அஷ்டபிரபந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஷ்டபிரபந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வேய் தந்த முத்தம் - கோமான் வெங்கடாச்சாரி

மண்ணகத்தேயுள்ள மக்கள் தம் துயரைப் போக்கவும், அதைக்கண்டு விண்ணகத்தேயுள்ள விரிஞ்சன் முதலானோரும் வியந்து நோக்கவும், பொன்னி வளங்கொழிக்கும் பூம்புனலரங்கம். கங்கையிற் புனிதமாய காவிரியின் நடுவே உதயனும் வானவீதியில், தன் வழிச் செல்ல இயலாதவாறு தடுத்து நிற்கும் நெடிய மதில்கள். அவையென்ன சாதாரணமானவையா? ஆடகச் செம்பொன்னாலானவை அவற்றின் எண்ணிக்கைதான் என்ன? ஒன்றா? இரண்டா? ஏழு நெடும்மதில்கள். அதன் நடுவே ஓர் அரங்கம். அதுதான் திருவரங்க பெரிய கோயில்.

மதில்கள் ஏழுடையது என்று கூறும் போதே அது ஒரு சிறந்த கோட்டை என்பது சொல்லாமலே விளங்குகிறதல்லவா. அதற்குப் பெயர்தான் அரங்க மாளிகை. அந்த மாளிகையின் கதவுகளைப் பற்றிப் பேசவும் வேண்டுமா? ஆணிப் பொற்றகடுரிஞ்சும் மணிகள் பொருந்திய கதவுகள். அவைகளை நிலையாகத் தாங்கும் நீண்ட நெடிய வாயில்கள். இவையெல்லாம் இவ்வாறென்றால் அந்த மாளிகையின் விமான வனப்பைச் சொல்ல வேண்டுமா? மாணிக்க வெயில் பரப்பும் வயிரமணி விமானம் அது. அதன் கீழ், மாளிகைக்குள் பச்சைமாமலை போல் மேனியும், பவழ வாயும், தாமரை நிகர்த்த தடங்கண்களும் பொருந்தி, சீர் பூத்த செழுங்கமலத் திருத்தவிசில் வீற்றிருக்கும் நீர்பூத்த திருமகளும், நிலமகளும் அடிவருடவும், தன் கடன் பணி செய்து கிடப்பதே என்று எப்பொழுதும் அருகிலிருந்து பணிபுரியக் காத்திருக்கும் அஞ்சிறைப்பறவை பணி கேட்கவும் திருத்துழாய்த் தாரார்ந்த மார்பில் ஞாயிற்றைப் பழிக்கும் கௌஸ்துபமணி பிரகாசிக்க நிற்கவும் அதர்மத்தைக் கடிந்து தர்மத்தை நிலை நாட்டத் துடிதுடித்து நிற்கும் ஐம்படையும் புடை சூழ்ந்திருக்க பிணியரங்க வினையகலப் பெருங்காலந்தவம் பேணி, மணி வயிற்றில் வந்துதித்த மலரயனை வழிபட்டு அவனிடம் வேண்டி மனதாரத் தரப்பட்டு பணியரங்கப் பெரும் பாயலில் பள்ளி கொண்டு பலதரப்பட்டோர்க்கும் பரிவு காட்டும் பரமதயாளன் அங்கே தன் வியக்கத்தக்க வலக்கரத்தை சிரசின் கீழ் கொடுத்துக் குணதிசை முடியும், குடதிசை பாதமும் நீட்டி வடதிசை முதுகு காட்டித் தென் திசையிலங்கை நோக்கிக் கண் வளரும் கருங்கடல் வண்ணன் அங்கே கோயில் கொண்டிருக்கிறான்.

அவ்வாறு ஐவாயரவில் அறிதுயில் அமலனை, பச்சை மாமலையை, கோவலனாய்க் குழல் ஊதும் கள்வனைக் கண்டு களித்த கண்கள் வேறொன்றின் பால் நாடுமோ? நாடுவதென்பது அரிதல்லவா. அவன் ஒரு கரிய பெரிய மலையென்றால் அவன் கண்கள் தாமரை. செய்ய கைகள் தாமரை. நெடிதுயர்ந்த தாள்கள் தாமரை. ஒரு நாலு முகத்தவனோடுலகீன்ற அவனுடைய திருநாபியும் தாமரை. அவனுடைய தொண்டையங்கனிவாயும் தாமரை. இவ்வாறு அவனது அவயவங்கள் எல்லாம் தாமரையாக அந்தப் பச்சை மாமலை மேல் ஒரு தாமரைக் காடே பூத்தது போல் காட்சியளிக்கிறானாம் அந்த அரங்கத்தரவணையான்.

வல்லியை நிகர்த்த வனிதை ஒருத்தி, தன் தாய்ச் சென்றபோது, தாயுடன் அவளும் சென்றாள் அரங்க மாளிகைக்கு. அரங்க மாளிகையில் நாம் மேலே உருவகித்த கோமளனைக் கண்டாள். அவன் பால் மையல் கொண்டாள்.

அரங்கனைப் பாடிய வாய் - கோமான் வெங்கடாச்சாரி

“அரன் அதிகன், உலகளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்றடைவரிய பரிசே போல்” என்று மிக அற்புதமாக கவிச்சக்கரவர்த்தி கம்பன் தன் மாபெரும் இலக்கிய படைப்பாகிய இராமகாதையில் குறிப்பிடுகின்றான். ஆம். அவன் கூறியது முற்றும் உண்மைதான். அரன் தான் அகிலத்திலேயே சிறந்தவன் என்றோ அல்லது உலகத்தையே தன் ஈரடியால்  மூவடியாக அளந்து கொண்டானே அந்த அரிதான் பெரியவன் என்றோ நாம் வீண் விவாதம் செய்து கொண்டிருக்கக்கூடாது என்பது தான் அவனது சிறந்த நோக்கமேயன்றி அவன் அரனையோ, அரியையோ இழித்துக் கூறுவதாக ஆகாது.

கம்பன் தான் பாட எடுத்துக் கொண்ட சரிதை திருமாலின் பிறப்பைப் பற்றி. அவன் வட மொழியிலுள்ள வான்மீகி இராமாயணத்தைத் தழுவியே தனது இராம காதையை இயற்றியிருப்பினும் பலவிடங்களில் கதையிலும் சரி, கருத்திலும் சரி, வான்மீகியினின்றும் வேறுபடத்தான் செய்கிறான். மிதிலைக்காட்சிப் படலத்தில் இராமனும், சீதையும் ஒருவரையருவர் கண்டு காதல் கொண்ட பிறகே கடிமணம் புரிந்து கொண்டதாக நம் தமிழ் மரபிற்கேற்ப தன் கதையை மாற்றுகிறான். அதேபோல் வாலி வதைப்படலத்தில் இராமனை முழுமுதற் கடவுளென்பதை வாலி கண்டு கொண்டதாக முதல் நூலின் கருத்திற்கு மாறுபடுகிறான். அதேபோல் யுத்த காண்டத்தில் இரணியன் வதைப் படலமென்ற ஒன்றையும், மாயா சனகப்படலம் என்ற மற்றொன்றையும் கதைப்போக்கில் செருகி விடுகிறான். ஆனால் அவன் இயற்றிய இலக்கிய வரலாற்றை மேற்படி வேறுபாடுகள் எவையும் ஊறுபடுத்துவனவாக இல்லை. இராமன் காலத்திலேயே வான்மீகி வாழ்ந்து வந்தார் என்பது விளக்கம். அதனால் வான்மீகி இராமனைப் பரமனின் அவதாரம் என்று மட்டும் ஒப்புக் கொள்கிறாரே தவிர்த்து அவனையே பரம்பொருள் என்று நாம் எண்ணுமாறு அவர் தனது இலக்கியப்படைப்பைக் கொண்டு செல்லவில்லை. ஆனால் கம்பனோ இராமனை முழுமுதற் கடவுள் என்று தன் இலக்கிய படைப்பெங்கணும் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டிச் செல்கிறான்.

“மும்மை சால் உலகுக்கெல்லாம் மூலமந்திரத்தை”, “மும்மையாம் உலகம் தந்த முதல்வர்க்கும் முதல்வன்”, “ வேதமும் முடிவு காணா மெய்ப்பொருள்”, என்று வரும் பலவிடங்களில் கம்பன் தனக்குத் திருமாலினிடம் இருந்த பக்திப் பரவசத்தைத் தனது இலக்கியப் படைப்பாகிய இராமகாதையில் வெளியிட்டுவிடுகிறான். இவ்வாறு திருமாலின் உயர் தன்மையை எடுத்துக் கூறும் கம்பன், “ அரன் அதிகன் உலகளந்த அரி அதிகன்” என்று தனது இலக்கியத்திலேயே வேறொருசார் சொல்லிப் போந்தது எங்ஙனம் பொருந்தும் என்பது சிலரது சந்தேகம். கவிச்சக்கரவர்த்தி கம்பன் தவறவில்லை. இராமகாதை முழுவதிலும் ஆங்காங்கே அரனுக்கு ஏற்றம் கொடுக்கத் தவறினான் இல்லை. தான் எடுத்துக் கொண்டது இராம காதையாயினும் மங்கைபாகனுக்கு மதிப்பு அதிகம் கொடுத்து விடுகிறான் நாம் எதிர் பாராத சில சந்தர்ப்பங்களில். ஒருவன் பெரியவன்; மற்றவன் சிறியவன் என்று கருதக்கூடாது; சொல்லக் கூடாது என்பதுதான், அவன் கருத்தே தவிர்த்து நம்மை ஏமாற்றும் நோக்கத்துடன் அவன் இக்கருத்தை வெளியிட்டானில்லை. இதனால் கம்பன் ஒரு சமரச சன்மார்க்கவாதி என்பது புலனாகிறது.

திரும்பி வாராத் தூது - கோமான் வெங்கடாச்சாரி

ஆராமம் சூழ்ந்த அரங்கத்தில் அன்றொரு நாள், பச்சைமா மலைபோல் மேனியும், பவளவாயும் கமலம் போன்ற செவ்வியக் கண்களும் உடைய அந்த அரங்கத்து அரவணையானை கண்குளிரக்கண்டு விட்டு வந்திருந்திருந்தாள், அந்தப் பதினெண்பிராயம் நிறையாத பருவமங்கை.

அவனுடைய பரந்தநெற்றியும், அகன்று நீண்டு செவ்வரி படர்ந்த கண்களும், கொவ்வைக் கனிவாயும், பரந்த மார்பும், நீண்ட கரங்களும் மூவுலகை, ஈரடியாக அளந்த திருவடிகளும் விரிஞ்சனை ஈன்ற வனசம் போன்ற திருநாபியும் அவளை அவன்பால் மயக்கமுறச் செய்தன. அவனை மறக்க எண்ணியும் அவளால் மறக்க முடியவில்லை. அதே ஏக்கத்தினால் உடல் மெலிய வானாள். எப்பொழுதும் அரங்கத்தாய், அரவணையாய், அழகிய மணவாளா என்றெல்லாம் தன்மனத்திற்குள்ளேயே சொல்லிச் சொல்லி ஏக்கம் கொள்வாள். உற்றார் உறவினர்கள் இடையே சொல்லிக் கொண்டால் தன் ஒரு தலைக் காதலைக் கண்டு பரிகசிப்பார்களோ என்று அவர்களிடமும் சொல்லாமல் இருந்து விட்டாள். எப்பொழுதும் ஒரு உணர்ச்சியற்ற நிலையில் அவள் இருந்து வந்தாள்.

அன்றும் அப்படித்தான். அரங்க மாளிகையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தலைவிக்கு அவள் பின்னால் அவளுடைய அருமைத் தோழிகள் வந்து நின்றது கூடத் தெரியவில்லை. சில நாட்களாகத் தங்கள் தலைவி இவ்வாறு மயக்க நிலையில் இருந்து வருவதை அந்தத் தோழிப் பெண்கள் கண்டிருக்கிறார்கள். அதன் காரணத்தை அறிய அவர்களுக்கு மிகுந்த அவா தான். ஆயினும் தங்கள் தலைவி என்ன நினைத்துக் கொள்வாளோ என்ற அச்சம். இன்று தலைவியின் துயரத்திற்குக் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்று அவர்கள் ஒரு முடிவிற்கு வந்தார்கள். அதைப்பற்றி கேட்டும் விட்டார்கள்.

தான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாகவும் அதன் விளைவு தான். தன் துயரத்திற்கு காரணம் என்றும் தலைவி சொன்னாள். அது என்ன விவரம் என்று தோழிகள் கேட்டார்கள். தலைவி சொன்னாள்:

“என் மனக்கருத்தை அறிந்து நன்மை, தீமைகளை ஆராய்ந்து என் நலத்திலேயே நாட்டம் கொண்ட எனதருமை தோழிகளாகிய நீங்களெல்லாம் இருந்தீர்கள். வேளைக்கு வேளை பாலும், பழமும் ஊட்டி என்னால் வளர்க்கப்பட்ட என் அருமைக்கிளிகள் தாமிருந்தன. நான் வைத்துப் பயிராக்கிய பூச்செடிகளில் பூத்த பூக்களிலிருந்த ஊறிய தேனைக்குடித்து விட்டு ரீங்காரம் செய்யும் வண்டுகளிருந்தன. பெண்களாகிய நம்மிடம் நடை பயின்று தோற்கும் அந்த அன்னமும் இருந்தது. நான் அந்தக் கருங்கடல் வண்ணனிடம் கொண்ட காதலைத் தெரிவித்து அவனுடைய ஆதரவைத் தேடிக்கொள்ள உங்களையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளாமல் என் நெஞ்சத்தை விட உண்மையான தூதுவன் வேறு யாருமில்லை என்று எண்ணி என் நெஞ்சையே தூது விடுத்தேன்” என்று சொல்லி முடித்தாள். அவள் மேலும் தொடர்ந்தாள்.

“நான், ஏன் உங்களையெல்லாம் தூது அனுப்பவில்லையென்று கேட்கிறீர்களா? நீங்களும் என்போல் பெண்கள் தாமே? உங்களை தூதாக அனுப்பினால் அவனுடைய முகச் சோதியிலே கடைக்கண் நோக்கிலே கருத்தையிழந்து என் காதலை அவனுக்குத் தெரிவிக்காமல் இருந்து விட்டால் என்ன செய்வது? என்ற ஒரு அவ நம்பிக்கை. அதுதான் உங்களை தூதாக அனுப்பாத காரணம்.

கிளியை ஏன் அனுப்பியிருக்கக் கூடாது என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன் கேளுங்கள் சொன்னதை மட்டுந்தான் சொல்லும் திறமை வாய்ந்தது கிளி. அதிகமாகவோ, குறைவாகவோ தலைவனின் கருத்தறிந்து பேசும் திறமை அதற்குக் கிடையாது. அதனால் நன்மைக்குப் பதில் தீமை பயந்துவிட்டால் என்ன ஆவது என்ற எண்ணத்தினால் கிளியைத் தூதராக அனுப்பவில்லை.
  
தூதிற்கு வண்டுகள் சிறந்தனவாயிற்றே அதை ஏன் தூதாக அனுப்பிருக்கக் கூடாது என்று கேட்பீர்கள். வண்டுகளது இயற்கை பூக்களுக்குள் சென்று ஆங்காங்குள்ள தேனை உண்டு தன்னை மறந்து திரியும் தன்மையுடையன. அரங்கனின் திருத்துளவ மாலையிலே கசியும் தேனையுண்டு அந்த மதுவுண்ட காரணத்தால் மதி மயங்கித்தான் சென்ற காரியத்தையும் மறந்து அவனையே சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கும். ஆதலால் அவைகளையும் நல்ல தூதாக அனுப்பத் துணியவில்லை.

இதெல்லாம் தான் போகட்டும். தூதுவிடுவதற்கு அன்னம் ஒரு சிறந்த பொருளாயிற்றே. முன்னர் தூது சென்று காரியத்தை வெற்றியுடன் முடித்திருக்கிறது என்று கதைகள் கூறுகின்றனவே. ஏன் அதை அனுப்பியிருக்கக் கூடாது என்று கேட்கிறீர்களா? நீரையும், பாலையும் தனித்தனியாகப் பிரிக்கும் சக்தி உள்ளது அன்னம் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அதேபோல் எங்கள் நட்பையும் பிரித்துவிட்டால்? அதனால் அன்னத்தையும் அனுப்பவில்லை.

ஆனால் என்ன செய்தேன் என்று கேட்கிறீர்களா? என் நெஞ்சைத் தவிர எனக்கு உற்ற துணை யாருமில்லை என்று நினைத்தேன். அந்த நம்பிக்கையில் என் நெஞ்சையே தூதாக விடுத்தேன் அரங்கத் தரவணையானிடம். ஆனால் நான் எதிர்ப்பார்த்ததற்கு நேர் விரோதமாக காரியங்கள் நடந்து விட்டன. அரங்கனிடம் தூதாகச் சென்ற என் நெஞ்சானது அவன் தந்த துளபத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பி என்னிடம் வாராமல், திருமகளாரையும் அப்பரந்த மார்பின் அழகிலே, திரண்ட புயங்களின் வடிவழகிலே மயங்கி இன்புற்று தன்னையும் மறந்து, என்னையும் மறந்து அங்கேயே நின்றுவிட்டது. தோழிகளே! நான் என்ன செய்வேன். நான் உங்களையெல்லாம் நம்பாமல் என் நெஞ்சத்தையே உரிய தூதாக நம்பி அழகிய மணவாளனின் கருணையைப் பெற அவனிடம் அனுப்பி வைத்த பிழையை நினைத்து விசனப்படுகிறேன். இதுதான் நடந்த செய்தி என்று அந்தத் தலைவி தன் தோழிகளிடம் சொன்னாள்.

தன்னைத் தலைவியாகவும், அரங்கனைத் தலைவனாகவும் தான் அவனிடம் கொண்டுள்ள பக்தியை காதலாகவும் உருவகித்துக் கூறும் இந்தச் சிறப்பான அழகிய மணவாள தாசர் என்கிற பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றியுள்ள பின்வரும் பாடலில் நாம் காண்கிறோம். அப்பாடல்,

 நீரிருக்க மடமங்கையீர் கிளி கடாமிருக்க மதுகரமெலா,
 நிறைந்திருக்க மடவன்னமன்ன நிரையோயிருக்க வுரையாமல்யா
 னிருக்கிலு மென்னெஞ்ச மல்லதொரு வஞ்சமற்ற துணையில்லையென்
 றாதரத்தினொடு தூதுவிட்ட பிழையாரிடத்தரை செய்தாறுவேன்
 சீரிருக்கு மறைமுடிவு தேடரிய திருவரங்கரை வணங்கியே
 திருத்துழாய்தரில் விரும்பியே கொடு திரும்பியே வருதலின்றியே
 வாரிருக்கு முலைமலர் மடந்தையுறை மார்பிலே பெரிய தோளிலே

 மயங்கியின்புற முயங்கியென்னையு மறந்து தன்னை மறந்ததே.