆடுவதற்கு ரமணன் சேருவது விந்தை இல்லை. மைதானத்துக்குள் கால் வைத்த மாத்திரத்தில் சடசடவென்று ஐம்பது வருடங்கள் நழுவி, அவரது ஜோடுகளில் மறைந்துகொள்வது ஓர் அற்புதம். மூச்சு வாங்கும்; நெற்றியும் மேலுதடும் வியர்வையில் மின்னும். விக்கெட் விழுந்தால், கோல் போட்டால் ரமணின் குரல் தான் என்று ஒலிக்கும்.

இப்பவும் ஒலித்தது. அவள் திடுக்கிட்டு மைதானத்தைப் பார்த்தாள். கோல் விழுந்திருந்தது. ஜூனியர் குழு வெற்றி அடைந்திருக்க வேண்டும். ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டு இருந்தார்கள். அடுத்த ஆட்டத்துக்கு மற்றவர்கள் தயாராகிக்கொண்டு இருந்தார்கள். இன்று சனிக்கிழமை. இருட்டும் வரை விளையாடிவிட்டு வீடு திரும்பியதும் சுடு நீரில் குளித்து வயிறு முட்ட இரவு சாப்பிட்டுவிட்டு காலையில் நிதானமாக எழுந்திருக்கலாம்.

‘‘எனக்கு எல்லா நாளும் ஒண்ணுதான்’’ என்று ரமணன் சொல்லும்போது அவர்கள் சிரிப்பார்கள். ‘‘ஆமாம், ஜாலி! ஆபீஸ§க்குப் போக வேண்டாம். தினமும் லேட்டா எழுந்திருக்கலாம்.’’

‘‘அதான் இல்லே! தினமும் நாலு மணிக்கு எழுந்துக்கறேனாக்கும்!’’

‘‘நாலு மணிக்குக் காக்கா கூட எழுந்திருக்காது!’’

‘‘உனக்கெப்படித் தெரியும் தூங்குமூஞ்சி? பட்சிகள் எழுந்திருக்கும்போது நானும் எழுந்துக்கறேன், நாலு மணிக்கு!’’

‘‘அத்தனை சீக்கிரம் ஏன்?’’

‘‘போன ஜென்மத்திலே பறவையா இருந்திருப்பேன்!’’

படையாக ஒரு வாண்டுக் கூட்டம் அவருடன் வரும். பிஸ்கட்டும் பெப்சியும் சடுதியில் காலியாகும். தரையெல்லாம் ஆகிப்போன அழுக்கை அவர்கள் சென்ற பிறகு, பினாயிலில் நனைத்த வீடு துடைக்கும் நீள் கழி விசுக் விசுக்கென்று தரை அழுந்தத் துடைக்கும்.

போன ஜென்மத்திலே ஆஸ்பத்திரி வார்ட் பாயா இருந்திருப்பேன்.

எத்தனை ஜென்மங்கள் ஒரு மனிதன் எடுக்க வேண்டும்? இந்த பூலோகத்திலே அக்கறை இருக்கிறவரை, ஈர்ப்பு இருக்கிற வரை எடுத்துண்டே இருக்கணும்... பகவான் கிருஷ்ணர் மாதிரி. சம்பவாமி யுகே யுகே! செய்த பாவங்களைத் தொலைப்பதற்குத்தான் திரும்பத் திரும்பப் பிறக்கிறோம் என்று அவளுடைய பாட்டி சொன்னது நினைவுக்கு வரும். செய்த தவறு நினைவில்லாவிட்டால், கிடைத்த வாய்ப்பினால் பலன் ஏது என்று ரமணன் சொல்வார் என்பதால், அவள் பேசாமல் இருப்பாள்.

நான்கு ஃப்ளாட் தள்ளி ராஜேஷ் தேவிகாவின் பால்கனி தெரிந்தது. அவள் வசிக்கும் மூன்றாவது தளத்தில் இருக்கும் இளம் ஜோடியின் வீடு. ஃப்ளாட்களை இணைக்கப் பாலம் போல் ஓடும் நீண்ட ரேழி உண்டு. பத்து தடவை மேலும் கீழும் நடந்தால் சுலபமாக ஒரு கிலோமீட்டர் நடை. மழைக் காலங்களில் அவளும் ரமணனும் அப்படித்தான் மாலையில் நடை பழகுவது. ராஜேஷ§ம் தேவிகாவும் வீட்டில் இருந்தால், சுவாதீனமாகக் கதவைத் தட்டி தேநீர் கேட்டுப் பருகலாம். கொட்டும் மழையை ஜன்னல் வழியே பார்த்தபடி அக்கப்போர் பேசிக்கொண்டு தேவிகா கொடுக்கும் சூடான தேநீரை ருசிக்கலாம். அப்படிப்பட்ட தருணத்தில்தான், முந்தா நாள்தி டாவின்சி கோட் படம் பார்க்கும் எண்ணம் வந்தது.

பால்கனியில் ராஜேஷ§ம் தேவிகாவும் நின்றிருந்தார்கள். மைதானத்தில் நடக்கும் கால் பந்தாட்டத்தைப் பார்த்தபடி ராஜேஷ் ஏதோ சொல்ல, தேவிகா பெரிதாகச் சிரித்தாள். சிரிப்பது அவர்களது அடையாளம். அவர்கள் கை பிடித்த வேளையோ, சந்தித்த வேளையோ அப்படி ஒரு முகூர்த்த நேரமாக இருந்திருக்க வேண்டும். இருவருக்கும் முப்பதுக்குள்தான் வயதிருக்கும். அவன் தமிழன். அவள் மலையாளி. இருவரும் டெல்லியில் மத்திய வர்க்கக் குடும்பங்களில் பிறந்து, வளர்ந்து, சந்தித்துக் காதலித்துக் கை பிடித்தவர்கள். இருவருக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை, கப்பல் போல கார், சொந்த வீடு, சமையலுக்கு ஆள், வீட்டு வேலைக்கு ஆள் என்ற அனைத்து சௌகர்யங்களும் முப்பது வயதுக்குள்! இவையெல்லாமே அவர்களது சிரிப்புக்குக் காரணமா என்று தெரியவில்லை. சனிக் கிழமை இரவு தவறாமல் மல்டிப்ளெக்ஸில் சினிமா பார்த்தார்கள். நடுநிசியில் லிஃப்டிலிருந்து வெளியேறி தங்கள் ஃப்ளாட்டுக்கு அவர்கள் செல்வதை அவர்களுடைய சிரிப்பிலிருந்தே அவள் தெரிந்துகொள்வாள். அவர்களுக்கு வாழ்க்கை என்பதே கொண்டாட்டம் என்று தோன்றிற்று.

முப்பதுகளில் தான் எப்படி இருந்தோம் என்று அவளுக்குச் சுத்தமாக நினைவில் இல்லை. நினைவில் நிற்கும் படியானதாக இருந்திருக்க முடியாது, நிச்சயம்! இருபதுகளின் மத்தியில் திருமணம் முடியும் வரை படிப்பு கல்லூரி என்று கழிந்தது. காலையில் கல்லூரிக்குப் போனால் நேரம் தவறாமல் வீடு வந்து சேர வேண்டும் என்ற அப்பாவின் எதிர்பார்ப்பை அவள் என்றும் மீறத் துணிந்ததில்லை. கொல்கத்தாவில் வேலை பார்த்த ரமணன் என்ற வரனைக் கண்டுபிடித்து, ஜாதகப் பொருத்தம் பார்த்து, அப்பாவுக்குச் சரி என்று பட்டதால், திருமணம் செய்துகொண்டு கிளம்பிச் சென்றபோது, வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் என்று கண்டிப்பாகத் தோன்றவில்லை. ரமணன் அலுவலகத்து வேலைக்கு அடிமை. பொழுதுபோக்கு என்ற விஷயம் அறியாத அப்பாவியான அடிமை. இது எத்தனை கொடுமையானது என்று உணராத ஞானசூன்யத்தில் அவர்களது இளமை கழிந்தது. காலையில் எட்டு மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பிச் சென்றால், இரவு பத்து மணிக்கு ரமணன் திரும்புவார். சனி, ஞாயிறன்றும் வித்தியாசமில்லாத ஏதோ வேலை. தன்னந் தனியாக வீட்டில் இருக்கப் பிடிக்காமல், அவள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தாள். அதில் அவளும் மூழ்கிப்போக, சரசமாடவோ சிரிக்கவோ நேரம் இருந்ததாக அவளுக்கு நினைவில்லை ராஜேஷையும் தேவிகாவையும் பார்க்கும்போது, அதற்கென்று நேரம் தேட வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.

அறுபது வயதில் ரமணன் ஓய்வுபெற்று வீட்டில் அமர நேர்ந்தபோது, இருவருக்கும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல் இருந்தது. ஒரு அந்நியமான, பரிச்சயமற்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டதாகத் தோன்றிற்று. இருபத்துநாலு மணி நேரமும் முகமற்ற ஒரு மனிதருடன் இருப்பது அசாத்தியமானதாகப்பட்டது. குழந்தை இல்லை என்ற ஆதங்கம் இப்போது அதிகமாக வாட்ட, அவள் அருகிலிருந்த பள்ளியில் ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்தாள்.

ரமணன் ஆச்சர்யமாக, ஓய்வு கால வாழ்க்கைக்கும் அதேவிதமான தீவிரத் துடன் பழகிக்கொண்டார். வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். காலை நாலு மணிக்கு எழுந்தால் காபி போடுவது, வாக்கிங்கிலிருந்து திரும்பியதும் வாஷிங் மெஷினில் துணி துவைப்பது, செடிகளுக்கு நீர் ஊற்றுவது, சமையலுக்குக் காய் நறுக்குவது இத்யாதி... பில்டிங் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடுவதும் தன் ஓய்வுக் காலக் கடமை என்று அவர் நினைத்ததாகத் தோன்றிற்று.

அவளுக்கு அவருடைய புதிய முகம் ஆச்சர்யங்கள் நிறைந்ததாக இருந்தது. தனது இளமைக் காலத்து ஆதங்கங்களை அவர் இப்பவும் புரிந்துகொள்வாரா என்று அவளுக்கு அடிக்கடி தோன்றுவது அசம்பாவிதமாகக்கூடப் பட்டது. ஆனால், ராஜேஷ் தம்பதியைக் காணும் போதெல்லாம், கொண்டாட்டம் என்பதை உணராமலே தங்களது தாம்பத்யம் கரைந்துவிட்டது என்று வருந்தாமல் இருக்க முடியவில்லை. ஆனால், அவர்கள் வேறுவிதமாக இருந்திருக்க முடியாது. அவளுடைய தலைமுறையைப் பல முந்தைய தலைமுறைகளின் சுமை அழுத்திற்று. கொண்டாட்டம் என்பதை விடலைத்தனமாக ரமணன் நினைத்திருக்கலாம்.

அதனால்தான், முந்தா நாள் ராஜேஷ் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து தேநீர் பருகுகையில், ஓர் இளைஞனின் ஆர்வத்துடன், ‘‘டாவின்சி கோட் படம் பார்க்கப் போலாமா?’’ என்று அவளிடம் ரமணன் கேட்டபோது திக்குமுக்காடிப்போயிற்று. அவரது முகத்தில் இளமை புகுந்திருந்தது. கண்களில் புதிய பிரகாசம் தெரிந்தது. அந்த வீட்டுக் காற்றின் பாதிப்பாக இருக்க வேண்டும் என்று அவளுக்குப் பட்டது.

‘‘நாங்க பார்த்தாச்சு!’’ என்றான் ராஜேஷ். ‘‘நீங்க போயிட்டு வாங்க ஆன்ட்டி, ஜோடியா!’’

‘‘கண்டிப்பா போகணும்’’ என்று சிரித்தாள். ‘‘அதிசயமா இவர் கூப்பிடறாரே!’’

‘‘குட்! நாளை ஈவினிங் ஷோவுக்கு நான் டிக்கெட் வாங்கி அனுப்பறேன்’’ என்றாள் தேவிகா.

கடைசியாக எப்போதுஜோடியாக சினிமா போனோம் என்று படுக்கைக்குச் செல்லும்போது அவள் கேட்டது, ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருந்த ரமணனுக் குக் கேட்கவில்லை. பழைய முகம் தெரிந்தது.

நேற்று சினிமாவுக்குக் கிளம்பியபோது, அவளுக்கு நூதனமாக இருந்தது. காஷ்மீர் சில்க் புடவை கட்டி காதோரங்களில் சென்ட் பூசிக்கொண்டபோது ஒரே சமயத்தில் தான் கிழவியாகவும், குமரியாகவும் இருப்பதாகத் தோன்றிற்று. மல்டிப்ளெக்ஸ் தளத்தில் வண்டியை நிறுத்தி தியேட்டரின் வளாகத்துக்குச் சென்று ஜீன்ஸ் அணிந்த இளம் உடல்களை முட்டி மோதிக்கொண்டு முன்னேறி, இருண்டுவிட்ட அரங்கத்துள் இருக்கைகளைத் தேடி அமர்ந்தார்கள். சுற்றிலும் இருந்த இளம் மூச்சுக்காற்றுடன் இரண்டறக் கலக்க முடிந்தது. தானும் ரமணனும், ராஜேஷ், தேவிகாவாக மாறிப்போனது போலிருந்தது. இருவரும்டாவின்சி கோட் புத்தகம் படித்திருந்ததால், படத்தின் நிறை குறைகளை இடைஇடையே அலசினார்கள் மெல்லிய குரலில். ரமணன் முகத்தில் புன்னகை குடியிருந்தது. அவள் சின்னப் பெண் போல் சிரித்தாள். தன்னைச் சூழ்ந்திருந்த சென்ட் மணத்தில் கிறங்கினாள்.

இடைவேளையின்போது ரமணன் அவள் புறங்கையைத் தட்டி, ‘‘வா, ஐஸ்கிரீம் சாப்பிட்டு வரலாம்’’ என்று எழுந்தார். இது வழக்கமாக நடக்கும் விஷயம் போல அவளும் எழுந்தாள். மேலிருந்து கீழிறங்கி வெளியே வந்து முடிச்சு முடிச்சாக நின்ற கூட்டத்தை விலக்கி, ரமணன் இரண்டு கோன் ஐஸ்கிரீம் வாங்கி வந்து ஒன்றை அவளிடம் கொடுத்தார். திருமணமான புதிதில்கூட இப்படி ஒரு அனுபவம் ஏற்படவில்லை என்று ரமணனிடம் சொல்ல நினைத்துப் பிறகு சொல்லாமல், ‘‘தேங்க்யூ’’ என்று புன்னகைத்தாள்.

வீட்டுக்குத் திரும்பும்போது பத்து மணி ஆகிவிட்டது. மாலையில் வார்த்துவைத்திருந்த இட்லியைச் சாப்பிட்டுப் படுக்கும்போது, அதுவரை அனுபவித்திராத நிறைவு ஏற்பட்டது. இருட்டில் ரமணன் அவளுக்கு அருகில் நகர்ந்து அணைத்ததும் கூட வழக்கமானதாகத் தோன்றிற்று.

அதிகாலை உலுக்கப்பட்டதுபோல விழிப்பு ஏற்பட்டது. சமையலறையில் பாத்திரம் உருளும் சத்தம். ரமணனைப் படுக்கையில் காணோம். மேஜை விளக்கைப் போட்டு மணி பார்த்தாள். மூன்றரை. உள்ளே எட்டிப் பார்த்து, ‘‘என்ன இத்தனை சீக்கிரம்?’’ என்றாள்.

‘‘தூக்கம் வரலே, ஏதாவது படிக்கலாம்னு எழுந்தேன். நீ போய்ப் படுத்துக்கோ’’ என்றார்.

அவள் படுக்கைக்குச் சென்றாள். தூக்கம் வரவில்லை. இருப்புக்கொள்ளாமல் எழுந்தாள். ரமணன் சாப்பாட்டு மேஜை மேல் முகம் கவிழ்ந்தபடி நாற்காலியில் விநோதமாகச் சரிந்திருந்தார். அவள் திடுக்கிட்டு அருகில் சென்று ‘‘என்னது இப்படி?’’ என்று சிரமப்பட்டு நிமிர்த்தியபோது, அவர் மூச்சுவிடக் கஷ்டப்படுவதும், கண்கள் செருகுவதும் கண்டு பதைபதைத்தாள்.

‘‘§கர் இறங்கியிருக்கா என்ன? இருங்கோ, இதோ ஒரு நொடியில் பால் கொண்டுவரேன், சர்க்கரை போட்டு. குடிச்சா சரியாயிடும். ஒரு நிமிஷம்...’’ என்று நெஞ்சு படபடக்க அரற்றியபடி ஃபிரிஜ்ஜைத் திறந்து மக்கில் பால் ஊற்றுகையில் கை நடுங்க, அது நழுவ, மறுபடி ஊற்றி, மைக்ரோ அவனில் ஒரே நிமிஷம் கலந்து, ‘இதோ வரேன், இதோ வரேன் என்று குரல் கொடுத்தபடி அவரிடம் சென்றபோது ரமணனின் தலை சாய்ந்திருந்தது.

அவள் அவசரத் துடன் அவரது தலையை நிமிர்த்திப் பிடித்து, ‘‘இந்தாங்கோ பால் சாப்பிட்டா சரியாயிடும்’’ என்று குரல் நடுங்க அரற்றியபடி, பாலை வாயில் விட்டதும், பால் உள்ளே செல்லாமல் கடைவாயில் வழிந்தது. அவள் நம்ப முடியாமல் அதை ஒரு விநாடி பார்த்தாள். மார்பு வெகுவேகமாக அடித்துக்கொள்ள, வீட்டைத் திறந்து பித்துப் பிடித்தவள்போல ரேழியில் ஓடி, ராஜேஷ் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள். ராஜேஷ் அழைத்து வந்த டாக்டர் நாடி பார்த்து, விழியைப் பார்த்து, உதட்டைப் பிதுக்கினார்.

அவளுக்கு நம்ப முடியவில்லை. தாங்கவும் இல்லை. அவளால் ஏற்பட்ட தாமதத்தில் ஓர் உயிர் நழுவிப்போனதாகத் தோன்றிற்று. பால் சிந்தியதால், மீண்டும் எடுத்துச் சுட வைத்ததால், சில்லென்ற பாலைக் கொடுக்கத் தோன்றாததால்...

ஓர் அசாதாரண நொடியில் ரமணனின் இதயம் இயங்குவதை நிறுத்திற்று. அதைத் தடுத்து நிறுத்த முடியாத அவளது இயலாமைக்கு அவளே பொறுப்பு என்று கலவரம் ஏற்பட்டது. அதிலிருந்து விடுபடுவது அசாத்தியம் என்று தோன்றிற்று.

சங்கிலிப் பின்னலின் விடுபட்ட இழைகளை அவள் மீண்டும் மீண்டும் கோக்க ஆரம்பித்தாள். ஊடுபாவாகச் சென்ற ஓர் இழை நினைவுக்கு வந்தது.

மழை பெய்த அன்று இரவு தூக்கம் வராமல் அவள் புரண்டு படுக்கையில், பாதித் தூக்கத்தில் ரமணன் விழித்துக்கொண்டு என்னவோ சொன்னார்.

அவள் விருக்கென்று எழுந்து, ‘‘என்ன வேணும்?’’ என்றாள்.

‘‘யக்ஷன் கூப்பிட்ட மாதிரி இருந்தது.’’

‘‘யக்ஷனா?’’

‘‘யுதிஷ்டிரனைக் கேள்வி கேட்டானே, அவன்!’’

அவளுக்குச் சிரிப்பு வந்தது. இரவு அவர் மகாபாரதம் படித்துக்கொண்டு இருந்தது நினைவுக்கு வந்தது.

‘‘நீங்க என்னமோ சொன்ன மாதிரி இருந்தது.’’

‘‘நாளைக்கு வரேன்னேன். எனக்கு ஒரு ட்யூட்டி இருக்குன்னேன்!’’

‘‘நல்ல கனா’’ என்று அவள் சிரித்தாள். ‘‘நீங்க தருமபுத்திரன்னு நினைப்பா?’’

அது முந்தாநாள். நேற்றும் நேற்றைய போதும் யக்ஷன் கொடுத்த போனஸ்ஸாக இருக்க வேண்டும். அவளுக்குக் கிடைத்த போனஸ்.

நன்றி - விகடன்